oru kirAmaththup peNNin thalaip piracavam - collection by Ira. Murugan
'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' - கவிதைத் தொகுப்பு
முன்னுரை
கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.
அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார்.
எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம் கதையாக எழுதியிருந்தாலும் இந்தத் தொனிதான் இருந்திருக்கும் என்ற நினைப்பும் கூடவே ஆசுவாசமாக எழுகிறது.
கவிஞர் மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் ஊர்க்காரரும், என் கல்லூரி ஆசிரியருமான அவருடைய பிரபலமான 'கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்' என்னைப் பாதித்திருக்காவிட்டால் முதல் கவிதையை எழுதியிருக்க மாட்டேன்.
இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவை கணையாழியில் வௌியானவை. இருபத்தைந்து வருடங்களாகக் கணையாழியில் கவிதைகளும், "முன்பிருந்த தரத்தில் கவிதைகள் இல்லை. கவிதைத் தேர்வில் கவனம் தேவை" என்று கடிதங்களும் தொடர்ந்து வருவதிலிருந்து ஆங்காங்கே எல்லோரும் அடிக்குச்சிக் கவிதைகளை வைத்திருப்பது புலப்படுகிறதோ இல்லையோ, 'இன்றைய தேதியில் எழுதப்படுவது மோசமான எழுத்து' என்ற எண்ணம் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. சங்க காலத்திலும், இப்படி அதற்கு முந்திய காலத்தை உற்சாகமாகக் கையைக் காட்டித் திருப்திப்பட்டிருக்கலாம்!
என் கவிதைகளை வௌியிட்ட கணையாழிக்கும், மற்றப் பத்திரிகைகளுக்கும் நன்றி. சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் தெரிந்திருந்த என்னை வெகுஜனப் பத்திரிகை வாசக வட்டத்திலும் பலமாக அறிமுகம் செய்த 'எங்க வாத்தியாரை' (சுஜாதா) இங்கே நினைக்காவிட்டால், "இன்றைக்கு ராத்திரி சோறு கிடைக்காது;"
'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' சென்னை ஸ்நேகா பதிப்பகம் வௌியீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் - கவிஞர் - ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். இருவருக்கும் என் நன்றி.
மார்ச் 2000-ல் சுஜாதா வௌியிட்டது இப்புத்தகம்.
இரா.முருகன் (ஆகஸ்ட் 2003)
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இடம் பெற்ற இதழ்கள் : -
கணையாழி தீபம் ழ அன்னம் விடுதூது சுபமங்களா நவீன விருட்சம் முன்றில் தினமணி கதிர் கல்கி ஆனந்த விகடன் அம்பலம் இணைய இதழ்
நாள்
விடியும்போது ஒலிபெருக்கி எழுப்பச் சேவல் அடித்தனர் விருந்து சமைக்க. பூப்பு நீராடப் போனாள் சிறுமி. காய்கறிக் கடைக்குக் கூடை சுமந்து புடவை திருத்தி நடந்த அலிக்குச் சோப்பு வாங்கக் கடையே திறக்கலை.
கரகக் காரனைப் பகலில் பார்த்தேன், நாவிதர் கடையில் ஆள்வராப் பொழுதில் முகத்தைக் கொடுத்துத் தூங்கத் துவங்கி. செண்டை மேளம் முழங்கும் தெருவில் கருப்புச் சாமிகள் ஊர்வலம் வந்தனர். துடைக்கத் துடைக்கச் சிந்திய ரத்தம்.
நாடக அரங்கில் கூட்டம் குறைவு. வசனம் மறந்து இருமி இறந்து பணத்தை வாங்கி வௌியே நடந்தான். ஒற்றை அறையில் கூட்டத் தூக்கம். மனைவியை உசுப்ப அம்மா இருமினாள். மருந்து வாங்க மறந்து போனது.
(கணையாழி)
சமாதியிலிருந்து கோயில் வரைக்கும்
கோவணச் சாமியார் கிழட்டுத் தளபதி, பாளையக் காரன் தடவி அலுத்த பழைய வைப்பாட்டி, வைப்பாட்டி வளர்த்த சினைப்பசு, கிளிக்குஞ்சு, திண்ணைமாமா - உள்ளே யாரோ ஊர் மறந்தாச்சு.
கோடையில் ஒருநாள் தரிசுக ளூடே மேற்கி லிருந்து நடந்து வந்த ஒருத்தன் சொன்னதால் வெள்ளை யடித்துக் கோயில் புதுக்கினர் கிராமம் செழிக்க.
சாலியா புரத்துச் சந்தைக் கடையில் ஆடும் மாடும் அரையில் ரோகமும் மலிவாய் வாங்கி விளம்பர வைத்தியன் மருந்து விழுங்கும் பெரிய்ய பண்ணை செய்து வைத்தார் லிங்கப் பிரதிட்டை.
வாரிசு இல்லாக் குருக்களின் விதவை எரவா ணத்தில் செருகி இருந்த செல்லரித்த புத்தகம் படித்து மந்திரம் சொன்ன கிழப் பூசாரி பழகிக் கொண்டான் தீட்டுப் பார்க்க.
நூறு வருசம் பின்னால் நடந்தால் சமாதி மூலம் தௌிவாய்த் தெரியலாம். பத்து வருடம் முன்னால் நகர்ந்தால் கோயில் மகிமை புத்தகம் போடலாம். இப்பச் செய்ய என்ன இருக்கு? சாலியா புரம் சந்தைக்குப் போகலாம்.
(கணையாழி)
பயம்
போகக் கூடா தென்பதை மீறி வௌியில் நடந்து திரும்பி வந்தால் பாதை யிருட்டில் நௌியும் வாசல் படிக் கட்டிலும் அசுவனி உதிர்க்கும் பந்தல் கீழும் துரத்தி வரும்.
நாற்கா லியிலும் யோகம் போலக் கால்கள் மடித்து அமர வைக்கும். மின்விசை தவறிய வீட்டில் இருளில் மெழுகின் நிழலில் பலவாய்ப் பெருகும்.
படுக்கை விரித்தால் தலைக்கு மேலே சீறத் துவங்கித் தூக்கம் கெடுக்கும். தூளிக் கயிற்றில் இறங்கு மென்று பக்கம் கிடத்திய குழந்தை சிணுங்கும்.
தூறத் துவங்கிய போது சன்னலைச் சாத்தப் போனால் திரும்ப வைக்கும். விடியும் நேரம் கொஞ்சம் அயர்ந்தால் கனவில் நீண்டு கழுத்தில் படரும்.
விடிந்த பிறகு மகுடி வைத்து ஊதிப் பார்த்தால் ஒன்றையும் காணோம், நேற்றுப் பார்த்ததாய்ச் சத்தியம் செய்தவர் இல்லையென்று புதிதாய் மறுக்கக் கோணிப் பையில் அரிசி வாங்கிப் போனான் பிடாரன் பயத்தைப் பிடித்து.
(கணையாழி)
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்
மூடுவண்டித் திரைக்குப் பின் முனகிநீ புரண்டிருக்கக் காற்றணைக்கும் லாந்தர் கைப்பிடித்துக் கூட வந்து ஊர் உறங்கும் வேளை பேர்தெரியா மருத்துவச்சி வாசலிலே நின்றபோது பேச்சுக் குரலெழுந்து நித்திரை கலைந்த நாய்கள் அதட்டும்.
பின்னிரவுப் பனியும் பீடிப் புகையுமாய் வாசலிலே நின்று வானம் வெறித்திருக்க, வெள்ளம் அழித்த அறுவடையை, வீட்டுச் சுவர்கள் விழுந்ததை, நீல மூக்குத்தி கடன் நிலுவையில் மூழ்கியதை,
பால் மரத்த பசுமாட்டை, பஸ் அடித்த வெள்ளாட்டை, ஆயிக்குத் திவசம் தர அய்யருக்கு அலைந்ததை, காளிக்குத் தரவேண்டிய கழுத்தறுத்த சேவல்களை, ஆசையாய் நீ கேட்டு, வாங்காதுபோன வட்டுக் கருப்பட்டியைச் சுற்றும் நினைவுகள் சூழ்ந்து குழம்ப, நேரம் மறந்து நின்றபோது ஆரோ வந்து சொன்னார் அழகான குழந்தையென்று. *
ஆற்றுச் சலசலப்பில் காலை விடிந்தபோது உலகம் புதுசாச்சு உள்ளமும் நேராச்சு.
* கணையாழியிலும், நூலிலும் 'ஆண் குழந்தையென்று' என வந்ததை இங்கே மாற்றி இருக்கிறேன்.
திருவாளர் சங்கப் புலவர்
ஆற்றுப் படையெழுத அச்சாரம் வாங்கி அரண்மனைப் படிகளில் இறங்கிய புலவன் யோசித்த படிக்குத் தெருவில் நடந்தான்.
ஆற்றங் கரையில் புதிய கூட்டம். ஆண்கள், பெண்கள், சின்னக் குழந்தைகள்.
துண்டு விரிப்பில் பேரியாழ் கிடந்தது. அருகே ஒருசிசு ஒன்றுக் கிருந்தது. பாணர்கள் குழுமிப் பல்விளக் கினார்கள்.
குந்தி யிருந்து வந்த பாணன் அரண்மனை போக வழியைக் கேட்டான். புலவன் தொடங்கினான் ஆற்றுப் படுத்த.
