LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சீறாப்புராணம்

ஹிஜூறத்துக் காண்டம் படலங்கள் 12-25


3.12 ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்
608    நபியெனத் தீனிலை நடத்து நாண்முதற்
கவினுறும் பைத்துல் முகத்தி சென்னுமத்
தவிசினை நோக்கியே தக்கு பீறொடும்
புவியிடைத் தொழுகையைப் பொருந்தி நின்றனர்.     3.12.1
609    தூவத்தண் டுளிமழைக் கவிகைத் தூதுவர்
தீவத்தும் புகழ்தர வணக்கஞ் செய்யுநாட்
பாவத்தின் றிரள்கெடப் படுத்துத் தோன்றிய
காபத்துல் லாவைப்பின் காட்ட வில்லையால்.     3.12.2
610    மகிதலத் தினிலுயர் மக்க மாகிய
நகர்விடுத் தணிமதி னாவை நண்ணிச்சூழ்
புகழொடுந் தீனெறி புரந்து வைகுநாட்
டிகழ்சகு பானென விளங்குந் திங்களில்     3.12.3
611    மிக்கநற் றேதிமூ வைந்தின் மேவியே
தக்கசெவ் வாயினி லுஹறு நேரத்தில்
ஹக்கனை யிரண்டிறக் ஆத்துத் தான்றொழு
தொக்கலோ டிசைநபி யுறையு மொல்லையில்.     3.12.4
612    நிரைமணித் தடச்சிறை யொடுக்கி நீள்கதிர்
விரிதரு வெள்ளிடைப் படர்ந்து வேதநூ
லுரைதருந் திருநபி யிடத்தி னோர்நொடி
வரையினில் ஜிபுறயீல் வந்துற்றா ரரோ.     3.12.5
614    இறையவன் ககுபத்துல் லாவென் றெய்திய
துறவுயர் பள்ளியை நோக்கித் தான்றொழ
மறையுரை வழங்கின னென்ன மன்னபி
முறையிதென் றாநந்தக் கடலி மூழ்கினார்.     3.12.6
615    முன்னரி ரண்டிறக் ஆத்து முற்றிய
பின்னரிற் ககுபத்துல் லாவைப் பெட்புற
வுன்னினர் நோக்கின ரோதும் பாதியுந்
துன்னிய குழுவுடன் றொழுது வைகினார்.     3.12.7
616    
    வேறு

    பருதி வானவன் விலகிய நெடும்பதி தனக்கு
    நரலை போல்வளம் பெருகிய மதீனமா நகர்க்குந்
    தெரிகி லாதுற நிமிர்ந்துமா றோல்தரத் திரண்ட
    வரைக ளியாவையும் பதுக்கையுந் திடருறு வனமும்.     3.12.8
617    இருநி லம்பிதுங் கிடக்கட லலைகிடந் தெறிய
நிரைம ணிக்கதி ரெறித்திட நெடுங்கரத் தமிழ்த்தி
யொருநி லத்தள வாக்கியங் குறைந்தன ருடுக்கள்
செருகும் வானகங் கீண்டிட வருஞ்ஜிபு ரீலே.     3.12.9
618    
    வேறு

    சூன்முகில் குலவிய வரையின் சுற்றெலாம்
    வானவர் கோன்புவி யிடையின் மாட்டலாற்
    பூநிமிர்க் ககுபத்துல் லாவும் பூணெனுங்
    கானமர் தூதர்கண் காண லாயதே.     3.12.10
619    மதிதவழ் நெடுங்கொடி மதீன மாகிய
பதியினி லமைத்தவப் புதிய பள்ளியை
நிதிமதிட் ககுபத்துல் லாவி னேரதாய்
விதியொடுந் திரித்துப்பின் விளங்கக் கட்டினார்.     3.12.11
620    இருசுடர் விலங்கிட விலங்கு நீள்கொடி
நிரைதரும் பள்ளியை நோக்கி நீணபி
யொருவனைத் தொழுதிரந் துவக்குந் திங்களிற்
றெரிதரும் புதுமையொன் றெடுத்துச் செப்புவாம்.     3.12.12

ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 12க்குத் திருவிருத்தம்...620

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.13 ஓநாய் பேசிய படலம் (621-648)
    621    நலனுறு மக்கமா நகரைச் சுற்றிய
    மலைகளி னொருவரை யடவி யின்வயி
    னிலைகொளாப் பறழொடு நிறைந்த புள்ளிமான்
    கலையொடுஞ் செறிந்துபுற் கறித்து நின்றதே.     3.13.1
    622    வள்ளுகிர் முடங்குவால் வளைப்பற் றூங்குர
    னுள்ளொடுங் ககட்டவோ னாயொன் றொண்ணுனை
    முள்ளரைக் கானிடைக் கிடந்து மூரிவெம்
    புள்ளிமெய்ப் பிணையினை நோக்கிப் போனதால்.     3.13.2
    623    கல்லிரு புறத்தினுஞ் சிதற கால்வுறீஇ
    வல்லுர னிலம்பட வளைந்து சென்னிதாழ்த்
    தெல்லையில் பசியொடு மெதிர மானினம்
    பல்பல திசையினும் படர்ந்து போயின.     3.13.3
    624    பிணைக்குலந் திசைதொறுஞ் சிதறிப் போதுற
    வணித்ததென் றொருபிணை யதனை நோக்கிவெண்
    மணிக்கதி ரெனுமுகிர் நிலத்தில் வவ்வுறத்
    துணித்தணு மம்மரிற் றொடர்ந்து போயதே.     3.13.4
    625    வடித்தநீர் தூங்குநாச் சுணங்கன் வாயினிற்
    பிடித்தெனத் தொடர்ந்து பெயரப் புள்ளிமா
    னடித்தபந் தெனக்குதித் தரிதிற் சென்றபூ
    நடித்திடுங் ககுபத்துல் லாவை நாடியே.     3.13.5
    626    பட்டியின் வாய்நுனி படரு மானின்வாற்
    றொட்டது காணெனத் தொடரு மெல்வையி
    னெட்டெனுந் திசைபுகழ்ந் தேத்துந் தீவினைத்
    தட்டறும் ஹறமெனுந் தலத்து ளாயதே.     3.13.6
