சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளை பொது அமைப்பு என்று வர்ணித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என ஜூன் 3 ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தாங்கள் அரசின் நிதி உதவியுடன் செயல்படவில்லை என்றும், தாங்கள் பொது அமைப்புகள் அல்ல என்றும், அதனால் தங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது என்றும் எதிர்ப்புகள் வலுபெற்றன.இந்நிலையில், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும் வகையில் இருப்பதால், அந்த உத்தரவை செல்லாததாக ஆக்குவதற்கு அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்த அவசர சட்டத்தில், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், ‘பொது அமைப்பு’ என்ற வார்த்தைக்கான விளக்கத்தை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.இந்த அவசர சட்டம் தொடர்பான வரைவு நகலை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்துள்ளது. அதை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
|