பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 6
2. அமிழ்து எது?
பஃறொடை வெண்பா
தலைவி : இதுதான் தைத்திங்கள் எனக்கடல் மேல்வந்த புதியஇளங்கதிர், பொன்அத்தான். பொன்!பொன்! பொன்! தலைவன் : ஆம்ஆம்என் அன்பின் உருவே அதுபுசுடர்ப்பொன்மு நீர்மேல், நிலமேல், நிழல்தரும்பூஞ் சோலைமேல், உன்மேல் தனதொளியை வீசி உளத்திலெலாம் அன்பின் எழுச்சியினை ஆக்கியது. வாழ்ககதிர்! காலை மலர்ந்ததுவே கண்ணேநான் சென்றுவயல் வேலை தொடங்கி விளைச்சல் அறுத்துவந்தே இந்நாளில் இந்தா எனக்கொடுக்கச் செல்கின்றேன். பொன்னே புனலாடி இல்லம் புதுக்கிடுநீ! தலைவி : செல்வப் பரிதி சிரித்துவந்த தைக்கண்டீர். கொல்லைக் கொடிகள் குலுங்கச் சிரித்ததுபோல் காலை மலர்ந்ததையும் கண்டீர்; விரைந்துவயல் வேலை தொடங்கி விளைச்சல் அரிந்தஅரிக் கட்டடித்துத் தூற்றியொரு கட்டைவண்டி மேலேற்றிப் பட்டபெரும் பாட்டின் பயனிந்தா என்பீர்;பின் உள்ளம் மகிழ்ந்துங்கள் உழுதோளை நான்தொழுது வெள்ளத் தெடுத்து விடிவெள்ளி போலரிசி ஆக்கிநல்ல பானையிலே ஆவின் தனிப்பாலைத் தேக்கி அதிலிட்டுச் செங்கரும்பின் கட்டியிட்டுத் புதிங்களோ தைத்திங்கள்!மு புசெந்தமிழே தாய்மொழியாம்!மு புபொங்கலோ பொங்கல்!முஎனப் பொங்கிவரப் புத்துருக்கு நெய்யும் பருப்பும் நறும்பொடியும் நேர்கொடுத்து மெய்யன்பி னோடு தமிழர் விழாவாழ்த்திப் பானை இறக்கிப் பலபேர்க் கிலையிட்டுத் தேனைப் பழச்சுளையைச் சேர்த்துப் படைப்பேன்; எடுத்துண்டு நீவிர்அதை என்னவென்று சொல்வீர்? தலைவன் : அடடா!இப் பொங்கல் அமிழ்தமிழ் தென்பேன்நான். தலைவி : அப்பொங்கல் தன்னை அமிழ்தென்று சொல்வதுண்டா? ஒப்புவரோ பொங்கல் அமிழ்தென் றுரைத்துவிட்டால்? தலைவன் : ஆமாம்நான் சொல்வேன் அமிழ்துதான் அப்பொங்கல் தீமைஎன்ன?... தலைவி : ...தீமைஒன்றும் இல்லைஅத்தான்; நீங்கள்உண்ணும் பொங்கலா அத்தான் அமிழ்து? புகலுங்கள். தலைவன் : பொங்கல் அமிழ்துதான். பொய்யில்லை; கட்டிக் கரும்பும் அமிழ்து. கனிஅமிழ்து. முல்லை யரும்பமிழ்து. தேனமிழ்து. அப்பம் அமிழ்து. குழந்தை குதலை மொழியமிழ்து. குன்றாப் பழந்தமிழும், பாட்டும் அமிழ்து.தமிழ்ப் பண்அமிழ்து. திங்கள் அமிழ்து. திகழ்ஆவின் பாலமிழ்தே. இங்கெனக்கு நீஅமிழ்து. நானுனக் கெப்படியோ? வாய்மை அமிழ்து. மடிசுமந்து பெற்றுவக்கும் தாய்மை அமிழ்து. தனிஇன்ப வீடமிழ்து. தென்றல் அமிழ்து.நறுஞ் செவ்விள நீரமிழ்து. ஒன்றல்ல, எல்லாம் அமிழ்தென் றுரைக்கலாம். தலைவி : ஏன்அத்தான்? எல்லாம் அமிழ்தென்றால் அந்தச்சொல் ஏன்அத்தான்? ஏதோ அமிழ்தொன் றிருக்கும். தலைவன் : உயர்ந்தபொருட் கெல்லாம் உயர்வு குறிக்க உயர்ந்தோர் அமிழ்தை உரைப்பார்கள் பெண்ணரசி. தலைவி : பேர்இருந்தால் பேர்குறிக்கும் அந்தப் பெயர்இருக்கும் ஆரிடத்தில் இந்த அளப்பை அளக்கின்றீர்? எதுஅமிழ் தத்தான்? எனக்கதைச் சொன்னால் புதுநாளில் இன்பநறும் பொங்கலுண்ணு முன்னரே நல்ல அமிழ்துதனை நான்கண்ட தாகாதா? சொல்லுவீர் அத்தான் அமிழ்தெது? ... தலைவன் : ... மானே, புதுநெல் அறுத்துவரப் போம்போது நீயோ எதுதான் அமிழ்ததனைச் சொல்வீர் எனக்கேட்டாய். அப்படியே உன்றன் அருட்படி ஆகட்டும்நான் செப்புவதை உற்றுக்கேள் தித்திக்கும் தேனே, அமிழ்தென்றால் மேல்நின் றமிழும் உணவாம்; யுஅமிழ்ருஎன்றும் யுதுருவ்வென்றும் சொல்இரண்டுண் டத்தொடரில். அவ்வளவுதான் இப்போ தேனும் அறிந்தாயா? இவ்வளவோ டென்னைநீ விட்டிடுவாய் ஏந்திழையே. தலைவி : இல்லையத்தான்! மேல்நின் றிரங்கும் உணவென்று சொல்லிவிட்டால் போதுமா? ஒன்றுமே தோன்றவில்லை. மேலிருந்து தான்விழும் விளாம்பழமும், அஃதமிழ்தா? மேலானதாய் இருக்க வேண்டும் அமிழ்து! தெரிந்து கொள்ளக் கேட்டேன். தெரிவித்தாலென்ன? தலைவன் : சரி, என்றன் கேள்விக்குச் சற்றே விடைபுகல்வாய். அவ்வானத் தேஇருந்து அமிழ்ந்து வருவதெது? இவ்வுலகுக் கின்பம் பொதுவாக ஈவதெது? கண்ணுக் கெதிரில் கடகடென வீழும்,அதை எண்ணிப்பார் இன்னதென்று தோன்றும் உனக்கதுவே. தலைவி : வானத்தி லேயிருந்து வானூர்தி தான்அமிழும். வானூர்தி அஃதா? சிரிப்புவரு கின்றதத்தான். தலைவன் : தேனே!என் செல்வமே செப்புகின்றேன் நீகேட்பாய் ஆனதமிழ்ச் சான்றோர் அருளியஓர் செய்யுளிது: "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகுக் கவனளிபோல் மேல்நின்று தான்சுரத்த லான்" என் றிளங்கோ தானுரைத்த செய்யுள் தரும்பொருளைக் கண்டுகொள்வாய். தலைவி : அச்சோ! மழைதான் மழையேதான் அத்தான். இச்சேதி இப்போது தானத்தான் நானறிந்தேன். தலைவன் : தேனான இன்பச் சிலப்பதிகா ரத்தினிலே மேல்நின்று தான்சுரத்த லான்என்று விண்டதனால் வான்நின்றமிழும் மழைதான் அமிழ்தென்று நீநன் றறிந்தாயா நேரிழையே இப்போது? தலைவி : நன்றாய் மழைதான் அமிழ்தென்று நானுணர்ந்தேன்; ஒன்றிருக்க வேறொன்றில் ஓடிற்றென் நெஞ்சம். அருகில் இருக்கும் மழைஅமிழ் தென்று தெரியவில்லை. சொல்லத் தெரிந்துகொண்டேன். ஆனால், மழைதான், அமிழ்தென்றால் மக்கள் அதனைப் பிழைதான் எனச்சொன்னால் என்னபதில் பேசுவது? தலைவன் : "வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்"றென்று சாற்றிய வள்ளுவர் பாட்டை வகையாகச் சொல்லிஅதற் குள்ள கருத்தைஉரை. அதையும் கேட்பாய் அமிழ்தென் றுணரும் அருமை மழைக்கே அமையும் எனஉரைத்தார் வள்ளுவரே அல்லவா! கண்டவைஎல் லாம்அமிழ்தே என்று கதைபேசிக் கொண்டிருப்போர் பேதைமையைக் கண்டேஇவ் வாறுரைத்தார். தலைவி : சாவா மருந்தென்று சாற்றுகின்றா ரே,அதென்ன? தலைவன் : சாவா மருந்து தனியல்ல இவ்வமிழ்தே! வான்பெய்து கொண்டிருக்கும் ஆதலினால் மண்ணுலகம் தான்சிறக்கும் என்றுகுறள் சாற்றியதைக் கேட்டாயே. தலைவி : ஐயம்இன்னும் கேட்பேன் அதற்காக நீங்களென்னை வையக் கூடாது... தலைவன் : ...மயிலே வைவேனா? தலைவி : அமிழ்தா? அமுதா? அமிழ்தமா? இன்னும் அமுதமா? இங்கிவைகள் அத்தனையும் ஒன்றா? தலைவன் : அமிழ்தேயுஅம்ரு சாரியையும் ஆனதிரிபும் பெற்று அமிழ்தம், அமுதமுதம் என்றாகும் பெண்ணே. தலைவி : அமிர்தம் என்றா லென்ன... தலைவன் : ...அதுவா? அமிர்தக் கதையை அறிவிக்கின் றேன்கேள்நீ: தேவர் அசுரரெல்லாம் சண்டையிட்டுச் செத்திடுவார் சாவைத் தடுக்கஓர் அம்ருதங் கடைவதென்று திட்டமிட்டார், சேடன் கயிறாக மேருமலை இட்டமத் தாக்கி இருந்ததிருப் பாற்கடலைச் சேர்ந்து கடைந்தார்கள் தேவர் அசுரரெலாம், ஆர்ந்து வெளிப்பட்ட தேஅம்ருத மென்பார்கள். தலைவி : அமிழ்துதனி, அம்ருதம் அஃதொன்றா அத்தான்? தலைவன் : அமிழ்துவே றம்ருதம்வே றல்லவா பெண்ணே? தலைவி : இரண்டும்சா வைத்தடுப்ப தென்றீர்நீ ரே;பின் இரண்டும் தனித்தனி என்றுரைத்த தென்ன? தலைவன் : இரண்டும்சா வைத்தடுப்ப தென்றாலும் அந்த இரண்டுக்கும் வேறுபா டில்லாமல் இல்லை. உணவால் உயிர்நிலைக்கும்; ஆகவே பெண்ணே உணவுக்கும் எல்லா உயிர்க்கும் ஆதாரம்மழை! அத்தேவர் இன்னுயிரும் அவ்வமிழ்தா லேஅமையும், அத்தேவர் அம்ருதத்தின் முன்பு அமிழ்துண்டு. பெரிதுல கோடு பிறந்த தமிழ்து. கிரேதா யுகத்திற் கிடைத்தது தான்அம்ருதம். தேவர்க்கு மட்டும் திரட்டியதே அம்ருதம்; யாவர்க்கும் ஆதிமுதல் எங்கும் அமிழ்துயிர். தலைவி : அத்தானே நான்ஓர் அறிஞர் துணைவியன்றோ! இத்தனைநாள் நானே இதனை அறியேன். மழையே அமிழ்து; மழையே உலகை அழியாது காப்பாற்றும். அப்படி இருக்கையிலே ஏனிதனை யாரும் வெளிப்படையாய்ச் சொல்லவில்லை? தலைவன் : மானேநம் வள்ளுவர்தாம் வாய்விட்டுச் சொன்னாரே? தலைவி : பின்னால் புலவரிதைப் பேசுவதே இல்லைஅத்தான். தலைவன் : பொன்னே புதிய அமிர்தொன்று வந்ததிங்கே! பூட்டாத வீட்டில் புதிதாய் நுழைந்தவர்க்கே காட்டாச் சலுகையெலாம் காட்டுவார். வீட்டில் இருந்தார் இருளில் இருப்பார்கள். வந்த விருந்துக்குத் தாமே விடிவிளக்கு வைப்பார்கள். என்றும் அமிழ்துண்டு; - இதன்பெருமை உண்டு.மற் றொன்றும் அமிழ்தென்று போட்டியிட் டோடிவந்தால் நாட்டார் நினைவிலது நாலுநாள் கூத்தாட மாட்டாதா? ஆனாலும் உண்மை மறையாது. தலைவி : ஆமத்தான்! ஆமத்தான்! ஆனால் மழைஎனும்பேர் நாமும் அறிவோம்.நம் நாட்டாரும் தாமறிவார். அந்தப் பெயர்தான் இருக்க அமிழ்தென்ற இந்தப் பெயர்ஒன் றெதற்காக வீணாக? தலைவன் : நன்று நகைமுத்தே, காற்றென்ற பேர்இருக்கத் தென்றலென்ற பேர்ஏன்? சிறப்புநிலை காட்டஅன்றோ? நீர்,தீ, நிலம்,காற்று, விண்ணென்ற ஐம்பொருளில் நீரின் நிலைகேள்: முகிலென்றும் கொண்டலென்றும் விண்ணென்றும் கார்என்றும் மேலும் மழைஎன்றும் அண்ணாந்து நோக்கும் அமிழ்தமென்றும் மாரியென்றும் ஆயிரம்உண் டன்றோ? அவற்றில் அமிழ்தென்னும் தூய நிலைகருதித் தோன்றியதே அப்பெயர். முற்றும்கேள்: வெப்பம் முகந்தநீ ரேமுகிலாம். குற்றமறக் கொண்டநீர் கொண்டல். அக்கொண்டலோ மேற்போய் இருந்தநிலை விண்வான் விசும்பென்பார். காற்றால் கருமைபெறக் காராகும்; கார்தான் மழைக்கும் நிலையில் மழையாம்; மழைதான் தழைய அமிழ்உண வாவது தான்அமிழ்து. தலைவி : வாழ்வாருக் காக வழங்கொழிக்க, அந்தநீர் வீழும் நிலையில்அதை மேலோர் அமிழ்தென்றார் என்று புகன்றீர், இதிலோர் மனக்குறை: என்னவெனில் இவ்வமிழ்தை மேலான தென்றிருந்தேன். இப்போ தமிழ்து மழைதானே என்றவுடன் சப்பென்று போயிற்றுத் தையலாள் என்றனுக்கே. தலைவன் : செப்பிய உன்பேச்சில் சிறப்பில்லை, என்கண்ணே. தப்புக் கணக்கிட்டாய் தாங்கும் மழையை. அமிழ்தின் பெருமை அடுக்கடுக்காய்ச் சொன்னேன். அமிழ்தே மழைஎன்றேன்; அப்படியும் நீயோ மழையின் உயர்வை மதிக்கவில்லை இந்தப் பிழையை இளையவரும் செய்யாரே பெண்ணரசி! எங்கும் உளதுமழை; என்றும் உளதுமழை. தங்கும் உலகுயிரைச் சாவாது காக்கும்மழை. அந்த மழைதான் அளிக்குமோர் இன்பத்தைச் செந்தமிழால் வள்ளுவரும் நன்றாய்த் தெரிவித்தார்: புவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளிமுஎன்றார்! விள்ளக்கேள். சென்று திரும்பிவந்து சேர்ந்துஅவர் எனக்களிக்கும் இன்பந்தான் எவ்வா றிருக்குமென்றால் இவ்வுலகில் வாழ்வார்கள் நல்ல மழைபெற்றாற் போலிருக்கும். யாழ்மொழியே! அந்தக் குறளின் கருத்திதுவே. தலைவி : பாவையரின் உள்ளப் படப்பிடிப்பே தானத்தான். ஆவல்இனி ஒன்றே அதையும் அகற்றுங்கள்: இந்த மழைதான் அமிழ்தென்ற எண்ணத்தில் எந்தப் புலவர் எழுதியுள்ளார் செய்யுள்? தலைவன் : சிறந்தஒரு கேள்வியே கேட்டாய், திருவே! "உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள்" என்ற பாட்டில் கமழும் கருத்தைநீ காண்பாய்; உயிர்தளிர்க்கத் தீண்டினாள் தன்துணைவி, அன்னதற்குக் காரணம்அம் மாண்புடையாள் தோளேயாம். அத்தோள் அமிழ்தாம். தளிர்க்கவைப்ப தியாது? மழையன்றோ! அந்தக் குளிர்மழையை அன்னார் அமிழ்தென்றார்! கூறும் அதனால் அமிழ்தை மழைஎன்றே சொன்ன மதியுடையார் சொல்லால் மகிழ்ந்து நலமடைவாய். தலைவி : ஐயமே இல்லை. அமிழ்தே மழையத்தான். வைய மழையே அமிழ்தமிழ்து மெய்யாலும்! அத்தான் எனது மகிழ்ச்சிக் களவில்லை. முத்து மழைபொழிக முத்தமிழர் நாட்டில்! அமிழ்து பொழிக அழகு தமிழ்நாட்டில்! தமிழ்தான் தழைகவே! பொங்கலோ பாற்பொங்கல்! தலைவன் : இன்றுபோல் என்றும் மகிழ்ச்சி இலகுகவே! நன்று தமிழர் நலிவின்றி வாழ்க! அமிழ்தே அனையபாற் பொங்கலோ பொங்கல்! தமிழ்நாடு வாழ்க தழைத்து. |
3. அகத்தியன் விட்ட புதுக்கரடி
அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப் புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்! ஆதலால் "குள்ளனை அணுவும்நம் பாதே" என்ற பழமொழி அன்று பிறந்தது! பழைய திராவிடம் செழுமை மிக்கது; வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது. செந்தமிழ், இலக்கணச் சிறப்புற் றிருந்தது. வையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தது. செய்யும் தொழில்கள் சிறப்புற் றிருந்தன. ஓவியம் தருநரும் பாவியம் புநரும் ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும் திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர். இராத தொன்றில்லை திராவிட நாட்டில். இந்த நிலையில் வந்தான் அகத்தியன். சந்தனப் பொதிகையில் தமிழ்ப்பெரும் புலவரின் மன்றினில் ஒன்றி ஒன்றி மாத்தமிழ், நன்று பயின்றான் குன்றாச் சுவைத்தமிழ்! இயற்றமிழ், இசைத்தமிழ் இனியஆ டற்றமிழ் முயற்சியிற் பயின்றபின், முடிபுனை மன்னனின் நல்லா தரவை நாடுவா னாகிச் "செல்வம் முற்பிறப்பிற் செய்தநல் வினைப்பயன்" என்று புதுக்கரடி ஒன்றை ஏவினான். மன்றின் புலவர் வாய்விட்டுச் சிரித்தனர். ஒருநாள் மன்னனின் திருமணி மன்றில் அகத்தியன் புதிதாய்ப் புகுத்திய கருத்தை ஆய்ந்திட, மன்னன் "அகத்தியோய் அகத்தியோய் பிறந்த உடலும் பிணைந்த உயிரும் இறந்த பின் இல்லா தொழிந்தன எதுபின் உயிர்உடல் எய்தும்?" என்றான். "ஆன்மா என்றும் அழியா" தென்று மற்றொரு புதுக்கரடி தெற்றென விட்டான். மேலும் அகத்தியன் விளம்பு கின்றான்: "வேந்த னாக வீற்றிருக் கின்றாய் ஆய்ந்து பார்ப்பின் அறிகுவை காரணம் செல்வம்முற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன் மணிமுடி பூண்பரோ மக்கள் யாரும்? பணிவொடு வாழ்வது பார்ப்பின் புரியும். சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்" என்னலும், மன்னன் புபின்னொரு நாள்இதைப் "கல்க" என்றனன்; போயினன் அகத்தியன். அழல்வெரூஉக் கோட்டத்துக் கப்பால் ஒருநாள் பழித்துறைக் கள்வன், பாங்கர் சூழ நகர் அலைத்து நற்பொருள் பறித்து மிகுபுகழ் உடையேன் வேந்தன்நான் என்றான். ஊர்க்கா வலர்கள் ஓடி மன்னன்பால் இன்ன துரைத்தனர். எழுந்தனன் மன்னன். பழித்துறைக் கள்வன் படையும், மன்னனின் அழிப்புறு படையும் அழல்வெரூஉக் கோட்டப் பாங்கினில் இருநாள் ஓங்குபோர் விளைக்கவே பழித்துறை பிடிக்கப் பட்டான் அரசனால்! மறவர்சூழ் அரச மன்றின் நடுவில் பழித்துறை கட்டப் பட்ட கையுடன் நின்றான். மன்னன் நிகழ்த்து கின்றான்: "ஏன்என் ஆட்சியை எதிர்த்தனை? ஏஏ கோன்என் படைவலி குறைந்ததோ? உன்றன் தோள்வலி பெரிதோ? சொல்லுக சொல்லுக ஆள்வலி பெரிதோ? அறைக" என்னலும், பழித்துறை மன்னனைப் பார்த்துக் கூறுவான்: "இந்நாள் உண்டு பின்னால் இலைஎனும் வறுமை எமக்கு! வளமை உமக்கோ? ஆள்வலி இல்லை ஆயினும் நாளை தோள்வலி மறவர் தோன்றுவார்! இந்நாள் என்னுயிர் போக்கல் எளிதாம்; உனக்கே இன்னுயிர் போக்குவார் உண்டா கின்றார்." சினத்தொடு பழித்துறை இவ்வாறு செப்பலும், மன்னன் அவனைச் சிறையினில் வைத்தான். "செல்வமுற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன் சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்" இக்கருத்து நாட்டில் எங்கும் பரவினால் மக்கள் எதிர்ப்பரோ மன்னன் ஆட்சியை? எதிர்க்க மாட்டார்; தாங்கள் எய்திய "சிறுமைமுமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன் என்று சும்மா இருப்பர் அன்றோ? "அகத்தியோய் அகத்தியோய் அனைவ ரிடத்தும் புகுத்துக உன்றன் புதிய கொள்கையை" என்று மன்னன் இயம்பினான். அகத்தியன் அன்றுதான் ஒருபடி அதிகாரம் ஏறினான். இப்பிறப்பு முற்பிறப் பிருவினை ஆன்மா ஊழ்இவை யனைத்தும் உரைத்த அகத்தியன் அரசே இன்னும் அறைவேன் கேட்பாய்: "மண்ணவர் மண்ணில் வாழ்வார்; அதுபோல் விண்ணவர் விண்ணில் மேவினார் என்றான். அன்னவர் நம்மை அணுகுவார் என்றான். இன்னல் ஒழிப்பார் என்று புளுகினான்! விண்ணவர் விருப்புற வேண்டு மானால் மண்ணிடை நான்மறை வளர்ப்பாய் என்றான். மந்திரத் தாலே மகிழ்வர் வானவர்" என்று பலபல இயம்பிச் சென்றான். ஒருநாள் குறுங்கா டொன்று தீப்பட் டெரிந்தது! சிற்றூர் எரிந்தது! மக்கள் தெய்யோ தெய்யோ தெய்யோ என்றே அரச னிடத்தில் அலறினார் ஓடி! அங்கி ருந்த அகத்தியன் புஅரசே தீஒரு தெய்வம் செம்புனல் தெய்வம் காற்றொரு தெய்வம் கடுவெளி தெய்வம் நிலம்ஒரு தெய்வம் நீஇதை உணர்க. தெய்எனல் அழிவு! தெய்வம் அழிப்பது. இந்திரன் தெய்வம் எதற்கும் இறைவன். மந்திர வேள்வியால் மகிழும் அவ்விந்திரன்.மு என்று கூறி எகினான் அகத்தியன். அரச மன்றின் அருந்தமிழ்ப் புலவர் அரசன், அகத்தியன் ஆட்டும் பாவையாய் இருத்தல் கண்டார் இரங்கினார். தீய கருத்து நாட்டில் பரவுதல் கண்டு கொதித்தார் உள்ளம். என்செயக் கூடும்? ஒருநாள் அரசனின் உறவினள் ஒருத்தி பகைவனை அன்போடு பார்த்தாள். அவனும் அவள்மேல் மிகுந்த அன்பு கொண்டான். இருவரும் உயிர்ஒன் றிரண்டுடல் ஆனார் . அரசன் எரிச்சல் அடைந்தான். அகத்தியன் இதனை அறிந்தான் அறைவான் ஆங்கே: "மணமுறை மிகுதியும் மாறுதல் வேண்டும். ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் ஒப்பினால் மணம்எனக் கூறுதல் வாய்மை யன்று! மணம்எனல் பார்ப்பனர் மந்திர வழியே இயலுதல் வேண்டும்மு என்று கூறினான். அரசன் புஆம்ஆம் ஆம்" என் றொப்பினான். அகத்தியன் அரசனே ஆகி விட்டான். அரசனும் அகத்தியன் அடிமை யானான். தமிழர் கலைபண் பொழுக்கம் தகர்ந்தன. பழந்தமிழ் நூற்கள் பற்றி எரிந்தன. அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்.
|
4. நல்லமுத்துக் கதை
காட்சி 1
திருமண முயற்சி
விரசலூர் வெள்ளையப்பன், மனைவியாகிய மண்ணாங்கட்டியிடம் கூறுகிறான்: உன்னைத் தானே என்னசெய் கின்றாய்? இங்குவா! இதைக்கேள்! இப்படி உட்கார்! பைய னுக்கு மணத்தைப் பண்ணிக் கண்ணால் பார்க்கக் கருதினேன். உன்றன் எண்ணம் எப்படி? ஏனெனில் பையனுக் காண்டோ இருபது ஆகி விட்டது. பாண்டியன் தானோ பழைய சோழனோ சேரனே இப்படித் தெருவில் வந்தானோ என்று பலரும் எண்ணு கின்றனர். அத்தனை அழகும் அத்தனை வாட்டமும் உடையவன், திருமணம் முடிக்கா விட்டால் நடையோ பிசகி விடவும் கூடும். நாட்டின் நிலையோ நன்றா யில்லை. சாதி என்பதும் சாத்திரம் என்பதும் தள்ளடா என்று சாற்றவும் தொடங்கினார். பார்ப்பனர் நடத்தும் பழமண முறையைப் பழிக்கவும் தொடங்கினர் பழிகா ரர்கள். இளைஞரை அவர்கள் இவ்வாறு கெடுப்பதே வளமை யாக வைத்திருக் கின்றனர். இந்த நிலையில் எவளோ ஒருத்தியைப் பையன் ஏறிட்டுப் பார்த்தால் போதும் வெடுக்கென மணத்தை முடித்திடு வார்கள். என்ன?நான் சொல்வ தெப்படி? ஏன்?உம்? மனைவியாகிய மண்ணாங்கட்டி: இன்றுதான் பிறந்ததோ இந்த உறுதி? பைய னுக்குப் பத்து வயசு தொடங்கியதி லிருந்து சொல்லி வந்தேன் காது கேட்டதா? கருத்தில் பட்டதா? ஐயரை உடனே அழைக்க வேண்டும். பையனின் குறிப்பைப் பார்க்க வேண்டும். கிழக்குத் திசையில் கிடைக்குமா பெண்? எந்தத் திசையில் இருக்கின்றாள் பெண்? சொத்துள் ளவளா? தோதான இடமா? மங்கை சிவப்பா? மாஞ் செவலையா? என்று பெண்பார்க்க இங்கி ருந்துநாம் புறப்பட வேண்டும்? புரிய வேண்டுமே. வெள்ளையப்பன்: புரோகிதன் நல்லநாள் பொறுக்குவான், அவனை இராகுகா லத்திலா இங்க ழைப்பது? ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்போம். நடந்ததை, இனிமேல் நடக்கப் போவதை, நடந்துகொண் டிருப்பதை நன்றாய்ச் சொல்வான்; பகைகுறுக் கிடுவதைப் பார்த்துச் சொல்வான்; இடையில் குறுக்கிடும் தடைகள் சொல்வான்; எல்லாம் சொல்வான் ஏற்படு கின்ற பொல்லாங் கெல்லாம் போக்கவும் முடியும். ஒருபொழு துக்கான அரிசி வாங்க அரை ரூபாயையும் அவனுண்டு பண்ண முடியுமா? நம்மால் முடிந்த வரைக்கும் ஏற்பாடு செய்துகொண் டிட்டு வருவோம்.
காட்சி 2
மாப்பிள்ளையின் சாதகம் பார்த்தல்
சொறிபிடித்த கொக்குப் புரோகிதனிடம், வீட்டுக்கார வெள்ளையப்பன் சொல்லுகிறான்: இதுதான் ஐயரே என்மகன் சாதகம்; திருமணம் விரைவில் செய்ய வேண்டும். எப்போது முடியும்? எங்கே மணமகள்? மணமகட் குரிய வாய்ப்பெலாம் எப்படி? அயலா? உறவா? அணிமையா? சேய்மையா? பொறுமையாய்ப் பார்த்துப் புகல வேண்டும். மண்ணாங்கட்டி புரோகிதனிடம் கூறுகிறாள்: காலையில் வருவதாய்க் கழறி னீரே, மாலையில் வந்தீர் என்ன காரணம்? சொறிபிடித்த கொக்கு சொல்லுகிறான்: தெரியா மல்என் பெரிய பெண்ணைத் திருட்டுப் பயலுக்குத் திருமணம் செய்தேன். வட்டிக் கடையில் வயிர நகையைப் பெட்டி யோடு தட்டிக் கொண்டதால் சிறைக்குப் போனான். செத்தும் தொலைந்தான். கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து மொட்டைத் தலையுடன் மூதேவி போலப் பெரியவள் பிறந்தகம் வரநேர்ந்து விட்டது. சின்னப் பெண்ணைப் பின்னத் தூரில் கப்பல் கப்பலாய்க் கருவா டேற்றும் வாச னுக்கு மணம்செய் வித்தேன். மணம் முடிந்த மறுநாள் தெரிந்தது வாசன் கருவாட்டு வாணிகன் அல்லன் வாணிகன் கூலியாள் வாசன் என்பது! ஒருநாள் வாசன் பெருங்குடி வெறியால் நாயைக் கடித்தான்; நாயுங் கடித்தது. நஞ்சே றியதால் நாய்போல் குரைத்தே அஞ்சாறு நாளாய் அல்லல் பட்டே இரண்டு நாளின்முன் இறந்து போனான். ஓலை வந்தது காலையில்! கையில் -- கேட்டா லுஞ்சரி விட்டா லுஞ்சரி -- இரண்டணாக் காசும் இல்லை மெய்யாய்! இந்நேர மட்டும் ஏதேதோ நான் தில்லு மல்லுகள் செய்து பார்த்தேன் யாரும் சிறிதும் ஏமாற வில்லை; உங்க ளிடத்தில் ஓடி வந்தேன். சாதகம் பார்த்துச் சரியாய்ச் சொல்வேன் முன்நடந் தவைகளை முதலில் சொல்வேன்: ஐயா இதுஓர் ஆணின் சாதகம். வெள்ளையப்பன்: ஆமாம் அடடா ஆமாம் மெய்தான்! புரோகிதன்: ஆண்டோ இருப தாயிற்றுப் பிள்ளைக்கு. வெள்ளையப்பன்: மெய்தான் மெய்தான் மேலும் சொல்வீர்! புரோகிதன்: பையனோ நல்ல பையன், அறிஞன். ஈன்றதாய் தந்தை இருக்கின் றார்கள். உங்களுக் கிவனோ ஒரே பையன்தான். பையன் தந்தை பலசரக்கு விற்பவர் தாய்க்கோ ஒருகால் சரியாய் இராது. மண்ணாங்கட்டி: அத்தனையும் சரி அத்தனையும் சரி எப்போது திருமணம் ஏற்படக் கூடும்? புரோகிதன்: இந்தவை காசி எட்டுத் தேதிக்கு முந்தியே திருமணம் முடிந்திட வேண்டும். மண்ணாங்கட்டி: அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா? புரோகிதன்: நடுவில் ஒரேஒரு தடை யிருப்பதால் ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி. வெள்ளையப்பன்: ஆடியில் திருமணம் கூடுமா ஐயரே? புரோகிதன்: ஆடிக் கடைசியில் ஆகும் என்றால் ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம். வெள்ளையப்பன்: அப்படிச் சொல்லுக அதுதானே சரி. மண்ணாங்கட்டி: மணப்பெண் என்ன பணக்காரி தானா? புரோகிதன்: மணப்பெண் கொழுத்த பணக்காரன் மகள் பெற்றவர் கட்கும் உற்றபெண் ஒருத்திதான்! மண முடிந்தபின் மறு மாதத்தில் ஈன்றவர் இருவரும் இறந்து போவார்கள் பெண்ணின் சொத்துப் பிள்ளைக்கு வந்திடும். மண்ணாங்கட்டி: எந்தத் திசையில் இருக்கின்றாள் பெண்? புரோகிதன்: வட கிழக்கில் மணப்பெண் கிடைப்பாள். தொலைவில் அல்ல தொண்ணூறு கல்லில். மண்ணாங்கட்டி: அப்படி யானால் அரசலூர் தானா? புரோகிதன்: இருக்கலாம் இருக்கலாம். ஏன் இருக்காது? வெள்ளையப்பன்: எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நானே? மண்ணாங்கட்டி: எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்? வெள்ளையப்பன்: யான்மட்டும் போகவா? இருவரும் போகவா? புரோகிதன்: நாளைக் காலையில் நாலு மணிக்கு நீவிர்மட்டும் போவது நேர்மை. நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும். மண்ணாங்கட்டி: இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர் என்ன என்றால் -- வேறொன்று மில்லை எனக்குக் குழந்தை இன்னும் பிறக்குமா? வெள்ளையப்பன்: .ுக்கும் இனிமேல் உனக்கா பிள்ளை? புரோகிதன்: இனிமேல் பிள்ளை இல்லை இல்லை. மண்ணாங்கட்டி: இந்தா நாலணா. எழுந்துபோம் ஐயரே! புரோகிதன்: ஆயினும் இந்த ஆவணிக்குப் பின் பெண் குழந்தை பிறக்கும் உறுதி; போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள். மண்ணாங்கட்டி: சரிஇந் தாரும் ஒருரூ பாய்தான்!
