|
||||||||
தெய்வப் பாடல்கள் - தோத்திர பாடல்கள் பகுதி - 4 |
||||||||
26. சிவசக்தி புகழ்
ராகம்-தன்யாசி தாளம்-சதுஸ்ர ஏகம்
ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு-கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்திசக்தி சக்தியென்று சொல்லி-அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு. 1
ஓம்,சக்திமிசை பாடல்பல பாடு-ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு;
சக்திதருஞ் செய்கை நிலந் தனிலே-சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு. 2
ஓம்,சக்திதனை யேசரணங் கொள்ளு என்றும்
சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு,
சக்திபுக ழாமமுதை அள்ளு-மது
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளுன. 3
ஓம், சக்திசெய்யும் புதுமைகள் பேசு-நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு;
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி-அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு. 4
ஓம், சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -இதைச்
சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கை;
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை-அதில்
தண்ணமுத மாரிநித்தம் பெய்கை. 5
ஓம்,சக்திசக்தி சக்தியென்று நாட்டு-சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு;
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார்-புவிச்
சாதிகளெல் லாமதனைக் கேட்டு. 6
ஓம்,சக்திசக்தி சக்தியென்று முழங்கு-அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு;
சக்தியருள் கூடிவிடு மாயின்-உயிர்
சந்ததமும் வாழும்நல்ல கிழங்கு 7
ஓம்,சக்திசெய்யுந் தொழில்களை எண்ணு நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு;
சக்திதனை யேயிழந்து விட்டால்-இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு. 8
ஓம், சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு;
சக்திசில சோதனைகள் செய்தால்-அவள்
தண்ணருளென் றேமனது தேறு. 9
ஓம்,சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து;
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! 10
27. பேதை நெஞ்சே!
இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்! 1
நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?
மனமார உண்மையினைப் புரட்டலாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி,வீரார் தேவி,
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே! 2
சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;
சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே! 3
செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.
நமோநமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 4
பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;
பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;
கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,
நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;
நமோநம,ஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 5
28. மஹா சக்தி
சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். 1
பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். 2
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். 3
29. நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினீ)
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா.(உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம், (உஜ்ஜயினீ)
சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)
30. காளிப் பாட்டு
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்
31. காளி ஸ்தோத்திரம்
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.
எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே
கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.
என்த னுள்ள வெளியில்-ஞானத்-திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம் வேண்டா.
வான கத்தி னொளியைக்-கண்டே-மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும் வாழ்வேன்;
ஞான மொத்த தம்மா!-உவமை-நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின்-அழகை-வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை-எவரே-தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால்-ஆங்கே-நெஞ்சி ளக்க மெய்தும்.
காளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும், பாரில்-வேந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!வாழ்க நின்தன் அருளே!
32. யோக சித்தி் வரங் கேட்டல்
விண்ணும் கண்ணும் தனியாளும்-எங்கள்
வீரை சகித நினதருளே என்தன்
கண்ணுங் கருதும் எனக்கொண்டு-அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி-நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ?-உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?
நீயே சரணமென்று கூவி-என்தன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி
தாயே!யெனக்குமிக நிதியும்-அறந்
தன்னைக் காகுமொரு திறனும்-தரு
வாயே யென்று பணிந் தேத்திப்-பல
வாறா நின்றுபுகழ் பாடி-வாய்
ஓயே னாவதுண ராயோ?-நின
துண்மை தவறுவதொர் உலகோ?
காளீ வலியசா முண்டி-ஓங்
காரத் தலைவியென் னிராணி-பல
நாளிங் கெனையலைக்க லாமோ?-உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ?-மனல்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன்-அது
தாரா யெனிலுயிரைக் தீராய்-துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன்-கரு
நீலியென் னியல்பறி யாயோ?
தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்-என்தன்
முன்னைத் தீயவினைக் பயன்கள்-இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதியவுயி ராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகப்தெளிவு செய்த-எனுறும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடைய தாக்கி-உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு
மாறா வுடலுறுதி தந்து-சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி
நண்ணித் திகழும்முகந் தந்து-மத
வேளை வெல்லும்முறை கூறித்-தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
எண்ணுங் காரியங்க ளெல்லாம்-வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும்-தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும்-சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம்-மிக
நன்றா வுயத்தழுந்தல் வேண்டும்-பல
பண்ணிற் கோடிவகை இன்பம்-நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
கல்லை வயிரமணி யாக்கல்-செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல்-மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல்-என
விந்தை தோன்றிட இந்நாட்டை-நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.
கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை
நாடும் படிக்குவினை செய்து-இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்-கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய்-அடி
தாயே!உனக்கரிய துண்டோ?-மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனை
முற்றும் விட்டகல வேண்டும்.
ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும்-புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்-பல
பையச் சொல்லுவதிங் கென்னே! முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-எனை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன்-இனி
வையத் தலைமையெனக் கருள்வாய்-அன்னை
வாழி!நின்னதருள் வாழி!
ஓம் காளி!வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என்இராணி!
33. மஹா சக்தி பஞ்சகம்
கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளிநீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேயினை அஞ்சேன்.
இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்
தாயெனைக் காத்தலுன் கடனே. 1
எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்
யாவுமா நின்தனைப் போற்றி,
மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால். 2
நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும்,நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்
மயங்கினேன்;அதையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்.
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன். 3
ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே
அச்சமுந் தொலைந்தது;சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
போயின; உறுதிநான் கண்டேன்,
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே. 4
தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;
சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
அநந்தமா வாழ்கஇங் கவளே! 5
26. சிவசக்தி புகழ் |
||||||||
by C.Malarvizhi on 22 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|