திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
வினைத்திட்பம் வேண்டாரை-வினை செய்வதில் உறுதியை விரும்பாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்-வேறு எத்தகைய உறுதி யுடையவரா யிருப்பினும்; உலகு வேண்டாது-உயர்ந்தோர் விரும்பார். மனத்திண்மை, மதித்திண்மை, அறிவுத்திண்மை, உடல்திண்மை, வினைத்திண்மை, என அகத்திண்மை பல வகைப்படும். கருவித்திண்மை, இடத்திண்மை, காலத்திண்மை, படைத்திண்மை முதலியன புறத்திண்மையாம். இவை யெல்லா மிருந்தும் மெய்ம் முயற்சியாகிய வினைத்திண்மை யில்லாவிடத்துப் பயன்படாமையின், ' வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாதுலகு' என்றார். 'உலகு' ஆகுபெயர்.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
Translation
The world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest.
Explanation
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
Transliteration
Enaiththitpam Ey Thiyak Kannum Vinaiththitpam
Ventaarai Ventaadhu Ulaku
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்