இப்படிப் போனால் விரசாய்ப் போகலாம். விறலியை முன்விட்டு மெல்லநீ பின்போ. குழந்தை இடுப்பில் கிள்ளி அழவிடு.
யாழின் நரம்பை முறுக்கிக் கட்டி மன்னனை வாழ்த்திப் பாடணும் சத்தமாய். திருமகள் கேள்வன் காது மந்தம்.
ஆற்றுப் படுத்திய காரியம் முடிந்து அருகே அமர்ந்து வெற்றிலை போட்டான் ஊர்பேர் விவரம் உசாவிக் கொண்டு.
தொலைவில் கிழக்கே கிழக்கேயோர் நாட்டிலே நிலம் இருந்தது உள்ளங்கை அளவு கொஞ்சம் விளைந்தது குடும்பம் நடந்தது.
அரசன் கனவில் ஆண்டவன் வந்து ஆற்றுப் படுகை நிலமெலாம் கேட்டதால் பறித்துக் கொண்டனர் ஆலயம் எழுப்ப.
கோயில் குடமுழுக் காகும் போது குடிசை பிரித்துத் துரத்தி விட்டார்கள் குதிரை நிறுத்த இடமில்லை என்று.
சோறு தேடி அலைந்தபோது பழைய யாழிது மலிவாய்க் கிடைத்தது. பழகிக் கொள்கிறோம் வாசிக்க அனைவரும்.
இவள் என்மனைவி பாடத் தெரியும் நானும் கொஞ்சம் பாட்டுக் கட்டுவேன். கவனப் படுத்திய பாட்டிதைக் கேட்டுத் திருத்திக் கொடுத்தால் நன்றி உனக்கு.
எதிரி நாட்டைத் தீயிடை மடுத்தது எல்லா வயது மங்கையர் வளையும் நெகிழச் செய்தது, செங்கோல் சிறப்பு -
எல்லாம் கேட்டு முடித்த பின்னர் யாழின் நரம்பை மாற்றச் சொல்லி யோசனை தந்து புலவன் கிளம்பினான். ஆயிரம் ஓலை புதிதாய் வாங்கி ஆற்றுப் படையெழுதத் தொடங்கும் முன்பு யாப்பிலக்கணம் யாரிடம் வாங்கலாம்?
பிரதானம்
மழையில் நனையும் ஊர்வலம் எதுவோ உருவம் சிதையக் கடந்து போகும், குறுக்குச் சந்தில் நெருங்கி நடந்து வெற்றிலை உமிழத் தரையைத் தேடும், வாசல் மறித்து நீளும் குடங்களின் வரிசையோடு நகர்ந்து கதைக்கும், எண்ணெய் கசியும் இனிப்புக் கூட்டிய பொட்டலம் பிரித்துப் படித்து மெல்லும் தெருவின் முகங்கள் பார்த்தது போதும்.
பொடிக்கடை முன்பு கண்கள் உருட்டி விளம்பரம் செய்ய நிறுத்தி இருந்த பொம்மைக் கழுத்து மூங்கில் தெரியத் தலையைத் திருடிய பயலைத் தேடும்.
(கணையாழி)
சுழல்
வெள்ளை யடித்துச் சுவரின் மேல் சின்னம் எழுத வந்தார்கள். பேசிச் சிரித்துப் பீடி புகைத்து அளவாய்க் கொஞ்சம் நிறங்கள் கலந்து பார்த்துப் பார்த்து எழுதி விட்டுப் பக்கச் சுவரில் சிறுநீர் கழித்துப் போனவர் மீண்டும் திரும்பி வந்து இந்தச் சுவரை நனைத்துப் போவார். வெள்ளை யடிப்பதும் மூத்திரம் பெய்வதும் நிலைக்கச் சுவர்கள் விழுந்து முளைக்கும்.
(கணையாழி)
ஆத்தா
கடுதாசுக் கட்டெடுத்துக் கையிலொரு குடை பிடித்து, வேகாத வெய்யிலிலே வீதிவழி போறவரே, சாகாமல் கிடந்து சன்மம் சீரழிஞ்சு போகாதா நாளெண்ணு பொழுதெண்ணிப் பார்த்திருந்து புத்தி கெட்டுப் புலம்பறதைச் சித்த நின்னு கேளுமய்யா.
பாதிரா வேளையிலே பாவிநான் பரிதவிக்கப் பட்டாளம் சேர என்னை விட்டோடிப் போனபிள்ளை எங்கேயோ இருந்து எழுதின கடிதாசை பிரியமுள்ள அம்மா பிள்ளைநான் சேமமின்னு வாசித்துக் காட்டிவிட்டுப் போனது நினைவிருக்கா?
மாசம் பொறந்து மணிமணியாக் கையெழுதி மகன் சொல்லும் சங்கதிகள் மணியார்டர் காயிதங்கள் கொண்டு வந்தெனக்குத் தந்ததெல்லாம் நினைவிருக்கா?
மகனையே நினைச்சு மனசுருகிக் காத்திருந்து பார்க்க வேணுமின்னு பரிதவித்து நிற்கையிலே வாரானென்னு சேதி வந்து சொல்லிப் போனீங்க.
வெள்ளனவே எளுந்திரிச்சு வென்னீரும் தான்வச்சுப் பிள்ளை பசியாறப் புட்டு அவிச்சு வச்சுச் சீரகச் சம்பாச் சோறும் தான் சமச்சு அயிலைமீன் குழம்பும் ஆக்கி வச்சுக் காத்திருந்தேன்.
நிலைவாசல் படிதாண்டி நிழல் தட்டும் போதெல்லாம் வந்துட்டான் மகனென்னு வாரி எழுந்து வந்தேன். அக்கம் பக்கத்திலே அம்மான்னு குரல் கேட்டா, எனமகன் என்று சொல்லி எழுந்து ஓடிவந்தேன்.
எதிர்பார்த்து இருந்ததெல்லாம் ஏமாந்த கதையாக, வரலையென்னு சேதி வந்துசொல்லிப் போனீங்க. தூரத்துத் தேசத்திலே யுத்தமொண்ணு வந்திடுச்சாம். சண்டை முடிந்தங்கே சமாதானம் ஆனபின்னே வந்திடுவான் மகனென்று வாசித்துச் சொன்னீங்க.
சண்டையெல்லாம் முடிஞ்சிடுத்து சமாதானம் ஆயிடுச்சு புதுசாச் தேசமொண்ணு பெறந்துடுச்சு என்னெல்லாம் தந்திப் பேப்பரிலே வந்ததாகச் சொன்னாங்க என்னத்தை நான் கண்டேன் எழுத்தறியாப் பாவிமக பிள்ளையையே நினைச்சுப் பரிதவிச்சுக் காத்திருந்தேன்.
அய்யோ நான் என்ன சொல்ல அன்னைக்கு வந்த சேதி தேகம் நடுங்குதே வார்த்தையுந்தான் குழறுதே நெஞ்சிலே துக்கம் நெரிகட்டி இறுக்குதே. முன்வரிசைச் சிப்பாயா முகம்சிரிச்சுப் போனபிள்ளை தொலைஞ்சுட்டான் அவன்போன தடங்கூடப் புலப்படலை. ஆபீசர் கையெழுதி அந்த லெட்டர் வந்துச்சு.
இந்த இடிவிழுந்தும் இருக்கேனே போகாம பித்துப் பிடித்தவளாப் புலம்பறேனே ராப்பகலா. அரச மரஞ் சுத்தி ஆத்தாளைக் கும்பிட்டு வரம் வாங்கிப் பெற்று வந்த வயிரத்தைக் காண்பேனோ வரும்வரையில் இருப்பேனோ.
அல்லல் துன்பப்பட்டு அக்கரைச் சீமைக்குத் தாயாரைக் காப்பாத்தத் தங்க மகன் போகவேண்டாம் எங்கேயோ உசிரோடு இருக்கிறதா அவனெழுதிக் கடுதாசு வந்தாலே காலமெல்லாம் போதுமய்யா.
கடுதாசுக் கட்டெடுத்துக் கையிலே குடைபிடிச்சு வேகாத வெய்யிலிலே வீதிவழி போற அய்யா உங்க முகம் பார்த்தா என் தங்கம் நினைவு வரும்.
இன்னைக்கும் கடுதாசு இல்லையென்னு சொல்லாது நாளைக்கு வருமென்னு நம்பிக்கை சொல்லிடுங்க. நல்லா இருப்பீங்க நாச்சியா கிருபையிலே.
(தீபம்)
பெண்
கனவிலும் வரிசை தப்பாது வரும் வீடுகள் கடந்து கோபுர நிழல் நீளும் சின்ன வீதியில் நடக்க மாட்டேன்.
ஆற்றங் கரையில் ஊற்றுத்தோண்டிக் கதைகள் பேசி அலுத்த பின்னே குடம் நிறைத்து ஈரமண் உதிரும் சிற்றாடை அசையக் கூடநடந்து வந்த தோழிகளைத் தேட மாட்டேன்.
அப்பா வந்ததும் குதித்தோட அண்ணாவோடு காத்திருந்த கல் யானைப் படிகள் ஏறி, ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில் அம்மாவின் பழம்புடவை தரை புரளும் ராணியாய் வலம் வந்த திண்ணை கடந்து இருண்ட நடையுள் போக மாட்டேன்.
