ஆயிரம் ஆண்டு பழைமை சொல்லும் சேரன்மகாதேவி சோழர் கால கல்வெட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவியில் உள்ள இராமசாமி கோயிலில் 1006 ஆண்டு பழமையான சோழர்கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகள், இயக்குனர் மாரியப்பன் மற்றும் தமிழ்ப் பேரவைச் செயலாளர் பாலு,மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கம் ஆகியோர் சென்று பார்வையிட்டு அது பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர்.
பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டுள்ளன.இராசராச சோழனின் மகன் இராஜேந்திர சோழனின் மூன்றாவது ஆட்சி காலத்தில் 1015-ஆம் ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு 1006 ஆண்டு பழமையானது. கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் முள்ளிநாட்டு பிரம்மதேயமான சோழநிகரிலி சதுர்வேதிமங்கலம், இக்கோயிலின் கடவுள் நிகரிலி சோழ விண்ணகர உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கோயிலுக்கு நந்தாவிளக்கு தானமாக வழங்கப்பட்டதையும் நெய்யும் வழங்கப்பட்டதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. அளவுக்கு அதிகமாக நெய்யினை ஊற்றாமல் விளக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இக்கல்வெட்டு தெரிவிக்கும் செய்தியாகும்,என்று மாரியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
|