|
||||||||
தெய்வப் பாடல்கள் - தோத்திர பாடல்கள் பகுதி-3 |
||||||||
17. மஹாசக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி-அன்னை
அவளே துணையென் றனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம் 1
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு 2
வையகத்துக் கில்லை,மனமே!நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர். 3
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணிய
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண். நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு 4
18. ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 1
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 2
நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்சக்தியென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 3
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 4
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்! 5
19. பராசக்தி
கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார்;
காவி யம்பல நீண்டன கட்டென்பார்;
விதவி தப்படு மக்களின் சித்திரம்
மேவி நாடகச் செய்யுளை மேவென்பார்;
இதய மோஎனிற் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேடில தன்னை பராசக்தி
இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. 1
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப்பா டென்றொரு தெய்வங் கூறுமே;
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டி லேயறங் காட்டெனு மோர் தெய்வம்;
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே. 2
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானி லத்தவர் மேனிலை யெய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்,
பண்ணி லேகளி கூட்டவும் வேண்டி நான்
மூட்டு மன்புக் கனலொடு வாணியை
முன்னுகின்ற பொழுதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசகித ஏழையேன்
கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள். 3
மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்
வானி ருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெ லாம்இடை யின்றிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்! என்று பாடுமென் வாணியே. 4
சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்;
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்,
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே! 5
20. சக்திக் கூத்து
ராகம்-பியாக்
பல்லவி
தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)
சரணங்கள்
1. அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)
2. புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே (தகத்)
3. மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று மைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென (தகத்)
4. இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்(தகத்)
21. சக்தி
துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி. 1
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;
பாம்பை அடிக்கும் படையே சக்தி;
பாட்டினில் வந்த களியே சக்தி;
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி. 2
வாழ்வு பெருக்கும் மமதியே சக்தி,
மாநிலம் காக்கும் மதியே சக்தி;
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி. 3
22. வையம் முழுதும்
கண்ணிகள்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்;
செய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே! 1
பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்;
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே! 2
வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவு கின்றோம்;
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே! 3
உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்;
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. 4
சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே. 5
மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்;
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே. 6
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி என்றுரை செய்தி டுவோம்;
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார்;சுடர்
ஒண்மைகொண்டார்,உயிர் வண்மை கொண்டார். 7
23. சக்தி விளக்கம்
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்;
சூதில்லை காணுமிந்த நாட்டீர்!மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம். 1
மூலப் பழம்பொருளின் நாட்டம்-இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்;
காலப் பெருங்கள்ததின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம் 2
காலை இளவெயிலின் காட்சி-அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;
நீல விசும்பினிடை இரவில்-சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி. 3
நாரண னென்று பழவேதம்-சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்;
சேரத் தவம் புரிந்து பெறுவார்-இங்கு
செல்வம் அறிவு சிவபோதம். 4
ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்
அன்னை யருள்பெறுதல் முக்தி;
மீதி உயிரிருக்கும் போதே-அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி. 5
பண்டை விதியுடைய தேவி-வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி,
கண்ட பொருள்விளக்கும் நூல்கள்-பல
கற்றலில் லாதவனோர் பாவி. 6
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று;-அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று;
நேர்த்தி திகழும் அந்த ஒளியை-அந்த
நேரமும் போற்று சக்தி என்று. 7
24.சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
ராகம்-பூபாளம் தாளம்-சதுஸ்ர ஏகம்
கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதனைகள் யாவினையுங் கூடும்-கையைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற்றுக் கல்வினையுஞ் சாடும். 1
கண்ணைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி வழியினையது காணும்-கண்ணைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தியமும் நல்லருளும் பூணும். 2
செவி, சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திசொலும் மொழியது கேட்கும்-செவி
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி திருப் பாடலினை வேட்கும். 3
வாய், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி புகழினையது முழங்கும்-வாய்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திநெறி யாவினையும் வழங்கும். 4
சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும்-அதைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதிருச் சுவையினை நுகரும்-சிவ
சக்தி தனக்கே எமது நாக்கு. 5
மெய்யைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதருந் திறனதி லேறும்-மெய்யைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதலற்ற வழியினைத் தேறும் 6
கண்டம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தமும் நல்லமுதைப் பாடும்-கண்டம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுடன் என் றும்உற வாடும். 7
தோள், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும்-தோள்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி பெற்று மேருவென ஓங்கும். 8
