LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

முதல் திருமுறை - முதல் பகுதி


1.1 திருப்பிரமபுரம்
    பண் - நட்டபாடை

    1     தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.1
    2    முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
    வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
    கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
    பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.2
    3    நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
    ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
    ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
    பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.3
    4    விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
    உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
    மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
    பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.4
    5    ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
    அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
    பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.5
    6    மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
    இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
    கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
    பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.6
    7    சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
    உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
    கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
    பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.7
    8    வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
    உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
    துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
    பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.8
    9    தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
    நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
    வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
    பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.9
    10    புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
    ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
    பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.     1.1.10
    11    அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
    பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
    ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
    திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.     1.1.11

    திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
    திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.2 திருப்புகலூர்
    பண் - நட்டபாடை

    12     குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
    நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
    முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
    பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.     1.2.1
    13    காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
    மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
    மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்
    போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.     1.2.2
    14    பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்
    பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
    உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
    மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.     1.2.3
    15    நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
    சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)
    காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
    ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.
    (*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.     1.2.4
    16    செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
    பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை
    மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்
    பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.
        1.2.5
    17    கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
    குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
    விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
    முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.     1.2.6
    17    வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
    உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
    கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
    புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.     1.2.7
    18    தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்
    தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
    மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
    பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.     1.2.8
    19    நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
    ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
    ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
    போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
        1.2.9
    20    செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்
    கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
    கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
    மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.     1.2.10
    21    புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்
    கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
    பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
    குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.     1.2.11

    காவிரி தென்கரைத் தலம்.
    சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.3 திருவலிதாயம்
    பண் - நட்டபாடை

    23     பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
    ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
    மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
    சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.     1.3.1
    24    படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்
    கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
    மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
    அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.     1.3.2
    25    ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்
    செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
    வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
    உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.     1.3.3
    26    ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்
    புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
    டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
    பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.     1.3.4
    27    புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
    அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
    மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
    சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே.     1.3.5
    28    ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்
    கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
    வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
    தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.     1.3.6
    29    கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்
    பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
    மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்
    துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.     1.3.7
    30    கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
    அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
    மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
    உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.     1.3.8
    31    பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
    எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
    எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
    உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே.     1.3.9
    32    ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
    ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
    வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
    பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.     1.3.10
    33    வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்
    தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்
    கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
    கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.     1.3.11

    இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
    சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
    தேவியார் - தாயம்மை

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
    வினாவுரை

    பண் - நட்டபாடை

    34    மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
        வாணுதல் மான்விழி மங்கையோடும்
        பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
        புகலி நிலாவிய புண்ணியனே
        எம்மிறை யேயிமை யாதமுக்கண்
        ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
        மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.1
    35    கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
        கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
        பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்
        புகலி நிலாவிய புண்ணியனே
        எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்
        இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
        மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.2
    36    கன்னிய ராடல் கலந்துமிக்க
        கந்துக வாடை கலந்துதுங்கப்
        பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்
        புகலி நிலாவிய புண்ணியனே
        இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்
        தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
        மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.3
    37    நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
        நன்னுதல் மான்விழி மங்கையோடும்
        பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
        புகலிநி லாவிய புண்ணியனே
        ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
        எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
        மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.4
    38    சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
        தையலோடுந் தளராத வாய்மைப்
        புந்தியி னான்மறை யோர்களேத்தும்
        புகலி நிலாவிய புண்ணியனே
        எந்தமை யாளுடை ஈசஎம்மான்
        எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
        வெந்தவெண் ணீறணி வார்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.5
    39    சங்கொலி இப்பிசு றாமகரந்
        தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
        பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்
        புகலி நிலாவிய புண்ணியனே
        எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
        எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
        வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.6
    40    காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக்
        காம்பன தோளியொ டுங்கலந்து
        பூமரு நான்முகன் போல்வரேத்தப்
        புகலி நிலாவிய புண்ணியனே
        ஈமவ னத்தெரி யாட்டுகந்த
        எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        வீமரு தண்பொழில் சூழ்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.7
    41    இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள்
        இற்றல றவ்விர லொற்றியைந்து
        புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்
        புகலி நிலாவிய புண்ணியனே
        இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்
        எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
        விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.8
    42    செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
        செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்
        பொறியர வத்தணை யானுங்காணாப்
        புகலி நிலாவிய புண்ணியனே
        எறிமழு வோடிள மான்கையின்றி
        இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
        வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.9
    43    பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த
        பான்மைய தன்றியும் பல்சமணும்
        புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
        புகலி நிலாவிய புண்ணியனே
        எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற
        எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
        விண்ணிழி கோயில் விரும்பியதே.     1.4.10
    44    விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
        வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
        புண்ணிய னைப்புக லிந்நிலாவு
        பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
        நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
        நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
        பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்
        பாரொடு விண்பரி பாலகரே.     1.4.11

    இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
    வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.5 திருக்காட்டுப்பள்ளி
    பண் - நட்டபாடை

    45    செய்யரு கேபுனல் பாயஓங்கிச்
        செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
        கையரு கேகனி வாழையீன்று
        கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
        பையரு கேயழல் வாயவைவாய்ப்
        பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
        மெய்யரு கேயுடை யானையுள்கி
        விண்டவ ரேறுவர் மேலுலகே.     1.5.1
    45    * இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.5.2
    46    திரைகளெல் லாமல ருஞ்சுமந்து
        செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
        கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்
        காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
        உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல
        உத்தம ராயுயர்ந் தாருலகில்
        அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க்
        காட்செய அல்லல் அறுக்கலாமே.     1.5.3
    47    தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
        சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
        நூலுடை யானிமை யோர்பெருமான்
        நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
        காலுடை யான்கரி தாயகண்டன்
        காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
        மேலுடை யானிமை யாதமுக்கண்
        மின்னிடை யாளொடும் வேண்டினானே.     1.5.4
    48    சலசல சந்தகி லோடும்உந்திச்
        சந்தன மேகரை சார்த்தியெங்கும்
        பலபல வாய்த்தலை யார்த்துமண்டி
        பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்
        கலகல நின்றதி ருங்கழலான்
        காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
        சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
        சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.     1.5.5
    49    தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்
        தாமரை செங்கழு நீருமெல்லாங்
        களையவி ழுங்குழ லார்கடியக்
        காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
        துளைபயி லுங்குழல் யாழ்முரல
        துன்னிய இன்னிசை யால்துதைந்த
        அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க்
        காட்செய அல்லல் அறுக்கலாமே.     1.5.6
    50    முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்
        முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
        கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
        காதல்செய் தான்கரி தாயகண்டன்
        பொடியணி மேனியி னானையுள்கிப்
        போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
        றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்
        அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.     1.5.7
    51    பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்
        பெய்கழல் நாடொறும் பேணியேத்த
        மறையுடை யான்மழு வாளுடையான்
        வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
        கறையுடை யான்கன லாடுகண்ணாற்
        காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
        குறையுடை யான்குறட் பூதச்செல்வன்
        குரைகழ லேகைகள் கூப்பினோமே.     1.5.8
    52    செற்றவர் தம்அர ணம்மவற்றைச்
        செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
        கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்
        காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
        உற்றவர் தாமுணர் வெய்திநல்ல
        உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
        பெற்றம ரும்பெரு மானையல்லால்
        பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே.     1.5.9
    53    ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த்
        துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
        குண்டர்க ளோடரைக் கூறையில்லார்
        கூறுவ தாங்குண மல்லகண்டீர்
        அண்டம றையவன் மாலுங்காணா
        ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
        வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை
        வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.     1.5.10
    54    பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்
        போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
        கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக்
        காதல னைக்கடற் காழியர்கோன்
        துன்னிய இன்னிசை யாற்றுதைந்து
        சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
        தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந்
        தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.     1.5.11

    இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
    வினாவுரை

    பண் - நட்டபாடை

    55    அங்கமும் வேதமும் ஓதுநாவர்
        அந்தணர் நாளும் அடிபரவ
        மங்குல் மதிதவழ் மாடவீதி
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        செங்கய லார்புனற் செல்வமல்கு
        சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
        கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.     1.6.1
    56    நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
        நேர்புரி நூன்மறை யாளரேத்த
        மைதவழ் மாட மலிந்தவீதி
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
        சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
        கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.     1.6.2
    57    தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
        தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
        மால்புகை போய்விம்மு மாடவீதி
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
        சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
        கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.    1.6.3
    58    நாமரு கேள்வியர் வேள்வியோவா
        நான்மறை யோர்வழி பாடுசெய்ய
        மாமரு வும்மணிக் கோயில்மேய
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
        சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
        காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.     1.6.4
    59    பாடல் முழவும் விழவும்ஓவாப்
        பன்மறை யோரவர் தாம்பரவ
        மாட நெடுங்கொடி விண்தடவும்
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
        சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
        காடக மேயிட மாகஆடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.    1.6.5
    60    புனையழ லோம்புகை அந்தணாளர்
        பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
        மனைகெழு மாட மலிந்தவீதி
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
        சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
        கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.     1.6.6
    60    * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.6.7
    61    பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
        பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
        மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
        சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
        காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.     1.6.8
    62    அந்தமும் ஆதியும் நான்முகனும்
        அரவணை யானும் அறிவரிய
        மந்திர வேதங்க ளோதுநாவர்
        மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
        செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
        சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
        கந்தம் அகிற்புகை யேகமழுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.    1.6.9
    63    இலைமரு தேயழ காகநாளும்
        இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
        நிலையமண் டேரரை நீங்கிநின்று
        நீதரல் லார்தொழும் மாமருகல்
        மலைமகள் தோள்புணர் வாயருளாய்
        மாசில்செங் காட்டங் குடியதனுள்
        கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
        கணபதி யீச்சரங் காமுறவே.    1.6.10
    64    நாலுங் குலைக்கமு கோங்குகாழி
        ஞானசம் பந்தன் நலந்திகழும்
        மாலின் மதிதவழ் மாடமோங்கும்
        மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
        சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
        சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
        சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
        சொல்லவல் லார்வினை யில்லையாமே.     1.6.11

    இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
    திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
    திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
    தேவியார் - திருக்குழல்நாயகி.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்
    வினாவுரை

    பண் - நட்டபாடை

    65    பாடக மெல்லடிப் பாவையோடும்
        படுபிணக் காடிடம் பற்றிநின்று
        நாடக மாடுநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        சூடக முன்கை மடந்தைமார்கள்
        துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
        ஆடக மாடம் நெருங்குகூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.    1.7.1
    66    திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
        செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
        நங்கள் மகிழுநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        பொங்கிள மென்முலை யார்களோடும்
        புனமயி லாட நிலாமுளைக்கும்
        அங்கள கச்சுதை மாடக்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.2
    67    தண்ணறு மத்தமுங் கூவிளமும்
        வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
        நண்ணல் அரியநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        புண்ணிய வாணரும் மாதவரும்
        புகுந்துட னேத்தப் புனையிழையார்
        அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.3
    68    பூவினில் வாசம் புனலிற்பொற்பு
        புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
        நாவினிற் பாடநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
        தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
        (*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
        (*) ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம்.    1.7.4
    69    செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
        திருந்து புகையு மவியும்பாட்டும்
        நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        உம்பரும் நாக ருலகந்தானும்
        ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
        அம்புத நால்களால் நீடுங்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.5
    70    பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
        பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
        நாகமும் பூண்டநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        போகமும் நின்னை மனத்துவைத்துப்
        புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
        ஆகமு டையவர் சேருங்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.6
    71    கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
        கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
        நாவணப் பாட்டுநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        பூவண மேனி இளையமாதர்
        பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
        ஆவண வீதியில் ஆடுங்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.7
    72    இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
        எழில்விர லூன்றி யிசைவிரும்பி
        நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
        புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
        அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.8
    73    பணியுடை மாலும் மலரினோனும்
        பன்றியும் வென்றிப் பறவையாயும்
        நணுகல் அரியநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        மணியொலி சங்கொலி யோடுமற்றை
        மாமுர சின்னொலி என்றும்ஓவா
        தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.9
    74    தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
        சாதியின் நீங்கிய வத்தவத்தர்
        நடுக்குற நின்றநள் ளாறுடைய
        நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
        எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
        இரும்பலி யின்பினோ டெத்திசையும்
        அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.     1.7.10
    75    அன்புடை யானை அரனைக்கூடல்
        ஆலவாய் மேவிய தென்கொலென்று
        நன்பொனை நாதனை நள்ளாற்றானை
        நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
        பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
        பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
        இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
        இமையவ ரேத்த இருப்பர்தாமே.     1.7.11

    இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
    தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்
    பண் - நட்டபாடை

    76    புண்ணியர் பூதியர் பூதநாதர்
        புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
        கண்ணிய ரென்றென்று காதலாளர்
        கைதொழு தேத்த இருந்தவூராம்
        விண்ணுயர் மாளிகை மாடவீதி
        விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
        பண்ணியல் பாடல றாதஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.1
    77    முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
        முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
        அத்திய ரென்றென் றடியரேத்தும்
        ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
        தொத்திய லும்பொழில் மாடுவண்டு
        துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்
        பத்திமைப் பாடல றாதஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.2
    78    பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
        போம்வழி வந்திழி வேற்றமானார்
        இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
        இறையவ ரென்றுமி ருந்தவூராம்
        தெங்குயர் சோலைசே ராலைசாலி
        திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
        பங்கய மங்கை விரும்புமாவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.3
    79    தேவியோர் கூறின ரேறதேறுஞ்
        செலவினர் நல்குர வென்னைநீக்கும்
        ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
        அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
        பூவிய லும்பொழில் வாசம்வீசப்
        புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
        பாவியல் பாடல றாதஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.4
    80    இந்தணை யுஞ்சடை யார்விடையார்
        இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
        வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
        மன்னினர் மன்னி யிருந்தவூராம்
        கொந்தணை யுங்குழ லார்விழவில்
        கூட்டமி டையிடை சேரும்வீதிப்
        பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.5
    81    குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
        கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
        ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
        உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
        சுற்றிய வாசலின் மாதர்விழாச்
        சொற்கவி பாடநி தானம்நல்கப்
        பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.6
    82    நீறுடை யார்நெடு மால்வணங்கும்
        நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
        கூறுடை யாருடை கோவணத்தார்
        குவலய மேத்த இருந்தவூராம்
        தாறுடை வாழையிற் கூழைமந்தி
        தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
        பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.7
    83    வெண்டலை மாலை விரவிப்பூண்ட
        மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
        வண்டமர் பூமுடி செற்றுகந்த
        மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
        கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
        கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
        பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.8
    84    மாலும் அயனும் வணங்கிநேட
        மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
        சீலம் அறிவரி தாகிநின்ற
        செம்மையி னாரவர் சேருமூராம்
        கோல விழாவி னரங்கதேறிக்
        கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
        பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.9
    85    பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
        பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
        தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
        சைவரி டந்தள வேறுசோலைத்
        துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
        சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
        பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.     1.8.10
    86    எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
        எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
        பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
        பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
        கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்
        கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
        கொண்டினி தாயிசை பாடியாடிக்
        கூடு மவருடை யார்கள்வானே.     1.8.11

    இது சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
    தேவியார் - மங்களநாயகியம்மை
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.9 திருவேணுபுரம்
    பண் - நட்டபாடை

    87    வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
    பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
    தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
    விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.     1.9.1
    80    படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை
    கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
    (*)புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
    விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.

