எதிர்பாராத முத்தம் - பகுதி 2
11. அறையிலிருந்து அம்பலத்தில்
"ஒருநாள் இரவில் உம்எச மானின் அருமைப் பிள்ளை ஐயோ பாவம் பட்ட பாடு பருத்திப் பஞ்சுதான் பட்டி ருக்குமா? பட்டிருக் காதே!" என்று கூறினான் இரிசன் என்பவன். "என்ன" என்றான் பொன்னன் என்பவன். இரிசன் என்பவன் சொல்லு கின்றான்: "பரிசம் போட்டுப் பந்தலில் மணந்த மாப்பிளை பொன்முடி! மணப்பெண் பூங்கோதை1 சாப்பாடு சமைத்துச் சாப்பிடு வதுபோல் புன்னை அடியில் பூரிப்பு முத்தம் தின்றுகொண் டிருந்தார்! திடீரென் றெசமான் பிடித்துக் கட்டினார் பிள்ளையாண் டானை! அடித்தார் மிலாரால்; அழைத்தார் என்னை அவிழ்த்து விட்டபின் அவதியோ டோடினான்!" என்றது கேட்ட பொன்னன் உடனே சொன்னதை யெல்லாம் தோளில் முடிந்து மான நாய்கன் தன்னிடம் போனான் விரைவில் புகல்வ தற்கே! |
12. பெற்றோர் பெருந்துயர்
விளக்குவைத்து நாழிகைஒன் றாயிற்று மீசை வளைத்துமே லேற்றிஅந்த மானநாய்கன் வந்தான்.
"அன்னம்"என்று கூவினான் அன்னோன் மனைவிதனை "என்ன"என்று கேட்டே எதிரில்வந்து நின்றிருந்தாள்.
"பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றான்! செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியண்டை
உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத் தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி
வாரம் இரண்டா யினவாம் இதுஎன்ன கோரம்!" எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்!
அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே அச்ச மயமாக "ஐயா" எனக்கூவிப்
பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும், புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும்,
சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள். "நல்லதுநீ போபொன்னா" என்று நவின்றுபின்
மான நாய்கன்தான் மனத்துயரம் தாங்காமல் "தான தருமங்கள் நான்செய்து பெற்றபிள்ளை
ஏன்என் றதட்டாமல் இதுவரைக் கும்சிறந்த வானமுதம் போல வளர்த்த அருமைமகன்
வெள்ளை உடுத்தி வௌியிலொரு வன்சென்றால் கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில்
வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு
செல்லப்பா என்று சிறக்க வளர்த்தபிள்ளை கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா!"
என்று பலவாறு சொல்லி இருக்கையிலே, நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல்
பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக் கண்டஅந் நாய்கன் கடிந்த மொழியாக
"நில்லாதே போ!"என்றான். "என்னால் நிகழ்ந்ததில்லை. சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி போய்ச்சொன்னேன்.
பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றாள்; அதனை வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன். வேறென்ன?"
என்றுரைத்தான் பண்டாரம். கேட்டான் இதைநாய்கன். "சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துனக்"கென்றான்.
"பத்து வராகன் பணம்கொடுத்த தாகவும் முத்துச் சரத்தைஅவள் மூடித்தந் தாள்எனவும்
எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்? அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்!
தாடிஒன்று கேட்டான். எனக்கென்ன? தந்ததுண்டு. மூடிமுக் காடிட்டு மூஞ்சியிலே தாடிஒட்டி
நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில். மான்வந்தாற் போல்வந்து வாய்முத்தம் தந்துவிட்டுப்
போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்காதல் ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம், பொய்யல்ல!"
என்று பண்டாரம் இயம்பவே நாய்கனவன் "நன்று தெரிந்துகொண்டேன். நான்சொல்வ தைக்கேட்பாய்
என்னைநீ கண்டதாய் என்மகன்பால் சொல்லாதே; அன்னவனை நானோ அயலூருக் குப்போகச்
சொல்ல நினைக்கின்றேன்; அன்னவன்பால் சொல்லாதே செல்லுவாய்" என்றுரைத்தான். பண்டாரம் சென்றுவிட்டான்.
பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப் பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன்
"அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம் சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன்.
நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர் தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும்
முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும் ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்;
கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி நெஞ்சில் அவள்மயக்கம் நீங்கும்!" எனச்சொன்னான்.
அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச் சொன்னது நன்றென்றாள் துணிந்து. |
13. இல்லையென்பான் தொல்லை
பொன்முடி கடையி னின்று வீட்டுக்குப் போகும் போது தன்னெதிர்ப் பண்டா ரத்தைப் பார்த்தனன்; "தனியாய் எங்கே சென்றனிர்" என்று கேட்டான். பண்டாரம் செப்பு கின்றான்: "உன்தந்தை யாரும் நானும் ஒன்றுமே பேச வில்லை.
அவளுக்கும் உனக்கு முள்ள அந்தரங் கத்தை யேனும், அவன்உன்னை மரத்தில் கட்டி அடித்ததை யேனும், காதற் கவலையால் கடையை நீதான் கவனியா மையை யேனும் அவர்கேள்விப் படவே இல்லை, அதற்கவர் அழவு மில்லை.
நாளைக்கே அயலூர்க் குன்னை அனுப்பிடும் நாட்ட மில்லை; கேளப்பா தாடிச் சேதி கேட்கவும் இல்லை" என்றான். ஆளனாம் பொன்மு டிக்கோ சந்தேகம் அதிக ரிக்கக் கோளனாம் பண்டா ரத்தின் கொடுமையை வெறுத்துச் சென்றான். |
14. எதிர்பாராப் பிரிவு
பொதிசுமந்து மாடுகளும் முன்னே போகப் போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர். அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால் ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்க ளோடு குதிகாலைத் தூக்கிவைக்கத் துடித்துக் காதல் கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல லுற்றான். மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி வந்துநுழைந் ததுமுத்து வணிகர் கூட்டம்.
வடநாடு செல்கின்ற வணிகர்க் கெல்லாம் மங்கையரும் ஆடவரும் வீதி தோறும் "இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்" என்றுரைத்து வாழ்த்த லுற்றார்! மாடிமீது சுடரொன்று தோன்றிற்று. பொன்மு டிக்கோ துயர்ஒன்று தோன்றிற்று. கண்ணீர் சிந்த அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால் "அன்பேநீ விடைகொடுப்பாய்" என்று கேட்டான்.
எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும் எமலோகத் துக்கன்பன் செல்வா னென்றே! அதிர்ந்ததவள் உள்ளந்தான் பயணஞ் செல்லும் அணிமுத்து வணிகரொடு கண்ட போது விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக வெம்பினாள்; வெடித்துவிடும் இதயந் தன்னைப் புதுமலர்க்கை யால்அழுத்தித் தலையில் மோதிப் புண்ணுளத்தின் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள்.
விடைகேட்கும் பொன்முடிக்குத் திடுக்கிட் டஞ்சும் விழிதானா? விழியொழுகும் நீர்தா னா?பின் இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெ ருப்பா? எதுவிடை?பொன் முடிமீண்டும் மீண்டும் மீண்டும் கடைவிழியால் மாடியிலே கனிந் திருக்கும் கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை உடைந்துவிழு வாள்அழுவாள், அழுவாள் கூவி! "உயிரேநீர் பிரிந்தீரா" என்று சோர்வாள்! |
15. அழுதிடுவாள் முழுமதியாள்
"இங்கேதான் இருக்கின்றார் ஆத லாலே இப்பூதே வந்திடுவார் என்று கூறி வெங்காதல் பட்டழியும் என்உ யிர்க்கு விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன். இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை; இருமூன்று மாதவழித் தூர முள்ள செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்ப துண்டோ?
செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி எழுந்தோடும் கிள்ளைபோல் எனது டம்பில் இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை! வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக் கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள்.
தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று தள்ளாடும்; விழும்எழும்பின் னிற்கும்; சாயும். தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள். தோளசந்து தாளசந்து மாடி விட்டுப் பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந் தன்னில் நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம் நாவறளக் கத்துதல்போல் பேச லுற்றார்.
வடநாடு செல்கின்றான் அந்தப் பையன் உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்! நடப்பானா? தூரத்தைச் சமாளிப் பானா? நான்நினைக்க வில்லைஎன்று மகிழ்ச்சி கொண்டு திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள். சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய் வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்! மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய் கன்தான்.
வெள்ளீயம் காய்ச்சிப்பூங் கோதை காதில் வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார் துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா? தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே. |
16. எந்நாளோ!
பாராது சென்ற பகல்இரவு நாழிகையின் ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத்
தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன். தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்?
கண்டவுடன்வாரி அணைத்துக்கண் ணாட்டி யென்று புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான்
அன்பு நிலையம் அடையும்நாள் எந்நாளோ? என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ?
கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு
தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ?
என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே?
ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?"
என்று பலவா றழுதாள்.பின் அவ்விரவில் சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள்.அப் புன்னைதனைக்
கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன்
கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப்
பொன்னுடம்பு நோகப் புடைக்கஅவ ரைப்பிணித்த புன்னை இதுதான்! புடைத்துதுவும் இவ்விருள்தான்!
தொட்டபோ தெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை, விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக்
கட்டிவைத்த காரணத்தால், புன்னைநீ காரிகைநான் ஒட்டுறவு கொண்டுவிட்டோம். தந்தை ஒரு பகைவன்!
தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? நோயோ உணவு?நாம் நூற்றாண்டு வாழ்வோமோ?
சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! ஏதோ அறியேன் இனி. |
17. ஆசைக்கொரு பெண்
புன்னையில் அவளு டம்பு புதைந்தது! நினைவு சென்று கன்னலின் சாறு போலக் கலந்தது செம்ம லோடு! சின்னதோர் திருட்டு மாடு சென்றதால் அதைப் பிடித்துப் பொன்னன்தான் ஓட்டி வந்தான் புன்னையில் கட்டப் போனான்.
கயிற்றொடு மரத்தைத் தாவும் பொன்னனின் கையில் தொட்டுப் பயிலாத புதிய மேனி பட்டது. சட்டென் றங்கே அயர்கின்ற நாய்கனைப் போய் அழைத்தனன்; நாய்கன் வந்தான் மயில்போன்ற மகளைப் புன்னை மரத்தோடு மரமாய்க் கண்டான்.
"குழந்தாய்"என் றழைத்தான். வஞ்சி வடிவினைக் கூவி "அந்தோ இழந்தாய்நீ உனது பெண்ணை!" என்றனன். வஞ்சி தானும் முழந்தாளிட் டழுது பெண்ணின் முடிமுதல் அடி வரைக்கும் பழஞ்சீவன் உண்டா என்று பதைப்புடன் தடவிப் பார்த்தாள்.
"அருமையாய்ப் பெற்றெ டுத்த ஆசைக்கோர் பெண்ணே!" என்றும் அருவிநீர் கண்ணீ ராக அன்னையும் தந்தை யும்"பொற் றிருவிளக் கனையாய்!" என்றும் செப்பியே அந்தப் புன்னைப் பெருமரப் பட்டை போலப் பெண்ணினைப் பெயர்த் தெடுத்தார்.
கூடத்தில் கிடத்தி னார்கள் கோதையை! அவள் முகத்தில் மூடிய விழியை நோக்கி மொய்த்திருந் தார்கள். அன்னாள் வாடிய முகத்தில் கொஞ்சம் வடிவேறி வருதல் கண்டார்; ஆடிற்று வாயிதழ் தான்! அசைந்தன கண்ணி மைகள்.
எழில்விழி திறந்தாள். "அத்தான்" என்றுமூச் செறிந்தாள். கண்ணீர் ஒழுகிடப் பெற்றோர் தம்மை உற்றுப் பார்த்தாள்; கவிழ்ந்தாள். தழுவிய கைகள் நீக்கிப் பெற்றவர் தனியே சென்றார். பழமைபோல் முணு முணுத்தார்; படுத்தனர் உறங்கி னார்கள். |
18. பறந்தது கிள்ளை
விடியுமுன் வணிகர் பல்லோர் பொதிமாட்டை விரைந்தே ஓட்டி நடந்தனர் தெருவில் காதில் கேட்டனள் நங்கை. நெஞ்சு திடங்கொண்டாள்; எழுந்தாள். வேண்டும் சில ஆடை பணம் எடுத்துத் தொடர்ந்தனள் அழகு மேனி தோன்றாமல் முக்கா டிட்டே!
