35. காந்தி அஞ்சலி
சமனி லாத இந்த நாட்டின் ஞான வாழ்வின் சக்தியைச் சரிச மான மாக மற்ற உயிரை எண்ணும் சாந்தியை அமர னாகி நம்மைக் காக்கும் அண்ணல் காந்தி ஐயனை அஞ்ச லிக்கும் யாவ ருக்கும் சஞ்ச லங்கள் தீருமே.
36. மகாத்மா
இத்தனைநாள் உலகமெல்லாம் இருந்தறிந்த பெரியவர்கள் இசைத்த ஞானம் அத்தனையும் ஓருருவாய்த் திரண்டதெனக் கலியுகத்தே அவத ரித்தோன் சத்தியமே மந்திரமாம் சாந்தமொன்றே தந்திரமாம் சமயம் தந்த உத்தமனாம் காந்திமுனி உச்சரித்த சாத்விகத்தை உறுதி கொள்வோம்.
37. கண்கண்ட தெய்வம்
காந்திக்கு நிகர்வேறும் உண்டோ--மக்கள் கண்கண்ட ஒருதெய்வம் அன்றோ? சாந்திக்கும் புகழ்தந்த சாந்தன்--உலகில் சன்மார்க்க வாழ்க்கைக்கு வேந்தன். மரணத்தை இனிதாக்கும் ஐயன்--என்றும் மனதுள்ளும் சினமற்ற மெய்யன் இரணத்தை எய்யாத வீரன்--காந்தி இணையற்ற மெய்ஞ்ஞான தீரன்.
உயிருள்ள உடலங்கள் எல்லாம்--ஈசன் உறைவென்று பணிகின்ற நல்லோன் துயருற்ற எவருக்கும் துணையாம்--காந்தி தொடர்பின்றி எதுவாழ்வின் புணையாம்.
வையத்தை வாழ்விக்க வந்தான்--மக்கள் வானத்தின் சக்திபெறத் தந்தான் தெய்வத்தின் பெயர்தியாக ராசன்--என்று தெரிவிக்க உயிர்தந்த நேசன்.
பகவானைத் தரிசிக்க என்று--நாமும் பலவான ஊர்தேடிச் சென்று மிகவாக வாடுதல் வேண்டாம்--காந்தி மெய்வாழ்வு பாடுதல் பூண்டால்.
தானங்கள் வெவ்வேறு செய்து--நல்ல தவமென்றே ஆகுதி பெய்து மோனங்கள் தருகின்ற யாவும்--காந்தி முறைதந்த வழிவாழ மேவும்.
38. கடவுளைக் காட்டும் காந்தி
ஒப்புடன் உண்மைக் காக உயிர்தர வேண்டும் என்றே எப்படி விரும்பி னாரோ அப்படி இறந்தார் காந்தி. இப்படி உயிரை ஈந்தோர் உலகினில் எவரும் இல்லை தப்புற நினைக்க வேண்டாம் தர்க்கமும் தருமம் அல்ல.
அற்புதப் பிறவி காந்தி அற்புத மரண முற்றார்; கற்பனை கடந்த சாந்தன் கடவுளிற் கலந்து கொண்டார்; பற்பல நினைந்து பேசிப் புலம்புதல் பயித்தி யந்தான்! நற்குணச் சீலன் காந்தி சொற்படி நடப்போம் வாரீர்.
உடலோடு வந்து போகும் உருவினில் தெரிவ தன்றிக் கடவுளை உலகில் யாரும் நேருறக் காண்ப தில்லை; அடைவரும் கருணை அந்தக் கடவுளின் அன்பு தன்னை நடைமுறை வாழ்விற் செய்த காந்தியே நமது தெய்வம்!
எத்தவம் முயலு வோர்க்கும் இருந்திட வேண்டு மென்னும் சத்தியத் தூய வாழ்வின் சற்குணப் பாறை போன்று நித்தமும் நமக்கு முன்னால் நின்றுகொண் டறிவு சொல்லும் உத்தமன் காந்தி எம்மான் உடலுக்கா உளைந்து போவோம்?
நோன்புடன் மறைந்த காந்தி நுண்ணிய உடலின் சாரம் சாம்பலில் கரைந்து இன்று நதிகளிற் கலந்து சத்தாய்த் தேம்பிடும் உலகம் தேறத் திரைகடல் மூலம் சென்று ஏம்பலைப் போக்கி ஞான எழுச்சியைக் கொடுக்கும் எங்கும்.
சூரியன் இறப்பான்; காணும் சந்திரன் சூன்ய மாவான்; பாரொடு விண்ணில் மின்னப் பார்க்கிற யாவும் மாயும். தேரிய அறிவு கூறும் தெய்விக மெய்ம்மை காட்ட நேரிய காந்தி ஞானம் நிரந்தரம் நிலைத்து வாழும்.
39. தூய்மை ஜோதி
நீறு பூசு வோர்களும் நெற்றி நாமப் பேர்களும் வேறு பொட்டு சந்தனம் வேண்டு கின்ற மைந்தரும் கூறும் சின்னம் இன்றியும் கொள்கை யோடு நின்றிடும் மாறு கொள்ளும் யாவரும் மகிழும் காந்தி தேவராம்.
அமிழ்த மொத்தே அறிவினில் அழிவி லாத நெறிதரும் தமிழ றிந்த சத்தியம் காந்தி வாழ்ந்த தத்துவம் தமைய றிந்த முனிவரும் தம்ம டங்கும் அனைவரும் அமைதி தேடும் சாந்தியே ஐயன் எங்கள் காந்தியாம்.
மூச்ச டக்கும் யோகமும் முறைபு ரிந்த யாகமும் பேச்ச டக்கும் மோனமும் பேசும் தர்க்க ஞானமும், கூச்ச மற்ற பக்தியும் குணந லத்தின் சக்தியும் தேர்ச்சி கொள்ளும் கருணையே காந்தி வாழ்ந்த அருணெறி.
வீரம் பேசும் வெறியரும் வெற்றி நாடும் குறியரும் ஈரம் அற்ற நெஞ்சரும் இழிவு கற்ற வஞ்சரும் ஓரம் சொல்லு வோர்களும் உண்மை அஞ்சும் பேர்களும் தூரம் ஓடக் காய்ந்திடும் தூய்மை ஜோதி காந்தியாம்!
40. இணையிலர் காந்தி
பிறப்பிலும் பெரியவர் பெம்மான் காந்தி இறப்பிலும் இணையிலர் எம்மான் காந்தி துறப்பிலும் நிகரிலர் தூயோன் காந்தி மறப்பதும் நமக்கது மாபெரும் பாவம்.
அறிவினில் ஆழியன் அரும்பெரும் காந்தி நிறைகுண நலங்களில் நேரிலன் காந்தி குறிசொலும் அனுபவக் குன்றாம் காந்தி நெறிதரக் காந்தியின் நேரெவர் உலகில்!
மேழியின் சிறப்பினை மீட்டவர் காந்தி ஏழையின் பெருந்துணை எமதரும் காந்தி கோழையும் திடம்பெறக் கொடுத்தவர் காந்தி வாழிய காந்தியின் வழிகொடு வாழ்வோம்.
கள்ளினை ஒழித்தவர் கடனறி காந்தி கதருடை தந்தவர் கணக்கறி காந்தி வெள்ளையர் தாமே விருப்புடன் ஆட்சி விட்டிடச் செய்தது காந்தியின் விநயம்.
அன்பினை அறிந்தவன் அருள்தரும் காந்தி துன்பினை மறந்திடத் துணைதரும் எவர்க்கும் இன்பினை அல்ல(து) எண்ணாப் பெரியோன் செம்பொருள் உரைத்தவர் யாரினும் சிறந்தோன்.
சோர்ந்துழல் ஏழைகள் சுகம்பெற வேண்டின் சோம்பிடும் செல்வம் சூதுகள் நீங்க மாந்தருக் குள்ளே மதவெறி போகக் காந்தியை மறந்தால் கதிநமக் கேது?
41. அன்பின் உருவம்
அன்பின் உருவம் காந்திமகான் அருளின் சிகரம் மாந்தருக்கு தென்பின் நிலையம் திருவுள்ளம் தெளிவாம் அறிவின் பெருவெள்ளம் துன்பம் நேர்ந்திட வருமாகில் துயரம் தீர்ந்திடத் திருநாமம் முன்பிவ் வுலகம் கண்டறியா முற்றிலும் அதிசயத் தொண்டர்பிரான். ..(அன்)
இந்திய நாட்டின் அருள்ஞானம் இதுவெனக் காட்டிய பெருமானாம் தந்தையும் தாயாம் தனித்தலைவன் தாரணி நலமுற ஜனித்தஇவன் சிந்தையும் சொல்லும் செயல்யாவும் சீலமும் சத்திய இயல்பாகும் விந்தையின் விந்தை காந்தியரின் விடுதலை நாட்டிய சாந்தவழி! .. (அன்)
புண்ணியத் திருநாள் இதிற்கூடி புனிதன் காந்தியின் துதிபாடின் எண்ணிய காரியம் ஜயமாகும் ஏமனைக் காணினும் பயம்ஏது? மண்ணிடை மதவெறி மடிந்துவிடும் மாந்தருள் சமரசம் படிந்துவிடும் கண்ணியம் மிகுந்திட வாழ்ந்திடுவோம் கல்வியும் கலைகளும் சூழ்ந்திடவே. .. (அன்)
வேறு
கொல்லுகின்ற தில்லையென்ற நல்லோர்கள்பேர் குவலயத்தில் வாழுமென்று சங்கூதுவோம்! வெல்லுகின்ற போதுமாசை விட்டார்களே வீரர்தீரர் சூரரென்று சங்கூதுவோம்!
சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம் சாத்திரங்கள் முடிவிதென்று சங்கூதுவோம் காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே கால்நடக்கும் வேதமென்று சங்கூதுவோம்.
வேறு
நேய மற்ற மதவெ றிக்கு நிலைய மான தேசமாம் பேயும் கூட நடுந டுங்கிப் பேத ளித்துக் கூசுமாம் நாய்ந ரிக்கும் அச்ச மூட்டும் நவக ளிக்குள் காந்திதான் போய்ந டத்தும் யாத்தி ரைக்குள் புனித அன்பு சேர்ந்ததாம்.
தெய்வம் என்று உலகம் நித்தம் தேடு கின்ற ஒன்றுதான் வைய கத்தில் 'அன்பு' என்ற வார்த்தை யாக நின்றதே! ஐயன் எங்கள் காந்தி வாழ்க்கை அற்பு தத்தை நாடினால் மெய்யு ணர்ந்தே அன்பு சொல்லும் மேன்மை யாவும் கூடுவோம்.
42. எவர் சாதித்தார்?
கருணையின் பெருமையைப் போதித்தார் காந்தியைப் போல்எவர் சாதித்தார்? மரணமும் அவரிடம் அன்புபெறும் மற்றது எதுதான் துன்பமுறும்?
சத்திய நெறிதரும் சாத்திரமாம் சாத்விக வாழ்க்கையின் சூத்திரமாம் உத்தமன் காந்தியை மறந்துவிடின் உண்மைச் சுதந்திரம் மறைந்துவிடும்.
புலையும் கொலையும் புரியாமல் புண்ணிய எண்ணம் பிரியாமல் உலகம் இதுவரை கண்டறியா உயிர்வழி விடுதலை கொண்டுவந்தான்.
அணுகுண் டாலும் துன்ப முறா ஆன்ம பலத்துடன் அன்புதரும் இணைகண் டறியாச் சக்திதனை எம்மிடைப் புகுத்திய சித்தனிவன்.
இந்திய நாட்டின் மெய்யறிவை இதுவெனக் காட்டிடும் ஐயனிவன் நிந்தையும் புகழ்ச்சியும் கலைக்காத நிம்மதிக் கேஅவன் இலக்காவான்.
யுத்தம் வருமோ எனஓடுங்கி ஒவ்வொரு நாடும் மனநடுங்கிச் சித்தம் திகைக்கிற இப்போதில் சிறப்புறும் காந்தியின் மெய்ப்போதம்.
அன்னிய அறிஞர்கள் அனைவருமே ஆசையின் காந்தியை நினைவுறநீ என்ன பயித்தியம் உன்றனுக்கே ஏன்பிற நினைப்புகள் இந்தியனே!
சாந்தியை அறிந்தது நம்நாடு! சத்தியம் காத்தது நம்நாடு! காந்தியைத் தந்தது நம்நாடு! கருணையின் வழியே நம்நாடு!
43. உத்தமன் காந்தி
உள்ளம் உருகுது கள்ளம் கருகுது உத்தமன் காந்தியை நினைத்துவிட்டால் வெள்ளம் பெருகிடக் கண்ணீர் வருகுது வேர்க்குது இன்பம் தேக்குதடா!
