|
|||||
49 நாளில் முடிவுக்கு வந்த கெஜ்ரிவால் அரசு !! டெல்லி சட்டசபையில் நடந்தது என்ன ? |
|||||
டெல்லி சட்டபேரவையில் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறாததை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். இதனை தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜன் லோக்பால் மசோதா : மத்திய அரசு கொண்டு வந்துள்ள, லோக்பால் மசோதா சரியில்லை. அதற்குப் பதிலாக, நான், ஜான் லோக்பால் என்ற பெயரில், புதிய சட்டம் கொண்டு வரப் போகிறேன்' என அறிவித்த கெஜ்ரிவால், அதற்கான மசோதாவை தயாரித்தார்.அந்த மசோதாவில் என்ன அம்சங்கள் இருக்கின்றன என்பது, அவர் அரசுக்கு ஆதரவளிக்கும் காங்கிரசுக்கு தெரியாதது போலவே, ஆம் ஆத்மியின் பிற, எம்.எல்.ஏ.,க்களுக்கும் தெரியாது. டெல்லி அரசின் அதிகாரம் மத்திய அரசின் கையில் : டில்லி மாநில அரசு இயற்றும், எந்த மசோதாவாக இருந்தாலும், அது, மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டு, அந்த மசோதாவை அவர், மத்திய அரசுக்கு அனுப்பி, மத்திய அரசு அனுமதி அளித்தால் தான், டில்லி சட்டசபையில், அந்த மசோதாவை தாக்கல் செய்ய முடியும். இந்த நடைமுறை, காலம்காலமாக பின்பற்றப்படும் நிலையில், 'டில்லி மாநில அரசின் மசோதாக்களை, எதற்காக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்?' என கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால், 'இனிமேல், அப்படி அனுப்ப முடியாது' என, போர்க்கொடி தூக்கினார்.அதையடுத்து, தான் தயாரித்த, ஜனலோக்பால் மசோதாவை, நேற்றைய, சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப் போவதாக, கெஜ்ரிவால் அறிவித்தார்.இதை அறிந்த மத்திய அரசும், அவரின் பிரதிநிதியான, மாநில கவர்னரும், எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, கவர்னரை, 'மத்திய அரசின் ஏஜென்ட், கைக்கூலி' என, வர்ணித்த கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு அனுப்பாமல், மசோதாவை, டில்லி சட்டசபையில் தாக்கல் செய்ய பிடிவாதம் பிடித்தார்.அதன் படியே நேற்று, அந்த மசோதாவை, அவராக, சட்டசபையில் தாக்கல் செய்ய முயன்றார். அதற்கு, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஏற்பட்ட அமளியால், சட்டசபை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. பா.ஜனதா- காங்கிரஸ் கடும் எதிர்ப்பு இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு அவை நடவடிக்கை மீண்டும் தொடர்ந்த நிலையில், சட்டசபை பா.ஜனதா தலைவர் ஹர்ஷவர்தன் எழுந்து, " நீங்கள் அரசியல் சாசன விதிகளை பின்பற்றவில்லை என்றால், உங்களுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்து, புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும் " என சபாநாயகரை நோக்கி கூறினார். அதேப்போன்று காங்கிரஸ் உறுப்பினர்களும் மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மியின் 27 பேர் மட்டுமே வாக்களித்தனர். ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்வதற்கு எதிராக 42 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என்றும், பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாது என்றும் சபாநாயகர் திர் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''ஜன்லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி உறுப்பினர்கள் 27 பேர் மட்டுமே வாக்களித்தனர். ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்வதற்கு எதிராக 42 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை'' என்றார். பெரும்பான்மை முடிவு, மசோதா தாக்கலுக்கு எதிராக அமைந்ததால், ஏமாற்றம் அடைந்த கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். அரசியலில் போதிய அனுபவம் கிடையாது : டெல்லி சட்டபேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது, நாங்கள் பரம்பரை அரசியல்வாதிகள் இல்லை; எங்களுக்கு அரசியலில் போதிய அனுபவம் கிடையாது. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர்கள், எங்களை வழிநடத்தி இருக்கலாம். மாறாக, சபையில் கடும் அமளியில் ஈடுபட்டு, வன்முறையில் இறங்கினர்.நான் விரும்பிய லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் செய்து விட்டனர். இதற்கு காரணம், 'ரிலையன்ஸ்' தொழிலதிபர், முகேஷ் அம்பானி மீது நான் தொடர்ந்த வழக்கு தான். லஞ்சம், ஊழலுக்கு எதிராக என், உயிருள்ள வரை போராடுவேன். பதவியை ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார். பின், கட்சி அலுவலகத்திற்கு திரும்பிய கெஜ்ரிவால், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தலைமைச் செயலகம் வந்தார். அங்கு, தலைமைச் செயலர் அலுவலகத்தில் அமர்ந்து, தானும், தன் அமைச்சரவை சகாக்களும், பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதம் எழுதி, அதை எடுத்துக் கொடுத்து, கவர்னர் நஜீப்பை சந்தித்து வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டமன்ற தேர்தல் : கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவி விலகியதை தொடர்ந்து, டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும்என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
|||||
by Swathi on 14 Feb 2014 0 Comments | |||||
Tags: அரவிந்த் கெஜ்ரிவால் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் டெல்லி முதல்வர் ராஜினாமா ராஜினாமா ஜான் லோக்பால் மசோதா Kejriwal | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|