|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 1 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) -தமிழ் படித்தால் வாழ்வுண்டு |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- நிகழ்வு – 16 வள்ளுவம் வகுத்த வாழ்க்கைப் பயணம் – பகுதி – 1 - பேராசிரியர் சோ. ந. கந்தசாமி (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) அறிமுகம்: 1936ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் அருகிலுள்ள ‘இலையூர்’ என்ற ஊரில் பிறந்தவர் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள் ஆவார். தந்தை நடராஜன், தாயார் மீனாம்பாள் ஆவார். இளங்கலை பொருளாதாரம் பயின்ற இவர் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வையும் முடித்தார். மேலும் மொழியியல், வடமொழி உள்ளிட்ட பட்டைய படிப்புகளையும் படித்துள்ளார். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். பாலி மொழி பாடல்களை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். கல்வெட்டுக்களிலும் புலமை பெற்றவர். ஆய்வாளர், பேராசிரியர், விரிவுரையாளர் என 40 ஆண்டுகளுக்கு கல்விப்பணி ஆற்றியவர். 1979 முதல் 1985 வரை மலேசியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துணைத்தலைவர் மட்டுமல்லாது செம்மொழிகளின் உயராய்வு நடுவம், தொல்காப்பிய இருக்கை, தமிழாராய்ச்சி நிறுவனம் எனப் பல தமிழ் சார்ந்த அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். விருதுகள்: முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்து நாளிதழில் மதிப்புரைகளை எழுதி வருகிறார். இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்ற வகைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். அதிகமான ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிகளுக்காகப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசு விருது பெற்றுள்ளார். அண்ணாமலை செட்டியாரின் தமிழிலக்கிய விருது பெற்ற பெருமைக்குரியவர். சித்தாந்த செம்மணி, சிறந்த தமிழறிஞர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார். இளமைப்பருவம்: ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள் தனது தந்தையின் தூண்டுதலால் தான் கல்வி பயின்றதாகக் குறிப்பிடுகிறார். சிறு வயதிலேயே தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவராகத் தந்தை திகழ்ந்தார். எனவே தமிழ் மொழியைத் தன்னையும் விரும்பி படிக்க வைத்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் தமிழ் மொழி மட்டுமல்லாது ஆங்கில மொழியையும் தன்னை படிக்க வைத்ததாகக் குறிப்பிடுகிறார். கல்லூரி படிப்பில் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள் சேர்ந்த போது இளங்கலை பொருளாதாரம் எடுத்துப் படித்தார். இப்படிப்பு முடிந்த பிறகு இவரது தந்தையே, “தமிழ் படித்தால் உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு; எனவே அடுத்து தமிழ் இலக்கியம் படி’ என்று கூறியதால் முதுகலைத் தமிழ் எடுத்துப் படித்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள். அறப்பணியைச் செய்த ஆசிரியர்கள்: இவர் படித்த காலத்தில் இவருக்கு அமைந்த ஆசிரியர்களும், பேராசிரியர்களும் மிகவும் சிறப்புக்குரியவர்கள். இவரது ஆசிரியர்களில் பலர் இருமொழி மற்றும் பலமொழி கற்றவர்களாக இருந்தனர் என்று குறிப்பிடுகிறார். மேலும், தெ.பொ.மீ, பேராசிரியர் சிதம்பரநாதன், தண்டபாணி தேசிகர் ஆகிய பெரும் தமிழறிஞர்களிடத்தில் தான் மாணவனாகப் பயிலும் வாய்ப்பு கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார். இவர்களிடமிருந்து தான் அதிகம் கற்றுக் கொண்டதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார். குறிப்பாகப் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்களின் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆவார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஒருமுறை இவரிடம், “உன் தாய்மொழி உயர்ந்தது என்று உனக்கு எப்படித் தெரியும், பிறமொழிகளைப் படித்தால்தானேத் தெரியும்” என்று கூறி இவரைப் பிறமொழிகளையும் கற்றுக்கொள்ளத் தூண்டியதாகக் கூறுகிறார். பிடித்தமான குறள்: பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள் தனக்குப் பிடித்த குறளாக, “எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்” என்னும் குறள் தனக்கு மிகவும் பிடித்தமான குறள் எனக் குறிப்பிடுகிறார். எவ்வளவு சிறிய நல்ல செய்தி என்றாலும் அதைக் கேட்கும் போது அதன் பலன் அதிகமாக இருக்கும். இது நமது வாழ்வில் எப்போதும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய, குறள். எனவே இது மிகவும் பிடித்தமான குறள் என்று கூறுகிறார். திருக்குறள் அமைப்பு: உலகில் தொல்காப்பியத்திற்கு ஈடாக எந்த நூலும் கிடையாது. தொல்காப்பியத்திற்கு அருகில் ஒரு நூலால் நெருங்க முடியுமென்றால் அது திருக்குறளால் மட்:டுமே முடியும். தொல்காப்பியர் கூறிய வரைமுறைப்படி நூல் படைத்தவர் திருவள்ளுவர் மட்டுமே ஆவார். திருவள்ளுவர் போல் ஒருவர் சொற்களை மிகச்சுருக்கமாகவும் கருத்துக்களை மிக விரிவாகவும் கூற முடியாது. மனித வாழ்க்கை தேவையின் முழுமையே திருக்குறள். மனிதன் தேவைகள் நிரம்பினால் குற்றம் செய்ய மாட்டான். மனித தேவைகளை நிவர்த்தி செய்வது பொருள். ஆகவே திருவள்ளுவர் பொருளதிகாரத்தைப் படைத்தார்; மனித உணர்ச்சிகளுக்காகப் படைக்கப்பட்டது இன்பத்துப்பால்; மனிதனின் ஒழுக்கத்திற்காகப் படைக்கப்பட்டது அறத்துப்பால் என்கிறார் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள். மனிதன் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர் திருவள்ளுவர். மொத்தத்தில் மனித வாழ்வுக்காகப் படைக்கப்பட்டதே ‘திருக்குறள்’ என்கிறார். |
|||||
by Lakshmi G on 25 Apr 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|