    627    இறையவ னமரர்க ளியற்றுஞ் சங்கையா
    லறமெனுந் தலத்தின்மா னாய தீண்டினித்
    தெறுகொலை விளைத்திட றீது செய்நெறி
    முறையதன் றெனத்தனி முடுவ னின்றதே.     3.13.7
    628    ஈனன பாசுபி யானு மின்பமு
    மானமுந் தவிரபூ ஜகுலும் வன்கொலைக்
    கானபஞ் சரசபு வானு மாண்டொரு
    தானமீ தமர்ந்துநின் றவர்கள் சாற்றுவார்.     3.13.8
    629    கானகச் சுணங்கன்வாய் கழிந்து போனதிம்
    மானென விருந்தன மானு மொல்லையி
    னானநல் ஹறமது ளாய தாலது
    தானுநல் ஹறமதைச் சங்கை செய்தே.     3.13.9
    630    வருந்திட நிதமுயிர் செகுக்கும் வன்சுணங்
    கருந்திடும் பசிவெறுத் தறமைச் சங்கைசெய்
    திருந்தது மானுமிவ் வெல்லை யுடபடப்
    பொருந்திநின் றகம்புய போய தில்லையால்.     3.13.10
    631    புதுமையிற் புதுமையீ தென்னப் பொங்கிநின்
    றதிசயத் தொடுமவ ரவர்கள் கூறலும்
    பிதிர்விர லுயர்ந்தபற் பிளந்த வாயினீர்
    குதிதரு நெடியநா நீட்டிக் கூறுமால்.     3.13.11
    632    கருத்தினிற் புந்தியற் றிருக்குங் காபிர்காள்
    பெருத்திடும் ஹறமதைக் குறித்துப் பிந்தியீண்
    டிருத்தலைப் புதுமையென் றிசைக்கின் றீரெனத்
    திருத்தியே யுரைத்திட மறுத்துச் செப்புவார்.     3.13.12
    633    குதிமறுத் தறமதைக் குறித்து நின்றதே
    புதுமையென் றிருந்தனம் பொருவி லாதநன்
    மதியொடு மின்றுநீ யுரைத்த வாசக
    மதனினும் புதுமையென் றறைந்திட் டார்களால்.     3.13.13
    634    குறித்துநின் றெதிர்ந்தியான் கூறும் வாய்மையெப்
    புறத்தினு மறிகிலாப் புதுமை யென்கின்றீ
    ரறத்தினுக் குரியவ னாணை யும்மிடத்
    துறப்பெரும் புதுமையொன் றுளதென் றோதிற்றே.     3.13.14
    635    கடத்துறை ஞமலிநீ காணொ ணாதெம
    திடத்தினிற் புதுமையுண் டென்கின் றாயவை
    திடத்துட னியாவர்க்குந் தெரியச் செப்பெனத்
    தொடுத்தவர்க் கறிவுறச் சொல்லு கின்றதால்.     3.13.15
    636    ஆதிதன் னொளிவினிற் றரித்த னாதிதன்
    றூதென வுலகினிற் றோன்றி நின்றனர்
    வேதமு மிறங்கின மெய்மை வேதத்தி
    னீதமு நடத்தினர் நிகரு மில்லையால்.     3.13.16
    637    அந்நபி நன்மறை யறைந்தீ மான்கொளாச்
    சொன்னவை யனைத்தையு மறுத்துச் சூழ்தர
    வின்னலைப் பொருந்தினி ரீத லாலினிப்
    பன்னரும் புதுமையொன் றில்லைப் பாரினே.     3.13.17
    638    முகம்மது நபியுரை மறுத்த மாற்றலர்
    முகமதி நோக்குதன் முழுதுந் தின்மையென்
    றிகலுறக் கொடுமொழி யெடுத்துக் காட்டிவிண்
    புகுமலைக் கானினிற் சுணங்கன் புக்கதால்.     3.13.18
    639    இணங்கிய நன்மொழி யெவர்க்குங் கூறியச்
    சுணங்கன்வெங் கான்புகச் சூழ்ந்து நின்றிடுங்
    கணங்களி லபூஜகல் கபடுங் கள்ளமும்
    பிணங்கிய மனத்தினி னகைத்துப் பேசுவான்.     3.13.19
    640    உடும்பைவன் பிணையினைத் தன்கைக் குட்பட
    விடும்பினைப் பயிற்றிய முகம்ம தென்பவன்
    கடம்படு ஞமலியின் கருத்துப் பேதுறப்
    படும்படிப் பயிற்றுதற் பகர வேண்டுமோ.     3.13.20
    641    அறத்தினுட் படுநகர் மாந்தர்க் கன்பிலா
    திறத்தலைப் படுநினை வெடுத்த வஞ்சத்தான்
    புறத்தொரு நகரிடைப் புகுந்து மாயங்கண்
    மறுத்திலன் விளைத்தனன் முகம்ம தாங்கொலோ.     3.13.21
    642    அயனகர்ப் புகுந்தன னகும தென்றியாம்
    பயமற விருப்பது பழுது பற்றலார்க்
    கியலுறு மிடங்கொடுத் திருத்தல் பாரிடை
    வியனுறும் வீரத்தின் விழும மன்றரோ.     3.13.21
    643    மருவலர் வலிகெட வுடைந்து மற்றொரு
    பெருநக ரிருந்தன ராயிற் பேதுறப்
    பரநகர் வேந்தராற் பகைகண் மூட்டியுங்
    கருவறுத் தவர்பகை களைய வேண்டுமானால்.     3.13.23
    644    திறைபல வழங்கினுஞ் சேர்ந்து கைகுவித்
    திறையென நிற்பினு மினிது கூறினுங்
    கறைகெழுங் கொடுமனக் கருத லார்தமை
    யுறவென நினைத்திட லுணர்வுக் கீனமால்.     3.13.24
    645    அடுத்துறைந் திலரென வெள்ள லன்றிக்
    லெடுத்திடுங் கருதல ரிருந்து நாட்குநாட்
    டொடுத்திடும் வினையமுஞ் செயலுஞ் சூழ்ச்சியும்
    விடுத்திடு மொற்றராற் றெரிய வேண்டுமானால்.     3.13.25
