|
|||||
2 மணி நேரத்தில் துபாய்-இந்தியா பயணம் - கடலுக்கு அடியில் ரயில் சேவை தொடங்கத் திட்டம் |
|||||
இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமானப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்லக் குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது. இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத் தேசிய ஆலோசனைக் குழு புதிய திட்டம் ஒன்றை பரிசீலனையில் வைத்துள்ளது. அதன்படி துபாய் மற்றும் மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரயில் போக்குவரத்தும் இணையவுள்ளது. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் துபாயிலிருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும். இந்தப் பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறையச் சவால்களும் உள்ளன. ரயில் வேகமாகப் பயணிக்கும் போது ரயில் பாதையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்தப் பாதையில் ரயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளைப் பயணிகள் பார்க்கும் வகையில் ரயில்களைக் கண்ணாடி மூலம் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும். துபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாகச் சரக்கு போக்குவரத்தைக் கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப் புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படும். இதைத் திட்ட ரீதியாகத் தயார் செய்துவிட்டார்கள். இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா-துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும். பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்தத் திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|||||
by hemavathi on 03 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|