காட்சி 3
புதிய தொடர்பு
அரசலூர் அம்மாக்கண்ணுவிடம் விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்: நிறைய உண்டேன் நீங்கள் இட்டதைக் கறிவகை மிகவும் கணக்காய் இருந்தன. அரசலூர் வந்ததை அறிவிக் கின்றேன்: இரிசன் மகளை என்மக னுக்குக் கேட்க வந்தேன்; கேட்டேன் ஒப்பினான். சாப்பிடச் சொன்னான்; சாப்பாடு முடிந்தது; மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொன்னான்; சரிதான் என்றேன் வரும்வழி தன்னில் உன்னைப் பார்க்க உள்ளம் விரும்பவே வந்தேன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். பெண் குழந்தை பெறவில் லைநீ மருந்துபோல் ஒருமகன் வாய்த்திருக் கின்றான். அவனுக்கும் திருமணம் ஆக வேண்டும் உன்றன் கணவன் உயிருடன் இருந்தால் திருமணம் மகனுக்குச் செய்தி ருப்பார். அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்: அவர்இறந் தின்றைக் கைந்தாண் டாயின. பதினெட்டு வயது பையனுக் காயின. எந்தக் குறையும் எங்களுக் கில்லை. நன்செயில் நறுக்காய் நாற்பது காணியும் புன்செயில் பொறுக்காய் ஒன்பது காணியும் இந்த வீடும் இன்னொரு வீடும் சந்தைத் தோப்பும் தக்க மாந்தோப்பும் சொத்தா கத்தான் வைத்துப் போனார். என்ன குறைஎனில், சின்ன வயதில் என்னை விட்டுச் சென்றார் அதுதான்! பார்ப்பவர் எவரும் பழுது சொல்லாது தனியே காலந் தள்ளி வந்தேன். இனிமேல் என்னமோ யாரதை அறிவார்? விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்: நடந்தது பற்றி நாவருந் தாதே கடந்தது பற்றிக் கண்கலங் காதே நான்இன்று மாலை நாலரை மணிக்கெலாம் விரசலூர் போக வேண்டும்! என்ன? அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்: .ு.ும் நான்அதை ஒப்ப மாட்டேன். இன்றிரவு நன்றாய் இங்குத் தங்கிக் காலையில் அடுப்பில் காய்ந்த வெந்நீரில் ஆர அமர அழகாய் முழுகி இட்டலி, மசால்வடை சுட்டதும் சுடச்சுட வெண்ணெய் உருக்கும் மிளகாய்ப் பொடியும் தொட்டும் தோய்த்தும் ஒட்ட உண்டு சற்று நேரம் கட்டிலில் துயின்றால், இரவில் கண்விழித்த இளைப்புத் தீரும். திருந்த நடுப்பகல் விருந்து முடித்துப் போக நினைத்தால் போவது தானே? விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்: அன்பு மிக்க அம்மாக் கண்ணே! பின்புநான் என்ன பேச முடியும்? அப்படியே என் அம்மாக் கண்ணு சொற்படி நடப்பேன் சொற்படி நடப்பேன்.
காட்சி 4
பெண் எப்படி?
விரசலூர் வெள்ளையப்பன் மனைவி மண்ணாங்கட்டிக்குக் கூறுகிறான்: நல்ல உயரம், நல்ல கட்டுடல், நல்ல பண்பு, நல்ல சிவப்பே. எல்லாம் பொருத்தம்! எனக்குப் பிடித்தம். செல்லாக் காசும் செலவில்லை நமக்கே! அனைத்தும் அவர்கள் பொறுப்பே ஆகும் மணமகள் வீட்டில் மணம்வைத் துள்ளார். மண்ணாங்கட்டி: சாதியில் ஏதும் தாழ்த்தி இல்லை! சொத்தில் ஏதும் சுருக்கம் இல்லை! ஏழு பெண்களில் இவள்தான் தலைச்சனோ? எப்படி யாகிலும் இருந்து போகட்டும். பெண்கள் ஏழுபேர் பிறந்தனர். ஆணோ பிறக்க வில்லை பெரிய குறைதான். எப்படி யாகிலும் இருந்து போகட்டும். எழுபது காணி நஞ்செய் என்றால் பைய னுக்குப் பத்துக் காணிதான்! எழுப தாயிரம் இருப்புப் பணமா? பையனுக்குப் பதினாயிரம் வரும். எப்படி யாகிலும் இருந்து போகட்டும்! மாப்பிள்ளை பார்க்க எப்போது வருவார்? வெள்ளையப்பன்: காலையில் வருவார் கட்டாய மாக.
காட்சி 5
மாப்பிள்ளை பார்த்தல்
(விரசலூர் வெள்ளையப்பனும் அரசலூர் இரிசனும் பேசுகிறார்கள்.) வெள்ளையப்பன்: வருக வருக இரிசப்ப னாரே! அமர்க அமர்க அந்த நாற்காலியில்; இருக்கிறேன் நானும் இந்த நாற்காலியில் குடிப்பீர் குடிப்பீர் கொத்தமல்லி நீர். வீட்டில் அனைவரும் மிகநலந் தானே? பிள்ளைகள் எல்லாம் பெருநலந் தானே? என்மகன் இந்த எதிர்த்த அறையில் படித்தி ருக்கிறான் பார்க்க லாமே. இரிசன்: பையன் முகத்தைப் பார்க்க வேண்டும் பிள்ளையாண் டானொடு பேச வேண்டும். இங்கே இருங்கள் யான்போய்ப் பார்ப்பேன். (நல்லமுத்துவும் இரிசனும் பேசுகின்றார்கள்.) நல்லமுத்து: யார்நீர் ஐயா? எங்கு வந்தீர்? ஊர்பேர் அறியேன்! உள்வர லாமா? அப்பா இல்லையா அவ்வி டத்தில்? இரிசன்: அப்பா முந்தாநாள் அரசலூர் வந்தார். எதற்கு வந்தார் அதுதெரி யாதா? நல்லமுத்து: அரசலூர் சென்றார் அப்பா என்றால் அறியேன், ஏனதை அறிய வேண்டும்? இரிசன்: திருமணம் உனக்குச் செய்ய எண்ணினார்; அதற்கா கத்தான் அங்கு வந்தார். உன்பெயர் என்ன உரைப்பாய் தம்பி? நல்லமுத்து: என்பெயர் நல்லமுத் தென்றி சைப்பார். இரிசன்: என்ன படிக்கிறாய் இந்நே ரத்தில்? நல்லமுத்து: காலே அரைக்கால் கம்பரா மாயணம். இரிசன்: காலே அரைக்கால் கம்பரா மாயண நூலும் உண்டோ? நுவலுக தம்பி! நல்லமுத்து: சிதம்பர நாதர் திருவரு ளாலே அரையே அரைக்கால் அழிந்தது போக மேலும் மொழிமாற்று வேலைப் பாட்டுடன் காலே அரைக்கால் கம்பரா மாயணம் அச்சிடப் பட்டதை அறியீ ரோநீர்? இரிசன்: உனக்குத் திருமணம் உடனே நடத்த என்மக ளைத்தான் உன்தந்தை கேட்டார். பெண்ணை உன்தந்தை பேசினார்; பார்த்தார். நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய். நல்லமுத்து: அப்பா பார்த்தால் அதுவே போதும். இரிசன்: மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே? நல்லமுத்து: அப்பா இணங்கினார்; அதுவே போதும். இரிசன்: கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா என்பது தானே எனக்கு வேண்டும். நல்லமுத்து: பெற்ற தந்தைக்குப் பிடித்தமா, இல்லையா? பிடித்தம் என்றால் எனக்கும் பிடித்தமே! இரிசன்: என்மகள் ஒருமுறை உன்னைப் பார்க்க நினைப்ப தாலே நீவர வேண்டும். நல்லமுத்து: அப்பாவைப் பார்த்தாள்; அதுவே போதும். அப்பா கருத்துக் கட்டி உண்டா? இந்தரா மாயணம் இயம்புவ தென்ன? தந்தை சொல்லைத் தட்ட லாகாதே என்று தானே இயம்பு கின்றது? இரிசன்: மகிழ்ச்சி தம்பி. வருகின் றேன்நான். இரிசன் வெள்ளையப்பனிடம்: நல்ல முத்து மிகவும் நல்லவன், தகப்ப னாரை மிகவும் மதிப்பவன். அடக்க முடையவன் அன்பு மிகுந்தவன் பொழுது போயிற்றுப் போய் வருகின்றேன். வெள்ளையப்பன்: போகலாம் நாளைக்குப் பொழுது போயிற்றே? இரிசன்: பொறுத்துக் கொள்க, போய்வரு கின்றேன்.
காட்சி 6
அம்மாக்கண்ணுக்கு ஆளானான் (அம்மாக்கண்ணும் வெள்ளையப்பனும்)
வெள்ளையப்பன்: உன்றன் நினைவால் ஓடி வந்தேன். இரண்டு நாள்முன் இரிசன் வந்து மாப்பிள்ளை பார்த்தான் மகிழ்ச்சி கொண்டான். திரும ணத்தின் தேதி குறிக்க வருவது போல வந்தேன் இங்கே. மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள்; தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன். அம்மாக்கண்ணு: இன்று நீங்கள் இங்கு வராவிடில் என்றன் உயிரே ஏன் இருக்கும்? பிரிந்து சென்றீர்! பிசைந்த சோற்றைக் கையால் அள்ளினால் வாயோ கசக்கும். பச்சைத் தண்ணீர் பருகி அறியேன். ஏக்கம் இருக்கையில் தூக்க மாவரும்? பூனை உருட்டும் பானையை; அவ்வொலி நீங்கள் வரும்ஒலி என்று நினைப்பேன். தெருநாய் குரைக்கும்; வருகின் றாரோ என்று நினைப்பேன் ஏமாந்து போவேன். கழுதை கத்தும்; கனைத்தீர் என்று எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன். உம்மை எப்போதும் உள்ளத்தில் வைத்ததால் அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள் சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள் வீடும் நீங்கள் மாடும் நீங்கள். திகைப் படைந்து தெருவில் போனால் மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள் கழுதை நீங்கள் குதிரை நீங்கள் எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும். இனிமேல் நொடியும் என்னை விட்டுப் பிரிந்தால் என்னுயிர் பிரிந்து போகும். வெள்ளையப்பன்: அழாதே, தரையில் அம்மாக் கண்ணு விழாதே; உன்னை விட்டுப் பிரியேன். துடை கண்ணீரை; புடவையும் நனைந்ததே! பயித்தியக் காரி பச்சையாய்ச் சொல்வேன் என்னுயிர் இந்தா! பிடிஉன் னதுதான்! அம்மாக் கண்ணு: இரிசன் மகளையும் என்மக னுக்கே பேசி முடிப்பீர்; பின்பு நீங்களும் இங்கே யேதான் தங்கினால் என்ன? என்மகன் உங்கள் பொன்மகன் அல்லனோ? இங்குள தெல்லாம் உங்கள் சொத்தே மண்ணாங் கட்டிதான் மனைவியோ? இங்குள பொன்னாங் கட்டி போயொழிந் தாளோ? வெள்ளையப்பன்: உறுதி உறுதி! உன்மக னுக்கே இரிசன் மகளை ஏற்பாடு செய்வேன். என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்; மண்ணாங் கட்டி மண்ணாங் கட்டிதான்! பெண்ணா அவள்? ஒருபேய்! மூதேவி! இரு!போய் அந்த இரிசனைக் கண்டு பேசி விட்டுப் பின்வரு கின்றேன்.
காட்சி 7
வெள்ளையப்பன் மாறுபாடு
வெள்ளையப்பன்: இரிசனார் வீட்டில் இருக்கின் றாரா? இரிசப்பன்: உள்ளே வருவீர்; வெள்ளையப்பரே! எப்போது வந்தீர்? இப்போது தானா? மனைவியார் உம்முடன் வந்திட வில்லையா? நல்ல முத்து நலமா? அமர்க. வெள்ளையப்பன்: மனைவி வயிற்று வலியோ டிருந்தாள்; பையன் நிலையைப் பகர வந்தேன். திருமணம் வேண்டாம் என்று செப்பினான். இரிசப்பன்: வெளியிற் சொன்னால் வெட்கக் கேடு. வெள்ளை யப்பரே வெந்தது நெஞ்சம் பேச்சை நம்பி ஏச்சுப் பெற்றேன். திருமணம் விரைவில் செய்ய எண்ணி எல்லாம் செய்தேன்; எவர்க்கும் சொன்னேன். என்னை ஊரார் என்ன நினைப்பார்? எப்படி வெளியில் இனிமேற் செல்வேன்? மணம்வேண் டாமென மறுத்த தெதற்கு? அடங்கி நடப்பவன் அல்லவா உம்மகன்? நல்ல முத்தா சொல்லைத் தட்டுவான்? சொல்வது தானே நல்லமுத் துக்கு? வெள்ளையப்பன்: நூறு தடவை கூறிப் பார்த்தேன் வேண்டாம் மணமென விளம்பி விட்டான். மனம்புண் பட்டு வந்தே னிங்கே. அம்மாக் கண்ணுவின் அழகு மகனுக்குத் தங்கள் பெண்ணைத் தருவது நல்லது. வைத்த நாளில் மணத்தை முடிக்கலாம். என்னசொல் கின்றீர் இரிசப்ப னாரே? இரிசப்பன்: அம்மாக் கண்ணை அறிவேன் நானும். வெள்ளை யப்பரே வீண்பேச் செதற்கு? நீவிர் விரைவாய் நீட்டுவீர் நடையை.