    646    வைகின னிந்நகர் வடுவுந் தீமையும்
    பொய்யினின் முடித்தரும் புந்தி யோர்களை
    வெய்யவ ராக்கினன் மேலுந் தீவினை
    செய்கல னெனமனந் தேற லன்றரோ.     3.13.26
    647    பவ்வமுற் றிடுநெடும் பாரி னீங்கலா
    தெவ்வுழை யிருக்கினு முகம்ம தென்பவன்
    செவ்விய னலனவ னூக்கஞ் சீர்கெட
    வெவ்வினை விளைத்திசை நிறுத்த வேண்டுமானால்.     3.13.27
    648    என்றவ னினையன வியம்பச் சூழ்தர
    நின்றவர் கேட்டிவை நினைவி தாமெனக்
    குன்றென விரும்புயம் வளர்ந்து கொண்டெழ
    வன்றிறற் பெரும்பகை மனத்த ராயினார்.     3.13.28
    649    ஈரமில் லபூஜகு லென்னு மன்னவன்
    சார்பினி லுறவினிற் றக்க வேந்தரும்
    பாரிடைச் சிறுகுடிப் படையின் மாந்தரு
    மூரிடைப் படையொடு மொருங்கு கூடினார்.     3.13.29

    ஓநாய் பேசிய படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 13-க்குத் திருவிருத்தம்...649

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.14. வத்தான் படைப் படலம் (650-695)
    650    மாறரு நெடுவரை மக்க மாநகர்த்
    தேறல ரினையன நிகழ்த்துஞ் செய்கையைக்
    கூறரும் பெரும்புகழ் கொண்டன் மானபி
    வீறுடைத் திருச்செவி விளையக் கேட்டனர்.     3.14.1
    651    அரிகடஞ் செய்கைக ளனைத்துங் கேட்டருள்
    பெருகிய மனத்தினிற் பிரிய முற்றெழில்
    வரிசைமன் னவர்களை யழைத்து வம்மென
    வுரைசெயத் தூதுவ ரோடி யோதினார்.     3.14.2
    653    விற்கர வலியபூ பக்கர் வெற்றிசேர்
    மற்புய ருமறுது மானல் வாளலி
    சொற்பெருந் தோழருந் தூதென் றோதுவோர்
    முற்படு நபிதிரு முன்ன முன்னினார்.     3.14.3
    653    மனனுறை யறிவென விருக்கு மன்னவ
    ரனைவரு மடுத்துறைந் திருப்ப வாரணத்
    தனிநிலை யுள்ளகந் ததும்ப நன்னபி
    யினியன மொழிகொடுத் தியம்பு வாரரோ.     3.14.4
    654    கொலைமனத் தபூஜகல் குழுவு மந்நகர்ச்
    சிலைவய வீரருந் திரண்டு தீனவர்
    மலைவுறப் பேரமர் வளர்க்க வேண்டுமென்
    றிலைமலி வேலினீ ரிருக்கின் றார்களால்.     3.14.5
    655    மாவிசும் பமரருக் கிறையவ ரிம்மதி
    னாவினிற் போயமர் நடத்த வேண்டுமென்
    றேவின னிறையென விசைத்த மாற்றமும்
    போவதென் றிகல்கெடப் புரிதல் வேண்டுமால்.     3.14.6
    656    வல்லவன் ஜிபுறயீ லுரைத்த வாய்மையிற்
    செல்லவுந் தீனெறி விசயஞ் செய்யவும்
    நல்லவை நமக்கிவை யன்றி நாட்டமொன்
    றில்லையென் றிசைநபி யிசைத்திட் டாரரோ.     3.14.7
    657    நாயகன் மறைவழி நடத்து நன்னபி
    வாயகத் துதித்தசொன் மாற லின்றியே
    சேயென நடப்பது திறமைத் தாமெனத்
    தூயவ ரியாவருந் துணிவுற் றார்களால்.     3.14.8
    658    போற்றிநின் றனைவரும் புந்தி யாமெனத்
    தேற்றமுற் றியல்புடன் செப்ப நன்னபி
    மாற்றல ரெனுங்குபிர் மாய்க்கும் பீசபீற்
    கேற்றவை யாவையு மியற்று மென்றனர்.     3.14.9
    659    கொற்றவெண் கவிகையுங் கோல மார்துகில்
    சுற்றிய வட்டமுந் தூங்கு குஞ்சமுங்
    கற்றையங் கவரியுங் கதிர்செய் மாமணி
    வெற்றிவெண் டுவசத்தின் பேத வீக்கமும்.     3.14.10
    660    தடமுறு பதலையுந் தவிலுந் தாளமு
    மிடியென முழங்குபே ரிகையு மோர்புறத்
    திடிமனுந் தகுணிதஞ் சிறந்த பீலியும்
    வடிவுடைக் காளமும் வயிருஞ் சின்னமும்.     3.14.10
    661    வட்டணந் தட்டிநீள் வள்ளித் தண்டைதோல்
    கட்டிய தோற்பரங் கவசங் கீசகம்
    புட்டில்கைக் சோடிணை தாக்குப் போர்வைவெண்
    பட்டினிற் பஞ்சுவைத் தடைக்குப் பாயமும்.     3.14.12
    662    பட்டையந் தோமரம் பரசு கப்பணஞ்
    சொட்டைவா ளயிறனுச் சுரிகை முப்பிடி
    நெட்டிலைச் சூலங்கோல் பால நேமிசூழ்
    கட்டுபத் திரஞ்சரஞ் சுழற்று கைக்கண்.     3.14.13
    663    ஆடலம் பரிபரிக் கணிக ளியாவையுந்
    தேடின ரியற்றினர் சேனை காக்குதற்
    கீடுடை யவரிவ ரென்ன நன்னபி
    கூடிய பெயரினிற் குறித்துக் காட்டினார்.     3.14.14
    664    அரண்டு கடகரி யனைய நால்வரு
    முரணரி பொருவுமு ஹாஜி ரீன்களுந்
    தரியல ருயிருணன் சாரி மார்களு
    நரபதி நபியுட னிருக்கு நாளினில்.     3.14.15
