|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 5- பகுதி 2- குறலோடு உறவாடு - பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி - பரிமேலழகர் உரைத்திறன் |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 5- பகுதி 2- குறலோடு உறவாடு - பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி - பரிமேலழகர் உரைத்திறன் திருக்குறள் உரைகளின் முதல் ஆய்வறிஞர்: பரிமேலழகர் உரைத்திறனைக் குறித்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள். திருக்குறள் குறித்த உரைகளின் முதல் ஆய்வறிஞர் இவரே ஆவார். இதற்காக பரிமேலழகர் குறித்து எழுதப்பட்ட நூல்களையும், பரிமேலழகர் உரை குறித்து மறுப்பாக எழுதப்பட்ட நூல்களையும் ஆராய்ந்தார். பரிமேலழகர் உரையின் உரை நுட்பங்களை தொகுத்தார். ‘பரிமேலழகர் உரையகராதி’ கொண்டு வந்தார். ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்ற நூலை வெளியிட்டார். பதிப்பிப்பதில் நேர்மை: தமிழிலக்கியங்களில் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட நூல் திருக்குறள் தான். 1812ல் தஞ்சை அம்பலவாணத் தம்பிரான் பதிப்பித்தார். தொல்காப்பியத்தை சி.வை. தாமோதரம்பிள்ளை 1847ல் முதன்முதலில் பதிப்பித்தார். கலித்தொகையை முதன்முதலில் 1887ல் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியான சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், தான் பதிப்பித்த நூலில் ‘ஏதேனும் பிழை கண்டால் ஒரு வெண்பொற்காசு பரிசு’ எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு நேர்த்தியாக பதிப்பித்துள்ளார். அந்த நேர்மை பதிப்புத்துறைக்கு வேண்டும் என பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார். திருக்குறளை திருத்துவதா? ஹாபர் ஸ்காட் என்பார் சுகாத்தியார் என்று தம்பெயரை தமிழ்படுத்திக் கொண்டு திருக்குறளை கற்று திருக்குறளில் சில மாற்றங்கள் செய்தார். அதாவது குறட்பாக்களில் சிறு மாற்றங்கள் செய்ததோடு, திருக்குறள் வைப்பு முறையிலும் சில மாற்றங்கள் செய்தார். அறத்துப்பாலின் சில குறட்பாக்களை பொருட்பாலிலும், பொருட்பாலின் சில குறட்பாக்களை இன்பத்துப்பாலிலும், இன்பத்துப்பாலின் சில குறட்பாக்களை அறத்துப்பாலிலும் வைத்தார். இந்த மாற்றங்களை ஒரு நூலாக்கி, அதற்கு ‘திருக்குறளும் சுகாத்தியார் எழுதிய கருத்துரை அட்டவணையும்’ என்று பெயரிட்டார். அதனை பூபாளுர் தியாகராய செட்டியாரிடம் சென்று காண்பித்தார். அவரோ ‘திருக்குறளை திருத்துவதற்கு உனக்கு என்னய்யா தகுதி இருக்கிறது, திருக்குறளை திருத்தியவன் முகத்தில் முழிப்பது பாவம்’ என்று புத்தகத்தை வாங்க மறுத்துவிட்டார். பிறகு அந்த நூலைக் குறித்து கேள்விபட்ட பாண்டித்துரைத் தேவர் திருத்தம் செய்த குறட்பாக்களில் ஒரு குறளை கூறுமாறு சுகாத்தியாரிடம் கேட்டுக் கொண்டார். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி முகர முதற்றே உலகு’ என்று கூறினார். இலக்கிய நயம் இதில் பொருந்தி வருவதால் இதுவே சரியான குறள் என்று சுகாத்தியார் கூற, பதிப்பித்த அனைத்து பிரதிகளையும் வாங்கி அவர் கண் முன்னே பாண்டித்துரை தேவர் அத்தனை நூல்களையும் கொளுத்திவிட்டார். இச்செய்தி பாண்டித்துரைத் தேவர் வரலாற்றிலும் காணப்படுகிறது. பரிமேலழகரின் உரைத்திறன்: ஒரு மூல நூலைக் குறித்து உரை எழுதும் போது வருகின்ற பாடல் வேறுபாடு ‘இலக்கண வளமையாலும் வரும், இலக்கண வறுமையாலும் வரும்’ என்கிறார் வ.சு.