உணவு பாதுகாப்பு மசோதாவை அமல் படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தின் படி ஏழைகள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் அரிசி, கோதுமை, உணவு தானியங்கள் ஆகியவை மலிவு விலையில் வழங்கப்படும். இதற்கான மசோதாவை கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால், தொடர் அமளி காரணமாக மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தி மசோதாவை நிறைவேற்ற அரசு மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. அவசர சட்டத்துக்கு, டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ஏழைகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் மலிவு விலையில் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும் மற்ற உணவு தானியங்கள் கிலோ ரூ.1,க்கும் வழங்கப்படும். நாட்டின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளி குடும்பங்களுக்கு தலா 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படும். இதற்கு அரசு ரூ.1.25 லட்சம் கோடி செலவிடும்.
|