    665    செறுநர்வத் தானெனுந் தலத்திற் சேர்கிலாக்
    குறைஷிகள் பலருங்க னானிக் கூட்டமு
    மறமுடன் றிரண்டன ரென்னும் வாசக
    மிறையவன் றிருநபிக் கெடுத்துக் கூறினார்.     3.14.16
    666    மாற்றலர் முதற்படை திரண்டு வைகிய
    கூற்றினை யுணர்வொடுங் குறித்தசு காபிகள்
    சீற்றமுற் றவ்வயின் செல்கு வோமெனச்
    சாற்றலு முகம்மதுந் தகுமென் றோதினார்.     3.14.17
    667    நீட்டிய செழும்படைச் சேனை வீரரை
    வீட்டிவெங் களத்திடைப் பருந்துக் கேவிருந்
    தூட்டிய வேற்கையு பாத செய்தவங்
    கூட்டிய தெனவுரு வெடுத்த கோலத்தார்.     3.14.18
    668    காதலுற் றிரப்பவர் கருத்துத் தேக்குற
    வீதலுக் கிசைந்தெடுத் தளிக்குஞ் செங்கையார்
    போதமும் வீரமும் புகழுந் தூங்கிய
    சாதன சகுதெனுந் தரும வேந்தரே.     3.14.19
    669    அன்னவர் தமைமதி னாவிற் காதியா
    மன்னபி முகம்மதங் கிருத்தி வைத்ததாள்
    பின்னிடா தடுஞ்சரம் பெய்யும் வீரர்க
    டுன்னிட வெழுந்தனர் துதிக்க யாவுமே.     3.14.20
    670    குடைகளுந் துவசமுங் குழுமி யோங்கிடக்
    கடுவிசைப் பரிக்குழாங் கலந்து முன்செலக்
    சுடர்விடு படைக்கலஞ் சுமந்த கொற்றவர்
    புடையெழத் திருநகர்ப் புறத்திற் றோன்றினார்.     3.14.21
    671    படியிடத் தெழுந்துகள் புயலிற் பம்பவா
    னிடியென முரசுபல் லியங்க றங்கக்கூர்
    வடிநெடுங் கதிரயின் மலிந்து மின்னிடக்
    கொடியவர் திசையினைக் குறுகி னாரரோ.     3.14.22
    672    சேனையும் வாசியுஞ் செருமிச் சூழ்தரு
    கானர ணனைத்தையுங் கடந்து சென்றுக
    னானியர் குறைஷிக ணடுந டுங்கவத்
    தானெனும் பெயருடைத் தலத்தைச் சுற்றினார்.     3.14.23
    673    ககனவெங் கதிரவன் கரங்க டூளியிற்
    புகவிட மிலையெனப் பொருந்து மன்னவர்
    தொகுதியும் வாசியுஞ் சுற்றுஞ் சேனையு
    மகுசிகண் டுளத்திடை மலைந்திட் டானரோ.     3.14.24
    674    வருவதும் நிகழ்வதும் வகுத்துப் புந்தியிற்
    பெருகிய தலைவருக் கெடுத்துப் பேசிநல்
    லுரையினும் வழக்கினு மொத்த சூழ்ச்சியின்
    புரவல னொருவனைத் தூது போக்கினான்.     3.14.25
    675    சந்தென விடவருந் தலைமை மன்னவன்
    வந்துநன் னபிபதம் வழுத்தி யூன்றிய
    கந்தடு கடகளி றனைய காட்சியான்
    சிந்தைகண் மகிழ்தர வெடுத்துச் செப்புவான்.     3.14.26
    676    இறையவன் றிருநபி யுலகுக் கின்புறு
    மறைவழி யொழுகியவ் வணக்க வாசக
    முறைமையி னடத்தியா முழுது மிவ்வயி
    னுறைகுவ தலதுவே றுறுதி வேண்டுமோ.     3.14.27
    678    மகுசியென் றோதும்வத் தானி னேந்தலு
    மிகுபடைத் தலைவரும் வேறு றாதொரு
    தகைமையிற் பணிவது சரத மின்றுநீ
    ரிகன்மறுத் தணிநகர்க் கெழுக வென்றனன்.     3.14.28
    678    உற்றுறைந் தவனிவ ணுரைத்த வாசகம்
    வெற்றியென் றியனபி போரின் வேட்கையிற்
    சுற்றிய திறற்படைச் சூர ரியாரையு
    மிற்றையி னெழுகவென் றேவி னாரரோ.     3.14.29
    679    இங்கிதத் தொடும்பணிந் திசைத்த தூதுவ
    னங்கலுழ் நபிமல ரடியி னிற்கரப்
    பங்கயங் குவித்தரும் பதியிற் போயினன்
    றிங்களங் குடையொடு மெழுந்த சேனையே.     3.14.30
    680    ஒட்டிய செழுமுகிற் கவிகை யூடுற
    நீட்டிய வெண்கொடி நிலவு கான்றிடத்
    தீட்டிய படைக்கலஞ் செறியச் சென்றொரு
    காட்டினி லிறங்கினர் கார ணீகரே.     3.14.31
    681    இறங்கிய பாசறை யிருந்து வாரிபோற்
    கறங்கிய சேனைமு ஹாஜி ரீன்களின்
    மறங்கிள ரெண்பது பெயரை வாளொடு
    நிறங்கிள ரயிலொடு நீக்கி னாரரோ.     3.14.32
    682    கந்தமுங் கதிரும றாத காட்சியர்
    கொந்தலர் புயத்துபை தாவைக் கூவிநற்
    சிந்தையின் மகிழ்வுற விருத்தித் தேறிய
    மந்திர மொழிசில வகுத்துப் பின்னரும்.     3.14.33
    683    கூடுமெண் பதுபெய ருடனுங் கோதற
    நாடிநீர் மக்கமா நகரைச் சூழ்தரு
    பாடிக ளனைத்தும்பாழ் படுத்துஞ் சூறைக
    ளாடியிங் கடைகென வறைந்திட் டாரரோ.     3.14.34
    684    கரியினு மதர்த்தமு ஹாஜி ரீன்களை
    மருமலர்ப் புயத்துபை தாவை மன்னபி
    திருநய னங்களா னோக்கிச் சிந்தைவைத்