சித்தம் குளிர்ந்துள பித்தம் தெளிந்திடும் சீரியன் காந்தியின் பேர்சொன்னால் புத்தம் புதியன முற்றும் இனியன பொங்கிடும் உணர்ச்சிகள் எங்கிருந்தோ!
கிளர்ச்சிகொண் டான்மா பளிச்சென மின்னுது கிழவன் காந்தியின் பழமைசொன்னால்! தளர்ச்சிகள் நீங்கிய வளர்ச்சியில் ஓங்கிய தாட்டிகம் உடலில் கூட்டுதடா!
சோற்றையும் வெறுக்குது காற்றையும் மறக்குது சுத்தனக் காந்தியின் சக்திசொன்னால்! கூற்றையும் வெருட்டிடும் ஆற்றலைத் திரட்டிடக் கூடுத டாமனம் தேடுதடா!
தூக்கமும் கலைந்தது ஏக்கமும் குலைந்தது துன்பக் கனவும் தொலைந்ததடா! வாழ்க்கையும் திருந்திடா நோக்கமும் விரிந்தது வள்ளலக் காந்தியின் நினைப்பாலே!
வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும் வாய்மையன் காந்தியின் தூய்மை சொன்னால் அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியிலை ஆண்மையும் அன்பும் அருளுமடா!
ஜீவர்கள் உலகுள யாவரும் சமமெனச் செய்கையில் காட்டிய காந்தியடா! பாவமும் பழிகளும் தீவினை வழிகளும் பதுங்கும டாகண்டுள் ஒடுங்குமடா!
எழுபதும் ஐந்தும் குழகுழ வயசினில் என்னே காந்தியின் இளமையடா! முழுவதும் அதிசயப் பழுதறு வாழ்க்கையின் முத்தன டாபெரும் சித்தனடா!
காந்தியின் தவக்கனல் சூழ்ந்ததிவ் வுலகினைக் காம தகனம்போல் எரிக்குதுபார்! தீய்ந்தன சூதுகள் ஓய்ந்தன வாதுகள் திக்குத் திசையெலாம் திகைத்திடவே!
ஏழைகள் எளியரின் தோழன்அக் காந்தியை எப்படிப் புகழினும் போதாதே! வாழிய அவன்பெயர் ஊழியின் காலமும் வையகம் முழுவதும் வாழ்ந்திடவே!
44. வையகம் வாழ்த்தும் காந்தி
அடிமையின் அச்சம் போக்கி அச்சத்தை அடிமை யாக்கிக் குடிகளைக் கோன்க ளாக்கிக் கோன்களைக் குடிக ளாக்கி மடமையை மதியாய் மாற்றி மதிக்கும்ஓர் புதுமை கூட்டித் திடமுறச் செய்த காந்தி திருக்கதை மறக்க லாமோ?
மேழியைச் செங்கோ லாக்கிச் செங்கோலை மேழி யாக்கி ஏழையின் துயரம் நீக்கித் துயரத்தை ஏழை யாக்கிக் கோழையை வீர னாக்கி வீரத்தின் கொலைகள் நீக்கும் வாழிய காந்தி நாமம் வையகம் உளவ ரைக்கும்.
தூய்மையின் துணிவுண் டாக்கித் துணிவினைத் தூய்மை யாக்கி வாய்மையின் வறுமை போக்கி வறுமையும் வாய்மை காக்கத் தீமையைத் தீமை யாலே தீர்த்திட முடியா தென்று தாய்மையே செய்த காந்தி தவம்செய்த தவமாம் அன்றோ?
உள்ளத்தைக் கோயி லாக்கி உண்மையைத் தெய்வ மாக்கிக் கள்ளத்தைக் கடிந்து நீக்கிக் கருணையின் காட்சி கண்டான் எள்ளத்த ஆசை யின்றி 'என்கடன் பணியே' என்ற தெள்ளுற்ற தியாகி காந்தி கண்கண்ட தெய்வ மன்றோ?
அன்பினைத் தகழி யாக்கி அறிவினை நெய்யாய் வார்த்து வன்புலக் காம மாதி வர்க்கத்தைத் திரியாய் வைத்துச் செம்பொருள் காணும் தூய்மைச் செழுங்கணல் பற்றச் செய்தே இன்பருள் கருணை ஜோதி ஏந்திடும் காந்தி நாமம்.
வஞ்சமும் பகையும் போரும் வையகம் முழுதும் ஓங்கிப் பஞ்சமும் பசியும் நோயும் படுத்திடும் கொடுமை நீங்கத் தஞ்சமொன் றுண்டோ காந்தி தந்துள வழியை விட்டால்? அஞ்சலி செய்வோம் காந்தி அண்ணலின் அருளைப் போற்றி.
காந்தியை மறந்து விட்டால் கதிநமக் கில்லை கண்டீர் சாந்தியை இழப்போம் மக்கள் சமரச வாழ்வு குன்றும் ; சேர்ந்திடும் தீமை யாவும் ; திரும்பவும் அடிமை வாழ்வு நேர்ந்திடல் ஆகும் உண்மை நித்தமும் நினைக்க வேண்டும்.
45. அற்புதன் காந்தி
ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடி, தெய்வம் தொழுவோம் அனைவரும் கூடி. பயனுற காந்தியின் புதுநெறி பயின்று பாரத நாட்டினர் பலம்பெற வேண்டும். .(ஜய)
காந்தியின் வாழ்வே கடவுளைக் காட்டும் கல்விகள் தேடிடும் கருணையை ஊட்டும் சாந்தியைப் புகட்டிடும் சாத்திரம் அதுவே சத்திய நெறிதரும் சூத்திரம் அதுவே. .. (ஜய)
இந்திய மக்களின் சுதந்திரக் கீதம் எம்மான் காந்தியின் இணையறு போதம் சிந்தனை செய்வார் வந்தனை புரியும் தெய்விக மந்திரம் அதுவெனத் தெரியும். ..(ஜய)
இல்லறம் துறவறம் இரண்டிலும் சிறந்தே இந்திய விடுதலைக் கருந்தவம் புரிந்து சொல்லறம் முழுவதும் சுதந்திர தேவி தூமலர்ப் பதங்களில் தொழுதனன் தூவி. .. (ஜய)
நால்வகை யோகமும் நடத்திய ஞானி நாட்டின் பெருமையைக் காத்தநல் மானி தோல்வியும் வெற்றியும் தொடமுடி யாது துலைபோல் சமரச நிலபிரி யாத .. (ஜய)
அரசியல் சூதுகள் அனைத்தையும் அகற்றி அன்பின் வழிவரும் ஆற்றலைப் புகுத்தி உரைசெயல் அரிதெனும் உறுதியைக் கொடுத்தான் உலகினில் புதிதெனும் அறப்போர் தொடுத்தான். . (ஜய)
மண்டலம் முழுவதும் சண்டைகள் மலிய மாந்தர்கள் பெருந்துயர் சேர்ந்துளம் நலிய கண்டுள பின்னரும் காந்தியை நினையார் கல்லையும் மண்ணையும் கட்டையும் அனையார். .. (ஜய)
யுத்தக் கொடுமைகள் உலகினில் ஒழிய உதித்தநம் காந்தியின் உயர்ந்தநல் வழியை இத்தரை யெங்கணும் பரப்பிடும் கடமை இந்திய மக்களின் பரம்பரை உடைமை.
காந்தியின் அருந்தவம் பலித்திடும் காலம் கண்முன் இருப்பதை அறிந்திலம் போலும் ஓய்ந்திடும் சண்டைபின் ஒவ்வொரு நாடும் ஒப்பரும் காந்தியின் உரைகளைத் தேடும்.
இமயமும் குமரியும் இருக்கிற வரைக்கும் இப்பெரும் உலகினில் அவன்பெயர் சிறக்கும்! சமயமும் நிறங்களும் சமமெனக் கருதும் சகலரும் காந்தியை வணங்குவர் பெரிதும்!
மன்னரும் வீரரும் மந்திரி மார்கள் மண்ணொடு மண்ணாய் மறைந்திடு வார்கள் உன்னரும் காந்தியின் பெரும்பெயர் ஒன்றே உலகினில் நிரந்தரம் ஒளிதரும் அன்றோ?
இன்னொரு தம்பதி இவர்களைப் போல எங்குளர் எனமனம் களித்திடும் சீலம் அன்னைகஸ் தூரியின் அரும்புகழ் சூழும் அற்புதன் காந்தியின் பெரும்பெயர் வாழும்.
46. சத்தியமூர்த்தி நம் காந்தி
சாந்தியே உருவாய் வந்த சத்திய மூர்த்தி யான காந்தியே உம்மைக் காணக் கணக்கிலா ஜனங்க ளெங்கும் காந்தமொன் றணுக ஓடும் ஊசிகள் காட்சி போலப் போந்ததும் தரிச னத்தால் பொறுமையைக் கற்க வேண்டி.
மூவுல கொருங்கே யாண்டு முடிவிலாச் செல்வ மெய்தி ஏவலில் மமதை கொண்ட இரணியன் உய்யு மாறு தாவிய தூணி லன்று தனியுருத் தாங்கி வந்த சேவகன் மெச்சு கின்ற சிறுவனே யன்ன சீலா.
பகையினால் கொன்று வென்று பயம்பட வாழ்ந்து வந்த வகையிலாச் சாதி யோரை வழிபடச் செய்ய வேண்டி மிகமிகத் துன்ப முற்றும் மென்மையால் வென்று கொண்ட மகம்மது நபியே என்று மதியுளார் சொல்வா ருன்னை.
அன்பொரு வடிவாய் வந்தாய் அற்புதச் செயல்கள் காட்டித் துன்பமே சூழ்ந்த தெய்வத் துரோகிகள் செய்கை யாலே வன்பெரும் சிலுவை தன்னில் வைத்தவர் அறைந்த போதும் இன்பமே நுகர்ந்த தேவன் ஏசுவே என்பா ருன்னை.
கனவினிற் பிணிமூப் போடு சாவினைக் கண்ட பின்னர் இனியிதன் ரகசி யத்தை இன்னதென் றறிவோ மென்று கனதன ராஜ போகக் கட்டெலாம் விட்டொ ழித்த புனிதன்அப் பௌத்த னென்று போற்றுவா ருன்னை யாரும்.
அடிதடி வாழ்க்கை கொண்டும் அன்பினை மறந்து நாளும் கொடியதாம் பணப்பே யாலே குவலயம் அயர்ந்து நொந்து முடிவிதற் கெங்கே யென்று முரண்படு கின்ற காலை விடிவது பொழுது போல வீசிய துன்றன் காந்தி.
குண்டுபீ ரங்கி யாலும் கோடியந் திரங்க ளாலும் மண்டிய செல்வத் தாலும் மயக்கிடும் பொருள்க ளாலும் சண்டைகள் ஜயத்தி னாலும் சலிப்பின்றிச் சுகமெங் கென்று மண்டல மிருண்ட போது மதியெனத் தோன்றி னாய்நீ.
சாந்தமொன் றில்லை யென்றால் சௌக்கிய மில்லை யென்றே ஆய்ந்தவர் சொன்ன தெல்லாம் அகந்தையால் மறந்து விட்டு மாந்தினர் கள்ளே யென்ன மயக்கமுற் றிருந்த காலை காந்தியென றொருவன் தோன்றிக் காத்தவன் உலகை என்ப.
சத்தியன் என்பா ருன்னைச் சாந்தமே யென்று சொல்வார் பித்தனே யாவான் என்பார் பேடியென் றொருசார் சொல்லும் சுத்தனே என்பா ரில்லை துரோகியென் பாரு முண்டு இத்தனை பெயரும் தாங்கும் இதுவன்றோ பெரியார் செய்கை?
நம்மையும் புனித ராக்கி நம்மையாண் டடிமை செய்தார் தம்மையும் புனித ராக்கித் தரணியில் தரும நீதி மும்மையும் உயிர்க்கச் சாந்த மூலமந் திரத்தைக் காட்டும் செம்மைசேர் ராட்டி னத்தின் திகிரியைச் சுழற்றி விட்டாய்.
உனைவிடப் பெரியார் இந்த உலகினில் இல்லை யென்று நினைவினிற் பெரியா ருன்னை நிரந்தரம் போற்று கின்றார் இனியவுன் பெருமை யெல்லாம் இந்திய மாதா பெற்றாள் அனையவள் பெற்ற கீர்த்தி அடியமும் பெற்ற தன்றோ?
ஆண்டவன் ஆணை தாங்கி அன்பினை நாட்ட வென்று பூண்டஉன் கொள்கை யெங்கும் பூமிவே ரூன்று மட்டும் நீண்டஉன் வழிசி றக்க நிமலனாம் கடவுள் மாட்டு வேண்டுவோம் என்று சொல்லல் வெற்றுரை யாகு மன்றே.