வடநாடு செல்லும் முத்து வணிகரும் காணா வண்ணம் கடுகவே நடந்தாள். ஐந்து காதமும் கடந்த பின்னர் நடைமுறை வரலா றெல்லாம் நங்கையாள் வணிக ருக்குத் தடையின்றிக் கூற லானாள் தயைகொண்டார் வணிகர் யாரும். |
19. வடநாடு செல்லும் வணிகர்
பளிச்சென்று நிலா எரிக்கும் இரவினில் பயணம் போகும் ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே ஒருநெஞ்சம் மகர வீதி கிளிச்சந்த மொழியாள் மீது கிடந்தது. வணிக ரோடு வௌிச்சென்ற அன்னோன் தேகம் வெறுந்தேகம் ஆன தன்றோ!
வட்டநன் மதியி லெல்லாம் அவள்முக வடிவங் காண்பான்! கொட்டிடும் குளிரில் அப்பூங் கோதைமெய் இன்பங் காண்பான்! எட்டுமோர் வானம் பாடி இன்னிசை தன்னி லெல்லாம் கட்டிக்க ரும்பின் வாய்ச்சொற் கவிதையே கண்டு செல்வான்.
அணிமுத்து மணிசு மக்கும் மாடுகள் அலுத்துப் போகும். வணிகர்கள் அதிக தூர வாய்ப்பினால் களைப்பார். நெஞ்சில் தணியாத அவள் நினைவே பொன்முடி தனக்கு நீங்காப் பிணியாயிற் றேனும் அந்தப் பெருவழிக் கதுதான் வண்டி!
இப்படி வடநாட் டின்கண் டில்லியின் இப்பு றத்தில் முப்பது காத முள்ள மகோதய முனிவ னத்தில் அப்பெரு வணிகர் யாரும் மாடுகள் அவிழ்த்து விட்டுச் சிப்பங்கள் இறக்கிச் சோறு சமைத்திடச் சித்த மானார்.
அடுப்புக்கும் விறகினுக்கும் இலைக்கலம் அமைப்ப தற்கும், துடுப்புக்கும் அவர வர்கள் துரிதப்பட் டிருந்தார். மாவின் வடுப்போன்ற விழிப்பூங் கோதை வடிவினை மனத்தில் தூக்கி நடப்போன் பொன்முடிதான் அங்கோர் நற்குளக் கரைக்குச் சென்றான்.
ஆரியப் பெரியோர், தாடி அழகுசெய் முகத்தோர், யாக காரியம் தொடங்கும் நல்ல கருத்தினர் ஐவர் வந்து "சீரிய தமிழரே, ஓ! செந்தமிழ் நாட்டா ரேஎம் கோரிக்கை ஒன்று கேட்பீர்" என்றங்கே கூவி னார்கள்.
தென்னாட்டு வணிக ரான செல்வர்கள் அதனைக் கேட்டே என்னஎன் றுசாவ அங்கே ஒருங்கேவந் தீண்டி னார்கள். "அன்புள்ள தென்னாட் டாரே, யாகத்துக் காகக் கொஞ்சம் பொன்தரக் கோரு கின்றோம், புரிகஇத் தருமம்" என்றே.
வந்தவர் கூறக் கேட்டே மாத்தமிழ் வணிக ரெல்லாம் சிந்தித்தார் பொன்மு டிக்குச் சேதியைத் தெரிவித் தார்கள். வந்தனன் அன்னோன் என்ன வழக்கென்று கேட்டு நின்றான். பந்தியாய் ஆரி யர்கள் பரிவுடன் உரைக்க லானார்.
"மன்னவன் செங்கோல் வாழும், மனுமுறை வாழும்; யாண்டும் மன்னிய தருமம் நான்கு மறைப்பாதத் தால் நடக்கும்; இன்னல்கள் தீரும்; வானம் மழைபொழிந் திருக்கும்; எல்லா நன்மையும் பெருகும்; நாங்கள் நடத்திடும் யாகத் தாலே.
