LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

காடு

எண்சீர் விருத்தம்

'நாளைநடப் பதைமனிதன் அறியான்' என்று
    நல்லகவி விக்தர்யுகோ சொன்னான். திம்மன்
    காளைஇரண் டிழுக்கின்ற வண்டி ஏறிக்
    கதைஇழுக்க மனைவியைக்கை யோடி ழுத்துத்
    தேளையொத்த சுதரிசனின் பேச்சை நம்பிச்
    செஞ்சிக்காட் டின்வழியே செல்லு கின்றான்.
    வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும்
    வௌிக்காட்ட முடியவில்லை தன்க ருத்தை!

    குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு
    கோணாமல் மாட்டுவண்டி யோடு சென்றான்.
    முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம்;
    முன்நிலவும் அடங்கிற்று. முத்துச் சோளக்
    கதிர்அடிக்கும் நரிகள்அடங் கினநு ழைக்குள்.
    காரிருளும் ஆழ்ந்ததுபோய் அமைதி தன்னில்.
    உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே
    உணர்ந்தார்கள்; பின்அதனை அருகில் கேட்டார்.

    மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்;
    விரைவாகச் சிலர்வருவ தாய் உணர்ந்தார்.
    சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்;
    தோள்நோக்கிக் கத்திகளின் ஒளிகண் டார்கள்;
    எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை.
    எலிக்கண்போல் எரிந்ததுவண் டியின் விளக்கும்;
    இதோகுதிரை என்றார்கள் வந்த வர்கள்;
    எதிர்த்தோன்றும் மின்னல்கள் வாளின் வீச்சு!

    பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே
    பதறினார் இருந்தவர்கள்! வண்டிக் காரன்
    இறங்கி'எமை ஒன்றும்செய் யாதீர்' என்றான்.
    'எங்கிருந்து வருகின்றீர்?' என்றார் வந்தோர்.
    'பிறந்துவளர்ந் திட்டஊர் வளவ னூர்தான்;
    பெயர்எனக்குச் சீனன்'என்றான் வண்டிக் காரன்.
    'உறங்குபவர் யார்உள்ளே?' என்று கேட்டார்.
    உளறலொடு திம்மன்'நான் வளவ னூர்தான்'

    என்றுரைத்தான். 'இன்னும்யார்?' என்று கேட்டார்.
    'என்மனைவி' என்றுரைத்தான் திம்மன். கேட்ட
    கன்னலைப்போல் மொழியுடையாள் துடிது டித்தாள்!
    'காரியந்தான் என்ன' வென்றார். நடுங்குந் திம்மன்
    தன்கதையைக் கூறினான்; கேட்டார். அன்னோர்
    சாற்றுகின்றார்: 'திம்மனே மோசம் போனாய்;
    பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப்
    பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோ கின்றாய்;

    தமிழ்மொழியை இகழ்கின்றான், தமிழர் தம்மைத்
    தாழ்ந்தவர்என் றிகழ்கின்றான்; தமிழப் பெண்டிர்
    தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத்
    தான்உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும்
    சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச்
    சொன்னாலும் கேட்பதில்லை. அந்தோ அந்தோ!
    அமுதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி
    அனலுக்கா செல்கின்றீர் வண்டி ஏறி?

    நல்லதொரு தொண்டுசெய்வாய்; செஞ்சி யாளும்
    நாய்க்கூட்டம் ஒழிந்துபட எம்பால் சேர்ந்து
    வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல
    வீணரல்லயாம்; தமிழை இகழ்ந்தோர் வாழ்வின்
    சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே!
    சலிப்பதிலே தோன்றுவதே எம்சாக் காடே!
    இல்லயெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்;
    என்ன'என்றார். திம்மன்,'விடை தருவீர்' என்றான்.

    'போகின்றாய்?போ! பிறன்பால் வால்கு ழைக்கப்
    போ!அடிமைக் குழிதன்னில் வீழ்ந்தி டப்போ!
    போ!கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம்
    போக்கப்போ! ஒன்றுசொல்வோம் அதையே னுங்கேள்.
    சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத்
    தமிழர்மறம்! தமிழர்நெறி!'என்றார். நங்கை
    'போகின்றேன் என்னிடத்தில் கத்தி ஒன்று
    போடுங்கள்' என்றுரைத்தாள். ஆஆ என்றார்!

    ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி!
    அவற்றில்ஒரு கத்தியினை வாங்கிக் கொண்டாள்.
    'தந்தோம்எம் தங்கச்சி வெல்க! வெல்க!
    தமிழச்சி உன்கத்தி வெல்க!' என்றார்.
    வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை.
    மாட்டுவண்டி சென்றதுசெஞ் சியினை நோக்கி!
    பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப்
    பத்துக்கல் லுக்கப்பால் திம்மன் கண்டான்!

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.