47. புகழவொண்ணாக் கருணை ஜோதி
மதபேத மாச்சரியம் மறைய வேண்டும் ; மனிதரெலாம் ஒருகுலமாய் வாழ வேண்டும் ; விதம்வேறு நிறம்வேறு வினைகள் வேறாம் விகற்பமெலாம் ஒருகடவுள் விளையாட் டென்ற நிதமான மெய்யறிவின் நிலைய மாகி நிறைவான பெருங்கருணை ஜோதி காட்டும் பதியாகும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி திருநாமம் என்றென்றும் பாரில் வாழ்க!
ஆயுதங்கள் மிகச்சிறந்த ஹிட்லர் எங்கே? அவன்துணைவன் முஸலோனி அகந்தை எங்கே? மாயமிகும் போர்புரிந்த டோஜோ எங்கே? மாநிலத்தைச் சீர்குலைத்து மறைந்தார் அன்றோ? பேய்புகுந்த பிணக்காடாய் உலகைக் கண்டும் பின்னும்அந்தப் போர்வெறியைப் பேச லாமோ? தாயறிந்த அன்பினையே உருவாய்த் தாங்கும் தவசிஎங்கள் காந்திசொலும் சாந்தி கொள்வோம்.
இன்பதுன்பம் எவ்வுயிர்க்கும் ஒன்றே என்றே ஈ, எறும்பு, புழுக்களுக்கும் இரக்கம் காட்டி அன்புவழி வாழ்ந்தவர்கள் தமிழர் நாமே அருள்மிகுந்த ஒருநாடு தமிழ்நா டாகும். முன்பிருந்த தமிழறிஞர் சேர்த்து வைத்த மூதறிவே மோகனதாஸ் கரம்சந்த் காந்தி நம்பனிவன் சரித்திரமே உலகைக் காக்க நாமெல்லாம் கடவுளிடம் நயந்து கேட்போம்.
கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த கூட்டுறவே மெய்ஞ்ஞானக் குணமாம் என்ற நல்லாண்மை அறம்வளர்த்த தமிழ்நாடொன்றே நானிலத்தில் அமைதிமிக்க நாடாம் என்றும் வல்லாண்மை நமக்குவர வாழ்ந்து சென்ற வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்னச் சொல்லாண்மைப் புகழ்வொண்ணாக் கருணை ஜோதி சுத்தன்எங்கள் காந்திமகான் நாமம் வாழ்க!
அணுகுண்டு வித்தைகளும் அணுக வொண்ணா அப்பாலுக் கப்பாலாம் அறிவாய் நிற்கும் இணையற்ற பெருங்கருணை எல்லாம் வல்ல இறைவனையே மூச்சாக இழுத்துப் பேசித் துணைகொண்டு அவனருளைத் தொடர்ந்த காந்தித் தூயவனே இந்தியத்தாய் ஜோதி யாகும் அணைகண்டு மதவெறியை அடக்கித் தேக்க அவன்வழியே மக்களுக்கு அமைதல் வேண்டும்.
சாந்தவழி உலகமெலாம் போற்ற வேண்டும் ; சத்தியத்தை அரியணையில் ஏற்ற வேண்டும் ; மாந்தருக்குள் போர்வெறிகள் மறைய வேண்டும் ; மக்களிடம் அன்பறங்கள் நிறைய வேண்டும் ; சோர்ந்துழலும் ஏழையெலாம் சுகிக்க வேண்டும் ; சுத்தர்களே அரசாட்சி வகிக்க வேண்டும் ; காந்திமகான் திருநாமம் வாழ வேண்டும் ; கடவுளென்ற பெருங்கருணை காக்க வேண்டும்.
48. சத்திய சீலன்
துறந்தவர் மிகுந்த நாட்டைத் துறந்திடும் துன்ப மெல்லாம் துறந்தவர் குறைந்த நாட்டைத் தொடர்ந்திடும் துன்ப மெல்லாம் அறிந்தவர் மொழிக ளாலும் அனுபவ அறிவி னாலும் அறிந்தனம் அதனை யிந்தத் தேசமும் மறந்த தந்தோ!
வான்முறை மழைபெய் யாது மாநிலம் வளமை குன்றும் கோன்முறை கோணும் மற்றும் குடிவளம் குறைந்து வாடும் சாண்வயி றதற்குக் கூடச் சரிவரக் கிடைக்கா தூணும் தான்எனும் அகந்தை நீத்த தவசிகள் குறைந்த நாட்டில்.
அன்னஅத் துறவு பூண்டோர் அரிதெனப் போன தாலோ சொன்னவர் துறவி யென்றோர் தூய்மையிற் குறைந்த தாலோ முன்னைய வளங்கள் குன்றி முதுமறைப் பெருமை விட்டுக் குன்றிய வாழ்க்கை வந்து குறைந்ததிப் பரத நாடு.
அக்குறை நீங்க வென்றே ஆண்டவன் அனுப்ப வந்தோன் இக்கணம் இந்த நாட்டின் இருள்மிகும் அடிமை நீங்க முக்குணம் அவற்றுள் போற்றும் முதற்குணம் வழியே காட்டும் சத்குரு வான காந்தி சத்திய சீலன் தானே.
தாங்கண்ட இன்பம் இந்தத் தரணியோர் பெறுமா றெண்ணி ஆங்கென்றும் ஈங்கென் றோடி அறப்பறை அடிக்கும் காந்தி தீங்கென உலகம் சொல்லும் செய்கையோர் சிறிது மில்லார் நாங்கொண்ட பெருமை எங்கும் நல்லவர் யாருங் கொள்வார்.
மனிதர்கள் கடவு ளாகார் கடவுளர் மனித ராவார் புனிதமும் பொறுமை யாவும் பொய்யிலா வாழ்வும் பற்றிக் கனதையும் கருணை பொங்கும் காந்திபோல் வாரை விட்டு இனியரு கடவு ளென்பார் எங்குளார்? எங்கு ளாரே?
கடவுளே பொய்யென் றாலும் கண்டவ ரிலையென் றாலும் உடனுல குயிர்ஒன் றிற்கும் ஒருசிறு தீங்கு மெண்ணார் கடனறி சாந்தக் குன்றாம் காந்திபோல் வாரை யன்றி உடலுயிர் உள்ளார் தம்மில் உவப்பது யாரை? யாரை?
நம்பின பேருக் கேனும் நம்புத லற்றோர்க் கேனும் அம்புவி ஏழைக் காக அருந்துயர் அனைத்தும் தாங்கி வெம்பிய செய்தா ருக்கும் வெருவுள எண்ணான் சொல்லான் இம்பரின் காந்தி வாழ்வை இலையென மறுக்கப் போமோ?
ஈரமும் இரக்கம் மட்டும் இருப்பவர் யாரும் எங்கும் ஓரமும் பொய்யும் நீக்கி உயர்குணம் யாவும் காத்து யாரொரு சிறியர்க் கேனும் யாதொரு தீங்கும் ஒப்பான் சீரியன் காந்தி வாழ்வைச் சிறப்பியா திருப்ப தெங்கன்?
ஒன்றினை ஒன்று மாய்த்தே ஒருவரை ஒருவர் வாட்டித் தின்றுடல் சுகிக்கு மிந்தத் தீமைசூழ் உலகந் தன்னில் தன்றுணைச் சுகங்கள் விட்டுத் தளர்ந்தவர்க் குடலை யீந்து நின்றிடும் காந்தி வாழ்வை மறப்பதோ, நினைப்ப தோதான்?
தன்னுயிர் போவ தேனும் பிறர்துயர் சகிக்க மாட்டான் பொன்னுயிர் பொதுமைக் கீந்துப் பொறுப்பதே மானம். அ·தே இன்னுயிர் மனித வாழ்வின் ரகசிய மாகு மென்றே உன்னிய காந்தி வாழ்க்கை தாழ்ந்ததோ உயர்ந்த தோதான்?
"வாழ்ந்தவர் வாழ்ந்த வாழ்வின் வழியிழி வழக்கத் தாலே 'தாழ்ந்தவர்' என்பார் தம்மைப் பிரிகிலேன், பிரித்து வைத்தால் வீழ்ந்துயிர் விடுவேன்" என்ற காந்தியின் விரத வார்த்தை போழ்ந்துளங் கலங்கி டாதார் பூமியில் உண்டோ மக்கள்?
'சத்தியம்' 'சாந்தம்' என்னச் சலிப்புறக் கேட்ட வெல்லாம் பொத்திய உடைஒன் றோடு புறத்தொரு அழகு மின்றி நித்தமும் தன்பாற் குற்றம் நெருப்பெனக் காய்ந்து நீக்கிச் சுத்தமாம் காந்தி யாகத் தோன்றிடக் கண்டோம் இன்று.
'சாந்தம்' என் றதுதான் இன்று சபர்மதிச் சாலை நீங்கி ஏந்திய கொள்கைக் காக எரவாடா சிறையில் தங்கிப் பாந்தவர் தாழ்ந்த வர்க்காய்ப் பட்டினி யிருப்பே னென்றே ஆய்ந்தவர் அறிவில் என்றும் காந்தியாய் அரசு கொள்ளும்.
சத்தியம் வெல்லு மென்றால் தவமது பலிக்கு மானால் உத்தமன் கடவு ளென்ற ஒருபொருள் உண்மை யானால் இத்துறை எங்கள் காந்தி இடருறா வண்ணங் காத்து வைத்திட வேண்டும் இந்த வையகம் வாழ்த்தும் என்றும்.
49. தவமே தவம்
கதைகளிற் கேட்ட துண்டு கடவுளின் கருணை தன்னைக் கவிதையிற் படித்த துண்டு கருணையின் பெருமை தன்னை வதைபெற உடலை வாட்டி வரும்பல துன்பம் தாங்கி வையகம் துயரம் தீர வைப்பது தவந்தான் என்றும் விதம்விதம் பாடி னாலும் விளங்கின தில்லை முன்னே; வித்தையின் வித்தை போல விந்தையின் விந்தை காட்டிச் சிதைவுற வெறிகள் மிஞ்சி சீர்குலைந் திருண்ட நாட்டில் சிந்தனை ஜோதி காந்தி தவத்தினால் தெரியக் கண்டோம்.
கல்லையும் கனியச் செய்து நெருப்பையும் தணித்துப் பொல்லாக் கயவர்தம் மனத்தைக் கூட நயமுறச் செய்து காட்டும் எல்லையில் லாத நன்மை தவத்தினால் இயலும் என்றே ஏட்டினிற் படித்த போதும் ஏளனம் செய்தோம் அன்றோ? சொல்லரும் ஞான வாழ்வின் சுடரெனும் காந்தி எம்மான் சூறையும் கொலையு மாக மதவெறி சூழக் கண்டு தில்லியில் தவமேற் கொண்டு திருத்திய திறத்தைக் கண்டால் தெய்வமே நம்முன் வந்து தெரிசனம் கொடுத்த தன்றோ!
செந்தமிழ் அறிவில் எங்கும் செறிந்துள போத மாகிச் சிறந்தநம் கலைக ளெல்லாம் தினந்தினம் தெரியக் காட்டும் இந்தியர் போற்றி வந்த இப்பெரும் ஞான வாழ்வை இழந்தனம் அழிவே செய்யும் எந்திர மோகம் மிஞ்சி நொந்துநொந் தறிஞர் வாடும் உலகுடை நோய்கள் தீர நோன்பிருந் தறங்கள் ஊட்டும் காந்தியின் நோக்கம் ஒன்றே வெந்துயர் போக்கும் ஜாதி வெறிகளை விலக்கச் செய்யும் வேறெது நம்மைச் செய்த விமலனைக் காட்டும் மார்க்கம்?
வாய்மையும் அன்பும் சேர்ந்த வடிவமே கடவுள் என்று வாய்ப்பறை சாற்று கின்றோம் வாதித்து எழுது கின்றோம் தீமையே செய்த பேர்க்கும் நன்மையே செய்வோம் என்று தினந்தினம் மதத்தின் பேரால் ஜெபமணி உருட்டு கின்றோம் நாம்ஒரு சகிப்புக் காட்ட நேர்ந்திடும் நாளில் மட்டும் நல்லதைத் தீய தென்போம் தீயதை நல்ல தென்போம் வாய்மையின் வைப்பாம் காந்தி வள்ளலார் வழியே போற்றி வையக மாந்த ரெல்லாம் நலமுற வாழ வேண்டும்.
