கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான லூசியாவின் தமிழ் ரீமேக் தான் எனக்குள் ஒருவன்.
சென்னையில் ஒரு பழமை வாய்ந்த தியேட்டர் ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை வேலை செய்யும் ஏழை தொழிலாளியாக வருகிறார் சித்தார்த்.
தன் நண்பர்களுடன் தங்கியிருக்கும் சித்தார்த்துக்கு இரவில் தினமும் தூக்கம் வராததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார். சித்தார்த்துக்கு தூக்கம் மட்டும் பிரச்சனை அல்ல, எப்படியாவது பெரிய ஆளாக வேண்டும் என்ற ஏக்கமும் பிரச்சனையாக இருக்கிறது. இதனால் இரவில் டீக்கடைக்கு செல்லும் சித்தார்த்திற்கு ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது.
அவர் ஜான் விஜய்யை அறிமுகம் செய்து வைக்கிறார். ஜான் விஜய் சித்தார்த்தின் தூக்கத்தை போக்க லூசியா என்ற மருந்து ஒன்றை தருகிறார்.
அந்த மருந்தை சாப்பிட்டால் தூக்கத்தோடு கனவு வரும். அந்த கனவு நிஜத்தில் நீ எப்படி வாழ நினைக்கிறாயோ அதை காண்பிக்கும். விடிந்த பிறகு அந்த கனவு மறைந்து, பின்னர் மறுபடியும் தூங்கும் போது அந்த கனவு விட்ட இடத்தில் இருந்து தொடரும் என்று ஜான் விஜய், சித்தார்த்திடம் கூறுகிறார்.
மருந்தை, சாப்பிட்ட பிறகு ஹாலிவுட் படமான இன்ஸ்பெஷன் ஸ்டைலில் கனவு உலகத்திற்கு செல்ல, அங்கு அனைவரும் விரும்பும் பெரிய நாயகனாக வலம் வருகிறார் சித்தார்த்.
நிஜத்தில் பார்ப்பவர்கள் அனைவரும் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் கிடைக்காத பல விஷயங்கள் எல்லாம் சித்தார்த்திற்கு கனவில் கிடைக்கிறது.
கனவில் வாழும் அந்த வாழ்க்கையிலும் காதல் தோல்வி, நண்பரின் மரணம், ரவுடி கும்பலின் மிரட்டல்கள் என அடுக்கடுக்காக பல துன்பங்கள் அவரை துரத்துகின்றன.
கனவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் சித்தார்த், நிஜ உலகிற்கு திரும்பினாரா? கனவிலும் நிஜத்திலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்பதை வித்தியாசமான கடைசி கட்ட காட்சிகளுடன் சொல்லியிருப்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் சித்தார்த் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக தியேட்டர் தொழிலாளியாக கருத்த உடலும், எத்துப் பல்லும், முடிவெட்டும் அப்படியே ஒரு ஏழ்மை தொழிலாளியின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றது. ஆனால் கொஞ்சம் மேக்அப் தான் கூடிடுச்சி..
அறிமுக நாயகி தீபா சன்னதி அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சிருஸ்டி துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். நொடிந்துப்போன தியேட்டர் அதிபராக வரும் ஆடுகளம் நரேன் நடிப்பால் மனதில் நிற்கிறார். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் நமது பொறுமையை கொஞ்சம் சோதிக்கும் விதமாக இருக்கிறது. பின்னணி இசை நன்றாக வந்துள்ளது.
கன்னட படத்தின் ரீமேக் என்றாலும், படத்தை சிறப்பாக எடுத்தமைக்காக இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் எனக்குள் ஒருவன்.... படம் நல்லா இருக்கு...
|