ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.
தேவநேயப் பாவாணர் உரை:
தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான்- தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் இயல்பில்லாதவனாய்; தான்துவ்வான் -அதன்மேல் தானும் நுகராதவனாயிருப்பவன்; பெருஞ்செல்வம் ஏதம் -அவ்விரண்டுஞ் செய்தற் கேற்ற தன் பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோயாவன். செல்வத்தின் பயன்படுந் தன்மையை நோய் போற் கெடுத்தலின், ' நோய் ' என்றார். ' தக்கார் ' அந்தணர்,அடியார்,புலவர் முதலியோர் ' தக்கார் என்றதனால் , ' தகுதியில்லார்க்கு ஈதல் தவறென்பது பெறப்படும். ' ஏதம்' ஆகுபெயர். எச்சவும்மை தொக்கது.இனி, அவ்விரு பயனும் கொள்ளாதவனது பெருஞ் செல்வம் துன்பமே தரும் என்பது அத்துணைச் சிறந்த தன்று.