காட்சி 8
வலையில் சிக்கினார் கணவர்
(இரிசப்பன் மண்ணாங்கட்டியிடம் வந்து கூறுகிறான்) நல்ல முத்து நல்ல பிள்ளை நீங்களும் மிகவும் நேர்மை யுடையவர். வெள்ளை யப்பர் மிகவும் தீயவர். அரச லூரில் அம்மாக் கண்ணின் வலையிற் சிக்கி வாழு கின்றார்; அங்கேயே அவர் தங்கி விட்டார். இன்னும் இங்கே ஏன்வர வில்லை? மான மிழந்து வாழு கின்றார். அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு நான்என் பெண்ணை நல்க வேண்டுமாம்! மணம்வேண் டாமென மறுத்தா னாம்மகன்! நேரில் உம்மிடம் நிகழ்த்தவந் தேன்இதை. உங்கள் கருத்தை உரைக்க வேண்டும். மண்ணாங்கட்டி: கெடுத்தா ளாஎன் குடித்த னத்தை? விருந்து வைத்து மருந்தும் வைத்தாள்; சோற்றைப் போட்டு மாற்றினாள் மனத்தை! ஏமாந் தாரா என்றன் கணவர்? போய்ப்புகுந் தாரா புலியின் வாயில்? எங்கள் பிள்ளை உங்கள் பெண்ணை வேண்டா மென்று விளம்ப வில்லையே! அவள் மகனுக்கே அவளைக் கட்ட இப்படி யெல்லாம் இயம்பினார் போலும்! மாதம் ஒன்றாகியும் வரவில்லை அவர். மகனை இங்கே வரவழைக் கின்றேன் சொல்லிப் பார்ப்போம்; சொன்னாற் கேட்பான். (நல்லமுத்துவிடம் மண்ணாங்கட்டியும் இரிசனும் சொல்லுகிறார்கள்) மண்ணாங்கட்டி: ஒருமாத மாக உன்றன் தந்தையார் அரச லூரில் அம்மாக் கண்ணிடம் விளையாடு கின்றார் வீட்டை மறந்தார், அவர்தாம் அப்படி ஆனார். உன்றன் திருமணம் பற்றிய சேதி எப்படி? இரிசனார் பெண்ணை ஏற்பாடு செய்தோம்; உடனே மணத்தை முடிக்க வேண்டும். நல்லமுத்து: அப்பா இல்லை; அது முடியாது. விவாக முகூர்த்த விளம்ப ரத்தில் அப்பா கையெழுத் தமைய வேண்டும். பாத பூசை பண்ணிக் கொள்ள அப்பா இல்லை! எப்படி முடியும்? திருமண வேளையில் தெருவில் நின்று வருபவர் தம்மை வரவேற் பதற்கும் அப்பா இல்லை! எப்படி முடியும்? புரோகிதர் தம்மைப் போய ழைக்க அப்பா இல்லை! எப்படி முடியும்? அரசாணிக் கால்நட அம்மி போட நலங்கு வைக்க நாலு பேரை அழைக்க, நல்லநாள் அமைக்க, அம்மன் பூசை போடப் பொங்கல் வைக்க அப்பா இல்லை! எப்படி முடியும்? இரிசப்பன்: அப்பா இல்லையே அதற்கென்ன செய்வது? நல்லமுத்து: சோற்றை உண்டு சும்மா இருப்பது! மண்ணாங்கட்டி: அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு மகளைக் கட்டி வைக்கச் சொல்லிக் கெஞ்சி னாரா மே அவரை! இரக்கம் இருந்ததா இனிய தந்தைக்கே? நல்லமுத்து: என்னருந் தந்தை இயம்பிய படியே இவரின் மகளை அவன்மணக் கட்டும். புதெருவில் என்ன பெரிய கூச்சல்? போய்வரு கின்றேன் பொறுப்பீர் என்னை!மு (நல்லமுத்து போனபின் இரிசனும், மண்ணாங்கட்டியும் பேசுகிறார்கள்.) மண்ணாங்கட்டி: தன்மானம் இல்லாத் தடிப்பயல் என்மகன். உணர்ச்சி இல்லா ஊமை என்மகன். அடிமை எண்ணம் உடையவன் என்மகன். தனக்குப் பார்த்த தையலை, அப்பன் அயலான் மணக்கச் செயலும் செய்தால் துடிக்க வேண்டுமே தடிக்கழுதை மனம்! இல்லவே இல்லை! என்ன செய்யலாம்? சாப்பி டுங்கள்! சற்று நேரத்தில் வருவான் பையன் ஒருமுறைக் கிருமுறை சொல்லிப் பார்ப்போம்; துன்பம் வேண்டாம்.
காட்சி 9
தமிழ் உணர்ச்சி
(இரிசப்பனும் மண்ணாங்கட்டியும் பேசியிருக்கிறார்கள்) இரிசப்பன்: எங்கே போனான் உங்கள் பிள்ளை? மண்ணாங்கட்டி: கூச்சல் கேட்பதாய்க் கூறிப் போனான். இரிசப்பன்: என்ன கூச்சல்? எங்கே கேட்டது? மண்ணாங்கட்டி: கேட்டது மெய்தான், கிழக்குப் பாங்கில் வாழ்க தமிழே! வீழ்கஇந்தி! என்று. இரிசப்பன்: எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை அந்த இடத்தை அடைந்த தென்ன? மண்ணாங்கட்டி: என்ன இழவோ யார்கண் டார்கள்? (தமிழ்ப் புலவர் அமுதனார் வந்து இரிசனிடத்திலும் மண்ணாங்கட்டியிடத்திலும் சொல்லுகிறார்.) அமுதனார்: உங்கள் பிள்ளையா நல்லமுத் தென்பவன்? மண்ணாங்கட்டி: ஆம்ஆம் ஐயா. அன்னவன் எங்கே? அமுதனார்: யானதைச் சொல்லவே இங்கு வந்தேன். இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத் தீய இந்தியைத் திணிக்கின் றார்கள். தமிழ்அழிந் திட்டால் தமிழர் அழிவார். நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ? போருக்குத் திராவிடர் புறப்பட் டார்கள். திராவிடர் கழகம் சேர்ந்தான் உங்கள் நல்ல முத்தும்! நல்லது தானே! இரிசப்பன்: எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை இந்தக் கிளர்ச்சியில் என்ன செய்வான்? மண்ணாங்கட்டி: திருமணம் செய்யச் சேயிழை ஒருத்தியை அமைத் திருந்தார் அவனின் தந்தையார்! பாரடா நீபோய்ப் பாவை தன்னை என்றால் அதையும் ஏற்க வில்லை. அந்தப் பெண்ணை அயலொரு வனுக்குத் தரும்படி சொன்னார் தந்தை என்றால், அப்பா மனப்படி ஆகுக என்றான். இப்படிப் பட்டவன் என்ன செய்வான்? அப்பா அயலவள் அகத்தில் நுழைந்தார் இப்பக் கத்தில் இனிவரார். ஆதலால் திரும ணத்தைநீ செய்துகொள் என்றால், ஓலை விடுக்கவும், ஊரைக் கூட்டவும், சாலும் கரகம் தனியே வாங்கவும், பாத பூசை பண்ணிக் கொள்ளவும் அப்பா வேண்டும்என் றொப்பனை வைக்கிறான்! அமுதனார்: மடமையில் மூழ்கி மடிகின் றான்அவன்; தன்மா னத்தைச் சாகடிக் கின்றான். மரக்கட் டைபோல் வாழ்ந்து வந்தான்; இந்த நிலைக்கெலாம் ஈன்றவர் காரணர். ஆயினும் தமிழ்ப்பற் றவனிடம் இருந்தது. திராவிடர் கழகம் சேர்ந்து விட்டான். இனிமேல் அவனோர் தனியொரு மறவன்! அரசினர் சிறையில் அடைத்தார் அவனை! இரிசப்பன்: என்ன? என்ன? எப்போது விடுவார்? மண்ணாங்கட்டி: இருந்தும் பயனிலான்; இருக்கட்டும் சிறையில். அமுதனார்: எப்போது வருவான் என்ப தறியோம் துப்பிலா அரசினர் சொல்வதே தீர்ப்பு! நான்வரு கின்றேன். நல்ல முத்துவின் திருமணம் விரைவில் சிறப்ப டைக!
காட்சி 10
திருமணம் என் விருப்பம்
(இரிசப்பன் வீட்டில், வெள்ளையப்பன் வந்து பேசுகிறான்) வெள்ளையப்பன்: அம்மாக் கண்தன் சொத்தெலாம் அளிப்பாள். உம்மகள் தன்னை, அம்மாக் கண்ணின் மகனுக் கே,திரு மணம்செய் விப்பீர். என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்! இரிசப்பன்: அம்மாக் கண்ணின் அடியை நத்தி வீணில் வாழும் வெள்ளை யப்பரே, உமது சொல்லில் உயர்வே யில்லை எமது கொள்கை இப்படி யில்லை. நல்லமுத் துக்கே நம்பெண் உரியவள்; பொல்லாப் பேச்சைப் புகல வேண்டாம். (அதே சமயத்தில் நல்லமுத்து வந்து இரிசனிடம் இயம்புகின்றான்.) நல்லமுத்து: உம்மகள் எம்மை உயிரென்று மதித்தாள் திருமணம் எனக்கே செய்துவைத் திடுக! (வெள்ளையப்பன் தன் மகனான நல்லமுத்தை நோக்கிக் கூறுகின்றான்) என்விருப் பத்தை எதிர்க்கவும் துணிந்தாய். உன்விருப் பத்தால் என்ன முடியும்? இன்று தொட்டுநீ என்வீட்டு வாயிலின் வழியும் காலெடுத்து வைக்க வேண்டாம். என்றன் சொத்தில் இம்மியும் அடையாய். நான்சொன் னபடி நடந்து கொண்டால் திருமணம் பிறகு செய்து வைப்பேன். அம்மாக் கண்ணின் அழகு மகனே இந்நாள் இந்த எழில் மடந்தையை மணந்து கொள்ளட்டும்; மறுக்க வேண்டாம். நல்லமுத்து: திருமணம் எனது விருப்ப மாகும். ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் கலத்தல் திருமணம் என்க. இரிசனார் மகளும் என்னை உயிரென எண்ணி விட்டாள். நானும் என்னை நங்கைக் களித்தேன். உம்வீட்டு வாயிலை ஒருநாளும் மிதியேன். உம்பொருள் எனக்கேன்? ஒன்றும் வேண்டேன். நானும்என் துணைவியும் நான்கு தெருக்கள் ஏனமும் கையுமாய், எம்நிலை கூறி ஒருசாண் வயிற்றை ஓம்புதல் அரிதோ! ஆட்சித் தொட்டியில் அறியாமை நீர்பெய்து சூழ்ச்சி இந்திஇட்டுத் துடுக்குத் துடுப்பால் துழவிப் பழந்தமிழ் அன்னாய் முழுகென அழுக்குறு நெஞ்சத் தமைச்சர் சொன்னார். இழுக்குறும் இந்நிலை இடர வேண்டி நானும்என் துணைவியும் நாளும் முயல்வதில் சிறைப்படல் காதல் தேனருந் துவதாம்! இறப்புறல் எங்கள் இன்பத்தி னெல்லையாம். (வெள்ளையப்பனை நோக்கி இரிசன் சொல்லுகிறான்) வெள்ளை யப்பரே வெளியில் போவீர்! என்மகள் உம்மகன் இருவரும் நாளைக்குக் காதல் திருமணம் காண்பார். நீவிரோ அம்மாக் கண்ணொடும் அழகு மகனொடும் இம்மா நிலத்தில் இன்புற் றிருங்கள். (நல்லமுத்து தன் திருமணத்தின்பின் துணைவியுடன் இந்தி எதிர்ப்பு மறியலுக்குப் புறப்படுகிறான்.) நல்லமுத்து: வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் இந்தி ஒழிக! இந்தி ஒழிக! (சென்று கொண்டிருக்கையில் நல்லமுத்துவின் தாய் அவர்களைத் தொடர்கிறாள்) மண்ணாங்கட்டி: இன்பத் தமிழுக் கின்னல் விளைக்கையில் கன்னலோ என்னுயிர்? கணவனும் வேண்டேன்! உற்றார் வேண்டேன்; உடைமை வேண்டேன். இந்தி வீழ்க! இந்தி வீழ்க! திராவிட நாடு வாழிய! அருமைச் செந்தமிழ் வாழிய நன்றே!
|
5. ஏற்றப் பாட்டு
முற்பகல்
ஓங்கு கதிர் வாவா - நீ [ஒன் றுடனே] வாழி! மாங் கனியும் நீதான் - அந்த வானம் என்னும் தோப்பில்! நீங்கும் பனி என்றே - இங்கு நீ சிரித்து வந்தாய்! நாங்கள் மறப் போமோ - நீ [நாலு டனே] வாழி! ஐந் துடனே வாழி - நீ அள்ளி வைத்த தங்கம்! 5 முந்தி யயுக ருக்கல்ரு - எந்த மூலை யிலும் இல்லை! சந்து பொந்தில் எங்கும் - உன் தங்க வெய்யில் கண்டோம். இந்த நன்மை செய்தாய் - நீ [எட்டு டனே] வாழி! திராவிட நாட்டு வாழ்த்து இன்பம் உள்ள நாடு - தம்பி இத்தி ராவிடந் தான் உன்னி வாழ்த்து வோமே - தம்பி [ஒருப துடன்] வாழி! 10 திராவிட நாட்டின் சிறப்பு நன்மை யுள்ள நாடு - தம்பி நாவலந் தீ வுக்குள், தென்னை வளம் சேரும் - நல்ல தெற்கு வள நாடு. கன்னி முதல் வங்கம் - இரு கடல் கிழக்கு மேற்கு, சின்ன நல்ல தம்பி - நம் திராவி டநன் னாடு! முன்ன ரசர் நாடு - நல்ல மூன்ற ரசர் நாடு! 15 மன்னர் வில்எ டுத்தால் - பனி வட மலைந டுங்கும். பாண்டி யன்பேர் சொன்னால் - இந்தப் பார் நடுங்கும் தம்பி. ஆண்டி ருந்த சேரன் - அவன் ஆரி யரை வென்றான். மாண்ட துண்டு சோழன் - அவன் மாநி லத்தைக் காத்தான். மாண்டு விட்டால் என்ன? - அவன் வழி வந்தவர் நாமே! 20 [இருப துடன் ஒன்றே] - வளம் எக்க ளிக்கும் நாட்டில் எரு தடிப்ப தாலே - தம்பி என்ன பயன் என்று பொருந்த யானை கட்டி - நெல் போர் அடித்தல் உண்டு. கரும்பு தரும் சாறோ - தம்பி காவி ரியின் ஆறு! முப்ப ழமும் தேனும் - நல்ல முந்தி ரிப்ப ருப்பும் 25 எப்பொ ழுதும் காணும் - தம்பி [இருப துடன் ஆறு] கப்பல் கொண்டு போகும் - இங்கு காணும் சரக் கெல்லாம். சிப்ப மாகச் சாயும் - பல சீமைச் சரக் கெல்லாம். கெட்டி முத்துச் சாயும் - நம் கீழ்க் கடலில் தம்பி. முட்டி லாத நாடு - தம்பி [முப்ப துடன்] வாழி! 30 வெட்டும் இட மெல்லாம் - நாம் வேண்டிய பொன் கிட்டும். எட்டுத் திசை பாடும் - நம் இன்பத் திரு நாட்டை! நாக ரிக நாடு - நம் நல்ல பெரு நாடு! தோகை மயில் ஆடும் - பூந் தோட்டங் களில் எல்லாம். வேக வைக்கும் கோடை - அதை விழுந்த விக்கும் தென்றல். 35 வாழ் கறவை மாடு - தம்பி மாம லையின் ஈடு! சந்த னத்துச் சோலை - அதைச் சார்ந்து நிற்கும் குன்றம். அந்தப் யுபொதி கைருபோல் - தம்பி ஆருங் கண்ட தில்லை. சிந் தருவி உண்டு - தம்பி தெங்கி ளநீர் போலே! நந்து புனல் ஆறு - தம்பி [நாற்ப துடன்] வாழி! 40 காவிரி நல் வைகை - பல கண் கவரும் பொய்கை, பூ விரியும் சோலை - நல்ல பொன் கொழிக்கும் நன்செய், யாவும் உண்டு கண்டாய் - தம்பி இத்தி ராவி டத்தில். தேவை எல்லாம் சாயும் - நம் தெற்கு வள நாட்டில். திராவிடர் கலை ஒழுக்கம் குற்ற மற்ற கொள்கை - தம்பி கொண்ட திந்த நாடு! 45 கற்ற வருக் கெல்லாம் - தம்பி கல்வி தந்த நாடு. வெற்றி மற வர்கள் - தம்பி வேல் மறவர் நாடு. மற்ற வரும் வாழத் - தம்பி வழி வகுத்த நாடு. ஈர டியும் தந்தான் - தம்பி இங்கு வள்ளு வன்தான் ஆரும் அறம் கண்டோம் - தம்பி ஐம்ப துடன் வாழி! 50 சீரு டைய நாடு - தம்பி திராவி டநன் னாடு. பேரு டைய நாடு - தம்பி பெருந் திராவி டந்தான். ஓர் கடவுள் உண்டு - தம்பி உண்மை கண்ட நாட்டில். பேரும் அதற் கில்லை - தம்பி பெண்டும் அதற் கில்லை. தேரும் அதற் கில்லை - தம்பி சேயும் அதற் கில்லை. 55 ஆரும் அதன் மக்கள் - அது அத்த னைக்கும் வித்து! உள்ள தொரு தெய்வம் - அதற் குருவ மில்லை தம்பி. அள்ளி வைத்த ஆப்பி* - தம்பி அதிற் கடவுள் இல்லை. * ஆப்பி - பசுவின் சாணம் குள்ள மில்லை தெய்வம் - அது கோயில் களில் இல்லை. தெள்ளு பொடி* பூசும் - தம்பி சிவன் கடவு ளல்ல. 60 *தெள்ளுபொடி - திருநீறு [அறுப துடன் ஒன்று] - தம்பி அரி கடவுள் அல்ல. அறுமு கனும் அல்ல - தம்பி ஐங்கை யனும் அல்ல. அறு சமயம் சொல்லும் - தம்பி அது கடவுள் அல்ல. பிற மதத்தில் இல்லை - அந்தப் பெரிய பொருள் தம்பி. திராவி டர்கள் முன்பே - தம்பி தெரிந் துணர்ந்த உண்மை. 65 ஒரு மதமும் வேண்டாம் - தம்பி உண்மை யுடை யார்க்கே. பெரு மதங்கள் என்னும் - அந்தப் பேய் பிடிக்க வேண்டாம். திருட்டுக் குரு மாரின் - கெட்ட செயலை ஒப்ப வேண்டாம். காணிக் கைகள் கொட்டி - நீ கண் கலங்க வேண்டாம்! ஏணி ஏற்ற மாட்டார் - தம்பி [எழுபதுடன்] வாழி! 70 தோணி யினில் ஏற்றி - நல்ல சொர்க்கம் சேர்க்க மாட்டார். நாண மற்ற பேச்சை - நீ நம்ப வேண்டாம் தம்பி. சாதி யில்லை தம்பி - மக்கள் தாழ் வுயர்வும் இல்லை. தீத கற்ற வந்த - நம் திருக்கு றளைப் பாராய். நீதி பொது தம்பி - இந்த நீணி லத்தில் யார்க்கும். 75 மாத ருக்கும் நீதி - ஆண் மக்க ளுக்கும் ஒன்றே. பச்சை விளக் காகும் - உன் பகுத் தறிவு தம்பி. பச்சை விளக் காலே - நல்ல பாதை பிடி தம்பி! அச்ச மில்லை தம்பி - நல்ல அறம் இருக்கும் போது! எச்ச ரிக்கை கண்டாய் - தம்பி [எண்ப துடன்] வாழி! 80 வள்ளு வரின் நூலே - நல்ல வழி யளிக்கும் தம்பி. குள்ளர் வழிச் சென்று - நீ குழியில் விழ வேண்டாம். உள்ள இனத் தார்கள் - உளம் ஒன்று பட வேண்டும். தள்ளுக யுபொ றாமைரு - ஒரு தாய் வயிற்று மக்கள். நீக்குக பே ராசை - தம்பி நிகர் எவரும் ஆவார். 85 போக்கு சினம் தீச்சொல் - நீ பொன் அறத்தை வாழ்த்து. சேர்க்கும் அறம் உன்னை - ஒரு தீங்கும் அற்ற வாழ்வில்! ஊர்க் குழைக்க வேண்டும் - நீ உண்மை யுடன் தம்பி. நாட்டுக் குழை தம்பி - இந்த நானி லத்தை எண்ணி. வீட்டுக் குழை தம்பி - இங்கு மீதிப் பெயர் எண்ணி! 90 தோட்டம் பொது தம்பி - இந்தச் சீமை பொது தம்பி, தேட்டம் பொது தம்பி - உணர் [தொண்ணூ றோடி ரண்டே.] கண் அடித் தழைக்கும் - ஒரு கட் டழகி தன்னை, எண்ணம் ஒத் திருந்தால் - நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். பண்ணி வைப்ப தாக - வரும் பார்ப்பு* மணம் வேண்டாம். 95 * பார்ப்பு - பார்ப்பனன் கண்ம ணியும் நீயும் - நல்ல காதல் மணம் கொள்வீர். திராவி டத்தை மீட்பீர் - நம் செந் தமிழை மீட்பீர். திராவி டர்கள் ஒன்றாய்த் - தம்பி சேர்ந் துழைக்க வேண்டும். திராவி டத்தில் மாற்றார் - தமைச் சேர விட வேண்டாம். ஒரே உறுதி கொள்வாய் - தம்பி [ஒருநூ றுடன்] வாழி! 100
பிற்பகல்
மாலை
உச்சிக் குடை சாய்ந்தான் - கதிர் [ஒன்று டனே] வாழி! மச்சு வேய்ந்தி ருந்தான் - அந்த மாற் றுயர்ந்த பொன்னன், மெச்சு தடி பெண்ணே - அந்த வெய்யி லையும் வையம். வைச்ச புள்ளி மாறான் - அவன் மாலை மாற்றப் போவான்.
ஒழுக்கம்
நல்லொ ழுக்கம் ஒன்றே - பெண்ணே நல்ல நிலை சேர்க்கும். 5 புல் ஒழுக்கம் தீமை - பெண்ணே பொய் உரைத்தல் தீமை! இல்ல றமே பெண்ணே - இங்கு நல்ல றமென் பார்கள். கல்வி யுடை யோரே - பெண்ணே கண்ணு டைய ராவார். நன்றி மற வாதே - பெண்ணே நற் பொறுமை வேண்டும். இன்சொல் இனி தாகும் - பெண்ணே இன்னல் செய்ய வேண்டாம். 10 உன்ன ருமை நாட்டின் - பெண்ணே உண்மை நிலை காண்பாய். இந்நி லத்தின் தொண்டில் - நீ ஈடு பட வேண்டும். [பத்து டனே மூன்று] - நீ பகுத் தறிவைப் போற்று! நத்தி யிரு பெண்ணே - நீ நல்ல வரை என்றும்! சொத்து வரும் என்று - நீ தோது தவ ராதே. 15 முத்து வரும் என்று - நீ முறை தவற வேண்டாம். கனியத் தமிழ் பாடு - பெண்ணே கச்சே ரிசெய் யாதே. சினிமா வினிற் சேர்ந்து - நீ தீமை யடை யாதே! தனித்து வரும் போது - கெட்ட தறுதலை கண் வைத்தால், இனிக்க நலம் கூறு - பெண்ணே இல்லா விடில் தாக்கு. 20 [இருப துடன் ஒன்றே] - பெண்ணே இத்தி ராவி டத்தில் அரிசி மட்டும் இல்லை - பெண்ணே ஆட்சி மட்டும் உண்டு. இரிசன் மகன் முத்தை - பெண்ணே யுஇந்தி படிரு யென்றான். வரிசை கெட்ட மூளி - அவன் வைத்த துதான் சட்டம்! [இருப துடன் ஐந்தே] - நம் இனிய தமிழ்த் தாயைக் 25 கருவ றுத்துப் போடும் - ஒரு கத்தி யடி இந்தி. அரிய செயல் ஒன்று - பெண்ணே ஆளு பவர் செய்தார். ஒருவ ருக்கும் கள்ளைப் - பெண்ணே ஒழிக்கச் சட்டம் செய்தார். கள்ளை விட்ட பேர்க்குப் - பெண்ணே கைப் பணமும் மீதி. முள் விலக்கி னார்கள் - பெண்ணே [முப்ப துடன்] வாழி! 30 கள்ளை விட்டுக் கையில் - பெண்ணே காசு மீத்தச் செய்தார். கள்ளக் கடை போட்டார் - அதைக் கழற்ற வழி செய்தார். ஆள வந்தார் உண்டு - பெண்ணே ஐயோ பெரும் மண்டு. நாளும் கையில் மட்டும் - பெண்ணே நல்ல வரு மானம்! ஆளுக் கென்ன பஞ்சம் - பெண்ணே அடி மடியில் லஞ்சம்! 35 தோளி லேமி டுக்காம் - அவர் தொழுவ தோவ டக்காம்! கெண்டை விழி யாளே - அடி கிள்ளை மொழி யாளே, கொண்டை யிலே பூவும் - உன் கோணை நெடு வாக்கும், தண்டை யிலே பாட்டும் - உன் தாழ் அடியில் கூத்தும், கண்ட வுடன் காதல் - நான் கொண்டே னேஉன் மீதில். 40 [நாற்ப துடன் ஒன்று] - பெண்ணே நான் உனக்கு மாமன். நேற்று வந்து போனாய் - அடி நீல மயில் போலே. மாற்று யர்ந்த பொன்னே - அடி மாணிக் கமே கேளாய், சோற்றை மறந் தேனே - அடி தூக்க மில்லை மானே. உன் நினைப்புத் தானே - அடி ஊற்றெ டுத்த தேனே! 45 என்னைக் கொல்லு தேடி - அடி ஏதுக் கிந்த மோடி? சின்ன வய தாளே - அடி சிரித்த முகத் தாளே அன்ன நடை யாளே நல்ல அச்ச இடை யாளே துள்ளு வதென் ஆசை - அடி துடித்த தடி மீசை. அள்ளு வதென் காதல் - அடி [ஐம்ப துடன்] வாழி! 50 தள்ளத் தகு மோடி - நான் தாய்க்குத் தலைப் பிள்ளை. நொள்ளை யல்ல பெண்ணே - நான் நொண்டி யல்ல பெண்ணே. வருத்தம் இல்லை பெண்ணே - என் மாமிக் கும்என் மேலே கருத்தும் உண்டு மாமன் - என்னைக் கட்டிக் கொள்ளச் சொல்வான். சிரிப்பு மலர் வாயால் - அடி தெரிவி ஒரு பேச்சே, 55 கருத்தை உரை கொஞ்சம் - பெண்ணே கல்லடி உன் நெஞ்சம். பார் இரண்டு சிட்டு - பெண்ணே பழகும் ஒன்று பட்டு யார் தடுக்கக் கூடும்? - பெண்ணே [ஐம்ப துடன் எட்டு] பீர்க்க மலர் பூக்கும் - அடி பின் பொழுதும் கண்டாய் ஆர்க்கு தடி வண்டும் - பெண்ணே [அறுபதுடன்] வாழி! 60 விரிந்த தடி முல்லை - அடி வீசி யது தென்றல். சரிந்த தடி பெண்ணே - மலர் தங்கப் பொடி எங்கும். எரிந்த தடி மேனி - பெண்ணே இனிப் பொறுக்க மாட்டேன். புரிந்த னைஇந் நேரம் - அடி பொல்லா தஒட் டாரம். பூட்டி வைத்த வீட்டின் - அடி புது விளக்கும் நீயே. 65 மாட்டி வைத்த கூட்டில் - அடி மணிக் கிளியும் நீயே. போட்டு வைத்த சம்பா - இனிப் பொங்கி டும்உன் னாலே. கூட்டி வைத்த வீட்டின் - நல்ல குடும்ப விளக் காவாய். கூண்டு வண்டி கட்டி - நாம் கூட லூர்அ டைந்தால் பாண்டி யன்கு டும்பம் - என்று பார்த்து மகிழ் வார்கள். 70 தாண்டு நடை போட்டு - நாம் தகத கென்று போனால் மாண்ட நெடுஞ் சோழன் - அவன் வளர் குடும்பம் என்பார். தையல், என்றன் வீட்டில் - நீ சமையல் செய்யும் போதுன் கையழகு பார்த்து - நான் களித்தி டுவேன் பெண்ணே. கையில் விளக் கேந்தி - நீ கடைசி அறை போவாய் 75 பொய்யல் லவே பெண்ணே - மிகப் பூரிக்கும் என் மேனி. [எழுப துடன் ஏழு] - பெண்ணே இளமை மாறிப் போகும் அழகு மாறிப் போகும் - நீ அறிந்து நட பெண்ணே. குழந்தை குட்டி பெற்று - நாம் குறை தவிர்க்க வேண்டும். பிழிந்த பழச் சாறே - அடி பேச்சும் உண்டோ வேறே. 80 தங்கக் கதிர் மேற்கில் - மெல்லத் தவழ்ந்த தடி பெண்ணே. மங்கிற் றடி வெய்யில் - அதோ மகிழ்ந்த தடி அல்லி. தங்கும் தாம ரைப்பூ - மானே தளர்ந்த தடி மேனி. பொங்கிற் றடி காதல் - அடி பூவை யேஉன் மீதில்! [எண்ப துடன் ஐந்தே] - பெண்ணே எருது களின் கூட்டம் 85 கண் மகிழ்ந்து பெண்ணே - அவை கழனி விட்டுப் போகும். பெண் மயிலே என்னை - நீ பெருமை படச் செய்வாய். உண்மை யிலே நானே - உன் ஊழி யம்செய் வேனே. பட்ட தடி உன்கை - பெண்ணே பலித்த தடி வாழ்வு. தொட்ட துது லங்கும் - இனித் [தொண்ணூ றுடன்] வாழ்க! 90 இட்டது நீ சட்டம் - என் இன்பப் பெரு மாட்டி. விட்டுப் பிரி யாதே - எந்த வேளை யிலும் மாதே. ஆறு தலைச் செய்வாய் - என் அண்டை யிலி ருந்தே. மாறி டுமோ கண்ணே - நம் வாழ்க் கையிலே எண்ணம்? மாறும் படிச் செய்வார் - இவ் வைய கத்தில் இல்லை. 95 ஊறு தடி அன்பும் - பெண்ணே ஓங் கிடுதே இன்பம். தேக்கி யது நீலம் - அந்தச் செங்க திரின் மேலே. பூக்கும் மண முல்லை - இனிப் போகு மடி மாலை. வாய்க்க விளக் கேற்றி - நகர் மாத ரும்ம கிழ்ந்தார். நோக்கி யது வையம் - பெண்ணே [நூறு டனே] வாழி! 100
|
6. திராவிடர் திருப்பாடல்
காலைப் பத்து
வெண்டளையான் வந்த தரவிணைக்
கொச்சகக் கலிப்பா
கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து விழித்தான்; எழுந்தான். விரிகதிரோன் வாழி! அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை! மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே! விழிப்பெய்த மாட்டீரோ? தூங்குவிரோ மேலும்? அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்! ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர் வழித்தோன்றும் மங்கையீர், காளையரே வாரீரோ! 1 எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர். எழுந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ? பழந்தமிழர் செல்வம் கலையொழுக்கம் பண்பே ஒழிந்து படவடக்கர் ஒட்டாரம் செய்தார் அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த எழில்மடவீர், காளையரே இன்னேநீர் வாரீரோ! 2 காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்! தாக்கும் மணிமுரசு தன்முழக்கம் கேட்டீரோ? தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்துநின்றார். தூக்கறியார் வாளொன்றும்! போராடும் துப்பில்லார். சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட்கருத்தை! போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும் வாய்க்கஅவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும் போக்க மடவீரே, காளையரே வாரீரோ! 3 தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான் செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள் தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ? பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும் எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே வங்கத்துக் கிப்பால் குடியரசு வாய்ப்படைய மங்கையீர், காளையீர் வாரீரோ வாரீரோ! 4 தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில் ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ? சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள் நேர்மலிந்தார்! பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பார் பார்கலந்த கீர்த்திப் பழய திராவிடத்தை வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார் கார்குழலீர், காளையரே வாரீரோ வாரீரோ! 5 செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டீரோ மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே! பஞ்சணை விட்டெழுந்து பாரீர் திராவிடத்தை நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை வெஞ்சேற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்த்த நினைத்தாரே! நெஞ்சிளைப் போமோ? நெடுந்தோள் தளர்வோமோ? அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்கக் கொஞ்சு குயில்களே, காளையரே வாரீரோ! 6 கோவாழும் இல்லொன்றே கோவிலாம் மற்றவை நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம் தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம் சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம் வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம் மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர் தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ! 7 மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன் துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ? முன்னால் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்னும் நன்னாட்டில் சின்ன வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களும், இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக் கன்னல்மொழி மங்கையீர், காளையரே வாரீரோ! 8 நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக் கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில் ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார் தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப் போல வடக்கர்தம் பொய்ந்நூல் தனைப்புகுத்தி மேலும்நமை மாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ? வாலிழையீர், காளையரே வாரீரோ வாரீரோ! 9 அருவி, மலை,மரங்கள் அத்தனையும் பொன்னின் மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான். விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்? அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்ந்தார் ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர் திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார். உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர் வரைத்தோளீர், காளையரே வாரீரோ வாரீரோ! 10
விடுதலைப் பாட்டு
மீள்வது நோக்கம் - இந்த மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல் மாள்வது நோக்கம் - இதை வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்! ஆள்வது நோக்கம் - எங்கள் அன்னை நிலத்தினில் இன்னொரு வன்கால் நீள்வது காணோம் - இதை நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்! 1 மீள்வது நோக்கம்... கனவொன்று கண்டார் - தங்கள் கையிருப் பிவ்விடம் செல்லுவ துண்டோ? இனநலம் காண்பார் - எனில் இங்கென்ன வேலை அடக்குக வாலை! தினவுண்டு தோளில் - வரத் திறல்மிக உண்டெனில் வந்து பார்க்கட்டும்! மனநோய் அடைந்தார் - அந்த வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்! 2 கனவொன்று கண்டார்... திராவிடர் நாங்கள் - இத்தி ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்! ஒரே இனத்தார்கள் - எமக் கொன்றே கலைபண் பொழுக்கமும் ஒன்றே! சரேலென ஓர்சொல் - இங்குத் தாவுதல் கேட்டெம் ஆவி துடித்தோம். வராதவர் வந்தார் - இங்கு வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்! 3 திராவிடர் நாங்கள்...
