மானநஷ்ட வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..
டெல்லியில், பாஜக தலைவர்களுள் ஒருவரான, விஜேந்தர் குப்தா, முதல்வர் ஷீலா தீட்சித்தை, டெல்லி மக்களை ஏமாற்றியவர் என்றும், வேதாளம் என்றும் விமர்சித்துள்ளார்.. இதனை அடுத்து, தன்னை கடுமையாக விமர்சித்ததாக கூறி, விஜேந்தர் குப்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் முதல்வர் ஷீலா தீட்சித். இந்த வழக்கில், நேற்று, விஜேந்தர் குப்தாவின் வழக்கறிஞர் ஷீலா தீட்சித்திடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது ஷீலா தீட்சித் ஆஜராகவில்லை. அப்போது, ஷீலா தீட்சித் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘எனது கட்சிக்காரருக்கு சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முக்கியமான பணிகள் உள்ளதால் அவரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை' என நிதிபதியிடம் தெரிவித்தார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட போதும், ‘குறிப்பிட்ட நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக தவறிய ஷீலா தீட்சித் மறுமுறை கோர்ட்டில் ஆஜராகும் போது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
|