    (*) குடைப்பாளை என்றும் பாடம்.    1.9.2
    89    கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்
    படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
    நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
    விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.     1.9.3
    90    தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
    மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்
    பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
    மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே.     1.9.4
    91    நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்
    வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
    தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி
    மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.     1.9.5
    92    மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக்
    கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்
    தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
    (**)விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.
    (**) விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம்.    1.9.6
        * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.9.7
    93    மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்
    தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்
    கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
    விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.     1.9.8
    94    வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்
    பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
    கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
    வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.     1.9.9
    95    மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர்
    தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
    தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
    வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.
    (*) குழுக்கள் என்றும் பாடம்.     1.9.10
    96    வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்
    பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
    ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்
    கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 11

    வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.10 திரு அண்ணாமலை
    பண் - நட்டபாடை

    97    உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
    பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
    மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
    அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.     1.10.1
    98    தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
    தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
    ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
    பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.     1.10.2
    99    பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
    சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
    ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
    காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.     1.10.3
    100    உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
    எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
    முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
    அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.     1.10.4
    101    மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
    அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
    உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
    குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.    1.10.5
    102    பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
    பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
    கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
    உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.    1.10.6
    103    கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
    நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
    எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
    அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.    1.10.7
    104    ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
    பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
    வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
    அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.     1.10.8
    105    விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
    கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
    அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
    தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே.     1.10.9
    106    வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
    மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
    ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
    கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.     1.10.10
    107    வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
    அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
    கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
    சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.     1.10.11

    இது நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
    தேவியார் - உண்ணாமுலையம்மை
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.11 திருவீழிமிழலை
    பண் - நட்டபாடை

    108    சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
    படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
    மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
    விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.     1.11.1
    109    ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
    மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
    ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
    வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.     1.11.2
    110    வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
    உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
    மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
    விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.     1.11.3
    111    பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
    உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
    மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
    விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.     1.11.4
    112    ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
    தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
    தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
    மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.     1.11.5
    113    கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
    எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
    வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
    வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.    1.11.6
    114    கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
    புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
    வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
    விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.     1.11.7
    115    முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
    தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
    பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
    மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.     1.11.8
    116    பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
    ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
    வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
    வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.     1.11.9
    117    மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
    இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
    பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
    விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.    1.11.10
    118    வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
    காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
    யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
    (*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.
    (*) ஊழின்வலி என்றும் பாடம்.    1.11.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீழியழகர்,
    தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.12 திருமுதுகுன்றம்
    பண் - நட்டபாடை

    119    மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
    தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
    கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
    முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.     1.12.1
    120    தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
    இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
    மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
    முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.     1.12.2
    121    விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
    டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
    களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
    முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.     1.12.3
    122    சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
    நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
    அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
    முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.     1.12.4
    123    அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
    கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
    மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
    முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.     1.12.5
    124    ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
    கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
    சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
    மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.     1.12.6
    125    தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய
    மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
    விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
    முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
    (*) முடியர் என்றும் பாடம்.
    (**) நடமுன் செயும் என்றும் பாடம்.    1.12.7
    127    செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
    கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
    மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (*)
    முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
    (*) குறை யில்லா என்றும் பாடம்.    1.12.8
    127    இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
    செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
    புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
    முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.     1.12.9
    128    அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
    மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
    கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
    முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.     1.12.10
    129    முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
    புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
    நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
    பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.     1.12.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
    சுவாமிபெயர் - பழமலைநாதர்;
    தேவியார் - பெரியநாயகியம்மை.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.13 திருவியலூர்
    பண் - நட்டபாடை

    130    குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
    பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
    அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
    விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.     1.13.1
    131    ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
    ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
    மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
    வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.     1.13.2
    132    செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
    பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
    உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
    விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.     1.13.3
    133    அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
    மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
    கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
    மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.     1.13.4
    134    எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
    பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
    கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
    விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.     1.13.5
    135    வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
    திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
    அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
    விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே.     1.13.6
    136    மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
    ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
    தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
    மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.     1.13.7
    137    பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
    கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
    சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
    விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.     1.13.8
    138    வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
    அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
    உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
    விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.     1.13.9
    139    தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
    பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
    கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
    விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.     1.13.10
    140    விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
    தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
    துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
    விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.     1.13.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
    தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
    சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.14 திருக்கொடுங்குன்றம்
    பண் - நட்டபாடை

    141    வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
    கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
    ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
    தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.     1.14.1
    142    மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
    குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
    அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
    எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.     1.14.2
    143    மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
    குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
    கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
    வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.     1.14.3
    144    பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
    குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
    பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
    பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.     1.14.4
    145    மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
    கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
    நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
    பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.     1.14.5
    146    கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
    கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
    அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
    பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.     1.14.6
    147    மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
    குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
    அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
    நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.     1.14.7
    148    முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
    குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
    ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
    பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.     1.14.8
    149    அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
    குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
    மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
    இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.    1.14.9
    150    மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
    குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
    புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
    பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.     1.14.10
    151    கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்
    கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
    ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
    ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.     1.14.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
    தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.15 திருநெய்த்தானம்
    பண் - நட்டபாடை

    152    மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
    கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
    செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
    நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.     1.15.1
    152    பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
    பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
    அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
    நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.    1.15.2
    154    பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
    வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
    தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
    நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.     1.15.3
    155    சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
    நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
    கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
    நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.     1.15.4
    156    நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
    பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
    நிகரான்மண லிடுதன்கரை(*) நிகழ்வாயநெய்த் தான
    நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
    (*) தண்கரை என்றும் பாடம்.    1.15.5
    157    விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
    உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
    புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(*) தானம்
    அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.
    (*) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்.    1.15.6
    158    நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
    தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
    கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
    தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.     1.15.7
    159    அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
    இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
    நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
    கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.     1.15.8
    160    கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
    சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
    காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
    ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.     1.15.9
    161    மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
    புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
    நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
    சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.     1.15.10
    162    தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
    நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
    பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
    சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.     1.15.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,
    தேவியார் - வாலாம்பிகையம்மை.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை
    பண் - நட்டபாடை

    163    பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
    போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
    காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
    ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.     1.16.1
    164    மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
    புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
    கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
    அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.     1.16.2
    165    கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
    பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
    சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
    துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.     1.16.3
    166    தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
    பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
    மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
    அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே.    1.16.4
    167    மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
    கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
    பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
    அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.     1.16.5
    168    மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
    பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
    என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
    அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.     1.16.6
    169    முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
    பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
    கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
    அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.     1.16.7
    170    இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
    விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
    புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
    அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.     1.16.8
    171    செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
    பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
    வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
    அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.     1.16.9
    172    நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
    போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
    ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
    சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.     1.16.10
    173    பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
    அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
    கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
    சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.     1.16.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,
    தேவியார் - பால்வளைநாயகியம்மை.
    பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.17 திருஇடும்பாவனம்
    பண் - நட்டபாடை

    174    மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
    தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
    சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
    இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.    1.17.1
    175    மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
    நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
    கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
    இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.     1.17.2
    176    சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை
    ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
    கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
    ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.     1.17.3
    177    பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
    தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
    குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
    எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.    1.17.4
    178    பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்
    செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
    கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
    எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.     1.17.5
    179    நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
    அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
    குறிநீர்மையர் (*)குணமார்தரு மணமார்தரு குன்றில்
    எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.
    (*) குளமார்தரும் என்றும் பாடம்.    1.17.6
    180    நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
    பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்
    கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
    ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.     1.17.7
    181    தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
    ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
    கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
    ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.     1.17.8
    182    பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
    தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
    மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
    இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.     1.17.9
    183    தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(*)சம ணடப்பர்
    உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
    மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
    இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10
    (*) சமண்டப்பர் என்றும் பாடம்.    1.17.10
    184    கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
    இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை
    அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
    படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.     1.17.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சற்குணநாதர்,
    தேவியார் - மங்களநாயகியம்மை.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.18 திருநின்றியூர்
    பண் - நட்டபாடை

    185    *சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறு
    பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
    காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
    நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.
    (*) சூலப்படை என்றும் பாடம்.
    (**) சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம்.     1.18.1
    186    அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
    நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
    நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்*
    பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
    (*) நயந்தானா என்றும் பாடம்.     1.18.2
    187    பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
    அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
    நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
    உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.     1.18.3
    188    பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
    ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
    தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
    ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.     1.18.4
    189    குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
    நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
    அழலின்வலன் அங்கையது *ஏந்தியன லாடுங்
    கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.
    (*) எய்தி என்றும் பாடம்.    1.18.5
    190    மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
    சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
    வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
    யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே.     1.18.6
    191    பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
    பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
    சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
    நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.     1.18.7
        * இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.18.8
    192    நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
    அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
    நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
    செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.     1.18.9
    193    நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
    அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
    நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
    மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.     1.18.10
    194    குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
    நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
    நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
    குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.     1.18.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
    தேவியார் - உலகநாயகியம்மை.
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.19 திருக்கழுமலம் - திருவிராகம்
    பண் - நட்டபாடை

    195    பிறையணி படர்சடை முடியிடைப்
        பெருகிய புனலுடை யவனிறை
        இறையணி வளையிணை முலையவ
        ளிணைவன தெழிலுடை யிடவகை
        கறையணி பொழில்நிறை வயலணி
        கழுமலம் அமர்கனல் உருவினன்
        நறையணி மலர்நறு விரைபுல்கு
        நலம்மலி கழல்தொழன் மருவுமே.     1.19.1
    196    பிணிபடு கடல்பிற விகளற
        லெளிதுள ததுபெரு கியதிரை
        அணிபடு கழுமலம் இனிதம
        ரனலுரு வினனவிர் சடைமிசை
        தணிபடு கதிர்வள ரிளமதி
        புனைவனை உமைதலை வனைநிற
        மணிபடு கறைமிட றனைநல
        மலிகழ லிணைதொழன் மருவுமே.     1.19.2
    197    வரியுறு புலியத ளுடையினன்
        வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
        விரியுறு சடைவிரை புழைபொழில்
        விழவொலி மலிகழு மலம்அமர்
        எரியுறு நிறஇறை வனதடி
        இரவொடு பகல்பர வுவர்தம
        தெரியுறு வினைசெறி கதிர்முனை
        இருள்கெட நனிநினை வெய்துமதே.     1.19.3
    198    வினைகெட மனநினை வதுமுடி
        கெனின்நனி தொழுதெழு குலமதி
        புனைகொடி யிடைபொருள் தருபடு
        களிறின துரிபுதை யுடலினன்
        மனைகுட வயிறுடை யனசில
        வருகுறள் படையுடை யவன்மலி
        கனைகட லடைகழு மலமமர்
        கதிர்மதி யினனதிர் கழல்களே.     1.19.4
    199    தலைமதி புனல்விட அரவிவை
        தலைமைய தொருசடை யிடையுடன்
        நிலைமரு வவொரிட மருளினன்
        நிழன்மழு வினொடழல் கணையினன்
        மலைமரு வியசிலை தனின்மதி
        லெரியுண மனமரு வினன்நல
        கலைமரு வியபுற வணிதரு
        கழுமலம் இனிதமர் தலைவனே.     1.19.5
    200    வரைபொரு திழியரு விகள்பல
        பருகொரு கடல்வரி மணலிடை
        கரைபொரு திரையொலி கெழுமிய
        கழுமலம் அமர்கன லுருவினன்
        அரைபொரு புலியதள் உடையினன்
        அடியிணை தொழவரு வினையெனும்
        உரைபொடி படவுறு துயர்கெட
        வுயருல கெய்தலொரு தலைமையே.     1.19.6
    201    முதிருறு கதிர்வளர் இளமதி
        சடையனை நறநிறை தலைதனில்
        உதிருறு மயிர்பிணை தவிர்தசை
        யுடைபுலி அதளிடை யிருள்கடி
        கதிருறு சுடரொளி கெழுமிய
        கழுமலம் அமர்மழு மலிபடை
        அதிருறு கழலடி களதடி
        தொழுமறி வலதறி வறியமே.     1.19.7
    202    கடலென நிறநெடு முடியவ
        னடுதிறல் தெறஅடி சரணென
        அடல்நிறை படையரு ளியபுக
        ழரவரை யினன்அணி கிளர்பிறை
        விடம்நிறை மிடறுடை யவன்விரி
        சடையவன் விடையுடை யவனுமை
        உடனுறை பதிகடல் மறுகுடை
        யுயர்கழு மலவியன் நகரதே.     1.19.8
    203    கொழுமல ருறைபதி யுடையவன்
        நெடியவ னெனவிவர் களுமவன்
        விழுமையை யளவறி கிலரிறை
        விரைபுணர் பொழிலணி விழவமர்
        கழுமலம் அமர்கன லுருவினன்
        அடியிணை தொழுமவ ரருவினை
        எழுமையு மிலநில வகைதனி
        லெளிதிமை யவர்விய னுலகமே.     1.19.9
    204    அமைவன துவரிழு கியதுகி
        லணியுடை யினர்அமண் உருவர்கள்
        சமையமும் ஒருபொரு ளெனுமவை
        சலநெறி யனஅற வுரைகளும்
        இமையவர் தொழுகழு மலமம
        ரிறைவன தடிபர வுவர்தமை
        நமையல வினைநல னடைதலி
        லுயர்நெறி நனிநணு குவர்களே.     1.19.10
    205    பெருகிய தமிழ்விர கினன்மலி
        பெயரவ னுறைபிணர் திரையொடு
        கருகிய நிறவிரி கடலடை
        கழுமல முறைவிட மெனநனி
        பெருகிய சிவனடி பரவிய
        பிணைமொழி யனவொரு பதுமுடன்
        மருவிய மனமுடை யவர்மதி
        யுடையவர் விதியுடை யவர்களே.     1.19.11

    கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.20 திருவீழிமிழலை - திருவிராகம்
    பண் - நட்டபாடை

    206    தடநில வியமலை நிறுவியொர்
        தழலுமிழ் தருபட அரவுகொ
        டடல்அசு ரரொடம ரர்கள்அலை
        கடல்கடை வுழியெழு மிகுசின
        விடமடை தருமிட றுடையவன்
        விடைமிசை வருமவ னுறைபதி
        திடமலி தருமறை முறையுணர்
        மறையவர் நிறைதிரு மிழலையே.     1.20.1
    207    தரையொடு திவிதல நலிதரு
        தகுதிற லுறுசல தரனது
        வரையன தலைவிசை யொடுவரு
        திகிரியை அரிபெற அருளினன்
        உரைமலி தருசுர நதிமதி
        பொதிசடை யவனுறை பதிமிகு
        திரைமலி கடல்மண லணிதரு
        பெறுதிடர் வளர்திரு மிழலையே.     1.20.2
    208    மலைமகள் தனையிகழ் வதுசெய்த
        மதியறு சிறுமன வனதுயர்
        தலையினொ டழலுரு வனகரம்
        அறமுனி வுசெய்தவ னுறைபதி
        கலைநில வியபுல வர்களிடர்
        களைதரு கொடைபயில் பவர்மிகு
        சிலைமலி மதில்புடை தழுவிய
        திகழ்பொழில் வளர்திரு மிழலையே.    1.20.3
    209    மருவலர் புரமெரி யினின்மடி
        தரவொரு கணைசெல நிறுவிய
        பெருவலி யினன்நலம் மலிதரு
        கரனுர மிகுபிணம் அமர்வன
        இருளிடை யடையுற வொடுநட
        விசையுறு பரனினி துறைபதி
        தெருவினில் வருபெரு விழவொலி
        மலிதர வளர்திரு மிழலையே.     1.20.4
    210    அணிபெறு வடமர நிழலினி
        லமர்வொடு மடியிணை யிருவர்கள்
        பணிதர அறநெறி மறையொடு
        மருளிய பரனுறை விடமொளி
        மணிபொரு வருமர கதநில
        மலிபுன லணைதரு வயலணி
        திணிபொழில் தருமணம் மதுநுக
        ரறுபத முரல்திரு மிழலையே.     1.20.5
    211    வசையறு வலிவன சரவுரு
        வதுகொடு நினைவரு தவமுயல்
        விசையன திறன்மலை மகளறி
        வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
        அசைவில படையருள் புரிதரு
        மவனுறை பதியது மிகுதரு
        திசையினின் மலர்குல வியசெறி
        பொழின்மலி தருதிரு மிழலையே.     1.20.6
    212    நலமலி தருமறை மொழியொடு
        நதியுறு புனல்புகை ஒளிமுதல்
        மலரவை கொடுவழி படுதிறன்
        மறையவ னுயிரது கொளவரு
        சலமலி தருமற லிதனுயிர்
        கெடவுதை செய்தவர னுறைபதி
        (*)திலகமி தெனவுல குகள்புகழ்
        தருபொழி லணிதிரு மிழலையே.
        (*) திலதமிதென என்றும் பாடம்.    1.20.7
    213    அரனுறை தருகயி லையைநிலை
        குலைவது செய்ததச முகனது
        கரமிரு பதுநெரி தரவிரல்
        நிறுவிய கழலடி யுடையவன்
        வரன்முறை யுலகவை தருமலர்
        வளர்மறை யவன்வழி வழுவிய
        சிரமது கொடுபலி திரிதரு
        சிவனுறை பதிதிரு மிழலையே.     1.20.8
    214    அயனொடும் எழிலமர் மலர்மகள்
        மகிழ்கண னளவிட லொழியவொர்
        பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
        படியுரு வதுவர வரன்முறை
        சயசய வெனமிகு துதிசெய
        வெளியுரு வியவவ னுறைபதி
        செயநில வியமதில் மதியது
        தவழ்தர வுயர்திரு மிழலையே.     1.20.9
    215    இகழுரு வொடுபறி தலைகொடு
        மிழிதொழில் மலிசமண் விரகினர்
        திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
        கெடஅடி யவர்மிக அருளிய
        புகழுடை யிறையுறை பதிபுன
        லணிகடல் புடைதழு வியபுவி
        திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
        செறிவொடு திகழ்திரு மிழலையே.    1.20.10
    216    சினமலி கரியுரி செய்தசிவ
        னுறைதரு திருமிழ லையைமிகு
        தனமனர் சிரபுர நகரிறை
        தமிழ்விர கனதுரை யொருபதும்
        மனமகிழ் வொடுபயில் பவரெழின்
        மலர்மகள் கலைமகள் சயமகள்
        இனமலி புகழ்மக ளிசைதர
        இருநில னிடையினி தமர்வரே.     1.20.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்
    பண் - நட்டபாடை

    217    புவம்வளி கனல்புனல் புவி(*)கலை
        யுரைமறை திரிகுணம் அமர்நெறி
        திவமலி தருசுரர் முதலியர்
        திகழ்தரும் உயிரவை யவைதம
        பவமலி தொழிலது நினைவொடு
        பதுமநன் மலரது மருவிய
        சிவனது சிவபுரம் நினைபவர்
        செழுநில னினில்நிலை பெறுவரே. 01
        (*) கலைபுரை என்றும் பாடம்.     1.21.1
    218    மலைபல வளர்தரு புவியிடை
        மறைதரு வழிமலி மனிதர்கள்
        நிலைமலி சுரர்முதல் உலகுகள்
        நிலைபெறு வகைநினை வொடுமிகும்
        அலைகடல் நடுவறி துயிலமர்
        அரியுரு வியல்பர னுறைபதி
        சிலைமலி மதிள்சிவ புரம்நினை
        பவர்திரு மகளொடு திகழ்வரே.     1.21.2
    219    பழுதில கடல்புடை தழுவிய
        படிமுத லியவுல குகள்மலி
        குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
        குலம்மலி தருமுயி ரவையவை
        முழுவதும் அழிவகை நினைவொடு
        *முதலுரு வியல்பர னுறைபதி
        செழுமணி யணிசிவ புரநகர்
        தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
        (*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.     1.21.3
    220    நறைமலி தருமள றொடுமுகை
        நகுமலர் புகைமிகு வளரொளி
        நிறைபுனல் கொடுதனை நினைவொடு
        நியதமும் வழிபடும் அடியவர்
        குறைவில பதமணை தரஅருள்
        குணமுடை யிறையுறை வனபதி
        சிறைபுன லமர்சிவ புரமது
        நினைபவர் செயமகள் தலைவரே.     1.21.4
    221    சினமலி யறுபகை மிகுபொறி
        சிதைதரு வகைவளி நிறுவிய
        மனனுணர் வொடுமலர் மிசையெழு
        தருபொருள் நியதமும் உணர்பவர்
        தனதெழி லுருவது கொடுஅடை
        தகுபர னுறைவது நகர்மதில்
        கனமரு வியசிவ புரம்நினை
        பவர்கலை மகள்தர நிகழ்வரே.    1.21.5
    222    சுருதிகள் பலநல முதல்கலை
        துகளறு வகைபயில் வொடுமிகு
        உருவிய லுலகவை புகழ்தர
        வழியொழு குமெயுறு பொறியொழி
        அருதவ முயல்பவர் தனதடி
        யடைவகை நினையர னுறைபதி
        திருவளர் சிவபுரம் நினைபவர்
        திகழ்குலன் நிலனிடை நிகழுமே.     1.21.6
    223    கதமிகு கருவுரு வொடு*வுகி
        ரிடைவட வரைகண கணவென
        மதமிகு நெடுமுக னமர்வளை
        மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
        இதமமர் புவியது நிறுவிய
        எழிலரி வழிபட அருள்செய்த
        பதமுடை யவனமர் சிவபுரம்
        நினைபவர் நிலவுவர் படியிலே.
        (*) உகிரிடவட என்றும் படம்.     1.21.7
    224    அசைவுறு தவமுயல் வினிலயன்
        அருளினில் வருவலி கொடுசிவன்
        இசைகயி லையையெழு தருவகை
        இருபது கரமவை நிறுவிய
        நிசிசரன் முடியுடை தரவொரு
        விரல்பணி கொளுமவ னுறைபதி
        திசைமலி சிவபுரம் நினைபவர்
        செழுநில னினில்நிகழ் வுடையரே.     1.21.8
    225    அடல்மலி படையரி அயனொடும்
        அறிவரி யதொரழல் மலிதரு
        சுடருரு வொடுநிகழ் தரவவர்
        வெருவொடு துதியது செயவெதிர்
        விடமலி களநுத லமர்கண
        துடையுரு வெளிபடு மவன்நகர்
        திடமலி பொழிலெழில் சிவபுரம்
        நினைபவர் வழிபுவி திகழுமே.     1.21.9
    226    குணமறி வுகள்நிலை யிலபொரு
        ளுரைமரு வியபொருள் களுமில
        திணமெனு மவரொடு செதுமதி
        மிகுசம ணருமலி தமதுகை
        உணலுடை யவருணர் வருபர
        னுறைதரு பதியுல கினில்நல
        கணமரு வியசிவ புரம்நினை
        பவரெழி லுருவுடை யவர்களே.     1.21.10
    227    திகழ்சிவ புரநகர் மருவிய
        சிவனடி யிணைபணி சிரபுர
        நகரிறை தமிழ்விர கனதுரை
        நலமலி யொருபதும் நவில்பவர்
        நிகழ்குல நிலநிறை திருவுரு
        நிகரில கொடைமிகு சயமகள்
        புகழ்புவி வளர்வழி யடிமையின்
        மிகைபுணர் தரநலம் மிகுவரே.     1.21.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.22 திருமறைக்காடு - திருவிராகம்
    பண் - நட்டபாடை

    228    சிலைதனை நடுவிடை நிறுவியொர்
        சினமலி அரவது கொடுதிவி
        தலமலி சுரரசு ரர்களொலி
        சலசல கடல்கடை வுழிமிகு
        கொலைமலி விடமெழ அவருடல்
        குலைதர வதுநுகர் பவனெழில்
        மலைமலி மதில்புடை தழுவிய
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.1
    229    கரமுத லியஅவ யவமவை
        கடுவிட அரவது கொடுவரு
        வரல்முறை அணிதரு மவனடல்
        வலிமிகு புலியத ளுடையினன்
        இரவலர் துயர்கெடு வகைநினை
        இமையவர் புரமெழில் பெறவளர்
        மரநிகர் கொடைமனி தர்கள்பயில்
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.2
    230    இழைவளர் தருமுலை மலைமக
        ளினிதுறை தருமெழி லுருவினன்
        முழையினின் மிகுதுயி லுறுமரி
        முசிவொடும் எழமுள ரியொடெழு
        கழைநுகர் தருகரி யிரிதரு
        கயிலையின் மலிபவ னிருளுறும்
        மழைதவழ் தருபொழில் நிலவிய
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.3
    231    நலமிகு திருவித ழியின்மலர்
        நகுதலை யொடுகன கியின்முகை
        பலசுர நதிபட அரவொடு
        மதிபொதி சடைமுடி யினன்மிகு
        தலநில வியமனி தர்களொடு
        தவமுயல் தருமுனி வர்கள்தம
        மலமறு வகைமனம் நினைதரு
        மறைவன மமர்தரு பரமனே.     1.22.4
    232    கதிமலி களிறது பிளிறிட
        வுரிசெய்த அதிகுண னுயர்பசு
        பதியதன் மிசைவரு பசுபதி
        பலகலை யவைமுறை முறையுணர்
        விதியறி தருநெறி யமர்முனி
        கணனொடு மிகுதவ முயல்தரும்
        அதிநிபு ணர்கள்வழி படவளர்
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.5
    233    கறைமலி திரிசிகை படையடல்
        கனல்மழு வெழுதர வெறிமறி
        முறைமுறை யொலிதம ருகமுடை
        தலைமுகிழ் மலிகணி வடமுகம்
        உறைதரு கரனுல கினிலுய
        ரொளிபெறு வகைநினை வொடுமலர்
        மறையவன் மறைவழி வழிபடு
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.6
    234    இருநில னதுபுன லிடைமடி
        தரஎரி புகஎரி யதுமிகு
        பெருவளி யினிலவி தரவளி
        கெடவிய னிடைமுழு வதுகெட
        இருவர்க ளுடல்பொறை யொடுதிரி
        யெழிலுரு வுடையவன் இனமலர்
        மருவிய அறுபதம் இசைமுரல்
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.7
    235    சனம்வெரு வுறவரு தசமுக
        னொருபது முடியொடு மிருபது
        கனமரு வியபுயம் நெரிவகை
        கழலடி யிலொர்விரல் நிறுவினன்
        இனமலி கணநிசி சரன்மகிழ்
        வுறவருள் செய்தகரு ணையனென
        மனமகிழ் வொடுமறை முறையுணர்
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.8
    236    அணிமலர் மகள்தலை மகனயன்
        அறிவரி யதொர்பரி சினிலெரி
        திணிதரு திரளுரு வளர்தர
        அவர்வெரு வுறலொடு துதிசெய்து
        பணியுற வெளியுரு வியபர
        னவனுரை மலிகடல் திரளெழும்
        மணிவள ரொளிவெயில் மிகுதரு
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.9
    237    இயல்வழி தரவிது செலவுற
        இனமயி லிறகுறு தழையொடு
        செயல்மரு வியசிறு கடமுடி
        யடைகையர் தலைபறி செய்துதவம்
        முயல்பவர் துவர்படம் உடல்பொதி
        பவரறி வருபர னவனணி
        வயலினில் வளைவளம் மருவிய
        மறைவனம் அமர்தரு பரமனே.     1.22.10
    238    வசையறு மலர்மகள் நிலவிய
        மறைவனம் அமர்பர மனைநினை
        பசையொடு மிகுகலை பலபயில்
        புலவர்கள் புகழ்வழி வளர்தரு
        இசையமர் கழுமல நகரிறை
        தமிழ்விர கனதுரை யியல்வல
        இசைமலி தமிழொரு பதும்வல
        அவருல கினிலெழில் பெறுவரே.     1.22.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.23 திருக்கோலக்கா
    பண் - தக்கராகம்

