LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1228 - கற்பியல்

Next Kural >

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆயன் குழல்- முன்னெல்லாம் இனிதாய் ஒலித்த இடையன் புல்லாங் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி- இதுபோது தீப் போலச் சுடும் மாலைப் பொழுதிற்கு முன் தூதாக வந்து; கொல்லும் படை- என்னைக் கொல்வது போலத் துன்புறுத்தும் படைக்கலமு மாயிற்று. முன்னரே வருகை யுணர்த்தலின் முன் தூதாயிற்று; கொல்லுந் தொழிலாற் படைக்கலமாயிற்று. தானே எரிக்கவல்ல மாலை இத்துணைக் கருவிகளையும் பெற்றால் என்னதான் செய்யா தென்பதாம். பின் னின்ற 'போலும்' உரையசை. இனி, ஆயன் குழல் போலுங் கொல்லும் படை மாலைக்குத் தூதாகி அழல் போலும் என்றுமாம்.
கலைஞர் உரை:
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
Translation
The shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish near.
Explanation
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).
Transliteration
Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan Kuzhalpolum Kollum Patai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >