LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பதினோராம் திருமுறை-10

5.1. கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி



302     சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் -சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.     1

303     
பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான்
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடவரம் சூழ்ந்தணிந்த அம்மானுக்
காளாகப் பெற்றேன் அடைந்து.     2

304     
அடைந்துய்ம்மின் அம்மானை உம்ஆவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றம் - குடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்
தண்ணலே கண்டீர் அரண்.     3

305     
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் சரணமே
காணுமால் உற்றவன்றன் காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது.     4

306     
பெரியவர்கா ணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்துந் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த திடம்.     5

307     
இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே ஆனால் - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெங் காளத்தி ஆள்வார்க்
கொருவடிவே அன்றால் உரு.     6

308     
உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற் கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு
மாக்கயிலை என்னும் மலை.     7

309     
மலைவரும்போல் வானவருந் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி -நிலைதளரக்
கண்டமையால் நண்சாரல் காளத்தி ஆள்வார்நஞ்
சுண்டமையால் உண்டிவ் வுலகு.     8

310     
உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலகம் எனப்பெறினுஞ் சீசீ - இலகியசீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசா திருப்பார் பிறப்பு.     9

311     
பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலுஞ் சீசீ - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார்
அடியாரைப் பேணா தவர்.     10

312     
அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி
எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழது.     11

313     
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.     12

314     
கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.     13

315     
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்டு
ஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து.     14

316     
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர்
அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை.     15

317     
நிலையிற் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் - தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தேஇப் பாசத்தை விட்டு.     16

318     
பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழேஎன்
நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக்
காக்குமா றித்தனையே காண்.     17

319     
காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்தன் பொற்பாதம் - நாணாதே
கண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் தன்னை ஒருங்கு.     18

320     
ஒருங்கா துடனேநின் றோரைவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் -நெருங்கிக்
கருங்கலோங் கும்பல் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.     19

321     
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.     20

322     
கழிந்த கழிகிடாய் நெஞ்சே கழியா
தொழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை
நண்ணுதலாம் நன்மை நமக்கு.     21

323     
நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே அறிவர் -அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.     22

324     
வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்
டாழ்த்துவாய் அதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.     23

325     
கடநாகம் ஊடாடுங் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க் கில்லை - இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்திங் கீண்டிற்றுக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழலு மாறு.     24

326     
மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும் இதுவல்லால் -தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.     25

327     
இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் -முனிவாய்ப்
பிணங்கிவருந் தண்சாரற் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.     26

328     
மகிழந்தலரும் வன்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணிறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.     27

329     
பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானாள் ஏபாவம் - மாசுனைநீர்க்
காம்பையலைத் தாலிக்குங் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.     28

330     
போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு.     29

331     
காட்டில் நடமாடிக் கங்காள ராகிப்போய்
நாட்டிற் பலிதிரிந்து நாடோறும் - ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.     30

332     
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல்
பாலுகுத்த மாணிக்குப் பண்டு.     31

333     
பண்டிதுவே அன்றாயிற் கேளீர்கொல் பல்சருகு
கொண்டிலங்கத் தும்பிநூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.     32

334     
செய்த சிறப்பெண்ணில் எங்குலக்குஞ் சென்றடைந்து
கைதொழுவார்க் கெங்கள் கயிலாயர் -நொய்தளவிற்
காலற்காய்ந் தார்அன்றே காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.     33

335     
பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதாவா காளத்தி நம்பாவா என்றென்று
மாதாவா உற்ற மயல்.     34

336     
மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒருமூன்
றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
இருப்பதவா உற்றாள் இவள்.     35

337     
இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடிஇவள்மேற் சாத்தி - இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் துயர்.     36

338     
துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு.     37

339     
விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி ஆள்வார்- வளைவில்
திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து.     38

340     
வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
தெம்பெருமான் ஓரஞ் செழுத்து.     39

341     
அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகள் ஆவனவும்
அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
காளத்தி யார்யார்க்குங் காண்டற் கரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி.     40

342     
நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன்
றறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியிற்
கனைத்தருவி தூங்குங் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.     41

343     
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ -சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சுந் தண்சாரற் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.     42

344     
அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம் ஈசன் -பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்
திம்மையே தீர்க்கும் இடர்.     43

345     
இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.     44

346     
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே போலும் - இணரிற்
கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயாய்
இனியவா காண்நின் இயல்பு.     45

347     
நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவும் ஆனால் உரை.     46

348     
உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் -புரையின்றிச்
சென்றவா றோங்குந் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.     47

349     
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றன்
மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த
கணியாருந் தண்சாரற் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு.     48

350     
பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று.     49

351     
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி -வற்றாவாங்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.     50

352     
மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற
தென்செய்வான் எந்தாய் இயல்பு.     51

353     
இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால்
ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.     52

354     
இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
தான்நாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார்
வான்ஆள மண்ஆள வைத்து.     53

355     
வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே
நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால்
எக்காலத் தெப்பிறவி யான்.     54

