நான் ஈ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராஜமௌலி. இவருடைய தற்போதைய பிரமாண்ட படைப்பு தான் பாகுபலி. பொதுவாக சரித்திர கால திரைப்படங்கள் எடுப்பதற்கு இயக்குநருக்கு ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். ஏனென்றால் அதற்காக ஆகும் செலவு ஒரு புறம் இருந்தாலும், எந்தவொரு காட்சியிலும் ரசிகர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் சரித்திர கால படங்கள் வெற்றி பெற முடியும். படத்தின் துவக்கத்தில் அம்பு பாய்ந்த முதுகுடன் உயிர் பிரியும் தருவாயில் ஒரு நீர்வீழ்ச்சிக்கு, கையில் குழந்தையுடனும் ஓடி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அவரையும், அந்தக் குழந்தையும் கொன்றுவிட வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். அப்போது, நீர்வீழ்ச்சி விழும் மலையை சிவனாக நினைத்து, அந்தக் குழந்தையை காப்பாற்றுமாறு கூறிவிட்டு இறந்துபோகிறார் ரம்யா கிருஷ்ணன். மலைவாழ் பெண்ணான ரோகினி அந்தக் குழந்தையை வளர்த்து வர, சாகச வீரனாக வளர்கிறார் பிரபாஸ். நீர் வீழ்ச்சியின் அடிவாரத்தில் வசித்து வரும் பிரபாஸ், எப்படியாவது அந்த நீர்வீழ்ச்சியின் விழும் மலை மீது ஏறி மேலே செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறார். ஒருமுறை ஏறிச் செல்லும்போது, வழியில் தமன்னாவின் முகம் அவருக்கு தேவதையாக காட்சி அளிக்கிறது. அவள் மீது ஆசை கொண்ட பிரபாஸ், அவள் நீர்வீழ்ச்சியின் மேல்தான் அவள் இருக்கவேண்டும் என்று எண்ணி, கடும் முயற்சியுடன் நீர்வீழ்ச்சியின் மேலே ஏறிச் செல்கிறார். ஒரு வழியாக மேலே ஏறியபின்பு அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நீர்வீழ்ச்சிக்கு மேலே மகில்மதி என்ற பெரிய நகரம் இருக்கிறது. இந்த நகரத்தை ராணா டகுபதி ஆட்சி செலுத்தி வருகிறார். இவருக்கு மந்திரியாக நாசரும், போர்ப் படை தளபதியாக சத்யராஜூம் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். மேலும் தமன்னா ஒரு போராளி என்பதும் தங்களது ராணியான அனுஷ்காவை மீட்டெடுக்க சபதம் செய்திருப்பதும் தெரியவருகிறது. உன் லட்சியம் என் லட்சியம் என்று சபதம் எடுத்து மதிமகிழ் நாட்டை மீட்டெடுக்க ஆயத்தம் ஆகிறார் பிரபாஸ். முதல் முறையாக மகில்மதி நகரத்திற்கு பிரபாஸ் சென்றாலும், இவரைப் பார்ப்பவர்களெல்லாம் பாகுபலி என்றழைக்கின்றனர். ஒரு வழியாக ராஜாவான ராணாவிடம் அடைபட்டிருக்கும் அனுஷ்காவை மீட்டுச் செல்கிறார் பிரபாஸ். வழியிலேயே மதிமகிழ் நாட்டு இளவரசனால் பிடிக்கப்பட படைத்தளபதி சத்யராஜும் அங்கு வந்து சேர்கிறார். பிரபாஸின் முகத்தை பார்க்கும் சத்யராஜ் பாகுபலி என மண்டியிட்டு பாகுபலியைப் பற்றி விவரிக்கிறார். மதிமகிழ் நாட்டு ராஜா ராணா டகுபதிக்கும், பாகுபலியான பிரபாஸுக்கும் என்ன தொடர்பு? ராணாவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மகில்மதி நகர மக்களுக்கு விடுதலை கிடைத்ததா? பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் என்ன உறவு? என்பதை ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டப்படுத்தி கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் ரசிகர்களுக்கு இயக்குனர் ராஜமௌலி விருந்தாகப் படைக்கிறார். படத்தில் எந்தவொரு கதாப்பாத்திரத்தையும் அவ்வளவு எளிதாக எடைபோட்டு விடமுடியாது. அந்தளவுக்கு ஒவ்வொருவருக்கும் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு கதாப்பாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார். ஒரு மாவீரனாக படம் முழுவதும் பளிச்சிடுகிறார் பிரபாஸ். இவர் மலையேறும் காட்சிகளில் எல்லாம் நம் உடம்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. வில்லனாக வரும் ராணா டகுபதியும் பிரபாஸுக்கு போட்டி போடும் அளவுக்கு ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிஜூ பல்லவதேவா கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். தமன்னா, அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். தேவதைபோல், நீர்வீழ்ச்சிக்கு மேல் இவர் நிற்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். கத்தி சண்டை, வில் வித்தை என ஆக்சன் காட்சிகளிலும் அசத்துகிறார் தமன்னா. அனுஷ்கா படத்தின் முதற்பாதி முழுக்க இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். அழுக்கு சேலையுடன், கையில் இரும்பு சங்கிலியுடனும் ஒரு பெண் படும் வேதனையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, ஆக்ரோஷமான பேச்சிலும் அனைவரையும் கவர்கிறார். மந்திரியாக வரும் நாசர், போர் படை தளபதியாக வரும் சத்யராஜ் ஆகியோர் யார் என்றே தெரியாத அளவுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் நம்மை மிரள வைக்கிறார்கள். பட்டையப்பாவுக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணனுக்கு இந்தப் படத்தில் கம்பீரமான கதாப்பாத்திரம். நடிப்பில் பின்னி பெடலெடுத்துவிட்டார் ரம்யாகிருஷ்ணன். படத்தின் அனைத்து காட்சிகளும் பிரமாண்டமாக அமைத்து கிராஃபிக்ஸில் விளையாடியிருக்கிறார்கள். சிறு பட்டாம்பூச்சிக்கு கூட நுணுக்கமாக ஓவியம் போல் வரைந்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். இயக்குநருக்கு அடுத்து அதிகம் மெனக்கெட்டவர் கலை இயக்குனராகத்தான் இருப்பார். ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் செந்தில்குமார். எது கிராஃபிக்ஸ்? எது ஒரிஜினல்? எனக் கண்டுபிடிக்க ரசிகர்கள் கஷ்டப்படுவதே ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று. மரகதமணி இசையில் பின்னணி இசை நன்றாக வந்துள்ளது. பாடல்கள் தான் வெகுவாக கவரவில்லை. மொத்தத்தில் பாகுபலி.. பிரமாண்டம்....
|