"டி-20" உலக கோப்பை தொடரில் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி. வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கெய்ல் 75 ரன்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது. இலங்கையில், நான்காவது "டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று கொழும்புவில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, பேட்டிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இரண்டு சிக்சர்கள் அடித்த சாமுவேல்ஸ் 26 ரன்களில் ஆடமிழந்தார். பின் கிறிஸ் கெய்ல் மற்றும் டுவைன் பிராவோ ஜோடி இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை ரன் மழையாக மாற்றினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. கெய்ல் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 சிக்சர், 5 பவுண்டரிகள் அடக்கம். அவுட்டாகாமல் இருந்தார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் 14 சிக்சர், 13 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. பத்ரி வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் 1 ரன்னுடன் வெளியேறினார். மூன்று பவுண்டரி அடித்த மைக்கேல் ஹசி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் 7 ரன்களுடன் வெளியேறினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 16.4 ஓவரில் 131 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக டி-20 உலககோப்பை போட்டியில் பைனலுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பெற்றார். நாளை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
|