356     
யானென்று தானென் றிரண்டில்லை என்பதனை
யானென்றுங் கொண்டிருப்பன் ஆனாலும் - தேனுண்
டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தெளிகொடான் மாயங்கள் செய்து.     55

357     
மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல் கணக்கன்று -காயமே
நிற்பதன் றாதலாற் காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.     56

358     
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதந் தொழு.     57

359     
தொழுவாள் பெறாளேதன் தோள்வளையுந் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.     58

360     
பெண்ணின் றயலார்முன் பேதை பிறைசூடி
கண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமந்தா மற்றிவளைச் சார்ந்து.     59

361     
சார்ந்தாரை எவ்விடத்துங் காப்பனவுஞ் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் -கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்.     60

362     
தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென்
றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்
தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ
கூத்தாடல் மேவியவா கூறு.     61

363     
கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லனவே - நீல் தாவு
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திறம்.     62

364     
ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்
மாசில் நிறத்த மடக்குருகே - கூசி
இருத்தியால் நீயும் இருங்கயிலை மேயாற்
கருத்தியாய்க் காமுற்றா யாம்.     63

365     
காமுற்றா யாம்அன்றே காளத்தி யான்கழற்கே
யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து
ஞாலத் துயிரெல்லாங் கண்துஞ்சும் நள்ளிருள்கூர்
காலத்துந் துஞ்சாதுன் கண்.     64

366     
கண்ணுங் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்
றெண்ணி இருப்பன்யான் எப்பொழுதும் - நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல் நெஞ்சே அவர்.     65

367     
நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண் டருள் செய்வார் - நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர்.     66

368     
அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக் காத் தாண்டு - புலர்காலத்
தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.     67

369     
கோத்த மலர்வாளி கொண் டநங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.     68

370     
வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர்
செந்தறுகண் கேழல் திறம்புரிந்து -வந்தருளும்
கானவனாம் கோலம்யான் காணக் கயிலாயா
வானவர்தங் கோமானே வா.     69

371     
வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்
தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்குங்
காண்டாற் கரியராய்க் காளத்தி ஆள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று.     70

372     
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்குஞ் சேயராய்
என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று
கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க் கிவர்.     71

373     
இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவரல்லர் என்றிருக்க வேண்டா -கவராதே
காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி ஆள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே ஆம்.     72

374     
ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலே
தாமின்று வீழ்கை தவமன்று - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு.     73

375     
அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகிலி ஆடுதலும் போம்.     74

376     
போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால்
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.     75

377     
வேறேயுங் காக்கத் தகுவேனை மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்
அன்பா அடியேற் கருளா தொழிகின்ற
தென்பாவ மேயன்றோ இன்று.     76

378     
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்
கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என்
உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பஞ் செய்.     77

379     
செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் -பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.     78

380     
போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்
ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால்
கண்டார் வணங்குங் கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந் தென்குழற்கே வா.     79

381     
வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஓவாதே
பூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக்
கோமான் வரவொருகாற் கூவு.     80

382     
கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்
றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்
அன்பாற் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பாற்பால் வேண்டுதலுந் தான்.     81

383     
தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்
ஆனால்மற் றார்இதனை அன்றென்பார்- வானோர்
களைகண்தா னாய்நின்ற காளத்தி ஆள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து.     82

384     
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்
கிடந்தார் வலியெலாங் கெட்டு.     83

385     
கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல்
பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
கலந்தரனார் காளத்தி ஆள்வார்மேற் சென்று
சலந்தரனார் பட்டதுவுந் தாம்.     84

386     
தாம்பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது.     85

387     
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
எத்தனையுஞ் சேய்த்தாக என்று.     86

388     
வென்றைந்துங் காமாதி வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை
மானுடையான் என்னை உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள்.     87

389     
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டங் கடந்துருவித் -தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்குந் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.     88

390     
நடமாடுஞ் சங்கரன்தாள் நான்முகனுங் காணான்
படமாடு பாம்பணையான் காணான் - விடமேவும்
காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவை
யாரே அறிவார் இசைந்து.     89

391     
இசையுந்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடலே கூடு.     90

392     
கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அடகயில ஆரமுதை விட்டு.     91

393     
விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயில்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாதாம்
கள்ளலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம்.     92

394     
மனமுற்றும் மையலாய் மாதரார் தங்கள்
கனமுற்றுங் காமத்தே வீழ்வர் -புனமுற்
றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
தனக்குறவு செய்கலார் தாழ்ந்து.     93

395     
தாழ்ந்த சடையுந் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் - சேர்ந்து
நெருக்கிவா னோர்இறைஞ்சுங் காளத்தி யாள்வார்க்
கிருக்குமா கோலங்கள் ஏற்று.     94

396     
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்குங் கயிலாயத் தெம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.     95

397     
ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல
படுகின்ற வண்ணம் பணி.     96

398     
பணியாது முன்னிவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன் - அணியும்
கருமா மிடற்றெங் கயிலாயத் தெங்கள்
பெருமான தில்லை பிழை.     97

399     
பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.     98

400     
வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்
பரமாஉன் பாதார விந்தம் - சிரமார
ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும்
வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று.     99

401     
மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே
கற்றைச் சடைஅண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.     100



திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.