|
|||||
திருக்குறள் அறிஞர், புலவர் இரா.இளங்குமரனார் இயற்கை எய்தினார் |
|||||
திருக்குறள் அறிஞர், புலவர் இரா.இளங்குமரனார் இயற்கை எய்தினார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் பகுதியைச் சேர்ந்த படிக்கராமர் வாழவந்தம்மையார் இணையருக்கு 1927, ஜனவரி 30 ஆம் நாள் மகனாகப் பிறந்தவர் இரா.இளங்குமரன். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சொற்பொழிவாற்றும் மற்றும் பாடல் இயற்றும் திறனும் கொண்டிருந்தார். நூலாசிரியர்,பாவலர், உரையாசிரியர், இதழாசிரியர் எனப் பன்முக திறன் கொண்டவர். 1958 ஆம் ஆண்டு குண்டலகேசியை முழுமைப்படுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்துள்ளார்.1963 ஆம் ஆண்டு இவருடைய 'திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு' எனும் நூலை பிரதமர் நேரு அவர்கள் வெளியிட்டிருக்கிறார். 2003ஆம் ஆண்டு 'இலக்கிய வரிசையில் புறநானூறு' எனும் இவருடைய நூல் அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் திருக்குறள் தமிழ் மரபுரை, தேவநேயம், தனித்தமிழ் இயக்கம், காக்கைப்பாடினியம், யாப்பெருங்கலம் (இலக்கணம்), புறத்திரட்டு (இலக்கணம்), எங்கும் பொழியும் இன்பத்தமிழ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார் இளங்குமரனார். திருச்சி மாவட்டம் அல்லூர் என்னுமிடத்தில் திருவள்ளுவர் தவச்சாலை,மற்றும் பாவாணர் நூலகம் ஆகியவற்றை நடத்தியுள்ளார். தமிழ் வழித் திருமணங்கள் நடத்தியவர். இளங்குமரனாருக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின் அவர்கள் தமிழையே உயிர் மூச்சாக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞர் இளங்குமரனார் அவர்களின் மறைவு தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.தமிழ்மறை திருக்குறள் வழியில் தமிழர்களின் திருமணங்களை நடத்தியதுடன், தவச்சாலை நிறுவி வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர்.அவருடைய தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் தமிழ்ச்சான்றோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் போல் அவரது இறவாப் புகழும் நிலைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார். முதுமுனைவர் இளங்குமரனார் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இவருக்கான அஞ்சலியின் போது செலுத்தப்பட்ட திருக்குறள் மாலை இறுதி வரை அகற்றப்படாமல் இருந்தது நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. |
|||||
by R.Gnanajothi on 30 Jul 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|