LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 4

                 பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 4

 

2.25. பாரதி உள்ளம்
சாதி ஒழிந்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று 
பாதியை நாடு மறந்தால் - மற்றப்
பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி - நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே - நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார்என் னிடத்தில் - அந்த
இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை - நான்
இன்றும் இருப்பத னாலே!
பன்னும்நம் பாரதி யாரின் - நல்ல
பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு - நம்
நற்றமிழர்க் கெழில் மூச்சு!

மேலவர் கீழவர் இல்லை - இதை
மேலுக்குச் சொல்லிட வில்லை 
நாலு தெருக்களின் கூட்டில் - மக்கள்
நாலா யிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று - சொல்லும்
தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும்அப் பாரதி சொல்வார் - "சாதி
வேரைப் பொசுக்குங்கள் என்றே.

செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன்
சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ! - எந்த
நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை - கையிற் 
காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி - நல்ல
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.



2.26. மகா கவி


 

பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்
வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தௌிவாக, அழகாக, உண்மையாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.

பழையநடை, பழங்கவிதை, பழந் தமிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்.
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!

கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்த ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்;
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!

ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!

"பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே"யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்.

"சாதிகளே இல்லையடி பாப்பா" என்றார்
"தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்" என்றார்.
சோதிக்கின் "சூத்திரர்க்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும் படி"பழமை பழமை என்பீர்
பழமைஇருந் திட்டநிலை அறியீர்" என்றார்.

தேசத்தார் நல்லுணர்வு பெரும் பொருட்டுச் 
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசைபொறுத்தார். நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார்; இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.

வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சில நாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்.
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?

[ இது அந்நாளில் ஆனந்த விகடனில் "ரா.கி" (கல்கி)யால் பாரதி உலககவி அல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத் தக்கன உள்ளன என்றும், எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.]



2.27. செந்தமிழ் நாடு


 

(செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)

தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்உரைத்தார்
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
பலநண்பர் வந்து பாரதி யாரை
நலமாகக் கேட்டார்; அதற்கு நம்ஐயர்
என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார்
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார்; போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்,
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்.
"அந்தவிதம் ஆகட்டும்" என்றார்கள் நண்பரெலாம்.
"செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" என்
றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்!
காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் அஃதிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு!



2. 28. திருப்பள்ளி எழுச்சி


 

(திருப்பள்ளி எழுச்சி என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)

நற்பெரு மார்கழி மாதமோர் காலை
நமதுநற் பாரதி யாரோடு நாங்கள்
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்
பெற்ற முதுவய தன்னையார் ஐயரே,
பீடு தரும்"திருப் பள்ளி யெழுச்சி"தான்
சொற்றிறத் தோடுநீர் பாடித் தருகெனத்
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே.

நீல மணியிருட் காலை அமைதியில்
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின்
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,
காலை மலரக் கவிதை மலர்ந்தது;
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது!
ஞானப் "பொழுது புலர்ந்த"தென் றார்ந்த
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே!



2.29. நாடக விமரிசனம்


 

ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும் 
உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கே
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி
"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான்!
வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்:

"மயக்கம்வந்தால் படுத்துக்கொள் ளுவது தானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா" என்றார்!
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்;
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை?
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்;
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான். தூங்கி விட்டால்
முடிவுநன்றா யிருந்திருக்கும் சிரம மும்போம்!



திராவிட நாடு


2.30. இனப்பெயர்


 

 

1

"இனப்பெயர் ஏன்"என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
"நான்தான் திராவிடன்" என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
"முன்னாள்" என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் "திராவிடன்" ஒளிசெய் கின்றான்.
அன்னோன் கால்வழி யாகிய தொடர்கயிற்று
மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்கா லத்தின் கடைசியோ டியைந்தது.
சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி! 
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
"திராவிடன்" ஆலின் சிறிய வித்தே!
இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
உன்இனப் பெயர்தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்.

2

கடந்த காலப் படம் இது:
அடடே வடபெருங் குன்றமும் இல்லை!
அவ்விடம் நீர்ப்பரப்பு - ஆழ்கடல் உள்ளதே!
அப்பெருங் கடல்அலை, அழகிய விந்திய
வெற்பின் வடபுறத்து விளையா டினவே!
மேற்கு அரபிக்கடல் கிழக்கு வங்கக்கடல்
இல்லை! என்ன வியப்பு இது!
ஆபி ரிக்கமும், ஆத்திரே லியமும்
குமரி ஆறுபாய் குளிர்தென் மதுரையும்
இடையீ டின்றி நெடிது கிடந்த
"தொடித்தோள் வையம்" தோன்றக் கண்டேன்.
அங்குக் கண்டேன்:
தென்மது ரைத்தமி ழின்முதற் கழகம்!
அதன்பாற் கண்டேன்:
ஆன்ற முத்தமிழ் அறிஞர் பல்லோரை.
நான்ஓர் திராவிடன்; நனிமகிழ் வுடையேன்!

தொடித்தோள் வைய நெடிய வானில்,
உடுக்கள் போற்பல உயர்நா டுகளும்
அவற்றிடைத் திகழும் அழகு முழுமதித்
தென்மா மதுரையும் திகழ்வ தாகப் -
பெருஞா லத்தின் இருள்கெடத் தமிழறிவு -
திராவிடர் கொண்டு சேர்க்கின் றாரே.

3

என்னே! என்னே!
வடக்குக் கடல்நீர் தெற்கிற் பாய்ந்ததே!
தொடித்தோள் வையத் தூயநா டுகளில்
சிற்சில வற்றைச் சீறிவிழுங் கிற்றே!
அத்தென் பாங்கினர் அடைந்தனர் இங்கே
மீண்டும் தெற்கில் ஈண்டிற்று வெள்ளம்!
மற்றும் சிற்சில மண்ணகம் மறைந்தன.
என்னே கொடுமை!
அங்குளார் இங்கு வந்தனர் அலறியே.
`தெய்'என்று செப்பும் தீமுதல் ஐந்தில்
நீர்ஒன்று அடிக்கடி நெடுநிலம் விழுங்கலால்
சிதறி வந்த தென்புலத் தாரை
ஓம்பும்நாள் இடைவிடாது உளவா யிற்றே!