தரணியோர் பாப மெல்லாம் தன்பிழை எனமேற் கொண்டு தனியரு மனித னாகத் தவமிருந் துலகம் ஏங்க மரணம்என் பதுவும் கூட மருண்டயல் புரண்டு போக மாநிலத் தறிஞ ரெல்லாம் வியந்துடன் மகிழ்ந்து வாழ்த்த புரணியும் பொய்கள் கூட்டம் புகலிடம் தேடி யோடப் புண்ணிய எண்ணம் நம்மைப் பிரிந்தவை புகுந்து கொள்ளக் கருணையின் பெருமை தன்னைக் கைக்கனி என்னக் காட்டும் காந்தியின் பெருமை தன்னால் கடவுளின் பெருமை கண்டோம்!
50. காந்தியிடிகள் பெருமை
இந்திய நாடு சுதந்திர மெய்தநல் தந்திரம் தந்தவர் யார்?--சிறு கந்தை 'பக்கீ'ரென்று தந்தொரு வன்சொன்ன காந்தி யென்னும் பெரியார்.
அஞ்சிக் கிடந்தநம் நெஞ்சந் துணிந்திட ஆண்மை எழுப்பின தார்?--ஒரு வஞ்ச மிலாதவர் வாய்மையின் தூய்மையின் வாழ்க்கையர் காந்தியவர்.
ஆயுதம் இன்றியும் யாரும் வணங்கிடும் அன்பைப் பெருக்கின தார்?--சற்றும் சாயுதல் செய்திடாச் சத்திய மூர்த்திநம் தவமுனி காந்தியவர்.
நாட்டினுக் காயுயிர் கேட்பினும் தந்திட நானென்று முன்வருவோர்--பலர் போட்டியிட் டேவர வீரம் புகுத்தினர் புண்ணியவர் காந்தியவர்.
அடிபட்டு மாளவும் சிறைபட்டு வாழவும் அச்ச மகற்றின தார்?--உண்மை குடிகொண்டு கோபத்தைக் குறைவற நீக்கிய குணமுயர் காந்தியவர்.
பேதைய ரென்றுநாம் பேசிய பெண்களும் வீதியில் நம்மிலுமே--இங்கு நீதியில் லாமுறை அரசை எதிர்த்துடன் நின்றிடக் காந்திசெய்தார்.
சின்னஞ் சிறிய குழந்தைக ளும்இன்று ஜெயஜெய வென்றுசொல்லி--எங்கும் கன்னெஞ் சுருகிடத் தேசத்தி னைத்தொழக் காந்திஜி செய்துவிட்டார்.
தீண்டப்ப டாதென்று மனிதரைச் சொல்வது தீமையில் தீமையென்றே--அதைப் பூண்டொடும் போக்கநாம் விரதம் புனைந்தது புண்ணியவர் காந்தியினால்.
'தன்னை வதைப்பவர் தங்களுக் கும்அன்பைத் தாங்குவ தேதவமாம்'--என்று முன்னைஇந் நாட்டினில் சொன்னவர் சொற்களை முற்றுவித் தார்காந்தியார்.
'உடலினும் உயிரினும் உள்ளிருக் கும்ஒன்(று) உயர்ந்தது காணும்'என்றே--இந்தக் கடலுல கத்தினில் கண்ணுக்கு முன்னாகக் காட்டிவிட் டார்காந்தியார்.
காந்தி யெனும்பெயர் சாந்தம் எனும்சொல்லின் காட்சியின் சாட்சியென்றே--இனி மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி மங்களம் எய்திடுவார்.
51. காந்தியரே, தொழுகின்றோம்!
காந்தியெனும் பேரொளியே! கருணைமொழி வான்முகிலே! சாந்திநிறை பாத்திரமே! சன்மார்க்க சாத்திரமே! மாந்தருக்குள் மாமணியே! மாநிலத்தின் அற்புதமே! ஏந்துபுகழ் மோகனமே! என்சொல்லி அஞ்சலிப்போம்.
இதமுரைக்கும் வானொலியே! இருள்கிழிக்கும் மின்விளக்கே! பதமறிந்த பேச்சாளா! பயனறிந்த எழுத்தாளா! மதவெறிக்கே பலிபுகுந்த மாயாப் பெரும்புகழே! துதிஉரைக்கச் சொல்லறியோம் தொழுகின்றோம் துணைபுரிவாய் ;
அன்பெடுத்த திருவுருவே! அருள்அமரும் ஆசனமே! துன்பமுற்றோர் துணைக்கரமே! துயர்நீக்கும் தூதுவனே! இன்பமெலாம் பிறர்க்குதவி இன்னலெலாம் தாங்கிநிற்கும் ; தென்பிருக்கும் தேசிகமே! திருவடிக்கே அஞ்சலித்தோம்!
இல்லறத்தின் சிறப்பிடமே! துறவறத்தின் இருப்பிடமே! நல்லறங்கள் யாவினுக்கும் நடுவான நன்னெறியே! தொல்லறத்தின் புதுப்பதிப்பே! தோல்வியிலாச் சால்புடையாய்! சொல்லுரைக்கப் போதாத சுசிகரமே! தொழுகின்றோம்.
சாதிமத பேதமிலாச் சமதர்ம சந்நிதியே! நீதிநெறி பிசகாமல் நிறுத்தளக்கும் துலாக்கோலே! வாதுபுரி வம்புகளின் வாயடைக்கும் வல்லமையே! ஏதுபுகழ் சொல்லியுனை அஞ்சலிப்போம் எம்மானே!
வலிமைக்கும் சூரியனே! வழிகாட்டும் தாரகையே! குலவவரும் சந்திரனே! குளிர்ச்சிதரும் மென்காற்றே! புலமைதரும் பொன்மொழியே! புதுமைதரும் நன்மருந்தே! தலமறிந்த தனித்தலைவ! தாள்பணிந்தோம்! அஞ்சலித்தோம்!
மதிகலங்கா மந்திரியே! மாசுபடாத் தந்திரியே! சுதிகலங்கா யாழிசையே! சுவைகுறையாச் சொல்லடுக்கே! நிதிமயக்கா மனநிறைவே! நிலைகலங்கா நிம்மதியே! கதிகலங்காச் சாரதியே! அஞ்சலித்தோம் காத்தருள்வாய்.
தேடறிய செல்வமே! தெவிட்டாத தெள்ளமுதே! ஏடறியா ஞானமே! எழுத்தறியா வித்தகமே! பாடறியா உழைப்பே! பயன்கருதாத் திருப்பணியே! ஈடறியா உத்தமனே! என்சொல்லி அஞ்சலிப்போம்!
மண்கண்ட மாதவமே! மறைகண்ட சாதகமே! கண்கண்ட தெய்வமே! கலைகண்ட நல்லுணர்வே! பண்கொண்ட இன்சொல்லே! பணிகொள்ளும் நன்னயமே! எண்கொள்ளா மேதையே! என்சொல்லி அஞ்சலிப்போம்!
கல்விதரும் நல்லறிவே! கவிதைதரும் கற்பனையே! செல்வமெனும் பொருளெல்லாம் சேர்ந்திருக்கும் பொக்கிஷமே! நல்வினைக்கு நாயகமே! நடுநிலைக்குத் தாயகமே! சொல்வதற்கு வேறறியோம்! காந்தியரே! தொழுகின்றோம்!
பகைமைபுகா அரண்மனையே! படைதொடுக்கா ராணுவமே! புகையறியாச் சுடர்விளக்கே! புண்படுத்தாத் தவக்கனலே! வகையறியா மானிடர்க்கு வரமளிக்கும் நல்வாழ்வே! தொகையறியாப் பொற்குவையே! தொழுகின்றோம் துணைபுரிவாய்!
கொலைமறுத்த போர்வீரா! குடிஒழித்த பேராளா! நிலைஇழிந்த ஹரிஜனங்கள் நிமிர்ந்துலவும் முதுகெலும்பே! கலைமறந்த குடிசைகளைக் காக்கவந்த கைத்தொழிலே! அலைமறந்த குணக்கடலே! காந்தியரே! அஞ்சலித்தோம்!
மரணமெனும் பெரும்பயத்தை மாற்றிவிட்ட மந்திரமே! திரணமென மதித்துயிரை ஈடுவைக்கும் பெரும்தீரா! தருமணமதில் வந்துதவி வெற்றிதரும் தைரியமே! கரணமெலாம் உன்வசமாய்க் கைகுவித்தோம் காத்தருள்வாய்!
ஏழைகளின் பெருந்துணையே! எளியவரின் நல்லுணர்வே! மேழியரின் மெய்க்காப்பே! மெலிந்தவரின் புகலிடமே! ஊழியரின் ஊழியனாய் உலகைவென்ற ஒப்புரவே! வாழியநின் திருநாமம் வையமெங்கும் வாழ்வுதரும்.
52. காந்தி வழி வாழ வேண்டும்
கல்லாலும் செம்பாலும் கடவு ளாக்கிக் கற்பூரம் காட்டிவிட்டால் போதும் என்றே எல்லாரும் நினைத்துவிடச் செய்து நித்தம் தெய்வத்தை ஏமாற்றி வாழ்ந்தோம் என்று சொல்லாலும் செயலாலும் எண்ணத் தாலும் சுத்தமுள்ள பக்திநெறி சொல்லித் தந்து கல்லாத எளியவர்க்கும் கடவுள் தன்மை கண்ணாரக் காட்டுமெங்கள் காந்தி வாழ்க்கை.
எந்திரங்கள் பெருகிமட்டும் என்ன நன்மை? ஏராளச் சரக்குகளைக் குவித்தும் என்ன? தந்திரங்கள் மிகப்பயின்றும் தருவ தென்ன? தரணியெங்கும் பலகலைகள் தழைத்தும் என்ன? சிந்தனையில் கருணைமட்டும் இல்லை யானால் சீரழியும் உலகமென்ற சேதிக் கென்றே வந்துதித்துத் திருவருளை வாழ்ந்து காட்டும் வள்ள லெங்கள் காந்திவழி வாழ வேண்டும்.
மந்திரிகள் தந்திரிகள் மலிந்தால் என்ன? மண்டலத்தை ஒருகொடிக்கீழ் ஆண்டால் என்ன? அந்தரத்தில் தோன்றுகின்ற அனைத்தும் வென்றே அண்டமெலாம் நமதாட்சி ஆனால் என்ன? எந்தஒரு உயிரிடத்தும் கருணை காட்டும் இரக்கமொன்றே இவ்வுலகை வாழ வைக்கும் அந்தஒரு அறிவினுக்கே உடலம் கொண்டோன் ஐயன்எங்கள் காந்திநாமம் வாழ்க! வாழ்க!
விஞ்ஞானச் சக்திகளால் வென்றால் என்ன? விதம்விதமாய்ச் சுகப்பொருள்கள் விரிந்தா லென்ன? இஞ்ஞாலத் துயிர்களெல்லாம் மகிழ்ந்து வாழ இம்சையற்ற சமுதாயம் வேண்டு மானால் பொய்ஞ்ஞான மதவெறிகள் போக வேண்டும் பொறுமைதரும் கருணைஒன்றே பொருளாம் என்ற மெய்ஞ்ஞானம் நமக்குவர வாழ்ந்து சென்ற மேதையெங்கள் காந்திமகான் நாமம் வாழ்க!
எண்ணரிய தேசபக்தர் உயிரை ஈந்தே எத்தனையோ துன்பமெல்லாம் சகித்த தாலே மண்ணுலகில் வேறெவரும் அறியா நல்ல மார்க்கத்தால் விடுதலையை மலரச் செய்தோம் புண்ணியநல் அறநெறிசேர் அரசு நாட்டிப் புவியெங்கும் சாந்தவழி போதம் காட்ட அண்ணல் எங்கள் காந்திமகான் திருநா மத்தை அனுதினமும் போற்றிசெய்ய அருள்வாய் தேவா!
53. காந்தி வாழ்க
காந்தி நாமம் வாழ்க வென்று கைகு வித்துக் கும்பிடு சாந்த மாக உலக மெங்கும் சண்டை யின்றி இன்புறும்.
அருளி தென்ற பொருள றிந்த அந்த ணர்க்குள் அந்தணன் தெருள டைந்த மனித வர்க்கம் தீமை தீர வந்தவன்.
கொலைம றுத்துப் பொய்த விர்த்துக் கொடுமை நீங்கப் பண்ணிணான் தலைசி றந்த காந்தி சேவை விலைம திக்க ஒண்ணுமோ?
யுத்த மென்றே உலக முற்றும் மெத்த நொந்த இந்தநாள் சத்த மின்றி அன்பு செய்யும் சாந்த மார்க்கம் தந்துளான்.
எந்த நாடும் விடுத லைக்கா எண்ணில் துன்பம் எய்திட இந்த நாட்டின் சொந்த ஆட்சி எளிதில் கூடச் செய்தவன்.