மௌனமாய்க் கண்ணீரில் அம்மா கரைய, அண்ணா உறவு மறுக்க, தெருவே கூடிப் பேசி நிற்க, படமாய்த் தொங்கிப் புன்னகைக்கும் அப்பாவையே பார்த்தபடி நின்ற கூடத்தில் பாதம் பதிக்க மாட்டேன்.
உறவுகள் கடந்து உன்னைப் படர்ந்து மலர்த்திய உறவு தொட்டிலில் துயிலும். பாதித் தலையணையில் விழித்த உடலிருக்க மனம் மட்டும் அங்கெல்லாம் மெல்லப் பயணம் போகும்.
(கணையாழி)
நாளை, இல்லை மறுநாள், இல்லை என்றாவது
ராத்தங்கக் கூடாத கிட்டப்பாவை சாயந்திரமே எரித்தபோது வெட்டியானுக்கு விறைப்பு.
ரெண்டு பொங்கலுக்கு வாசலிலே நின்னு வசவுதான் கிடைத்ததாம். 'கட்டிக்கிட்டா போனாரு?'
கொள்ளி போட பிள்ளை தாராள மனதோடு கொடுத்தது இருபது ரூபாய். பம்பாயிலிருந்து இனிமேல் மாதாந்திர மணியார்டர் மிச்சம்.
ஊருணிக் குளியல். சொறிந்து கொண்டு கோனார் கடையில் பரோட்டா. இழுத்து நின்ற நாய்களைப் பிரித்து விட்டு இரண்டாம் ஆட்டம் பழைய படம்.
இடைவேளையில் மூத்திரப் புரையில் ஒருத்தன் சொன்னான் - நாளைக்கு இண்டர்வ்யூ.
கொஞ்ச நேரத் தூக்கத்தில் பம்பாயிலிருந்து வந்து வெட்டியானுக்கு நூறுரூபாய் கொடுத்தேன். பக்கத்தில் நின்று அப்பா சிரித்தார்.
(கணையாழி)
சூழல்
என்மேல் எச்சமிட்டுப் போன பறவைக்கு நீலச் சிறகுகள்.
தொழிற்சாலைப் புகை சேராத சுத்த வானிலும் பறவைகள் இருந்தன.
கொடிக் கம்பத்தில் அலகு தேய்க்கும் ஒன்று. நாயர் கடையின் தகர அடைப்பைத் தட்டிப் பார்க்கும் வேறொன்று.
பட்டுப் போன தொட்டிச் செடிகளில், சைக்கிள் ஸ்டாண்ட் விநாயகர் தோளில், கண்ணாடி உடைந்த ஆபீஸ் ஜன்னலில், எங்கும் பறவைகள்.
சங்கக் கட்டிடக் கூரையில் சிலவோ தலைவர் போல நடைகள் பழகும்.
உச்சி வெய்யிலில் ஊர்வலம் வந்து வெட்ட வௌியில் வியர்த்து நின்று இன்னும் கொஞ்சம் உரைகள் கேட்டு அடைத்த கதவைப் பார்த்துப் போகிறார்.
வெய்யில் தாழப் பறவைக் கூட்டமும் விண்ணில் ஏறி மறைந்து போகும். இரைச்சலும் புகையும் இல்லா இடங்களில் பறவைகள் இனியும் திரும்பி வரும்.
(கணையாழி)
இடம் பெயர்தல்
பழைய நகரம். பாதை மறந்து குழம்பித் தவிக்க ஒருவன் சொன்னதால் கிழக்கே போனேன். சுற்றி வந்தால் பலகை அடைத்த செருப்புக் கடையின் வாசலில் நின்று திரும்பவும் அவனே மேற்கு என்றான் சிரித்த படிக்கு.
நடந்த வழியும் அவனில் முடிய இன்னும் எங்கோ கையைக் காட்டினான்.
தேடல் மறந்து சூரியன் போல விரியும் கைகளின் திசைகள் சார்ந்து இருண்ட தெருக்களில் அலைந்து திரும்பித் தளரும் நேரம் கண்ணை விழிக்கிறேன்.
காலை எடுத்து நாலு நாளாச்சு. கட்டைகள் வரும்வரை பொறுக்க வேணுமாம்.
அப்புறம் படுத்தால் ஏழெட்டுப் பேரை ஒன்றாய்க் கிடத்தித் தூக்கிப் போகும் ஊர்வலம் ஒன்று. அழுக்குத் தலையணை வேண்டா மென்று மறுக்க மறுக்கச் சுமந்து போயினர். எழுந்த போது வந்து இருந்தன கட்டைக் கால்கள்.
(கணையாழி)
நாயம்
கோவாலுக்குக் கொள்ளைப் பிரியம். மிட்டாய்க் கடைக்கும் மீன் சந்தைக்கும் சிட்டுக் குருவி லேகியம் வாங்கவும் கூட்டிப் போவான் சைக்கிளில் ஏற்றி. ராமே சரத்தில் வாளிக்காரன் பின்னே நடந்து ஈரத்தோடு தீர்த்த மாடப் போனதாய்க் கேள்வி. கோவாலு மச்சினிக்குக் குமட்டல் எடுத்தால் கோவாலைக் குரைப்பதில் என்ன நாயமாம்? கொன்று புதைத்தான் கோவாலு.
எலுமிச்சை மரத்தின் கீழ் நாய் தூங்க ஏணையில் கோவாலு மகன் கிடக்கக் குச்சு நாய் வேணுமாம் குழந்தை விளையாட.
(கணையாழி)
கணக்கெடுப்பு
முகமுடி யணிந்தோம் எனது நீலம் பழுப்பாய்த் தாடை மயிர் துருத்த மற்றவர் அணிந்தனர். கறுப்பும் இருந்தது.
காற்றில் நெடிகள் ஏறின. வௌியே ஊர்திகள் வேகம் கொண்டன. வானம் சுருங்கக் காகிதம் ஒட்டிய சுவர்கள் உள்வளைந்து தொடமுயல யந்திரம் ஒன்று பாடியது.
சூழ்ந்து நீரழுத்தும் ஒழுங்கை யுள்ளே மெல்ல நடந்தோம். செவ்வகமாகக் கிடந்த அறை. வௌிர் நீல விளக்கில் படுத்திருந்தார்கள்.
எண்ணத் தொடங்கினோம். எல்லாம் சரிதான். போகலாம். மணி ஒலித்தது.
சுகாதாரமான அலுவலகத்தில் தட்டச்சுப் பொறிகள் நிறுத்திப் பெண்கள் கேட்டனர் - 'எத்தனை இருந்தது?' முகங்கள் கழற்றினோம். நாளை எனக்கு நீலம் - நண்பன் சொன்னான்.
'எத்தனை இருந்தது'? மறுபடி அவர்கள். விரித்த கோப்பில் என்பெயர் கண்டேன்.
எண்ணத் தொடங்கினர். ஒன்று என்று நீண்ட விரல்கள் என்னைச் சுட்ட.
(கணையாழி)
வீடு விற்பனைக்கு
என்ன கேட்டீர் வண்டிக் காரரே? ஊருக்கு நானொன்றும் புதுசு இல்லை.
மாறிப் போச்சுங்க ஊர் முச்சூடும். மாறாதது நானும் என் குதிரையும்.
பூட்டிய வீட்டு வாசலில் நிறுத்தும். போட்டுக் கொடுங்க முதல் சவாரி.
கதவைத் திறக்கப் புழுதி படிந்த வாசல் திண்ணை. ('சுதந்திரச் சங்கு' வீசிப் போவார் சுதேசி நாயக்கர்.)
(தீபாவளிக்குக் காந்தி சொற்படி கதர்தான் வாங்கணும். சிந்தாமணியில் பாகவதர் டாக்கி. சீட்டுக் கிடைச்சுதா?)
சவுக்கிய மெல்லாம் எப்படீங்க? வெங்கடா சலமா? தவறிப் போய் வருசம் நிறைய ஆகிப் போனதே.
'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து' சுக்கலாய் உடைந்து கிடந்தது. ராட்டைப் பெட்டியில் வண்டுகள். ரிஜிஸ்தர் ஆப்பீசில் பத்திரம் பதிந்தேன்.
வழக்கம் போல் ரயிலடிப் பலகை விசாரிக்கிறது - 'இந்த வாரம் விகடன் படித்தீர்களா?' மாதுங்காவில் போய்த்தான் வாங்கணும்.
நல்ல வரனாய்ப் பெண்ணுக்கு அமையணும். தெரிஞ்சால் சொல்லும் பம்பாய்க் குள்ளே.
('அன்னம் விடுதூது')
வௌி
சைக்கிள் படிக்கும் சிறுவன் தவிர மைதானத்தில் யாரையும் காணோம். தூங்கும் மரத்தின் வெள்ளைப் பூக்கள் சிதறிய தரையில் முள்ளால் எழுதிய பெயர்கள் மற்றும் உருளைக் கற்கள். கிடந்த வாக்கில் சக்கரம் சுழலச் செங்குத் தாகவோர் வெறுமை நின்றது.
