குருபக்தி என்பது மிகவும் முக்கியமானது . அது இப்போது குறைந்து வருவதை அறிவோம் . அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தால் ஓர் அடிப்படை உண்மை புரியும் . முன்பெல்லாம் குருகுல வாசத்தில் குரு அமர்ந்திருப்பார் . மாணவர்கள் நின்று கொண்டு பாடம் கேட்பார்கள் . அதனால் மரியாதை இருந்தது . இப்போது கல்விக் கூடங்களில் ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார் . மாணவர்கள் உட்கார்ந்து பாடம் கேட்கிறார்கள் . அதனால் மரியாதை போய்விட்டது . அதனால்தான் இப்படியொரு சம்பவம் நடந்தது . ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரை மதியச் சாப்பாட்டுக்குத் தன் வீட்டுக்கு வரும்படி அன்போடு அழைத்தார் . அதற்கு ஆசிரியர் காரணம் கேட்டார் . அதற்கு பையன் சொன்ன பதில் , “ வேறு ஒண்ணுமில்ல சரி எங்க அப்பா நேத்து ஒரு அல்சேஷன் நாய் வாங்கி வந்தார் . அந்நியர் வந்தால் கடிச்சுக் குதறும்னார் . அது உண்மையான்னு பாக்கத்தான் உங்களை கூப்பிடுகிறேன் . ”
பெருந்தலைவர் அரசியலில் பலருக்கு குருவாக இருந்தவர் . அரசியல் நுணுக்கங்களை அவரிடம் படித்தவர்கள் அநேகர் பேர் . அவருக்கே குருவாக இருந்தவர் தீரர் சத்தியமூர்த்தி . தன்னுடைய குருநாதரிடம் அளவில்லாத பக்தி கொண்டிருந்தார் பெருந்தலைவர் . எல்லா அரசியல் நுணுக்கங்களையும் ஒரு சீடனுக்கு உரிய பணிவோடு அவரிடமிருந்து அறிந்துகொண்டார் . அது போலவே காமராசர் காட்டும் அரசியல் சாதுர்யததைக் கண்டு வியந்து போனார் குருநாதர் . அதனால்தான் வாய்ப்பு வரும்போது தனக்குக் கிடைக்க வேண்டிய பதவியைக் கூட காமராசருக்கு விட்டுக் கொடுத்தார் சத்தியமூர்த்தி . 1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவிக்கு மிகுந்த போட்டியிருந்தது . சத்தியமூர்த்தி தான் போட்டியிலிருந்து விலகி காமராசரைத் தேர்தலில் நிற்க வைத்தார் . அதோடு மட்டுமல்ல . அவரது வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார் . வெற்றியும் தேடித் தந்தார் . திருச்சியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் வைத்து காமராசரை மக்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசும்போது சத்தியமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார் .
காமராசர் ஆர்வம் மிக்கவர் , சிறந்த தொண்டர் , ஆற்றல் மிகுந்தவர் . நேர்மையானவர் . ஒரு காலத்தில் இவர் சென்னைக் கோட்டையில் முதல்வராக அமரப்போகிறார் . 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ் வருட பிறப்பன்று சத்தியமூர்த்தியின் வாக்கு பலித்தது . தனது குருநாதரிடம் தான் கொண்டிருந்த பக்தியை மிகச் சரியாக வெளிக்காட்டினார் பெருந்தலைவர் . முதல்வராக பதவியேற்றதும் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நேராக சத்தியமூர்த்தியின் இல்லம் சென்றார் . அப்போது சத்தியமூர்த்தி இயற்கை எய்தியிருந்தார் . அவரது துணைவியாரிடம் ஆசி பெற்றுத் திரும்பினார் பெருந்தலைவர் .
குருபக்தி கொண்டவர்களும் குருஅருள் பெற்றவர்களும் உயர்வு பெறுவர் என்பதற்குப் பெருந்தலைவரின் வாழ்க்கையே சான்று .