ஆதலின் உமைக்கேட் கின்றோம் அணிமுத்து வணிகர் நீவீர் ஈதலிற் சிறந்தீர் அன்றோ இல்லையென் றுரைக்க மாட்டீர்! போதமார் முனிவ ரேனும் பொன்னின்றி இந்நி லத்தில் யாதொன்றும் முடிவ தில்லை" என்றனர். இதனைக் கேட்டே
பொன்முடி உரைக்க லுற்றான்: "புலமையில் மிக்கீர்! நாங்கள் தென்னாட்டார்; தமிழர்,சைவர் சீவனை வதைப்ப தான இன்னல்சேர் யாகந் தன்னை யாம்ஒப்ப மாட்டோம் என்றால் பொன்கொடுப் பதுவும் உண்டோ போவீர்கள்" என்று சொன்னான்.
காளைஇவ் வாறு கூறக் கனமுறு தமிழர் எல்லாம் ஆளன்பொன் முடியின் பேச்சை ஆதரித் தார்கள்; தங்கள் தோளினைத் தூக்கி அங்கை ஒருதனி விரலால் சுட்டிக் "கூளங்காள்! ஒருபொன் கூடக் கொடுத்திடோம் வேள்விக்" கென்றார்.
கையெலாம் துடிக்க அன்னார் கண்சிவந் திடக்கோ பத்தீ மெய்யெலாம் பரவ நெஞ்சு வெந்திடத் "தென்னாட் டார்கள் ஐயையோ அநேக ருள்ளார் அங்கத்தால் சிங்கம் போன்றார் ஐவர்நாம்" எனநி னைத்தே அடக்கினார் எழுந்த கோபம்.
வஞ்சத்தை எதிர்கா லத்துச் சூழ்ச்சியை வௌிக்காட் டாமல் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு வாயினால் நேயங் காட்டிக் "கொஞ்சமும் வருத்த மில்லை கொடாததால்" என்ப தான அஞ்சொற்கள் பேசி நல்ல ஆசியும் கூறிப் போனார். |
20. வணிகர் வரும்போது
முத்து வணிகர் முழுதும் விற்றுச் சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில்
மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார்.
போகும் போது பொன்கேட்ட அந்த யாகஞ் செய்ய எண்ணு வோர்களின்
கொடுவிஷம் பூசிய கூரம்பு போன்ற நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்!
ஆத்திர முகங்கள் அங்குள தமிழரைப் பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின!
தமிழர் கண்டு சந்தே கித்தனர். "நமது சொத்தும் நல்லுயிர் யாவும்
பறிபோகும் என்று படுகின்ற" தென்றே அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான்.
செல்லத் தொடங்கினர் செந்தமிழ் நாட்டினர்; கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர்.
தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன! வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர்.
தப்பிய சிற்சில தமிழர் வனத்தின் அப்புறத் துள்ள அழகிய ஊரின்
பின்புற மாகப் பிரியும் வழியாய்ப் பொன்முடி யோடு போய்ச்சேர்ந் தார்கள்.
சூறை யாடிய துறவிகள் அங்கே மாறு பாட்டு மனத்தோடு நின்று
"வைதிகம் பழித்த மாபாவி தப்பினான்; பைதலி வனத்தின் பக்க மாகச்
செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக் கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனைக்
அனுப்பி வைப்போம் வருவீர் இனிநில் லாதீர்" என்று போனாரே. |
21. ஜீவமுத்தம்
வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்; வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று வடதிசைநோக் கிச்சென்றாள். நெருங்க லானார்! வளர்புதர்கள் உயர்மரங்கள் நிறைந்த பூமி! நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும் வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்! வணிகர்களும் கண்டார்கள் வெகுதூ ரத்தில்!
பொன்முடியும் எதிர்கண்டான் ஒருகூட் டத்தைப் புலைத்தொழிலும் கொலைத்தொழிலும் புரிவோ ரான வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்; வாய்மையுறு தமிழரெனத் தெரிந்து கொண்டான். தன்நடையை முடுக்கினான். எதிரில் மங்கை தளர்நடையும் உயிர்பெற்றுத் தாவிற் றங்கே! என்னஇது! என்னஇது! என்றே அன்னோன் இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான்.
"நிச்சயமாய் அவர்தாம்"என் றுரைத்தாள் மங்கை "நிசம்"என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல் கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்; கைகள் கொட்டினாள்! ஆடினாள்! ஓட லானாள். "பச்சைமயில்; இங்கெங்கே அடடா என்னே! பறந்துவந்து விட்டாளே! அவள்தான்" என்று கச்சைதனை இறுக்கிஎதிர் ஓடி வந்தான். கடிதோடி னாள்அத்தான் என்ற ழைத்தே!
நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது நெடுமரத்தின் மறைவினின்று நீள்வாள் ஒன்று பாய்ந்ததுமேல்! அவன்முகத்தை அணைத்தாள் தாவிப் பளீரென்று முத்தமொன்று பெற்றாள்! சேயின் சாந்தமுகந் தனைக்கண்டாள்; உடலைக் காணாள்! தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்! தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன் செத்ததற்குச் செத்தாள்அத் தென்னாட் டன்னம்! |
இரண்டாம் பகுதி
முறையீடு
22. தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்
திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும் தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த - குருமூர்த்தி
சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில் நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும்
நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் - அன்னார்
அருளுவார்: "மெய்யன் புடையீரே, அப்பன் திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை - உருகாதீர்!
அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத் தின்புலால் யாகச் சிறுமைதனை - நன்றுரைத்தான்.
ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ! தீதலால் வேறு தெரியாரோ! - சோதியான்
சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர் உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் - மெய்யன்பீர்,
பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! - தீங்கு
வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார் கடவுள் கருணை இதுவாம்! - வடவர்
அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப் பழிவாங் குதல்சைவப் பாங்குக் - கிழிவாம்.
வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின் நடமாட்டம் போகும்! நமனைக் - கெடமாட்டும்
தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை ஆளுடையான் செம்மை அருள்வாழி! - கேளீர்
குமர குருபரன் ஞான குருவாய் நமை யடைந்தான் நன்றிந்த நாள்! |
23. குருபரனுக் கருள்புரிந்தான்
கயிலாச புரத்தில் நல்ல சண்முகக் கவிரா யர்க்கும் மயில்நிகர் சிவகா மிக்கும் வாயிலாப் பிள்ளை யாக அயலவர் நகைக்கும் வண்ணம் குருபரன் அவத ரித்தான் துயரினால் செந்தூர் எய்திக் கந்தனைத் துதித்தார் பெற்றோர்.
நாற்பது நாளில் வாக்கு நல்காயேல் எங்கள் ஆவி தோற்பது திண்ண மென்று சொல்லியங் கிருக்கும் போது வேற்படை முருகப் பிள்ளை குருபரன் தூங்கும் வேளை சாற்றும்அவ் வூமை நாவிற் சடாட்சரம் அருளிச் சென்றான். |
24. ஊமையின் உயர் கவிதை
அம்மையே அப்பா என்று பெற்றோரை அவன் எழுப்பிச் செம்மையே நடந்த தெல்லாம் தெரிவித்தான். சிந்தை நைந்து கைம்மையாய் வாழ்வாள் நல்ல கணவனைப் பெற்ற தைப்போல் நம்மையே மகிழ வைத்தான் நடமாடும் மயிலோன் என்றார்.
மைந்தனாம் குருப ரன்தான் மாலவன் மருகன் வாழும் செந்தூரில் விசுவ ரூப தரிசனம் செய்வா னாகிக் கந்தரின் கலிவெண் பாவாம் கனிச்சாறு பொழியக் கேட்ட அந்தஊர் மக்கள் யாரும் அதிசயக் கடலில் வீழ்ந்தார்! |
25. ஞானகுருவை நாடிச் சென்றான்
ஞானசற் குருவை நாடி நற்கதி பெறுவ தென்று தானினைந் தேதன் தந்தை தாயார்பால் விடையும் கேட்டான். ஆனபெற் றோர்வ ருந்த அவர்துயர் ஆற்றிச் சென்றான் கால்நிழல் போற் குமார கவியெனும் தம்பி யோடே.
மீனாக்ஷி யம்மன் பிள்ளைத் தமிழ்பாட விரைந்து தம்பி தானதைக் குறிப் பெடுக்கத் தமிழ்வளர் மதுரை நாடிப் போனார்கள்; போகும் போது திருமலை நாய்க்க மன்னன் ஆனைகொண் டெதிரில் வந்தே குருபரன் அடியில் வீழ்ந்தான். |
26. யானைமேல் பானைத் தேன்
"என்னையும் பொருளாய் எண்ணி எழுதரும் அங்க யற்கண் அன்னைஎன் கனவில் தோன்றி அடிகள்நும் வரவும், நீவிர் சொன்னநற் றமிழும் பற்றிச் சொன்னதால் வந்தேன். யானை தன்னில்நீர் எழுந்த ருள்க தமிழுடன்" என்றான் மன்னன்.