குதிரைகள் வந்தன. முதலில் ஒன்று வெறுமை தகர்த்து வெட்ட வௌியில் சாம்பல் பூசி மெல்ல நடந்தது. அழியும் முன்னர் மற்றொன் றாங்கே மேலும் அந்நிறம் பூசிச் சென்றது. செம்மண் பரப்பில் நீளநட்ட சாம்பல் தளத்தின் எல்லைகள் விரிய, இன்னும் வந்த குதிரைகள் எல்லாம் வேகம் கொண்டு வௌியை நிறைத்தன.
சாம்பல் பூசிய காற்றும் அதிர, அடிப்படைப் பரப்பும் காலில் மறைய, புதிய தளத்தில் இயக்கம் மிகுந்தது. ஒதுங்க நினைத்தேன். ஓடலானேன். முதுகில் விசிறும் ஈர வால்களும் முகத்தில் எழுத முற்படும் கால்களும் தவிர்த்து விரையப் பரப்பு நீண்டது.
சைக்கிள் சிறுவன் போய்விட் டிருந்தான். வியர்வைத் துளிகளில் சாம்பல் உதிரத் திரும்ப நோக்கினேன். இருட்டு மழையில் தொலைப்புலம் எல்லாம் மசங்கித் தெரிய வண்டுகள் ஒலிக்கும் நிசப்தம் கிழித்து.
(கணையாழி)
401
தலையலங் கானத்துச் செருவில் பொருத நடந்த படையில் ஒருத்தன் வழியில் வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான். விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது.
குப்பைக் கோழிகள் மேயும் முன்றிலில் அரவம் கேட்டு வௌியே வந்தவள் ஈன்று அளித்த கடமை முடித்தவள்.
யவனக் கப்பலில் முத்தும் மிளகும் ஏற்றி ஏற்றிக் களைத்துத் திரும்பித் தகப்பன் உள்ளே உறங்கிக் கிடந்தான்.
ஆறுதல் சொல்லிக் கூட்டம் கலைந்தது. அழுது முடித்துப் பெற்றவள் ஓய்ந்தாள். பார்ப்பார் போயினர் அரிசி பெற்று. பல்கிப் பெருகின குப்பைக் கோழிகள். அரபிக் கப்பலில் குதிரை வந்ததால் அடுத்த போருக்கு ஆள்சேர்த் தார்கள்.
('ழ' இலக்கிய இதழ்)
படம்
நிறைய உடுத்திக் கொண்டு கல்யாணக் களைப்போடு பத்துப் பேர். யார் மடியிலோ அப்பா அழத் தொடங்கி.
வெள்ளை யடிக்கக் கழற்றிக் கையில் வைத்துப் பார்த்தபோது ஞாபகம் இல்லையாம் எதற்கென்று.
எடுத்துக் கொடுத்த ராமாச்சாரி ஞானக் கிறுக்காய்த் துணி துறந்து திரிந்ததும்,
அவன் வண்டியில் கட்டிலும் சருவமும் அக்காள் திரட்சிக்குச் சீர் ஏற்றிப் போனதும்,
தள்ளி வைத்தபோது அழைத்து வந்து படைக்கும் வெய்யிலில் இறங்கிய தளர்ச்சியும்,
முறைக் காய்ச்சலில் அடங்கியவளுக்கு மருந்து வாங்கித் தெருமுனையில் வரும்போதே குரல் எழுந்த சோகங்களும்
வெற்று மார்போடும் வெறித்த கண்களோடும் கொண்டு வைக்க வேண்டிக் கூட்டமாய்ப் போனதும் நினைவிருக்காம்.
யார் மடியில் அன்றைக்கு - எதற்கு? இங்கே பக்கத்தில் கண்கலங்கும் கிழவருக்கு நினைவில்லையாம் அது ஒன்றும்.
(கணையாழி)
கி.பி 2099 மற்றும் ஒரு வீதி
பழைய உலோகம் மலிவு விலையில் இவ்விடம் கிடைக்கும். இறந்து போன விமான றக்கையில் பிய்த்து எடுத்தது.
கம்ப்யூட்டர் நாடாவையும் சானிட்டரி நாப்கினையும் சேர்த்து வாராதே. குப்பை எல்லாம் தொட்டியில் சேர். சுத்தம் சுகந்தரும்.
அவர்கள் எதிரகத்துப் பேராசிரியரை நேற்றே அழைத்துப் போனார்கள். இவரா? வம்புக்கே போகமாட்டார்.
அரசாங்க ஊர்தி. வரிசையில் வரணும். அடையாள அட்டை கையில் உள்ளதா? காடாத் துணி வழங்கப் படும்.
பிள்ளைகளே! கவச வண்டிகள் போனபிறகு சாலையைக் கடக்கலாம். பிராணவாயுக் கவசம் பத்திரம். போய் வாருங்கள்.
நமது வீரர்கள் இன்றும் வென்றனர். தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழியுங்கள். அடுத்த ஒலிபரப்பு நாளைக்காலை ஐந்துக்கு.
மின்சாரம் இல்லை. செய்தித்தாள் விசிறத்தா. கரப்பு வராது ஜலதாரை அடைத்துக் கவனமாக வந்துபடு. உறை இருக்கா?
(கணையாழி)
ராமலீலா
புகை உயரச் சரங்கள் வெடித்துச் சிதற ராவணன் எரிகிறான்.
வழக்கமாக எரிப்போம். உயிர்க்க வைப்போம்.
பனிவிழ இரவு வந்தது. முன்பைவிடக் கூட்டம் அதிகம்.
சட்டைக்குள் மயிரும் சதையும் பொசுங்கத் துணுக்குற்றேன்.
போர்வையைக் கழற்றினேன். எல்லோரும் கழற்றினார்கள்.
ஒரு காற்றில் மறைப்பு விலக எரியலானோம்.
நிறங்கள் - மழையில்
நிசப்தம் நீலமாக; அப்புறம் ஒழுங்கு சிதைந்த சச்சதுரமாக. மேலே அழுத்தும் ரப்பர்ப் பொதியாக. நிறம் அதுவேயாக.
மசங்கலாகப் பழுப்புப் படகொன்று. நிறம் மரித்த வௌிநோக்கிச் செலுத்தப் பட்டேன்.
நீரின் துளியொன்று உதிர, நீலம் இழைதொய்ந்து குழிய, மேலும் துளிகள்; நின்று போனது.
புரண்டு படுத்த புலனும் மெல்லத் துளிகள் விழுவதைப் புனைய முயல, வேகங் கொண்ட படகின் உள்ளே கருவாகக் கால்மடித்து, தலைகவிழ்த்து.
நிறங்கள் பற்றிக் கவலையில்லை - இபோதைக்கு.
('ழ' )
நிறங்கள் - மழைக்கு அப்புறம்
ஆல்பின் சிறுவன் மட்டும் கையில் பசையும் காகிதச் சுருளுமாக வானவில்லை அதிசயிப்பான் கண்கள் சுருக்கி. அங்கங்கே நீர்சுமந்து கரும் பாம்பாய்த் தெரு நௌியும்.
பறக்க வைத்த தேவதைகள் பாதியிலே சபித்தபடி இறகு உதிர்த்த ஈசல்கள் தரைநெடுகப் பரபரக்கும்.
சிறகு உலர்ந்த காக்கைகளும் காலடியில் காற்று நீக்கி ஊர்கின்ற பல்லிகளும் விருந்துண்ண வெறுஞ் சுவரில் சினிமா முகங்களைத் தடவிப் பதித்து இறங்குமுன் உதிர்ந்தது ஒட்டி வைத்த வானவில்.
ஆல்பின் சிறுவன் மட்டும் காகிதச் சுருளும் பசையுமாக.
(கணையாழி)
விடியல்
தூக்குச் சட்டிகள் மூலையில் வைத்து விளக்கு நிழலில் கோடுகிழித்துச் சிறுமிகள் விளையாடினார்கள்.
வர்ண முகங்கள் சிரிக்கும் சுவரில் பழைய பந்தெறிந்து சிறுவரும் ஆடினர்.
சுவர்க் கோழிகள் சேர்ந்து ஒலிக்க உறங்கிக் கிடந்த உறவின ரெல்லாம் காலைப் பனிகருதிப் போர்த்திக் கொண்டனர்.
தெறித்து விழுந்த பந்துகள் விலக்கிக் கண்கள் மூடித் தாண்டிய சிறுமி கோட்டை மிதிக்க வண்டி வந்தது.
சில்லுகள் துணியில் முடித்துத் தூக்குச் சட்டிகள் கையில் சுமந்து ஏறிக் கொண்டார்கள்.
ஒரு சின்னக் கனவில் கைகால் முளைத்த தீப்பெட்டிகள் தலையில் கந்தகம் தடவச் சிலிர்த்த சிறுவன் அழத் தொடங்குமுன் நகரம் வந்தது.
(கணையாழி)
புள்ளி
ஒரு சக்கரம் உருண்டது. தொடங்கிய இடத்தைப் புள்ளியிடு. இலக்கு உணரப் பட்டதா? நாம் கற்பித்துக் கொள்வோம். திசைகள்? மேலிருந்து கீழா? கீழிருந்து மேலா? அதையும் தான். ஆரங்கள் உண்டா? இல்லையென்றே சொல்லலாம். என்ன போயிற்று? கற்பித்துக் கொள்.
உருளும்போது ஆரங்களைத் தனித்துப் பார்க்க இயலாதென வாத்தியார் சொன்னது நினைவிருக்கா?