இராப் பத்து
வெண்டளையான் வந்த இயற்றரவிணைக்
கொச்சகக் கலிப்பா
திருவிளக் கேற்றி இரவு சிறக்க வருவிருந் தோடு மகிழ்ந்துண வுண்டீர்! அருகு மடவார் அடைகாய் தரவும் பருகுபால் காத்திருக்கப் பஞ்சணை மேவித் தெருவினில் யாம்பாடும் செந்தமிழும் கேட்பீர்! பெருவாழ்வு வாழ்ந்த திராவிடநா டிந்நாள் திருகு வடநாட்டார் கையினிற் சிக்கி உருவழிந்து போகாமே காப்பாற்றல் உங்கடனே. 1 ஆற்றும் பணிகள் பகலெல்லாம் ஆற்றியபின் சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும் தோற்றும் இரவும் சுடர்விளக்கும்! இல்லத்தில் காற்று நுகர்ந்திடுவீர்; காது கொடுத்தேயாம் சாற்றுதல் கேளீர்! தமிழை வடநாட்டார் மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம் மாற்றவே இந்திதனை வைத்தார்கட் டாயமென வேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உங்கடனே. 2 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனுமோர் சிறப்புடைய நம்கொள்கை நானிலத்தின் செல்வம்! தறுக்கன் வடநாட்டான் தன்னலத்தான் இந்நாள் நிறப்பாகு பாட்டை நிலைநிறுத்த எண்ணி வெறுப்புடைய இந்தி விதைக்கின்றான் இங்கே அறப்போர் தொடுத்திடுவோம் வெல்வோம்நாம் அன்றி இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர் உறக்கம் தவிர்த்துணர்வே உற்றெழுதல் உங்கடனே. 3 தீயில் நிலநீரில் காற்றில் செழுவானில் ஆயில் குறியில் அறியாப் பெரும்பொருட்குக் கோயில் தனைஒப்புக் கொள்ளோம்! சுமந்தீன்ற தாயில் பிறிதோர் பொருட்குத் தலைவணங்கோம்! வாயில் பொறாமைச்சொல் வையோம்! அவாவெகுளி தீயிற் கொடுஞ்சொற்கள் தீர்த்தோம்! அறப்பயனே வாயிற் பருகுவோம். நம்கொள்கைப் பற்றறுக்க நோயில் நுழைஇந்தி வேரறுத்தல் உங்கடனே. 4 ஒழுக்கம் கெடுக்கும்! உணர்வை ஒடுக்கும்! வழக்கும் பெரும்போரும் மாநிலத்தில் சேர்க்கும்! இழுக்கும் தருமதங்கள் யாவும் விளக்கிக் கொழுக்கும் குருமாரின் கொட்டம் அறுத்துத் தழைக்கத் தழைக்க நறுங்கொள்கை நெஞ்சிற் பழுக்கும் படிவாழ் திராவிடர் பண்பை அழிக்க நினைத்திங்கே ஆளவந்தார் இந்தி புழுக்கும் படிசெய்தார் போக்கிடுதல் உங்கடனே. 5 எட்டுத் திசையும் பதினா றிடைப்பாங்கும் முட்டித் ததும்பி முளைத்தோங்கு பேரொளிக்கே எட்டுக் குடப்பசுப்பால் இட்டாட்டு வீரென்னும் பட்டாடை சாத்தென்னும் பல்பணி பூட்டென்னும் குட்டி வணங்குமுன்பு பார்ப்பனனைக் கும்பிடென்னும் மட்டக் கருத்துக்கள் மாளா மடமைஎலாம் கொட்டி அளக்குமோர் இந்தியினை நம்தலையில் கட்டுவார் தம்மைஒரு கைபார்த்தல் உங்கடனே. 6 தந்தைமார் பற்பலராய்த் தாயொருத்தி யாய்,மாட்டு மந்தையுடன் இந்நாட்டில் வந்தவர்கள் நாமல்லோம்! முந்தைக்கு முந்தை அதன்முந்தை நாளாக இந்தப் பெருநாடாம் யாழின் இசையாவோம்! வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள்விற்கும் சந்தையா நம்நாடு? தாயாம் தமிழிருக்க இந்தியோ கட்டாயம்? என்ன பெருங்கூத்தோ? கொந்துமொரு கொத்தடிமை நீக்கிடுதல் உங்கடனே. 7 புலையொழுக்கம் கொண்டவர்கள் பொல்லா வடக்கர் தலையெடுத்தார் இன்பத் திராவிடதின் தக்க கலையொழுக்கம் பண்பனைத்தும் கட்டோ டொழித்து நிலைபுரட்டி நம்நாட்டை நீளடிமை யாக்க வலைகட்டி நம்மில் வகையறியா மக்கள் பலரைப் பிடித்துரா மாயணத்தை மற்றும் மலிபொய் மனுநூலை வாழ்வித்தார் யாவும் தொலையப் பெரும்போர் தொடுப்பதும் உங்கடனே. 8 தென்றற் குளிரும், செழுங்கா மலர்மணமும், நின்று தலைதாழ்த்தும் வாழையும், நீள்கரும்பும், என்றும் எவர்க்குமே போதும்எனும் செந்நெல் நன்று விளையும் வளமார்ந்த நன்செயும், அன்றன் றணுகப் புதிய புதியசுவை குன்றாத செந்தமிழும், குன்றும் மணியாறும், தொன்றுதொட்ட சீரும் உடைய திராவிடத்தை இன்று விடுதலைச்சீர் எய்துவித்தல் உங்கடனே. 9 "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்" என்ற வள்ளுவர்சொல் தாழ்வொன் றடையாது தஞ்செயலை நன்றாற்றும் ஆழ்கடல் முப்பாங் கமைந்த திராவிடத்தில் வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள் வாழ்க! நனிவாழ்க! மாற்றார்கள் வீழ்ந்திடுக! யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும் வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே. 10
திராவிடர் ஒழுக்கம்
சிந்து கண்ணிகள்
தட்டுப் படாதபெரும் - பொருட்கொரு சாதியும் உண்டோடா? - படுவாய் சாதியும் உண்டோடா? மட்டற்ற செம்பொருட்கே - முரண்படும் மதங்கள் உண்டோடா? 1 எட்டுத் திசைமுழுதும் - விசும்பு,மண் எங்கும் நிறைபொருட்கே - படுவாய் எங்கும் நிறைபொருட்கே கொட்டு முழக்குண்டோ? - அமர்ந்திடக் கோயில்கள் உண்டோடா? 2 பிட்டுச் சுமந்ததுண்டோ? - நிறைபொருள் பெண்டாட்டி கேட்டதுண்டோ? - படுவாய் பெண்டாட்டி கேட்டதுண்டோ? கட்டைக் குதிரைகட்டும் - பெருந்தேர் காட்டெனக் கேட்டதுண்டோ? 3 பட்டுடை கேட்டதுண்டோ? - பெரும்பொருள் பண்ணியம் உண்பதுண்டோ? - படுவாய் பண்ணியம் உண்பதுண்டோ? அட்டைப் படத்தினிலும் - திரையிலும் அப்பொருள் காண்பதுண்டோ? 4 பிரமன் என்பதிலும் - மொட்டைத்தலைப் பிச்சையன் என்பதிலும் - படுவாய் பிச்சையன் என்பதிலும் முருகன் என்பதிலும் - திருமால் முக்கணன் என்பதிலும் 5 வரும் பெருச்சாளி - அதன்மிசை வருவன் என்பதிலும் - படுவாய் வருவன் என்பதிலும் சரிந்த தொந்தியுள்ளார் - பார்ப்பனர்க்குத் தரகன் என்பதிலும் 6 பெரும் பொருள்உளதோ? - தொழுவதில் பேறுகள் பெற்றதுண்டோ? - படுவாய் பேறுகள் பெற்றதுண்டோ? கரும் பிருக்குதடா - உன்னிடத்தில் காணும் கருத்திலையோ! 7 இரும்பு நெஞ்சத்திலே - பயன்ஒன்றும் இல்லை உணர்ந்திடடா - படுவாய் இல்லை உணர்ந்திடடா! திரும்பும் பக்கமெலாம் - பெருமக்கள் தேவை யுணர்ந்திடடா! 8 தீய பொறாமையையும் - உடைமையிற் செல்லும் அவாவினையும் - படுவாய் செல்லும் அவாவினையும் காயும் சினத்தினையும் - பிறர்உளம் கன்ற உரைப்பதையும் 9 ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில் அறம் பிறக்குமடா! - படுவாய் அறம் பிறக்குமடா! தூய அறவுளத்தால் - செயலினில் தொண்டு பிறக்குமடா! 10 ஏயும்நற் றொண்டாலே - பெரியதோர் இன்பம் பிறக்குமடா! - படுவாய் இன்பம் பிறக்குமடா! தீயும் குளிருமடா - உனையண்டும் தீயும் பறக்குமடா! 11 வாயில் திறக்குமடா - புதியதோர் வழி பிறக்குமடா - படுவாய் வழி பிறக்குமடா! ஓயுதல் தீருமடா - புதியதோர் ஒளி பிறக்குமடா! 12 தாயொடு மக்களடா - அனைவரும் சரிநிகர் உடைமை - படுவாய் சரிநிகர் உடைமை தேயும் நிலைவிடுப்பாய் - இவையே திராவிடர் ஒழுக்கம். 13
அன்னை அறிக்கை
(திராவிடம்)
என்னருமை மக்களே இன்பத் திராவிடரே இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்! உங்கள் கலைஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம் பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்! ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதைமறைத்துத் தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியத்தை நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள் அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம். பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால் அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ? ஆட்சி யறியாத ஆரியர்கள் ஆளவந்தால் பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ? மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால் தக்க மு.லீமைத் தாக்கா திருப்பாரோ? உங்கள் கடமை உணர்வீர்கள்; ஒன்றுபட்டால் இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை! ஏசு மதத்தாரும் மு.லீம்கள் எல்லாரும் பேசில் திராவிடர்;என் பிள்ளைகளே என்றுணர்க! சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால் தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்! ஆரியரின் இந்தி அவிநாசி ஏற்பாடு போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே! ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான்தந்தேன் பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ? மன்னும் குடியரசின் வான்கொடியை என்கையில் இன்னே கொடுக்க எழுச்சி யடையீரோ! |
7. சமத்துவப் பாட்டு
(குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு)
புவியிற் சமுகம்இன்பம் பூணல் சமத்துவத்தால்; கவிழ்தல் பேதத்தாலடி! - சகியே கவிழ்தல் பேதத்தாலடி! 1 புவிவேகம் கொண்டுசெல்லும் போதில் உடன்செல்லாதார் அவிவேகம் கொண்டாரடி! - சகியே அவிவேகம் கொண்டாரடி! 2 தாழ்வென்றும் உயர்வென்றும் சமுகத்திற் பேதங்கொண்டால் வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே வாழ்வின்பம் உண்டாகுமோ? 3 தாழ்ந்தவர் என்றுநீக்கிச் சமுதாயச் சீர்தேடி வாழ்ந்தது காணேனடி! - சகியே வாழ்ந்தது காணேனடி! 4 பிறப்பி லுயர்வுதாழ்வு பேசும்ச முகம்மண்ணில் சிறக்குமோ சொல்வாயடி? - சகியே சிறக்குமோ சொல்வாயடி? 5 பிறந்தமுப் பதுகோடிப் பேரில்ஐங் கோடிமக்கள் இறந்தாரோ சொல்வாயடி? - சகியே இறந்தாரோ சொல்வாயடி? 6 இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில்நல்ல சுதந்தரம் உண்டாகுமோ? - சகியே சுதந்தரம் உண்டாகுமோ? 7 பதம்பெறப் பணிசெய்வோர் பகைகொண்டார் எனில்எந்த விதம்அஃது கொள்வாரடி? - சகியே விதம்அஃது கொள்வாரடி? 8 சோதர பாவம்நம்மில் தோன்றா விடில்தேசத்தில் தீதினி நீங்காதடி! - சகியே தீதினி நீங்காதடி! 9 பேதம்பா ராட்டிவந்தோம் பிழைசெய்தோம் பல்லாண்டாக மீதம் உயிர்தானுண்டு! - சகியே மீதம் உயிர்தானுண்டு! 10 அற்பத்தீண் டாதார்எண்ணும் அவரும் பிறரும்ஓர்தாய் கர்ப்பத்தில் வந்தாரன்றோ? - சகியே கர்ப்பத்தில் வந்தோரன்றோ? 11 பொற்புடை முல்லைக்கொத்தில் புளியம்பூ பூத்ததென்றால் சொற்படி யார்நம்புவார்? - சகியே சொற்படி யார்நம்புவார்? 12 தீண்டும் மக்களின்அன்னை தீண்டாரையும் பெற்றாளோ ஈண்டிதை யார்நம்புவார்? - சகியே ஈண்டிதை யார்நம்புவார்? 13 தீண்டாமை ஒப்புகின்றார் தீண்டா ரிடம்உதவி வேண்டாமல் இல்லையடி! - சகியே வேண்டாமல் இல்லையடி! 14 அடிமை கொடியதென்போர் அவர்சோத ரர்க்கிழைக்கும் மிடிமையை எண்ணாரடி! - சகியே மிடிமையை எண்ணாரடி! 15 கொடியோர் பஞ்சமர்என்று கூடப்பிறந் தோர்க்கிவர் சுடும்பேர்வைத் திட்டாரடி! - சகியே சுடும்பேர்வைத் திட்டாரடி! 16 தீண்டாதார் பழங்கீர்த்தி தெரிந்தால் தீண்டாமைப்பட்டம் வேண்டாதார் இல்லையடி! - சகியே வேண்டாதார் இல்லையடி! 17 ஆண்டார் தமிழர்இந்நா டதன்பின் ஆரியர்என்போர் ஈண்டுக் குடியேறினார்! - சகியே ஈண்டுக் குடியேறினார்! 18 வெள்ளை யுடம்புகாட்டி வெறும்வாக்கு நயம்காட்டிக் கள்ளங்கள் செய்தாரடி! - சகியே கள்ளங்கள் செய்தாரடி! 19 பிள்ளைக்குக் கனிதந்து பின்காது குத்தல்போல்தம் கொள்கை பரவச்செய்தார்! - சகியே கொள்கை பரவச்செய்தார்! 20 கொல்லா விரதம்கொண்டோர் கொலைசெய்யும் ஆரியர்தம் சொல்லுக் கிசைந்தாரடி! - சகியே சொல்லுக் கிசைந்தாரடி! 21 நல்ல தமிழர்சற்றும் நலமற்ற ஆரியர்தம் பொல்லாச்சொல் ஏற்றாரடி! - சகியே பொல்லாச்சொல் ஏற்றாரடி! 22 ஏச்சும் எண்ணார்,மானம் இல்லாத ஆரியர் மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! - சகியே மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! 23 வாய்ச்சாலத் தால்கெட்ட வஞ்சத்தால் கலகத்தால் ஏய்ச்சாள வந்தாரடி! - சகியே ஏய்ச்சாள வந்தாரடி! 24 மன்னர்க் கிடையில்சண்டை வளர்த்தார்தம் வசமானால் பொன்னாடு சேர்வார்என்றார்! - சகியே பொன்னாடு சேர்வார்என்றார்! 25 பொன்னாட்டு மாதர்போலும் பூலோகத் தில்லையென்று மன்னர்பால் பொய்கூறினார்! - சகியே மன்னர்பால் பொய்கூறினார்! 26 வான்மறை எனத்தங்கள் வழக்கம் குறித்தநூலைத் தேன்மழை என்றாரடி! - சகியே தேன்மழை என்றாரடி! 27 'ஏன்மறை?' எங்கட்கென்றே இசைத்தால் ஆரியர்,நீங்கள் வான்புகத் தான்என்றனர்! - சகியே வான்புகத் தான்என்றனர்! 28 மேலேழு லோகம்என்றார் கீழேழு லோகம்என்றார் நூலெல்லாம் பொய்கூறினார்! - சகியே நூலெல்லாம் பொய்கூறினார்! 29 மேலும்தமை நிந்திப்போர் மிகுக.டம் அடைவார்கள் தோலோதோல் கூடாதென்றார்! - சகியே தோலோதோல் கூடாதென்றார்! 30 சுவர்க்கத்தில் தேவர்என்போர் சுகமாய் இருப்பதுண்டாம் அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! - சகியே அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! 31 துவக்கத்தில் ஆரியரைத் தொழுதால் இறந்தபின்பு சுவர்க்கம்செல் வார்என்றனர்! - சகியே சுவர்க்கம்செல் வார்என்றனர்! 32 தம்சிறு வேதம்ஒப்பாத் தமிழரை ஆரியர்கள் நஞ்சென்று கொண்டாரடி! - சகியே நஞ்சென்று கொண்டாரடி! 33 வெஞ்சிறு வேதம்ஒப்பா வீரரை ஆரியர்கள் வஞ்சித்துக் கொன்றாரடி! - சகியே வஞ்சித்துக் கொன்றாரடி! 34 அழிவேதம் ஒப்பாதாரை அரக்கரென் றேசொல்லிப் பழிபோட்டுத் தலைவாங்கினார்! - சகியே பழிபோட்டுத் தலைவாங்கினார்! 35 பழிவேதம் ஒப்போம்என்ற பண்டைத் தமிழர்தம்மைக் கழுவேற்றிக் கொன்றாரடி! - சகியே கழுவேற்றிக் கொன்றாரடி! 36 ஆரியர் தமைஒப்பா ஆதித் திராவிடரைச் சேரியில் வைத்தாரடி! - சகியே சேரியில் வைத்தாரடி! 37 சேரிப் பறையர்என்றும் தீண்டாதார் என்றும்சொல்லும் வீரர்நம் உற்றாரடி! - சகியே வீரர்நம் உற்றாரடி! 38 வெஞ்சமர் வீரர்தம்மை வெல்லாமற் புறந்தள்ளப் பஞ்சமர் என்றாரடி! - சகியே பஞ்சமர் என்றாரடி! 39 தஞ்சம் புகாத்தமிழர் சண்டாளர் எனில்தாழ்ந்து கெஞ்சுவோர் பேரென்னடி! - சகியே கெஞ்சுவோர் பேரென்னடி! 40 மாதர் சகிதம்தங்கள் மதத்தைத் தமிழ்மன்னர்க்குப் போதனை செய்தாரடி! - சகியே போதனை செய்தாரடி! 41 சூதற்ற மன்னர்சில்லோர் சுவர்க்கக் கதையைநம்பித் தீதுக் கிசைந்தாரடி! - சகியே தீதுக் கிசைந்தாரடி! 42 உலகம் நமைப்பழிக்க உட்புகுந் தாரியர்கள் கலகங்கள் செய்தாரடி! - சகியே கலகங்கள் செய்தாரடி! 43 கொலைக்கள மாக்கிவிட்டார் குளிர்நாட்டைத் தம்வாழ்வின் நிலைக்களம் என்றாரடி! - சகியே நிலைக்களம் என்றாரடி! 44 சாதிப் பிரிவுசெய்தார் தம்மை உயர்த்துதற்கே நீதிகள் சொன்னாரடி! - சகியே நீதிகள் சொன்னாரடி! 45 ஓதும் உயர்வுதாழ்வை ஆரியர் உரைத்திட்டால் ஏதுக்கு நாம்ஏற்பதோ? - சகியே ஏதுக்கு நாம்ஏற்பதோ? 46 ஊர்இரண் டுபடுங்கால் உளவுள்ள கூத்தாடிக்குக் காரியம் கைகூடுமாம்! - சகியே காரியம் கைகூடுமாம்! 47 நேர்பகை யாளிஎன்னை நீசனென் றால்என்சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி! - சகியே சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி! 