LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

முதல் திருமுறை - இரண்டாம் பகுதி


1.67 திருப்பழனம்
    பண் - தக்கேசி

    722     வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்
    பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார்
    நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
    பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.     1.67.1
    723    கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப்
    புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால்
    எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்
    பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே.     1.67.2
    724    பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்
    உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்
    அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
    பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே.     1.67.3
    725    உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில்
    இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலைப்
    பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்
    பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே.     1.67.4
    726    குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
    கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
    நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப்
    பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.     1.67.5
    727    வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
    மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார்
    ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
    பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே.     1.67.6
    728    பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி
    செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்
    கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும்
    பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே.     1.67.7
    729    மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்
    அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார்
    நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்
    பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே.     1.67.8
    730    கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண்
    முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய
    நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத
    படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே.     1.67.9
    731    கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை
    உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
    வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
    பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே.    1.67.10
    732    வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்
    நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்
    பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை
    வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே.     1.67.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.68 திருக்கயிலாயம்
    பண் - தக்கேசி

    733    பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்
    கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
    இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
    கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.     1.68.1
    734    புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
    தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
    பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
    கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.     1.68.2
    735    மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
    மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந்
    தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
    காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.     1.68.3
    736    முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
    தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
    மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
    கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே.     1.68.4
    737    ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார்
    நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந்
    தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக்
    கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.     1.68.5
    738    தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
    போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
    மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
    காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.     1.68.6
        (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     1.68.7
    734    தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
    எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
    கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக்
    கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.     1.68.8
    740    ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
    பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
    பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக்
    காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.     1.68.9
    741    விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
    பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
    எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
    கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.     1.68.10
    742    போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
    காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
    தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
    வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.     1.68.11

    சுவாமிபெயர் - கயிலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.69 திரு அண்ணாமலை
    பண் - தக்கேசி

    743    பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
    மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
    தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
    ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.     1.69.1
    744    மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
    நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
    வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
    அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.     1.69.2
    745    ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
    ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
    ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
    ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.     1.69.3
    746    இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
    தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
    பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
    அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.     1.69.4
    747    உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
    செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
    பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
    அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.    1.69.5
    748    எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
    நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
    கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
    அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.     1.69.6
    749    வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
    பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
    முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
    அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.     1.69.7
    750    மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
    நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
    திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
    அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.     1.69.8
    751    தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
    மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
    கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
    றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.     1.69.9
    752    தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
    பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
    வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
    அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.     1.69.10
    753    அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
    நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
    சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
    வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.     1.69.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.70 திரு ஈங்கோய்மலை
    பண் - தக்கேசி

    754    வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
    தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
    கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
    ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.     1.70.1
    755    சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
    கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
    பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
    ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.     1.70.2
    756    கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
    விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
    பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
    எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.    1.70.3
    757    மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
    குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்
    பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்
    இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.     1.70.4
    758    நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
    கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்
    பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
    எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.    1.70.5
    759    நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
    ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
    சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
    ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.     1.70.6
    760    வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
    நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
    தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
    எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.     1.70.7
    761    பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
    அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
    நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
    இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.     1.70.8
    762    வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
    பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
    அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
    டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.    1.70.9
    763    பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
    மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்
    உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
    இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.    1.70.10
    764    விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
    அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
    எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
    கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.     1.70.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்
    பண் - தக்கேசி

    765    765
    பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
    கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
    மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச்
    சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.1
    766    பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
    தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்
    கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்
    செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.     1.71.2
    767    முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
    பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்
    கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக்
    கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.3
    768    பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
    மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
    பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
    சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.4
    769    நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
    பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
    தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
    சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.5
    770    நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
    தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந்
    தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந்
    தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.6
    771    குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்
    தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
    எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்
    கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.     1.71.7
    772    கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
    வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
    உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
    திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.8
    773    நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
    அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
    முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
    செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.9
    774    நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
    ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
    கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச்
    சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.     1.71.10
    775    குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
    செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
    மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
    பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.     1.71.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.72 திருக்குடந்தைக்காரோணம்
    பண் - தக்கேசி

    776    வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
    நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
    கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
    காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.     1.72.1
    777    முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
    படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்
    கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்
    கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.     1.72.2
    778    மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
    குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
    முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
    கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.     1.72.3
    779    போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்
    தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
    மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
    காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே.     1.72.4
    780    பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்
    தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
    கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
    காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே.     1.72.5
    781    மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
    கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
    தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக்
    காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.     1.72.6
    782    ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
    மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
    தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற்
    கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.     1.72.7
    783    வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
    விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
    உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
    கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.     1.72.8
    784    கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
    அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
    தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற்
    கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.     1.72.9
    785    நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
    பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
    சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக்
    கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.     1.72.10
    786    கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்
    திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்
    உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்
    கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.     1.72.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.73 திருக்கானூர்
    பண் - தக்கேசி

    787    வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்
    தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
    மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
    கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே.     1.73.1
    788    நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
    ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
    போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
    காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே.     1.73.2
    789    சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
    மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
    இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
    கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே.     1.73.3
    790    விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித்
    தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
    எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
    கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே.     1.73.4
    791    தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
    சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
    ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
    கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே.     1.73.5
    792    முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
    எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்
    தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
    களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே.     1.73.6
    793    மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
    பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப்
    போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
    தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே.     1.73.7
    794    தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
    முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
    குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
    கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.     1.73.8
    795    அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
    சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
    வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
    கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே.     1.73.9
    796    ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
    டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
    ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
    சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே.     1.73.10
    797    கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப்
    பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
    தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
    றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.     1.73.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.74 திருப்புறவம்
    பண் - தக்கேசி

    798    நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
    சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
    புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
    இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.1
    799    உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
    விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
    பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக
    இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.2
    800    பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்
    கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி
    அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
    எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.3
    801    நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
    கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்
    புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
    எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.4
    802    செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்
    தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
    பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
    எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.5
    803    பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
    அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
    புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
    என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.6
    804    உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
    விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
    பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
    எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.7
    805    விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
    திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய
    புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
    எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.8
    806    நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
    படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
    பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
    இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.9
    807    ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
    கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்
    போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
    ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.     1.74.10
    808    பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக
    மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்
    தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
    பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.     1.74.11

    திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.75 திருவெங்குரு
    பண் - குறிஞ்சி

    809     காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
        கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
        ஓலம திடமுன் உயிரொடு மாள
        உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
        மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
        மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
        வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.1
    810    பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
        பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
        பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
        பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
        மண்ணினை மூடி வான்முக டேறி
        மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
        விண்ணள வோங்கி வந்திழி கோயில்
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.2
    811    ஓரியல் பில்லா உருவம தாகி
        ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
        காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்
        கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
        நேரிசை யாக அறுபத முரன்று
        நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
        வேரிக ளெங்கும் விம்மிய சோலை
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.3
    812    வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
        மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
        கொண்டணி சடையர் விடையினர் பூதங்
        கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
        பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்
        பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
        வெண்பிறை சூடி உமையவ ளோடும்
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.4
    813    சடையினர் மேனி நீறது பூசித்
        தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
        கடைதொறும் வந்து பலியது கொண்டு
        கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
        படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி
        உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
        விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.5
    814    கரைபொரு கடலில் திரையது மோதக்
        கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
        உரையுடை முத்தம் மணலிடை வைகி
        ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
        புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
        புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
        விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.6
    815    வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
        மறுகிட வருமத களிற்றினை மயங்க
        ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
        கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
        நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
        நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
        வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.7
    816    பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
        பலதலை முடியொடு தோளவை நெரிய
        ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
        ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
        கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
        கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
        வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.8
    817    ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
        அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
        சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
        செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
        நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
        கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
        வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.9
    818    பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
        பயில்தரு மறவுரை விட்டழ காக
        ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
        எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
        காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
        கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
        வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.     1.75.10
    819    விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
        நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
        நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
        பண்ணியல் பாகப் பத்திமை யாலே
        பாடியு மாடியும் பயில வல்லார்கள்
        விண்ணவர் விமானங் கொடுவர வேறி
        வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.     1.75.11

    இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.76 திரு இலம்பையங்கோட்டூர்
    பண் - குறிஞ்சி

    820     மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு
        மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
        நிலையினான் எனதுரை தனதுரை யாக
        நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
        கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
        கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
        இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.1
    821    திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
        தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
        நிருமல னெனதுரை தனதுரை யாக
        நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
        கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
        கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
        இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.2
    822    பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
        பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
        காலனாம் எனதுரை தனதுரை யாகக்
        கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
        நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
        நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
        ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.     1.76.3
    823    உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
        ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
        விளம்புவா னெனதுரை தனதுரை யாக
        வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
        குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
        கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
        இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.4
    824    தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
        தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
        வானுமா மெனதுரை தனதுரை யாக
        வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
        கானமான் வெருவுறக் கருவிர லூகங்
        கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
        ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.5
    825    மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற
        வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
        தனமிலா னெனதுரை தனதுரை யாகத்
        தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
        புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
        பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
        இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.6
    826    நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
        நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
        ஊருளான் எனதுரை தனதுரை யாக
        ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
        பாருளார் பாடலோ டாடல றாத
        பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
        ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.7
    827    வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
        வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
        ஆருலா மெனதுரை தனதுரை யாக
        ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
        வாருலா நல்லன மாக்களுஞ் சார
        வாரண முழிதரும் மல்லலங் கானல்
        ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.8
    828    கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
        கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
        உளமழை யெனதுரை தனதுரை யாக
        வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
        வளமழை யெனக்கழை வளர்துளி சோர
        மாசுண முழிதரு மணியணி மாலை
        இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.9
    829    உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
        உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
        பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்
        பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
        கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்
        களிமுக வண்டொடு தேனின முரலும்
        இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.     1.76.10
    830    கந்தனை மலிகனை கடலொலி யோதங்
        கானலங் கழிவளர் கழுமல மென்னும்
        நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
        நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
        எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
        இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
        வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
        வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.     1.76.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சந்திரசேகரர், தேவியார் - கோடேந்துமுலையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.77 திருஅச்சிறுபாக்கம்
    பண் - குறிஞ்சி