    239    மடையில் வாளை பாய மாதரார்
    குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
    சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
    உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.     1.23.1
    240    பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி
    கொண்டான் கோலக் காவு கோயிலாக்
    கண்டான் பாதங் கையாற் கூப்பவே
    உண்டான் நஞ்சை உலக முய்யவே.     1.23.2
    241    பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
    கோணற் பிறையன் குழகன் கோலக்கா
    மாணப் பாடி மறைவல் லானையே
    பேணப் பறையும் பிணிக ளானவே.     1.23.3
    242    தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
    மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
    குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
    இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.     1.23.4
    243    மயிலார் சாயல் மாதோர் பாகமா
    எயிலார் சாய எரித்த எந்தைதன்
    குயிலார் சோலைக் கோலக் காவையே
    பயிலா நிற்கப் பறையும் பாவமே.     1.23.5
    244    வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
    கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
    கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
    அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.     1.23.6
    245    நிழலார் சோலை நீல வண்டினங்
    குழலார் பண்செய் கோலக் காவுளான்
    கழலால் மொய்த்த பாதங் கைகளாற்
    தொழலார் பக்கல் துயர மில்லையே.     1.23.7
    246    எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
    முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
    குறியார் பண்செய் கோலக் காவையே
    நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.     1.23.8
    247    நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
    ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
    கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
    ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.     1.23.9
    248    பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
    உற்ற துவர்தோ யுருவி லாளருங்
    குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
    பற்றிப் பரவப் பறையும் பாவமே.     1.23.10
    249    நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
    குலங்கொள் கோலக் காவு ளானையே
    வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
    உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.     1.23.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.24 சீகாழி
    பண் - தக்கராகம்

    250    பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
    காவா யெனநின் றேத்துங் காழியார்
    மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்
    பாவா ரின்சொற் பயிலும் பரமரே.     1.24.1
    251    எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
    கந்த மாலை கொடுசேர் காழியார்
    வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
    அந்தி நட்டம் ஆடும் அடிகளே.     1.24.2
    252    தேனை வென்ற மொழியா ளொருபாகங்
    கான மான்கைக் கொண்ட காழியார்
    வான மோங்கு கோயி லவர்போலாம்
    ஆன இன்பம் ஆடும் அடிகளே.    1.24.3
    253    மாணா வென்றிக் காலன் மடியவே
    காணா மாணிக் களித்த காழியார்
    நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
    பேணார் புரங்கள் அட்ட பெருமானே.    1.24.4
    254    மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
    காடே றிச்சங் கீனுங் காழியார்
    வாடா மலராள் பங்க ரவர்போலாம்
    ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.     1.24.5
    255    கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
    கங்கை புனைந்த சடையார் காழியார்
    அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
    செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.     1.24.6
    256    கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
    கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
    அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
    பல்ல விடத்தும் பயிலும் பரமரே.     1.24.7
    257    எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
    கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
    எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
    பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.     1.24.8
    258    ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்
    தோற்றங் காணா வென்றிக் காழியார்
    ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
    கூற்ற மறுகக் குமைத்த குழகரே.     1.24.9
    259    பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
    கரக்கும் உரையை விட்டார் காழியார்
    இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
    அருப்பின் முலையாள் பங்கத் தையரே.    1.24.10
    260    காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
    சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
    பாரார் புகழப் பரவ வல்லவர்
    ஏரார் வானத் தினிதா இருப்பரே.     1.24.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.25 திருச்செம்பொன்பள்ளி
    பண் - தக்கராகம்

    261    மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
    திருவார் செம்பொன் பள்ளி மேவிய
    கருவார் கண்டத் தீசன் கழல்களை
    மருவா தவர்மேல் மன்னும் பாவமே.     1.25.1
    262    வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
    சீரார் செம்பொன் பள்ளி மேவிய
    ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
    சேரா தவர்மேற் சேரும் வினைகளே.     1.25.2
    263    வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
    திரையார் செம்பொன் பள்ளி மேவிய
    நரையார் விடையொன் றூரும் நம்பனை
    உரையா தவர்மே லொழியா வூனமே.    1.25.3
    264    மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
    செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
    எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
    தொழுவார் தம்மேல் துயர மில்லையே.    1.25.4
    265    மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
    சிலையார் செம்பொன் பள்ளி யானையே
    இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
    நிலையா வணங்க நில்லா வினைகளே.     1.25.5
    266    அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
    சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
    கறையார் கண்டத் தீசன் கழல்களை
    நிறையால் வணங்க நில்லா வினைகளே.    1.25.6
    267    பையார் அரவே ரல்கு லாளொடுஞ்
    செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
    கையார் சூல மேந்து கடவுளை
    மெய்யால் வணங்க மேவா வினைகளே.     1.25.7
    268    வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
    தேனார் செம்பொன் பள்ளி மேவிய
    ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
    ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.     1.25.8
    269    காரார் வண்ணன் கனகம் அனையானுந்
    தேரார் செம்பொன் பள்ளி மேவிய
    நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
    ஓரா தவர்மே லொழியா வூனமே.     1.25.9
    270    மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
    பேசா வண்ணம் பேசித் திரியவே
    தேசார் செம்பொன் பள்ளி மேவிய
    ஈசா என்ன நில்லா இடர்களே.    1.25.10
    271    நறவார் புகலி ஞான சம்பந்தன்
    செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
    பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
    உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.     1.25.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.26 திருப்புத்தூர்
    பண் - தக்கராகம்

    272    வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
    திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
    கங்கை தங்கு முடியா ரவர்போலும்
    எங்கள் உச்சி உறையும் இறையாரே.    1.26.1
    273    வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
    தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
    ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
    ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.     1.26.2
    274    பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
    தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
    ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
    தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.     1.26.3
    275    நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
    தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
    ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
    ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.     1.26.4
    276    இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
    திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
    பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
    வசை விளங்கும் வடிசேர் நுதலாரே.     1.26.5
    277    வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
    தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
    ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
    வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.     1.26.6
    278    நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
    செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
    தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
    மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.     1.26.7
    279    கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
    திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
    இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
    அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.     1.26.8
    280    மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
    தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
    பெருகி வாழும் பெருமா னவன்போலும்
    பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.     1.26.9
    281    கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
    தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
    ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
    ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.     1.26.10
    282    நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
    செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
    சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
    அல்லல் தீரும் அவலம் அடையாவே.     1.26.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.27 திருப்புன்கூர்
    பண் - தக்கராகம்

    283    முந்தி நின்ற வினைக ளவைபோகச்
    சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
    அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்
    கந்த மல்கு கமழ்புன் சடையாரே.     1.27.1
    284    மூவ ராய முதல்வர் முறையாலே
    தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
    ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்
    ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.     1.27.2
    285    பங்க யங்கள் மலரும் பழனத்துச்
    செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
    கங்கை தங்கு சடையா ரவர்போலும்
    எங்கள் உச்சி உறையும் மிறையாரே.     1.27.3
    286    கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
    திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
    உரையின் நல்ல பெருமா னவர்போலும்
    விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.     1.27.4
    287    பவழ வண்ணப் பரிசார் திருமேனி
    திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்
    அழக ரென்னும் அடிக ளவர்போலும்
    புகழ நின்ற புரிபுன் சடையாரே.     1.27.5
    288    தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
    திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
    பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்
    விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.     1.27.6
    289    பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
    தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
    ஆர நின்ற அடிக ளவர்போலுங்
    கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே.     1.27.7
    290    மலையத னாருடை யமதில் மூன்றுஞ்
    சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்
    தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
    மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே.     1.27.8
    291    நாட வல்ல மலரான் மாலுமாய்த்
    தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
    ஆட வல்ல அடிக ளவர்போலும்
    பாட லாடல் பயிலும் பரமரே.     1.27.9
    292    குண்டு முற்றிக் கூறை யின்றியே
    பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
    வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
    கண்டு தொழுமின் கபாலி வேடமே.     1.27.10
    293    மாட மல்கு மதில்சூழ் காழிமன்
    சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
    நாட வல்ல ஞான சம்பந்தன்
    பாடல் பத்தும் பரவி வாழ்மினே.     1.27.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.28 திருச்சோற்றுத்துறை
    பண் - தக்கராகம்

    294    செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
    துப்ப னென்னா தருளே துணையாக
    ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
    றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.1
    295    பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
    தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
    மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
    ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.2
    296    செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
    கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
    தைய லாளொர் பாக மாயஎம்
    ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.3
    297    பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
    துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
    மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
    அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.4
    298    பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
    மறையும் ஓதி மயானம் இடமாக
    உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
    அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.5
    299    துடிக ளோடு முழவம் விம்மவே
    பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
    படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
    அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே.    1.28.6
    300    சாடிக் காலன் மாளத் தலைமாலை
    சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
    பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
    தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.7
    301    பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
    கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
    எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
    அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.8
    302    தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
    அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
    விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
    எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.     1.28.9
    303    (*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
    ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
    நீதி நின்று நினைவார் வேடமாம்
    ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.
    (*) போதுசாற்றி என்றும் பாடம்.    1.28.10
    304    அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
    சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
    சந்தம் பரவு ஞான சம்பந்தன்
    வந்த வாறே புனைதல் வழிபாடே.     1.28.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்
    பண் - தக்கராகம்

    305     ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
    நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
    சீரு லாவு மறையோர் நறையூரிற்
    சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.     1.29.1
    306    காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
    ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
    வீடு மாக மறையோர் நறையூரில்
    நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.     1.29.2
    307    கல்வி யாளர் கனக மழல்மேனி
    புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
    மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
    செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.     1.29.3
    308    நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
    ஆட வல்ல அடிக ளிடமாகும்
    பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
    சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.    1.29.4
    309    உம்ப ராலும் உலகின் னவராலும்
    தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
    நண்பு லாவு மறையோர் நறையூரிற்
    செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.     1.29.5
    310    கூரு லாவு படையான் விடையேறிப்
    போரு லாவு மழுவான் அனலாடி
    பேரு லாவு பெருமான் நறையூரிற்
    சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.     1.29.6
    311    *அன்றி நின்ற அவுணர் புரமெய்த
    வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
    மன்றில் வாச மணமார் நறையூரிற்
    சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
    (*) அன்றி நின்ற - பகைத்து நின்ற     1.29.7
    312    அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
    நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
    பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
    திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.     1.29.8
    313    ஆழி யானும் அலரின் உறைவானும்
    ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
    சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
    நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.     1.29.9
    314    மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
    கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
    உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
    செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.     1.29.10
    315    மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
    சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
    அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
    பத்தும் பாடப் பறையும் பாவமே.     1.29.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.30 திருப்புகலி
    பண் - தக்கராகம்

    316     விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
    கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
    பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
    பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.    1.30.1
    317    ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
    மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்
    தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
    பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.     1.30.2
    318    வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
    புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
    மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்
    பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே.     1.30.3
    319    கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
    அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
    இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்
    புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே.     1.30.4
    320    காதார்கன பொற்குழை தோட திலங்கத்
    தாதார்மலர் தண்சடை யேற முடித்து
    (*)நாதான்உறை யும்மிட மாவது நாளும்
    போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.
    (*) நாதன் - நாதான் என நீண்டது.    1.30.5
    321    வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்
    கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
    குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
    புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.     1.30.6
    322    கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்
    செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
    அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
    பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே.     1.30.7
    323    தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல
    எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற
    கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
    பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே.     1.30.8
    324    மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
    தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
    நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
    பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே.     1.30.9
    325    உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
    அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
    கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்
    புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.    1.30.10
    326    இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்
    புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
    உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
    வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே.     1.30.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.31 திருக்குரங்கணின்முட்டம்
    பண் - தக்கராகம்

    327     விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
    கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
    கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்
    தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.     1.31.1
    328    விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்
    கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில்
    குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
    உடையானெனை யாளுடை யெந்தை பிரானே.     1.31.2
    329    சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
    காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
    கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்
    தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.     1.31.3
    330    வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
    தோடார்குழை யான்நல பாலன நோக்கிக்
    கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
    ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.     1.31.4
    331    இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்
    கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
    குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்
    துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.     1.31.5
    332    பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
    கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
    குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
    நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே.     1.31.6
    333    மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
    தோடார்குழை தானொரு காதில் இலங்கக்
    கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத்
    தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.     1.31.7
    334    மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
    உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
    கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
    கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.     1.31.8
    335    வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
    அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
    குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
    நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.    1.31.9
    336    கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
    வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
    குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத்
    தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.    1.31.10
    337    கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
    கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்
    சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக
    வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.     1.31.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வாலீசுவரர், தேவியார் - இறையார்வளையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.32 திருவிடைமருதூர்
    பண் - தக்கராகம்