தீமை செய்து நன்மை சேரத் தேவ ராலும் ஒல்லுமோ? வாய்மை தன்னை வற்பு றுத்தி வாழ்ந்து காட்டும் வல்லவன்.
எண்ணி றந்த ஞான வான்கள் இந்தப் பூமி கண்டது மண்ணில் எங்கள் காந்தி போல மற்றொ ருத்தர் உண்டுகொல்?
மாந்தர் எங்கும் கலக மின்றி மருவி வாழக் கோரினால் காந்தி மார்க்கம் ஒன்றை யன்றிக் கதிந மக்கு வேறிலை.
இந்தி யாவின் பெருமை முற்றும் இந்தக் காந்தி மார்க்கமே அந்த ஞான உரிமை தன்னை அழிவி லாது காக்கவே!
கட்டி நின்று காந்தி செய்யும் கருணை வாழ்வை ஒட்டியே கிட்டி விட்ட சொந்த ஆட்சி கெட்டுப் போக விட்டிடோம்!
54. சஞ்சலத்தை நீக்குவாய்
அமர னாகி எம்மைக் காக்கும் அண்ணல் காந்தி ஐயனே! அஞ்ச லித்து நிற்கும் எங்கள் சஞ்ச லத்தை நீக்குவாய்! சமனி லாத சாந்த ஞான சத்தி யத்தின் நிலையமே! சரிச மான மாக மற்ற உயிரை எண்ணும் தலைவனே! நமது நாடு உலகி னுக்கு ஞான சேவை பண்ணவே நானி லத்தில் இவ்வி டத்தை நாடி வந்த விண்ணவா! அமைதி மிக்க அறிவி னோடும் அன்பு மிக்க ஆற்றலும் அருள வேணும் அப்ப னேஉன் அடிப ணிந்து போற்றினோம்.
நீபி றந்த போது தேசம் நிலைகு லைந்து நின்றது நிந்தை மிக்க அடிமை வாழ்வில் நொந்து நொந்து வாடினோம்! தாய்சி றந்த அன்பி னோடு துன்ப முற்றும் தாங்கினாய் தனியி ருந்து தவமி யற்றித் தைரி யத்தை ஊட்டினாய்! வாய்மை அன்பு வெல்லு கின்ற வழிந டந்து காட்டினாய்! வைய மென்றும் கண்டி லாத வலிமை எம்முள் கூட்டினாய்! போய்ம றைந்த ஞான வாழ்வு புதுமை கொள்ளச் செய்தனை! புண்ணி யத்தில் முன்னி லாத கண்ணி யத்தைப் பெய்தனை!
தண்டு மிண்டு தலையெ டுத்துத் தாறு மாறு மிஞ்சவும், தரும நீதி தெய்வ பக்தி தலைவ ணங்கிக் கெஞ்சவும், மண்ட லத்தில் எந்த நாடும் அமைதி யின்றி மருளவும், மக்கள் யாரும் யுத்த மென்று நடுந டுங்கி வெருளவும், கண்டு நொந்து அறிஞர் யாரும் கவலை கொண்டு ஏங்கினார் காந்தி தேவ! நீந டந்த கருணை மார்க்கம் ஓங்கவே தொண்டு செய்திவ் வுலகி லுள்ள துயரம் போக்க எண்ணினோம் துணையி ருக்க வேண்டு மென்றே அஞ்சலித்து நிற்கிறோம்!
55. காந்தியே வாழ்க! வாழ்க!
ஏட்டள விருந்த வேதம் இதுவென எடுத்துக் காட்டி எழுத்தள விருந்த கீதம் செய்கையில் ஏந்தி நின்று வீட்டள விருந்த காதல் விருந்தொடு விரியச் செய்து விருந்தள விருந்த நேசம் வியன்பெரு நாட்டிற் காக்கி நாட்டள விருந்த அன்பை நானிலம் முழுதும் நீட்டி நானிலத் தெவர்க்கும் அன்பே நாதனைக் காண்ப தென்று காட்டினை! சொல்லா லல்ல ஒழுக்கத்தால் கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க!
பக்தியென் றாடு கின்றோம் பஜனையாம் பாடு கின்றோம் பாகவ தம்மென் றிங்குப் படிக்கிறோம் பலநூல் நித்தம் முக்தியென் றோது கின்றோம் மோட்சமே பேச்சி லெல்லாம் மோனமும் ஞான மென்ன மொழிகிறோம் முற்றும் நாளும் சத்தினைப் போக விட்டுச் சக்கையைப் பற்றி வாழ்ந்தோம் சாத்திர சாரந் தன்னைச் சால்புடன் உணர்ந்த தக்கோர் கத்துவ தென்றும் மாறா ஒழுக்கத்தின் கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க!
நெற்றியில் நீறு நாமம் நிறைந்திடப் பூசி யென்ன? நியமும் நிஷ்டை யென்று நீண்டதால் நேர்வ தென்ன? பற்றிய ஜெபம் செய்மாலைப் பகலிர விருந்து மென்ன? பார்த்தவர் மருளும் யோக ஆசனம் பழகி யென்ன? சுற்றிய எவரும் நம்மால் துன்புறாத் தூய வாழ்வும் தோன்றிய ஜீவ ரெல்லாம் துணையெனக் கருது மன்பும் கற்றனை வாழ்வில் என்றும் காட்டினை கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க!
திடமொடும் உதித்த ஞானத் திருவரு ளடைந்த பேரும், தெளிந்தவர் மொழிந்த வற்றைத் திளைந்ததில் தெரிந்த பேரும், அடவியில் இருந்து நாளும் அருந்தவம் புரிந்த பேரும், அடைக்கலம் குருவை நாடி அருள்வழி அறிந்த பேரும், இடம்நிறம் கால மென்னும் இவைகளில் எதில் வந்தாரும், இவ்வுல குதித்த பின்னர் இந்தநா ளளவும் யாரும் கடவுளின் இருக்கை கண்டோர் காட்டிய கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க!
முனிவரர் கோடி கோடி முயற்சியால் சிறந்த நாட்டை மூடவெம் மதியி னாலே முயக்கினோம் அடிமை வாழ்வில் தனிவரும் துயரில், நோயில் தரித்திரத் தாலே வாடித் தளிர்ந்திடும் ஏழை மக்கள் துயரத்தைத் தாங்கி நின்றாய் இனிவரும் அணித்தே யென்ன எண்ணவும் முடியா மேன்மை இப்பெரும் உன்னைப் பெற்றும் சோம்பினோம் இகழ்ந்து நின்றோம் கனிபெரும் தூய வாழ்வின் கண்ணெனும் கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க!
என்கடன் பணிகள் செய்து கிடப்பதே யென்று முற்றும் ஏழைகட் காக வாழ்ந்தோர் எண்ணிலா ரிருந்த நாட்டைத் துன்புடை யடிமை வாழ்வின் துயரிடை யழுத்தி விட்டோம் தூயவர் சொல்லை யெல்லாம் தூற்றினோம் காற்றி லையோ! வன்பெரும் மிடியால் வாடும் வறியவர்க் குழைத்தா லன்றி வாழ்விலை நமக்கே யென்று வகுத்தனை! உணர்ந்தோ மையா! கன்மன முடையோ ரேனும் கனிந்திடும் கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க!
56. பூனா வெடிகுண்டு
விந்தையில் விந்தை! காந்தியின் மேலும் வெடிகுண்டை யாரோ வீசினராம்! ஹிந்தும தத்தில் வந்தவர் யாரும் இப்படி யும்செய ஒப்புவரோ! நிந்தையில் நிந்தை இதைவிட வேறும் இந்திய நாட்டிற்கு வந்திடுமோ! இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது எந்தப் பொருளதைச் சிந்தை செய்வோம்.
சத்தியம் மெய்யே, சாந்தமும் மெய்யே சாதித் துயர்ந்திட்ட சாதுக்கள்மெய் நித்தமும் நின்று நம்மை நிறுத்து நீதி செலுத்திடும் ஜோதியும்மெய் பொய்த்திடும் பொய்யே போனது ஐயம் புண்ணியம் என்பதும் உண்மைஅதை உத்தமர் காந்தியின் மெய்த்தவ வாழ்வினில் உண்டு வெடித்திட்ட குண்டுசொலும்.
மடமையி னாலே செய்தனர் என்றே மன்னித்து வாழ்த்திய பொன்னுரையால் அடவியிற் சென்றே ஐம்புலன் வென்றார் அந்தணர் முந்துரை தந்தவெலாம் நடைமுறை தன்னில் தினசரி வாழ்வில் நாட்டிடைக் காந்திஜி காட்டிவிட்டார் கடவுளும் உண்மை; கருணையும் உண்மை ; காத்திடும் என்பதும் பார்த்துவிட்டோம்.
தாழ்ந்தவ ரேனும் வாழ்ந்தவ ரேனும் சத்தியம் நாடிய பத்தரலால் வேந்தருங் காணா வேதியர் காணா வேறொரு சக்தியின் பேரருளால் மாந்தருள் தெய்வம் நம்பின வர்க்கு மனத்துறை இன்பம் எனத்தகுமோர் காந்தியும் தப்பிக் கருணையும் தப்பிக் கடவுளும் தப்பிப் பிழைத்தனரே!
பொங்கிய 'போலி'ச் சநாதன கோபம் பூனாவில் அன்று வெடித்ததுவோ! அங்கொரு தீங்கும் யாருக்கு மின்றி அன்புருக் காந்தியும் துன்பமிலார் சங்கெடுத் தூது! மங்களம் பாடு! சாந்தி உலகுக்குக்கு காந்தியினால் எங்கணும் சாந்தி யாவர்க்கும் சாந்தி என்ற முதுமறை நின்றதுபார்!
57. ஜோதி மறைந்துகொண்டதே!
சத்தியத்தின் ஓயாத சங்க நாதம் சாந்திதரச் சலியாத வேத கீதம் நித்தியநன் னெறியறிவை நீட்டும் சப்தம் நிரந்தரமாம் மெய்ஞ்ஞானக் குழலின் ஓசை மெய்த்தவத்தை நினைப்பூட்ட மீட்டும் வீணை மேலான குணங்களையே மேவும் பாடல் உத்தமருள் உத்தமனாம் காந்தி யென்ற தேனொழுகும் வானொலியும் ஓய்ந்து போச்சே!
முத்திவழி காட்டுகின்ற மோன தீபம் மூடமன இருளகற்றும் முழுவெண் திங்கள் வித்தைகளின் நித்தியவி வேக பானு விடியிருளில் தடைவிலக்கும் வெள்ளி விண்மீன் எத்திசைஎம் மாலுமிக்கும் இடம்கண் டேற இமயமென இலங்குகலங் கரைவி ளக்காம் உத்தமருள் உத்தமனாம் காந்தி என்னும் ஒப்பரிய ஜெகஜ்ஜோதி ஒளிந்த தையோ!
சூரியனும் சந்திரனும் தொலைந்தா ரென்ன சுற்றியுள்ள மீன்களிலும் இருளே சூழ காரிருளில் கடியஇருள் கவிந்து யாரும் கண்ணிழந்து புண்ணிழந்து கலங்கி ஏங்க நேருகின்ற பொழுதி லெல்லாம் கவலை நீங்க நிச்சயம்தான் உள்ளிருந்தே ஒளியை நீட்டும் யாருமிந்த உலகில்இது வரையிற் காணா அற்புதமின் சாரசக்தி அறுந்து போச்சே!
எப்படித்தம் உடல்வளர்த்தும் எதுசெய் தாலும் என்னென்ன காயகற்பம் இழைத்துண் டாலும் தப்பிடவே முடியாது தடையில் லாமல் தலைசிறந்த மனிதர்களும் சாக வேண்டும். முப்பொழுதும் உலகநலம் மூச்சாய்க் கொண்டு முறைதவறாத் தவவாழ்வே முடித்த காந்தி இப்படித்தம் உயிர்கொடுத்த பெருமை யன்றோ என்றென்றும் நின்றொளிரும் இரவி யாகும்?
உலகறிந்த அறிவையெலாம் ஒன்றாய்ச் சேர்த்தே ஒருசிறிய காந்தி என்ற உடலில் வைத்தார் அலகில்பல அற்புதங்கள் நடத்தி வைக்கும் ஆண்டவனின் திருவுளத்தை அறிவார் யாரோ! இலகும்ஒரு காந்தியிடம் இருந்த சத்தை இவ்வுலகில் பலபேர்கள் பகிர்ந்து கொண்டு கலகம்வரின் அங்கங்கே கருணை காட்டிக் காக்கவென்றே இறைவனிதைக் கருதி னானோ?