தெய்விகப் பாடல் தன்னைத் திருவரங் கேற்று தற்கே எய்துமா றனைத்தும் மன்னன் ஏற்பாடு செய்தான். தேவர் துய்யநற் றமிழ்ச்சா ராயம் துய்த்திடக் காத்தி ருந்தார்; கையில்வாத் தியங்கள் ஏந்திக் கந்தர்வர் கண்ணாய் நின்றார். |
27. அவையிடைச் சிவை
அரங்கிடை அரசன் ஓர்பால், அறிஞர்கள் ஓர்பால் கேட்கத் தெரிந்தவர் கலையில் வல்லோர் செந்தமிழ் அன்பர் ஓர்பால் இருந்தனர். அரிய ணைமேல் இருந்தனன் குருப ரன்தான்! வரும்சனம் தமிழ ருந்த வட்டிக்க ஆரம் பித்தான்.
அப்போது கூட்டத் தின்கண் அர்ச்சகன் பெற்ற பெண்ணாள் சிப்பத்தைப் பிரித் தெடுத்த சீனத்துப் பொம்மை போன்றாள் ஒப்பியே ஓடி வந்தாள் காற்சிலம் பொலிக்க! மன்னன் கைப்பற்றி மடியில் வைத்தான்; கவிதையில் அவாவை வைத்தான். |
28. தெய்வப் பாடல்
குமரகு ருபரன் பாடல் கூறிப்பின் பொருளும் கூறி அமரரா தியர்வி ருப்பம் ஆம்படி செய்தான்; மற்றோர் அமுதப்பாட் டாரம் பித்தான். அப்பாட்டுக் கிப்பால் எங்கும் சமானமொன் றிருந்த தில்லை சாற்றுவோம் அதனைக் கேட்பீர்.
"தொடுக்கும் கடவுட் பழம்பாடற் றொடையின் பயனே! நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ் சுவையே! அகந்தைக் கிழங்கைஅகழ்ந் தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே! வளர்சிமைய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே! எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள் ளத்தில்அழ கொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே! மதுகரம்வாய் மடுக்கும் குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே வருகவே! மலையத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே!" |
29. இறைவி மறைவு
என்றந்தப் பாடல் சொன்னான் குருபரன்! சிறுமி கேட்டு நன்றுநன் றென இசைத்தாள்; நன்றெனத் தலை அசைத்தாள்; இன்னொரு முறையுங் கூற இரந்தனள்; பிறரும் கேட்கப் பின்னையும் குருப ரன்தான் தமிழ்க்கனி பிழியுங் காலை,
பாட்டுக்குப் பொருளாய் நின்ற பராபரச் சிறுமி நெஞ்சக் கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து கொஞ்சினாள் அரங்கு தன்னில். ஏட்டினின் றெழுத்தோ டோடி இதயத்துட் சென்ற தாலே கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும் சீமட்டி! |
30. திருவடி சரணம்
முழுதுநூல் அரங்கேற் றிப்பின் முடிமன்னன் குதிரை யானை பழுதிலாச் சிவிகை செம்பொன் காணிக்கை பலவும் வைத்துத் தொழுதனன். குருப ரன்பின் துதிநூலும் நீதி நூலும் எழுதிய அனைத்தும் தந்தே சின்னாட்கள் இருந்து பின்னே,
தம்பியை இல்லம் போக்கித் தான்சிராப் பள்ளி யோடு செம்மைசேர் ஆனைக் காவும் சென்றுபின் திருவா ரூரில் பைம்புனற் பழனத் தாரூர் நான்மணி மாலை பாடி நம்மைவந் தடைந்த காலை நாமொரு கேள்வி கேட்டோம்.
"ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடு மானந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்."
ஆகுமித் திரு விருத்த அனுபவப் பயனைக் கேட்க ஈகுவோன் கையி லொன்றும் இல்லாமை போல் தவித்துத் தேகமும் நடுங்கி நின்று திருவடி சரணம் என்றான் ஏகிப்பின் வருக என்றோம் சிதம்பரம் ஏகி உள்ளான்.