    338     ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
    காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
    வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்
    தீடாவுறை கின்ற இடைமரு தீதோ.     1.32.1
    339    தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
    குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
    படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
    இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.     1.32.2
    340    வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
    அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
    பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
    எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ.     1.32.3
    341    அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
    கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
    வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
    எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.    1.32.4
    342    வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
    தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
    பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
    ஈசனுறை கின்ற இடைமரு தீதோ.     1.32.5
    343    வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
    என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
    அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
    இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.     1.32.6
    344    தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
    போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
    ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
    ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.    1.32.7
    345    பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
    ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த
    ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
    ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.     1.32.8
    346    முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
    நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
    பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
    எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.    1.32.9
    347    சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
    நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
    வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
    எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.     1.32.10
    348    கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
    எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
    பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
    விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.     1.32.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.33 திரு அன்பிலாலந்துறை
    பண் - தக்கராகம்

    349     கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
    இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
    பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
    அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே.    1.33.1
    350    சடையார்சது ரன்முதி ராமதி சூடி
    விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
    கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
    அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே.     1.33.2
    352    ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்
    பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
    நீருண்கய லும்வயல் வாளை வராலோ
    டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே.     1.33.3
    353    பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
    நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
    மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
    றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே.     1.33.4
    354    நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
    கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
    மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
    ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே.     1.33.5
    355    நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
    ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
    வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
    ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே.    1.33.6
    356    செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
    படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
    கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
    அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே.     1.33.7
    357    விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
    படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
    கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார
    அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே.     1.33.8
    358    வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
    பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
    சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
    அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே.     1.33.9
    359    தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
    நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
    வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
    அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே.    1.33.10
    360    அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
    கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
    பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
    விரவாகுவர் வானிடை வீடெளி தாமே.     1.33.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    அன்பில் என வழங்கப்பெறும்.
    சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.34 சீகாழி
    பண் - தக்கராகம்

    360     அடலே றமருங் கொடியண்ணல்
    மடலார் குழலா ளொடுமன்னுங்
    கடலார் புடைசூழ் தருகாழி
    தொடர்வா ரவர்தூ நெறியாரே.     1.34.1
    361    திரையார் புனல்சூ டியசெல்வன்
    வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
    கரையார் புனல்சூழ் தருகாழி
    நிரையார் மலர்தூ வுமினின்றே.     1.34.2
    362    இடியார் குரலே றுடையெந்தை
    துடியா ரிடையா ளொடுதுன்னுங்
    கடியார் பொழில்சூழ் தருகாழி
    அடியார் அறியார் அவலம்மே.     1.34.3
    363    ஒளியார் விடமுண் டவொருவன்
    அளியார் குழல்மங் கையொடன்பாய்
    களியார் பொழில்சூழ் தருகாழி
    எளிதாம் அதுகண் டவரின்பே.    1.34.4
    364    பனியார் மலரார் தருபாதன்
    முனிதா னுமையோ டுமுயங்கி
    கனியார் பொழில்சூழ் தருகாழி
    இனிதாம் அதுகண் டவரீடே.     1.34.5
    365    கொலையார் தருகூற் றமுதைத்து
    மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
    கலையார் தொழுதேத் தியகாழி
    தலையால் தொழுவார் தலையாரே.     1.34.6
    366    திருவார் சிலையால் எயிலெய்து
    உருவார் உமையோ டுடனானான்
    கருவார் பொழில்சூழ் தருகாழி
    மருவா தவர்வான் மருவாரே.     1.34.7
    367    அரக்கன் வலியொல் கஅடர்த்து
    வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
    சுரக்கும் புனல்சூழ் தருகாழி
    நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.     1.34.8
    368    இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
    உருவிற் பெரியா ளொடுசேருங்
    கருநற் பரவை கமழ்காழி
    மருவப் பிரியும் வினைமாய்ந்தே.     1.34.9
    369    சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
    அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
    கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
    சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.     1.34.10
    370    நலமா கியஞான சம்பந்தன்
    கலமார் கடல்சூழ் தருகாழி
    நிலையா கநினைந் தவர்பாடல்
    வலரா னவர்வான் அடைவாரே.     1.34.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.35 திருவீழிமிழலை
    பண் - தக்கராகம்

    371     அரையார் விரிகோ வணஆடை
    நரையார் விடையூர் திநயந்தான்
    விரையார் பொழில்வீ ழிம்மிழலை
    உரையால் உணர்வார் உயர்வாரே.     1.35.1
    372    புனைதல் புரிபுன் சடைதன்மேல்
    கனைதல் லொருகங் கைகரந்தான்
    வினையில் லவர்வீ ழிம்மிழலை
    நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.     1.35.2
    373    அழவல் லவரா டியும்பாடி
    எழவல் லவரெந் தையடிமேல்
    விழவல் லவர்வீ ழிம்மிழலை
    தொழவல் லவர்நல் லவர்தொண்டே.     1.35.3
    374    உரவம் புரிபுன் சடைதன்மேல்
    அரவம் மரையார்த் தஅழகன்
    விரவும் பொழில்வீ ழிம்மிழலை
    பரவும் மடியார் அடியாரே.     1.35.4
    375    கரிதா கியநஞ் சணிகண்டன்
    வரிதா கியவண் டறைகொன்றை
    விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
    உரிதா நினைவார் உயர்வாரே.     1.35.5
    376    சடையார் பிறையான் சரிபூதப்
    படையான் கொடிமே லதொர்பைங்கண்
    விடையான் உறைவீ ழிம்மிழலை
    அடைவார் அடியார் அவர்தாமே.     1.35.6
    377    செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
    நெறியார் குழலா ளொடுநின்றான்
    வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
    அறிவார் அவலம் அறியாரே.     1.35.7
    378    உளையா வலியொல் கஅரக்கன்
    வளையா விரலூன் றியமைந்தன்
    விளையார் வயல்வீ ழிம்மிழலை
    அளையா வருவா ரடியாரே.     1.35.8
    379    மருள்செய் திருவர் மயலாக
    அருள்செய் தவனார் அழலாகி
    வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
    தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.     1.35.9
    380    துளங்குந் நெறியா ரவர்தொன்மை
    வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
    விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
    உளங்கொள் பவர்தம் வினையோய்வே.     1.35.10
    381    நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
    குளிரார் சடையான் அடிகூற
    மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
    கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.     1.35.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.36 திரு ஐயாறு
    பண் - தக்கராகம்

    382     கலையார் மதியோ டுரநீரும்
    நிலையார் சடையா ரிடமாகும்
    மலையா ரமுமா மணிசந்தோ
    டலையார் புனல்சே ருமையாறே.     1.36.1
    383    மதியொன் றியகொன் றைவடத்தன்
    மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
    மதியின் னொடுசேர் கொடிமாடம்
    மதியம் பயில்கின் றவையாறே.     1.36.2
    384    கொக்கின் னிறகின் னொடுவன்னி
    புக்க சடையார்க் கிடமாகுந்
    திக்கின் னிசைதே வர்வணங்கும்
    அக்கின் னரையா ரதையாறே.     1.36.3
    385    சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
    கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
    மறைகொண் டநல்வா னவர்தம்மில்
    அறையும் மொலிசே ருமையாறே.     1.36.4
    386    உமையா ளொருபா கமதாகச்
    சமைவார் அவர்சார் விடமாகும்
    அமையா ருடல்சோர் தரமுத்தம்
    அமையா வருமந் தணையாறே.     1.36.5
    387    தலையின் தொடைமா லையணிந்து
    கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
    நிலைகொண் டமனத் தவர்நித்தம்
    மலர்கொண் டுவணங் குமையாறே.     1.36.6
    388    வரமொன் றியமா மலரோன்றன்
    சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
    வரைநின் றிழிவார் தருபொன்னி
    அரவங் கொடுசே ருமையாறே.     1.36.7
    389    வரையொன் றதெடுத் தஅரக்கன்
    சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
    விரையின் மலர்மே தகுபொன்னித்
    திரைதன் னொடுசே ருமையாறே.     1.36.8
    390    (*)சங்கக் கயனும் மறியாமைப்
    பொங்குஞ் சுடரா னவர்கோயில்
    கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
    அங்கிக் கெதிர்காட் டுமையாறே.
    (*) சங்கத்தயனும் என்றும் பாடம்.    1.36.9
    391    துவரா டையர்தோ லுடையார்கள்
    கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
    தவரா சர்கள்தா மரையானோ
    டவர்தா மணையந் தணையாறே.     1.36.10
    392    கலையார் கலிக்கா ழியர்மன்னன்
    நலமார் தருஞான சம்பந்தன்
    அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
    சொலுமா லைவல்லார் துயர்வீடே.     1.36.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.37 திருப்பனையூர்
    பண் - தக்கராகம்

    393     அரவச் சடைமேல் மதிமத்தம்
    விரவிப் பொலிகின் றவனூராம்
    நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
    பரவிப் பொலியும் பனையூரே.     1.37.1
    394    எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
    உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
    கண்ணின் றெழுசோ லையில்வண்டு
    பண்ணின் றொலிசெய் பனையூரே.     1.37.2
    395    அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
    மலரும் பிறையொன் றுடையானூர்
    சிலரென் றுமிருந் தடிபேணப்
    பலரும் பரவும் பனையூரே.     1.37.3
    396    இடியார் கடல்நஞ் சமுதுண்டு
    பொடியா டியமே னியினானூர்
    அடியார் தொழமன் னவரேத்தப்
    படியார் பணியும் பனையூரே.     1.37.4
    397    அறையார் கழல்மே லரவாட
    இறையார் பலிதேர்ந் தவனூராம்
    பொறையார் மிகுசீர் விழமல்கப்
    பறையா ரொலிசெய் பனையூரே.     1.37.5
    398    அணியார் தொழவல் லவரேத்த
    மணியார் மிடறொன் றுடையானூர்
    தணியார் மலர்கொண் டிருபோதும்
    பணிவார் பயிலும் பனையூரே.     1.37.6
    399    அடையா தவர்மூ வெயில்சீறும்
    விடையான் விறலார் கரியின்தோல்
    (*)உடையா னவனெண் பலபூதப்
    படையா னவனூர் பனையூரே.
    (*) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம்.    1.37.7
    400    இலகும் முடிபத் துடையானை
    அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
    உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
    பலகண் டவனூர் பனையூரே.     1.37.8
    401    வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
    சிரமுன் னடிதா ழவணங்கும்
    பிரமன் னொடுமா லறியாத
    பரமன் னுறையும் பனையூரே.     1.37.9
    402    *அழிவல் லமண ரொடுதேரர்
    மொழிவல் லனசொல் லியபோதும்
    இழிவில் லதொர்செம் மையினானூர்
    பழியில் லவர்சேர் பனையூரே.
    (*) அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம்.    1.37.10
    403    பாரார் *விடையான் பனையூர்மேல்
    சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
    ஆரா தசொன்மா லைகள்பத்தும்
    ஊரூர் நினைவா ருயர்வாரே.
    (*) விடையார் என்றும் பாடம்.    1.37.11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.38 திருமயிலாடுதுறை
    பண் - தக்கராகம்

    404    கரவின் றிநன்மா மலர்கொண்டே
    இரவும் பகலுந் தொழுவார்கள்
    சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
    வரமா மயிலா டுதுறையே.     1.38.1
    405    உரவெங் கரியின் னுரிபோர்த்த
    பரமன் னுறையும் பதியென்பர்
    குரவஞ் சுரபுன் னையும்வன்னி
    மருவும் மயிலா டுதுறையே.     1.38.2
    406    ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
    ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
    தேனொத் தினியா னமருஞ்சேர்
    வானம் மயிலா டுதுறையே.     1.38.3
    407    அஞ்சொண் புலனும் மவைசெற்ற
    மஞ்சன் மயிலா டுதுறையை
    நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
    துஞ்சும் பிணியா யினதானே.     1.38.4
    408    (*)தணியார் மதிசெஞ் சடையான்றன்
    அணியார்ந் தவருக் கருளென்றும்
    பிணியா யினதீர்த் தருள்செய்யும்
    மணியான் மயிலா டுதுறையே.
    (*) கணியார் என்றும் பாடம்.    1.38.5
    409    தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
    கண்டு துதிசெய் பவனூராம்
    பண்டும் பலவே தியரோத
    வண்டார் மயிலா டுதுறையே.     1.38.6
    410    அணங்கோ டொருபா கமமர்ந்து
    இணங்கி யருள்செய் தவனூராம்
    நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
    வணங்கும் மயிலா டுதுறையே.    1.38.7
    411    சிரங்கை யினிலேந் தியிரந்த
    பரங்கொள் பரமேட் டிவரையால்
    அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
    வரங்கொள் மயிலா டுதுறையே.    1.38.8
    412    ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங்
    கோலத் தயனும் மறியாத
    சீலத் தவனூர் சிலர்கூடி
    மாலைத் தீர்மயிலா டுதுறையே.     1.38.9
    413    நின்றுண் சமணும் நெடுந்தேரர்
    ஒன்றும் மறியா மையுயர்ந்த
    வென்றி யருளா னவனூராம்
    மன்றன் மயிலா டுதுறையே.     1.38.10
    414    நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
    மயல்தீர் மயிலா டுதுறைமேல்
    செயலா லுரைசெய் தனபத்தும்
    உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.     1.38.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.39 திருவேட்களம்
    பண் - தக்கராகம்

