திருநங்கை,திருநம்பியாக மாறும் அறுவை சிகிச்சை மதுரை இராஜாஜி மருத்துவமனையில் துவக்கம்
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கல்வித் தலைவர் ரத்தினவேலு அவர்கள் வியாழக்கிழமை தோறும் மூன்றாம் பாலின சிறப்பு மருத்துவப்பிரிவு செயல்படும் என்றும் திருநங்கையாக, திருநம்பியாக மாற விரும்புபவர்கள் இலவச அறுவை சிகிச்சையினை அப்போது செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
உடல் உறுப்புகளால் ஒருபாலினமாகவும், உணர்வுகளால் ஒரு பாலினமாகவும் இருந்து சிரமப்படும் நிலை மூன்றாம் பாலினத்தவர்க்கு உள்ளது. உரிய அறுவை சிகிச்சை மூலமாக அவர்கள் தான் விரும்பும் பாலினமாக (திருநங்கையாகவும் திருநம்பியாகவும்) மாறிக் கொள்ள முடியும்.மூன்றாம் பாலினத்தவர்களான இவர்களின் இந்த அறுவை சிகிச்சை பாதுகாப்பற்ற முறையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் இவ்வறிவிப்பு இதுபோன்ற பாலினத்தவருக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை நிரந்தரமானது.எனவே 18 வயது நிரம்பிய பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புவர்களுக்கு, உளவியல் மருத்துவ ஆலோசனை மூன்று மாதங்களும், ஹார்மோன் மருத்துவ சிகிச்சை ஆறு மாதங்களும் வழங்கப்படும், திருநங்கை, திருநம்பியாக மாறிய ஒருவர் மருத்துவரின் கண்காணிப்பில் ஒரு வருடம் இருக்க வேண்டும் என்று கல்வித் தலைவர் இரத்தினவேலு கூறியுள்ளார். மூன்றாம் பாலினத்தவர்க்கான அடையாள அட்டை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் என்றும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சமூக நலத்துறையால் நிரந்தர அடையாள அட்டையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|