அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை.
இது நரகம் புகாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் நிறைந்த நெஞ்சையுடைய துறவியருக் கில்லை.
தீயுழியும் அளறும் போல இருளுலகமும் நரக வகையாம்.
கலைஞர் உரை:
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த
துன்ப உலகில் உழலமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
Translation
They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.
Explanation
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.