|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 2 -திரு. சு. செந்தில் குமார் -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 2 -திரு. சு. செந்தில் குமார் -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை
அடிக்கடி பயன்படுத்தும் குறள்: ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று இக்குறளுக்கான சுருக்கமான விளக்கத்தை நமக்குக் கூறுவர். இக்குறளின் உண்மையான விளக்கம்: ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்கிறார் தொல்காப்பியர். உயர்ந்தவர்கள் இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் உலகம். உயர்ந்தவர்கள் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை அடி ஒற்றி, அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் வழி நடக்க வேண்டும் பிடித்தமான குறள்: ‘தோன்றின் புகழோடுத் தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ மனிதனானவன் பிறக்கும் போதே புகழோடு பிறக்க வேண்டும் என்று இக்குறளுக்கு விளக்கம் கூறுவர். இக்குறளின் உண்மையான விளக்கம்: இல்லறவியலின் கடைசி அதிகாரமான புகழில் இந்த குறளானது வைக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதன் இல்லற வாழ்வில் ஈடுபடும் போது முந்தைய அதிகாரங்களில் கூறப்பட்ட அறங்களையெல்லாம் பின்பற்றி வாழ்ந்து வந்தால், அதன் பயனாக அவனுக்குப் புகழ் கிடைக்கும். அதாவது, இல்லறம் என்ற பயணத்தில் மனிதன் தோன்றுவதாக இருந்தால் ‘புகழ்’ என்ற விளைவு விளையக் கூடிய அளவிற்கு எல்லா அறங்களையும் செய்வதற்கான உறுதியை மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டும். விருந்தோம்பல் செய்து, மனைவியைப் பேணி, அன்பை வளர்த்து அருளாக்கி, செய்ந்நன்றி அறிந்து, ஒழுக்கமாக இருந்து, மனம், சொல், செயல் அனைத்தையும் சுத்தப்படுத்தி வாழ்வதாக இருந்தால் இல்லற வாழ்வில் தோன்று அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என திருவள்ளுவர் கூறுவதாக இக்குறளுக்குத் திரு. சு. செந்தில் குமார் அவர்கள் பொருள் கூறுகிறார். ஆணிற்கான இலக்கணம்: பெண்ணுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை இலக்கணமாக இருப்பது போல, ஆணிற்கு அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியவை இருக்க வேண்டும் எனத் திருவள்ளுவர் கூறுவதாகத் திரு. சு. செந்தில் குமார் அவர்கள் கூறுகிறார். • அறிவு என்பது ஆணிற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய முதல் தகுதி. • ஓர்ப்பு என்பது அறிவால் ஆராய்ந்தவற்றைப் பகுத்தறியும் தெளிவு நிலை. • நிறை என்பது செயல்படுத்துகின்ற திண்மை. • கடைப்பிடி என்பது கடைசி வரை இவற்றை கடைப்பிடித்தல். ஒரு ஆண் மகனுக்கு அழகே அவனது எண்ணத்தில் இருக்கக் கூடிய தெளிவு ஆகும். அறம் தான் அடிப்படை என்ற தெளிவு, அந்த தெளிவினால் பிறக்கக்கூடிய திண்மை ஆகியவை தான் ஆணிற்கான இலக்கணம் ஆகும். நெகிழ்வான தருணம்: திரு. சு. செந்தில் குமார் அவர்கள் மற்றும் அவரது குழு நடத்துகின்ற உயர் வள்ளுவம் வகுப்பை, பேராசிரியராக விளங்குகின்ற ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தன்னுடைய மாணவர்களுக்கு இவ்வகுப்பின் மூலம் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார். இது மிக நெகிழ்ச்சியான தருணம் எனப் பகிர்கிறார் திரு. சு. செந்தில் குமார் அவர்கள். மேலும் இவ்வகுப்பிற்கு 5 வயதுக் குழந்தை முதல் 85 வயது வரை உள்ள முதியவர்களும் குடும்ப சகிதமாக வந்து கலந்து கொள்வதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இவ்வகுப்பில் கலந்து கொள்வதற்கு 25 கி.மீ. சைக்கிள் பயணம் செய்து கூட ஆர்வலர்கள் வருகின்றனர். மேலும் சிற்றுண்டியானது இடைவேளையில் வழங்கப்படுவதால், சோர்வடையாமல் உற்சாகத்துடன் அனைவரும் கேட்டுச் செல்கின்றனர். திருவள்ளுவர் நேரில் வந்தால்… திருவள்ளுவர் நேரில் வந்தால், ‘உங்களது கருத்துக்களைச் செயல்முறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கூறுங்கள்’ என்று கேட்க விரும்புவதாகத் திரு. சு. செந்தில் குமார் அவர்கள் கூறுகிறார். ஆசிரியருக்கான தகுதிகள்: • ஆசிரியர் மாணவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதுவே ஆசிரியருக்கான முதல் தகுதி. • மாணவன் ஆசிரியரின் அறிவைக் கண்டு பிரமிக்க வேண்டும். ஆசிரியரின் அறிவு அத்தகையதாய் இருக்க வேண்டும். • ஆசிரியர் துலாக்கோல் போல அனைவருக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுக்க வேண்டும். • நிலமகள் போல ஆசிரியர் பொறுமையாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் ஆசிரியரிடம் இருந்தால் மாணவன் அவரை வணங்காமல் இருக்கவே மாட்டான். அரசாங்கத்தையும், மக்களையும் இணைக்கும் பாலமாக விளங்குபவர்கள் சான்றோர்களே. இந்த சான்றோர்கள் சமூகத்திற்காகத் தலைமையேற்க வேண்டும். இந்த சமூகத்திற்கு எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிந்து மாணவர்களை உருவாக்க வேண்டும். தரமான ஆணும், நலமான பெண்ணும் உருவாகி விட்டால் குடும்பம், சமூகம், நாடு, உலகம் என அனைத்தும் நலம்பெறும். எனவே பயிற்சிகளை நெறிப்படுத்தி ஆசிரியர்களை மேம்படுத்த வேண்டும். இதுவே தன்னுடைய கனவாகவும் திரு. சு. செந்தில் குமார் அவர்கள் கூறுகிறார். கல்வியின் அடிப்படைக் கூறுகள்: முதலில் கற்க வேண்டும். இரண்டாவது கற்றதைச் சிந்திக்க வேண்டும். மூன்றாவது சிந்தித்ததில் தெளிவு பெற வேண்டும். நான்காவது அவற்றைச் செயலாக்கம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே கல்வியின் அடிப்படைக் கூறுகளாக அமைய வேண்டும். படித்ததைச் சொல்பவர்கள் ஆசிரியர்கள், படித்ததை வாழ்க்கையாக வாழ்பவர்கள் ஆசாரியர்கள். அந்த ஆசாரியர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் எனத் திரு. சு. செந்தில் குமார் அவர்கள் கூறுகிறார். |
|||||
by Lakshmi G on 09 Jan 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|