LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 548 - அரசியல்

Next Kural >

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன.தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும். எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.
தேவநேயப் பாவாணர் உரை:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை ( நியாயம் ) வேண்டினவர்க்குக் காட்சிக் கெளியனாயிருந்து , அவர் சொல்லியவற்றை அறநூலறிஞருடன் ஆராய்ந்து , உண்மைக் கேற்பத் தீர்ப்புச் செய்யாத அரசன் ; தண்பதத்தான் தானேகெடும் - தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான். "அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்" (சிலப்பதிகாரப் பதிகம் . 55) என்றதற் கேற்ப , முறை செய்யா அரசன் பகைவரின்றியுந் தானே கெடுவான் என்பதாம் . பதம் நிலைமை . எண்மை எளிமை. 'எண்பதத்தான்' குறிப்பு முற்றெச்சம் . 'ஓரா' செய்யா என்னும் வாய்ப்பாட்டு (இறந்தகால வுடன்பாட்டு ) வினையெச்சம் . 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 'தண்பதம்' பழியும் பளகும் (பாவமும் ) அடைந்து நிற்கும் நிலை . ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.
Translation
Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land.
Explanation
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
Transliteration
Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan Thanpadhaththaan Thaane Ketum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >