எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அமர்நாத் இராமகிருஷ்ணனின் தமிழக வருகை
தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தவர் அமர்நாத் இராமகிருஷ்ணனே ஆவார். இன்று கீழடி உலக அளவில் அறியப்பட்டதற்கான தொடக்கப் பணிகளை சரியாகச் செய்தவர்.2014-15 காலகட்டத்தில் வைகை நதிக்கரையின் தமிழர் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் அமர்நாத்.அதன் மூலமாகவே தமிழரின் பெரும் பொக்கிஷ அடையாளமாய் இருந்த கீழடி உலகிற்கே தெரிய வந்துள்ளது.
அப்பொழுதே கீழடி நாகரிகம் உலகை திரும்பி பார்க்க வைத்த நிலையில் ஆய்வின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்னமே அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மத்திய தொல்லியல் துறை கைவிட்ட கீழடி அகழாய்வை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருத்தோடு முன்னெடுத்து தற்போது கீழடி அருங்காட்சியகமும் அமையவிருக்கிறது. தொடர்ந்து கீழடி அகழாய்வு தமிழர் நாகரிகப் பழமையும் மேன்மையும் கூறும் தொல்பொருட்களைத் தந்து வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகம் வந்துள்ள அமர்நாத் இராமகிருஷ்ணன் அகழாய்வுப் பணிக்கு முக்கிய ஆலோசகராக இருப்பார் எனக்கூற முடியும்.நாகரிகப் பெருமை காக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.சரியான முறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் அகழாய்வுப் பணிக்கிடையே அமர்நாத் அவர்களின் வருகை மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
|