|
|||||
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதி செய்யும் ஏற்பாடு! |
|||||
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, லிப்ட், சாய்வு தளம், கழிப்பறை அமைக்கும் பணியை டிச.31ம் தேதிக்குள் முடிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக 44 ஆயிரம் அரசு கட்டிடங்கள் உள்ளது. இதில் பெரும்பாலான அலுவலகங்களில் சாய்வுதளம், லிப்ட், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லவே கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதியாக சாய்வுதளம், லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கென கழிப்பறை வசதி கட்டாயம் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத கட்டிடங்களை கண்டறிய அறிவுரை வழங்கினார். அதன் பேரில் எழிலக வளகத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் லிப்ட், சாய்வுதளம், கழிப்பறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய அரசு அலுவலக கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. பழைய கட்டிடங்களில் பெரும்பாலானவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் இல்லை. அந்த கட்டிடங்களில் லிப்ட், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சாய்வுதளம், லிப்ட், கழிப்பறை அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 29 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|