சீனா, தனது 3 வது விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன கடற்படையில் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் லியோனிங். இது சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்டது. இயந்திரங்கள் அகற்றப்பட்ட நிலையில் 1998ம் ஆண்டு சீனாவிற்கு இந்த கப்பல் விற்கப்பட்டது.
இதனை வாங்கி புதுப்பித்த சீனா லியோனிங் என பெயரிட்டு 2012ல் தனது கடற்படையில் இணைத்தது. தொடர்ந்து தனது கடற்படையை அதிநவீனமாக்கி வலுப்படுத்தவும் தென் சீனக்கடலில் ஆதிக்கம் செலுத்தவும் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்தது.
மேலும் டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து விமானம் தாங்கி கப்பல் கடந்த மே மாதம் கடலில் பயணத்தை தொடங்கியது. இதற்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. வருகிற 2020ம் ஆண்டு கடற்படையில் இது இணைக்கப்படும்.
இந்த நிலையில், சீனா தனது 3-வது விமானம் தாங்கி கப்பல் தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹா தகவல் வௌியிட்டு உள்ளது. முதல் விமானம் தாங்கி கப்பல் சேர்க்கப்பட்டு 6வது ஆண்டை கொண்டாடும் அதே வேளையில் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலுக்கும் சீனா அடித்தளம் இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|