அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
உலகில் எத்துனையோ அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்துள்ளன!! உலகமே ஒரு அதிசயம் தான். நம் எல்லோரையும் தாங்கி பேரண்டம் எதுவுமே இல்லாத அந்தரத்தில் அழகாக நிற்பதே அதிசயம் தான். இப்படிப்பட்ட ஒரு அதிசயத்தினை, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள உயிரிகளைப் பற்றியே இந்த கட்டுரை. எங்கும் இருக்கும் ஒரு விந்தையின் கதையை இப்போது பதியப்போகிறேன்.
அவைகள் தான் நுண்கிருமிகள். நுண் கிருமிகள் பற்றி தற்போது சவர்காரம் (அதாங்க soap ) மற்றும் பல்வேறு மருந்திட்ட திரவங்கள் (lotions) விளம்பரங்களில் கேடு விளைவிப்பவைகள் என்றும் அவை நோய் உண்டாக்குபவை என்றும் தகவல் தருகிறார்கள். ஆனால் அவைகள் அனைத்தும் உண்மை அல்ல. முதலில் நுண்கிருமிகள் என்றால் என்ன, அவைகள் எங்கே உள்ளன, அவைகளின் பயனென்ன என்பதினை காண்போம். நுண்கிருமிகள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளன. நம் உடலிலும், நாம் வாழும் சுற்றுப்புறத்திலும், நம் உணவிலும் கூட அவைகள் உள்ளன. நுண் உயிரிகள் இல்லாத இடமே இல்லை எனலாம். பார்க்கப்போனால் நுண்உயிரிகள் தான் நம் மூதாதையர்கள். பரிணாமக்கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு செல் உயிரிகளே தோற்றத்தில் முதலிடம் வகிக்கின்றன. ஓர் செல் உயிரி என்றாலும் அதனை நாம் சாதரணமாக எண்ணிவிடக்கூடாது. முதலில் ஒரு செல் என்பதனையே நிலைக்கருவிலி (prokaryote) மெய்க்கருவுயிரி (eukaryote) என்று பிரிப்பார்கள். இதில் நிலைக்கருவிலி என்பது மிகவும் சாதாரணமான செல் அமைப்பினைக் கொண்டதாகும். மெய்க்கருவுயிரி என்பது சற்று சிக்கலான செல் அமைப்பினைக் கொண்டதாகும். இவ்விரு வகைகளையும் அதனுடைய செல்சுவர் அமைப்பு, செல் உறுப்புகள், மரபணுவின் ஒப்புமை, மரபணுவினை சுற்றியுள்ள சவ்வு இதனைக்கொண்டு பிரிப்பார்கள். சரி இவ்வளவு கடுமையான விஷயங்களெல்லாம் இப்போது வேண்டாம்.
நுண் கிருமிகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எத்துனை வகையான நுண்கிருமிகள் இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?? வழக்கமாக விளம்பரப்படங்களில் கிருமிகளை ஒரு புழுவைப்போலவும், சிறு சிறு குச்சிகளைப் போலவும் காட்டுகிறார்கள். ஆனால் நுண்கிருமிகள் எண்ணற்றவை.நுண்கிருமிகள் ஒன்று இரண்டு வகையான கிருமிகள் மட்டும் அல்ல, பல லட்சம் எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. ஒரு ஆய்வில் சுமார் 87 லட்சம் கிருமி வகைகள் உண்டென்று சொல்லப்படுகிறது (இது அவைகளின் வகைகள்தாங்க). இதுவும் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தான். இந்த புவியில் சுமார் 5 x 10-30 (பத்தின் அடுக்கு முப்பது) (5 * 1000000000000000000000,00,00,00,000 அவ்வளவுதான்!! ) நுண்கிருமிகள் உண்டென்று ஜார்ஜியா பல்கலைக் கழகத்தினை சேர்ந்த பேராசிரியர் மற்றும் அவர் குழு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் விட நம்ம வயிற்றுக்கு வாருங்கள், அங்கே எவ்வளவு கிருமிகள் உண்டென்று உங்களுக்கு தெரியுமா? நமது வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகளின் தொகை நமது உடலில் உள்ள செல்களின் தொகையினை விட 10 மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வயிற்றினை விடுங்கள், நமது வாயில் இருக்கும் நுண்கிருமிகளின் தொகை உலகில் உள்ள ஜனத்தொகையை காட்டிலும் இரு மடங்காகும். சற்று எண்ணிப்பாருங்கள், நாமே நுண்ணுயிரிகளின் உறைவிடமாகவும் விளங்குகிறோம். பற்பசை விளம்பரங்களில் காண்பிப்பது போல எந்த பற்பசைக்கும் வாயில் உள்ள 100% கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது கிடையாது. பல் துலக்கிய பின்னர் உங்கள் வாயில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை குறையும் அவ்வளவே. இன்னொரு வியக்கும் செய்தி என்னவென்றால், பலர் வாயில் கிருமிகள் இல்லையென்றால் நமக்கு பற்சொத்தை வராது என்று எண்ணுகின்றனர் அனால் உண்மை என்னவெனில் வாயில் பல்வேறு வகையான கிருமிகள் உள்ளன, அவற்றில் பற்சொத்தை உண்டாகும் கிருமிகள் மிக மிகக்குறைவே. நமது வாயில் இருக்கும் மற்ற நல்ல வகையான நுண்கிருமிகள் அகற்றப்படும் போது இந்த பற்சொத்தை ஏற்படுத்தும் கிருமிகள் பற்களில் மையம் கொண்டு பற்சொத்தை உண்டாக்குகின்றன. இதைப்போலவே சவர்காரம் (சோப்பு) விளம்பரங்களிலும், அது எல்லா கிருமிகளையும் அழிப்பது போலவும், கிருமிகள் இல்லாது வைப்பது போலவும் காட்டப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. மேற்கூறிய 87 லட்சம் கிருமிகளின் வகைகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான கிருமிகளே நோய் உண்டாக்குபவை. மற்ற கிருமிகள் எல்லாம் நோய் உண்டாக்காத வகைகளே. நாம் பிறந்தவுடனேயே நமது உடலில் கிருமிகள் புகுந்து விடுகின்றன. மனித உடலில் மூளை, இரத்தம்/ இரத்த ஓட்டப்பாதை மற்றும் நுரையீரல் போன்றவற்றில் நுண்கிருமிகள் இருப்பதில்லை. நம் வயிற்றில் உள்ள கிருமிகளின் பங்கு நம் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியம். அவைகள் பல்வேறு வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி கோலுகின்றன. ஒரு ஆரோக்கியமான மனிதன் என்பவன் கிருமிகள் அற்றவன் அல்ல, அவன் உடலில் தேவையான கிருமிகளை தேவையான அளவு வைத்திருப்பவன். இவ்வகையான கிருமிகள் நமக்கு நோய் உண்டாக்கும் கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கின்றன. இவ்வகையான கிருமிகள் நம் உடலில் குறைந்தாலே நமக்கு நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் என பல ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் அதிகமாக நுண்ணுயிர்க்கொல்லி (ஆண்டிபியோடிக் தாங்க) எடுத்துகொள்ளகூடது என்றும் அறிவியலார்கள் கூறுகிறார்கள். அதிகமாக நாம் அதனை உட்கொள்வதினால்,இந்த நோய் உண்டாக்காத கிருமிகளின் எண்ணிக்கையினை குறைத்து நோய் உண்டாக்கும் கிருமிகளுக்கு வழிகோலுகிறது. சரி நண்பர்களே… இன்னும் நுண்கிருமிகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை அடுத்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.
மீண்டும் சிந்திப்போம்!!! நன்றி!!!
வலைத்தமிழுக்காக
சௌந்தர்
(படித்துவிட்டு தங்களது மேலான கருத்துகளை பதியவும்)
|