திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும உண்டாகாது. ('இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம். எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.
தேவநேயப் பாவாணர் உரை:
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு;பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனைவியொடு கூடுதலாலேற்படும் பேதைமை ஒருகாலத்தும் உண்டாகாது. இவ்வுலகில் வாழ்வதற்கு எல்லாவகையிலும் இடந்தருவதால் செல்வம் இடனெனப்பட்டது. இடனில் பருவத்தும் (குறள்.218) என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க. இளமைக் காலத்தையும் உள்ளடக்குமாறு 'எஞ்ஞான்றும்' என்றார். பேதைமையாவது விழைதல்,தாழ்தல், அஞ்சுதல், ஏவல் செய்தல், அறம் பொருள் கைவிடுதல் ஆகியவற்றிற்கு ஏதுவான அறியாமை, பெண்வழிச் சேறலால் ஏற்படுங் கேடுகளெல்லாம் இக்குறளால் தொகுத்துக் கூறப்பட்டன.
கலைஞர் உரை:
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.
Translation
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman's love, is never found.
Explanation
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman's love, is never found.
Transliteration
Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum
Penserndhaam Pedhaimai Il
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்