LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- மகுடபதி

ஏமாற்றம்

                                                                  ஏமாற்றம் 


கார்க்கோடக் கவுண்டர் டார்ச்சு லைட்டுடன் போன பிறகு, சற்று நேரம் வரையில் மகுடபதி சிந்தனா சக்தியையே இழந்திருந்தான். சிறிது சிறிதாக, அவனுடைய மனம் யோசிக்கும் சக்தியைப் பெற்றது. இன்று காலையில் அவன் கிராமத்திலிருந்து கிளம்பிய போது, அன்று இரவுக்குள் தனக்கு இத்தகைய சம்பவங்கள் நேருமென்று யாராவது சொல்லியிருந்தால், இடிஇடியென்று சிரித்திருப்பான். அவ்விதம் சொன்னவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகும்படி கூறியிருப்பான்.

     அவனுடைய மனோ நிலைமையில் இப்போது பயங்கரம் அதிகமாயிருந்ததா, அதிசயம் அதிகமாயிருந்ததா, அல்லது கவலைதான் அதிகமா என்று சொல்வதற்கியலாமலிருந்தது. செந்திருவைப்பற்றி எண்ணியபோது உள்ளத்தில் கவலை மீறியது. ஐயோ! பாவிகள் அவளை எங்கே கொண்டு போனார்களோ? என்ன செய்யப் போகிறார்களோ? பலவந்தமாகக் கல்யாணம் நடந்து விடுமோ? அந்தத் தீரப் பெண் அதற்குச் சம்மதிப்பாளா? சம்மதியாமல் அவள் பிடிவாதம் பிடித்தால் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ? சமயத்தில் போய்க் கல்யாணத்தைத் தடுத்து அவளை மீட்டுக் கொண்டு வரும் சக்தியைக் கடவுள் தனக்கு அளிப்பாரா?

     தான் இன்னும் உயிரோடிருப்பதே கடவுளுடைய செயல்தான்! தன் மேல் பாய வேண்டிய கத்தியல்லவா பெரியண்ணன் மேல் பாய்ந்தது? - ஆஹா! சத்தியாக்கிரகம், அஹிம்சை என்றெல்லாம் பேசுகிறோமே? உண்மையான அஹிம்சா தர்மி - சத்தியாக்கிரகி - பெரியண்ணன் அல்லவா? தன்னுடைய உயிரை இன்னொருவனுக்காகக் கொடுக்கத் துணிந்தானே!

     ஆனால், பெரியண்ணன் நிஜமாகவே இறந்து போய் விட்டானா? தன் பக்கத்திலே இருக்கும் பெரியண்ணனுடைய உடல் உயிரற்ற சவமா? ஒரு கத்திக் குத்தில் பிராணன் போயிருக்குமோ? உடனே வைத்தியரைக் கூட்டி வந்து சிகிச்சை செய்தால், ஒருவேளை அவன் பிழைத்தாலும் பிழைக்கலாம் அல்லவா? - அடடா! பாவிகள் தன்னை இப்படிக் கட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்களே...!

     மகுடபதி, கட்டை அவிழ்த்துக் கொள்ளும் பொருட்டு இப்படியும் அப்படியுமாகத் திமிறினான். சோபாவும் அவன் கூட வந்ததே தவிரக் கட்டு அவிழவில்லை. அப்புறம், கைகளினால் முடிச்சு எங்கே இருக்கிறதென்று தேடத் தொடங்கினான். அப்போது அவனுடைய மனதில், "ஆஹா! கிழவனுடைய உயிர் மட்டும் போயிருக்கட்டும். எப்படியாவது பழிக்குப் பழி வாங்கியேயாக வேண்டும். அஹிம்சையாவது மண்ணாங் கட்டியாவது! இப்பேர்ப்பட்ட பாதகர்களை இப்பூவுலகில் இல்லாதபடி செய்வதே பெரிய புண்ணியம்" என்று எண்ணினான். கயிற்றின் முடிச்சு எங்கே இருக்கிறதென்று அவன் தேடிய போது பெரியண்ணனுடைய உடல் மேல் கைபட்டது. அவனுடைய உடம்பு ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது அது பிரேதமா, உயிருள்ள உடலா? - இதைத் தெரிந்து கொள்ளும் ஆவலினால் நடுங்கிக் கொண்டே மறுபடியும் உடம்பு தட்டுப்பட்டது. பிரேதமானால் ஜில்லிட்டிருக்கு மென்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இந்த உடம்பு ஜில்லென்று இல்லை; சிறிது சூடு இருப்பதுபோல் தோன்றியது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். மிகமிக இலேசாக மூச்சுவிடும் சப்தம் கேட்பது போலிருந்தது.

     உடனே, மகுடபதியின் பரபரப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. எப்படியாவது ஓடிப்போய் டாக்டரை, அழைத்து வந்து பெரியண்ணனைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால்... கார்க்கோடக் கவுண்டர் போகும்போது சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்தன. "ஜெயிலுக்கும் போகலாம்! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்!" இந்த வார்த்தைகளின் அர்த்தம் பளிச்சென்று இப்போது அவனுக்குப் புலனாயிற்று. கார்க்கோடக் கவுண்டர் போலீஸாரை அழைத்து வருவார். தன்னைக் கைது செய்வார்கள். பெரியண்ணனைக் கொலை செய்ததாகத் தன் பேரில் கேஸ் நடக்கும்! கவுண்டர்களே சாட்சி சொல்வார்கள்! குற்றம் ருசுவாகிவிடும்! தன்னைத் தூக்கு மேடையில் ஏற்றுவார்கள்! - தன்னுடைய பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் பேச்சுத்தான் எடுபடும்!... பெரியண்ணனுடைய உயிரைக் காப்பாற்றினாலொழிய, தான் தூக்குமேடை ஏற வேண்டியதுதான்! அப்போது செந்திருவின் கதி என்ன ஆகும்?...

     மகுடபதி, வெறி பிடித்தவனைப்போல் அப்படியும் இப்படியுமாகத் திமிறினான். 'பட்' என்று சப்தம் கேட்டது. சற்று நிதானித்துப் பார்த்தபோது அந்தப் பழைய சோபாவின் கால் இவன் இழுத்த இழுப்பில் முறிந்து விட்டது என்று தெரிந்தது. உடனே துள்ளிக் குதித்து எழுந்தான். கயிற்றைக் கீழே தளர்த்திக் கொண்டு வந்து, கடைசியில் கட்டிலிருந்து விடுபட்டான்.

     கிழவனை மறுபடியும் தொட்டுப் பார்த்தான்; சூடு இருந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டு மச்சுப் படியை அடைந்து கீழே இறங்கினான். கீழே நடையில், புகையடைந்த அரிக்கன் லாந்தர் முன் போலவே எரிந்து கொண்டிருந்தது. வாசல் கதவை இழுத்துப் பார்த்தான். திறக்கவில்லை. வாசற்புறம் கதவைப் பூட்டிக் கொண்டுதான் அவர்கள் போயிருக்க வேண்டும். ஆகையால், அந்தக் கதவைத் திறக்க முயல்வதில் உபயோகமில்லை. கையில் லாந்தரை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறத்தை நோக்கி விரைந்து நடந்தான். நாலு கதவுகளைத் திறந்து தாழ்ப்பாளையும் திறந்து கொண்டு வெளியே வந்தான். அது சிறு சந்து என்று தெரிந்தது. லாந்தரை உட்புறம் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் நாதாங்கி போட்டுக் கொண்டு, தனக்குத் தெரிந்தவரான டாக்டர் புஜங்கராவின் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான்.

     சுமார் ஒரு மைல் தூரம் நடந்து, அவன் டாக்டர் புஜங்கராவின் வீட்டை அடைந்தபோது நள்ளிரவு இருக்கும். படபடவென்று கதவைத் தட்டினான். புஜங்கராவ் தேசியப் பற்றுள்ள டாக்டர்; காங்கிரஸ் அபிமானி. அன்று சாயங்காலம் போலீஸ் தடியடியினால் காயமடைந்த தொண்டர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்துவிட்டு, அரைமணி நேரத்துக்கு முன்பு தான் அவர் வீட்டுக்கு வந்து படுத்தார். அதற்குள் யாரோ வந்து கதவை இடிக்கவே, தொண்டர் யாருக்காவதுதான் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு, அவர் வந்து கதவைத் திறந்தார்.

     மகுடபதியைப் பார்த்ததும், "ஓகோ! யார் மகுடபதியா? நீ எப்போது வந்தே? சாயங்காலமெல்லாம் உன்னைக் காணவில்லையே!" என்றார்.

     மகுடபதி பதறிய குரலில் "டாக்டர்! டாக்டர்! உடனே வரவேணும். ஒரு உயிரைக் காப்பாற்றவேணும். அதோடு என்னையும் தூக்குமேடைக்கு போகாமல் காப்பாற்ற வேணும்" என்றான். அவனுடைய பதட்டத்தையும், முகத்தில் தோன்றிய பீதியையும் பார்த்து, குழறிய வார்த்தைகளையும் கேட்ட டாக்டருக்கு அவனுடைய மண்டையில் போலீஸ் அடி பட்டதினால் மூளை குழம்பி விட்டதோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.

     "மகுடபதி! இப்படி உள்ளே வா! என்ன விஷயம்? யாருக்கு என்ன உடம்பு? நிதானமாய்ச் சொல்லு."

     "நிதானமாய்ச் சொல்வதற்கு இது சமயமில்லை, ஸார்! நீங்கள் கிளம்புங்கள். போகும்போதே சொல்கிறேன்" என்றான் மகுடபதி.

     "என்ன கேஸ் என்று தெரியாமல் எப்படியப்பா கிளம்புகிறது? தெரிந்தால்தானே அதற்குத் தகுந்த ஆயுதங்களுடன் கிளம்பலாம்?" 

     "கத்திக் குத்து, டாக்டர், பெரியண்ணன் தெரியுமோ, இல்லையோ பெரியண்ணன்? அவன் மார்பிலே கத்திக் குத்து, இன்னும் உயிர் இருக்கிறது? டாக்டர்! சீக்கிரம் கிளம்புங்கள்."

     கத்திக்குத்து என்றதும் டாக்டருடைய தயக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது. விவரமாய்ச் சொன்னால் தான் கிளம்ப முடியும் என்றார். அதன் மேல் மகுடபதி அவசர அவசரமாக அன்று சாயங்காலம் முதல் தனக்கு நேர்ந்தவைகளை ஒரு மாதிரி சொல்லி முடித்தான்.

     எல்லாவற்றையும் கேட்டு, விஷயத்தை ஒருவாறு தெரிந்துகொண்ட புஜங்கராவ், "அப்பா! மகுடபதி! இது டாக்டர் கேஸ் மட்டுமல்ல; இது போலீஸ் கேஸ். ஏற்கனவே நம் பேரில் போலீஸாருக்குக் 'காட்டம்' இருக்கிறது. இந்தமாதிரி விஷயத்தில் அவர்கள் இல்லாமல் தலையிட்டோ மானால், ஆபத்தாய் முடியலாம். முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்கிருந்து போலீஸ் அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு நீ சொல்லும் வீட்டிற்குப் போவோம்" என்றார். வேறு வழியில்லாமல் மகுடபதி ஒத்துக் கொண்டான்.

     டாக்டர் புஜங்கராவ், மோட்டார் டிரைவர் போய் விட்டபடியால், காரைத் தாமே எடுத்து மகுடபதியையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். மகுடபதி மட்டும் போய் மேற்படி கதையைச் சொல்லியிருந்தானானால், என்ன நடந்திருக்குமோ, எப்படியாகி யிருக்குமோ, தெரியாது. டாக்டரும் கூடப் போயிருந்த படியால், ஒரு போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களும் டாக்டரின் வண்டியிலேயே கிளம்பினார்கள்.