    831    பொன்றிரண் டன்ன புரிசடை புரள
        பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
        குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
        குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
        மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
        மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
        அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.1
    832    தேனினு மினியர் பாலன நீற்றர்
        தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
        ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
        உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
        வானக மிறந்து வையகம் வணங்க
        வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
        ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.2
    833    காரிரு ளுருவ மால்வரை புரையக்
        களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
        நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
        நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
        பேரரு ளாளர் பிறவியில் சேரார்
        பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
        ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.3
    834    மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்
        மலைமக ளவளொடு மருவின ரெனவும்
        செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்
        சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
        தம்மல ரடியொன் றடியவர் பரவத்
        தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
        அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.4
    835    விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
        விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
        பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
        பலபுக ழல்லது பழியில ரெனவும்
        எண்ணலா காத இமையவர் நாளும்
        ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
        அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.5
    836    நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
        நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
        தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
        சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
        காடரங் காகக் கங்குலும் பகலுங்
        கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
        ஆடர வாட ஆடுமெம் மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.6
    837    ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
        இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
        கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
        குளிரிள மதியமுங் கூவிள மலரும்
        நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
        மகிழிள வன்னியும் இவைநலம் பகர
        ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.7
    838    கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
        கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
        பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய
        பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
        பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்
        பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
        தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.     1.77.8
    839    நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
        நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
        கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
        எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
        தோற்றலார் மாலும் நான்முக முடைய
        தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
        ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.9
    840    வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்
        நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
        ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
        உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
        வேதமும் வேத நெறிகளு மாகி
        விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
        ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.     1.77.10
    841    மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
        மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
        பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
        பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
        கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
        கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
        டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
        அன்புடை யடியவர் அருவினை யிலரே.     1.77.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.78 திரு இடைச்சுரம்
    பண் - குறிஞ்சி

    842    வரிவள ரவிரொளி யரவரை தாழ
        வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
        கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
        கனலெரி யாடுவர் காடரங் காக
        விரிவளர் தருபொழில் இனமயி லால
        வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
        எரிவள ரினமணி புனமணி சாரல்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.1
    843    ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
        அழகினை யருளுவர் குழகல தறியார்
        கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
        நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
        சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
        செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
        ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.2
    844    கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
        காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
        வானமும் நிலமையும் இருமையு மானார்
        வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
        நானமும் புகையொளி விரையொடு கமழ
        நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
        ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.3
    845    கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
        காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
        விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
        வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
        வடமுலை யயலன கருங்குருந் தேறி
        வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
        இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.4
    844    கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
        கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
        நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
        நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
        சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
        செழும்புன லனையன செங்குலை வாழை
        ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.5
    845    தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
        சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
        பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
        பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
        கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
        குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
        ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.6
    846    கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
        கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
        அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
        ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
        பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
        மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
        எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.7
    847    தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
        திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
        வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
        வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
        சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
        தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
        ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.8
    850    பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
        பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
        தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
        தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
        மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
        மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
        இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.9
    851    பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
        பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
        அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
        அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
        கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
        கயலினம் வயலிள வாளைகள் இரிய
        எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.     1.78.10
    852    மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
        மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
        சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
        சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
        புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
        புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
        இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
        இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.     1.78.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - இடைச்சுரநாதர், தேவியார் - இமயமடக்கொடியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.79 திருக்கழுமலம்
    பண் - குறிஞ்சி

    853    அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
        அரவமும் மதியமும் விரவிய அழகர்
        மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
        மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
        பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
        பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
        கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.1
    854    கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
        கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
        பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
        படர்சடை யடிகளார் பதியத னயலே
        வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
        மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
        கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.792
    855    எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
        எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
        மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
        வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
        பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
        பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
        கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.3
    856    எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
        ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
        திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
        தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
        வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
        மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
        கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.4
    857    ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
        உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
        பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
        படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
        நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்
        நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
        காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.5
    858    முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
        முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
        பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
        பேரரு ளாளனார் பேணிய கோயில்
        பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
        சாந்தமு மேந்திய கையின ராகிக்
        கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.6
    859    கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
        குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
        நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
        நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
        மலைக்கணித் தாவர வன்றிரை முரல
        மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
        கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.7
    860    புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
        பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
        பயம்பல படவடர்த் தருளிய பெருமான்
        பரிவொடு மினிதுறை கோயில தாகும்
        வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
        வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
        கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.8
    861    விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
        வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
        பலங்களால் நேடியும் அறிவரி தாய
        பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
        மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்
        மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
        கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.9
    862    ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
        அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
        நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
        மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
        சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
        தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
        காம்பன தோளியொ டினிதுறை கோயில்
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.     1.79.10
    863    கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
        கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
        வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
        வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
        ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
        உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
        மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
        விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.     1.79.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.80 கோயில்
    பண் - குறிஞ்சி

    864    கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
    செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
    முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.     1.80.1
    865    பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
    சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
    பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
    மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.     1.80.2
    866    மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
    கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
    பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
    செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.     1.80.3
    867    நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
    பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
    சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
    இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.     1.80.4
    868    செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
    செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
    செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.     1.80.5
    869    வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
    திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
    கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
    பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.     1.80.6
    870    அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
    மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
    சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
    தலையால் வணங்குவார் தலையா னார்களே.     1.80.7
    871    கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
    சீரா லேமல்கு சிற்றம் பலமேய
    நீரார் சடையானை நித்த லேத்துவார்
    தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.     1.80.8
    872    கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
    காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
    சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
    மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.     1.80.9
    873    பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
    முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
    சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
    நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.     1.80.10
    874    ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
    சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
    சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
    கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.     1.80.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
    தேவியார் - சிவகாமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.81 சீர்காழி
    பண் - குறிஞ்சி

    875    நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
    சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
    வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
    கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.     1.81.1
    876    துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
    தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
    ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
    களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.     1.81.2
    877    ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
    சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
    பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
    காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.     1.81.3
        (*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின.     1.81.4-7
    878    இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
    நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
    பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
    கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.     1.81.8
    879    மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
    தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
    ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்
    காலம் பகராதார் காழிந் நகர்தானே.     1.81.9
    880    தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
    பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
    மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
    கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.     1.81.10
    881    வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
    ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
    பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
    பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.     1.81.11


    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.82 திருவீழிமிழலை
    பண் - குறிஞ்சி

    882    இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
    திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
    தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
    விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.     1.82.1
    883    வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
    ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
    கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
    வேதத் தொலியோவா வீழி மிழலையே.     1.82.2
    884    பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
    துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
    மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
    வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.     1.82.3
    885    இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
    நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
    குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
    விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.     1.82.4
    886    கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
    பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்
    மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
    விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.     1.82.5
    887    மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
    ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
    சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
    மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.     1.82.6
    888    மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
    கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
    நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
    விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.     1.82.7
    889    எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
    கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
    படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
    விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.     1.82.8
    890    கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
    தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
    படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்
    விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.     1.82.9
    891    சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
    நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
    தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
    மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.     1.82.10
    892    மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
    ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி
    ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
    வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.     1.82.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.83 திரு அம்பர்மாகாளம்
    பண் - குறிஞ்சி

    893    அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
    மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
    விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்
    சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.     1.83.1
    894    தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
    வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
    ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
    ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.     1.83.2
    895    திரையார் புனலோடு செல்வ மதிசூடி
    விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
    நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
    உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே.     1.83.3
    896    கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
    மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
    கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
    எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.     1.83.4
    897    அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
    மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
    துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
    பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.     1.83.5
    898    பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
    வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
    விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
    கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.     1.83.6
    899    மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
    வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
    கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
    தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.     1.83.7
    900    கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
    மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
    இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
    நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.     1.83.8
    901    சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
    மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
    நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
    இறையான் கழலேத்த எய்தும் இன்பமே.     1.83.9
    902    மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
    கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
    வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
    ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே.     1.83.10
    903    வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
    திருமா மறைஞான சம்பந் தனசேணார்
    பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
    உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே.     1.83.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காளகண்டேசுவரர், தேவியார் - பட்சநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.84 திருக்கடனாகைக்காரோணம்
    பண் - குறிஞ்சி

    904    புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
    நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
    வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
    கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.1
    905    பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
    அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
    மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக்
    கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.2
    906    பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
    ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
    தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
    காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.3
    907    மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
    அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப்
    பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
    கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.4
    908    ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
    சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
    பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
    காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.5
    909    ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
    வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
    ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
    கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.6
    910    அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
    விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
    வரையார் வனபோல வளரும்வங்கங்கள்
    கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.7
    911    வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள்
    இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
    பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
    கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.8
    912    திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
    பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
    செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
    கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.9
    913    நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
    அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
    பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
    கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.     1.84.10
    914    கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
    நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
    உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்
    கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.     1.84.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.85 திருநல்லம்
    பண் - குறிஞ்சி

    915    கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
    றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
    வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
    நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே.     1.85.1
    916    தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
    துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
    கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
    நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே.     1.85.2
    917    அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
    முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
    சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
    நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே.     1.85.3
    918    குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
    மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
    தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
    நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.    1.85.4
    919    மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
    பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
    துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
    நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே.    1.85.5
    920    வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
    பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
    ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
    நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே.     1.85.6
    921    அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
    கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
    வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
    நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே.     1.85.7
    922    பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
    கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
    எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி
    நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே.     1.85.8
    923    நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
    போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
    ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
    நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே.     1.85.9
    924    குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
    அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
    பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
    நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே.     1.85.10
    925    நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
    கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
    தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
    கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.     1.85.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.86 திருநல்லூர்
    பண் - குறிஞ்சி

    926    கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
    நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
    முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
    பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.     1.86.1
    927    ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
    வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன
    நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
    கூறு மடியார்கட் கடையா குற்றமே.     1.86.2
    928    சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ
    ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
    நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
    பாடும் மடியார்கட் கடையா பாவமே.     1.86.3
    929    நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
    நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
    காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு
    தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.     1.86.4
    930    ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ
    நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
    தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
    போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.     1.86.5
    931    கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
    நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
    செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
    சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே.     1.86.6
    932    எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
    நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா
    தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்
    தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.     1.86.7
    933    காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
    நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
    ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்
    தீப மனத்தார்கள் அறியார் தீயவே.     1.86.8
    934    வண்ண மலரானும் வையம் அளந்தானும்
    நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
    தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
    எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.     1.86.9
    935    பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
    நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
    நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
    எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே.     1.86.10
    936    தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
    நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
    வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்
    விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.     1.86.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.87 திருவடுகூர்
    பண் - குறிஞ்சி

    937    சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
    கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
    கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
    வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.     1.87.1
    938    பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
    ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
    கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
    ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.2
    939    சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
    ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச
    ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
    பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.    1.87.3
    940    துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
    கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்
    கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
    பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.4
    941    துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
    தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்
    பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
    அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.5
    942    தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
    கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர்
    வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
    ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.6
    943    நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
    முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
    கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
    அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.7
    944    பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
    மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
    பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்
    கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.8
    945    சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
    கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
    வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
    அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.9
    946    திருமா லடிவீழத் திசைநான் முகனாய
    பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர்
    செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
    அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.     1.87.10
    947    படிநோன் பவையாவர் பழியில் புகழான
    கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்
    படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
    அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.     1.87.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வடுகேசுவரர், தேவியார் - வடுவகிர்க்கண்ணியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.88 திரு ஆப்பனூர்
    பண் - குறிஞ்சி

    948    முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
    ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
    செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
    பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.1
    949    குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
    விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
    அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
    பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.2
    950    முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
    பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
    அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
    பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.3
    951    பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
    துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
    அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
    பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.4
    952    தகர மணியருவித் தடமால்வரை சிலையா
    நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
    அகர முதலானை அணியாப்ப னூரானைப்
    பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.5
    953    ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
    காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
    ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
    பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.6
    954    இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
    கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
    இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
    பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.7
    955    கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
    உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
    அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானைப்
    பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.     1.88.8
    956    கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
    அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
    எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
    பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.     1.88.9
    957    செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
    பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை
    ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
    பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.     1.88.10
    958    அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
    சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
    நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
    சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.     1.88.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆப்பனூரீசுவரர், தேவியார் - அம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.89 திரு எருக்கத்தம்புலியூர்
    பண் - குறிஞ்சி

    959    படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
    உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
    சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
    விடையான் அடியேத்த மேவா வினைதானே.     1.89.1
    960    இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
    நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
    சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற்
    கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.     1.89.2
    961    விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
    பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
    எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
    அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.     1.89.3
    962    அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
    விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
    வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
    திரையார் சடையானைச் சேரத் திருவாமே.     1.89.4
    963    வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
    சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
    ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
    வேறா நினைவாரை விரும்பா வினைதானே.     1.89.5
    964    நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
    புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
    தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
    தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.     1.89.6
        (*) இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     1.89.7
    965    ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
    தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
    கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
    தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.     1.89.8
    966    மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
    நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
    இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
    கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.     1.89.9
    967    புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
    சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
    நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
    அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே.     1.89.10
    968    ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
    சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
    ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
    பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.     1.89.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நீலகண்டேசுரர், தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    969    அரனை உள்குவீர், பிரம னூருளெம்
    பரனை யேமனம், பரவி உய்ம்மினே.     1.90.1
    970    காண உள்குவீர், வேணு நற்புரத்
    தாணுவின் கழல், பேணி உய்ம்மினே.     1.90.2
    971    நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
    ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.     1.90.3
    972    அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
    வெங்கு ருமன்னும், எங்க ளீசனே.     1.90.4
    973    வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
    தாணி நற்பொனைக், காணு மின்களே.     1.90.5
    974    பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
    ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.     1.90.6
    975    கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
    அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.     1.90.6
    976    நறவ மார்பொழிற், புறவம் நற்பதி
    இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.     1.90.8
    977    தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
    அன்று நெரித்தவா, நின்று நினைமினே.     1.90.9
    978    அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
    பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே.     1.90.10
    979    தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
    நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.     1.90.11
    980    தொழும னத்தவர், கழும லத்துறை
    பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.     1.90.12

    பிரம்மபுரமென்பது சீகாழி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    981    சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
    பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.     1.91.1
    982    பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
    மறவா தேத்துமின், துறவி யாகுமே.     1.91.2
    983    துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
    நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.     1.91.3
    984    உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
    கையி னாற்றொழ, நையும் வினைதானே.     1.91.4
    985    பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
    கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே.     1.915
    986    பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
    வாச மலர்தூவ, நேச மாகுமே.     1.91.6
    987    வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
    செய்ய மலர்தூவ, வைய முமதாமே.     1.91.7
    988    அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்
    கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே.     1.91.8
    989    துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
    உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.     1.91.9
    990    கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
    எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.     1.91.10
    991    சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன
    பாரூர் பாடலார், பேரா ரின்பமே.     1.91.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    992    வாசி தீரவே, காசு நல்குவீர்
    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.     1.92.1
    993    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.     1.92.2
    994    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.     1.92.3
    995    நீறு பூசினீர், ஏற தேறினீர்
    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.     1.92.4
    996    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
    நாம மிழலையீர், சேமம் நல்குமே.     1.92.5
    997    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.     1.92.6
    998    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.     1.92.7
    999    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.    1.92.8
    1000    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.    1.92.9
    1001    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
    வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.     1.92.10
    1002    காழி மாநகர், வாழி சம்பந்தன்
    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.     1.92.11

    இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    1003    நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
    நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.     1.93.1
    1004    அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
    நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.    1.93.2
    1005    ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
    கைகள் கூப்புவீர், வைய முமதாமே.     1.93.3
    1006    ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
    வாச மலர்தூவப், பாச வினைபோமே.     1.93.4
    1007    மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
    பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.     1.93.5
    1008    மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
    பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.     1.93.6
    1009    விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
    படையா யினசூழ, உடையா ருலகமே.    1.93.7
    1010    பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
    அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.    1.93.8
    1011    இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
    உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.    1.93.9
    1012    தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
    நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.     1.93.10
    1013    நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
    ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.     1.93.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    1014    நீல மாமிடற், றால வாயிலான்
    பால தாயினார், ஞாலம் ஆள்வரே.     1.94.1
    1015    ஞால மேழுமாம், ஆல வாயிலார்
    சீல மேசொலீர், காலன் வீடவே.     1.94.2
    1015    ஆல நீழலார், ஆல வாயிலார்
    கால காலனார், பால தாமினே.     1.94.3
    1017    அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
    பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.     1.94.4
    1018    ஆட லேற்றினான், கூட லாலவாய்
    பாடி யேமனம், நாடி வாழ்மினே.     1.94.5
    1019    அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
    எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.     1.94.6
    1020    அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
    நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.     1.94.7
    1021    அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
    உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.     1.94.8
    1022    அருவன் ஆலவாய், மருவி னான்றனை
    இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.     1.94.9
    1023    ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
    தேர மண்செற்ற, வீர னென்பரே.     1.94.10
    1024    அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
    முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.     1.94.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
    சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி, தேவியார் - மீனாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    1025    தோடொர் காதினன், பாடு மறையினன்
    காடு பேணிநின், றாடு மருதனே.     1.95.1
    1026    கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
    மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.     1.95.2
    1027    எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை
    பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.     1.95.3
    1028    விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
    தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.     1.95.4
    1029    பந்த விடையேறும், எந்தை மருதரைச்
    சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.     1.95.5
    1030    கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
    தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.    1.95.6
    1031    பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
    நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.    1.95.7
    1032    எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
    தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.    1.95.8
    1033    இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
    பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.     1.95.9
    1034    நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
    அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.     1.95.10
    1035    கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
    பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.     1.95.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    1036    மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
    அன்னி யூரமர், மன்னு சோதியே.     1.96.1
    1037    பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
    குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.    1.96.2
    1038    நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
    சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.    1.96.3
    1039    பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
    சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.     1.96.4
    1040    நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
    மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.     1.96.5
    1041    இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
    நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.     1.96.6
    1042    அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
    எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.     1.96.7
    1043    தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
    ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.     1.96.8
    1044    இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
    பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே.     1.96.9
    1045    குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
    தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.     1.96.10
    1046    பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
    வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.     1.96.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.97 திருப்புறவம்
    பண் - குறிஞ்சி

    1047    எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
    மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
    செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
    பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே.     1.97.1
    1048    மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
    நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும்
    மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
    போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.     1.97.2
    1049    வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
    புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
    பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
    பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.     1.97.3
    1050    துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
    மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்
    பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
    பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.    1.97.4
    1051    தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
    காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
    பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
    பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.     1.97.5
    1052    கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
    அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப்
    பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
    பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.     1.97.6
    1053    எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
    கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப்
    பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
    புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.    1.97.7
    1054    பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
    துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும்
    அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற்
    புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.     1.97.8
    1055    மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
    மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங்
    கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்
    பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.    1.97.9
    1056    வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
    மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்
    கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
    பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.     1.97.10
    1057    பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
    மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற
    தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
    இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.     1.97.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.98 திருச்சிராப்பள்ளி
    பண் - குறிஞ்சி

    1058    நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
    றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
    சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
    குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.    1.98.1
    1059    கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
    செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
    வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
    பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.    1.98.2
    1060    மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
    செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
    சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
    எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே.    1.98.3
    1061    துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
    சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
    கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
    பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.    1.98.4
    1062    கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்
    சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
    தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
    நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.    1.98.5
    1063    வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
    செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
    தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
    ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே.    1.98.6
    1064    வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
    சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
    பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
    தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.     1.98.7
    1065    மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
    தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
    சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
    சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.     1.98.8
    1066    அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
    கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
    சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
    இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே.    1.98.9
    1067    நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
    ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
    பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
    சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.     1.98.10
    1068    தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
    கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
    ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
    வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.     1.98.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.99 திருக்குற்றாலம்
    பண் - குறிஞ்சி

