காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ்.
இவர் கடந்த 3 ஆண்டுகளாக தமிழர்களின் புனித நூலான திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்து வருகிறார். தனது திருக்குறள் இசை வடிவம் குறித்து, இசை அமைப்பாளர் பரத்வாஜ் கூறும்போது, எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே டெல்லிதான்.
அதனால் சினிமாவில் இசையமைப்பாளரான பிறகுதான் எனக்கு திருக்குறள் பற்றி எனக்கு தெரியவந்தது.
இரண்டு அடியில் இருக்கும் ஒவ்வொரு திருக்குறளிலும் அடங்கியருக்கும் ஆழமான கருத்துக்கள் என்னை கவர்ந்தன. அதனால், திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்து முழுமையாக மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என சிந்தித்தேன்.
அப்போது ஒவ்வொரு திருக்குறளிலும் தாளக்கட்டை இருப்பதை கண்டறிந்தேன். 1330 திருக்குறளுக்கும் இசையமைத்தேன். அதில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என இருக்கும் திருக்குறளில் முதல் கட்டமாக, அறத்துப்பாலை எடுத்துக்கொண்டு, அதிலுள்ள திருக்குறளையும் எஸ்.பி.பி., சித்ரா என முன்னணி பாடகர் பாடகிகளை வைத்து பாட வைத்தேன்.
அதோடு அந்தந்த திருக்குறளின் பொருள்களையும் பதிவு செய்தேன்.குறிப்பாக, பத்து கடவுள் வாழ்த்தை பத்து மத தலைவர்களை கொண்டு பாட வைத்தேன். காரணம், திருக்குறள் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது.
அதோடு உலகமெங்கிலுமுள்ள தமிழ் பாடகர்கள் அனைவரையும் பாட வைத்திருக்கிறேன். மேலும், உலகிலுள்ள அனைத்து தமிழ் இல்லங்களிலும் இந்த திருக்குறள் ஒலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதோடு, இந்திய அளவில் உள்ள பள்ளி- கல்லூரிகளிலும் திருக்குறளை விற்பனை செய்ய மத்திய மாநில அரசுகளின் உதவியை நாடப்போகிறேன் என்று கூறுகிறார் பரத்வாஜ்.
|