வாத்தியார் எல்லாம்தான் சொன்னார். சொன்னபடி குடுவையில் ஆக்ஸிஜன் தயாரித்து முகர்ந்தோம். ஆடிகளை அமைத்து வெய்யிலில் காயப்போட்ட கால்பந்தாட்ட மைதானத்து ஓராமாய் அவர் கோவணம் அவிழ்த்துக் குந்தியிருக்க நோக்கினோம். அவர் சொல்லாமலே அன்னி பெசண்டுக்கு மீசை போட்டோம்.
அப்புறம் ஒரு நாள் நினைவிருக்கா? அவரைத் தூக்கிப் போகத் தோள் கொடுத்தோம். அப்புறம்? அதெல்லாம் அப்புறம்.
கற்பிதமா முக்கியம்? நமக்குப் பேச வேண்டும். தொடங்கிய இடத்தில் புள்ளி? அதை அழித்துவிட்டு வந்து உட்கார்.
('ழ')
விஜயனின் மாமா
அவர் ஒரு நாஜி வதை முகாமில் கொல்லப் பட்டதாகச் சொன்னார்கள்.
தன்முறை வரக் காத்திருந்த பொழுது சரளைக்கல் பாதையில் குடைபிடித்துக் குரிசுப் பள்ளிக்குப் போன பாதிரியை, வயதான யூதப் புரோகிதனை, கால் விந்தி நடந்த வௌிச்சப்பாட்டை நினைத்துக் கொண்டாரா?
தூதப்புழை ஓரக் கிராமத்து அவர் மேற்கில் எங்கோ மரித்த வினாடி, ஆற்றில் குளித்து ஈரம் உடுத்து, வேலுக் குட்டியும் நாணியும் வெள்ளாயி அப்பனும் கூடவரச் சின்ன வயதில் உற்சவம் முடிந்த அம்பலப் பரம்பருகே அத்தப்பூத் தேடி நடந்த படிக்கா?
அந்த வருடம் ஓணத்துக்கு முன்பா அப்புறமா அவரைக் கொன்றது?
மாவும் பலாவும் நிழல் விரிக்கும் தோட்டம் தீட்டிய பழைய காகிதத்தில் மழுங்கிய பென்சில் கொண்டு யூத மனைவுக்குச் சொல்ல நடுங்கும் விரல் வரைந்த ஓலைக் குடில் அவர் நினைவின் முன்னறையிலா?
ஓடம் நகரும் வேம்பநாட்டுக் காயலின் கதைகள் சொல்லி உறங்க வைத்த 'அச்சா' என்று அழைக்கத் தெரிந்த அவரின் நான்கு வயது மகனை என்ன செய்தார்கள்?
விஜயனின் மாமா யாராக இருந்தார்? யாராக இறந்தார்?
(மலையாள எழுத்தாளர் ஒ.வி.விஜயனின் , 1940-களில் ஜெர்மானிய நாஜி வதை முகாமில் வதிக்கப்பட்ட தாய்மாமன் நினைவாக. விஜயன், மலையாள மனோரமா ஆண்டு மலரொன்றில் இடம்பெற்ற நீண்ட பேட்டியில் யூதப் பெண்ணை மணந்து ஜெர்மனி சென்று அங்கே நாஜிகளால் கொல்லப்பட்ட தன் மாமன் பற்றிச் சொல்லியிருந்ததைப் படித்ததின் பாதிப்பு)
(சுபமங்களா)
தரிசனம்
தலவரலாறு இல்லாத கோயிலைச் சுற்றி வழிகாட்ட வந்த கிழவர் பிரகார வெய்யிலில் கைநீட்டிக் காமராஜ் பேசிய இடம் என்றார்.
சிவாஜி சாயலில் தொப்பை தெறிக்கச் சிவனார் ஆடும் சுவரில் மஞ்சள் எழுத்து வேலு ஆர்ட்ஸ் கையெழுத்தில் காரையைச் சுரண்டி ராஜாகாலப் படங்கள் கீழே இருந்ததாக விரல் தேய்த்தார்.
காக்கிக் கால்சராய்மேல் கைத்தறித் துண்டோடு வாசலில் நிறுத்திய சைக்கிளில் கவனமாய் வாத்தியம் பிசிறிட வாசித்தவரைக் காருகுறிச்சி பரம்பரை என்றார்.
பாசிக் குளப்படியில் சிகரெட் துண்டு ஒதுக்கி, சாக்குக் கட்டியில் 'சாந்தி ஒரு தேவிடி..'யை மிதித்தபடி கண்ணாம்பா ஷூட்டிங்க் நடந்ததென்றார்.
வியர்வையும் லைப்பாய் வாடையுமாக பிரசாதம் நீட்டிய குருக்கள் பற்றித் தொடங்கும் முன் யாரோ மணியடித்ததால் கோபுரப் புறாக்கள் கொஞ்சம் பறந்தன.
செருப்பில் கால்நுழைத்து ஒட்டிய வயிறு பார்த்துப் பையில் கைவிட வேண்டாம் என்று சொல்லி விரசாக நடந்து போனார். கொடுத்து வைத்த கோயில்.
(அம்பலம் இணைய இதழ்)
மழை நகரம்
அசன்பாய் அத்தர்க் கடைமுன் குப்பை லாரியில் தூரத்துணியும் ஈரம் நாறிய இலையும் கழிவும் தோளில் வழியச் சுமந்து சுமந்து கூடை கவிழ்த்தவன் வயிறு தீய்த்த மூக்கு உறிஞ்சிச் சொல்லுவான் - 'கிளப்புய்யா தாங்கலை வாடை'.
கடைசி நம்பர் லாட்டரி செண்டரில் உதிர்த்து எறிந்த காகிதத்தோடு வசவும் கிழித்துப் போகிற பெரிசு சகதி தௌித்த கார் எண் படித்துப் புதுசாய் வாங்கத் திரும்பி வருவார்.
மோர்வடியும் அலுமினிய டப்பா மேசைக்கடியில் மறைத்தபடி குடை மறந்த வாத்தியாரம்மா உலர்த்திக் கொள்ள இடம் தேடுவாள்.
சிம்னி உடைந்த ராத்திரிச் சண்டையில் வீட்டுப் பாடம் எழுத மறந்த சின்ன விரல்கள் ஈர சிலேட்டில் விரையக் கேட்கும் முதல்மணிச் சத்தம்.
'நனையாதேடி உடம்புக்கு வந்துடும். மாசக் கடைசியில் டாக்டருக்கு அழக் கொட்டியா கிடக்கு? உள்ளே வாடி'. பீத்தல் குடையில் ஒண்டிய கொலுசின் சிரிப்புக் கொஞ்சம் கலைந்து சிதற 'தண்ணி லாரி .. தண்ணி லாரி'.
(கணையாழி)
சாவேறு
ஆயிரம் பேர் சாவுக்கு ஒத்தன் ஆகச் சாப்பிட்ட ராமசுப்பனும் போனதற்கப்புறம் சவண்டிக் கொத்தனுக்குப் பஞ்சம்.
பிரேதக்களை - மூக்கிலே வேர்த்துடும் சாவு விழுந்தா. பொணம் போல தூங்கறான். எல்லாம் சுமந்து சாவு இல்லாத வெறும் நாளில் பஞ்சு மெஸ்ஸுக்குத் தண்ணி வண்டி அடித்த பேர்வழி அவன்.
நாலுநாள் தாடியோடு வக்கீல் வேதராமன் பெண் கல்யாணத்து நாதசுரக் கச்சேரியை மூலையில் குந்தித் தப்புத் தாளம் போட்டு ரசித்தவனை வைர மூக்குத்தி மின்ன மாமி எழுப்பி, வேலை சொல்லி விலக்கினாள்,
வேதராமன் போனவாரம் போய்ச் சேர ஆளே கிடைக்காமல் அலைந்து மதுரையில் இருந்து ஒத்தனைக் கூட்டி வந்தது.
'நூத்து அம்பது ரூபா. பஸ் சார்ஜ் போகவர. வென்னீர் வேணும் குளிக்க'.
சாப்பிட்டுப் போகும்போது பார்க்காமல் திரும்பி 'ஆனாலும் இது அதிகம்' என்றாள் பிள்ளைத்தாச்சிச் சின்னவளோடு அப்பம் வடை போட நடந்த மூத்த பெண்.
தட்சணை இடுப்பில் முடித்த சாஸ்திரி சொன்னார் - 'இவனும் இல்லே இனிமேலே. டெல்லியோட போறான். பிள்ளைக்கு யுபிஎஸ்ஸி கெடச்சிருக்கு'.
எண்ணெய் இறங்கிய வைரமூக்குத்தி அடகு போன மிச்சத்தில் கழித்துக் கணக்கு எழுதிய ஒற்றைப் பிள்ளை கேட்டான், 'எப்ப வந்தது யுபிஎஸ்ஸி?'
(சவண்டிக்கு ஒத்தன் - சாவுச் சடங்கில் பிரேதம் சார்பில் விருந்துண்ணக் கூப்பிடப் படுகிறவன்.)
(கணையாழி)
சுழலும் உறவுகள்
மங்கிய இலைப்பச்சை வாடையும் ஆமையோடாக உயரும் விளிம்புமாய்க் குளம் ஒன்று கனவில் வந்தது.