    1069    வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
    கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
    அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
    நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.     1.99.1
    1070    பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
    கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்
    கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
    அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.     1.99.2
    1071    செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
    கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
    வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
    நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.     1.99.3
    1072    பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்
    கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
    அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்
    நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.     1.99.4
    1073    மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
    குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
    இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த
    சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.     1.99.5
    1074    மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
    கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்
    கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்
    பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.     1.99.6
    1075    நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
    கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
    காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்
    சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.     1.99.7
    1076    போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்
    கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
    மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
    நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.     1.99.8
    1077    அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
    குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
    பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
    பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.     1.99.9
    1078    பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
    குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
    இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
    அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.     1.99.10
    1079    மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
    கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
    நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
    பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.     1.99.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர், தேவியார் - குழல்வாய்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.100 திருப்பரங்குன்றம்
    பண் - குறிஞ்சி

    1080    நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச்
    சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
    ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
    பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.     1.100.1
    1081    அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து
    பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
    திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
    பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.    1.100.2
    1082    நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச்
    சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
    ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்
    பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.    1.100.3
    1083    வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
    குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந்
    தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
    நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.    1.100.4
    1084    பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
    துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
    பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
    உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.     1.100.5
    1085    கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்
    தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்
    புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
    படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.     1.100.6
    1086    அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
    எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும்
    மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
    பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.     1.100.7
    1087    மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
    பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
    சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
    நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.     1.100.8
    1088    முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி
    உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்
    சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
    பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.    1.100.9
    1089    குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
    மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
    பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
    தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.    1.100.10
    1090    தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
    படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
    தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
    விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே.     1.100.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.101 திருக்கண்ணார்கோயில்
    பண் - குறிஞ்சி

    1091    தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
    பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
    கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
    நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே.     1.101.1
    1092    கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
    வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக்
    கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
    செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.     1.101.2
    1093    பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
    எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
    கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
    கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.    1.101.3
    1094    தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்
    மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க்
    குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
    கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.     1.101.4
    1095    மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
    செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
    குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
    கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.     1.101.5
    1096    விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
    உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
    கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
    நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.     1.101.6
    1097    முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
    பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
    தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
    கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.     1.101.7
    1098    பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
    நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
    முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
    திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.     1.101.8
    1099    செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்
    அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்
    தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத்
    தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே.     1.101.9
    1100    தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்
    சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
    ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்
    ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.     1.101.10
    1101    காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த
    பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்
    நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்
    பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே.     1.101.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர், தேவியார் - முருகுவளர்கோதையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.102 சீகாழி
    பண் - குறிஞ்சி

    1102    உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
    கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
    அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
    சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.     1.102.1
    1103    மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
    கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
    மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே
    ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே.    1.102.2
    1104    இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
    களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
    அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
    றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.    1.102.3
    1105    எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக்
    கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
    பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
    நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.     1.102.4
    1106    மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்
    கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
    உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
    குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.    1.102.5
    1107    குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
    கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
    வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை
    அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.     1.102.6
        * இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     1.102.7
    1108    உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
    கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
    இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
    சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.    1.102.8
    1109    ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
    காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
    பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
    மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.     1.102.9
    1110    மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
    கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்
    தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
    நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே.     1.102.10
    1111    வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
    கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
    அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
    படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.    1.102.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.103 திருக்கழுக்குன்றம்
    பண் - குறிஞ்சி

    1112    தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
    ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
    நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
    காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.1
    1113    கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
    பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
    பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
    காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.2
    1114    தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
    தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
    வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
    கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.3
    1115    துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
    பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
    இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
    கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.4
    1116    பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
    மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
    மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
    கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.5
    1117    வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
    கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
    உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
    கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.6
        * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     1.103.7
    1118    ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
    நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
    பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
    காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.8
    1119    இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
    தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
    மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
    கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.9
    1120    தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
    பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
    சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
    காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.     1.103.10
    1121    கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
    நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
    பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
    புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.     1.103.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.104 திருப்புகலி
    பண் - வியாழக்குறிஞ்சி

    1122    ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
    சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
    ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
    ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.     1.104.1
    1123    ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
    சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
    ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
    மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.     1.104.2
    1124    ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
    நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
    பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
    வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.     1.104.3
    1125    வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
    கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
    அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
    புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.     1.104.4
    1126    சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
    ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
    வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
    பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.     1.104.5
    1127    மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
    நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
    அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
    புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.     1.104.6
    1128    மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
    கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
    செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
    அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.     1.104.7
    1129    வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
    நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
    பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
    ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.     1.104.8
    1130    தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
    ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
    மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
    போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.     1.104.9
    1131    வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
    அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
    வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
    புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.     1.104.10
    1132    வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
    போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
    நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
    ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.     1.104.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.105 திருஆரூர்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1133    பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
    சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
    கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
    ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.     1.105.1
    1134    சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
    ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
    பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
    காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே.     1.105.2
    1135    உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே
    கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்
    வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
    அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.     1.105.6
    1136    வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின்
    ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப்
    பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
    நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே.     1.105.7
    1137    வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
    காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி
    ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று
    பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.     1.105.8
    1138    கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்
    மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
    அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்
    தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே.     1.105.6
    1138    நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
    ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
    சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
    ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே.     1.105.7
        (*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     1.105.8
    1140    வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
    நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்
    அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
    புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.     1.105.9
    1141    செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
    இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல்
    அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த்
    தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே.     1.105.10
    1142    நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
    அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
    வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
    சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.    1.105.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.106 திருஊறல்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1143    மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
    நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
    தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
    ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே.     1.106.1
    1144    மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
    மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
    தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்
    ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.    1.106.2
    1145    ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
    கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம்
    வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
    ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.    1.106.3
    1146    நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
    கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
    மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
    உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே.     1.106.4
    1147    எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
    சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
    கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
    உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே.    1.106.5
    1148    (*) இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.    1.106.6
    1149    கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
    மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
    செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
    ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.     1.106.7
    1150    நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
    தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
    பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
    ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.     1.106.8
    1151    பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
    என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
    தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
    உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே.    1.106.9
    1152    கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
    ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
    நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
    பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே.     1.106.10

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
    சுவாமிபெயர் - உமாபதீசுவரர், தேவியார் - உமையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1152    வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
    பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
    கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.    1.107.1
    1153    அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
    மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
    குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.     1.107.2
    1154    பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
    ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
    கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
    நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.     1.107.3
    1155    வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
    காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
    சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.     1.107.4
    1156    பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
    பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
    குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
    மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.     1.107.5
    1157    ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
    தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
    கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
    பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.     1.107.6
    1158    நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
    வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
    கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.    1.107.7
    1159    மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
    தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
    கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
    தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.    1.107.8
    1160    செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
    அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
    கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
    நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.    1.107.9
    1161    போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
    ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
    கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.     1.107.10
    1162    அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
    தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
    கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
    நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.     1.107.11

    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    திருச்செங்கோடு என வழங்குகின்றது.
    சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர், தேவியார் - அர்த்தநாரீசுவரி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.108 திருப்பாதாளீச்சரம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1163    மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
    பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
    அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
    பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.    1.108.1
    1164    நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
    தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
    ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
    பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.     1.108.2
    1165    நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
    போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
    தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
    பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.     1.108.3
    1166    அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
    மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
    செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
    பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.     1.108.4
    1167    பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
    தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
    தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
    பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே.     1.108.5
    1168    கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
    விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
    பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
    பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.     1.108.6
    1169    விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
    வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
    விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
    பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.     1.108.7
    1170    மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
    தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
    கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
    பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.     1.108.8
    1171    தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்
    காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
    பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
    பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே.     1.108.9
    1172    காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
    ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
    மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
    பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.    1.108.10
    1173    பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
    பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
    தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
    இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.     1.108.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.109 திருச்சிரபுரம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1174    வாருறு வனமுலை மங்கைபங்கன்
    நீருறு சடைமுடி நிமலனிடங்
    காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
    சீருறு வளவயற் சிரபுரமே.     1.109.1
    1175    அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
    திங்களொ டரவணி திகழ்முடியன்
    மங்கையொ டினிதுறை வளநகரஞ்
    செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.     1.109.2
    1176    பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
    திரிந்தவர் புரமவை தீயின்வேவ
    வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
    தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.    1.109.3
    1177    நீறணி மேனியன் நீள்மதியோ
    டாறணி சடையினன் அணியிழையோர்
    கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
    சேறணி வளவயல் சிரபுரமே.     1.109.4
    1178    அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
    சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
    குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
    திருந்திய புறவணி சிரபுரமே.     1.109.5
    1179    கலையவன் மறையவன் காற்றொடுதீ
    மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
    கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
    சிலையவன் வளநகர் சிரபுரமே.     1.109.6
    1180    வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
    தானவர் புரமெய்த சைவனிடங்
    கானமர் மடமயில் பெடைபயிலுந்
    தேனமர் பொழிலணி சிரபுரமே.    1.109.7
    1181    மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
    கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
    இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
    செறுத்தவன் வளநகர் சிரபுரமே.     1.109.8
    1182    வண்ணநன் மலருறை மறையவனுங்
    கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
    விண்ணுற வோங்கிய விமலனிடம்
    திண்ணநன் மதிலணி சிரபுரமே.     1.109.9
    1183    வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
    கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
    பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
    செற்றவன் வளநகர் சிரபுரமே.     1.109.10
    1184    அருமறை ஞானசம் பந்தனந்தண்
    சிரபுர நகருறை சிவனடியைப்
    பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
    திருவொடு புகழ்மல்கு தேசினரே.     1.109.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.110 திருவிடைமருதூர்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1185    மருந்தவன் வானவர் தானவர்க்கும்
    பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
    அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
    இருந்தவன் வளநகர் இடைமருதே.     1.110.1
    1186    தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
    கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
    நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
    ஏற்றவன் வளநகர் இடைமருதே.     1.110.2
    1187    படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
    நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
    முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
    இடைமரு தினிதுறை யெம்மிறையே.    1.110.3
    1188    பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
    துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
    கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
    இணையிலி வளநகர் இடைமருதே.     1.110.4
    1189    பொழிலவன் புயலவன் புயலியக்குந்
    தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
    கழலவன் கரியுரி போர்த்துகந்த
    எழிலவன் வளநகர் இடைமருதே.     1.110.5
    1190    நிறையவன் புனலொடு மதியும்வைத்த
    பொறையவன் புகழவன் புகழநின்ற
    மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
    இறையவன் வளநகர் இடைமருதே.     1.110.6
    1191    நனிவளர் மதியொடு நாகம்வைத்த
    பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
    முனிவரொ டமரர்கள் முறைவணங்க
    இனிதுறை வளநகர் இடைமருதே.     1.110.7
    1192    தருக்கின அரக்கன தாளுந்தோளும்
    நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
    றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
    எரித்தவன் வளநகர் இடைமருதே.     1.110.8
    1193    பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
    வரியர வணைமறி கடற்றுயின்ற
    கரியவன் அலரவன் காண்பரிய
    எரியவன் வளநகர் இடைமருதே.     1.110.9
    1194    சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
    புந்தியில் உரையவை பொருள்கொளாதே
    அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
    எந்தைதன் வளநகர் இடைமருதே.