நெஞ்சம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற நித்தம் விரிவாகும்-நெஞ்சம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதைத்
தாக்கவரும் வாளொதுங்கிப் போகும். 9
சிவ, சக்தி தனக்கே எமது வயிறு-அது
சாம்பரையும் நல்லவுண வாக்கும்-சிவ
சக்தி தனக்கே எமது வயிறு-அது
சக்திபெற உடலினைக் காக்கும். 10
இடை, சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும்-இடை
சக்தி தனக்கே கருவி யாக்கு-நின்தன்
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். 11
கால், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாடியெழு கடலையுந் தாவும்-கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். 12
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாத்துவிகத் தன்மையினைச் சூடும். 13
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியற்ற சிந்தனைகள் தீரும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாரும் நல்ல உறுதியும் சீரும். 14
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி சக்தியென்று பேசும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும். 15
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி யென்றுகுதித் தாடும். 16
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தான் விரும்வில் மாமலையைக் பேர்க்கும் 17
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சந்ததமும் சக்திதனைச் சூழும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாவுபெறும் தீவினையும் ஊழும். 18
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-எதைக்
தான் விரும்பு னாலும்வந்து சேரும்-மனம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-உடல்
தன்னிலுயர் சக்திவந்து சேரும். 19
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-இந்தத்
தாரணியில் நூ றுவய தாகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும். 20
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-தோள்
சக்திபெற்று நல்ல தொழில் செய்யும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும். 21
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி நடையாவும் நன்கு பழகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-முகம்
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். 22
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-உயர்
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சத்திய விளக்குநித்தம் எரியும் 23
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-நல்ல
தாளவகை சந்தவகை காட்டும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சாரும்நல்ல வார்த்தைகளும் பாட்டும். 24
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியையெல்லோர்க்குமுணர்வுறுத்தும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும். 25
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திசக்தி யென்று குழலூதும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும். 26
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று வீணைதனில் பேசும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சக்திபரி மளமிங்கு வீசும். 27
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று தாளமிட்டு முழக்கும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும் 28
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திவந்து கோட்டைகட்டி வாழும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியருட் சித்திரத்தில் ஆழும் 29
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சங்கடங்கள் யானையும் உடைக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். 30
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சாரவரும் தீமைகளை விலக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும். 31
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியுறை விடங்களை நாடும். 32
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீங்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
தள்ளி விடும் பொய்ந்நெறியும் நீங்கும். 33
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியொளி நித்தமுநின் றிலகும். 34
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு. 35
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாரணியில் அன்பு நிலை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சர்வசிவ சக்தியினைக் காட்டும். 36
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாமதப்பொய்த் தீமைகளைப் பேர்க்கும் 37
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாக்கவரும பொய்ப்புலியை ஓட்டும். 38
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியநல் லிரவியைக் காட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அதில்
சாரவரும் புயல்களை வாட்டும். 39
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திவிர தத்தையென்றும் பூணும்-மதி
சத்திவர தத்தை யென்றுங் காத்தால்-சிவ
சக்திதரும் இன்பமும்நல் லூணும். 40
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-தெளி
தந்தமுதப் பொய்கையென ஒளிரும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சந்ததமும் இன்பமுற மிளிரும். 41
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையொரு சக்தியென்று தேரும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தாமதமும் ஆணவமும் தீரும். 42
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையவள் கோயிலென் றுகாணும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும். 43
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியெனும் கடலிலோர் திவலை-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-சிவ
சக்தியுண்டு நமக்கில்லை கவலை. 44
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்திதிரு மேனியொளி ஜ்வலிக்கும். 45
சிவ, சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்தி சக்தி என்றுகுதித் தாடு-சிவ
சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு. 46
25. சக்தி திருப்புகழ்
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்றோது;
சக்தி சக்தி சக்தீ என்பார்-சாகார் என்றே நின்றோது;
சக்தி சக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
சக்தி சக்தி என்றீ ராகில்-சாகா உண்மை சேர்ந்தீரே!
சக்தி சக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் வெற்றி-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றே செய்தால்-தானே செய்கை நேராகும்;
சக்தி சக்தி என்றால் அஃது-தானே முக்தி வேராகும்.
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ என்றே ஆடாமோ?
சக்தி சக்தி சக்தீ யென்றே-தாளங் கொட்டிப் பாடாமோ?
சக்தி சக்தி என்றால் துன்பம்-தானே தீரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் இன்பம்-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் செல்வம்- தானே ஊறும் கண்டீரோ?
சக்தி சக்தி என்றால் கல்வி-தானே தேறும் கண்டீரோ?
சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்தி சக்தி வாழீ என்றால்-சம்பத் தெல்லாம் நேராகும்;
சக்தி சக்தி என்றால் சக்தி-தாசன் என்றே பேராகும்.
17. மஹாசக்தி வெண்பா |
||||||||
by C.Malarvizhi on 22 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|