ஆயிரம் ஆண்டு உடம்பு துறந்து சுற்றும் முன்னோர் கரையோரம் வந்து அமரச் சோற்று உருண்டைகள் பரிமாறிய இலைகள் மிதக்கும் நீர்.
அடுத்த ஆண்டு வருவதாய்ச் சொல்லி மேலே உயர்ந்தவர் குளிக்கச் சொன்னதால் உள்ளே இறங்க விளிம்பு சுருங்கிக் குளம் என்னைக் கவ்வி இறுக்கும்.
போனவருடம் எறிந்த இலைகளில் படர்ந்து நீண்ட காளான் கைகள் கீழே இழுக்கச் சுவாசம் முட்டிச் சுற்றும் பார்க்க ஒளியும் இருளும் பிணைந்து விரியும் பரப்பு அழைக்கும்.
தொடரும் தலைமுறைச் சங்கிலி இழையில் எந்தக் கண்ணியில் இணைந்தோம் என்று குழம்பி உள்ளே அமர்ந்து இருந்த கூட்டம் நடுவே தேடத் தொடங்கினேன்.
கால்படாது ஓரம் வைத்த வாளியில் புகையும் கல்கரித் தூள்கள் மாவாய் அரைத்து அப்பிய வாசலில் நின்றவர் அமரப் படைக்கலாயினர். முன்னோர் விரித்த இலைகள் முன்னால் நான், மகன், அவன் பிள்ளைகள்.
விடுமுறை
நரகல் தெருக்களில் சோனி எருமைகள் கறந்த பாலில் விடியும் காலையும்,
௬பைல்களை வளர்த்து ௬பைல்களைத் தின்று ௬பைல்களைக் கழியும் யந்திரங்களுக்குச் சேவை செய்து தேய்ந்த பகலும்,
பெட்ரோல் நாறும் மாலைப் பொழுதும், காற்று ஓய்ந்து புழுங்கும் இரவும், எனக்கே யானது என்றிருந்தேன் இதுவரைக்கும்.
நகரக் கழிவுகள் கழித்த ஆறும், மரங்கள் செத்த வெற்று மலையும், கட்டிடம் உயரும் நஞ்சையின் தரையும் கூட எனக்குத் தானாம்.
புவா
----
டிபன்சு காலனி மேஜர் குப்தாவின் ஒற்றைப் பெண் ரஞ்சனா குப்தா. ஜீன்சும் டீசர்ட்டும் குட்டை முடியுமாய்ப் பொழுது போக ஆபீசு வருகிறாள்.
சிவகங்கையிலிருந்து சிவப்புப் பேரணிக்காகத் தில்லி வந்த வாத்தியார் நண்பர் விட்டுப் போன புத்தகப் பெயரைப் பேச்சு வாக்கில் சொன்னேன். நெருங்கி விட்டாள்.
நெருலாவில் ஐஸ்கிரீமோடு விசாரித்ததில் ரஞ்சனாவுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர் சீமொன் த புவா. அப்புறம் பிடித்தது தேராதூன் பக்கம் எருமைப் பண்ணை வைத்திருக்கும் லாஜ்வந்தி புவா.
அத்தை வீட்டுக்கு வருஷம் ரெண்டு தடவை போய் உருண்டு திரண்ட உடம்பு. எருமைப் பால். போனமாதம் தேராதூன் போய் வந்ததும் டீசர்ட்டில் எழுதிய ரெட்டைப் பனைமரங்கள் இடைவௌி அதிகமாக இறுகிய சட்டை.
நடராஜன் மெஸ்ஸில் 'பூவா'வைக் கொட்டிக் கொண்டு ஆரிய சமாஜ வீதியில் கண்ணாற நடந்துவிட்டு ரஞ்சனா கொடுத்த 'ரெண்டாம் செக்ஸ்' புத்தகம் பிரிக்க முப்பதாம் பக்கத்தில் நீளத் தலைமுடி.
நாளைக்குப் புரட்டலாம். மூடி வைத்தேன். ஒற்றை முடியைக் கன்னத்தில் இழைத்தேன். டீசர்ட்டை இறுக வைத்த தேராதுன் புவா இன்னும் இரண்டு எருமை வாங்கட்டும். எருமை இல்லாது போனால் எனக்கு எதற்கு சீமொன் த புவா?
(புவா - இந்தியில் அத்தை; சீமொன் த புவா - பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர்; 'இரண்டாம் செக்ஸ்' - அவர் எழுதிய புத்தகம்; பூவா - பேச்சுத் தமிழில் சாப்பாடு)
(கணையாழி)
பயணம்
கன்ஷ்யாம் திருடன். மேலிடத்தில் செல்வாக்கு. மனைவி அழகாக இருப்பாள்.
கலவரம் என்றால் நாயர் போகாமலே எழுதுவான். சிகப்பு விளக்கு எழுதப் போறான்.
புதுமுகம் தயாராக இருந்தாள். துணிமாட்ட ஹாங்கர் இல்லாத வீடு.
பாரீஸ் போகிறார் நம்ம .. சிகிச்சைக்குத் தானாம். ராஜனும் அப்புறம் போகணும்.
நமது கலை விமர்சகி சிலிக்கன் சிகிச்சை செய்து கொண்டாள். நண்பர்களும் இனி மண் தின்பார்கள்.
காமிராவை ரொப்பினாயா? கலரெல்லாம் பிரமாதமாய் வரணும், அங்கே பெண்கள் ரவிக்கை போடுவதில்லை.
வண்டியைக் கொஞ்சம் நிறுத்து. பெரியவரே, ஆதிவாசிகள் குடியிருப்பு இந்தப் பக்கம் தானே?
(கணையாழி)
ஜன்னல்
இருட்டை விதைத்திருக்கிறது. கருப்புத் திரவமாய் நிரம்பி வழிந்து கம்பிகளைப் பற்றிய விரல்களையும் அரிக்க ஊறும் இருட்டு.
கதவுகளை மூடிவை. நேற்றுப் பார்த்த சூரியன் இறந்து போயிருக்கலாம்.
காற்றைக் கூட வண்ணச் சிறகுகளோடு பார்த்திருந்த கனவுகள் கலைந்து போக, சாவோலம் கேட்டுத் தூக்கம் கலைந்த ராத்திரிகள் திரும்பாதிருக்கக் கதவுகளை மூடிவை.
ஒப்பாரியிலும் ஒற்றுமைப் படாத நாய்கள் வாசல் நனைக்க வேண்டாம்.
சபிக்கும் ராப்பறவைகளின் வசவுகள் கேட்காது அறைந்து சாத்து.
மூச்சு முட்டட்டும். முட்டிமோதி இழைபிரிந்து வௌியேறும் வரை மூடியே இருக்கட்டும்.
கதவுகளை மூடு. இல்லை, வௌியில் நின்று எக்கி வேடிக்கை பார்க்காது விலகிப் போ.
(கணையாழி)
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மகன் தேடும் தந்தைக்குச் சான்றோர் அருளிச் செய்தது
சிற்றில் அழைப்புமணி ஒலித்துக் கேட்கிறாய் 'என் மகன் எங்கே?' தெரியலை எனினும் கேள்.
இறுகக் கட்டி இலக்கியம் படி. இல்லை சிசுமூத்திரம் நனைத்த புத்தகம் உலர்த்து.
மார்க்கெட் உள்ள கோயிலாய்ப் பார்த்து மனைவியோடு போவதும் மற்றும் காராபூந்தி கொறித்தபடிக்குக் கேசட் வேதம் கேட்பதும் உத்தமம்.
மந்திர வித்தை புராண நாடகம் வயிறு வலித்துச் சிரித்து மகிழ சமூக நாடகம் சபாக் கழிவறையில் தண்ணீர் இல்லை நினைவில் கொள்வாய்.
சாண எரிவாயு செலவு குறைக்கும். மாடு பிடிக்க வங்கிகள் வழங்கும். வாரபலனில் வாகன யோகமா? ஓசி எல்மெட் அக்குளில் இடுக்கு.
எண்ணெய் குளித்தால் பகலில் உறங்கணும். பகலில் உறங்கினால் ராத்திரி முழிப்பாய். ராத்திரி முழித்தால் அப்புறம் ஒருநாள் இன்னொரு வாரிசும் தேடலாம் சேர்த்து.
உப கடவுள்
-----------
நெற்றிக் கோடுகள் வெளுத்துத் துலங்க நெரிசல் விலக்கிப் பாதையோரம் ஆனை வந்திடும் தலையசைத்து.
ஆசனம் விரித்து ஏகமாய்க் கழிந்து தலைகள் தோறும் துதிக்கை தடவி யாசகம் வாங்கும் கடைத் தெருவில்.
அரையில் சொறிந்து புகையூதிப் பாகன் பார்க்கப் பஸ் உள்ளே பழைய குருக்கள் நலம் கேட்பார்.
வானம் நோக்கிக் கைகாட்டி வணங்கிப் போவான் புன்னகைத்து. அசட்டுத் தனமாய்த் தன்வாலாட்டி ஆனை நடக்கும் சுமையோடு.
புதுசு
படைப்புக் கடவுள் தாடி சொறிந்து பக்கம் இருந்த சகாவிடம் சொன்னார் 'புதுசு ஒண்ணு. வேடிக்கை பாரும்'.