    (*) ஓத்து என்பது வேதம்.    1.110.10
    1195    இலைமலி பொழிலிடை மருதிறையை
    நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
    பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
    உலகுறு புகழினொ டோ ங்குவரே.     1.110.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.111 திருக்கடைமுடி
    பண் - வியாழக்குறிஞ்சி

    1196    அருத்தனை அறவனை அமுதனைநீர்
    விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
    ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
    கருத்தவன் வளநகர் கடைமுடியே.     1.111.1
    1197    திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
    அரைபொரு புலியதள் அடிகளிடந்
    திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
    கரைபொரு வளநகர் கடைமுடியே.     1.111.2
    1198    ஆலிள மதியினொ டரவுகங்கை
    கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
    ஏலநன் மலரொடு விரைகமழுங்
    காலன வளநகர் கடைமுடியே.    1.111.3
    1199    கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
    மையணி மிடறுடை மறையவனூர்
    பையணி யரவொடு மான்மழுவாள்
    கையணி பவனிடங் கடைமுடியே.     1.111.4
    1200    மறையவன் உலகவன் மாயமவன்
    பிறையவன் புனலவன் அனலுமவன்
    இறையவன் எனவுல கேத்துங்கண்டங்
    கறையவன் வளநகர் கடைமுடியே.     1.111.5
    1201    படவர வேரல்குற் பல்வளைக்கை
    மடவர லாளையொர் பாகம்வைத்துக்
    குடதிசை மதியது சூடுசென்னிக்
    கடவுள்தன் வளநகர் கடைமுடியே.     1.111.6
    1202    பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
    அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்
    கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
    கடிபுல்கு வளநகர் கடைமுடியே.     1.111.7
    1203    நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
    சாதல்செய் தவனடி சரணெனலும்
    ஆதர வருள்செய்த அடிகளவர்
    காதல்செய் வளநகர் கடைமுடியே.     1.111.8
    1204    அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
    புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
    சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்
    கடைமுடி யதனயல் காவிரியே.     1.111.9
    1205    மண்ணுதல் பறித்தலு மாயமிவை
    எண்ணிய காலவை யின்பமல்ல
    ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
    கண்ணுதல் வளநகர் கடைமுடியே.     1.111.10
    1206    பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
    சென்றடை கடைமுடிச் சிவனடியை
    நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
    இன்றமி ழிவைசொல இன்பமாமே.     1.111.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர், தேவியார் - அபிராமியம்பிகை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.112 திருச்சிவபுரம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1207    இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
    தன்கரம் மருவிய சதுரன்நகர்
    பொன்கரை பொருபழங் காவிரியின்
    தென்கரை மருவிய சிவபுரமே.     1.112.1
    1208    அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
    பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
    வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
    சென்றடி வீழ்தரு சிவபுரமே.     1.112.2
    1209    மலைமகள் மறுகிட மதகரியைக்
    கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
    அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே
    சிலைமல்கு மதிலணி சிவபுரமே.
    (*) அரிசில் என்பது ஒரு நதி.     1.112.3
    1210    மண்புன லனலொடு மாருதமும்
    விண்புனை மருவிய விகிர்தன்நகர்
    பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
    செண்பக மலர்பொழிற் சிவபுரமே.     1.112.4
    1211    வீறுநன் குடையவள் மேனிபாகங்
    கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
    நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
    தேறலுண் டெழுதரு சிவபுரமே.     1.112.5
    1212    மாறெதிர் வருதிரி புரமெரித்து
    நீறது வாக்கிய நிமலன்நகர்
    நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
    சேறுடை வயலணி சிவபுரமே.     1.112.6
    1213    ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
    மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
    பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
    சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.     1.112.7
    1214    எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
    முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
    விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
    செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.     1.112.8
    1215    சங்கள வியகையன் சதுர்முகனும்
    அங்கள வறிவரி யவன்நகர்தான்
    கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
    செங்கனி நுகர்தரு சிவபுரமே.     1.112.9
    1216    மண்டையின் குண்டிகை மாசுதரும்
    மிண்டரை விலக்கிய விமலன்நகர்
    பண்டமர் தருபழங் காவிரியின்
    தெண்டிரை பொருதெழு சிவபுரமே.     1.112.10
    1217    சிவனுறை தருசிவ புரநகரைக்
    கவுணியர் குலபதி காழியர்கோன்
    தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
    நவமொடு சிவகதி நண்ணுவரே.     1.112.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.113 திருவல்லம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1218    எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
    தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
    விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
    தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.     1.113.1
    1219    தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்
    தூயவன் தூமதி சூடியெல்லாம்
    ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்
    சேயவன் உறைவிடந் திருவல்லமே.     1.113.2
    1220    பார்த்தவன் காமனைப் பண்பழியப்
    போர்த்தவன் போதகத் தின்னுரிவை
    ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று
    சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே.    1.113.3
    1221    கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
    மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
    பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
    செய்தவன் உறைவிடந் திருவல்லமே.    1.113.4
    1222    சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
    நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்
    தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
    சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.     1.113.5
    1223    பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
    உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
    விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
    சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.     1.113.6
        (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.113.7
    1224    இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
    ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
    நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
    திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.    1.113.8
    1225    பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
    அரியவன் அருமறை யங்கமானான்
    கரியவன் நான்முகன் காணவொண்ணாத்
    தெரியவன் உறைவிடந் திருவல்லமே.    1.113.9
    1226    அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
    குன்றிய அறவுரை கூறாவண்ணம்
    வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
    சென்றவன் உறைவிடந் திருவல்லமே.     1.113.10
    1227    கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
    நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
    குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
    பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.     1.113.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வல்லநாதர், தேவியார் - வல்லாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.114 திருமாற்பேறு
    பண் - வியாழக்குறிஞ்சி

    1228    குருந்தவன் குருகவன் கூர்மையவன்
    பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
    கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
    மருந்தவன் வளநகர் மாற்பேறே.    1.114.1
    1229    பாறணி வெண்டலை கையிலேந்தி
    வேறணி பலிகொளும் வேட்கையனாய்
    நீறணிந் துமையொரு பாகம்வைத்த
    மாறிலி வளநகர் மாற்பேறே.     1.114.2
    1230    கருவுடை யாருல கங்கள்வேவச்
    செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
    றுருவுடை யாளுமை யாளுந்தானும்
    மருவிய வளநகர் மாற்பேறே.     1.114.3
    1231    தலையவன் தலையணி மாலைபூண்டு
    கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
    கலைநவின் றான்கயி லாயமென்னும்
    மலையவன் வளநகர் மாற்பேறே.    1.114.4
    1232    துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
    பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
    கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
    மறையவன் வளநகர் மாற்பேறே.    1.114.3
    1233    பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
    கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
    விண்ணவர் தானவர் முனிவரொடு
    மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.     1.114.4
        (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.114.5
    1234    தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
    நீதியால் வேதகீ தங்கள்பாட
    ஆதியா னாகிய அண்ணலெங்கள்
    மாதிதன் வளநகர் மாற்பேறே.    1.114.8
    1235    செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
    கொய்யணி நறுமலர் மேலயனும்
    ஐயன்நன் சேவடி அதனையுள்க
    மையல்செய் வளநகர் மாற்பேறே.     1.114.9
    1236    குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
    களித்துநன் கழலடி காணலுற்றார்
    முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
    வளைத்தவன் வளநகர் மாற்பேறே.     1.114.10
    1237    அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
    செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
    சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
    எந்தைதன் கழலடி எய்துவரே.    1.114.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.115 திரு இராமனதீச்சரம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1238    சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
    அங்கிடு பலிகொளு மவன்கோபப்
    பொங்கர வாடலோன் புவனியோங்க
    எங்குமன் இராமன தீச்சுரமே.     1.115.1
    1239    சந்தநன் மலரணி தாழ்சடையன்
    தந்தம தத்தவன் தாதையோதான்
    அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
    எந்தவன் இராமன தீச்சுரமே.     1.115.2
    1240    தழைமயி லேறவன் தாதையோதான்
    மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
    குழையது விலங்கிய கோலமார்பின்
    இழையவன் இராமன தீச்சுரமே.     1.115.3
    1241    சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
    முத்திய தாகிய மூர்த்தியோதான்
    அத்திய கையினில் அழகுசூலம்
    வைத்தவன் இராமன தீச்சுரமே.     1.115.4
    1242    தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்
    தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப்
    பாய்ந்தகங் கையொடு படவரவம்
    ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே.     1.115.5
    1243    சரிகுழல் இலங்கிய தையல்காணும்
    பெரியவன் காளிதன் பெரியகூத்தை
    அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
    எரியவன் இராமன தீச்சுரமே.     1.115.6
    1244    மாறிலா மாதொரு பங்கன்மேனி
    நீறது ஆடலோன் நீள்சடைமேல்
    ஆறது சூடுவான் அழகன்விடை
    ஏறவன் இராமன தீச்சுரமே.     1.115.7
    1245    தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
    படவர வாட்டிய படர்சடையன்
    நடமது வாடலான் நான்மறைக்கும்
    இடமவன் இராமன தீச்சுரமே.     1.115.8
    1246    தனமணி தையல்தன் பாகன்றன்னை
    அனமணி அயன்அணி முடியுங்காணான்
    பனமணி அரவரி பாதங்காணான்
    இனமணி இராமன தீச்சுரமே.     1.115.9
    1247    தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
    அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
    மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
    எறிபவன் இராமன தீச்சுரமே.     1.115.10
    1248    தேன் மலர்க் கொன்றை யோன்........
    ........ முந்தமக்கூனமன்றே.     1.115.11*
    (*) இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - இராமநாதேசுவரர், தேவியார் - சரிவார்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.116 திரு நீலகண்டம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1249    அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
    உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
    கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.1
    1250    காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
    ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
    பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
    தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.2
    1251    முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
    விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
    இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
    சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.3
    1252    விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
    புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
    கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
    திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.4
    1253    மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
    கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
    சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
    செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.5
    1254    மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
    பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
    பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
    சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.6
        (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     1.116.7
    1255    கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
    உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
    செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
    திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.8
    1256    நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
    தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
    தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
    சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.9
    1257    சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
    பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
    பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
    தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     1.116.10
    1258    பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
    இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
    திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
    நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.     1.116.11

    இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
    கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று
    பண் - வியாழக்குறிஞ்சி

    1259    காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்
    தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
    வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்
    பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே.     1.117.1
    1260    கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை
    பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
    டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
    வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.     1.117.2
    1261    கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
    தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
    ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
    பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.     1.117.3
    1262    உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை
    எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்
    செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்
    விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே.     1.117.4
    1263    கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
    விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
    மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
    தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.     1.117.5
    1264    சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
    கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
    பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
    பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.     1.117.6
    1265    காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு
    மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
    டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச்
    சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே.     1.117.7
    1266    நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்
    மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
    விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
    பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.     1.117.8
    1267    இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்
    கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
    கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
    சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.     1.117.9
    1268    அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்
    கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
    பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
    கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே.     1.117.10
    1269    கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்
    எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு
    மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
    கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.     1.117.11
    1270    கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
    நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
    சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்
    செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே.     1.117.12

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.118 திருப்பருப்பதம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1271    சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
    இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
    விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
    படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.     1.118.1
    1272    நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
    நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே
    வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
    பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.     1.118.2
    1273    துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
    இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
    கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
    பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.     1.118.3
    1274    கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
    எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்
    ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
    பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.     1.118.4
    1275    துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
    மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
    சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா
    பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.     1.118.5
    1276    சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
    ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
    கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
    பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.     1.118.6
    1277    புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
    தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
    விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
    படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.     1.118.7
    1278    நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
    மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்
    கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
    பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.     1.118.8
    1279    மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்
    திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்
    இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே
    பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.     1.118.10
    1279    சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
    மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
    குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
    படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.     1.118.11
    1280    வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
    பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
    நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல
    ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.     1.118.12

    இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்
    மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
    சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - பருப்பதமங்கையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.119 திருக்கள்ளில்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1282    முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
    வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
    கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
    உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.     1.119.1
    1283    ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
    ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
    காடலாற் கருதாத கள்ளில் மேயான்
    பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.     1.119.2
    1284    எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
    பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
    கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
    பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.     1.119.3
    1285    பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
    நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
    கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
    நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.     1.119.4
    1286    விரையாலும் மலராலும் விழுமை குன்றா
    உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
    கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
    அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.     1.119.5
    1287    நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
    வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
    கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
    மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.     1.119.6
    1288    பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
    குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
    கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
    அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.     1.119.7
    1289    திருநீல மலரொண்கண் தேவி பாகம்
    புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
    கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
    பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.     1.119.8
    1290    வரியாய மலரானும் வையந் தன்னை
    உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
    கரியானும் அறியாத கள்ளில் மேயான்
    பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.     1.119.9
    1291    ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
    பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
    மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
    தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.     1.119.10
    1292    திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
    பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
    முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
    புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.     1.119.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர், தேவியார் - ஆனந்தவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.120 திருவையாறு - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1293    பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
    துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
    பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
    டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.1
    1294    கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
    பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
    போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
    ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.2
    1295    வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
    எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
    இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
    அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.3
    1296    வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
    மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
    தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
    ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.4
    1297    வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
    தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
    மானன மென்விழி மங்கையொர் பாகமும்
    ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.5
    1298    முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
    இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
    என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
    அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.6
    1299    வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
    வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
    பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
    அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.7
    1300    விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
    அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
    முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
    அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.8
    1301    விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
    எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
    கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
    அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.     1.120.9
    1302    மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
    இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
    தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
    அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.     1.120.10
    1303    நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
    அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
    கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
    நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.     1.120.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1304    நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
    படைமரு தழலெழ மழுவல பகவன்
    புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
    இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.     1.121.1
    1305    மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
    கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
    குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
    இழைநுழை புரியணல் இடமிடை மருதே.     1.121.2
    1306    அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
    கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
    பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
    இருமையும் உடையணல் இடமிடை மருதே.     1.121.3
    1307    பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
    நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
    வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
    எரிவளர் சடையணல் இடமிடை மருதே.     1.121.4
    1308    வருநல மயிலன மடநடை மலைமகள்
    பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
    செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
    இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.     1.121.5
    1309    கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
    மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
    விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
    டிலையுடை படையவன் இடமிடை மருதே.     1.121.6
    1310    வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
    இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
    துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
    குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.     1.121.7
    1311    மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
    துறையவன் எனவல அடியவர் துயரிலர்
    கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
    இறையவன் உறைதரும் இடமிடை மருதே.     1.121.8
    1312    மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
    இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
    கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
    எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.     1.121.9
    1313    துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
    அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
    கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
    அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.     1.121.10
    1314    தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
    இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
    படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
    கெடமலி புகழொடு கிளரொளி யினரே.     1.121.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.122 திருவிடைமருதூர் - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1315    விரிதரு புலியுரி விரவிய அரையினர்
    திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
    எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
    புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.     1.122.1
    1316    மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
    எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
    செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
    பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.     1.122.2
    1317    சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
    நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
    இலரென இடுபலி யவரிடை மருதினை
    வலமிட வுடல்நலி விலதுள வினையே.     1.122.3
    1318    விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
    கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
    இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
    உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே.     1.122.4
    1319    உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
    அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
    இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
    உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.     1.122.5
    1320    ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
    அழகிய முடியுடை அடிகள தறைகழல்
    எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
    தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.    1.122.6
    1321    கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
    நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
    மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
    இலைமலி படையவர் இடமிடை மருதே.     1.122.7
    1322    செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
    அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
    இருவகை விரனிறி யவரிடைமருதது
    பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.     1.122.8
    1323    அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
    தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
    எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
    புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.     1.122.9
    1324    குடைமயி லினதழை மருவிய வுருவினர்
    உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
    அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
    இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.     1.122.10
    1325    பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
    விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
    பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
    விரவிலர் வினையொடு வியனுல குறவே.     1.122.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.123 திருவலிவலம் - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1326    பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
    ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
    மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
    மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.     1.123.1
    1327    இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
    பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
    விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
    மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.     1.123.2
    1328    உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
    வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
    கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
    மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.     1.123.3
    1329    அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
    புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
    எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
    மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.     1.123.4
    1330    பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
    கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
    வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.     1.123.5
    1331    தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
    விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
    நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
    வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.     1.123.6
    1332    நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
    பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
    பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
    வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.     1.123.7
    1333    இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
    இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
    இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
    இரவண நிகர்வலி வலமுறை யிறையே.     1.123.8
    1334    தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
    ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
    தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
    வானணை மதில்வலி வலமுறை யிறையே.     1.123.9
    1335    இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
    நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
    தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
    மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.     1.123.10
    1336    மன்னிய வலிவல நகருறை யிறைவனை
    இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
    தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
    உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.     1.123.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.124 திருவீழிமிழலை - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1337    அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
    மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
    நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
    நிலமலி மிழலையை நினையவ லவரே.     1.124.1
    1338    இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
    கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
    இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
    நிருபமன் மிழலையை நினையவ லவரே.     1.124.2
    1339    கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
    அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
    இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
    நிலைமலி மிழலையை நினையவ லவரே.     1.124.3
    1340    மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
    காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
    பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
    நீடமர் மிழலையை நினையவ லவரே.     1.124.4
    1341    புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
    இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
    முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
    நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.     1.124.5
    1342    1342
    அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
    ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
    சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
    நின்றவன் மிழலையை நினையவ லவரே.     1.124.6
    1343    கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
    சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
    வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
    நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.     1.124.7
    1344    ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
    அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
    கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
    நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.     1.124.8
    1345    அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
    கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
    வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
    நெடியவன் மிழலையை நினையவ லவரே.     1.124.9
    1346    மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
    வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
    துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
    நின்மலன் மிழலையை நினையவ லவரே.     1.124.10
    1347    நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
    வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
    பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
    கற்றுவல் லவருல கினிலடி யவரே.     1.124.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1348    கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
    முலைமலி தருதிரு வுருவம துடையவன்
    சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
    இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.     1.125.1
    1349    படரொளி சடையினன் விடையினன் மதிலவை
    சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
    திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
    இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.     1.125.2
    1350    வரைதிரி தரவர வகடழ லெழவரு
    நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
    திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
    உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.    1.125.3
    1351    துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
    பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
    தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
    மணிமிட றனதடி இணைதொழு மவரே.     1.125.4
    1352    மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
    நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
    இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
    உறைவென உடையவன் எமையுடை யவனே.    1.125.5
    1353    முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
    ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
    எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
    சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.    1.125.6
    1354    வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
    பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
    செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
    அடைதரும் அடியவர் அருவினை யிலரே.    1.125.7
    1355    கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
    உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
    பரனென அடியவர் பணிதரு சிவபுர
    நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.     1.125.8
    1356    அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
    சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
    என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
    ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.    1.125.9
    1357    புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
    வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
    இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
    மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.    1.125.10
    1358    புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
    பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
    எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
    சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.     1.125.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி
    பண் - வியாழக்குறிஞ்சி