4

கடற்கீழ்க் கிடந்த வடபெரும் பனிமலை
மேற்றோன் றும்படி மிகுபெருங் கடல்நீர்
தென்பால் ஐயகோ சீறி வந்ததால்
தொடித்தோள் வையமே படிமிசை மறைந்ததே.
இன்று தென்கடலில் இலங்கை முதலால்
ஒன்று மில்லை.
மேற்கிடம் அரபிக் கடலும்
கிழக்கிடம் வங்கக் கடலும்
அன்றி வேறில்லை.
வடபெரும் பனிமலை மண்மேற் றோன்ற
அங்கிருந்து விந்தியம்ஆம் குன்ற மட்டும்
நிலப்பரப் பானது!
திகழ்விந் தியத்தின் தென்னாட்டுத் திராவிடர்
அங்கும் குடிபுகுந் தழகு செய்தனர்.
ஆரியர் கால்நடை அமைய வந்தவர்,
பனிவரை யடுத்த நனிபெரு நிலத்தில்
தங்கினர். தங்கித் தங்கள் வாழ்வையும்
மொழியையும் தமிழால் ஒழுங்கு செய்தனர்.
வடபால் இருந்துதென் குடபால் வந்த
ஆரியர் சிற்சிலர்
குடமலைச் சாரல் அடைந்தார் ஆதலின்
குடமலை தன்னைக் குடமுனி என்றனர்.
ஆரியர் இங்குச் சீரிய தமிழில்
அறிவு பெற்றனர் அதிகா ரத்தின்
விருப்பால் நாடொறும் விளைத்தனர் சூழ்ச்சிகள்.
இடைத்தமிழ்க் கழகம் கடைத்தமிழ்க் கழகம்
முதற்பெருங் கழகம் ஆகிய
எவற்றிலும் தம்பெயர் ஏற்றித் தம்மைத்
திராவிட இனத்திற் சேர்ந்தோர் போலக்
காட்ட முயன்றனர் அன்றோ!
திராவிடன் நான்! என் பெருமை
இராவிடம் இல்லை மகிழ்ச்சி பெரிதே!



திராவிடன்


2. 31. திராவிடன் கடமை


 

 

மனவீட்டைத் திறப்பாய் - சாதி
மனக்கத வுடைத்து
மனவீட்டைத்...

இனமான திராவிடர் பண்பின்
எழில்காண உணர்வு விளக்கேற்று
மனவீட்டைத்...

புனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம்
புராண வழக்கங்கள் யாவும்?
இனிமேலும் விட்டுவைக் காதே
எடுதுடைப் பத்தைஇப் போதே
தனிஉலகை ஆண்டனை முன்னாள்
தன்மானம் இழந்திடாதே இந்நாள்
மனவீட்டைத்...

வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த
வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி
இடைநாளில் மட்டுமா? சென்ற
இரண்டாயிரத் தாண்டு பார்த்தார்
விடுவாயாடா தன்ன லத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு.
மனவீட்டைத்...



2. 32.. அது முடியாது


 

கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை
கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.
கோட்டை நாற்காலி...

கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை.
கோட்டை நாற்காலி...

காட்டை அழிப்பது கூடும் - அலை
கடலையும் தூர்ப்பது கூடும்
மேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும்
ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை
எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?
கோட்டை நாற்காலி...

அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர்
வொடுக்குதல் எவ்வாறு முடியும்?
திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத்
திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்?
கோட்டை நாற்காலி...



2.33. பிரிவு தீது


 

கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

கேரளம் என்னல் திராவிடமே - ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே - வேறு
இராதெனல் உண்மை அண்ணே.

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர் நாடாமோ? - அவை
வடவர் நாடாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ? - அவர்
வேர்வந்த சொல்லாமோ?



2.34. உணரவில்லை


 

உணரச் செய்தான் உன்னை - அவன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்
உணரச் செய்தான்...

தணலைத் தொழுவோன் உயர்வென் கின்றான் - உனைத்
தணலில் தள்ள வழிபார்க் கின்றான்.
உணரச் செய்தான்...

முணுமுணு வென்றே மறைவிற் சென்றே
முட்டாள் முட்டாள் திராவிடன் என்றே
பணிமனை ஆட்சி பட்டம் யாவும்
பார்ப்பா னுக்கே என்றுபு கன்றே.
உணரச் செய்தான்...

நானிலம் ஆண்டான் திராவிடன் அந்நாள்
நான்மேல் என்றான் பார்ப்பான் இந்நாள்
ஏனவன் காலில் வீழ்தல் வேண்டும்?
எண்ணில் கோடி மக்கட் குறவே.
உணரச் செய்தான்...

அடியை நத்திப் பிழைத்த பார்ப்பான்
ஆளப் பிறந்த தாய்ச்சொல் கின்றான்
துடியாய்த் துடித்தான் உன்றன் ஆட்சி
தூளாய்ச் செய்துனை ஆளாக் கிடவே.
உணரச் செய்தான்...



2.35. உயிர் பெரிதில்லை


 

ஒருவன் உள்ள வரையில் - குருதி
ஒரு சொட்டுள்ள வரையில்
ஒருவன் உள்ள வரையில்...

திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச்
சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன்
ஒருவன் உள்ள வரையில்...

பெரிது மானம்! உயிர்பெரி தில்லை!
பெற்ற தாயைப் பிறராள விடுவோன்
திராவிடன் அல்லன்! திராவிடன் அல்லன்!
தீமை செய்து பார்க்கட்டும் ஆள்வோர்!
ஒருவன் உள்ள வரையில்...

அடித்தோன் அடிபட நேர்ந்ததிவ் வுலகில்
ஆள வந்தார் ஆட்படல் உண்டு
நெடிய திராவிடம் எங்களின் உடைமை
நிறைவுணர் வுண்டெங்கள் பட்டாள முண்டு!
ஒருவன் உள்ள வரையில்...

வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?
வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?
அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை
ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை!
ஒருவன் உள்ள வரையில்...



2.36. இனி எங்கள் ஆட்சி


 

தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது! மாளும்!
தன்னினம் மாய்க்கும்...

இந்நிலம் திராவிடர் ஆண்டார்
இறந்தநாள் வரலாறு காண்க.
தன்னினம் மாய்க்கும்...

மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய
மன்னவன் திராவிட மன்னன் - எதிர்
வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள்
திராவிட மன்னவன் தோளே!
சின்ன நினைப்புகள் தன்மான மற்ற
செயல்களை இனிவிட்டு வையோம்.
தன்னினம் மாய்க்கும்...

திராவிடப் பெருங்குடியில் வந்தவன் திராவிடத்
திருநாடு பெற்ற சேய்தான் - இத்
திராவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை
தேடினான் எனிலவன் நாய்தான்!
எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை
இனிஎங்கள் ஆட்சிஇந் நாட்டில்.
தன்னினம் மாய்க்கும்...



2.37. தமிழனுக்கு வீழ்ச்சியில்லை


 

தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி
தாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ மக்கள்,
தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லை!
தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ?