ப. மாணிக்கம். ஒரு உரையைக் குறித்து ஆராய்ச்சி செய்பவர் ‘உரையாசிரியர் அந்த சொல்லை எந்தக் காலத்தில், என்ன சூழலில், என்ன பொருளில் பயன்படுத்தியுள்ளார் என்பதை யோசிக்க வேண்டும்’ என்று பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் கூறுகிறார். ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டத் தாய்’ என்ற குறளில் வரும் ‘எனக்கேட்டத் தாய்’ என்ற சொல்லுக்கு பரிமேலழகர், ‘தானாக அறியும் இயல்பு பெண்ணுக்கு இல்லாததால் கேட்டத்தாய் என்றார்’ என்று உரை கூறியுள்ளார். இதை படிக்கின்ற பலர் ‘பரிமேலழகர் பெண்ணை தாழ்வாகக் கருதுகிறார’் என்று கூறுவர். ஆனால் ஆய்ந்து நோக்கினால், அக்குறளில் வரும் ‘சான்றோன்’ என்ற சொல்லுக்கு ‘வீரன்’ என்று பொருள். அக்காலத்தில் போர்க்களம் செல்லும் உரிமை பெண்களுக்கு கிடையாது. யாராவது வந்து சொல்வதைக் கேட்டால்தான், ‘பெண்ணுக்கு தன்மகன் வெற்றி பெற்றானா, புறமுதுகிட்டானா’ எனத் தெரியும். அதனால்தான் பரிமேலழகர் தன்னுடைய உரையில் அவ்வாறு கூறியுள்ளார். எனவே தான் வ.சு.ப. மாணிக்கம், ‘இந்த சொல்லானது, இந்த வடிவினது, இந்த காலத்தினது, இந்த பண்பாட்டினது, இந்த வரலாற்றுக் குறிப்பினது என்று குறிப்பிட்டால்தான் உரை சரியாக எழுது முடியும்’ என்று குறிப்பிடுகிறார். ‘தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்ற குறளுக்கு பரிமேலழகர், ‘தீயானது அண்மையில் இருப்பவர்களை மட்டும் தான் பாதிக்கும். ஆனால் தீயவையோ எங்கிருந்தாலும் மற்றவர்களை பாதிக்கும்’ என்று கூறுகிறார். மிகவும் நுட்பமாக பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். முழுக்க முழுக்க திருக்குறளில் தோய்ந்து பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். அசைச்சொல்லுக்குக் கூட பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். உரையில் காணும் பொது மற்றும் சிறப்பு நெறி: பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தான் எழுதிய பரிமேலழகர் உரைத்திறனை இரண்டு கோணங்களில் பார்க்கிறார். அவை, உரையில் காணும் பொது நெறி மற்றும் உரையில் காணும் சிறப்பு நெறி ஆகும். இந்த சிறப்பு நெறியானது இலக்கணத்திற்குட்பட்டது என்று கூறுகிறார். இவர் திருக்குறளை ஆராய்ச்சி, நடையியல், பதிப்பியல், இலக்கணம் ரீதியாக ஆய்வு செய்திருக்கிறார். மேலும் திருக்கறள் சார்ந்தே 15 நூல்கள் இயற்றியுள்ளார். இக்கால திருக்குறள் ஆர்வலர்களுக்கு… அறிவுப்பசி தேவைப்படும் போது தான் உரை தலையெடுக்கிறது. திருக்குறளை படிக்க விரும்புபவர்கள் மு.வரதராசரின் திருக்குறள் உரையை படிக்கலாம். பிறகு படிப்படியாக இளம்பூரணர், சேனாவரையர், பரிமேலழகர் உரையை படிக்கலாம் என்கிறார் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உற்ற நோய் நீக்கும் அரிய மருந்தாக திருக்குறள் உள்ளது என்று கூறுகிறார். பிடித்த குறள்: யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ ஒருவன் எந்தெந்த பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக காணப்படுகிறானோ, அந்தந்த பொருளால் அவனுக்கு துன்பம் இல்லை. பக்குவ நிலை வந்தால் வாழ்க்கையில் துன்பம் இல்லை என்பதைக் கூறுவதால் இதுவே தனக்கு பிடித்த குறள் என பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார். மேலும் அறிவுத்தேடலில் பயணம் இருக்கும் போது, அதற்கான பொருள் கையில் தானாக வந்து சேரும் என்கிறார். |
|||||
by Lakshmi G on 10 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|