    1359    பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்
        பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
        சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
        சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
        சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
        தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
        கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
        காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.     1.126.1
    1360    பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
        பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
        உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே
        றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை
        வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
        வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
        கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
        காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.     1.126.2
    1361    திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
        சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
        டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்
        பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
        பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
        போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
        கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
        காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.     1.126.3
    1362    அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
        தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
        மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
        மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
        முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
        மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
        கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
        காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.     1.126.4
    1363    திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
        சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
        புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
        போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்
        சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
        தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
        கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
        காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.     1.126.5
    1364    செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
        சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
        ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
        கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
        பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
        பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
        கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
        காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.     1.126.6
    1365    பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
        பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
        முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
        மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
        சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
        சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
        கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்
        காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.     1.126.7
    1366    செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
        சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
        இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
        பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்
        டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
        காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
        கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
        காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.     1.126.8
    1367    பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
        பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள
        ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
        னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
        சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
        றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
        கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
        காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.     1.126.9
    1368    தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
        தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
        இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
        கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
        புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
        போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
        கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
        காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.     1.126.10
    1369    கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
        கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
        தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
        தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
        எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்
        டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
        வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
        மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.     1.126.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.127 சீகாழி - திருஏகபாதம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1370    பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
    பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
    பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
    பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.     1.127.1
    1371    விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
    விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
    விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
    விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.     1.127.2
    1372    புண்டரி கத்தவன் மேவிய புகலியே
    புண்டரி கத்தவன் மேவிய புகலியே
    புண்டரி கத்தவன் மேவிய புகலியே
    புண்டரி கத்தவன் மேவிய புகலியே.     1.127.3
    1373    விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
    விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
    விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
    விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.    1.127.4
    1374    சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
    சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
    சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
    சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.    1.127.5
    1375    பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
    பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
    பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
    பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.    1.127.6
    1376    செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
    செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
    செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
    செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.    1.127.7
    1377    பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
    பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
    பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
    பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.    1.127.8
    1378    தசமுக னெறிதர வூன்று சண்பையான்
    தசமுக னெறிதர வூன்று சண்பையான்
    தசமுக னெறிதர வூன்று சண்பையான்
    தசமுக னெறிதர வூன்று சண்பையான்.    1.127.9
    1379    காழி யானய னுள்ளவா காண்பரே
    காழி யானய னுள்ளவா காண்பரே
    காழி யானய னுள்ளவா காண்பரே
    காழி யானய னுள்ளவா காண்பரே.     1.127.10
    1380    கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
    கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
    கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
    கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.    1.127.11
    1381    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.     1.127.12

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.128 திருவெழுகூற்றிருக்கை
    பண் - வியாழக்குறிஞ்சி

    1382    ஓருரு வாயினை மானாங் காரத்
    தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
    ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
    படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
    இருவரோ டொருவ னாகி நின்றனை     05
        ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
    முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
    காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை
    இருநதி யரவமோ டொருமதி சூடினை
    ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்     10
        நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்
    ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
    திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
    ஒருதனு இருகால் வளைய வாங்கி
    முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்     15
        கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை
    ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்
    முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்
    ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
    டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து    20
        நான்மறை யோதி ஐவகை வேள்வி
    அமைத்தா றங்க முதலெழுத் தோதி
    வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
    பிரமபுரம் பேணினை
    அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை     25
        இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
    பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
    பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த
    தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி
    வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை    30
        வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை
    ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
    விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
    முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
    பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை     35
        ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
    ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை
    எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
    ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
    மறை முதல் நான்கும்     40
        மூன்று காலமுந் தோன்ற நின்றனை
    இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
    மறுவிலா மறையோர்
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்    45
        அனைய தன்மையை யாதலின் நின்னை
    நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.129 திருக்கழுமலம்
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1383    சேவுயருந் திண்கொடியான் திருவடியே
        சரணென்று சிறந்தவன்பால்
        நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
        வழிபட்ட நலங்கொள்கோயிற்
        வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
        செங்குமுதம் வாய்கள்காட்டக்
        காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
        கண்காட்டுங் கழுமலமே.     1.129.1
    1384     பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
        மலைச்செல்வி பிரியாமேனி
        அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
        அமரர்தொழ வமருங்கோயில்
        தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
        இறைவனது தன்மைபாடிக்
        கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
        பாட்டயருங் கழுமலமே.     1.129.2
    1385     அலங்கல்மலி வானவருந் தானவரும்
        அலைகடலைக் கடையப்பூதங்
        கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
        கண்டத்தோன் கருதுங்கோயில்
        விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்
        கூன்சலிக்குங் காலத்தானுங்
        கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
        மெய்யர்வாழ் கழுமலமே.     1.129.3
    1386     பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
        சயமெய்தும் பரிசுவெம்மைப்
        போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
        சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
        வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
        சூளிகைமேல் மகப்பாராட்டக்
        காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
        மகிழ்வெய்துங் கழுமலமே.     1.129.4
    1387    ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
        ளொடுவன்னி மத்தமன்னும்
        நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
        செஞ்சடையான் நிகழுங்கோயில்
        ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
        மலையென்ன நிலவிநின்ற
        கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
        சுதைமாடக் கழுமலமே.     1.129.5
    1388     தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து
        தழலணைந்து தவங்கள்செய்த
        பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
        ழமையளித்த பெருமான்கோயில்
        அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
        அதுகுடித்துக் களித்துவாளை
        கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
        அகம்பாயுங் கழுமலமே.     1.129.6
    1389     புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
        நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
        அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
        வாய்நின்றான் அமருங்கோயில்
        தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
        கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
        கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
        புள்ளிரியுங் கழுமலமே.     1.129.7
    1390    அடல்வந்த வானவரை யழித்துலகு
        தெழித்துழலும் அரக்கர்கோமான்
        மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
        பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
        நடவந்த உழவரிது நடவொணா
        வகைபரலாய்த் தென்றுதுன்று
        கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
        கரைகுவிக்குங் கழுமலமே.     1.129.8
    1391     பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
        கேழலுரு வாகிப்புக்கிட்
        டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
        வகைநின்றான் அமருங்கோயில்
        பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
        கொண்டணிந்து பரிசினாலே
        காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
        நின்றேத்துங் கழுமலமே.     1.129.9
    1392     குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
        மெய்த்தவமாய் நின்றுகையில்
        உணல்மருவுஞ் சமணர்களு முணராத
        வகைநின்றான் உறையுங்கோயில்
        மணமருவும் வதுவையொலி விழவினொலி
        யிவையிசைய மண்மேல்தேவர்
        கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
        மேல்படுக்குங் கழுமலமே.     1.129.10
    1393     கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
        ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
        நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
        பந்தன்றான் நயந்துசொன்ன
        சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
        தூமலராள் துணைவராகி
        முற்றுலக மதுவாண்டு முக்கணான்
        அடிசேர முயல்கின்றாரே.     1.129.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.130 திருவையாறு
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1394    புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
        அறிவழிந்திட் டைம்மே஧லுந்தி
        அலமந்த போதாக அஞ்சேலென்
        றருள்செய்வான் அமருங்கோயில்
        வலம்வந்த மடவார்கள் நடமாட
        முழவதிர மழையென்றஞ்சிச்
        சிலமந்தி யலமந்து மரமேறி
        முகில்பார்க்குந் திருவையாறே.     1.130.1
    1395     விடலேறு படநாகம் அரைக்கசைத்து
        வெற்பரையன் பாவையோடும்
        அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
        பலியென்னு மடிகள்கோயில்
        கடலேறித் திரைமோதிக் காவிரியி
        னுடன்வந்து கங்குல்வைகித்
        திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
        கீன்றலைக்குந் திருவையாறே.     1.130.2
    1396     கங்காளர் கயிலாய மலையாளர்
        கானப்பே ராளர்மங்கை
        பங்காளர் திரிசூலப் படையாளர்
        விடையாளர் பயிலுங்கோயில்
        கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
        இறகுலர்த்திக் கூதல்நீங்கி
        செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
        இரைதேருந் திருவையாறே.     1.130.3
    1397     ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
        பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
        தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
        தழலுருவர் தங்குங்கோயில்
        மான்பாய வயலருகே மரமேறி
        மந்திபாய் மடுக்கள்தோறுந்
        தேன்பாய மீன்பாய செழுங்கமல
        மொட்டலருந் திருவையாறே.    1.130.4
    1398    நீரோடு கூவிளமும் நிலாமதியும்
        வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
        தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த
        தத்துவனார் தங்குங்கோயில்
        காரோடி விசும்பளந்து கடிநாறும்
        பொழிலணைந்த கமழ்தார்வீதித்
        தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
        நடம்பயிலுந் திருவையாறே.    1.130.5
    1399     வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
        நெறிகாட்டும் விகிர்தனாகிப்
        பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
        புண்ணியனார் நண்ணுங்கோயில்
        காந்தார மிசையமைத்துக் காரிகையார்
        பண்பாடக் கவினார்வீதித்
        தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
        நடமாடுந் திருவையாறே.     1.130.6
    1400     நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
        புரமூன்றும் நீள்வாயம்பு
        சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
        மலையாளி சேருங்கோயில்
        குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
        மலர்பாய்ந்து வாசமல்கு
        தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
        கண்வளருந் திருவையாறே.     1.130.7
    1401     அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
        அரக்கர்கோன் தலைகள்பத்தும்
        மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்
        கருள்புரிந்த மைந்தர்கோயில்
        இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
        இளமேதி இரிந்தங்கோடிச்
        செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
        வயல்படியுந் திருவையாறே.     1.130.8
    1402     மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
        மிகவகழ்ந்து மிக்குநாடும்
        மாலோடு நான்முகனு மறியாத
        வகைநின்றான் மன்னுங்கோயில்
        கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
        குவிமுலையார் முகத்தினின்று
        சேலோடச் சிலையாடச் சேயிழையார்
        நடமாடுந் திருவையாறே.     1.130.9
    1403     குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
        சாக்கியருங் குணமொன்றில்லா
        மிண்டாடு மிண்டருரை கேளாதே
        யாளாமின் மேவித்தொண்டீர்
        எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
        இறைவரினி தமருங்கோயில்
        செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
        வந்தலைக்குந் திருவையாறே.     1.130.10
    1404     அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
        பெருமானை அந்தண்காழி
        மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
        சம்பந்தன் மருவுபாடல்
        இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
        ஈசனடி யேத்துவார்கள்
        தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
        றெய்துவார் தாழாதன்றே.     1.130.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.131 திருமுதுகுன்றம்
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1405    மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
        எண்குணங்களும் விரும்பும்நால்வே
        தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
        பளிங்கேபோல் அரிவைபாகம்
        ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
        கருதுமூர் உலவுதெண்ணீர்
        முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
        ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.     1.131.1
    1406     வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
        வெங்கானில் விசயன்மேவு
        போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
        புரிந்தளித்த புராணர்கோயில்
        காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
        மலருதிர்த்துக் கயமுயங்கி
        மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
        புகுந்துலவு முதுகுன்றமே.     1.131.2
    1407     தக்கனது பெருவேள்வி சந்திரனிந்
        திரனெச்சன் அருக்கன்அங்கி
        மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
        தண்டித்த விமலர்கோயில்
        கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
        குயர்தெங்கின் குவைகொள்சோலை
        முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
        நீள்வயல்சூழ் முதுகுன்றமே.    1.131.3
    1408    வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
        விறலழிந்து விண்ணுளோர்கள்
        செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
        தேவர்களே தேரதாக
        மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
        அரியெரிகால் வாளியாக
        மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
        முதல்வனிடம் முதுகுன்றமே.     1.131.4
    1409     இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
        ஒருபாலா யொருபாலெள்கா
        துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்
        பிடமென்பர் உம்பரோங்கு
        கழைமேவு மடமந்தி மழைகண்டு
        மகவினொடும் புகவொண்கல்லின்
        முழைமேவு மால்யானை இரைதேரும்
        வளர்சாரல் முதுகுன்றமே.     1.131.5
    1410    நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
        நாதனிடம் நன்முத்தாறு
        வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
        கரையருகு மறியமோதி
        தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
        நீர்குவளை சாயப்பாய்ந்து
        முகையார்செந் தாமரைகள் முகம்மலர
        வயல்தழுவு முதுகுன்றமே.     1.131.6
    1411     அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
        இருந்தருளி யமரர்வேண்ட
        நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
        ஒன்றறுத்த நிமலர்கோயில்
        திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
        கெழிற்குறவர் சிறுமிமார்கள்
        முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
        முத்துலைப்பெய் முதுகுன்றமே.     1.131.7
    1411    கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
        இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
        பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
        மலையைநிலை பெயர்த்தஞான்று
        மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
        றூன்றிமறை பாடவாங்கே
        முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
        வாய்ந்தபதி முதுகுன்றமே.     1.131.8
    1413     பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
        பூந்துழாய் புனைந்தமாலும்
        ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
        துறநாடி யுண்மைகாணாத்
        தேவாருந் திருவுருவன் சேருமலை
        செழுநிலத்தை மூடவந்த
        மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
        மேலுயர்ந்த முதுகுன்றமே.     1.131.9
    1414     மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்
        டுடையாரும் விரவலாகா
        ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
        உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
        ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
        முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
        மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
        தவம்புரியும் முதுகுன்றமே.     1.131.10
    1415     முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
        முதுகுன்றத் திறையைமூவாப்
        பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
        கழுமலமே பதியாக்கொண்டு
        தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
        சம்பந்தன் சமைத்தபாடல்
        வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
        நீடுலகம் ஆள்வர்தாமே.     1.131.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.132 திருவீழிமிழலை
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1416    ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
        கீரிருவர்க் கிரங்கிநின்று
        நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
        நெறியளித்தோன் நின்றகோயில்
        பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும்
        பயின்றோது மோசைகேட்டு
        வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
        பொருள்சொல்லும் மிழலையாமே.    1.132.1
    1417     பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
        தாகப்புத் தேளிர்கூடி
        மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
        கண்டத்தோன் மன்னுங்கோயில்
        செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
        மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
        வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
        வீற்றிருக்கும் மிழலையாமே.     1.132.2
    1418     எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
        புரமூன்றும் எழிற்கண்நாடி
        உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
        சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
        கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
        முகங்காட்டக் குதித்துநீர்மேல்
        விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
        வாய்காட்டும் மிழலையாமே.     1.132.3
    1419     உரைசேரும் எண்பத்து நான்குநூ
        றாயிரமாம் யோனிபேதம்
        நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
        அங்கங்கே நின்றான்கோயில்
        வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
        நடமாட வண்டுபாட
        விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
        கையேற்கும் மிழலையாமே.     1.132.4
    1420     காணுமா றரியபெரு மானாகிக்
        காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
        பேணுமூன் றுருவாகிப் பேருலகம்
        படைத்தளிக்கும் பெருமான்கோயில்
        தாணுவாய் நின்றபர தத்துவனை
        உத்தமனை இறைஞ்சீரென்று
        வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
        போலோங்கு மிழலையாமே.     1.132.5
    1421     அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
        றைம்புலனும் அடக்கிஞானப்
        புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
        துள்ளிருக்கும் புராணர்கோயில்
        தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
        கந்திகழச் சலசத்தீயுள்
        மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
        மணஞ்செய்யும் மிழலையாமே.     1.132.6
    1422     ஆறாடு சடைமுடியன் அனலாடு
        மலர்க்கையன் இமயப்பாவை
        கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
        குணமுடையோன் குளிருங்கோயில்
        சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
        மதுவுண்டு சிவந்தவண்டு
        வேறாய உருவாகிச் செவ்வழிநற்
        பண்பாடும் மிழலையாமே.     1.132.7
    1423     கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்
        கைமறித்துக் கயிலையென்னும்
        பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
        நெரித்தவிரற் புனிதர்கோயில்
        தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
        சக்கரத்தை வேண்டியீண்டு
        விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
        விமானஞ்சேர் மிழலையாமே.     1.132.8
    1424     செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
        ஏனமொடு அன்னமாகி
        அந்தமடி காணாதே அவரேத்த
        வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
        புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
        நெய்சமிதை கையிற்கொண்டு
        வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
        சேருமூர் மிழலையாமே.     1.132.9
    1425     எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
        சாக்கியரும் என்றுந்தன்னை
        நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
        கருள்புரியும் நாதன்கோயில்
        பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
        பாராட்டும் ஓசைகேட்டு
        விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
        டும்மிழியும் மிழலையாமே.     1.132.10
    1426     மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
        மிழலையான் விரையார்பாதஞ்
        சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
        செழுமறைகள் பயிலும்நாவன்
        பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
        பரிந்துரைத்த பத்துமேத்தி
        இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
        ஈசனெனும் இயல்பினோரே.     1.132.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.133 திருவேகம்பம்
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1427    வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
    கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
    அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
    எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.     1.133.1
    1428     வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
    சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
    குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
    திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.    1.133.2
    1429     வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
    பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
    விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
    திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.     1.133.3
    1430     தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
    காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
    மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
    ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.    1.133.4
    1431     தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
    பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
    வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
    சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.    1.133.5
    1432     சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
    தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
    மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
    ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.     1.133.6
        (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    1.133.7
    1433     வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
    நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
    தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
    சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.     1.133.8
    1434     பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
    அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
    கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
    மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.    1.133.9
    1435     குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
    மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
    விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
    கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.    1.133.10
    1436     ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
    காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
    பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
    சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.     1.133.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம்
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1437    கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
    நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
    திருத்த முடையார் திருப்பறி யலூரில்
    விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.    1.134.1
    1438     மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
    பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
    திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
    விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.     1.134.2
    1439     குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
    விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
    தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
    மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.     1.134.3
    1440     பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
    செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
    சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
    விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.     1.134.4
    1441    கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
    புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
    தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
    விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.     1.134.5
    1442     அரவுற்ற நாணா அனலம்ப தாகச்
    செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
    தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
    வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.     1.134.6
    1443     நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
    அரையா ரரவம் அழகா வசைத்தான்
    திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
    விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.     1.134.7
    1444     வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
    இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
    திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
    விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.     1.134.8
    1445     வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
    துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
    இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
    விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.     1.134.9
    1446     சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
    டடையன் பிலாதான் அடியார் பெருமான்
    உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
    விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.     1.134.10
    1447     நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
    வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
    பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
    கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.     1.134.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.135 திருப்பராய்த்துறை
    பண் - மேகராகக்குறிஞ்சி


