|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 15 - பகுதி 1 -பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்) -பன்முக நோக்கில் குறள் வாசிப்பு |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 வள்ளுவம் வகுத்த வாழ்க்கைப் பயணம் - பகுதி – 1 பன்முக நோக்கில் குறள் வாசிப்பு - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்) அறிமுகம்: 1932ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்தவர் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்கள் ஆவார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் முனைவர் பட்டம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளில் பட்டயங்களும் பெற்றுள்ளார். உதவி விரிவுரையாளராகப் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் 3 மாதங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆசிரியராக 3 ஆண்டுகள், மொழியியல் உயராய்வு மைய விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், இயக்குநர் எனப் பல ஆண்டுகள் பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் (Visiting Professor of Indian Studies) வருகைத்துறை பேராசிரியராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகள் மொழியியல் உயராய்வு மைய இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். பணிநிறைவுக்கு பிறகு பல அமைப்புகளுக்குக் குறிப்பாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - மைசூர், மொழியியல் பண்பாட்டு நிறுவனம் - புதுச்சேரி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாராய்வு மத்திய நிறுவனம் ஆகிய அமைப்புகளுக்கு Visiting Professor -ஆகவும் பணியாற்றி வருகிறார். கருத்தரங்கங்களில் கலந்து கொள்வதற்காக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜெர்மனி, ஜப்பான், வட அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குப் பயணம்; மேற்கொண்டுள்ளார். திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம், அண்ணாமலை நல அனைத்திந்திய தமிழ்மொழி கழகம் போன்ற பல அமைப்புகளிலும் பணிபுரிந்து வருகிறார். எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிணக்கன கோட்பாடு, மொழியும் எழுத்தும் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். மொழியியல் இலக்கியத் திறனாய்வில் பெரும் ஈடுபாடு கொண்டவர். 2011ம் ஆண்டு டாக்டர். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதும் ஒரு இலட்சம் ரூபாய் பரிசும், SRM பல்கலைக்கழகத்திலிருந்து பரிதிமாற்கலைஞர் விருதும், இரண்டு இலட்சம் ரூபாய் பரிசும், 2011, 2012ல் தொல்காப்பியர் விருது, மத்திய அரசு செம்மொழித் தமிழாராய்வு நிறுவனத்தின் சார்பாகக் குடியரசுத் தலைவரின் கையால் விருதும், ஐந்து இலட்சம் பரிசும் கிடைக்கப் பெற்றார். படிப்பதில் ஆர்வம்: தினமும் ‘தினமணி’ நாளிதழ் படிக்கும் வழக்கம் கொண்டவர் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்கள் ஆவார். இவர் கும்பகோணம் சென்று படிக்கும் சூழல் ஏற்பட்ட போது நூல் நிலையங்கள் சென்று படிக்கத் தொடங்கினார். அந்த நூல் நிலையத்தில் தன்னுடன் நூல்கள் வாசிக்க வரும் ஒரு நபரே திருவள்ளுவரை முதலில் அறிமுகம் செய்ததாக செ.வை. சண்முகம் அவர்கள் குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு தான், திருக்குறளைப் படிப்பதற்கும், பிற நூல்கள் படிப்பதற்கும் ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறுகிறார். தன் பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரி பருவம் வரை தான் பல அறிஞர்களுடன் பழகியதாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் தனக்கு ஒவ்வொன்றைக் கற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். மொழியியல் பார்வையில் திருக்குறள்: 88 அகவை கொண்ட பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் ஆவார். பேராசிரியர் அகத்தியலிங்கம். சாரங்கபாணி போன்றோருடன் தொடர்ந்து பயணித்திருக்கிறார். பரிமேலழகர் உரையில் தோய்ந்து அவற்றை நுணுகி ஆராய்ந்து மொழியியல் ரீதியாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். திருக்குறளில் திருவள்ளுவர் சொல்லிய வார்த்தைகளை விட, சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம் எனக் கூறுகிறார் செ.வை. சண்முகம் அவர்கள். மொழியியல் ரீதியாகத் திருக்குறளைப் பார்க்கும் போதே அது விளங்கும் எனவும் குறிப்பிடுகிறார். ஒரு குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகள் பெற்றுள்ள சீர்களுக்கும் அர்த்தம் உள்ளது என்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் திருக்குறளை நோக்கலாம். நாம் நோக்குகின்ற விதத்தில் திருக்குறள் அவர்க்குப் புலப்படும் என்றும் கூறுகிறார். மொழியியல் ரீதியாக பல ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இவர் வள்ளுவமே இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தனக்கு அமைத்துக்கொடுத்தது என்றும் கூறுகிறார்.
|
|||||
by Lakshmi G on 11 Apr 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|