பிறந்தது ஐந்து வாரங்களே ஆன குழந்தையின் சிறுநீரகத்தை 22 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, இங்கிலாந்தின், செயின்ட் ஜேம்ஸ் பல்கலைக் கழக மருத்துவர்கள், மருத்துவ துறையில் ஒரு புதிய புரட்சியை செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன் மாநகரில், வசித்து வருபவர், சமீரா கவுசர். 22 வயதான இவருக்கு, சிறுநீரகம் செயல் இழந்ததால், லீட்ஸ் நகரில் உள்ள, செயின்ட் ஜேம்ஸ் பல்கலைக் கழக மருத்துவமனையில், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதே மருத்துவமனையில், சில மாதங்களுக்கு முன்பு, ஒருவருக்கு குழந்தை பிறந்து, இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிறந்த ஐந்தாவது வாரத்திலே அக்குழந்தை இறக்க நேரிட்டது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர், தங்கள் குழந்தையின் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர். அதே மருத்துவமனையில், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த, சமீராவுக்கு, உயிரிழந்த குழந்தையின் சிறுநீரகத்தை பொருத்த, டாக்டர்களால் முடிவு செய்யப்பட்டு. அதன் படி, குழந்தையின் சிறுநீரகம், சமீராவின் உடலில் பொருத்தப்பட்டது. பிறந்து ஐந்து வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீரகம், 22 வயது பெண்ணுக்கு எப்படி பொருந்தும்?' என, பலர் கேள்வி எழுப்பினர். எனினும், கருவில் வளரும் குழந்தைக்கு, 37 வாரங்களிலேயே, சிறுநீரகம் முழு வளர்ச்சி அடைந்து விடுவதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் படி, சமீராவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள சிறுநீரகம், நல்ல முறையில் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், அதனால், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
|