    415    அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
        ஆரழ லங்கை அமர்ந்திலங்க
        மந்த முழவம் இயம்ப
        மலைமகள் காண நின்றாடிச்
        சந்த மிலங்கு நகுதலை கங்கை
        தண்மதியம் மயலே ததும்ப
        வெந்தவெண் ணீறு மெய்பூசும்
        வேட்கள நன்னக ராரே.     1.39.1
    415    சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்
        சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்
        புடைதனிற் பாரிடஞ் சூழப்
        போதரு மாறிவர் போல்வார்
        உடைதனில் நால்விரற் கோவண ஆடை
        உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
        விடைதனை ஊர்தி நயந்தார்
        வேட்கள நன்னக ராரே.     1.39.2
    416    பூதமும் பல்கண மும்புடை சூழப்
        பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
        சீதமும் வெம்மையு மாகிச்
        சீரொடு நின்றவெஞ் செல்வர்
        ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
        உள்ளங் கலந்திசை யாலெழுந்த
        வேதமும் வேள்வியும் ஓவா
        வேட்கள நன்னக ராரே.     1.39.3
    418    அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
        அமையவெண் கோவணத் தோடசைத்து
        வரைபுல்கு மார்பி லோராமை
        வாங்கி யணிந் தவர்தாந்
        திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
        தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
        விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
        வேட்கள நன்னக ராரே.     1.39.4
    419    பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
        பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
        பெண்ணுறு மார்பினர் பேணார்
        மும்மதில் எய்த பெருமான்
        கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்
        கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
        வெண்ணிற மால்விடை அண்ணல்
        வேட்கள நன்னக ராரே.    1.39.5
    420    கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
        கண்கவ ரைங்கணை யோனுடலம்
        பொறிவளர் ஆரழ லுண்ணப்
        பொங்கிய பூத புராணர்
        மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
        மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
        வெறிவளர் கொன்றையந் தாரார்
        வேட்கள நன்னக ராரே.     1.39.6
    421    மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை
        மாமலை வேந்தன் மகள்மகிழ
        நுண்பொடிச் சேர நின்றாடி
        நொய்யன செய்யல் உகந்தார்
        கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
        காலனைக் காலாற் கடிந்துகந்தார்
        வெண்பொடிச் சேர்திரு மார்பர்
        வேட்கள நன்னக ராரே.     1.39.7
    422    ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
        அமுத மமரர்க் கருளி
        சூழ்தரு பாம்பரை யார்த்துச்
        சூலமோ டொண்மழு வேந்தித்
        தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
        தண்மதி யம்மய லேததும்ப
        வீழ்தரு கங்கை கரந்தார்
        வேட்கள நன்னக ராரே.     1.39.8
    423    திருவொளி காணிய பேதுறு கின்ற
        திசைமுக னுந்திசை மேலளந்த
        கருவரை யேந்திய மாலுங்
        கைதொழ நின்றது மல்லால்
        அருவரை யொல்க எடுத்த வரக்கன்
        ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
        வெருவுற வூன்றிய பெம்மான்
        வேட்கள நன்னக ராரே.     1.39.9
    424    அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்
        யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
        பொய்த்தவம் பேசுவ தல்லால்
        புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
        முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
        மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
        வித்தகர் வேத முதல்வர்
        வேட்கள நன்னக ராரே.     1.39.10
    425    விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
        வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
        நண்ணிய சீர்வளர் காழி
        நற்றமிழ் ஞானசம் பந்தன்
        பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
        பேணிய வேட்கள மேல்மொழிந்த
        பண்ணியல் பாடல் வல்லார்கள்
        பழியொடு பாவமி லாரே.     1.39.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.40 திருவாழ்கொளிபுத்தூர் (*)
    பண் - தக்கராகம்

    (*) திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.
    426     பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
        பூதகணம் புடை சூழக்
        கொடியுடை யூர்திரிந் தையங்
        கொண்டு பலபல கூறி
        வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
        கடிகமழ் மாமல ரிட்டுக்
        கறைமிடற் றானடி காண்போம்.     1.40.1
    427    அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
        ஆடரவம் அசைத் தையம்
        புரைகெழு வெண்டலை யேந்திப்
        போர்விடை யேறிப் புகழ
        வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்
        விரைகெழு மாமலர் தூவி
        விரிசடை யானடி சேர்வோம்.     1.40.2
    428    பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
        புன்றலை யங்கையி லேந்தி
        ஊணிடு பிச்சையூ ரையம்
        உண்டி யென்று பலகூறி
        வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்
        தாணெடு மாமல ரிட்டுத்
        தலைவன தாள்நிழல் சார்வோம்.     1.40.3
    429    தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
        தாழ்சடை மேலவை சூடி
        ஊரிடு பிச்சை கொள்செல்வம்
        உண்டி யென்று பலகூறி
        வாரிடு மென்முலை மாதொரு பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
        காரிடு மாமலர் தூவி
        கறைமிடற் றானடி காண்போம்.     1.40.4
    430    கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
        காதிலொர் வெண்குழை யோடு
        புனமலர் மாலை புனைந்தூர்
        புகுதி யென்றே பலகூறி
        வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்
        இனமல ரேய்ந்தன தூவி
        எம்பெரு மானடி சேர்வோம்.    1.40.5
    431    431
    அளைவளர் நாகம் அசைத்தன லாடி
        அலர்மிசை அந்தணன் உச்சிக்
        களைதலை யிற்பலி கொள்ளுங்
        கருத்தனே கள்வனே யென்னா
        (*)வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
        தளையவிழ் மாமலர் தூவித்
        தலைவன தாளிணை சார்வோம்.
        (*) வளையொலி என்றும் பாடம்.    1.40.6
    432    அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
        வழிதலை யங்கையி லேந்தி
        உடலிடு பிச்சை யோடைய
        முண்டி யென்று பலகூறி
        மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
        தடமல ராயின தூவி
        தலைவன தாள்நிழல் சார்வோம்.     1.40.7
    433    உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
        ஒளிர்கட கக்கை யடர்த்து
        அயலிடு பிச்சை யோடையம்
        ஆர்தலை யென்றடி போற்றி
        வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
        சயவிரி மாமலர் தூவி
        தாழ்சடை யானடி சார்வோம்.     1.40.8
    434    கரியவன் நான்முகன் கைதொழு தேத்த
        காணலுஞ் சாரலு மாகா
        எரியுரு வாகி யூரையம்
        இடுபலி யுண்ணி யென்றேத்தி
        வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்
        விரிமல ராயின தூவி
        விகிர்தன சேவடி சேர்வோம்.    1.40.9
    435    குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்
        கொள்கை யினார் புறங்கூற
        வெண்டலை யிற்பலி கொண்டல்
        விரும்பினை யென்று விளம்பி
        வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
        ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
        தொண்டர்கள் மாமலர் தூவத்
        தோன்றி நின்றான் அடிசேர்வோம்.    1.40.10
    436    கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
        கரைபொரு காழிய மூதூர்
        நல்லுயர் நான்மறை நாவின்
        நற்றமிழ் ஞானசம் பந்தன்
        வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
        வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
        சொல்லிய பாடல்கள் வல்லார்
        துயர்கெடு தல்எளி தாமே.     1.40.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.41 திருப்பாம்புரம்
    பண் - தக்கராகம்

    437     சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
        திரிபுர மெரிசெய்த செல்வர்
        வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
        மான்மறி யேந்திய மைந்தர்
        காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
        கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
        பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
        பாம்புர நன்னக ராரே.     1.41.1
    438    கொக்கிற கோடு கூவிள மத்தங்
        கொன்றையொ டெருக்கணி சடையர்
        அக்கினொ டாமை பூண்டழ காக
        அனலது ஆடுமெம் மடிகள்
        மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
        விண்ணவர் விரைமலர் தூவப்
        பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
        பாம்புர நன்னக ராரே.     1.41.2
    439    துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
        சூறைநல் லரவது சுற்றிப்
        பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
        பித்தராய்த் திரியுமெம் பெருமான்
        மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
        மாமலை யாட்டியுந் தாமும்
        பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
        பாம்புர நன்னக ராரே.     1.41.3
    440    துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
        சுடர்விடு சோதியெம் பெருமான்
        நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
        நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
        மஞ்சுதோய் சோலை மாமயி லாட
        மாடமா ளிகைதன்மே லேறி
        பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
        பாம்புர நன்னக ராரே.     1.41.4
    441    நதியத னயலே நகுதலை மாலை
        நாண்மதி சடைமிசை யணிந்து
        கதியது வாகக் காளிமுன் காணக்
        கானிடை நடஞ்செய்த கருத்தர்
        விதியது வழுவா வேதியர் வேள்வி
        செய்தவர் ஓத்தொலி ஓவாப்
        பதியது வாகப் பாவையுந் தாமும்
        பாம்புர நன்னக ராரே.     1.41.5
    442    ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
        ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
        மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
        மான்மறி யேந்திய மைந்தர்
        ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
        அலைகடல் கடையவன் றெழுந்த
        பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
        பாம்புர நன்னக ராரே.    1.41.6
    443    மாலினுக் கன்று சக்கர மீந்து
        மலரவற் கொருமுக மொழித்து
        ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
        அனலது ஆடுமெம் மடிகள்
        காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்
        காமனைப் பொடிபட நோக்கிப்
        பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்
        பாம்புர நன்னக ராரே.     1.41.7
    444    விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
        மெல்லிய திருவிர லூன்றி
        அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
        அனலது ஆடுமெம் மண்ணல்
        மடக்கொடி யவர்கள் வருபுன லாட
        வந்திழி அரிசிலின் கரைமேற்
        படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
        பாம்புர நன்னக ராரே.    1.41.8
    445    கடிபடு கமலத் தயனொடு மாலுங்
        காதலோ டடிமுடி தேடச்
        செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
        தீவணர் எம்முடைச் செல்வர்
        முடியுடையமரர் முனிகணத் தவர்கள்
        முறைமுறை யடிபணிந் தேத்தப்
        படியது வாகப் பாவையுந் தாமும்
        பாம்புர நன்னக ராரே.     1.41.9
    446    குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
        குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
        கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
        கையர்தாம் உள்ளவா றறியார்
        வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
        வாரணம் உரிசெய்து போர்த்தார்
        பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
        பாம்புர நன்னக ராரே.     1.41.10
    447    பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
        பாம்புர நன்னக ராரைக்
        கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
        கழுமல முதுபதிக் கவுணி
        நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான
        சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
        சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
        சிவனடி நண்ணுவர் தாமே.     1.41.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
    பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
    வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.42 திருப்பேணுபெருந்துறை
    பண் - தக்கராகம்

    448     பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை
        பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
        செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
        செய்தொழில் பேணியோர் செல்வர்
        அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
        அரிவையோர் பாக மமர்ந்த
        பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
        பேணு பெருந்துறை யாரே.     1.42.1
    449    மூவரு மாகி இருவரு மாகி
        முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
        பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
        பல்கணம் நின்று பணியச்
        சாவம தாகிய மால்வரை கொண்டு
        தண்மதில் மூன்று மெரித்த
        தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
        தீதில் பெருந்துறை யாரே.     1.42.2
    450    செய்பூங் கொன்றை கூவிள மாலை
        சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
        கொய்பூங் கோதை மாதுமை பாகங்
        கூடியோர் பீடுடை வேடர்
        கைபோ னான்ற கனிகுலை வாழை
        காய்குலை யிற்கமு கீனப்
        பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
        பில்கு பெருந்துறை யாரே.     1.42.3
    451    நிலனொடு வானும் நீரொடு தீயும்
        வாயுவு மாகியோ ரைந்து
        புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
        புண்ணியர் வெண்பொடிப் பூசி
        நலனொடு தீங்குந் தானல தின்றி
        நன்கெழு சிந்தைய ராகி
        மலனொடு மாசும் இல்லவர் வாழும்
        மல்கு பெருந்துறை யாரே.     1.42.4
    452    பணிவா யுள்ள நன்கெழு நாவின்
        பத்தர்கள் பத்திமை செய்யத்
        துணியார் தங்கள் உள்ள மிலாத
        சுமடர்கள் சோதிப் பரியார்
        அணியார் நீல மாகிய கண்டர்
        அரிசி லுரிஞ்சு கரைமேல்
        மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
        மல்கு பெருந்துறை யாரே.     1.42.5
    453    எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
        ஏவலங் காட்டிய எந்தை
        விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
        வித்தகர் வேத முதல்வர்
        பண்ணார் பாடல் ஆடல றாத
        பசுபதி ஈசனோர் பாகம்
        பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
        பேணு பெருந்துறை யாரே.     1.42.6
    454    விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
        வினைகெட வேதமா றங்கம்
        பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
        பெரியோ ரேத்தும் பெருமான்
        தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
        தண்(*)அரி சில்புடை சூழ்ந்த
        குழையார் சோலை மென்னடை யன்னங்
        கூடு பெருந்துறை யாரே.

        (*) அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
        அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது.    1.42.7
    455    பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
        பொருகடல் வேலி இலங்கை
        மன்ன னொல்க மால்வரை யூன்றி
        மாமுரண் ஆகமுந் தோளும்
        முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
        மூவிலை வேலுடை மூர்த்தி
        அன்னங் கன்னிப் பேடையொ டாடி
        அணவு பெருந்துறை யாரே.     1.42.8
    456    புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
        பொருகடல் வண்ணனும் பூவின்
        உள்வா யல்லி மேலுறை வானும்
        உணர்வரி யான்உமை கேள்வன்
        முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
        முகம்மல ரக்கயல் பாயக்
        கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
        காமர் பெருந்துறை யாரே.     1.42.9
    457    குண்டுந் தேருங் கூறை களைந்துங்
        கூப்பிலர் செப்பில ராகி
        மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
        மிண்டு செயாது விரும்பும்
        தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
        தாங்கிய தேவர் தலைவர்
        வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
        மல்கு பெருந்துறை யாரே.     1.42.10
    458    கடையார் மாடம் நன்கெழு வீதிக்
        கழுமல வூரன் கலந்து
        நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
        நல்ல பெருந்துறை மேய
        படையார் சூலம் வல்லவன் பாதம்
        பரவிய பத்திவை வல்லார்
        உடையா ராகி உள்ளமு மொன்றி
        உலகினில் மன்னுவர் தாமே.     1.42.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.43 திருக்கற்குடி
    பண் - தக்கராகம்

    459    வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
    தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
    இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
    கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.     1.43.1
    460    அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
    பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
    சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
    கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.     1.43.2
    461    நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
    தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
    போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
    காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.     1.43.3
    462    ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்
    டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்
    மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்
    கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.     1.43.4
    463    போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்
    பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
    ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
    கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.     1.43.5
    464    உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
    விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
    நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
    கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.     1.43.6
    465    மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்
    ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
    தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்
    கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.    1.43.7
    466    வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்
    தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
    தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
    காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.     1.43.8
    467    தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து
    கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்
    வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
    கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே.     1.43.9
    468    மூத்துவ ராடையி னாரும் (*)மூசு கருப்பொடி யாரும்
    நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்
    ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்
    காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.