    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை.
    1448    நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
    கூறுசேர்வதொர் கோலமாய்ப்
    பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
    ஆறுசேர்சடை அண்ணலே.     1.135.1
    1449     கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
    வந்தபூம்புனல் வைத்தவர்
    பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
    அந்தமில்ல அடிகளே.     1.135.2
    1450    வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
    தோதநின்ற ஒருவனார்
    பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
    ஆதியாய அடிகளே.     1.135.3
    1451    தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
    நூலுந்தாமணி மார்பினர்
    பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
    ஆலநீழல் அடிகளே.     1.135.4
    1452    விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
    இரவில்நின்றெரி யாடுவர்
    பரவினாரவர் வேதம்பராய்த்துறை
    அரவமார்த்த அடிகளே.     1.135.5
    1453    மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
    கறைகொள்கண்ட முடையவர்
    பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
    அறையநின்ற அடிகளே.     1.135.6
    1454    விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
    சடையிற்கங்கை தரித்தவர்
    படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
    அடையநின்ற அடிகளே.    1.135.7
    1455    தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
    நெருக்கினார்விர லொன்றினால்
    பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
    அருக்கன்றன்னை அடிகளே.     1.135.8
    1456    நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
    தோற்றமும் மறியாதவர்
    பாற்றினார்வினை யானபராய்த்துறை
    ஆற்றல்மிக்க அடிகளே.    1.135.9
    1457    திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
    உருவிலாவுரை கொள்ளேலும்
    பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
    மருவினான்றனை வாழ்த்துமே.    1.135.10
    1458    செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
    செல்வர்மேற் சிதையாதன
    செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
    செல்வமாமிவை செப்பவே.     1.135.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    1.136 திருத்தருமபுரம்
    பண் - யாழ்மூரி

    1459    மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
        நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
        பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
        அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
        வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
        இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
        தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
        எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.     1.136.1
    1460    பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
        பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
        மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
        வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
        சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
        தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
        தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
        றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.     1.136.2
    1461    விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
        டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
        கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
        கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
        பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
        வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
        தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
        கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.     1.136.3
    1462    வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
        வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
        காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
        கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
        பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
        படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
        தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
        தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.     1.136.4
    1463    நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
        கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
        பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
        பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
        ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
        வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
        தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
        கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.     1.136.5
    1464    கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
        குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
        மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
        வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
        யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
        துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
        தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
        புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.     1.136.6
    1465    தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
        திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
        தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
        தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
        காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
        கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
        தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
        வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.     1.136.7
    1466    தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
        குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
        கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
        கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
        பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
        கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
        தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
        கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.     1.136.8
    1467    வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
        வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
        கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
        குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
        ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
        மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
        தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
        தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.     1.136.9
    1468    புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
        மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
        பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
        நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
        முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
        புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
        தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
        தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.     1.136.10
    1469    பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
        பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
        தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
        துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
        பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
        யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
        இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
        உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.     1.136.11

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.