நிலக்கரி சுரங்க ஊழல் புகாரை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சி.பி.ஐ யின் விசாரணை அறிக்கையை மத்திய சட்ட அமைச்சராக இருந்த, அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் திருத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது சி.பி.ஐ., இயக்குனரும் இதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து "சி.பி.ஐ அமைப்பிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து சி.பி.ஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை குழு உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது 41 பக்க ஆய்வு அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்தது. அதன் படி சி.பி.ஐ அமைப்புக்கு தனாட்சி அதிகாரம் வழங்கப்படும். மேலும் சி.பி.ஐ இயக்குனரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு தான் தேர்வு செய்யும். சி.பி.ஐ இயக்குனர் மீதான புகார் உண்மையென, மத்திய லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து, அதை ஜனாதிபதி ஏற்றால் மட்டுமே, சி.பி.ஐ இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச வழக்குகளில் விசாரணை நடத்துவதற்கு மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் போன்ற முக்கிய அம்சங்களை சுப்ரீம் கோர்டில் மத்தியக்குழு பரிந்துரைத்தது.
|