தமிழக அரசு இலவச திட்டங்கள் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளை நெறிப்படுத்த விதிமுறைகளை உருவாக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தேர்தல் கமிஷன், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இன்று டெல்லியில் அந்த கூட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளிடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கருத்துக்களை கேட்டனர்.
இலவச பொருட்கள் வழங்க, தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகள் பற்றி கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்களை திசை திருப்பும் வகையில் இருக்கக்கூடாது என்று பல்வேறு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இலவச திட்டங்களால் மாநில அரசின் மற்ற வளர்ச்சி திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்றும் கூறப்பட்டது. இந்த பரிந்துரைகள் மீது தேர்தல் கமிஷன் விரிவான ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் இலவச திட்டங்களை அறிவிப்பதற்கான விதிமுறைகள் இயற்றப்படும். 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக இந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|