இன்றைய நிலையில் பெரும்பாலான பொருட்கள் அதன் தரத்தை பார்த்து வாங்குவதில்லை, அந்த பொருட்களுக்காக செய்யப்படும் விளம்பரங்களை பார்த்தும், அந்த விளம்பரங்களில் நடித்தவர்கள் கூறும் வார்த்தைகளை வைத்துதான் அதிகமான வாங்கப்படுகிறது. இப்படி வாங்கும் பெரும்பாலான பொருட்கள் தரமானதாக இருப்பதில்லை என பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு செக்கப் வைக்கிறது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில். அதாவது விளம்பரங்களில் வரும் பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தெரிய வந்தால் அதில் நடித்தவர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமாம்.
தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணை முதல் தரையில் துடைக்கும் மாப்பு வரை சரியாக இல்லாவிட்டால், அதை விளம்பரம் செய்தவரையும், அதில் நடித்தவரையும் நுகர்வோர் கோர்ட்டுக்கு இழுக்க முடியுமாம். மத்திய அமைச்சர் கே.வி. தாமஸின் கீழ் இயங்கி வரும் மத்திய நுகர்வோர் கவுன்சில் இந்த முடிவை திங்கள்கிழமை எடுத்துள்ளது. மேலும் இதற்காக தனியாக துணைக் கமிட்டியை ஏற்படுத்தவும் அது தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தவறான பொருட்களை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரங்கள் குறித்துத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டதாம். குறிப்பாக உணவுப் பொருட்கள், தலையில் பூசும் எண்ணை, சுகாதாரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
|