தமிழகத்தில் மலைபோன்ற செல்வத் தாரும்,
தம்ஆணை பிறர்ஏற்க வாழு வாரும்,
தமிழர்க்கோ தமிழுக்கோ இடையூ றொன்று
தாம்செய்து வாழ்ந்தநாள் மலையே றிற்றே!
உமிழ்ந்தசிறு பருக்கையினால் உயிர்வாழ் வாரும்
உரமிழந்து சாக்காட்டை நண்ணு வாரும்
தமிழ்என்று தமிழரென்று சிறிது தொண்டு
தாம்புரிவார் அவர்பெருமை அரசர்க் கில்லை!

ஒருதமிழன் தமிழர்க்கே உயிர்வாழ் கின்றான்;
உயிர்வாழ்வோன் தமிழர்க்கே தனைஈ கின்றான்;
அரியபெருஞ் செயலையெலாம் தமிழ்நாட் டன்பின்
ஆழத்தில் காணுகின்றான்! தமிழன் இந்நாள்
பெரிதான திட்டத்தைத் தொடங்கி விட்டான்;
"பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்;
வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்."
வாழ்கதமிழ்! இவ்வையம் வாழ்க நன்றே!

அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே
அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே!
இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி
எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக் கவிதை தோறும்
தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக்
காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு
பொன்னான கலைப்பேழை என்று சொல்லும்
புகழேற்றி வருகின்றார் - அறிஞர் வாழ்க!



2.38. தமிழன்


 

அறியச் செய்தோன் தமிழன்
அறிந்த அனைத்தும் வையத்தார்கள்
அறியச் செய்தோன்...

செறிந்து காணும் கலையின் பொருளும்
சிறந்த செயலும் அறமும் செய்து
நிறைந்த இன்ப வாழ்வைக் காண
நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள்
அறியச் செய்தோன்...

காற்றுக் கனல்மண் புனலும் வானும்
தமிழன் கனவும் திறமும் கூட்டி
நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய
நவின்று, நவின்று, நவின்று முன்னாள்
அறியச் செய்தோன்...

எங்கும் புலமை எங்கும் விடுதலை
எங்கும் புதுமை கண்டாய் நீதான்!
அங்குத் தமிழன் திறமை கண்டாய்!
அங்குத் தமிழன் தோளே கண்டாய்!
அறியச் செய்தோன்...



2.39. பகை நடுக்கம்


 

தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள்.
தமிழர் என்று...

நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை!
தமிழர் என்று...

எந்த நாளும் தமிழர் - தம்கை
ஏந்தி வாழ்ந்த தில்லை.
இந்த நாளில் நம்ஆணை - செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை.
தமிழர் என்று...

வையம் கண்ட துண்டு - நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப்
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரி கைமு ழக்கு.
தமிழர் என்று...



2.40. கூவாய் கருங்குயிலே


 

எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே!

கன்னடம் தெலுங்குமலை யாளம் களிதுளுவம்
முன்னடைந்தும் மூவாது மூள்பகைக்கும் சோராது
மன்னும் தமிழ்தான்இவ் வையத்தை யாள்கஎனக்
கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!

வராதெனச் சொன்னாரும் வருந்தத்தன் ஆட்சி
இராத இடமில்லை என்றநிலை நாட்டத்
திராவிட நாடு சிறைநீங்க என்று
குரலே முரசாகக் கூவாய் கருங்குயிலே!

உண்ணல் உடுத்தல் உயிர்த்தல்எனச் செந்தமிழை
நண்ணலும் ஆம்என்று நாட்டுக; வேறுமொழி
எண்ணல் நிறுவல் இலாதுகல்வி கட்டாயம்
பண்ணல் பயன்என்று கூவாய் கருங்குயிலே!

செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!

இளைஞர் துடிக்கின்றார் தமிழின் நிலைஎண்ணிக்
கிளைஞர் அடைகின்ற கேடுபொறார் இங்கு
விளையாட வேண்டாமே ஆளவந்தார்! வாழ்வின்
களைநீக் குகஎன்று கூவாய் கருங்குயிலே!

பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும்
ஆலோடு வேர்என் றறிந்திருந்தும் ஆளவந்தார்
மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி
சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே!



2.41. தமிழர்களின் எழுதுகோல்


 

கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்
கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்
தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற்
சிரிப்பள்ளித் தூற்றும்!நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?
தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால்
சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே!
இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சி மனப்பான்மை
ஏற்படுத்தல்; பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்.

விருப்பத்தை நிறைவேற்ற முயலுங்கால் வையம்
வெறுந்தோற்றம் என்னும்ஒரு வேதாந்தப் பேச்சேன்?
மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற
மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம்.
உரத்தினிலே குண்டுபுகும் வேளையிலும் மக்கள்
உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்!
பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள்
பிறர்தமர்என் றெண்ணுவது பேதமையே அன்றோ?

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!
புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?
ஏற்றசெயல் செய்தற்கும் ஏன்அஞ்ச வேண்டும்? 
உதிர்த்திடுக பொன்மலர்கள் உயர்கைகள், நன்றே
உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும்.



2.42. இசைத் தமிழ்


 

மேசை விளக் கேற்றி - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ் படித்தேன் - என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத் தமிழ் மன்னர் - தம்பகையை
வென்ற வர லாற்றை
ஓசை யுடன் படித்தேன் - அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!

செந்தமிழ் நாட்டி னிலே - வாழ்கின்ற
சேயிழை யார் எவரும்
வந்த விருந் தோம்பும் - வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லு கையில்
அந்தத் தமிழன் னையின் - முகத்தினில்
அன்பு பெருகி யதை
எந்த வகை உரைப்பேன்! - கேட்டபின்பும்
இன்னும்சொல் என்றுரைத் தார்!

கிட்டநெருங்கி எனைப் - பிள்ளாய்என்று
கெஞ்சி நறுந் தேனைச்
சொட்டு வதைப் போலே - வாய்திறந்து
சொல்லொரு பாடல் என்றார்
கட்டிக் கரும் பான - இசைத்தமிழ்
காதினிற் கேட்ட வுடன்
எட்டு வகைச் செல்வமும் - தாம்பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார்!



2.43. சிறுத்தையே வௌியில் வா!


 

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வௌியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வௌியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!



2.44. தீவாளியா?


 

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!



2. 45. பன்னீர்ச் செல்வம்


 

மார்புற அணத்து நாதன்
மங்கைக்குத் தந்த இன்பம்
சார்புறத் தேகம் தன்னை
மனத்தினைத் தழுவும் நேரம்
நேரினில் இருந்த நாதன்
மறைந்தனன் என்றால் நேயக்
கார்குழல் மங்கை கொள்ளும்
கடுந்துயர்க் களவு முண்டோ?