    (*) மூசு கடுப்பொடி என்றும் பாடம்.    1.43.10
    469    காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
    நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
    பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
    பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.     1.43.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.
    பண் - தக்கராகம்

    470    துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
        சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
        பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
        வாரிடமும் பலி தேர்வர்
        அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        மணிவளர் கண்டரோ மங்கையை வாட
        மயல்செய்வ தோயிவர் மாண்பே.     1.44.1
    471    கலைபுனை மானுரி தோலுடை யாடை
        கனல்சுட ராலிவர் கண்கள்
        தலையணி சென்னியர் தாரணி மார்பர்
        தம்மடி கள்ளிவ ரென்ன
        அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        இலைபுனை வேலரோ ஏழையை வாட
        இடர்செய்வ தோயிவ ரீடே.     1.44.2
    472    வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
        வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
        நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
        நண்ணுவர் நம்மை நயந்து
        மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
        சிதைசெய்வ தோவிவர் சீரே.     1.44.3
    473    கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்
        கனல்தரு தூமதிக் கண்ணி
        புனமலர் மாலை யணிந் தழகாய
        புனிதர் கொலாமிவ ரென்ன
        வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        மனமலி மைந்தரோ மங்கையை வாட
        மயல்செய்வ தோவிவர் மாண்பே.     1.44.4
    474    மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
        வளர்சடை மேற்புனல் வைத்து
        மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
        முதிரவோர் வாய்மூரி பாடி
        ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        சாந்தணி மார்பரோ தையலை வாடச்
        சதுர்செய்வ தோவிவர் சார்வே.     1.44.5
    475    நீறுமெய்பூசி நிறைசடை தாழ
        நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
        ஆறது சூடி ஆடர வாட்டி
        யைவிரற் கோவண ஆடை
        பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        ஏறது ஏறியர் ஏழையை வாட
        இடர்செய்வ தோவிவ ரீடே.     1.44.6
    476    பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
        டாமைவெண் ணூல்புனை கொன்றை
        கொங்கிள மாலை புனைந் தழகாய
        குழகர்கொ லாமிவ ரென்ன
        அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
        சதிர்செய்வ தோவிவர் சார்வே.     1.44.7
    477    ஏவலத் தால்விச யற்கருள் செய்து
        இராவண னையீ டழித்து
        மூவரி லும்முத லாய்நடு வாய
        மூர்த்தியை யன்றி மொழியாள்
        யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
        சிதைசெய்வ தோவிவர் சேர்வே.     1.44.8
    478    மேலது நான்முக னெய்திய தில்லை
        கீழது சேவடி தன்னை
        நீலது வண்ணனு மெய்திய தில்லை
        எனவிவர் நின்றது மல்லால்
        ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
        பழிசெய்வ தோவிவர் பண்பே.     1.44.9
    479    நாணொடு கூடிய சாயின ரேனும்
        நகுவ ரவரிரு போதும்
        ஊணொடு கூடிய உட்குந் தகையார்
        உரைக ளவைகொள வேண்டா
        ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
        லாச்சிரா மத்துறை கின்ற
        பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்
        புனைசெய்வ தோவிவர் பொற்பே.     1.44.10
    480    அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
        ஆச்சிரா மத்துறை கின்ற
        புகைமலி மாலை புனைந் தழகாய
        புனிதர்கொ லாமிவ ரென்ன
        நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
        நற்றமிழ் ஞானசம் பந்தன்
        தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
        சாரகி லாவினை தானே.     1.44.11

    முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
    மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு
    பண் - தக்கராகம்

    481    துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
    நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
    வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
    டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.1
    482    கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
    வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
    காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
    டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.2
    483    கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
    வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
    கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்
    தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.3
    484    பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்
    கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
    கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
    ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.4
    485    ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
    பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
    கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
    தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.5
    486    பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
    மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
    பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
    டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.6
    487    நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
    இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
    வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
    டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.7
    488    கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண
    இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
    பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
    தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.8
    489    489
    கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள்
    பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
    தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
    தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.9
    490    பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
    திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
    புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
    அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.10
    491    போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
    வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
    கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
    ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.     1.45.11
    492    சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
    ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
    வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
    சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.     1.45.12

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.46 திரு அதிகைவீரட்டானம்
    பண் - தக்கராகம்

    493    குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
    கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
    வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
    விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.     1.46.1
    493    அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
    கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
    சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
    விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.     1.46.2
    494    ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
    பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
    மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
    வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே.     1.46.3
    496    எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
    மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
    பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
    விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.     1.46.4
    497    கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
    திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
    எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
    விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.     1.46.5
    498    துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
    இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
    வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
    விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே.     1.46.6
    499    பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
    பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
    கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
    வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே.     1.46.7
    500    கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
    ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
    பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
    வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே.     1.46.8
    501    நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
    பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
    கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
    வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே.     1.46.9
    511    அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
    சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்
    உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
    விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.     1.46.10
    512    ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
    வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
    சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
    வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே.     1.46.11

    இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
    சுவாமிபெயர் - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
    தேவியார் - திருவதிகைநாயகி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.47 திருச்சிரபுரம்
    பண் - பழந்தக்கராகம்

    504    பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
    வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
    சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
    செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.     1.47.1
    505    கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
    அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
    சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
    செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.     1.47.2
    506    நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
    ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
    காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
    சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.    1.47.3
    507    கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
    மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
    கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
    செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.     1.47.4
    508    புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்
    கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
    மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
    சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.     1.47.5
    509    கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
    பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
    எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
    திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.     1.47.6
    510    குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
    பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
    இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
    சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.    1.47.7
    511    மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
    நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
    துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
    சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.     1.47.8
    512    மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
    சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
    நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
    சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.     1.47.9
    513    புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
    பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
    மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
    சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.     1.47.10
    514    தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
    அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
    பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
    சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.     1.47.11

    சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.48 திருச்சேய்ஞலூர்
    பண் - பழந்தக்கராகம்

    515    நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
    மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
    ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
    சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.     1.48.1
    516    நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
    கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
    ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
    சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.     1.48.2
    517    ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
    கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
    மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
    தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.     1.48.3
    518    வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
    நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
    பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
    சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே.     1.48.4
    519    பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
    வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
    வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
    தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.     1.48.5
    520    காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
    வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
    கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
    சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.     1.48.6
    521    பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
    வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
    தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
    சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.     1.48.7
    522    மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
    நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
    பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
    சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே.     1.48.8
    523    காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
    பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
    சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
    தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.     1.48.9
    524    மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
    நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
    வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
    தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.     1.48.10
    525    சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
    தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
    சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
    வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.     1.48.11

    சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
    சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர், தேவியார் - சகிதேவிநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.49 திருநள்ளாறு
    பண் - பழந்தக்கராகம்

    பச்சைத்திருப்பதிகம்
    இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது
    வேகாதிருந்தது.

    526    போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
    பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
    ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
    நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.1
    527    தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
    பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
    ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
    நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.2
    528    ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
    பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
    மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
    நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.3
    529    புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
    மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
    பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
    நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.4
    530    ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
    ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
    நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
    நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.5
    531    திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
    எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
    தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
    நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.    1.49.6
    532    வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
    அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
    செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
    நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.7
    533    சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
    சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
    பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
    நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.8
    534    உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
    அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
    எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
    நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.9
    535    மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
    பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
    மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
    நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.     1.49.10
    536    தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
    நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
    பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
    உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.     1.49.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
    சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,
    தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.50 திருவலிவலம்
    பண் - பழந்தக்கராகம்

    537    ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
    சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
    நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
    வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.     1.50.1
    538    இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
    பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
    தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
    மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.     1.50.2
    539    பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
    விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
    கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
    வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே.     1.50.3
    540    மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
    செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
    நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
    வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.     1.50.4
    541    துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
    தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
    நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
    வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.    1.50.5
    542    புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
    எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
    கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
    வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே.     1.50.6
    543    தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
    ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
    ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
    மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.     1.50.7
    544    நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
    வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
    தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
    வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.    1.50.8
    545    ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
    சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
    ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
    வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.     1.50.9
    546    *பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
    பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
    விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
    மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.

    (*)பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று.    1.50.10
    547    வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
    பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
    பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
    மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.     1.50.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.51 திருச்சோபுரம்
    பண் - பழந்தக்கராகம்

    548    வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி
    மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
    கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்
    தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே.     1.51.1
    549    விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
    சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்
    கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
    தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே.    1.51.2
    550    தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச்
    சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்
    பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
    தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே.     1.513
    551    பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்
    தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
    வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்
    தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே.    1.51.4
    552    நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
    ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
    ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்
    தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே.     1.51.5
    553    கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
    பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
    அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
    துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே.     1.51.6
    554    குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
    கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
    வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
    துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே.     1.51.7
    555    விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்
    குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
    இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
    துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே.     1.51.8
    556    விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்
    கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
    இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்
    தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே.     1.51.9
    557    புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப்
    பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
    மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
    துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே.    1.51.10
    558    சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்
    சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான்
    ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
    கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே.     1.51.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சோபுரநாதர், தேவியார் - சோபுரநாயகியம்மை

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.52 திருநெடுங்களம்
    பண் - பழந்தக்கராகம்

    559    மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
    நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.     1.52.1
    560    கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
    தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
    மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
    நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.     1.52.2
    561    நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
    என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
    பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
    நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.    1.52.3
    562    மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
    அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
    தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.     1.52.4
    563    பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
    தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
    தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.    1.52.5
    564    விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
    கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
    அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
    நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.     1.52.6
    565    கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
    மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
    நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.    1.52.7
    566    குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
    அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
    என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
    நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.    1.52.8
    567    வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
    சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
    கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
    நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.    1.52.9
    568    வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
    நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.     1.52.10
    569    நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
    சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
    நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.     1.52.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.53 திருமுதுகுன்றம்
    பண் - பழந்தக்கராகம்

    570    தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
    நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
    மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
    மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.     1.53.1
    571    பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்
    எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு
    மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
    முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.     1.53.2
    572    வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
    நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
    சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
    மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.    1.53.3
    573    பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
    நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
    நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
    ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.     1.53.4
    574    வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
    செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
    தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
    முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.    1.53.5
    575    சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
    சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
    அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
    மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.     1.53.5
        *இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.53.6
    576    மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
    இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
    புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
    முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.     1.53.8
    577    ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்
    கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
    ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
    மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.    1.53.9
    578    உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
    நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
    மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
    முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.     1.53.10
    579    மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
    பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
    .... .... .... .... .... .... .... ....
    .... .... .... .... .... .... .... ....     1.53.11
    (*) 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.54 திருஓத்தூர்
    பண் - பழந்தக்கராகம்

    580    பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
    ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
    ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
    கூத்தீ ரும்ம குணங்களே.     1.54.1
    581    இடையீர் போகா இளமுலை யாளையோர்
    புடையீ ரேபுள்ளி மானுரி
    உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
    சடையீ ரேயும தாளே.     1.54.2
    582    உள்வேர் போல நொடிமையி னார்திறம்
    கொள்வீ ரல்குலோர் கோவணம்
    ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
    கள்வீ ரேயும காதலே.     1.54.3
    583    தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
    ஆட்டீ ரேயடி யார்வினை
    ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
    நாட்டீ ரேயருள் நல்குமே.     1.54.4
    584    குழையார் காதீர் கொடுமழு வாட்படை
    உழையாள் வீர்திரு வோத்தூர்
    பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
    அழையா மேயருள் நல்குமே.     1.54.5
    585    மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
    தக்கார் தம்மக்க ளீரென்
    றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
    நக்கீ ரேயருள் நல்குமே.     1.54.6
    586    தாதார் கொன்றை தயங்கு முடியுடை
    நாதா என்று நலம்புகழ்ந்
    தோதா தாருள ரோதிரு வோத்தூர்
    ஆதீ ரேயருள் நல்குமே.     1.54.7
    587    என்றா னிம்மலை யென்ற அரக்கனை
    வென்றார் போலும் விரலினால்
    ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
    என்றார் மேல்வினை யேகுமே.     1.54.8
    588    நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச்
    சென்றார் போலுந் திசையெலாம்
    ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
    நின்றீ ரேயுமை நேடியே.     1.54.9
    589    கார மண்கலிங் கத்துவ ராடையர்
    தேரர் சொல்லவை தேறன்மின்
    ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
    சீர வன்கழல் சேர்மினே.    1.54.10
    590    குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
    அரும்பு கொன்றை யடிகளைப்
    பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
    விரும்பு வார்வினை வீடே.     1.54.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.55 திருமாற்பேறு
    பண் - பழந்தக்கராகம்

    591    ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
    நீறு சேர்திரு மேனியர்
    சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
    மாறி லாமணி கண்டரே.     1.55.1
    592    தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
    அடைவா ராமடி கள்ளென
    மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
    றுடையீ ரேயுமை யுள்கியே.     1.55.2
    593    பையா ரும்மர வங்கொடு வாட்டிய
    கையா னென்று வணங்குவர்
    மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
    ஐயா நின்னடி யார்களே.     1.55.3
    594    சால மாமலர் கொண்டு சரணென்று
    மேலை யார்கள் விரும்புவர்
    மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
    நீல மார்கண்ட நின்னையே.     1.55.4
    595    மாறி லாமணி யேயென்று வானவர்
    ஏற வேமிக ஏத்துவர்
    கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
    நீற னேயென்று நின்னையே.     1.55.5
    596    உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
    பரவா தாரில்லை நாள்களும்
    திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
    றரையா னேயருள் நல்கிடே.     1.55.6
        (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.     1.55.7
    597    அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
    உரைகெ டுத்தவன் ஒல்கிட
    வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
    பரவி டக்கெடும் பாவமே.    1.55.8
    598    இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
    ஒருவ ராலறி வொண்ணிலன்
    மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
    பரவு வார்வினை பாறுமே.     1.55.9
    599    தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
    நீசர் தம்முரை கொள்ளெலுந்
    தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
    ஈச னென்றெடுத் தேத்துமே.     1.55.10
    600    மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
    மன்னும் மாற்பேற் றடிகளை
    மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
    பன்ன வேவினை பாறுமே.     1.55.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.56 திருப்பாற்றுறை
    பண் - பழந்தக்கராகம்

