Tamil எனச் சொல்லப்படுவது Tamizh என மாற்றம் செய்யப்பட வேண்டும்,சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் அவர்களின் கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது.அப்போது சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் தனது முதலாவது சட்டப்பேரவை உரையில் Tamil எனக் கூறப்படுவது Tamizh என மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பழமைமிக்க இலக்கிய, இலக்கண வளம் நிறைந்த தமிழ் மொழியின் சிறப்பிற்குரிய எழுத்து 'ழ' கரம் ஆகும். ஆங்கிலேயர் அம்மொழி உச்சரிப்பை அறியாதவர்களாய் Tamil (தமில்)என்றே உபயோகித்து விட்டுச்சென்றனர். அதுவே மாற்றமின்றி நடைமுறையாகிவிட்டது.ஆனால் Tamizh (தமிழ்) என்று எழுதப்படுவதும் உச்சரிக்கப்படுவதுமே சரியான ஒன்றாகும்.
"ஒரு மொழி என்பது வெறும் சொற்கள் அல்ல,அது பண்பாடு, பாரம்பரியம், சமூகத்தின் ஓர்மை, ஒரு சமூகத்தைப் படைத்தளிக்கிற முழுமையான வரலாறு ஒரு மொழியில் பொதிந்துள்ளது." என்பார் மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, எனவே தாய்மொழியின் காரியங்களில் திட்டமாக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும். அவ்வகையில் இக்கோரிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
|