குழந்தைகள் தொழிலாளர்களாகப் பணி செய்வதைக் கண்டால் 1098 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ராட்சத பலூனை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து பறக்கவிட்டு, குழந்தைகள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதைக் கண்டால் 1098 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மேலும் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பல திட்டங்களைச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளை தொழிலாளர்களாக பணியமர்த்துபவருக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்று கூறினார். குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதென்றும் கூறினார்.
|