மதவெறிகள் மாச்சரியம் மறைந்தா லன்றி மாநிலத்தில் உயிர்வாழ மாட்டேன் என்னும் இதயமுறும் சத்தியத்தை இசைத்தார் காந்தி இஷ்டம்போல் உயிர்அதற்கே ஈந்தார் எம்மான். உதயமுற நம்மனத்தில் உணர்ச்சி உண்டேல் உலகமெல்லாம் கலகமிலா துய்ய வேண்டின், மதவெறியும் இனவெறியும் மறைய வேண்டும் மற்றும்ஒன்று மொழிவெறியும் மாற வேண்டும்.
உடலமென்ற சிறுகூண்டிங் கொழிந்தா லென்ன? உள்ளிருந்த ஒருபொருளுக் கழிவு முண்டோ? கடவுளென்ற ஒருமகிமை இருந்தா லன்றோ காந்திஎன்ற பெரும்பெயரும் இறந்த தாகும்? திடமுறுவோம் தீரமுடன் நம்மைச் சூழ்ந்த தீமைகளைத் தீரமுடன் தீர்க்கா விட்டால் 'அடிமைஅச்சம்' நமைவந்தே அழுத்திக் கொள்ளும் அண்ணலையும் அவமதித்த அதம ராவோம்.
வள்ளுவரின் வழிவளர்ந்த தமிழா! நீதான் வாய்மையுடன் தாய்மைஅறம் வளர்த்த வள்ளல் தெள்ளுதமிழ் நூல்களெல்லாம் தெளிவாய்ச் சொல்லும் தெய்வபெருங் கருணையையே செய்தார் காந்தி. கொள்ளைகளும் கொலைவெறியும் குமுற வாடும் குவலயத்தில் கொடுமைகளைக் குறைக்க நீதான் அள்ளியெங்கும் தமிழ்மொழியின் அறிவை வீசி ஐயனெங்கள் காந்திவழி அஹிம்சை காப்பாய்.
மாந்தரென இவ்வுலகில் பிறந்த பேருள் காந்தியைப்போல் மற்றொருவர் வந்த தில்லை. சாந்தமுழு சைதன்ய மூர்த்தி யென்னும் சர்வேசன் சகலகலா சக்தி தன்னைத் தேர்ந்தவருள் காந்தியினும் தெளிந்தா ரில்லை தெரிந்திருந்தும் மரணமிதில் தேடிப் பார்த்தால் காந்தியையும் கடந்தஒரு பொருள் உண்டென்று கட்டாயம் நாம்அறியக் கடவோம் அன்றோ?
கோழைகள்போல் குலைவதனால் பயனொன் றில்லை கொலைவழிகள் கூண்டோடு மறையச் செய்தே ஏழைகளோ கொடுமைகளோ எங்கு மின்றி இந்தியத்தாய் நாடிதனை இலங்கச் செய்வோம் ஊழிதொறும் அவன்நினைவு உதவ வேண்டி உத்தமனைக் குலகுருவாய் பஜனை செய்து வாழிஜெய வாழிஜெய வாழி காந்தி வள்ளலார் திருநாமம் வாழ்க என்போம்.
58. விண்ணிலிருந்து அண்ணல் வருகை
ஞான மென்று சொல்லு கின்ற நல்ல சக்தி யாவையும் நானி லத்தில் காந்தி யென்று மேனி பெற்று வந்தன. ஈன மிக்க அடிமை வாழ்வின் இடர்மி குந்து நொந்தநம் இந்தி யாவின் விடுத லைக்கு விந்தை மிக்க நன்னெறி தான்ந டந்து வெற்றி தந்து தரணி முற்றும் வாழ்ந்திட தனது சொந்த உடலைக் கூட தத்த மாகத் தந்துபின் வானகத்தி ருந்து நம்மை வாழ்த்தும் காந்தி தேவதை வைய கத்தில் மீண்டும் நம்மை வந்து பார்க்கும் நாளிது.
தெய்வ மேனி யோடு காந்தி திகழ நம்முன் நிற்கிறார்! திருவ டிக்கு மாலை சூட்டி தியான பூசை செய்குவோம். வையம் வாழ நல்வ ரங்கள் வாங்கிக் கொள்ள நல்லநாள் வஞ்ச மற்ற நெஞ்சி னோடு அஞ்ச லித்து நின்றுநாம் ஐயன் காந்தி காட்டு கின்ற அன்பு வாய்மை போற்றினால் அச்ச மேது? பிச்சை கேட்கும் அவதி ஏது அவனியில்? உய்ய வேறு மார்க்க மில்லை காந்தி பக்தி ஒன்றுதான் உலகில் இன்று குமுறு கின்ற கலகம் தீர நன்றுகாண்.
உணவி லாமல் ஏழை மக்கள் உடல் பதைத்து வாடலும் உணர்வி லாத தன்ன லங்கள் பதுக்கி வைத்து மூடலும் குணமி லாத செல்வம் செய்யும் கோடி கோடி துன்பமும் கொடுமை செய்திவ் வுலகை ஆளக் கோரு கின்ற வம்புகள் பணமி லாத ஒன்றுக் காகப் பாத கங்கள் புரிவதும் பாவ புண்ணி யங்க ளென்ற பயமி லாது திரிவதும் அணுபி ளக்கும் குண்டு செய்திவ் வகில நாசம் எண்ணலும் அத்த னைக்கும் மாற்று நல்கும் அமரன் காந்தி அண்ணல்தான்.
59. காந்தி சொல்லை ஏந்தி நிற்போம்
அடிமைத் தனத்தை விட்டோம்--ஆனால் அன்பை மறந்து கெட்டோம் மடமைத் தனத்தை வென்றோம்--ஆனால் மமதை நிறைந்து நின்றோம் கொடுமை எதிர்த்து வந்தோம்--இன்று கொள்கை உதிர்த்து நொந்தோம் உடைமை அடையப் பெற்றோம்--ஆனால் உண்மைப் பிடிகள் அற்றோம்.
பதவியை ஏசி வந்தோம்--இன்று பதவிக்கே ஆசை தந்தோம் உதவிகள் தேடிச் செய்தோம்--இந்நாள் உதவியை நாடி வைதோம் மதவெறி தீமை என்றோம்--நாமும் மாறிப் பொறாமை கொண்டோம் இதுவும் சுதந்திரந் தானோ?--இனி என்ன இதந் தருமோதான்?
ஒற்றுமை வேண்டும் என்றோம்--இந்நாள் உறவறத் தூண்டு கின்றோம் வெற்றுரை விட்டு ழைத்தோம்--இன்று வேற்றுமைப் பட்டி ளைத்தோம். பெற்றசு தந்திரத்தை--நாம் பேணி இதம் பெறத்தான் நற்றவன் காந்தி சொல்லே--எந்த நாளிலும் ஏந்தி நிற்போம்.
60. காந்தியமே உலகைக் காக்கும்
ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடு ஜகத்தினுக் கரும்பணி வேறிலை ஈடு நயமிக மாந்தருள் நட்புகள் வளரும் நகைமுகம் இனியசொல் எங்கணும் ஒளிரும் தயவொடு தருமமும் தானமும் ஓங்கும் தரித்திரக் கொடுமைகள் யாவையும் நீங்கும் பயமற உலகினில் பற்பல நாடும் பகையற வாழ்ந்திடல் அதனாற் கூடும்.
இத்தரை மீதினில் இதுவரை தோன்றி இகபரம் இரண்டிலும் சிந்தனை ஊன்றி முத்தரும் யோகரும் முனிவரும் யாரும் முற்றிய அறிவென முடிவுறக் கூறும் சத்திய சாந்தச் சமரசம் மேவும் சாதனை யென்கிற போதனை யாவும் புத்துயிர் பெற்றிடக் காந்தியும் பிறந்தார் பூமியில் இந்தியத் தாய்மிகச் சிறந்தாள்.
அன்பறம் பெருகிட அதுதுணை புரியும் அரசியல் முறையிலும் அதன்பொருள் விரியும் துன்பமுற் றவர்களின் துயர்களைக் குறைக்கும் தூய்மையும் வன்மையும் தொழில்களில் நிறைக்கும் இன்பமும் செல்வமும் பொதுப்பொருள் ஆகும் இரப்பவர் என்பதும் இல்லாது போகும் வம்பரும் வணங்கிடும் காந்தியின் போதம் வளர்ப்பது வேநம் வாழ்க்கையின் கீதம்.
61. எச்சரிக்கை
எச்ச ரிக்கை எச்ச ரிக்கை எச்ச ரிக்கை கொள்ளு வோம் அச்ச மற்ற வாழ்வுகாண இச்சை யுற்ற யாவரும்
கலக மற்று மனிதர் வாழக் காந்தி மார்க்கம் ஒன்றுதான் உலகி னுக்குத் தேவை யென்ற உண்மை கண்டு கொண்டபின்
காந்தி போதச் சேவை செய்யக் கங்க ணத்தைப் பூண்டநாம் நேர்ந்த வாறு பேசிக் கொண்டு நிலைகு லைந்து நிற்கிறோம்.
காந்தி காந்தி காந்தி யென்று காத டைக்கக் கூவினோம் காந்தி சொன்ன சாந்தி மட்டும் காதில் ஏற வில்லையே!
சத்தி யத்தை வாழ்ந்து காட்டும் சாந்த மூர்த்தி காந்தியை நித்தம் நித்தம் வாழ்த்தி விட்டு நெஞ்சில் உண்மை பெற்றிலோம்.
கோப மற்ற காந்தி யாரைத் தலைவ ராகக் கொண்டநாம் தாப மற்ற வார்த்தை பேசத் தண்மை கூடப் பெற்றிலோம்.
பதவி யற்ற சேவை செய்யப் பாடம் சொல்லித் தந்தநாம் பதவி பற்றி உதவி யற்ற பலவும் பேசித் திரிகிறோம்.
பூசை யோடு கோயி லுக்குள் பூட்டி வைக்கும் சாமிபோல் ஓசை யோடு காந்திப் பொம்மை ஊர்வ லங்கள் செய்கிறோம்.
பகைவ ருக்கும் நன்மை செய்யப் பரிவு கற்றுக் கொண்டநாம் மிகவும் நல்ல நண்ப ரோடும் பகைமை கொள்ள மிஞ்சினோம்.
அணுவை யும்பி ளந்த ழிக்கும் ஆயு தங்கள் வந்தபின் முணுமு ணுத்துக் கனவிற்கூட மூர்க்கப் பேச்சு செல்லுமோ?
இந்த நாட்டின் ஞான மார்க்கம் என்ற ஒன்றை விட்டுநாம் எந்தக் குண்டைக் கொண்டு மற்ற எவரை வெல்லப் போகிறோம்?
62. காந்தி வழி
கொல்லா திருப்பது ஒன்றேதான் கூறும் அஹிம்சை என்றல்ல எல்லாச் செயலிலும் நன்னோக்கம் இணைந்த(து) அஹிம்சை தன்னாக்கம் பொல்லா தவர்க்கும் தீங்கெண்ணாப் புனிதம் அதனுடைப் பாங்கென்ன சொல்லாற் சொன்னதைச் செய்தவனாம் சொல்லரும் காந்திநம் மெய்த்தவனே.
புண்ணுண் டாக்கிடப் பேசாமல் புரைதரும் எழுத்தால் ஏசாமல் பண்ணும் காரியம் அனைத்திலுமே பழுதற அருள்நெறி நினைத்தவனாம் அண்ணல் காந்தியின் புகழேதான் அஹிம்சை என்பதன் அகராதி எண்ணில் அஹிம்சா அறநெறியை இவன்போல் நடத்திய பிறரறியோம்.
கோபம் எதிலும் கொள்ளாது கொண்டவர் தமையும் எள்ளாது பாபம் என்றதைப் புரியாது பகவான் சிந்தனை பிரியாது தீபம் போல்அருள் ஒளிவீசும் திருத்திட வேநன் மொழிபேசும் சாபம் நீக்கிய காந்திமகான் சத்தியச் சுதந்தரச் சாந்தநெறி.
அச்சம் என்பதை அறியாது ஆசை எதிலும் குறியாது துச்சம் தனதுயிர் எனவெண்ணித் துன்பம் நீக்கிடத் துணைபண்ணும் பச்சைக் குழந்தையின் களிப்போடும் பழுத்தநற் கிழவரின் விழிப்போடும் விச்சை புரிந்தது காந்திமகான் விடுதலை தரவரும் சாந்தவழி.
கோழைத் தனமதில் கிடையாது கொள்கையில் சோர்வு அடையாது வாழைக் கனியினும் மென்மையது வயிரம் உருக்கெனும் வன்மையது கூழைக் கும்பிடு போடாது கொச்சை வெற்றிகள் நாடாது ஏழை எளியவர் குறைநீக்கும் எண்ணம் ஒன்றே அதன்நோக்கம்.