இறைந்தநற் றமிழர் தம்மை
இணைத்தசீர் இராம சாமி
அறைந்தநல் வழியே இந்தி
அரவினைக் கொன்றான் செல்வன்
நிறைந்தஅத் தேனை நாட்டார்
நினைந்துண்ணும் போதே அன்னோன்
மறைந்தனன் என்றால் யார்தாம்
மனம்துடி துடிக்க மாட்டார்?

எல்லையில் "தமிழர் நன்மை"
என்னுமோர் முத்துச் சோளக்
கொல்லையில் பார்ப்பா னென்ற
கொடுநரி உலவும் போது,
தொல்லைநீக் கிட எழுந்த
தூயரில் பன்னீர்ச் செல்வன்
இல்லையேல் படைத் தலைவன்
இல்லைஎம் தமிழ்வேந் துக்கே.

ஆங்கில நாட்டில் நல்ல 
இந்திய அமைச்ச னுக்குத்
தீங்கிலாத் துணையாய்ச் சென்றான்
சர்.பன்னீர்ச் செல்வன் தான்மேல்
ஓங்கிய விண்வி மானம்
உடைந்ததோ ஒலிநீர் வெள்ளம்
தூங்கிய கடல்வீழ்ந் தானோ
துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள்.

பண்கெட்டுப் போன தான
பாட்டுப்போல் தமிழர் வாழும்
மண்கெட்டுப் போமே என்னும்
மதிகெட்டு மானம் கெட்டும்
எண்கெட்ட தமிழர் பல்லோர்
பார்ப்பனர்க் கேவ லாகிக்
கண்கெட்டு வீழும் போதோ
கடல்பட்ட தெங்கள் செல்வம்?

சிங்கத்தை நரிய டிக்கும்
திறமில்லை எனினும் சிங்கம்
பொங்குற்றே இறந்த தென்றால்
நரிமனம் பூரிக் காதோ?
எங்குற்றான் செல்வன் என்றே
தமிழர்கள் ஏங்கும் காலை
இங்குற்ற பூணூல் காரர்
எண்ணம்பூ ரிக்கின் றார்கள்.



பன்மணித்திரள்


2. 46. அறம் செய்க


 

 

தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை!
கடலிலும், வானிலும், கவினுறு நிலத்திலும்,
வாழ்வுயிர் அனைத்தும், மக்கள் கூட்டமும்,
வாழுமாறு அன்பு மணிக்குடை யின்கீழ்
உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!

புலவர்கள் "உலகப் பொன்னி லக்கியம்"
ஆக்கினார்! மறவரோ, அறிவு-அறி யாமையைத்
தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும்
வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும்
அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!

தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
இடும்நம தாணை ஏற்று நடக்கவும்
தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும்
தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந் தோளால் தொடங்குக "பணியை!"

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!
சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
தமிழகம் வையத் தலையாய்
அமையத் தொடங்குக "அறம்இன்பம்" என்றே!



2. 47. கற்பனை உலகில்


 

தெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசை
சிறியதொரு நாற்காலி தவிர மற்றும்
இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,
எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று
வருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;
மாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி
ஒருதடவை வௌியினிலே பார்த்தேன். அங்கே
ஒருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்!

நெஞ்சத்தில் `அவள்'வந்தாள்; கடைக்கண் ணால்என்
நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர்
கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்
காட்டினாள்! பூமலர்ந்த கூந்தல் தன்னில்
மிஞ்சும்எழில் காட்டினாள்! அவள்தன் கோபம்
மிகலாபம் விளைத்த தன்றோ என்றனுக்கே!
`அஞ்சுகமே வா'என்று கெஞ்சி னேன்நான்
அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்.

இவ்வுலகம் ஏகாந்தத் தின்வி ரோதி!
இதோபாராய் பிச்சைஎன ஒருத்தி வந்தாள்.
திவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித்
தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க!
`வவ்வவ்'வென் றொருகிழவி வருவாள்; உன்றன் 
மணநாளில் என்னைஅழை என்று சொல்வாள்!
ஒவ்வொன்றா? என்செயலாம்! நீயும் நானும் 
உயர்வானில் ஏறிடுவோம் `பறப்பாய்' என்றேன்.

மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல
மாணிக்கக் காலும்,மணி விழியும், பால்போல்
துல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த்
துலங்கினாள். நானும்ஆண் புறாவாய்ப் போனேன்.
அல்லலற வான்வௌியில் இருவர் நாங்கள்;
அநாயாச முத்தங்கள் கணக்கே யில்லை;
இல்லையென்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி
அவைசாய்ந்த அமுதுண்போம்; இன்னும் போவோம்.

பொன்னிறத்துக் கதிர்பாயும்முகிலிற் பட்டுப்
புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல்
மின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து
விரிக்கும்இருள்! இருள்வானம் ஒளிவான் ஆகச்
சென்னியைஎன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே
சிறகினொடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்!
என்னைஅறி யேன்!தன்னை அறியாள்! பின்னர்
இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்!

`பாரதநாட் டாரடிநாம் வாவா' என்றேன்.
பழஞ்சாமான் சிறுமேசைக் கூண்ட றைக்குள்,
ஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல்
உட்கார்ந்த படியிருந்தேன். பின்னும், உள்ளம்
நேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை,
நெடியபல தொந்தரைகள், நியதி அற்ற
பாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம்
பதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே.



2.48. குழந்தை


 

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது. பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!



2.49. தொழில்


 

தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!
எழிலை உலகம் தழுவும் வண்ணம்
ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத்
தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!

இந்தவான், மண்,கனல் எரி,வளி உருப்படா
அந்தநாள் எழுந்தஓர் `அசைவினால்' வானொடு
வெண்ணி லாவும், விரிகதிர் தானும்,
எண்ணிலா தனவும் எழுந்தன வாகும்.
அணுத்தொறும் இயங்கும்அவ் வசைவியக் கத்தைத் 
துணிப்பிலா இயற்கையின் தொழிலெனச் சொல்வார்.
அழியா தியங்கும்அவ் வசைவே மக்களின்
தொழிலுக்கு வேரெனச் சொல்லினும் பொருந்தும்.
ஆயினும் உன்னினும் அதுசிறந்த தன்று
தாயினும் வேண்டுவது தந்திடுந் தொழிலே!

மக்களின் தேவை வளர்ந்திடும் அளவுக்குத்
தக்க வாறு தளிர்த்திடு கின்ற
அறிவிலே தோன்றுவை; அறத்தோள் தழுவுவை!
மறுவிலாக் கருவியில் வாய்விட்டுச் சிரிப்பை;
பொருள்பல நல்கிஅப் பொருள்தொறும் கலைத்திறம்
அருள்புரிந்து குறைபா டகற்றுவை தொழிலே!