    601    காரார் கொன்றை கலந்த முடியினர்
    சீரார் சிந்தை செலச்செய்தார்
    பாரார் நாளும் பரவிய பாற்றுறை
    ஆரா ராதி முதல்வரே.     1.56.1
    602    நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
    சொல்லார் நன்மலர் சூடினார்
    பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
    எல்லா ருந்தொழும் ஈசரே.     1.56.2
    603    விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
    எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
    பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
    யுண்ணா ணாளும் உறைவரே.    1.56.3
    604    பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
    ஏவின் அல்லா ரெயிலெய்தார்
    பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
    ஓவென் சிந்தை யொருவரே.     1.56.4
    605    மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென
    தாகம் பொன்னிற மாக்கினார்
    பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
    நாகம் பூண்ட நயவரே.     1.56.5
    606    போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
    நாதர் வந்தென் நலங்கொண்டார்
    பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
    வேத மோதும் விகிர்தரே.     1.56.6
    607    வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
    கோடல் செய்த குறிப்பினார்
    பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
    ஆடல் நாகம் அசைத்தாரே.     1.56.7
    608    வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
    எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
    பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
    மவ்வல் சூடிய மைந்தரே.     1.56.8
    608    ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
    ஆன வண்ணத்தெம் அண்ணலார்
    பான லம்மலர் விம்மிய பாற்றுறை
    வான வெண்பிறை மைந்தரே.     1.56.9
    610    வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
    வந்தென் நன்னலம் வௌவினார்
    பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
    மைந்தர் தாமோர் மணாளரே.     1.56.10
    611    பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
    பத்து நூறு பெயரானைப்
    பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
    பத்தும் பாடிப் பரவுமே.     1.56.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமூலநாதர், தேவியார் - மோகாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.57 திருவேற்காடு
    பண் - பழந்தக்கராகம்

    612    ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
    வெள்ளி யானுறை வேற்காடு
    உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
    தெள்ளி யாரவர் தேவரே.     1.57.1
    613    ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
    வேடங் கொண்டவன் வேற்காடு
    பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
    சேட ராகிய செல்வரே.     1.57.2
    614    பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
    வேத வித்தகன் வேற்காடு
    போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
    கேதம் எய்துத லில்லையே.     1.57.3
    615    ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
    வீழ்ச டையினன் வேற்காடு
    தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட
    பாழ்ப டும்மவர் பாவமே.     1.57.4
    616    காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
    வீட்டி னானுறை வேற்காடு
    பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
    ஓட்டி னார்வினை ஒல்லையே.     1.57.5
    617    தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
    வேலி னானுறை வேற்காடு
    நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
    மாலி னார்வினை மாயுமே.     1.57.6
    618    மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
    வில்லி னானுறை வேற்காடு
    சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
    செல்ல வல்லவர் தீர்க்கமே.     1.57.8
    619    மூரல் வெண்மதி சூடு முடியுடை
    வீரன் மேவிய வேற்காடு
    வார மாய்வழி பாடு நினைந்தவர்
    சேர்வர் செய்கழல் திண்ணமே.     1.57.8
    620    பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
    விரக்கி னானுறை வேற்காட்டூர்
    அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
    நெருக்கி னானை நினைமினே.    1.57.9
    621    மாறி லாமல ரானொடு மாலவன்
    வேற லானுறை வேற்காடு
    ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
    கூறி னார்க்கில்லை குற்றமே.    1.57.10
    622    விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
    கண்டு நம்பன் கழல்பேணிச்
    சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
    கொண்டு பாடக் குணமாமே.     1.57.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர், தேவியார் - வேற்கண்ணியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.58 திருக்கரவீரம்
    பண் - பழந்தக்கராகம்

    623    அரியும் நம்வினை யுள்ளன ஆசற
    வரிகொள் மாமணி போற்கண்டங்
    கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
    பெரிய வன்கழல் பேணவே.     1.58.1
    624    தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
    திங்க ளோடுடன் சூடிய
    கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
    சங்க ரன்கழல் சாரவே.     1.58.2
    625    ஏதம் வந்தடை யாவினி நல்லன
    பூதம் பல்படை யாக்கிய
    காத லான்திக ழுங்கர வீரத்தெம்
    நாதன் பாதம் நணுகவே.    1.58.3
    626    பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
    மறையும் மாமணி போற்கண்டங்
    கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
    இறைய வன்கழல் ஏத்தவே.     1.58.4
    627    பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
    விண்ணி னார்மதி லெய்தமுக்
    கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
    நண்ணு வார்வினை நாசமே.     1.58.5
    628    நிழலி னார்மதி சூடிய நீள்சடை
    அழலி னாரன லேந்திய
    கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
    தொழவல் லார்க்கில்லை துக்கமே.     1.58.6
    629    வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
    அண்டன் ஆரழல் போலொளிர்
    கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
    தொண்டர் மேற்றுயர் தூரமே.     1.58.7
    630    புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
    சினவ லாண்மை செகுத்தவன்
    கனல வனுறை கின்ற கரவீரம்
    எனவல் லார்க்கிட ரில்லையே.     1.58.8
    631    வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
    தெள்ளத் தீத்திர ளாகிய
    கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
    உள்ளத் தான்வினை ஓயுமே.     1.58.9
    632    செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
    கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்
    கடிய வன்னுறை கின்ற கரவீரத்
    தடிய வர்க்கில்லை யல்லலே.     1.58.10
    633    வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
    சேடன் மேற்கசி வாற்றமிழ்
    நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
    பாடு வார்க்கில்லை பாவமே.     1.58.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கரவீரேசுவரர், தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.59 திருத்தூங்கானைமாடம்
    பண் - பழந்தக்கராகம்

    634    ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
        யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
        அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம்
        அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
        கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்
        கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
        தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.1
    635    பிணிநீர சாதல் பிறத்தலிவை
        பிரியப் பிரியாத பேரின்பத்தோ
        டணிநீர மேலுலகம் எய்தலுறில்
        அறிமின் குறைவில்லை ஆனேறுடை
        மணிநீல கண்ட முடையபிரான்
        மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
        துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.2
    636    சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
        சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
        ஆமா றறியா தலமந்துநீர்
        அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
        பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
        புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
        தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.3
    637    ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
        உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
        மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
        மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
        மூன்று மதிலெய்த மூவாச்சிலை
        முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
        தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.4
    638    மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
        மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
        வியல்தீர மேலுக மெய்தலுறின்
        மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
        உயர்தீர வோங்கிய நாமங்களா
        லோவாது நாளும் அடிபரவல்செய்
        துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.5
    639    பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா
        படர்நோக் கின்கண் பவளந்நிற
        நன்னீர்மை குன்றித் திரைதோலொடு
        நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
        பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
        புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
        தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.6
    640    இறையூண் துகளோ டிடுக்கணெய்தி
        யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
        நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
        நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
        பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப்
        பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
        துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.7
    641    பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
        பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
        இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
        இறையே பிரியா தெழுந்துபோதுங்
        கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
        காதலியுந் தானுங் கருதிவாழுந்
        தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.8
    642    நோயும் பிணியும் அருந்துயரமும்
        நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
        வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
        மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
        தாய அடியளந்தான் காணமாட்டாத்
        தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
        டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.9
    643    பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
        பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
        முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
        மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
        திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
        திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
        துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
        தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.10
    644    மண்ணார் முழவதிரும் மாடவீதி
        வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
        பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
        பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
        கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்
        கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
        விண்ணோ ருலகத்து மேவிவாழும்
        விதியது வேயாகும் வினைமாயுமே.     1.59.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.60 திருத்தோணிபுரம்
    பண் - பழந்தக்கராகம்

    645    வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
    ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
    துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
    பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.     1.60.1
    646    எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
    அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
    செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
    வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.     1.60.2
    647    பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
    கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
    செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
    பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.     1.60.3
    648    காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
    பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
    சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
    ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே.     1.60.4
    649    பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
    காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
    தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
    நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.    1.60.5
    650    சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
    வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
    தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
    கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.     1.60.6
    651    முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
    அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
    தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
    கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.     1.60.7
    652    பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
    ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
    தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
    கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே.     1.60.8
    653    நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
    பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
    சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
    விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.     1.60.9
    654    சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
    முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
    துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
    பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.     1.60.10
    655    போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
    கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
    தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
    சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.     1.60.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.61 திருச்செங்காட்டங்குடி
    பண் - பழந்தக்கராகம்

    656    நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
    முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
    சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
    கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.     1.61.1
    657    வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
    ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்
    சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
    காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.     1.61.2
    658    வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
    கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
    சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
    கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.     1.61.3
    659    தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
    டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
    செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
    கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.     1.61.4
    660    பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
    நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
    சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
    காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.     1.61.5
    661    நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
    தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
    திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
    கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.     1.61.6
    662    மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
    மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
    செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
    கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.     1.61.7
    663    தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
    பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
    சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
    காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.     1.61.8
    664    ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
    வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
    தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
    கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.     1.61.9
    665    செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
    படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
    பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
    கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.     1.61.10
    666    கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
    நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
    சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
    மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.     1.61.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.62 திருக்கோளிலி
    பண் - பழந்தக்கராகம்

    667    நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
    ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
    கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
    கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.     1.62.1
    668    ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
    தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
    பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
    கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.    1.62.2
    669    நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
    டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
    கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
    கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.     1.62.3
    670    வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்
    சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
    தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
    கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.     1.62.4
    671    வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்
    நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
    பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
    கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.     1.62.5
    672    தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
    ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
    நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
    கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.     1.62.6
    673    கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
    சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
    மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
    கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.     1.62.7
    674    அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்
    சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
    மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்
    கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.     1.62.8
    675    நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
    தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
    பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
    கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.     1.62.9
    676    தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
    இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
    நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
    கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.     1.62.10
    677    நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்
    கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
    வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
    டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே.     1.62.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
    பண் - தக்கேசி

    678    எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
    வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
    சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
    பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.     1.63.1
    679    பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
    கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
    இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
    வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே.     1.63.2
    680    நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
    பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
    அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
    புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே.     1.63.3
    681    சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
    அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
    செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
    வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே.     1.63.4
    682    தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
    பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
    அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
    துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே.     1.63.5
    683    கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
    அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
    அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
    தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே.     1.63.6
    684    முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
    நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
    தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
    சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே.     1.63.7
    685    எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்
    கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
    ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்
    பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே.     1.63.8
    686    துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்
    கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
    அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
    தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே.     1.63.9
    687    நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
    குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
    அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
    கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே.     1.63.10
    688    கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
    சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
    நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
    கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.     1.63.11
    689    கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி
    நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
    படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
    கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே.     1.63.12

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.64 திருப்பூவணம்
    பண் - தக்கேசி

    690    அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
    குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்
    முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்
    திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.     1.64.1
    691    மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை
    ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்
    கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த
    திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே.     1.64.2
    692    போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க்
    காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்
    பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச்
    சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே.     1.64.3
    693    கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன்
    கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம்
    படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவச்
    செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே.     1.64.4
    694    கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த
    போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம்
    ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத்
    தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்பூவணமே.     1.64.5
    695    நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே
    சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங்
    குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல்
    தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே.     1.64.6
    696    பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப
    மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம்
    கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச்
    செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே.     1.64.7
    697    மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக்
    கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
    பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து
    ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே.     1.64.8
    698    பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங்
    கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரியானவனூர்
    மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச்
    செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே.     1.64.9
    699    அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா
    நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம்
    மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே
    சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே.     1.64.10
    700    திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப்
    பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால்
    நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன
    பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே.     1.64.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
    பண் - தக்கேசி

    701    அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த
    விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்
    கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப்
    படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே.     1.65.1
    702    எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர்
    கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்
    மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப்
    பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.     1.65.2
    703    மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல்
    கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்
    பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்
    பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.     1.65.3
    704    தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம்
    நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்
    போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்
    பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே.     1.65.4
    705    மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப
    மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்
    கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே
    பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே.     1.65.5
    706    குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக்
    கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
    சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
    பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.     1.65.6
    707    வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர்
    வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்
    மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்
    பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.     1.65.7
    708    தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன்
    தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனூர்
    காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப்
    பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே.     1.65.8
    709    அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்
    தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
    வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப்
    பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.     1.65.9
    710    உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
    கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
    தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
    பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே.     1.65.10
    711    பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
    அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்
    சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய்
    ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே.     1.65.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பல்லவனேசர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.66 திருச்சண்பைநகர்
    பண் - தக்கேசி

    712    பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்
    அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்
    வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்
    சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே.     1.66.1
    713    சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப்
    போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்
    மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த
    சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே.     1.66.2
    714    மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய
    நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
    பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத்
    தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே.     1.66.3
    715    மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட
    தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
    கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
    சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே.     1.66.4
    716    கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த
    குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி
    நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை
    சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே.     1.66.5
    717    மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான்
    சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க
    ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே
    சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே.     1.66.6
        (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     1.66.7
    718    இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து
    அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்
    மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்
    தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே.     1.66.8
    719    மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும்
    எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி
    தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற்
    பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே.     1.66.9
    720    போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும்
    நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்
    மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்
    சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே.     1.66.10
    721    வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச்
    சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய
    அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்
    சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே.     1.66.11

by Swathi   on 26 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
06-Aug-2015 01:21:39 சரளா சுப்பிரமணி said : Report Abuse
ஒரு சின்ன கருதது இந்த பக்கத்தின் முதல் வரியை அடைய மேல செல்க என்ற பட்டன் கூடுதலக வைக்கவும் பயனாளிகள் முழு பக்கமும் படித்தவுடன் மேல செல்வதற்கு வசதியாக இருக்கும் நன்றி முனைவர் சரளா சுப்பிரமணி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.