    திருளறும் வெற்றி வெண் கொடியு மீந்தனர்.     3.14.35
    685    கருதல ருறைபதி களைந்திட் டொல்லையின்
    வருகென வினைஞரை விடுத்து வள்ளல்பாய்
    துரகதக் குழுவொடுஞ் சேனை சூழ்தர
    நரலையின் வளமதீ னாவை நண்ணினார்.     3.14.36
    686    எண்ணொரு பதின்மரு மிலங்கு நீடொடை
    வண்ணவொண் புயத்துபை தாவு மாறிலா
    தண்ணறன் பதமலர் போற்றி யன்பொடும்
    விண்ணெடுங் கடுவிசைப் புரவிமேற் கொண்டார்.     3.14.37
    687    எதிரமர் தொறுந்தெழும் பிருந்த மெய்யினர்
    கதிரயில் வாண்மற வாத கையினர்
    விதியவன் மறைமுறை விளக்கும் வாயினர்
    புதியவெம் பகைப்பதி யடுப்பப் போயினார்.     3.14.38
    688    வெற்றிவெண் கொடியொடும் வேக வாம்பரிக்
    கொற்றவர் குழுமிவந் தடருங் கொள்கையைப்
    பற்றல ரறிந்துசீ றூரிற் பல்பல
    தெற்றறக் குடியொடுஞ் சிதறிப் போயினார்.     3.14.39
    689    இவுளியும் படையுமு ஹாஜி ரீன்களுந்
    தவிசுறை யரசுபை தாவும் வந்தவை
    யபுஜகல் மகனறிந் தரிய வேகத்தாற்
    குவிதரும் படைக்கெதிர் கொண்டு நேர்ந்தனன்.     3.14.40
    690    மதிவர வழைத்தவர் விடுத்த மன்னருஞ்
    சதியபு ஜகல்தரு புதல்வன் றானையுங்
    கதிபரி யொடுபடைக் கலத்தின் கையொடு
    மெதிருமக் கெமக்கென விருக்குங் காலையில்.     3.14.41
    691    சதிவைத்த கருதலர்த் தளத்தி னூடிருந்
    திதமித்த நபிகலி மாவுக் கின்புறு
    மதிவத்தி யெனுமிகு தாதும் வாம்பரி
    யுதபத்தும் வந்துபை தாவைக் கூடினார்.     3.14.420
    692    மாதவ ரிருவரும் வந்த போழ்தினி
    லாதரம் விடுத்தம ரரிக டுன்புறப்
    பூதலம் புகழுமுக் காசு புத்திரர்
    காதகல் சகுதொரு கணைதொட் டாரரோ.     3.14.43
    693    அடுத்துநின் றவரிசு லாமி லாயது
    மெடுத்தொரம் பெய்தவ ரிருந்த வேகமுங்
    கடுத்தலை யெடுத்தவர் கருத்துங் கண்டமர்
    தடுத்தபூ ஜகல்மகன் றளம்பின் வாங்கினான்.     3.14.44
    694    வெட்டுக்குத் தெனுமொழி விளம்பி லாதொரு
    மட்டினின் றவர்கள்பின் வாங்கி னாரினித்
    தொட்டமர் விளைத்திடல் சூழ்ச்சித் தன்றெனத்
    தட்டல கயிலுபை தாவு நீங்கினார்.     3.14.45
    695    மருவல ருடனிருந் திருவர் வந்ததும்
    பொருசகு துக்கெதி ராது போயதும்
    விருதுகொண் டிகலிடும் வெற்றிப் போரினும்
    பெரிதெனக் குழுவொடும் பிரியத் தேகினார்.     3.14.46
    696    மிகல்பெறும் வெற்றியின் பீச பீலுக்கா
    யிகன்முதற் சரமுமொன் றெய்து மன்னவர்
    முகிறவழ் கொடிசெலத் தானை மொய்த்திட
    நகர்புகுந் தகுமது பதத்தை நண்ணினார்.     3.14.40

    வத்தான் படைப் படலம் முற்றிற்று
    ஆகப் படலம் 14-க்குத் திருவிருத்தம்...696

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.15. பாத்திமா திருமணப் படலம் (697-915)
    697    திங்கள்வந் திறைஞ்சிப் போற்றி செகதிர் பேசப் பேசு
    மங்குலங் கவிகை வள்ளல் வளம்பெறு மதீனாத் தன்னிற்
    பொங்குதீன் விளங்க நாளுங் காரணப் புதுமை யோங்கி
    யெங்கணும் படரச் செங்கோ னெறியர சியற்று நாளில்.     3.15.1
    698    விதியவன் மொழிம றாது விண்ணவர்க் கரசர் கூறும்
    புதுமறை யவர்கள் போற்றப் பொருவில்வா னவர்கள் வாழ்த்தக்
    கதுவகிற் கரிய கூந்தற் காரிகை பாத்தி மாதம்
    வதுவையின் வரலா றெல்லாம் வகுத்தினி துரைக்க லுற்றாம்.     3.15.2
    699    ஆதிநா யகன்றன் றூதர்க் கன்புறுங் கதீஜா வீன்ற
    பேதையர் நால்வர் தம்முட் பெற்றபே றனைத்து மொன்றாய்க்
    கோதறத் திரண்டு சோதிக் கொடியென வுருக்கொண் டோ ங்கி
    மாதர்க டிலத மென்ன மாநிலத் துதித்த பாவை.     3.15.3
    700    அதிர்த்திரைக் கடற்பா ரெங்கு மமுதத்தீன் றிவலை சிந்தி
    யுதித்தெழு முகம்ம தென்னுந் திங்களி லுதயஞ் செய்து
    பதித்தலத் துவக்கு மாதர் பவக்கடற் றிமிர மோட்டுங்
    கதிர்த்தடத் தீப மென்னக் கட்டழ கெறிக்குஞ் சோதி.     3.15.4
    701    ஆதிநா ளொளிவு வாய்ந்த வழகெலாந் திரட்டிச் சேர்த்த
    பாதியிற் பாதி நூற்றோர் பங்கினிற் செம்பொன் னாட்டின்
    மாதரை வகுத்திம் மாததைத் திரட்டிய வண்ண மெல்லாந்
    தூதுயிர்ப் புதல்வி யென்னப் படைத்தனன் சுருதி யோனே.     3.15.5
