கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கனெக்டிகட் தமிழ் மையம் துவக்க விழா நியூ ஹெவன் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்கத் நாட்டுப்பண்ணுடன் தொடங்கிய இவ் விழாவில் தமிழ் மையத்தின் தலைவரும் நிறுவனருமான முனைவர் பழனி சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா வாழ்த்துரை வழங்கினார். நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். என். கிருஷ்ணன் தமிழ் மையத்தை வாழ்த்தியும் கலை நிகழ்ச்சி நடத்திய லக்ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினர் மற்றும் பின்னணிப் பாடகர்களைப் பாராட்டியும் உரை நிகழ்த்தினார். நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் காஞ்சனா பூலா மற்றும் கனெடிகட்டைச் சார்ந்த ஸ்ரீமதி ராகவன் ஆகியோர் இந் நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினர்.
இவ் விழாவிற்கு கனெடிகட், நியூ யார்க், நியூ ஜெர்சி, மேசசுசெட்ஸ் மற்றும் மேரிலாந்து போன்ற பல்வேறு மாகாணங்களிலிருந்து தமிழ்ப் பெருங்குடி மக்கள் பெருந்திரளாக வருகை புரிந்திருந்தனர். லக்ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவின் தலைவர் லக்ஷ்மன் மற்றும் பின்னணிப் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஹரிசரண், விஜய பிரகாஷ், சுசித்ரா, ஆனந்த், கல்பனா ஆகியோர் ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். முனைவர் பழனி சுந்தரம் வரவேற்புரையாற்றுகையில், இந்தத் துவக்க விழாவை பல தடைகளைக் கடந்துதான் ஏற்பாடு செய்ய முடிந்ததென்றும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மேரி க்யுரி போன்ற விஞ்ஞானிகள் கூட பல தடைகளுக்குப் பிறகுதான் வெற்றி அடைய முடிந்தது என்றும் கூறினார். எனவே, இந்தத் தமிழ் மையமும் எதிர் காலத்தில் வெற்றி நடை போட்டுத் திகழும் என்று கூறினார். இது அமெரிக்காவிலேயே முதல் தமிழ் மையம் என்றும் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். முனைவர் முத்துவேல் செல்லையா தமது வாழ்த்துரையில், இதன் நோக்கங்களும் திட்டங்களும் விரைவில் வடிவமைக்கப்படும் என்றும், இதை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்ல தாம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழ்த் தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கு உதவித் தொகை வழங்க எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார். டாக்டர் எம். என். கிருஷ்ணன் தமது வாழ்த்துரையில், கனெக்டிகட் தமிழ் மையம் மேலும் மேலும் வளர தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இது போன்ற மிகச் சிறந்த கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முனைவர் சுந்தரம் மற்றும் குழுவினரைப் பாராட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் இசைக் கலைஞர்களுக்கும் பின்னணிப் பாடகர்களுக்கும் கனெடிகட் தமிழ் மையத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. இத்தமிழ் மைய துவக்க விழாவிற்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வாழ்த்துச் செய்தி அனுப்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|