தேர்தல் சமயத்தில் போலியான செய்திகளை பரப்புவது, வாக்காளர்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்வது போன்ற நடவடிக்கைகளை தங்களது தளத்தில் அனுமதிப்பதில்லை என சமூக வலைத்தள நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்துக்கு உறுதியளித்துள்ளன.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில் உண்மையற்ற செய்திகளை பரப்புவதையும், வாக்காளர்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்வதையும் தடுக்கும் வகையிலான முன்னோட்ட முயற்சி கர்நாடக பேரவைத் தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்டது. அது ஓர் தொடக்கம் மட்டுமே ஆகும்.தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த முன்னோட்ட முயற்சி மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும்.
இதற்காக, கூகுள், முகநூல், சுட்டுரை ஆகிய நிறுவனங்களின் பிராந்திய மற்றும் பகுதிசார் தலைமை அதிகாரிகளுடன் மூத்த துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் சூழலைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு செய்தியையும் தங்களது தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த நிறுவனங்கள் உறுதி அளித்தன. அந்தத் தணிக்கை நடவடிக்கை வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பிருந்தே அமல்படுத்தப்படும் என அவை தெரிவித்துள்ளன. அந்த 48 மணி நேரமானது, தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்களே ஆழ்ந்து யோசித்து தீர்மானிக்க அளிக்கப்படும் அவகாசமாகும். இவ்வாறு ஓ.பி. ராவத் கூறினார்.
|