48 வீரமில் ஆரியரின் வீண்வாக்கை நம்பினால்நம் காரியம் கைகூடுமோ? - சகியே காரியம் கைகூடுமோ? 49 ஆரியர் சொன்னவண்ணம் ஆண்டு பலகழித்தோம் காரியம் கைகூடிற்றா? - சகியே காரியம் கைகூடிற்றா? 50 எத்தால்வாழ் வுண்டாகும்?நாம் ஒத்தால்வாழ் வுண்டாம்!இஃது சத்தான பேச்சல்லவோ? - சகியே சத்தான பேச்சல்லவோ? 51 எத்தர்கள் பேச்சைநம்பி இரத்தக் கலப்பைநீக்கிச் சத்தின்றி வாழ்வாருண்டோ? - சகியே சத்தின்றி வாழ்வாருண்டோ? 52 'ஆரியப்' பேர்மறைந்தும் அவர்வைத்த 'தீண்டார்' என்ற பேர்நிற்றல் ஏதுக்கடி? - சகியே பேர்நிற்றல் ஏதுக்கடி? 53 ஆரியர் பார்ப்பாரானால் அவர்சொன்ன தீண்டாதார்கள் சேரியில் ஏன்தங்கினார்? - சகியே சேரியில் ஏன்தங்கினார்? 54 ஊர்தட்டிப் பறித்திட உயர்சாதி என்பார்இஃதை மார்தட்டிச் சொல்வேனடி! - சகியே மார்தட்டிச் சொல்வேனடி! 55 ஓர்தட்டில் உயர்ந்தோர்மற் றொன்றில்தாழ்ந் தோரைஇட்டுச் சீர்தூக்கிப் பார்ப்போமடி! - சகியே சீர்தூக்கிப் பார்ப்போமடி! 56 தீண்டாதார் சுத்தமற்றோர் என்றாலச் சுத்தத்தன்மை தாண்டாதார் எங்குண்டடி? - சகியே தாண்டாதார் எங்குண்டடி? 57 தீண்டாதார் ஊனுண்டால் தீண்டு மனிதர்வாய்க்குள் மாண்டன பல்கோடியாம்! - சகியே மாண்டன பல்கோடியாம்! 58 பறவை மிருகமுண்டோர் பறையர் என்றால்மனுநூல் முறையென்பார் பேரென்னடி? - சகியே முறையென்பார் பேரென்னடி? 59 வெறிமது உண்போர்நீசர் என்றால் பிறர்க்கிருட்டில் நிறைமுக்கா டேதுக்கடி? - சகியே நிறைமுக்கா டேதுக்கடி? 60 சீலம் குறைந்தோர்என்றால் சீலமி லாச்சிலரை ஞாலத்தில் ஏன்தீண்டினார்? - சகியே ஞாலத்தில் ஏன்தீண்டினார்? 61 மேலை வழக்கங்கொண்டு மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக் காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே காலத்தில் தாழ்ந்தாருண்டோ? 62 சாத்திரம் தள்ளிற்றென்றால் சாற்றும் அதுதான்எங்கள் கோத்திரத் தார்செய்ததோ? - சகியே கோத்திரத் தார்செய்ததோ? 63 வாய்த்திறம் கொண்டமக்கள் வஞ்சம் யாவையும்நம்பி நேத்திரம் கெட்டோமடி! - சகியே நேத்திரம் கெட்டோமடி! 64 மனிதரிற் றாழ்வுயர்வு வகுக்கும் மடையர்வார்த்தை இனிச்செல்ல மாட்டாதடி! - சகியே இனிச்செல்ல மாட்டாதடி! 65 கனிமா மரம்வாழைக்காய் காய்க்கா தெனில்இரண்டும் தனித்தனிச் சாதியடி! - சகியே தனித்தனிச் சாதியடி! 66 எருமையைப் பசுசேர்தல் இல்லை; இதனாலிவை ஒருசாதி இல்லையடி! - சகியே ஒருசாதி இல்லையடி! 67 ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை ஒப்பக் கருக்கொள்ளுங்கால் இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே இருசாதி மாந்தர்க்குண்டோ? 68 உழைப்பால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றன்னோர் பிழைப்பைக் கெடுத்தாரடி! - சகியே பிழைப்பைக் கெடுத்தாரடி! 69 தொழிலின்றிச் சோறுண்ணாச் சுத்தர் அசுத்தர்என்ப தெழிலற்ற வார்த்தையடி! - சகியே எழிலற்ற வார்த்தையடி! 70 உடல்நோய்கள் அற்றபேரை ஒழுக்கமில் லார்என்பவர் கடலை உளுந்தென்பரோ? - சகியே கடலை உளுந்தென்பரோ? 71 தடையற்ற அன்பினரைச் சண்டாளர் என்றுசொல்லும் கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே கடையர்க்கு வாழ்வேதடி? 72 பழிப்பவர்க் கும்உதவும் பாங்கர் பறையர்என்பார் விழித்துத் துயில்வாரடி! - சகியே விழித்துத் துயில்வாரடி! 73 தழைக்கப் பிள்ளைபெறுவோர் தாழ்வாம்; பிள்ளைக்கையரை அழைப்போர்கள் மேலோர்களாம்! - சகியே அழைப்போர்கள் மேலோர்களாம்! 74 தோள்தான் பொருள்என்போர்கள் தாழ்வாம்; துரும்பெடுக்கக் கூடாதோர் மேலென்பதாம்! - சகியே கூடாதோர் மேலென்பதாம்! 75 மாடா யுழைப்பவர்கள் வறியர்;இந் நாட்டுத்தொழில் நாடாதோர் செல்வர்களோ? - சகியே நாடாதோர் செல்வர்களோ? 76 ஏரிக் கரையினில்வாழ்ந் திருந்து பிறரைக்காக்கும் சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே சேரியர் தாழ்ந்தார்களோ? 77 ஊருக் கிழிந்தோர்காவல்; உயர்ந்தோர் இவர்கள்வாழ்வின் வேருக்கு வெந்நீரடி! - சகியே வேருக்கு வெந்நீரடி! 78 அங்கம் குறைச்சலுண்டோ ஆதித் திராவிடர்க்கே? எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே எங்கேனும் மாற்றமுண்டோ? 79 புங்கவர் நாங்கள்என்பார் பூசுரர் என்பார்நாட்டில் தங்கட்கே எல்லாம்என்பார்! - சகியே தங்கட்கே எல்லாம்என்பார்! 80 ஆதிசை வர்கள்என்பார்; யுஆதிக்குப் பின்யார்?ருஎன்றால் காதினில் வாங்காரடி! - சகியே காதினில் வாங்காரடி! 81 சாதியில் கங்கைபுத்ரர் என்பார்கள் சாட்சி,பத்ரம் நீதியில் காட்டாரடி! - சகியே நீதியில் காட்டாரடி! 82 வேலன்பங் காளியென்பார் வெறுஞ்சேவ கனைக்கண்டால் காலன்தான் என்றஞ்சுவார்! - சகியே காலன்தான் என்றஞ்சுவார்! 83 மேலும் முதலி,செட்டி, வேளாளப் பிள்ளைமுதல் நாலாயிரம் சாதியாம்! - சகியே நாலாயிரம் சாதியாம்! 84 எஞ்சாதிக் கிவர்சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போனாரடி! - சகியே பஞ்சாகிப் போனாரடி! 85 நெஞ்சில் உயர்வாய்த்தன்னை நினைப்பான் ஒருவேளாளன் கொஞ்சமும் எண்ணாததால்! - சகியே கொஞ்சமும் எண்ணாததால்! 86 செட்டி உயர்ந்தோன்என்பான் செங்குந்தன் உயர்வென்பான் குட்டுக்கள் எண்ணாததால்! - சகியே குட்டுக்கள் எண்ணாததால்! 87 செட்டிக்கோ முட்டிநாய்க்கன் சேணியன் உயர்வென்றே கட்டுக் குலைந்தாரடி! - சகியே கட்டுக் குலைந்தாரடி! 88 சேர்த்துயர் வென்றிவர்கள் செப்பினும் பார்ப்பனர்க்குச் சூத்திரர் ஆனாரடி! - சகியே சூத்திரர் ஆனாரடி! 89 தூற்றிட இவ்வுயர்ந்தோர் சூத்திரர் என்றுபார்ப்பான் காற்றினில் விட்டானடி! - சகியே காற்றினில் விட்டானடி! 90 தம்மை உயர்த்தப்பார்ப்பார் சமுகப் பிரிவுசெய்தார் இம்மாயம் காணாரடி! - சகியே இம்மாயம் காணாரடி! 91 பொய்மை வருணபேதம் போனால் புனிதத்தன்மை நம்மில்நாம் காண்போமடி! - சகியே நம்மில்நாம் காண்போமடி! 92 நான்கு வருணம்என்று நவிலும் மனுநூல்விட்டு ஏனைந்து கொண்டாரடி? - சகியே ஏனைந்து கொண்டாரடி? 93 நான்கு பிரிவும்பொய்மை; நான்குள்ளும் பேதம்என்றால் ஊனத்தில் உள்ளூனமாம்! - சகியே ஊனத்தில் உள்ளூனமாம்! 94 சதுர்வர்ணம் வேதன்பெற்றான் சாற்றும்பஞ் சமர்தம்மை எதுபெற்றுப் போட்டதடி? - சகியே எதுபெற்றுப் போட்டதடி? 95 சதுர்வர்ணம் சொன்னபோது தடிதூக்கும் தமிழ்மக்கள் அதில்ஐந்தாம் நிறமாயினர்! - சகியே அதில்ஐந்தாம் நிறமாயினர்! 96 மனிதரில் தீட்டுமுண்டோ? மண்ணிற் சிலர்க்கிழைக்கும் அநீதத்தை என்சொல்வதோ? - சகியே அநீதத்தை என்சொல்வதோ? 97 'புனிதர்என் றேபிறத்தல்' 'புல்லர்என் றேபிறத்தல்' எனுமிஃது விந்தையடி! - சகியே எனுமிஃது விந்தையடி! 98 ஊரிற் புகாதமக்கள் உண்டென்னும் மூடரிந்தப் பாருக்குள் நாமேயடி! - சகியே பாருக்குள் நாமேயடி! 99 நேரிற்பார்க் கத்தகாதோர் நிழல்பட்டால் தீட்டுண்டென்போர் பாருக்குள் நாமேயடி! - சகியே பாருக்குள் நாமேயடி! 100 மலம்போக்கும் குளம்மூழ்கா வகைமக்க ளைநசுக்கும் குலமாக்கள் நாமேயடி! - சகியே குலமாக்கள் நாமேயடி! 101 மலம்பட்ட இடம்தீட்டாம் மக்கள் சிலரைத்தொட்டால் தலைவரைக் கும்தீட்டாம்! - சகியே தலைவரைக் கும்தீட்டாம்! 102 சோமனைத் தொங்கக்கட்டச் சுதந்தரம் சிலர்க்கீயாத் தீமக்கள் நாமேயடி! - சகியே தீமக்கள் நாமேயடி! 103 தாமூழ்கும் குளம்தன்னில் தலைமூழ்கத் தகாமக்கள் போமாறு தானென்னடி? - சகியே போமாறு தானென்னடி? 104 பாதரட்சை யணிந்தாற் பழித்துச் சிலரைத்தாழ்த்தும் காதகர் நாமேயடி! - சகியே காதகர் நாமேயடி! 105 ஓத வசதியின்றி உலகிற் சிலரைதாழ்த்தும் சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே சூதர்க்கு வாழ்வேதடி? 106 தீராப் பகையுமுண்டோ திருநாட்டார்க் குள்ளும்நெஞ்சம் நேராகிப் போனாலடி? - சகியே நேராகிப் போனாலடி? 107 ஓரைந்து கோடிமக்கள் ஓல மிடுங்கால்மற்றோர் சீராதல் இல்லையடி! - சகியே சீராதல் இல்லையடி! 108 தாழ்வில்லை உயர்வில்லை சமமென்ற நிலைவந்தால் வாழ்வெல்லை காண்போமடி! - சகியே வாழ்வெல்லை காண்போமடி! 109 சூழ்கின்ற பேதமெல்லாம் துடைத்தே சமத்துவத்தில் வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! - சகியே வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! 110
ஆலய உரிமை
('ஆறுமுக வடிவேலனே - கலியாணமும் செய்யவில்லை' என்ற காவடிச் சிந்தின் மெட்டு)
கண்ணிகள்
எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென் றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில் அவ்விதம் நோக்க அவிந்தன வோநம் அழகிய நேத்திரங்கள்? 1 திவ்விய அன்பிற் செகத்தையெல் லாம்ஒன்று சேர்த்திட லாகும்அன்றோ? - எனில் அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில் அத்தனை பேரும்ஒன்றே. 2 ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல் லாரும் உடன்பிறப்பே - ஒரு பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி லேஉள்ள தோசிறப்பே? 3 'தேகம் சுமைநமைச் சேர்ந்ததில் லை' என்று செப்பிடும் தேசத்திலே - பெரும் போகம் சுமந்துடற் பேதம்கொண் டோம்;மதி போயிற்று நீசத்திலே. 4 என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி எனக்கிழி வாய்த்தெரியும் - சாதி தன்னை விலக்கிடு மோஇதை யோசிப்பீர் சமுக நிலைபுரியும். 5 என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும் ஏழையர்க் கோர்கடவுள் - எனில் முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள் முளைக்கும் பொதுக்கடவுள். 6 உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென் பீர்மிகத் தாழ்ந்தது தாழ்ந்ததென்பீர் - இவை பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப் பேசிடுவீர் அன்பீர். 7 உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி ஒளிமறைவில் தரத்தான் - மிகப் பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம் பண்ணின தோஅறியேன். 8 சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற் சூழ்வது பூசனையோ - ஒரு சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச் சதியா லோசனையோ? 9 ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர் என்று மதித்ததுவோ? - சாமி நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல் நீரிற் குதித்ததுவோ? 10 மாலய மாக வணங்கிடச் சாமி வந்திடு வார்என்றீரே - அந்த ஆலயம் செல்ல அநேகரை நீக்கி வழிமறித் தேநின்றீரே. 11 ஆலயம் செல்ல அருகரென்ற சிலர் அங்கம் சிறந்தாரோ? - சிலர் நாலினும் கீழென்று நாரி வயிற்றில் நலிந்து பிறந்தாரோ? 12 தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச் சாமி மலைப்பதுண்டோ? - இங்கு வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி வருத்தித் தொலைப்பதுண்டோ? 13 தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் சாமிக்குச் சத்திலையோ? - எனில் வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட மேலும் சமர்த்திலையோ? 14 தன்னை வணங்கத் தகாதவரை அந்தச் சாமி விழுங்கட்டுமே - அன்றி முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி உருவம் மழுங்கட்டுமே. 15 இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி இனத்தினில் பல்கோடி - மக்கள் தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற் சாவது வோஓடி? 16 குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? 17 திக்கெட்டு மேஒரு கோயிலன்றோ? அதில் சேரிஅப்பால் இல்லையே - நாளும் பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர் நம்புவதோ சொல்லையே? 18 தாழ்ந்தவர் என்பவர் கும்பிடு தற்குத் தனிக்கோயில் காட்டுவதோ? - அவர் வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின் வம்பினை மூட்டுவதோ? 19 தாழ்த்தப்பட் டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச் சாற்றிடும் தேசமக்கள் - அவர் வாழ்த்தி அழைக்கும் யுசுதந்தரம்ரு தன்னை மறித்திடும் நாசமக்கள். 20 தாழ்ந்தவ ருக்கும் உயர்ந்தவ ருக்கும்இத் தாய்நிலம் சொந்தம்அன்றோ? - இதில் சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று சொல்லிடும் நீதிநன்றோ? 21 'தாழ்ந்தவர்' என்றொரு சாதிப் பிரிவினைச் சாமி வகுத்ததுவோ? - எனில் வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த வம்பு புகுத்தியதோ? 22 முப்பது கோடியர் பாரதத்தார் இவர் முற்றும் ஒரேசமுகம் - என ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும் ஒப்பாவிடில் என்னசுகம்? 23 இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும் 'யாம்' என்று தற்புகழ்ச்சி - சொல்வர் இப்புறம் வந்ததும் கோயிலி லும்நம் இனத்தைச்செய் வார்இகழ்ச்சி. 24 மாடுண்ப வன்திருக் கோயிலின் வாயிலில் வருவதற் கில்லைசாத்யம் - எனில் ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன் அவனே முதற்பாத்யம். 25 நீடிய பத்தியில் லாதவர் கோயில் நெருங்குவதால் தொல்லையே! - எனில் கூடிஅக் கோயிலில் வேலைசெய் வோருக்கும் கூறும்பக்தி இல்லையே. 26 'சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற் சுவாமியைப் பூசிப்பரோ?' - எனில் நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது யாதுக்கு யோசிப்பிரே. 27 நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி நேரில்அக் கோயிலிலே - கண்டும் ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள் கோயிலின் வாயிலிலே. 28 கூறும் 'உயர்ந்தவர்' 'தாழ்ந்தவர்' என்பவர் கோயிலின் செய்திவிட்டுப் - புவி காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை? காட்டுவீர் ஒன்றுபட்டு. 29 வீறும் உயந்தவர் கோயில் புகுந்ததில் வெற்றிஇந் நாட்டில்உண்டோ? - இனிக் கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில் தீதெனல் யாதுகொண்டோ? 30
ஞாயமற்ற மறியல்
நொண்டிச் சிந்து