விஞ்ஞா னத்தின் வேகத்தால் விரிந்துள எந்திர மோகத்தால் அஞ்ஞா னங்கள் மிதமிஞ்சி அழித்திடு மோநமை எனஅஞ்சும் இஞ்ஞா லத்தின் துயர்நீக்க இந்தியத் தாயின் பெயர்காக்க மெய்ஞ்ஞா னத்தின் உருவேபோல் மேவிய காந்தியின் வரவாலே
ஆயுத பலங்களில் மதிப்பிழந்தோம் ; ஆன்ம பலத்தின் துதிப்பறிந்தோம் ; தீயன போர்வெறி இழுக்குகளைத் திக்குகள் யாவினும் முழக்கிடுவோம், தாயினும் இனியவன் இந்நாட்டின் தந்தைநம் காந்தியின் வழிகாட்டும் தூயநல் லருள்நெறி சூழ்ந்திடுவோம் ; துன்பமில் லாமல் வாழ்ந்திடுவோம்.
63. காந்தியமும் தமிழனும்
பரதேசி என்றுவந்தோர் யாரா னாலும் பரிவோடே உபசரித்துப் பங்கும் தந்த ஒருதேசம் உலகத்தில் இருக்கு மானால் உண்மையது தமிழ்நாடு ஒன்றே யாகும் ; வருதேச காலத்தின் வர்த்த மானம் வகைவேறு காட்டுகின்ற வருத்த மொன்றும் கருதாமல் நமதுகுணம் கலைந்தி டாமல் கருணையன்றே பின்பற்றிக் கடமை செய்வோம்.
தமிழ்நாட்டின் சரித்திரத்தை மனத்தில் வைத்துத் தாராளத் தமிழர்களின் தன்மை காத்தே அமிழ்தான தமிழ்மொழியில் அடங்கி யுள்ள அகிலத்தின் நல்லறிவாம் அனைத்துங் கண்டு நமதாகும் மிகச்சிறந்த நாக ரீகம் நானிலத்துக் கிப்போது நன்மை காட்ட எமதாகும் மிகப்பெரிய கடமை யென்றே எண்ணியெண்ணித் தீர்மானம் பண்ண வேண்டும்.
பலபலவாம் தீர்மானம் படிக்க வேண்டா ; பகட்டாகப் பேசிமட்டும் பயன்வா ராதே ; உலகினுக்கு வேண்டுவதும் ஒன்றே ஒன்றாம் ; உத்தமனார் காந்திவழி உபதே சந்தான் கலகமின்றி மனிதரெல்லாம் கலந்து வாழக் கருணைவழி காட்டஒரு கட்சி வேண்டும் ; இலகுமிந்தத் திருப்பணியை உலகுக் காற்ற இந்தியரே மிகமிகவும் ஏற்ற மாவார்.
64. சொன்னபடி செய்வோம்
வானிருந்து ஒருதேவன் வலிய வந்து வகைகெட்ட மனிதருக்கு வழியைக் காட்டி தானிருந்து நமக்காகத் தவங்க ளாற்றித் தருக்கான தூஷணைகள் பலவுந் தாங்கி மோனநெறி தவறாத காந்தி யாக முன்னிருந்து காரியங்கள் முயலும் வேளை ஏனிருந்து நாம்பலவும் எண்ண வேண்டும் என்னசொன்னார் காந்தியதைப் பண்ணு வோமே.
காந்தியர்க்குக் கைபோல உதவி நின்று கடல்கடந்த ஆப்பிரிக்காக் கண்டந் தொட்டுச் சேர்ந்திருந்து பாடுபட்டு ஜெயமும் பெற்ற சிறப்பெல்லாம் தமிழருக்கே மிகவும் சேரும். நேர்ந்திருக்கும் நெருக்கடியை வெல்ல இன்றும் தமிழர்துணை காந்தியவர் நினைப்பார் உண்மை சோர்ந்துவிடக் கூடாது தமிழா! காந்தி சொன்னபடி செய்வதுதான் உன்றன் ஜோலி.
65. காந்தீய சேவை
சாந்தி சாந்தி சாந்தி யென்று சங்கு கொண்டே ஊதுவோம் ; சோர்த்தி ருக்கும் உலகி னுக்குச் சுகமெ டுத்தே ஓதுவோம். மாந்த ருக்குள் கோப தாப வாது சூது மாறவே காந்தி சொன்ன மார்க்க மின்றிக் கதிந மக்கு வேறிலை.
தமிழ ருக்குக் கருணை எண்ணம் தாயின் பாலில் தந்தது குமிழை யத்த உயிரை நல்ல கொள்கைக் கீய முந்திடும் அமுத மொத்த காந்தி மார்க்கம் தமிழ கத்தின் செல்வமாம் நமது சேவை அதனை ஏந்தி நாட்டி லெங்கும் சொல்வதாம்.
66. தமிழா மறக்காதே!
காந்தியை மறைக்காதே--தெய்வக் கருணையத் துறக்காதே ; சாந்தியை இழக்காதே--என்றும் சத்தியம் அழிக்காதே. (காந்தி)
வள்ளுவன் திருக்குறளைத்--தந்து வான்புகழ் பெருக்கடைந்த தெள்ளிய அமிழ்தமெனும்--மொழியாம் தெய்வத் தமிழ்மகனே! .. (காந்தி)
திருக்குறள் அறிவெல்லாம்--ஒன்றாய்த் திரண்டுள நெறியெனவாம் உருக்குறள் காந்திமகான்--தந்துள ஒப்பரும் சாந்த வழி. ... (காந்தி)
அவ்வழி பற்றிநின்றோம்--உலகின் அற்புத வெற்றி கண்டோம் எவ்வித இடைஞ்சலையும்--அதனால் எளிதில் கடந்திடலாம். ..(காந்தி)
போர்வெறிக் கெடுபிடியால்--அஞ்சிப் பூதலம் நடுநடுங்க நேர்ந்துள சமயம்இதில்--காந்தியின் நினைப்பே அமைதிதரும். ..(காந்தி)
ஒவ்வொரு காரியமும்--பகவான் உணர்வொடு கோருவதாய்த் தெய்வீக பக்தியுடன்--தேசத் திருப்பணி சக்திதரும். .. (காந்தி)
பிரார்த்தனை செய்யாமல்--காந்தி பெயர்த்தடி வைப்பாரோ? பார்த்தோம் கண்ணார--அதனால் பயன்பெற எண்ணோமா? .. (காந்தி)
பக்தியில் குறைந்துவிட்டோம்--மோகம் பதவியில் நிறைந்துவிட்டோம் சத்திய சாந்தத்தில்--மிகவும் சலிப்பெனச் சோர்ந்துவிட்டோம். .. (காந்தி)
வேறுள பேச்செல்லாம்--சற்றே விலக்கிநம் மூச்செல்லாம் தேறிய காந்திவழி--மீண்டும் திடமுற ஆய்ந்திடுவோம். .. (காந்தி)
காந்தியம் நம்உடைமை--அதனைக் காப்பது நம்கடமை காந்தியம் வாழ்ந்தொளிர--தெய்வக் கருணையைச் சூழ்ந்திடுவோம். .. (காந்தி)
67. படிப்பினை
காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும் கடவு ளென்ற கருணையைநாம் கருத வேண்டும் காந்தியைப்போல் காற்றாட உலவ வேண்டும் களைதீரக் குளிர்நீரில் முழுக வேண்டும் காந்தியைப்போல் அளவாகப் புசிக்க வேண்டும் கண்டதெலாம் தின்னாமை காக்க வேண்டும் காந்தியைப்போல் ஒழுங்காகத் திட்டம் போட்டுக் காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.
சொன்னசொல்லை காந்தியைப்போல் காக்க வேண்டும் சோம்பலதைக் காந்தியைப்போல் துறக்க வேண்டும் மன்னவனோ பின்னெவனோ காந்தி யைப்போல் மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும் சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும் சிறுமையின்றிக் காந்தியைப்போல் சிறப்புத் தந்தே 'என்னகுறை? எங்கு வந்தீர்?' என்னக் கேட்டும் இன்முகமுமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.
குற்றமொன்று நாம்செயினும் காந்தி யைப்போல் கூசாமல் மன்னிப்புக் கோர வேண்டும் ; மற்றவர்கள் பெரும்தவறு செய்திட் டாலும் மன்னித்துக் காந்தியைப்போல் மறக்க வேண்டும் ; உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்தி டாமல் ஓரமின்றிக் காந்தியைப்போல் உண்மை காட்டிச் சற்றுமவர் துன்பமுறாச் சலுகை பேசிச் சரிப்படுத்தும் காந்தியைப்போல் சகிப்பு வேண்டும்.
67. படிப்பினை
காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும் கடவு ளென்ற கருணையநாம் கருத வேண்டும் காந்தியைப்போல் காற்றாட உலவ வேண்டும் களைதீரக் குளிர்நீரில் முழுக வேண்டும் காந்தியைப்போல் அளவாகப் புசிக்க வேண்டும் கண்டதெலாம் தின்னாமை காக்க வேண்டும் காந்தியைப்போல் ஓழுங்காகத் திட்டம் போட்டுக் காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.
சொன்னசொல்லை காந்தியைப்போல் காக்க வேண்டும் சோம்பலதைக் காந்தியைப்போல் துறக்க வேண்டும் மன்னவனோ பின்னெவனோ காந்தி யைப்போல் மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும் சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும் சிறுமையின்றிக் காந்தியைப்போல் சிறப்புத் தந்தே 'என்னகுறை? எங்கு வந்தீர்?' என்னக் கேட்டும் இன்முகமுமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.
குற்றமொன்று நாம்செயினும் காந்தி யைப்போல் கூசாமல் மன்னிப்புக் கோர வேண்டும் ; மற்றவர்கள் பெரும்தவறு செய்திட் டாலும் மன்னித்துக் காந்தியைப்போல் மறக்க வேண்டும் ; உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்தி டாமல் ஓரமின்றிக் காந்தியைப்போல் உண்மை காட்டிச் சற்றுமவர் துன்பமுறாச் சலுகை பேசிச் சரிப்படுத்தும் காந்தியைப்போல் சகிப்பு வேண்டும்.
எத்தனைதான் கடிதங்கள் வந்திட் டாலும் காந்தியைப்போல் சலிப்பின்றி எல்லோருக்கும் நித்தநித்தம் தவறாத கடமை யாக நிச்சயமாய்ப் பதில்எழுதும் நியமம் வேண்டும் புத்திகெட்ட கேள்விசிலர் கேட்டிட் டாலும் பொறுத்துவிடை காந்தியைப்போல் புகல வேண்டும் பத்தியம்போல் பதற்றமுள்ள பாஷை நீக்கிப் பரிவாகப் பணிமொழிகள் பதிக்க வேண்டும்.
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாய் எண்ணிக் காந்தியைப்போல் பொதுநோக்கும் பொறுமை வேண்டும் மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமா றாமல் காந்தியைப் போல் மனதடக்கப் பயில வேண்டும் வெகுட்சிதனை வேரோடு களைந்து நீக்கக் காந்தியைப்போல் விரதங்கள் பழக வேண்டும் நிகழ்ச்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப் பார்த்து நேர்மையுடன் குற்றமெல்லாம் நீக்க வேண்டும்.
வருகின்ற யாவருக்கும் எளிய னாகக் காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம் வேண்டும் தருகின்ற சந்தேகம் எதுவா னாலும் காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம் செய்து திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்து வைத்து திடமறிந்த வழிகாட்டும் தெளிவு வேண்டும். புரிகின்ற புத்திமதி எதுசொன் னாலும் புண்ணின்றிக் காந்தியைப்போல் புகட்ட வேண்டும்.
எத்தொழிலைச் செய்தாலும் காந்தியைப் போல் எஜமானர் கடளென எண்ண வேண்டும் சத்தியத்தைக் கருணையுடன் சாதித் திட்டால் சரியாக மற்றதெல்லாம் சாயும் என்ற பத்தியத்தைக் காந்தியைப்போல் பார்த்துக் கொண்டால் பாதகமோ சாதகமோ பலன்க ளெல்லாம் நித்தியனாம் சர்வேசன் கடமை யென்ற நிஜபக்தி காந்தியைப்போல் நிலக்க வேண்டும்.
உழைப்பின்றிச் சுகம்விரும்பல் ஊனம் என்று காந்தியைப்போல் எல்லோரும் உணர வேண்டும் அழைப்பின்றித் துன்பமுற்றோர் அருகில் ஓடி காந்தியைப்போல் அவர்க்குதவும் அன்பு வேண்டும் பிழைப்பின்றிப் பரதவிக்கும் ஏழைமக்கள் பின்பற்றிக் கைத்தொழிலின் பெருமைகொண்டு களைப்பின்றிப் பசிதீரும் வழியைக் காட்டக் காந்தியைப்போல் கைராட்டை நூற்க வேண்டும்.