பசித்தவன் புசித்திடப் பறப்பது போன்றதோர்
அசைப்பிலா ஆவலும், அசைப்பிலா ஊக்கமும்
அடைந்தோர் உனைத்தம் ஆயிரம் ஆயிரம்
தடந்தோள் தழுவியே கடந்தனர் வறுமை!

தொழிலே காதுகொடு! சொல்வேன். எங்கள்
அதிர்தோள் உன்றன் அழகிய மேனி
முழுதும் தழுவ முனைந்தன பார்நீ.
அழகிய நாட்டில் அந்நாள் இல்லாத
சாதியும் மதமும் தடைசெயும் வலிவிலே
மோதுதோள் அனைத்தும் மொய்த்தன ஒன்றாய்!
கெண்டை விழியாற் கண்டுகொள் தொழிலே
வாராய் எம்மிடை வாராய் உயிரே
வாராய் உணர்வே வாராய் திறலே!

அலுப்பிலோம் இருப்புக் கலப்பை துடைத்தோம்;
மலையெனச் செந்நெல் வழங்கஎம் தோளில்வா!
கரும்பா லைக்குக் கண்ணெலாம் நெய்யிட்
டிரும்பா லைக்கு வரும்பழு தகற்றினோம்
பண்டம்இந் நாட்டிற் பல்க மகிழ்ந்துவா!

சூட்டி ரும்பும் துளியும் போலஎம்
தோட்கூட் டத்தில் தொழிலுன் வல்லமை
சேர்வது நாங்கள் விடுதலை சேர்வதாம்!
யாமும் நீயும் இரண்டறக் கலப்பின்
தூய்மை மிக்க தொழிலா ளிகள்யாம்; 
சுப்பல் முடைவோம் கப்பல் கட்டுவோம்
பூநாறு தித்திப்புத் தேனாறு சேர்ப்போம்
வானூர்தி யாலிவ் வையம் ஆள்வோம்.
ஐயப் படாதே! அறிவு புகட்டும்
வையநூல் பலஎம் மனத்தில் அடுக்கினோம்;
மாசு தவிர்ந்தோம்; மாசிலா மணியே
பேசு; நெருங்கு; பிணைதோ ளொடுதோள்;
இன்பம்! இன்பம்!! இதோபார் கிடந்த
துன்பம் தொலைந்தது! தொலைந்தது மிடிமை!
வாழிய தொழிலே! செந்தமிழ்
வாழிய! வாழிய வண்டமிழ் நாடே!



2.50. குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை


 

கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு
வீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!
யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்
கீச்சுக் கீச்சென்று கூச்ச லிட்டது.
கடுகு விழியால் தடவிற்றுத் தாயை
தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!

தும்பைப் பூவின் துளிமுனை போன்ற
சிற்றடி தத்தித் திரிந்து, சிறிய
இறக்கையால் அதற்குப் பறக்கவோ முடியும்!

மின் இயக்க விசிறி இறக்கையால்
சரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது.
கல்வி சிறிதும் இல்லாத் தனது
செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி,
"இப்படி வா"என இச்இச் என்றதே!
அப்படிப் போவதை அறிந்து துடித்ததே!

காக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன!
தாக்கலும் கொலையும் தலைவிரித் தாடின;
அல்லல் உலகியல் அணுவள வேனும்
கல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம்
என்றது! துடித்த தெங்கணும் பார்த்தது!

மேலிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப்
பஞ்சுபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே!
எழுந்து லாவும் இளங்குழந் தைகளை
இழந்து போக நேரும்;
குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே!



2.51. கடவுளுக்கு வால் உண்டு


 

காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும்,
கருங்குரங் கின்வா லிலே
கட்டிவளை யந்தொங்க, அதிலேயும் மதம்என்ற 
கழுதைதான் ஊச லாட
வீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலே
வெறிகொண்ட சாதி யென்னும்
வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கி
மேதினி கலங்கும் வண்ணம்
வாணங்கொ ளுத்துகின் றான்என் பதும்வயிறு
வளர்க்கும்ஆத் திகர்க ருத்து.
மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக் குத்தொங்கும்
வாலையடி யோட றுத்தால்
சேணேறு கடவுளுக் கும்சுமை அகன்றிடும்
தீராத சாதி சமயத்
தீயும்வி ழுந்தொழியும் எனல்என் கருத்தாகும்
திருவார்ந்த என்றன் நாடே.



2.52. மலையிலிருந்து


 

சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச்
சுப்பனைக் காண லானேன்.
`தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லையே'
என்றுநான் சொன்ன வுடனே
கோபித்த மாப்பிள்ளை `மதம்என்னல் மலையுச்சி
நான்அதில் கொய்யாப் பழம்;
கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால்
கோட்டமே' என்று சொன்னான்.
தாபித்த அந்நிலையில் அம்மாப்பிள் ளைக்குநான்
தக்கமொழி சொல்லி அவனைத்
தள்ளினேன். மலையுச்சி மீதே யிருந்தவன்
தன்புதுப் பெண்டாட் டியின்
சோபனக் கட்டிலில் தொப்பென்று விழுந்தனன்.
துயரமும் மனம கிழ்வும் 
சுப்பனே அறிகுவான் நானென்ன சொல்லுவேன்
தூயஎன் அன்னை நாடே!



2.53. எந்த நாளும் உண்டு


 

மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம்
மறிக்கின்ற இந்து மதமும்,
மசூதியின் பக்கமாய் மேளம்வா சித்திடினும்
வாள்தூக்கும் மகம்மதி யமும்,
வாடவரு ணாச்சிர மடமைக் கொழுந்தினை
`மகாத்மீயம்' என்னும் நிலையும்,
வழிபறிக் கும்தொல்லை இன்றியே `பொதுமக்கள்
மதிப்பைப் பறித்தெ றிந்து,
பாடின்றி வாழ்ந்திட நினைத்திடும் பாதகப்
பார்ப்பனர், குருக்கள், தரகர்,
பரலோகம் காட்டுவார்' என்கின்ற பேதமையும்
பகைமிஞ்சு கடவுள் வெறியும்,
ஆடாமல் அசையாமல் இருந்திடக் கேட்கின்ற
அவ்வுரிமை நாளும் இங்கே
அமைந்திருக் கின்றதே அறிவியக் கங்கண்ட
அழகுசெந் தமிழ்வை யமே!



