|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 1 -திரு. சு. செந்தில் குமார் -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 1 -திரு. சு. செந்தில் குமார் -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை அறிமுகம்: திரு. சு. செந்தில் குமார் அவர்கள் ஒரு இயந்திரவியல் பொறியாளர், சென்னையில் கட்டிட நிறுவனத்தை நடத்தி வருகிறார். கங்கா பவுண்டேஷனில் வேளாண் இயக்குராக பொறுப்பு வகிக்கிறார். பல சமூக அமைப்புகளில் பங்கேற்று இருக்கிறார். கோவை நகர மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டிற்கான குழுமத்தில் தலைவராக இருந்திருக்கிறார். AMIE, M.A., M.Phil., (Ph.D.), LLB. ஆகிய படிப்புகளையும் படித்துள்ளார். சில பணிகள்: திருக்குறளை இளைஞர்களிடையேயும், குழந்தைகளிடையேயும் கொண்டு செல்வதில் சிறப்பான பணியை ஆற்றி வருகிறார். ஒப்புரவு அதிகாரத்திற்கு உவமையாகப் பல பணிகளைச் செய்து வருகிறார். தானே புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது உதவிக்கரம் நீட்டிய உள்ளங்களுள் இவரும் ஒருவர். மேலும் நாட்டிற்காக உயிர் துறக்கும் இராணுவ வீரர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். திருக்குறளில் ஆர்வம்: என்று அறத்தின் மேல் நம்பிக்கை வந்ததோ, அன்றே திருக்குறள் மேல் நமக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்றே கூறலாம் என்கிறார் திரு. சு. செந்தில் குமார் அவர்கள். 6 ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயராஜ் ஐயாவின் திருக்குறள் உரைகளைக் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் திருவள்ளுவர் வகுத்துக் கொடுத்த வாழ்வியல் அமுதத்தைப் பருகும் வாய்ப்பு ஜெயராஜ் ஐயாவின் உரைகளைக் கேட்டபின் தனக்குக் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். ஆசிரியர்களை மாணவர்களாக்கும் திருக்குறள்: ஒரு ஆசிரியரானவர் சராசரியாக தன் வாழ்நாளில் 30,000 மாணவர்களைச் சந்திக்கிறார். ஒரு ஆசிரியர் திருக்குறளை முழுமையாகத் தெரிந்து கொண்டால் 30 மாணவர்களாவது திருக்குறளைத் தெரிந்து கொள்வார்கள். ஆயிரத்தில் ஒருவன் தெரிந்து கொண்டால் கூட, சமுதாயத்தில் சிறந்ததொரு மனிதனை உருவாக்கி விட முடியும். எனவே ஆசிரியர்களுக்கான பயிற்சி நோக்கில் திருக்குறள் கற்கும் வகுப்பைத் திரு. சு. செந்தில் குமார் மற்றும் அவரது குழு உருவாக்கியது. இந்த உருவாக்கத்தின் முதல் வகுப்பில் 185 பேர் கற்பதற்காக வந்தார்கள். இன்று 3000 பதிவு பெற்ற மாணவர்கள் அதில் இருக்கிறார்கள். அதில் 130-140 ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் திரு. சு. செந்தில் குமார் அவர்கள். இவற்றைப் பதிவு செய்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதால் உலகம் முழுக்க 27 நாடுகள் பார்க்கிறார்கள் .மேலும் இந்த வகுப்பானது 3 ஆண்டுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. கற்க கசடற: ‘கற்க கசடற’ என்ற அமைப்பினை உருவாக்கி திருக்குறள் பணிகளைச் செய்கிறார் திரு. சு. செந்தில் குமார் அவர்கள். அறம் நிற்க-குறள் கற்க, அறம்தனை அகம் சேர்க்கும் முயற்சி என்று அவ்வமைப்பிற்கான சுருக்கச் சொல்லினை வடிவமைத்திருக்கிறார்கள். அறத்தின் மீது மனிதனுக்கு நம்பிக்கை வர வேண்டும். அதுவே அவனை நல்வழிப்படுத்தும் என்ற நோக்கில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். திருக்குறள் சென்றடைய வேண்டிய பருவம்: குழந்தைகளின் 12 வயதிற்கு முன்னே திருக்குறளின் மூன்று பால்களையும் நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று திரு. சு. செந்தில்குமார் அவர்கள் கூறுகிறார். சிறுவர்கள் வாலிபர்களாக வளர்வதற்கு முன் திருக்குறள் அவர்களை அடைந்துவிட வேண்டும். இந்த அடித்தளமானது வாலிபத்தில் அவர்களை வழிநடத்தும். குழந்தைகளின் உடலில் இயற்கையாக ஏற்படும் பருவ மாறுதல்களுக்கு முன்னே, இலக்கியத்தால் மாறுதல்கள் நிகழ வேண்டும் என்கிறார். குழந்தைகளுக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்கும் முறை: உயர்ந்த விஷயங்களின் நிரூபணம் அதை கடைப்பிடிப்பவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். குழந்தைகளுக்குத் திருக்குறளைப் பாடமாக நடத்துவதில் பிரயோஜனம் இல்லை. பெற்றோர்கள் வாழ்க்கையாக வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது. தாயும், தந்தையும் அன்போடும், அறத்தோடும் வாழ்வதில் தான் இருக்கிறது குழந்தைகளுக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்கும் முறையே. இல்வாழ்க்கையின் பயனும் அதுவே ஆகும். குழந்தைகள் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்காமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் ஒருநாளும் அவர்களைப் பின்பற்றத் தவறுவதில்லை என்று ஒரு அறிஞர் கூறுவார். அது உண்மையே. அறத்தின் இரண்டு கூறுகள்: விதித்தன செய்தல், விலக்கின ஒழித்தல் ஆகியவை அறத்தின் இரண்டு கூறுகளாகும். தாய், தந்தை, உற்றார், உறவினர் போன்றோர் காட்டும் அன்பு அனைத்தும் விதித்தன செய்தலில் அடங்கிவிடும். இது போன்ற செயல்களை ஒருநாளும் செய்திடக் கூடாது என்பனவற்றை விலக்கின ஒழித்தலில் அடக்கலாம். தற்போதைய காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. பிள்ளைகளே தங்களுடைய பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதைக் கடமையாகக் கருதுகின்றனர். ஆக இது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது என்று குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே உணர்த்தி விட வேண்டும். இது விலக்கின ஒழித்தல் ஆகும். கஷ்டத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாது. ஆனால் கஷ்டம் என்றால் என்ன என்பதைக் காட்டி வளர்க்கலாம். முதியோர் இல்லங்களுக்குக் கூட்டிச் சென்று அங்குள்ளோர் படும் துயரத்தை நேரடியாகக் காண வைக்கலாம். இன்றைய உலகில் இது போன்று செய்வதும் இன்றியமையாததாகி விட்டது. ‘எனது பெற்றோர்கள் தனியாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் தனித்து விட மாட்டேன்’ என்ற எண்ணத்தைக் குழந்தைகளிடையே உருவாக்கி விட வேண்டும். கட்டுமான தொழிலில் சேவை: திரு. சு. செந்தில் குமார் அவர்கள் 27 ஆண்டுகளாகக் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தன்னிடம் முதன்முதலாக வீடு வாங்கிய வாடிக்கையாளரிடமிருந்து, அனைத்து வாடிக்கையாளர்களிடத்தும் தொடர்பிலிருந்து வருகிறார். தீபாவளி, புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களின் போது அனைத்து வீடுகளுக்கும் இனிப்புப் பெட்டி, நாளிதழ் வழங்குவது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளார். வீட்டை விற்றதோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக அவர் நினைக்கவில்லை. ‘தரம் என்பது மற்றோர் சொல்வதில் அல்ல. நம் மனதிற்கு நிறைவைத் தர வேண்டும்’ என்றும் கூறுகிறார்.
|
|||||
by Lakshmi G on 06 Jan 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|