மனிதரெல்லாம் ஒருகடவுள் மக்க ளென்று காந்தியைப்போல் மனமார மதிக்க வேண்டும் புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச் சொல்லிப் போர்மூட்டும் மதவெறியைப் போக்க வென்றே அனுதினமும் தவங்கிடந்த காந்தி அண்ணல் அனுஷ்டித்த சமரசத்தில் ஆர்வம் வேண்டும் தனதுமதம் தனதுஇனம் மேல்என் றெண்ணும் தருக்குகளைக் காந்தியைப்போல் தவிர்க்க வேண்டும்.
சிறுதுளியும் வீண்போகாச் செலவு செய்யும் காந்தியைப்போல் சிக்கனங்கள் பழக வேண்டும் பிறிதொருவர் பாடுபட்டுத் தான்சு கிக்கும் பேதைமையைக் காந்தியைப்போல் பிரிக்க வேண்டும் நெறிதவறி வருகிறது சொர்க்க மேனும் நீக்கிவிட காந்தியைப்போல் நேர்மை வேண்டும் குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்துக் குணநலத்தின் காந்தியைப்போல் கொள்கை வேண்டும்.
வீரமென்றும் வெற்றியென்றும் கோப மூட்டி வெறிகொடுக்கும் பேச்சையெல்லாம் விலக்கி எங்கும் ஈரமுள்ள வார்த்தைகளை எவர்க்கும் சொல்லி இனிமைதரும் காந்தியைப்போல் இரக்கம் வேண்டும் காரமுள்ள கடும்சொல்லைக் கேட்டிட் டாலும் காந்தியைப்போல் கலகலத்துச் சிரித்துத் தள்ளிப் பாரமுற்ற மனநிலையைப் பாது காத்துப் பகைமையெண்ணாக் காந்திமுறை பயில வேண்டும்.
பொதுநலத்தைக் காந்தியைப்போல் மொழுதும் எண்ணிப் பொறுப்புணர்ந்து சேவைகளைப் புரிய வேண்டும் பொதுப்பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப் பொழுதுமதன் கணக்குகளைப் பொறித்து நீட்டித் துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கொடுத்தி டாமல் தூய்மையுள்ள அறங்களுக்குத் துணைமை யாக்கும் மதிநலத்தை காந்தியைப்போல் மனதிற் காத்து மக்களுக்குத் தொண்டுசெய்வோர் மலிய வேண்டும்.
மதமெனுமோர் வார்த்தையையே மறந்து வாழ்ந்தான் மாசறியா அன்பினையே வளர்த்த வள்ளல் சதமெனுமோர் சத்தியத்தைச் சார்ந்தி டாத சடங்குகளை விட்டொழிக்கச் சக்தி தந்தான் விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட் டாலும் வேற்றுமையுள் ஒற்றுமையே விளக்கி வைத்தான் இதம்மிகுந்த காந்திஎம்மான் சரித்தி ரம்தான் இந்நாட்டின் வேதமென இசைக்க வேண்டும்.
ஜாதிகுலம் பிறப்பையெண்ணும் சபலம் விட்டோன் சமதர்ம சன்மார்க்கம் சாதித் திட்டோன் நீதிநிறி ஒழுக்கமென்ற நிறைக ளன்றி நேர்மையற்ற தேர்வுகளை நீக்கி நின்றோன் ஆதிபரம் பொருளான கடவுட் கல்லால் அகிலத்தில் வேறெதற்கும் அஞ்சாச் சுத்தன் ஜோதிபெருங் கருணைவள்ளல் காந்தி சொல்லே சுருதியென மக்களெலாம் தொழுதல் வேண்டும்.
மந்திரங்கள் ஏவாமல் மயங்க வைத்தான்! மாயங்கள் புரியாமல் மலைக்கச் செய்தான்! தந்திரங்கள் இல்லாமல் தலைவன் அனான்! தண்டனைகள் பேசாமல் தணியச் செய்தான்! அத்தரங்கம் ஒற்றரில்லா அரச னானான்! அண்ணலெங்கள் காந்திசெய்த அற்பு தங்கள் எந்தஒரு சக்தியினால் இயன்ற தென்றே எல்லோரும் கூர்ந்தறிய எண்ண வேண்டும்.
போனவிடம் எங்கெங்கும் புதுமை கொள்ளும் புகுந்தமனை ஒவ்வொன்றும் பூரிப் பாகும் கானகமும் கடிமனைப்போல் களிப்புச் செய்யும் கல்லணையும் மெல்லணையாய்க் கனிவு காட்டும் ஈனர்களும் தரிசனத்தால் எழுச்சி கொள்வார் இமையவரும் அதிசயித்தே இமைத்து நிற்பார் தீனரெல்லாம் பயமொழிவார் தீரன் காந்தி திருக்கதையே தெருக்களெலாம் திகழ வேண்டும்.
பாடமெல்லாம் காந்திமயம் படிக்க வேண்டும் பள்ளியெல்லாம் காந்திவழி பழக வேண்டும் நாடகங்கள் காந்திகதை நடிக்க வேண்டும் நாட்டியத்தில் காந்திஅபி நயங்கள் வேண்டும் மாடமெல்லாம் காந்திசிலை மலிய வேண்டும் மனைகளெல்லாம் காந்திபுகழ் மகிழ வேண்டும் கூடுமெல்லா வழிகளிலும் காந்தி அன்புக் கொள்கைகளே போதனையாய்க் கொடுக்க வேண்டும்.
கல்வியெல்லாம் காந்திமணம் கமழ வேண்டும் கலைகளெல்லாம் காந்திகுணம் காட்ட வேண்டும் சொல்வதெல்லாம் காந்திஅறம் சொல்ல வேண்டும் சூத்திரமாய்க் காந்தியுரை துலங்க வேண்டும் வெல்வதெல்லாம் காந்திவழி விழைய வேண்டும் வேள்வியென்றே அவர்திருநாள் விளங்கவேண்டும் நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற நாயகனாம் காந்திசொன்ன நடத்தை வேண்டும்.
குண்டுபட்டும் திடுக்கடைந்து குலுங்கி டாமல் கொள்கைதரும் ராமஜெபம் ஒன்றே கூறிக் கொண்டமனச் சாந்திநிலை குலைத்தி டாமல் கோணலுற்ற வாய்வெறித்துக் குளறி டாமல் அண்டையயல் துணைதேடி அலண்டி டாமல் அமைதியுடன் பரமபதம் அடைந்தார் காந்தி கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதா னுண்டோ கற்பனையாய் இப்படிஓர் கவிதான் உண்டோ?
காடுமலை குகைகளிலே தவங்கள் செய்து காலன்வர வஞ்சாத கதைகள் உண்டு மேடைகளில் உயிர்கொடுப்பேன் என்று சொல்லும் மெலுக்கான வாய்வீரர் வெகுபே ருண்டு நாடுகெடும் மதவெறியை மாற்ற வேண்டிக் குண்டுபட்டே நான்சாக வேண்டும் என்றார் ஈடுசொல்ல முடியாத தியாகம் செய்ய இப்படியார் காந்தியைப்போல் உயிரை ஈந்தோர்?
சத்தியமே தம்முடைய தெய்வ மாகச் சாந்தநிலை குறையாநல் தவசி காந்தி இத்தகைய மரணமுற்ற தேனோ என்றே இறைவனுக்குச் சாபமிட்டிங் கேங்கு கின்றோம் பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி பாலிப்ப தன்றோஅப் பகவான் வேலை? அத்தகைய சாவேதான் அடைய வேண்டி ஆசைசொன்னார் காந்தியதை அமலன் ஈந்தான்.
கூழுமின்றிப் பரதவிக்கும் ஏழை மக்கள் குறைதீர்த்துப் பொய்சூது கொலைகள் நீக்கி வாழுமுறை இன்னதென வாழ்த்து காட்டி வானுறையும் தெய்வமென எவரும் வாழ்த்த மாளும்முறை இதுவெனவே மனிதர் போற்ற மாநிலத்தில் கண்டறியா மரணம் ஏற்றான் நாளும்அவன் பெரும்புகழை நயந்து போற்றி நானிலத்தோர் நல்வாழ்வு நாட வேண்டும்.
68. உலகம் வாழ்க!
கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன் செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை தேசீய பாரதியின் திறமும் இல்லை புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா உத்தமராம் காந்தியரை உவந்து பேச.
சொல்லுவது எல்லார்க்கும் சுலப மாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம் எல்லையின்றி நீதிகள் எழுது வார்கள் எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார் தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள் சொன்னதுபோல் செயல்முயன்றார் இவரைப் போல இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.
கொலைகளவு பொய்சூது வஞ்ச மாதிக் கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு தலைசிறந்த பிறவியென்னும் மனித வர்க்கம் சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி விலைமதிக்க முடியாத செல்வ மன்றோ? வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?
புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும் போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும் கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவை தன்னில் களிப்போடே உயிர்கொடுத்த கதையைக் கேட்டும் சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையும் காத்த தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும் உத்தமரைக் கண்டோமா என்னும் ஏக்கம் ஒவ்வொருநாள் நமக்கெல்லாம் உதிப்ப துண்டே!
"குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும் கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும் ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி நாற்புறமும் பலர்உதைத்து நலியத் திட்ட அத்தனையும் நான்பொறுத்தே அஹிம்சை காத்தும் அனைவரையும் அதைப்போல் நடக்கச் சொல்லி ஒத்துமுகம் மலர்ந்(து)உதட்டில் சிரிப்பி னோடும் உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்த ஆசை"
என்றுரைத்த காந்தியைநாம் எண்ணிய பார்த்தால் எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகு மன்றோ? நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில் நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ? கன்றினுக்குத் தாய்ப்போல உயிர்கட் காகக் கரைந்துருகும் காந்தியைநாம் நேரில் கண்டோம் இன்றுலகின் துயர்நீக்கச் சிறந்த மார்க்கம் எடுத்துரைக்கக் கொடுத்துவைத்தோம் இருந்து கேட்க.
கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம் கடலென்றால் குறைவாகும் கருணை வெள்ளம் புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம் தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி தளர்வாகும் எழுபதுடன் ஒன்ப தாண்டில் யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம் ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க!
69. சங்கநாதம் கேட்குது
சாந்த காந்தி சத்தி யத்தின் சங்க நாதம் கேட்குது! ஆய்ந்து பார்க்கத் தேவை யில்லை அதிலி ருக்கும் நன்மையை மாந்த ருக்குள் சமுக வாழ்வு மாறு மிந்தப் பொழுதிலே சோர்ந்தி டாமல் நமது நாட்டை துயில்எ ழுப்பும் ஓசையாம்.
இடிஇ டித்து மின்னல் மின்னி இருள் கவிந்தே எங்கணும் கிடுகி டுத்து உலக மெங்கும் கிலிபி டித்த வேளையில் குடுகு டுத்த கிழவர் காந்தி குமரர் நாணக் கூவினார் துடிது டித்து உண்மை போற்றும் தொண்டர் யாரும் கூடுவோம்.
வீடு பற்றி வேகும் போது வீணை மீட்டும் வீணர்போல் நாடு முற்றும் புதிய வாழ்வை நாடு கின்ற நாளிலே பாடு மிக்க சேவை விட்டுப் பதவி மோகம் பற்றினால் கேடு என்ற எச்ச ரிக்கை கிழவர் காந்தி கூக்குரல்.
கடல்க லங்கப் புயல டித்துத் தத்த ளிக்கும் கப்பலின் திடமி குந்த தெளிவு கொண்ட திசைய றிந்த மாலுமி இடம றிந்து காலங் கற்ற இந்த நாட்டின் மந்திரி கடன றிந்த காந்தி போதம் கவலை போக்கும் மந்திரம்.
கர்ம வீரன் காந்தி என்னும் காள மேகக் கர்ஜனை தர்ம மான மழைபொ ழிந்து தரணி முற்றும் குளிரவே வர்ம மான வார்த்தை யாவும் வாது சூது செய்திடும் மர்ம மான எதையும் விட்ட ராஜ மார்க்க மதிதரும்.
வீர மென்றும் சூர மென்றும் வெறிகொ டுக்கும் பேச்சினால் கார முள்ள வார்த்தை யாவும் யாரை என்ன செய்திடும்? தீரர் ஞான காந்தி சங்கம் திசைமு ழங்கக் கேட்குது சேர வாரும் மனித வாழ்க்கை சீர்தி ருத்த வேண்டுவோர்.
|