    702    சுற்றிளம் பருதி வெய்யோன் சுவட்டடிச் சேப்புக் கேயப்
    பெற்றனன் மடந்தை துண்டத் தழகினிற் பெற்றி லேனென்
    றுற்றுள மொடுங்கக் கூனி யந்தரத் துலவி நாணி
    மற்றுள கலையுந் தேய்ந்து நாட்குநாண் மறுகுந் திங்கள்.     3.15.6
    703    எண்ணருந் தவமுங் கற்பும் புகழுநின் றிறைஞ்சி யேத்தும்
    பண்ணரும் வேத வாய்மைப் படிதவ றாத வாக்கு
    நண்ணருந் தரும மியாவுஞ் சொற்படி நடக்கு நாளுங்
    கண்ணகன் புவியிற் பாவைக் கற்பெனு மரசுக் கன்றே.     3.15.7
    704    சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கு மிம்பர்ப்
    பூண்முலை யவர்க்கு மேக நாயகி யென்னப் பூவிற்
    காணுதற் கரியோன் செய்தா னென்னிலிக் கவின்கொண் டோ ங்கு
    மாணிழை மடந்தைக் குற்ற பெற்றியார் வகுக்க வல்லார் ?     3.15.8
    705    எல்லையி லழகு வாய்ந்த வேந்திழை கதீஜா வீன்ற
    நல்லியற் கனக நாட்டி னாரியர் திலத மன்னார்க்
    கல்லடர் கரிய வாட்க ணகத்திடை வரிக ளோடிப்
    பல்லவம் பசப்புற் றென்னப் பருவம்வந் திறுத்த தன்றே.     3.15.9
    706    வடிவுறுஞ் செம்பொற் பூவில் வாசம்வந் துறைந்த போலுங்
    கொடிமல ரதனிற் சேர்ந்த கொழுநறா நிறைந்த போலுங்
    கடிநெடுங் கழையிற் செவ்விக் கதிர்மணி தரித்தல் போலு
    மடிகடம் புதல்விக் கின்பப் பருவம்வந் தடைந்த தன்றே.     3.15.10
    707    வரிசையும் பேறும் வேத வாய்மையு முளர தன்றி
    யரசருக் கரசர் செல்வத் தரும்பொரு ளனைய செல்வி
    பெரியவ னருளால் வந்த பெண்ணினை வரைத லியானென்
    றுரைகொடுப் பவரியா ரென்ன வுள்ளநெக் குருகு வாரும்.     3.15.11
    708    தரியலர்ச் செகுக்கும் வெள்வேற் சதுமறைத் தலைவ ரீன்ற
    வரிவிழிக் கரிய கூந்தன் மங்கைதம் வதுவை வேட்டுப்
    புரிமுறுக் கவிழுந் தொங்கற் புயவரை யரசர் கூடி
    யொருவருக் கொருவ ருள்ளிட் டுரைவெளிப் படித்து வாரும்.     3.15.12
    709    வடிவமு மொழுங்கு நீதி வணக்கமு மறிவும் பூத்த
    கொடிமட மயிலைச் சோதிக் குலக்கொழுந் தனைய கற்பைப்
    பிடிபடு மணத்திற் சேர்ந்து பேருல கனைத்தும் வாழ்த்தப்
    படுமவ ரெவரோ வென்னப் பற்பல்காற் பகரு வாரும்.     3.15.13
    710    பிறநக ரரசர் செல்வின் பெண்கனி வதுவை வேண்டி
    யறைதிரைப் பரவை யாடை யம்புவி முழுதுங் காத்து
    முறைசெயுங் கார ணீகர் திருமுன மொழிமி னென்றன்
    றுறவின ரிடத்திற் றீட்டு மோலைக ளனுப்பு வாரும்.     3.15.14
    711    எரிமணிக் கனகப் பூணு மிளநிலா வொழுகு முத்தப்
    பெருமணி வடமு மெண்ணில் வெறுக்கையும் பெரிது முன்னர்த்
    தருகுவம் வதுவை யெம்பா லளித்திடி லென்னத் தாழ்ந்து
    கருதல ரரியே றன்னார் காதினி லோது வாரும்.     3.15.15
    712    உரைபல ரினைய வண்ண முலகவ ரியம்ப யாணர்
    மரைமலர் வதன வள்ளன் மங்கைதம் வதுவை வல்லோன்
    றிருவுளப் படிய தன்றிச் செய்வதின் றென்னச் செவ்வி
    தருமனத் திருத்தி யாருஞ் சாற்றுதல் பொருந்தி லாரால்.     3.15.16
    713    இவ்வித நிகழா நிற்ப வியைதரு விதியின் பண்பான்
    மவ்வலங் குழலார் வாழ்க்கைத் துணைவரு நயத்தை நோக்கித்
    தெவ்வடர்த் தெறியும் வெள்வேற் சிங்கவே றனைய காளைச்
    செவ்விய லலியார் காதல் சிந்தையி னாளும் பூத்தார்.     3.15.17
    714    நகரவ ருரையுஞ் சூழ்ந்த நாட்டவர் விடுக்குந் தூதர்
    பகருநன் மொழியு மற்றோர் தீட்டுபா சுரத்தின் கூறும்
    நிகரரும் வள்ள லுள்ளத் திருத்திய நினைவு மோர்ந்து
    வகையுறா தீற்றி னெண்ணத் தாலுளம் வருந்தி னாரால்.     3.15.18
    715    மின்னுருக் கொண்ட கன்னி விளங்கிழை நலத்தை நாடி
    மன்னர்க ளுளந்தே றாது வதுவையின் மயக்குற் றாரேற்
    பன்னெடு நாளிற் காம மனத்தினுட் படுத்திப் பாவை
    தன்னைவைத் திருக்கும் வேந்தர் கருத்தையார் சாற்ற வல்லார் ?     3.15.19
    716    சூனிசிலைப் புருவ வாட்கட் கொடியிடைக் கரிய கூந்தற்
    கனியிதழ்ச் சிறுவெண் மூரற் காரிகை நலத்தை நாடி
    நினைவுதித் திரையும் போக்கி நீடொடு குழியி னார்ந்த
    நனிமதக் களிறு போன்று வேட்கையி னடுங்கி னாரால்.     3.15.20