     அனுமந்தராயன் சந்தில், குறிப்பிட்ட வீட்டு வாசலில் போய் வண்டி நின்றது. எல்லாரும் அவசரமாய் இறங்கினார்கள். வாசற் கதவு பூட்டியிருந்தது.

     "இந்த வீட்டு மச்சிலேதான் கிழவன் குத்துண்டு கிடக்கிறான். சீக்கிரம், சீக்கிரம்!" என்றான் மகுடபதி.

     "கதவு பூட்டியிருக்கிறதே!" என்றார் இன்ஸ்பெக்டர்.

     "பூட்டை உடைத்தால் போகிறது!" 

     "பூட்டை உடைப்பதற்கு ரூல் இல்லயே தம்பி!"

     "அப்படியானால் வாருங்கள்; கொல்லைப் புறமாகப் போகலாம்."

     கார் மறுபடியும் கிளம்பிற்று. கொல்லைப்புறச் சந்து ரொம்பக் குறுகலா யிருந்தபடியால், வண்டியைச் சற்றுத் தூரத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தார்கள். மகுடபதி எல்லாருக்கும் முன்னால் விரைவாக ஓடினான். மற்றவர்கள் வருவதற்குள் வெளி நாதாங்கியைக் கழற்றிக் கதவைத் திறந்து உள்ளே போய், அவன் வைத்த இடத்திலேயே இருந்த அரிக்கன் லாந்தரைத் தூண்டிவிட்டு எடுத்துக் கொண்டான். எல்லாரும் வீட்டினுள் பிரவேசித்து வாசல் கடைக்கு வந்து மச்சு மேலும் ஏறினார்கள்.

     மகுடபதி, பெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறதோ இல்லையோ என்ற அசாத்திய கவலையுடன், மச்சு ஏறியதும், லாந்தரைத் தூக்கிப் பிடித்தான். 

     அவனுடைய இருதயம் ஒரு நிமிஷம் நின்றே போயிற்று. ஏனெனில், சோபாவுக்குப் பக்கத்தில் அவன் எதிர்பார்த்த இடத்தில் பெரியண்ணனுடைய உடலைக் காணவில்லை!

     ஹாலில் சுற்று முற்றும் பார்த்தான். எங்கும் காணவில்லை. ஓடிப்போய்த் தான் ஒளிந்திருந்த அறைக்குள் பார்த்தான். அங்கும் இல்லை. 

     சோபாவுக்குப் பக்கத்தில் சென்று தரையில் இரத்தக் கறை இருக்கிறதா என்று குனிந்து தேடினான். அதுவும் இல்லை. சட்டென்று பெரியண்ணன் சமுக்காளத்தில் விழுந்து கிடந்தான் என்பது நினைவு வந்தது. சமுக்காளத்தையே காணோம். அவர்கள் டிபன் சாப்பிட்ட பொட்டணக் காகிதம், ஜலம் இருந்த கூஜா ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அந்த வீடுதானா என்பதே மகுடபதிக்குச் சந்தேகமாகி விட்டது. மேஜை நாற்காலிகளும், கால் ஒடிந்த சோபாவும், அந்த வீடுதான் என்ற உறுதியை அவனுக்கு உண்டாக்கின.

     இன்னொரு அடையாளமும் இருந்தது. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்தபோது மண்ணெண்ணெய் கொட்டிற்றல்லவா? அந்தக் கறையும், நாற்றமும் இருந்தன.

     ஆனால், பெரியண்ணன் என்னவானான்? அல்லது அவனுடைய உடல் என்னவாயிற்று? மாயமாய் அல்லவா மறைந்து போயிருக்கிறது?

     "என்ன தம்பி! 'ஜோக்' பண்ணினாயா?" என்று ஸப்-இன்ஸ்பெக்டர் ஏளனமும் கோபமும் கலந்த குரலில் கேட்டார்.

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.