என்றுதான் சுகப்படு வதோ! - நம்மில் யாவரும் யுசமானம்ருஎன்ற பாவனைஇல்லை - அந்தோ ஒன்றுதான்இம் மானிடச் சாதி - இதில் உயர்பிறப் பிழிபிறப் பென்பதும்உண்டோ? - நம்மில் அன்றிருந்த பல தொழிலின் - பெயர் அத்தனையும் யுசாதிகள்ருஎன் றாக்கிவிட்டனர் - இன்று கொன்றிடுதே யுபேதம்ருஎனும் பேய்! - மிகக் கூசும்இக் கதைநினைக்கத் தேசமக்களே! - நாம் என்றுதான் சுகப்படு... இத்தனை பெரும் புவியிலே - மிக எண்ணற்ற தேசங்கள் இருப்பதறிவோம் - எனில் அத்தனைதே சத்து மக்களும் - தாம் அனைவரும் யுமாந்தர்ருஎன்று நினைவதல்லால் - மண்ணில் இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம் எட்டுல.ம் சொல்லிமிகக் கெட்டலைவாரோ! - இவர் பித்துமிகக் கொண்ட வர்கள்போல் - தம் பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல்நன்றோ? - நாம் என்றுதான் சுகப்படு... தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத் தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் - எனில் ஈண்டுப்பிற நாட்டில் இருப்போர் - செவிக் கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார் - பல் ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம் அறிவற்ற மாக்கள்என்று கருதப்பட்டோம் - நாம் கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக் கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை - நாம் என்றுதான் சுகப்படு... ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த நாற்றிசைக்கும் ஞானப்புனல் ஊற்றிவந்தவர் - மிகு மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த மேதினியில் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில் மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு யானிவரைக் கேட்கப் புகுந்தால் - இவர் இஞ்சிதின்ற குரங்கென இளித்திடுவார் - நாம் என்றுதான் சுகப்படு... உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம் ஊரைஅடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப் பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள் பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம் வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல வாகனங்கள் போகப்பொருள் அநுபவிக்க - மிக முயல்பவர் தம்மிற் சிலரை - மண்ணில் முட்டித்தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம் என்றுதான் சுகப்படு... உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான் உயர்ந்தவன் என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான் கண்டபடி விலை உயர்த்தி - மக்கள் காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? - சிறு தொண்டு செய்யும் சாதிஎன்பதும் - நல்ல துரைத்தனச் சாதியென்று சொல்லிக்கொள்வதும் - இவை பண்டிருந்த தில்லை எனினும் - இன்று பகர்வது தாங்கள்நலம் நுகர்வதற்கே - நாம் என்றுதான் சுகப்படு... வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த மேதினியை ஆள்பவன் .த்திரியனாம் - மிக நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை நியமித்த வைசியனென் றுயர்வுசெய்தார் - மிக நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு நாத்திறம்அற் றிருந்தவன் சூத்திரன்என்றே - சொல்லி ஆதியினில் மனு வகுத்தான் - இவை அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும்ஒன்றாம் - நாம் என்றுதான் சுகப்படு... அவனவன் செய்யும் தொழிலைக் - குறித் தவனவன் சாதியென மனுவகுத்தான் - இன்று கவிழ்ந்தது மனுவின் எண்ணம் - இந்தக் காலத்தினில் நடைபெறும் கோலமும்கண்டோம் - மிகக் குவிந்திடும் நால்வரு ணமும் - கீழ்க் குப்புறக் கவிழ்ந்ததென்று செப்பிடத்தகும் - இன்று எவன்தொழில் எவன் செய்யினும் - அதை ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம் என்றுதான் சுகப்படு... பஞ்சமர்கள் எனப் படுவோர் - மட்டும் பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ? - இனித் தஞ்சமர்த்தை வெளிப் படுத்தித் - தம் தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ? - இது வஞ்சத்தினும் வஞ்ச மல்லவோ - பொது வாழ்வினுக்கும் இதுமிகத் தாழ்வேயல்லவோ - நம் நெஞ்சத்தினுள் ஈர மில்லையோ? - அன்றி நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ? - நாம் என்றுதான் சுகப்படு... கோரும் யுஇமயாசலரு முதல் - தெற்கில் கொட்டுபுனல் நற்யுகுமரிரு மட்டும்இருப்போர் - இவர் யாருமொரு சாதி யெனவும் - இதில் எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம் பாரதநற் றேவிதனக்கே - நாம் படைமக்கள் எனவும்நம் மிடைஇக்கணம் - அந்த ஓருணர்ச்சி தோன்றிய உடன் - அந்த ஒற்றுமைஅன்றோ நமக்கு வெற்றியளிக்கும்! - நாம் என்றுதான் சுகப்படு... |
8. புரட்சித் திருமணத் திட்டம்
நடத்தும் முறை
[திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற் போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப் பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர் புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல! மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள வர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு குறையும். தலைவர்கட்கும் தொல்லை இராது.] 1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார். 2. இசை: திராவிட நாட்டுப் பண்.** ** திராவிட நாட்டுப் பண் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதியில் உளது 3. மணமக்கள் அவைக்கு வருதல். 4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, புஅவைத் தலைமை தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை வேண்டிக்கொள்கிறேன்மு என்று முன் மொழிதல். 5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, புநாங்கள் ஆதரிக்கிறோம்மு என்று வழிமொழிதல். 6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல். 7. அவைத் தலைவர் முன்னுரை. 8. திருமணம் நடத்துதல்: மணப்பெண், புஇன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன்மு என்று சொல்லல். மணமகனும் அவ்வாறு சொல்லல். அதன்மேல் இருவரும் மாலை மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். புவாழ்கமு என முழங்குதல். 9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல். 10.வரிசை: அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல். இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம். இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில் ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும் பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது. இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம். ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்? ----- பாரதிதாசன்
1 அவையத்தார் அகவல்
வருக வருகென மலர்க்கை கூப்பித் திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத் திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள் அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே! குழலும் முழவும் பொழிந்த இன்னிசை மழையை நிறுத்திஓர் மறவன் எழுந்து,தேன் மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத் திராவிட நாட்டுப்பண் பாடினான்; ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே. மணமக்கள் வருகை மணமகள் தோழிமார் சூழவும், மணமகன் தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது யுஇருக்கரு என்று தோழர் இயம்ப இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.
2 முன் மொழிதல்
மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில் முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்: புதிராவிடநாட்டுப் பெருங்குடி மக்களே, அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே, என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள். இன்று நடைபெற இருக்கும்இத் திராவிடர் புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத் தலைமை தாங்கவும் நிலைமை உயர மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம் நிறைவேற் றவும்பெரி யாரை முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே.
வழி மொழிதல்
அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர், புமுன்மொழிந் தாரின் பொன்மொழி நன்றொப்பு கின்றோம்மு என்றார் இனிதே.
வேண்டுகோள்
முன்மொழிந் தாரும், வழிமொழிந் தாரும் பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி, புஎழுந்தருள்மு கென்றே இருகை கூப்பி மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த இருக்கை காட்டத் தமிழ்ச்சொற் பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே:
3 அவைத்தலைவர்
சேர சோழ பாண்டியர் வழிவரு திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே, அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே, தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன். ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர் ஆதலால், அவரின் வேத மந்திரம் தீது பயப்பன ஆதலால், திராவிடர் வாழு மாறு மனங்கொளார் என்பதும், தாழ இன்னலே சூழுவார் என்பதும், அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால், நம்மொழி, நம்கலை, நம் ஒழுக்கம் நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை மணமுதல், திராவிடர்வாழ்க்கை முறைகளில் இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால் ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ? அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு தொடங்கையில் நடுவிற் சுடு நெருப்பா? தாய்தந் தைமார் தவஞ்செய்து பெற்றனர் தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர் ஒருமனப் பட்ட திருமண மக்களைப் பெரிதின்பம் பெறுக பெறுக என்று வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில் ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை? ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து வாழையடி வாழையாய் வந்த திராவிடர் சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி ஏதுங்கெட்ட பார்ப்புக் கிங்கென்ன வேலை? நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக் கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்? மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில் கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ? தீதிலா மிகப்பல திராவிட மறவர் ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன? கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன? மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத் தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்! இரண்டாம் நாளில் இன்பச் செல்வியைக் கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்! தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில் தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்! நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்! திராவிட மக்களின் செவிஏற்கு மோஇதை? வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில் தமிழர் பண்பு தலைசா யாதோ? தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும் திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ? திராவிடர் புரட்சித் திருமணம் புரிந்தின் புறுக திருமண மக்களே!
வாழ்க்கை ஒப்பந்தம் பஃறொடை வெண்பா
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள் இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக - நீவிர் சான்றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான். "பாவையீரே!* உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள * பாவையீரே - மணமகளாரே. ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக் கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள உறுதி உரைப்பீரோ?" என்று வினவ, உறுதி அவ்வாறே உரைத்தார் மகளாரும். "தோழரே!* பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ? * தோழரே - மணமகனாரே வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ? ஆயின் உறுதி அறிவிக்க!மு என்னவே, தூயர் அவ்வாறே உறுதியும் சொல்லிட வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்! வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்! தாரொன்றைத் தாங்கித்தம் கொழுநர்க்கே சூட்ட நேரிழை யார்க்கும் நெடுந்தா ரவர்சூட்டக் கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றித் துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும் தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்! செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:
அற மொழிகள்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்றார் வள்ளுவனார். இல்வாழ்வில் அன்பும் அறமும் இருக்குமெனில் நல்லதன்மை நல்லபயன் நாளும் அடையுமன்றோ? "மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை" என்றார் வள்ளுவனார்! வாழ்க்கைத் துணைவி மனைக்குரிய மாண்புகொண்டு வாழ்வில் அவனின் வருவாய் அறிந்து செலவு செயல்வேண்டும் என்பது மன்றியும், "தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" என்று சொல்கின்றார். தன்னையும் தக்கபடி காத்துக் கொளல்வேண்டும் தன்கொழுநன் தன்னையும் காத்திடல் வேண்டும் சீர்சால் திராவிடர் பண்பு சிதையாமல் நிற்பவளே பெண்ணாவாள். "மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு" பெறுக. "வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இல்"மற வாதீர். "இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு" தெளிக. மணமகளாரே, மணமகனாரே இணைந்தின் புற்றுநன் மக்களை ஈன்று பெரும்புகழ் பெற்றுநீடூழி இருநிலத்து வாழ்கஇனிது.
நன்றி கூறல் அறுசீர் விருத்தம்
மணமக்கட் குரியார் ஆங்கு வாழ்த்தொலிக் கிடை எழுந்தே, "மணவிழாச் சிறக்க ஈண்டு வந்தார்க்கு நன்றி! இந்த மணஅவைத் தலைமை தாங்கி மணமுடித் தருள் புரிந்த உணர்வுடைப் பெரியார்க் கெங்கள் உளமார்ந்த நன்றி" என்றே கைகூப்பி, அங்கெ வர்க்கும் அடைகாயும் கடிது நல்கி வைகலின் இனிதின் உண்ண வருகென அழைப்பா ரானார்! பெய்கெனப் பெய்த இன்பப் பெருமழை இசையே யாக உய்கவே மணமக்கள் தாம் எனஎழும் உள்ளார் வாழ்த்தே. |
பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி முற்றும்.
|