    717    குயினுறை சிகர மேருக் குலவரை யனைத்தும் வென்று
    வயிரவொண் வரையின் மீறு மாணெழிற் புயங்கள் சேந்த
    கயிரவ மனைய செவ்வாய்க் காரிகை மம்மர் நோயால்
    வெயில்படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த வன்றே.     3.15.21
    718    விண்கணி னமரர் கோமான் மேதினிக் குரைத்த வேதப்
    பண்கனிந் தொழுகுஞ் செவ்வாய்ப் பாத்திமா வென்னு மந்தப்
    பெண்கனி யுருவத் தார்ந்த பேரெழிற் கடலி லாழ்ந்து
    கண்களின் மறுத்துத் தோன்று முருவன்றிக் காண்கி லாரே.     3.15.22
    719    கலிதடுத் துலகங் காக்குங் காவல ரினிதி னீன்ற
    வொலிகட லமிர்த மொவ்வா வொண்டொடி முகத்தின் வாய்ந்து
    மலிதருங் கருமை யுண்ட வரிவிழிக் கயல்கள் பாய
    வலியெனும் வலிய வீர ரகக்கடல் கலங்கிற் றன்றே.     3.15.23
    720    பற்றல ருடலந் தேய்த்துப் பஃறலைக் குருதி யூற்றும்
    வெற்றிவா ளலியென் றோதும் வீரவெண் மடங்க னாளூ
    மிற்றசின் மருங்குல் பாத்தி மாவெனு மிளமான் றன்னால்
    வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்த தன்றே.     3.15.24
    721    செறிகடற் பாரிற் றூண்டா மணியினுஞ் செவ்வி வாய்ந்து
    நிறைதருங் கற்பி னல்லா ரிடத்தினி னிதமு மாறா
    வறிவெனுந் தூது தன்னோ டகமெனுந் துணையும் போக்கி
    வறியரிற் றமிய ராகி வாளலி மவுல லுற்றார்.     3.15.25
    722    கனிந்தினி தொழுகும் பெண்மைக் கரும்பைத்தேன் கனியை வாசம்
    புனைந்தபூங் கதுப்பிற் றுஞ்சும் வண்டெனப் பொருகண் ணாரை
    மனந்தனிற் குடிகொண் டுற்ற வாழ்வையென் னிருகண் ணீங்கா
    வனந்தனை யிறைவா வென்பா லளித்தியென் றுரைத்து நின்றார்.     3.15.26
    723    வனைகழற் செருவாள் வள்ளன் மனத்துறுங் காமத் தன்பும்
    பனிமலர்ச் செருகுங் கூந்தற் பாவைதம் மெழிலுஞ் சூட்ட
    நனைதரும் வதுவை வேண்டி நாடொறுங் கெஞ்சிக் கெஞ்சித்
    தனியெனுக் குரைத்தா ரல்லாற் பிறர்க்குரை சாற்றி லாரே.     3.15.27
    724    அரிந்துவெங் குபிரை யோது மாதிநூற் கலிமா வித்தி
    விரிந்ததீன் பயிரை யேற்றும் விறற்படை யலியாம் வேங்கை
    பரிந்திரு கரங்க ளேந்திப் பற்பல்கா லிறையோன் றன்பாற்
    கரைந்துநின் றிரந்த வெல்லா முறக்கபூ லாய தன்றே.     3.15.28
    725    மூதிருட் படலஞ் சீக்கு முச்சுடர்க் கதிரு மொவ்வா
    பாதலம் விசும்பு தூர்க்கும் படர்சிறைக் சுருணைச் செங்க
    ணாதரம் பெருக வாதி யருளின்வா னிழிந்து மெய்மைத்
    தூதரி னிடத்தில் வந்தார் துணையெனுஞ் ஜிபுற யீலே.     3.15.29
    726    வந்தடுத் துறைந்து வண்மை முகம்மதே சலாமென் றோதிப்
    பைந்தொடி கரிய கூந்தற் பாத்திமா பொருட்டால் வானி
    லந்தமி லவன்றன் பாலி னிகழ்ந்தவை யனைத்துந் தேறும்
    புந்தியின் மகிழ்வு பூப்பப் படிப்படி புகல லுற்றார்.     3.15.30
    727    அரியவன் றிருமெய்த் தூதே யண்ணலே யிறையோன் சோதிக்
    குருமணி யினத்தாற் போதாற் கொழுந்துகி லதனாற் செம்பொற்
    றிருநகர் மனைக டோ றுஞ் சிறப்பிக்க வருளிச் செய்தா
    னுரையருட் படியே வானோ ரும்பரின் விளக்கஞ் செய்தார்.     3.15.31
    728    பொன்னகர் விளக்கிப் பின்னர் புகழ்தர மகரு நாட்டி
    யென்னுட னிசுறா பீல்மிக் காயிலுஞ் சாட்சி யேயப்
    பன்னரு மலியார்க் கின்பப் பாத்திமா தமைநிக் காகு
    முன்னிய தருத்தூ பாவின் முடித்தன னிறைவ னன்றே.     3.15.32
    729    இந்தநன் மொழியை நும்பா லியம்பென விறைவ னேவ
    வந்தன னென்னப் போற்றி வானவர்க் கரசர் கூறச்
    சந்தன கதம்ப மாறாத் தடவரைப் புயங்கள் விம்மக்
    கந்தடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற் றாரால்.     3.15.33
    730    அடலபூ பக்கர் வெற்றி யரியும றுதுமா னொன்னா
    ரிடரற வருமு ஹாஜி ரீன்களன் சாரி மார்க
    ளுடனுறை முதியோர்க் கும்ப ருற்றசோ பனத்தைச் செந்தேன்
    வடிமலர்த் தொங்கற் றிண்டோ ண் முகம்மது வழங்கினாரால்.     3.15.34
    731    கனகநா டதனி னுற்ற காரண வமுதந் தேக்கி
    யனைவருங் களிப்பு வெள்ளத் தானந்தக் கடலின் மூழ்கி
    யினையன நினைத்தோ மியாங்க ணினைத்தவை யிறையோன் செய்தான்
    வனைகழ லலிதம் பேறின் மகிமையார் வகுக்க வல்லார்.     3.15.35
