தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்ற உறுப்பினர் செயலராக பேராசிரியர் மு.இராமசாமி நியமனம்
தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் என்ற பெயரில் 1955-ல் உருவான அமைப்பானது, இயல் இசை,நாடகம் என்ற முத்தமிழுக்குமான அமைப்பாக 1973-ஆம் ஆண்டு உருவானது.தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் இந்திய மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழக அரசு வழங்கும் நிதியுதவிகளைக் கொண்டு கலைப் பணிகளை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம்.கலைமாமணி விருது வழங்குதல், கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களுடைய குடும்பங்களுக்கான நிதியுதவி வழங்குவது, தமிழகத்தின் கலைச் செல்வங்களை ஆவணப்படுத்துவது போன்ற பணிகள் தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முந்தைய மாதம் (ஆகஸ்ட்) இம்மன்றத்தின் புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகர் நியமனம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். தற்போது உறுப்பினர் செயலாளராக பேராசிரியர் மு.இராமசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் மு.இராமசாமி தமிழ் உலகின் மிகச் சிறந்த நாடக ஆளுமை ஆவார். நிஜ நாடக இயக்கம் என்பது இவரது நாடகக்குழு.இவர் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். தோற்பாவை, நிழற்கூத்து கலையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். நவீன நாடகக் கலையை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான 'கேடி என்கிற கருப்புதுரை' திரைப்படத்தில் கருப்பு துரை கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர் பேராசிரியர் மு. இராமசாமி.
|