தவளை இரைச்சல் எழுந்த குளத்துத் தண்ணீர்ப் பரப்பில் நிழல்தடம் பதித்து இசைந்து போனது பட்டாம் பூச்சி.
சூரியச் சூடும் நுனிப்புல் தேனும் இறகில் தங்கத் தூசியும் கொண்டு எவ்விப் பறந்து மேற்கே போகச் சின்னக் கீற்றாய்ப் பனியின் தூவல்.
வெள்ளை உடுத்த பூச்சி தன்னை உன்னதமாக உணரத் தொடங்கிக் கீழே பார்க்கச் சிறிசுகள் சிலது.
'எழுந்து வரநான் ஆணை எறிந்து எழுபவை தவிர மற்ற எதற்கும் போக்கு வரத்து உரிமை இல்லை'.
எம்பிக் குதித்த பூச்சி தனது இறக்கை இரண்டும் கழற்றி உதிர்த்துத் தவளைக் குளத்தில் ஐக்கியமாகிப் புதிய தவளையாய், இலக்கணச் சுத்தமாய்.
பூச்சியைப் பாதியில் தவளையாக்கினால் லாஜிக் இடிக்குதே - சகாவு கேட்டார். தவளைகள் சொல்படி தான்இது படைத்தேன் - தாவிக் குதித்துக் கடவுள் நகர்ந்தார்.
(நவீன விருட்சம்)
செய்தி
நேற்றைய செய்தித்தாள் சொன்னது கம்ப்யூட்டர் விலை குறையுமென்று. மழையில்லாமல் மின்சார வெட்டென்று. மந்திரிசபை விரிவடைந்தது. குடும்பக் கட்டுப்பாடு ஊர்வலம் நடந்தது. காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அமெரிக்க செனட்டர் புறப்பட்டுப் போனார். தேவாரத்தில் தேசிய ஒருமைப்பாடு - இல்லந் தோறும் சாண எரிவாயு - பிரமுகர்கள் சொற்பொழிந் திருந்தார்கள். ஹாக்கியில் இந்தியா வென்றதற்காக ஆசிரியருக்குக் கடிதத்தில் ஆராவமுதன் தொப்பியைக் கழற்றினார். அயோத்தியா மண்டப உபன்யாசத்தில் சாயந்திரம் தந்தை சொல்காக்க ராமன் காடேகினான். ரேஷனில் இருபது கிலோ அரிசி. செல்லுலர் தொலைபேசி வாங்கினால் பேஜர் இலவசம். இட்லி சுற்றி எடுத்துப் போகும்போது பார்த்தேன். இயற்கை எய்தியவன் முகம் மிளகாய்ப் பொடி கசிந்த எண்ணெய் மினுக்கில் என்னைப் போல.
இருபது முடியும் நேரம்
வாரும் வாரும் வளைப்போம் பிடிப்போம் கான்க்ரீட்டும் குப்பையும் உயரும் மாநகரங்களை. புழுதி பறக்கும் சிற்றூர்களை. மற்றும் ஐயனார் தோளோடு ஆண்டென்னா விரியும் கிராமங்களை.
வீட்டுக்குச் சிலபேர் வீதிக்கு நூறுபேர் வளைக்க வாகாய் எல்லா வயசிலும். பிரபஞ்ச அழகிகள் பிரதேச அழகிகள் கட்டிப் போடக் கிளம்பி வருகிறார்.
வயல்களைக் கைக்கொள்வோம். இப்போதைய தேவை உலகம் முழுக்க மென்று தீர்க்க உருளைக் கிழங்கு வறுவல். கண்டம் தாண்டிக் கடல் தாண்டிப் பரங்கி தேசமும் கருப்பு பூமியும் சிகப்பு வௌிறிய தரையும் எல்லாம் கடந்து பரவுது பரவுது புரட்சி.
உப்பு எடுப்போம் தோழரே உப்பெடுப்போம். பிளாஸ்டிக் உறையில் அயோடின் சிரிப்பு. 'ராசகோபாலா, வேதாரண்யம் கடைக்கு போய்ச் சேரலேன்னு ௬போன்கால். கவனி'.
ஆட்கள் தேவை உலகச் சந்தையில் தாதுபுஷ்டி லேகியம் விற்க. எம்பிஏக்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
கொட்டாம்பட்டியில் நேற்றைய நிலவரம் - நமது குளிர்பானம் மூவாயிரத்து ஏழு அவர்கள் சரக்கு ரெண்டாயிரத்துப் பதினெட்டு. ஆரம்பப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் நம் ஆதரவு அணி வெற்றி பெற்றது. மாற்றார் மண்ணைக் கவ்வினர்.
நிகழ்ச்சியின் இந்தப் பகுதியை வழங்கியது யந்திரத் துடைப்பம் செய்யும் பன்னாட்டு நிறுவனம். கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் தொடரும்.
(கல்கி)
சற்றே வந்து
அன்புள்ள ஆசிரியருக்கு - எழுதணும் எழுதணும் என்று தள்ளிப் போய்விட்டது.
குளிர் காலமில்லையா? விடிய நேரமாகிறது. இருட்டில் பால் வாங்கப் போனால் வாசல் படிக்கட்டில் யாராரோ போர்த்திக் கொண்டு தூங்குகிறார்கள். வாசல்படி வரிகட்டும் பிரஜைக்குப் பாதுகாப்பு அவசியம் இல்லையா?
மரம் வைக்கிறோம் என்று பிரகஸ்பதிகள் தெருவெல்லாம் பள்ளம் தோண்டிக் கொப்பையும் கழியையும் ஊன்றி வைத்ததில் கால் இடறிச் சுண்டுவிரல் நகம் உடைந்தது.
ஒரு லிட்டர் பாலுக்கு வரிசை போட்டுக் காத்திருப்பது இந்த ஊரில்தான். அதுவும் பவுடர் வாடை அடிக்கிறது. ஜனங்களுக்குப் பால் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் தலையாய கடமையன்றோ?
இன்னும் நாலு பஸ் விடச்சொல்லி எழுதி ஒரு பிரயோஜனமில்லை. பையன் அமெரிக்கா போக பாஸ்போர்ட்டுக்கு அலைந்து திரும்பிவர ஆட்டோவுக்கு அழ வேண்டியிருக்கிறது.
இதெல்லாம் பரவாயில்லை. நேற்று ராத்திரி முழுக்க விசாவுக்காக இடம் போட்டு உட்கார்ந்து, சொல்லி வைத்து தூதரக வாசலில் துண்டு போட்டு வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுந்தால் ஏகமாக இரைச்சல்.
எங்கிருந்து வந்தது இத்தனை குயில்? வீட்டுச் சுவர்மேல், டெலிபோன் கம்பத்தில், டிவி ஆண்டென்னா உச்சியில். விடாத தொணதொணப்பு.
வயதானவர்கள் தூங்க முடியவில்லை. பிள்ளைகள் படிக்க முடியவில்லை. படித்தால்தானே வௌிநாடு போகலாம்? யாராவது ஏதாவது செய்து சத்தத்தை நிறுத்தினால் சௌகரியமாக இருக்கும்.
(மும்பை நாளிதழ் ஒன்றில் 'cuckoo menace in Thane' என்று குயில்களின் 'இரைச்சல்' பற்றிய ஆசிரியருக்குக் கடிதம் படித்ததைத் தொடர்ந்து ..).
(தினமணி கதிர்)
இன்னொரு கடிதம்
அன்புள்ள அம்மா! விடிகாலை ஐந்து மணிக்கு இந்தக் கடிதம் எழுதுகிறேன்.
பட்டினியும் மரண பயமுமாக என்வயது யூதக் கைதிகளைக் கல்லுடைக்க அனுப்பி விட்டு இப்போதுதான் உட்கார்ந்தேன்.
எல்லோரும் பாடிக்கொண்டு போனார்கள். அடித்து அடித்துச் சொல்லிக் கொடுத்த பாட்டு. அடிமை சங்கீதத்தின் சுவையே அலாதிதான்.
இன்னொரு சுவாரசியம் நேற்று மதியம். கால் வீங்கிய ஒரு கிழட்டு யூதனை நிற்காமல் ஓடவைத்துப் பந்தயம். நான் சொன்ன முப்பதாம் சுற்றில் செத்து விழுந்தான். இரண்டு மார்க் பணம் ஜெயித்தேன்.
இத்துடன் புகைப்படம் அனுப்பியுள்ளேன். கைக் குழந்தையோடு யூதப் பெண்ணைச் சுட்டுக் கொல்லும்முன் எடுத்தது. குழந்தை கண்ணில் மிரட்சி பார்த்தாயா? முதுகுப் பக்கமிருந்து எடுத்ததால் அவள் முகபாவம் படத்தில் வரவில்லை. அடுத்த தடவை இன்னும் நல்லதாக அனுப்புகிறேன்.
அப்புறம் வீட்டில் என்ன விசேஷம்? அப்பா கால்வலி குறைந்ததா? அவர் குளிரில் அதிகம் அலைய வேண்டாம். அம்மா, உன் கையால் சாப்பிட்டு எத்தனை நாளானது? சீக்கிரம் திரும்ப வேண்டும்.
(இரண்டாம் உலகப் போரின் போது யூத வதை முகாமில் காவல் இருந்த ஒரு ஜெர்மானிய நாஜி இளைஞன் தன் அம்மாவுக்கு இப்படி ஒரு புகைப்படம் அனுப்பியதாக 'Willing executioners of Hitler' புத்தகத்தில் படித்ததின் பாதிப்பு).