2.54. பெண்குரங்குத் திருமணம்


 

பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி
`பெண்வேண்டும் மகனுக்' கெனப்
`பெற்றபெண் ணைக்கொடேன்; வளர்க்கின்ற பெண்ணுண்டு
பேச்செல்லாம் கீச்'சென் றனன்.
`இருந்தால் அதற்கென்ன' என்னவே, எனதுபெண்
`இரட்டைவால் அல்ல' என்றான்.
ஏழையண் ணாசாமி `மகிழ்ச்சிதான்' என்றனன்.
`என்றன்பெண் கால்வ ரைக்கும்
கருங்கூந்தல் உண்'டென்ன, ஏழையண் ணாசாமி
கடிதுமண நாள்கு றித்தான்.
கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்தபெண்
கழுதையா? அல்ல, அதுதான்
பெரும்பணக் காரன் வளர்த்திட்ட ஒற்றைவால்
பெட்டைக் கருங் குரங்கு!
பீடுசுய மரியாதை கண்டுநல முண்டிடும்
பெரியஎன் அன்னை நாடே!



2.55. கற்பின் சோதனை


 

கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்
கருதியே கைம்மை கொண்ட
கண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்
கணவனின் வைப்பாட் டியும்
ஒப்பியே வந்தார்கள். கண்ணம்மை நோக்கினாள்
`உடன்இப்பெண் யார்?'என் றனள்.
`உன்சக்க ளத்திதான்' என்றனன். கண்ணம்மை
உணவுக்கு வழிகேட் டனள்.
`இப்பத்து மாதமாய்க் கற்புநீ தவறாமல்
இன்னபடி வாழ்ந்து வந்தாய்
என்பதனை எண்பிக்க எங்களிரு வர்க்கும்நீ
ஈந்துவா உணவெ'ன் றனன்.
அப்படியும் ஒப்பினாள் கண்ணம்மை. ஆயினும்
அடிமையாம் பலிபீ டமேல்
அவள்உயிர் நிலைக்குமோ? அறிவியக் கங்கண்ட
அழகுசேர் அன்னை நாடே!



2.56. தலையுண்டு ! செருப்புண்டு !


 

நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனது
நேரான சொற்கள் கேட்பீர்!
நீர்மொள் ளவும்,தீ வளர்க்கவும் காற்றுதனை
நெடுவௌியை அடைவ தற்கும்
பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோ
பணக்காரர் நன்மை யெல்லாம்?
பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!
பறித்துத் தொலைத்து விட்டால்
நலமுண்டு! பணக்காரர் வயிறுண்டு! தொழிலாளர்
நஞ்சுண்டு சாகட் டுமே!
நற்காற்று, வானம்,நீர், அனல்பொது வடைந்ததால்
நன்செயும் பொதுவே எனத்
தலையற்ற முண்டங்கள் சொன்னாற் பெரும்பெரும்
தலையெலாம் உம்மில் உண்டு!
தாழ்ந்தவர்க் கேதுண்டு; காற்செருப் பேஉண்டு
தகைகொண்ட அன்னை நிலமே!



2.57. எண்ணத்தின் தொடர்பே!


 

குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்,
படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்,
கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும்
கொள்கையால் வேத நூலின்
கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே
தூயசுய மரியா தையாய்ச்
சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்
தூயஎன் அன்னை நிலமே!



2.58. சங்கங்கள்


 

சங்கங்களால் - நல்ல
சங்கங்களால் - மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

சிங்கங்கள்போல் - இளஞ்
சிங்கங்கள்போல் - பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே

பொங்கும் நிலா - ஒளி
பொங்கும் நிலா - எனப்
பூரிக்கும் நெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை

மங்கிடுமோ? - உள்ளம்
மங்கிடுமோ? - என்றும்
மங்காது நல்லறி வும்தௌி வும்வரும்

சங்கங்களை - நல்ல
சங்கங்களை - அந்தச்
சட்டதிட் டங்களை மூச்சென வேகாக்க

அங்கம் கொள்க! - அதில்
அங்கம் கொள்க! - எனில்
அன்பினை மேற்கொண்டு முன்னின் றுழைத்திட

எங்கும் சொல்க! - கொள்கை
எங்கும் சொல்க! - இதில்
ஏதுத டைவந்த போதிலும் அஞ்சற்க!

தங்கத்தைப் போல் - கட்டித்
தங்கத்தைப் போல் - மக்கள்
தங்களை எண்ணுக! சங்கங்க ளிற்சேர்க்க!
தங்கத்தைப் போல்...

கொள்கை இல்லார் - ஒரு
கொள்கை இல்லார் - மக்கள்
கூட்டத்தில் இல்லை!சங் கங்களின் சார்பினைத் 

தள்ளூவதோ? - மக்கள்
தள்ளூவதோ? - சங்கத்
தாய்வந்து தாவும் தளிர்க்கையைத் தீதென்று

விள்ளுவதோ? - மக்கள்
விள்ளுவதோ? - மக்கள்
வெற்றியெல் லாம்சங்க மேன்மையி லேஉண்டு

கொள்ளுகவே - வெறி
கொள்ளுகவே -சங்கம்
கூட்டிட வும்கொள்கை நாட்டிட வும்வெறி
கொள்ளுகவே...

சாதி மதம் - பல
சாதி மதம் - தீய
சச்சர வுக்குள்ளே பேத வுணர்ச்சிகள்

போதத்தையே - மக்கள்
போதத்தையே - அறப்
போக்கிடும் மூடவ ழக்கங்கள் யாவும்இல்

லாத இடம் - தீதி
லாத இடம் - நோக்கி
யேகிடு தேஇந்த வைய இலக்கியம்!

ஆதலினால் - உண்மை
ஆதலினால் - சங்கம்
அத்தனை யும்அதை ஒத்து நடத்துக!

உள்ளத்திலே - நல்ல
உள்ளத்திலே - எழுந்
தூறி வரும்கொள்கை யாகிய பைம்புனல்

வெள்ளத்திலே - இன்ப
வெள்ளத்திலே - இந்த
மேதினி மக்கள் நலம்பெறு வாரென்று

தள்ளத் தகாப் - பல
தள்ளத் தகா - நல்ல
சங்கங்கள் எங்கணும் நிறுவுவர் சான்றவர்!

பள்ளத்திலே - இருட்
பள்ளத்திலே - வீழ்ந்த
பஞ்சைகட் கும்சங்கம் நெஞ்சிற் சுடர்கூட்டும்
சங்கங்களால்...

தாய் தந்தையர் - நல்ல
தாய் தந்தையர் - மண்ணில்
தாம்பெற்ற பிள்ளைகள் சங்கத்திற்கே என்ற

நேயத்தினால் - மிக்க
நேயத்தினால் - நித்தம்
நித்தம் வளர்க்க! நற்புத்தி புகட்டுக!

ஆய பொருள் - உண்
டாய பொருள் - முற்றும்
அங்கங் கிருந்திடும் சங்கங்களுக் கென்றே

தூய எண்ணம் - மிகு
தூய எண்ணம் - இங்குத்
தோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில்.



2.59. குடியானவன்


 

அகவல்

ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை,
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
"கிடப்பவன்" பகலெல்லாம் கடுக்க "உழைப்பவன்"
"குடியா னவன்"எனக் கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடிஇலாச் செல்வரும்!