சென்றஅக் குருப ரன்தான் திரும்பிவந் திடுமோர் நாளும் இன்றுதான். சிறிது நேரம் இருந்திடில் காணக் கூடும். என்றுநற் றேசி கர்தாம் இருநாய்கண் மாருங் கேட்க நன்றுற மொழிந்தார். கேட்ட நாய்கன்மார் காத்தி ருந்தார். |
31. சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்
புள்ளிருக் கும்வேளூர் போய்ப் புனைமுத்துக் குமரன் மீது பிள்ளைநூல் பாடி மன்றில் பெம்மானை மும்மணிச் சொல் தெள்ளுநீர் ஆட்டிப் பின்னும் சிதம்பரச் செய்யுட் கோவை அம்மைக் கிரட்டை மாலை அருளினான் இருளொன் றில்லான்.
மூளும்அன் பாற் பண்டார மும்மணிக் கோவை கொண்டு ஆளுடை ஞானா சானின் அடிமலர் தொழுது பாடி நீளுறப் பரிசாய்ப் பெற்ற நெடுநிதி அனைத்தும் வைத்து மீளவும் தொழும் சீடன்பால் விளம்புவான் ஞான மூர்த்தி.
"அப்பனே இதுகேள்! இந்த அரும்பொருள் அனைத்தும் கொண்டு செப்பிடும் வடநா டேகிச் சிவதரு மங்கள் செய்க! அப்பாங்கில் உள்ளா ரெல்லாம் அசைவர்கள், உயிர்வ தைப்போர்; தப்பிலாச் சைவம் சார்ந்தால் அன்பிலே தழைத்து வாழ்வார்.
சைவநன் மடா லயங்கள் தாபிக்க! கோயில் காண்க! நைவார்க்குச் சிவபி ரானின் நாமத்தால் உணவு நல்கும் சைவசத் திரங்கள் காண்க! தடாகங்கள் பூந்தோட் டங்கள் உய்வாக உயிரின் வேந்தன் உவப்புறச் செய்து மீள்க!"
என்றுதே சிகனார் சொல்லி இனிதாக ஆசி கூறி நன்றொரு துறவு காட்டிக் காவியும் நல்கி, ஆங்கே "இன்றொடு வட தேசந்தான் எம்பிரான் இருக்கை யாகித் தென்றமிழ் நாட்டினைப் போல் சிறப்பெலாம் எய்த" என்றார்.
மறைநாய்கன் மான நாய்கன் வாய்மூடிக் காத்தி ருந்தார். குறைவறு பரி சனங்கள் கூட்டமாய்த் தொடர, அன்பால் இறைவனாம் தேசி கன்தாள் இறைஞ்சிய குருப ரன்தான் பிறைசூடி தன்னைப் பாடிப் பெருஞ் சிறப்போடு சென்றான். |
32. இப்போதெப்படி நாய்கன்மார்கள்?
தேசிகர் சரிதம் சொன்னார் செவிசாய்த்தார் நாய்கன் மார்கள் ஆசிகள் சொல்லக் கேட்டார் அப்போது குருப ரன்தான் தேசிகர் திருமுன் வந்து சேர்ந்ததும் பார்த்தி ருந்தார் நேசத்தால் தேசி கர்தாம் நிகழ்த்திய அனைத்தும் கேட்டார்.
வடநாட்டை நோக்கிச் சென்ற வண்ணமும் பார்த்தி ருந்தார்; உடன்சென்று வழிய னுப்ப ஒப்பினோர் தமையும் பார்த்தார்; கடனாற்றத் தேசி கர்க்குக் கைகளும் குவித்தார்; செல்ல விடைகேட்டார். தேசி கர்தாம் விடைதந்தார். எனினும் அந்தோ
அழுதிடு நாய்கன் மார்கள் அழுதுகொண் டேமீண் டார்கள்; எழுதிய ஓவி யங்கள் கலைந்தன எனப் பதைத்தார். பழுதிலா எம்கு டும்பப் பரம்பரை `ஆல்' இன்றோடு விழுதொடு சாய்ந்த தென்று விளம்பினார் உளம் பதைத்தே. |
எதிர்பாராத முத்தம் முற்றும்.
எதிர்பாராத முத்தம் - பகுதி 2
|