(தினமணி கதிர்)
நாள்தோறும்
பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த, பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க, காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத் தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில் விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து, சமைத்து, பரிமாறி, தரை துடைத்து, பாத்திரம் ஒழித்துப் போட்டு, பசங்களைப் படுக்கையில் விட்டு, மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு காத்திருக்கும் கணவன் கண்காட்ட வரேன் என்று தலையசைத்து இருட்டில் மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில் வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து, வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள் வானம் பார்த்தாள். பெய் என்றாள்.
(முன்றில்)
அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்
காலையில் வென்னீர் போட்டுத்தரச் சொன்ன குரலிலும் குளிகை தேடித்தரக் கொடுத்த துணிப்பை மேலும் சாவின் ரேகைகள் இல்லை.
செம்மண் பூமியில் எண்பது வருடம் முன்னால் மாற்றாந்தாய்ப் பாலோடு தொடங்கியது உஸ்மான்வீதி காப்பி கிளப் சர்க்கரை ஜாஸ்தி பிற்பகல் காப்பியோடு முடிந்தது.
மழை ராத்திரியில் ஐஸ்பாளம் இறக்கிய ஆட்டோக்காரர் சொன்னார் 'போட்டுக் கொடு சார். பொணம் கனம்'.
எல்லா மாடியிலும் தெரிந்த முகங்கள் பார்த்தபடி நிற்கப் பாளம் உருட்டி மாடியேற்றி நண்பர்கள் கைகொடுக்கக் குளிரக் குளிரப் படுக்க வைத்தோம்.
'காலையிலே தானா மற்றதெல்லாம்? சீக்கிரம் எடுத்துடுவேளா? எனக்குப் பசி தாளாது. அல்சர் வேறே'. தொலைபேசியில் சேதி சொல்ல உறவு முறையிட்டது.
காலையில் லுங்கியோடு வந்த முதல் மனிதர் நேர்மேலே மூன்றாம் தளம் - 'இந்துவிலே இப்பத்தான் படிச்சேன். அனுதாபங்கள்'. டிவியில் சொல்லியிருந்தால் எதிர்வீட்டிலிருந்தும் வந்திருப்பார்கள்.
நெய்யை ஊற்றி ஹோமம் பண்ணனும். சாஸ்திரி சொல்லியபடி ஜர்தாபான் டப்பாவில் வனஸ்பதி வாங்க ஆள் அனுப்பினார்.
'எண்ணூறு சதுர அடி வீடா? எவ்வளவுக்கு வாங்கினது?' ஈரம் மிதித்துக் கேட்டவர் குடையை மாட்ட இடம் தேடினார்.
'எடுத்துப் போக வண்டி வரலியா?' எல்லோரும் கேட்கச் சங்கடம் தாங்காது 'போகலாம் வா' என்றார் அப்பா. எப்போதும் போல் மழை.
(ஆனந்த விகடன்)
எரிதல்
நேற்று எரிந்த சிதைக்குப் பக்கம் மொட்டைத் தலையும் கக்கத்தில் குடையுமாக.
'கிண்டியிலே ரயிலேறிக் காப்பி கூடக் குடிக்காமல் மாம்பலம் மழையோடு நடந்தேன் நேரமாகும்னு'.
நான் காப்பிகுடித்துக் கிளம்பத் தாமதம். போனவர் போனாலும் மற்றவர் உயிர்க்கக் காப்பி.
லுங்கி தழைத்துப் பக்கத்துக் கொட்டகை யிறங்கியவன் சிநேகமாகச் சிரித்தான் இன்றும் கையேந்துவான்.
'அது ரெட்டியாரம்மா. நீங்க போனப்புறம் வந்தது. எரிய வச்சுப் பிள்ளைங்க இங்கேயே சண்டை'.
மழைக் காற்றில் ரெட்டியாரம்மா மேலேசிதறி எல்லோரும் பிள்ளையாகத் தலைதடவினாள்.
'ராத்திரி ரெண்டு மணியாச்சு. ஆட்டோ பிடிச்சு வீடு போனா, டிவி பார்த்துட்டிருக்கா. திட்டினேன்'.
கண்ணை மூடி எடுத்ததைப் பாலில் நனைக்க உதவினான். ஈரத் தரையில் குடையூன்றி மந்திரம் நீண்டது.
போதும் என்று சொல்லி மழையில் அவன் போக, போட்டுக் கொடுங்கோ என்று குடை விரிந்தது.
(கணையாழி)
தோசைக்காரன்
அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு ஊத்திக்கடான்னு அக்கா போட்ட எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா. கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார். தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,
ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு. எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.
இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து கொல்லையிலே அம்மிப் பக்கம் மதினி சோறுகொட்டக் காத்திருக்கா. 'உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா'.
அக்கா வீட்டுக்குப் போனபோது கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா. 'அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண?' நாம எப்படியோ. தோசை சைவமில்லையா?
அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு. அப்புறம் இங்கேதான் வேலை. போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம் ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு குலை தெறிக்க ஓடிவந்து தருவோம். பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.
கார். பஸ். வெய்யில். மழை. உசிரு. கிடக்கு போங்க. அதுவா முக்கியம்? இன்னும் முப்பது நிமிசத்துலே நீங்க சாப்பிட்டாகணும். இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.
நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா பஸ்காரன் கேக்கறான் - 'சாவறதுக்கு வந்தியாடா?' மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா. யாரோட அம்மாவோ. 'தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான்'னாங்க. எல்லோரும் சிரிக்கிற சத்தம். எனக்குத்தான் அழுகை. லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.
பாங்காக் வீதியில் பொழுது புலர்கிறது
தகரக் குடுவை கோகோகோலா படையலும் ஊதுவத்திச் சாம்பலும் சரிகைமாலையுமாக மசாஜ் பார்லர் வாசலில் வெள்ளைக் களிமண் புத்தன். பறக்கச் சிறகு விரித்த பரிவார தேவதைகள் பக்கத்தில் காத்திருக்கும் அனுமதிக்கு.
ராத்திரி முழுக்கக் கூட இருந்த வெள்ளைக்காரன் குழறலை அபிநயித்துச் சிரித்த இளம்பெண்கள் டாக்சிக்குக் காத்திருக்கும்போது உதட்டுச் சாயம் அணிகிறார்கள்.
உள்ளே உடைகளைந்த நடனம் பார்க்க நடுராத்திரி வரை வரவேற்ற அலிப்பையன் கண்ணோரம் மைகசியக் கால்பரப்பித் தூங்குகிறான் விடுதி முன்னால்.
மோட்டார் வேனில் இறைச்சியோடு இறங்கிவந்த பெண்குழந்தை சாப்பாட்டு வண்டியில் எண்ணெய் சுடவைத்துக் கையுறை அணிந்து மீன்செதிள் தேய்ப்பவள் செதுக்கி எறிவதைத் தின்ன நிற்கும் தெருப் பூனைகளைத் துரத்தி விளையாடும்.
நடந்த இடமெல்லாம் வெள்ளி பிரேம் கண்ணாடி கடந்து கருணை சிந்தினாலும் இன்னும் கொடுக்க மிச்சம் உள்ள புத்தபிக்கு அடைத்த வாசல் தோறும் ஆசிகள் சொல்லி நடக்கிறார்.
கையில் வெற்று பிளாஸ்டிக் வாளிகள் சுமந்து தொடரும் மடத்துப் பையன் காணிக்கை தேடிச் சலித்த கண்களோடு கவிச்சி நுகர்ந்து நிற்க சாலை கடந்த பிக்கு விளித்த சரணம் சக்கர இரைச்சலில் தேய்ந்து சுருளும்.
(அம்பலம்)
பென்சில்வேனியா
ஸ்டியரிங் ஒடித்துத் தெரு திரும்பும்போது பின்னாலிருந்து தினமும் அவர்களைப் பார்க்கிறேன். காலை வெய்யிலுக்கு முதுகு காட்டிக் கைத்தடி ஊன்றிப் போகும் தம்பதி.
பக்கத்தில் கடக்கும் போதெல்லாம் இருமலோடு காதில் விழுவது பென்சில்வேனியா.
பென்சில்வேனியா? பிழைக்கப் போன மகன். கூட்டிப்போன மருமகள். பார்க்காது போன குழந்தைகள். வாரம் ஒருமுறை டெலிபோனில் நல்லாயிருக்கீங்களா? உடம்பைக் கவனிச்சுக்குங்க.
இன்னும், மூட்டுவலி மருந்து. பேங்க் புத்தகம். ஆவின் அட்டை. மின்வாரியக் கார்டு. தடவி அலுக்காத புகைப்பட ஆல்பம். பூங்கா பெஞ்ச் ஒட்டுப் புல். பத்திரிகை பிரிக்க, வேண்டப்பட்டவர்கள் வரிசையாக உதிரும் 'காலமானார்'.
முகம் பார்க்காது வண்டி நகரப் பக்கத்தில் பையன் கேட்கிறான். யாருப்பா?
நானில்லை. கூட உங்கம்மாவும் இல்லை. இப்போதைக்குச் சொல்கிறேன்.
(அம்பலம்)
|