அக்குடி யானவன் அரசர் செல்வரோடு
இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை!
அழகிய நகரை அவன்அறிந் ததில்லை
அறுசுவை உணவுக்கு - அவன் வாழ்ந்த தில்லை!
அழகிய நகருக்கு - அறுசுவை உணவை
வழங்குதல் அவனது வழக்கம்; அதனை
விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்!

"சமைத்தல்" "உழைத்தல்" சாற்றும் இவற்றிடை
இமைக்கும் நேரமும் இல்லை ஓய்வு - எனும்
குடியா னவனின் குறுகிய காதில்
நெடிய ஓர்செய்தி நேராய் வந்தது:
"உலகிற் பெரும்போர்" "உலகைப் பெறும்போர்"
"உலகின் உரிமை உறிஞ்சும் கொடும்போர்
மூண்டது மூண்டது மூண்டது - ஆகையால்
ஆண்தகை மக்கள் அனைவரும் எழுக"
அந்த ஏழையும் ஆண்தகை தானாம்!

ஒருவன் ஆண்தகையை உற்றறி யத்தகும்
திருநாள் வாழ்க - எனச் செப்பினான் அவனும்!

அருமை மகனுக்கு - ஒருதாய் சேர்த்தல் போல்,
பெருங்கடல் அளக்கும் பெரும்போர்க் கப்பல்,
குண்டுகள் கொடிய வண்டிகள் சாப்புகை,
வண்டெனப் பறக்கும் வான ஊர்திகள்,
அனைய அனைத்தும் அடுக்கடுக் காக
மறைவினில் சேர்த்து வைத்த இட்லர்,
இறைமுதல் குடிகள் யார்க்கும் போர்வெறி
முடுக முடுக்கித் திடீரென எழுந்தான்!

பெல்ஜியம் போலந்து முதல்நல்ல நாடுகள்
பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான்.
முடியரசு நாடு குடியரசு கொள்ள
முடியும் என்பதை முடித்த பிரான்சை
வஞ்சம், சூழ்ச்சியால் மடக்கி ஏறி
அஞ்சாது செல்வம் அடியொடு பறித்தான்.
இத்தாலி சேர்த்தே இன்னல் சூழ்ந்தவன்,
கொத்தாய் ஆசியக் கொள்கையை நாடும்
ஜப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான்.
ஆங்கில நாட்டையும் அமெரிக் காவையும்
எரிக்க நினைத்த இட்லர் என்னுங்
"குருவி" நெருப்புக் குழியில் விழுந்தது!

எத்தனை நாட்டுச் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!
எத்தனை நாட்டில் இருந்த காலாட்கள்!
அத்தனையும் சேர்த்து - அலைஅலை யாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்கள் வாழ்வின் மதிப்பு இன்னதென,
ஒக்க வாழும் உறுதி இதுவென,
முதிய பெரிய முழுநிலத் திற்கும் 
புதிய தாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!

உருசிய நாட்டின் உடைமையைக் கடமையை
மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை
உடலில் வைத்தே உயிரினால் காக்கும்
உருசி யத்தை இட்லர் உணர்கிலான்!

ஜப்பான் காரன் தன்கொடி நாட்ட
இப்பெரு நாட்டின் எழில்நக ரங்களில்
குண்டெறி கின்றான்; கொலையைத் தொடங்கினான்!
பண்டை நாள்மறத் தொண்டுகற் கண்டென
நாய்க்குட்டி நாடுகள் நன்று காணக் 
காட்டிய தமிழகம் கைகட்டி நிற்குமா?
ஊட்டத் தோளை ஓலைத்தோ ளென்னுமா?

இந்த நாட்டின் இருப்பையும், மூச்சையும்,
வந்துள பகையை வாட்டும் படையாய்
மாற்றி அமைத்து வைத்தனர் அன்றோ? 
முகத்தைப் பின்னும் முன்னும் திருப்பாது
விடியுமுன் எருதின்வால் அடிபற் றிப்பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடி யானவன் அருகில்இச் செய்தி
வலியச் சென்று வாயைத் திறந்தது!-

எழும்அரசர், செல்வர், எதிரிஇம் மூன்றுக்கு-
உழைக்க வேண்டும்அவ் வோலைக் குடிசை!
உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல்போல்,
அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,
அக்குடி யானவன் அழகிய தோளிலும்,
விழியிலும் எழுந்து மின்ன,அவ் வேழை
எழுந்தான்; அவனுக்கு - இதற்குமுன் வைத்த
இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை
இவை,அவன் காலை இழுத்தன கடித்து!

மெத்தை வீடு, மென்மை ஆப்பிள்,
முத்தரிசி பாலில் முழுங்கிய சோறு,
விலைதந்து தன்புகழ் விதைக்கும் ஆட்கள்,
இவற்றி னின்றுதான் இன்பமும் அறமும்,
துவங்கும் என்று சொல்லல் பொய்ம்மை!

இதைஅவன் கண்ட தில்லை; ஆயினும்
அக்குடி யானவன் எழுந்தான்
நிற்க வில்லை; நிறைந்தான் போரிலே!

(வையப் போரில் ரஷ்யாவை ஜெர்மனி 
தாக்கத் துவங்கியபோது எழுதியது.)



2.60. மடமை ஓவியம்


 

பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
படத்தின் நோக்கமெனில்
போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு
புதுக்கலும் தீதாமோ?
காத்தது முன்னைப் பழங்கதை தான்எனில்
கற்பனை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதை
பார்க்க மறுத்தார்கள்?

பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
படங்களின் நோக்கமெனில்,
நாமம் குழைத்திட வோஅறி வாளர்கள்
நற்கலை கண்டார்கள்?
தூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
தொடங்கையில் செல்வரெலாம்
தாமறிந் துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
சந்திப்ப தேனும்உண்டோ?

நேர்மைஇ லாவகை இத்தனை நாளும்
நிகழ்ந்த படங்களெல்லாம்
சீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத்
திறத்திற் பிறந்திருந்தால்,
ஓர்தமிழ் நாட்டில் உருசிய நாட்டையும்
உண்டாக்கித் தீர்த்திடலாம்
ஆர்செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்?
அடிமையும் தீர்த்திடலாம்!



2.61. நாடகம் - சினிமா நிலை


 

சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்;
கோரிக்கை பணம்ஒன்றே என்று சொன்னால்
கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்?
பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்
பழமைநிலை நீங்கிநலம் சேர்ப்ப தற்கும்
ஆராய்ந்து மேல்நாட்டார் நாட கங்கள்
அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின் றார்கள்.

ஒருநாட்டின் வேரிலுள்ள பகைமை நீக்கி
உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும்
பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்
பிடித்தபிடி யில்பிடித்துத் தீர்ப்ப தற்கும்
பெருநோக்கம் கொள்வதற்கும் பிறநாட் டார்கள்
நாடகங்கள், சினிமாக்கள் செய்வார். என்றன்
திருநாட்டில் பயனற்ற நாட கங்கள்
சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர்
தமிழ்மொழியின் பகைவரே! கொள்கை யற்றோர்!
இமயமலை யவ்வளவு சுயந லத்தார்
இதம்அகிதம் சிறிதேனு மறியா மக்கள்
தமைக்காக்கப் பிறர்நலமும் காக்க எண்ணும்
தருமகுண மேனுமுண்டோ இல்லை இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை .

முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில்
மூளிசெயல் தாங்காத நல்ல தங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட
சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர்
இந்நிலையில் நாடகத்தில் தமிழோ, காதை
இருகையால்மூடிக்கொள் என்று சொல்லும்
தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!



2.62. படத்தொழிற் பயன்


 

கேள்வி

நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு
நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கது வோபுகல் அண்ணே.

விடை

கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது!
ஏறாக் கருத்தை இங்கில்லாக் கதைகளை 
ஏற்றின ரோஅவர் தம்பி? - இது
மாறா திருக்குமோ தம்பி?

கேள்வி

தன்னருந் தொண்டினில் தக்கதோர் நம்பிக்கை,
தாங்கருந் தீங்கினில் நீங்கிடும் நல்லாற்றல்,
என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை
என்றைக்கு வந்திடும் அண்ணே? - இங்
கெழுத்தாள ரேஇல்லை அண்ணே.

விடை

சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்ஒரு
செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள்.
நன்னெறி காணாத மூதேவி தன்னையும்
நான்முகன் பெண்டென்பர் தம்பி - தொலைந்
தேன்என்னும் பொய்க்கதை தம்பி.

கேள்வி

செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்!
தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடு மோகலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே. 

விடை

அந்தத் தெலுங்கு, மலையாளம், கன்னடம்
அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட
வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ
வாழ்த்துகநீ யிதைத் தம்பி - இதைத்
தாழ்த்துதல் தீயது தம்பி. 

கேள்வி

அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி
அங்கங் கிருப்பவர் பேசும் மொழிப்படி
செங்கைத் திறத்தால் திரைப்படம் ஆக்கிடில்
தீமை ஒழிந்திடும் அண்ணே - நம்
செந்தமிழ் நேருறும் அண்ணே. 

விடை

கங்குல், பகல்,அதி காலையும் மாலையும்
காலத்தின் பேராய் விளங்குதல் போலே
இங்குத் தமிழ்,மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன் றில்லையே தம்பி.



2.63. வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்


 

1

தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற 
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

2

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

3

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

4

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

5

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!



2.64. இசைபெறு திருக்குறள்


 

கசடறக் கற்க
பகவத் கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்;
திருக்குறள் அருளிய திருவள் ளுவரோ
தென்மது ரைக்கோர் அச்செனச் செப்புவர்.
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்!

இதனால் அறிவ தென்ன வென்றால்
இருவேறு நூற்கள், இருவேறு கொள்கைகள்,
இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு
உளஎன உணர்தல் வேண்டு மன்றோ?

கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினான் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்,
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினார் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழி யாளர் வழங்கு கின்றார்.
பரிமே லழகர் திருக்குற ளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம்மேற் கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன் றுணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவில தாகும்!

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் என்றார் மன்னுகல் லாடனார்!
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே.
மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும். 

திருவள் ளுவர்தாம் இரண்டா யிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்.
ஆயிரத் தெழுநூ றாண்டுகள் கழிந்தபின்
பரிமே லழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்.

பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள் ளத்தின் திரையே ஆனது!
நிறவேறு பாட்டை அறவே ஒதுக்கிய 
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமே லழகர்.

பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறமே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார்; தெள்ளு தமிழர்
சீர்த்தியைத் திறம்பட எடுத்துக் காட்டினார்.
பரிமே லழகர் செய்த உரையில்
தமிழரைக் காணுமா றில்லை. தமிழரின்
எதிர்ப்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்! செருகலே கண்டோம்!

வடநூல் கொண்டே வள்ளுவர், குறளை
இயற்றினார் என்ற எண்ணமேற் படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்!
எடுத்துக் காட்டொன் றியம்பு கின்றேன்;
"ஒழுக்க முடைமை குடிமை"என் பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்:
"தத்தம் வருணத் திற்கும், நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடைய ராதல்" - உரைதா னாஇது?
"ஒழுக்க முடைமை, உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடைய ராதல்" - தகும்இது;
குடிமை என்பது குடிகளின் தன்மையே!
"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இல்"எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக.
நன்றுயாம் நவில வந்த தென்எனில்
திருவள் ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழர் இனிது வாழ்கவே!



2. 65. வாழ்வு


 

அச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல்
லன்பில் விளைவது வாழ்வு
மச்சினில் வாழ்பவ ரேனும் - அவர்
மானத்தில் வாழ்வது வாழ்வு!
உச்சி மலைவிளக் காக - உல
கோங்கும் புகழ்கொண்ட தான
பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ் 
பாய்ந்திட வாழ்வது வாழ்வு!

மூதறி வுள்ளது வாழ்வு - நறும்
முத்தமிழ் கற்பது வாழ்வு!
காதினில் கேட்டதைக் கண்ணின் - முன்
கண்டதை ஓவியம் ஆக்கும்
பாதித் தொழில்செய லின்றி - உளம்
பாய்ச்சும் கருத்திலும் செய்கை
யாதிலும் தன்னை விளக்கும் - கலை
இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு!

ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல்தமக் குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
தூயன வாம்என்று நம்பிப் - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீஎனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!



2.66. கொட்டு முரசே!


 

எல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டு முரசே! - வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!

இல்லாமை என்னும்பிணி
இல்லாமல் கல்விநலம்
எல்லார்க்கும் என்றுசொல்லிக்
கொட்டுமுரசே! - வாழ்வில்
பொல்லாங்கு தீர்ந்ததென்று 
கொட்டுமுரசே !

சான்றாண்மை இவ்வுலகில்
தோன்றத் துளிர்த்ததமிழ் 
மூன்றும் செழித்ததென்று
கொட்டுமுரசே! - வாழ்வில்
ஊன்றிய புகழ்சொல்லிக்
கொட்டு முரசே!

ஈன்று புறந்தருதல்
தாயின் கடன்!உழைத்தல்
எல்லார்க்கும் கடனென்று
கொட்டுமுரசே! - வாழ்வில்
தேன்மழை பெய்ததென்று
கொட்டுமுரசே!




பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி முற்றும்.


by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.