    732    என்னுநன் மொழிகண் மிக்கோ ரினியன மகிழ்விற் கூறப்
    பன்னகம் பேசப் பேசும் பார்த்திவ ரிறசூ லுல்லா
    தன்னகத் திருந்த வண்ண முடித்தனன் ரனியோ னென்ன
    மன்னபித் தாலி பீன்ற மணியினைக் கொணர்மி னென்றார்.     3.15.36
    733    மருவலர் மதங்க டேய்க்கு மன்னவ ருரைத்த மாற்ற
    மிருவர்கள் சென்னி மேற்கொண் டெழுந்தலி தம்மை முன்னிப்
    பரிவின் சலாமுங் கூறிப் பாவலர் வறியோர் வாழச்
    சொரிதருஞ் செங்கை வேந்தே சோபனம் வருக வென்றார்.     3.15.37
    734    மதுமைகன் னவர்கள் கூறுஞ் சோபன வசனந் தன்னா
    னிதயத்தி னிருந்த வண்ண முடிந்ததோ வென்ன வெண்ணிக்
    கொதிநுனைப் பகுவாள் வள்ள லெழுந்திரு குவவுத் திண்டோ ட்
    புதுநறாத் துளிக்குந் தொங்கல் புரடர விரைவின் வந்தார்.     3.15.38
    735    ஆரண முழங்கும் பள்ளி வாயிற னவையி னண்ணிக்
    காரணக் குரிசிற் கின்பக் கட்டுரை சலாமுங் கூறி
    யூரவ ருடனு மோர்பா லுறைந்தன ருயர்ந்த வெற்றி
    யேரணிந் திலங்கும் பைம்பூ ணிளஞ்சிங்க மிருந்த தொத்தே.     3.15.39
    736    தமனியப் பதியிற் றூபாத் தருவயி னடந்த பேறு
    மமரருக் கரசர் கூற நபியக மகிழ்ந்த வாறுந்
    திமிரவெங் குபிரை யோட்டுந் தினகர னென்னுந் தூயோர்
    கமைதரு சீற்ற வேங்கை யலிகயங் களிப்பச் சொன்னார்.     3.15.40
    737    வானவர்க் கரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறுந்
    தேனெனு மணத்தின் றீஞ்சொற் செவிவழி புகுத லோடுங்
    கானமர் வேங்கை வள்ளல் கதிர்மணிப் புயமு நெஞ்சுத்
    தானவ னருளீ தென்னத் தடப்பெரும் புளகம் பூத்த.     3.15.41
    738    திருத்திய கனகப் பைம்பூண் சேயிழை வதுவை வேட்டு
    வருத்தமுற் றுணர்வு போக்கி நாடொறும் வருந்து நெஞ்சிற்
    பொருத்துற நினைத்த வண்ண முடிந்ததென் றுரைபுக் காலக்
    கருத்தினிற் பெருகா னந்தக் களிப்பையார் கணிக்க வல்லார்?     3.15.42
    739    அகலிடம் விளங்கு மைந்நூ றிரசிதத் தரிய காசு
    மகரென வலிக்க னாதி வதுவையை முடித்தா னென்னப்
    பகரருங் கற்பின் மிக்க பாத்திமா செவியிற் சாற்ற
    விகலுறும் வேத வாய்மை முகம்மதங் கிசைத்தா ரன்றே.     3.15.43
    740    அருமறை முதியோ ரேகி யிறையவ னலியார்க் கின்பத்
    திருமண முடித்தா னென்ன ஜிபுறயீ லுரைத்த வாறு
    மருமலர் வாகைத் திண்டோ ண் முகம்மது மகிழ்ந்த வாறும்
    புரிகுழ னவ்வி பாத்தி மாமுனம் புகன்றிட் டாரால்.     3.15.44
    741    மறையவ ருரைத்த மாற்ற மதிநுதன் மடந்தை கேட்டின்
    றிறையவன் முடித்த வாறு மியனபி மகிழ்ந்த வாறு
    முறையெனத் தலைமேற் கொண்டேன் முன்னர்நூன் முழுதும் வல்லீ
    ரறைவதொன் றுளது கேண்மி னெனுமுரை யருளிச் சொல்வார்.     3.15.45
    742    சினவுவே லபித்தா லீபு சேயெனும் புலிக்கி யானே
    மனையினிற் குரிய ளானேன் மகரிர சிதமைந் நூறென்
    றுனைமொழி பொருத்த மில்லே னென்னுளத் துறைந்த வண்ண
    மினிதுற வருள வேண்டு மெனுமுரை விளங்கச் சொன்னார்.     3.15.46
    743    மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம்
    படர்ந்தகேள் வியர்கள் வந்து நபிமுனம் பகரக் கேட்டுக்
    கடந்தசெங் கதிர்வே லேந்துங் காவல ரெவரு முள்ளத்
    திடந்தனி மலைவு தோன்றி யிருந்தனர் பெரிதின் மன்னோ.     3.15.47
    744    அவ்வயி னிமையா நாட்டத் தமரருக் கரச ராதி
    செவ்விய மொழியி னோடுஞ் செகதலத் திழிந்து கூறா
    நவ்விமுன் னெதிர்ந்து பேசு நாயக சலாமென் றோதிக்
    கவ்வையங் கடலின் மிக்காங் களிப்புறக் கருதிச் சொல்வார்.     3.15.48
    745    பொறைவளை கடற்பா ரெங்கும் போற்றுநும் புதல்வி யுள்ளத்
    துறைகின்ற மகரைக் கேட்டு வருகவென் றும்பர் போற்று
    மிறையவ னருளிச் செய்தா னென்றுரைத் தனரம் மாற்ற
    முறைவழி விளக்கத் தூதர் மொழிந்தனர் பாவைக் கன்றே.     3.15.49
    746    மேலவன் வரிசைப் பேறாய் விளம்பிய மாற்றங் கேட்டு
    நூலெனு மருங்குற் பேதை நுவலரு முவகை யெய்தி
    ஞாலமும் விண்ணு நிற்க நாட்டிய தம்ப மென்னச்
    சீலமுற் றறிவினோடு மொருமொழி செப்ப லுற்றார்.     3.15.50
    747    இறுதியிற் பவத்தின் மாத ரென்ஷபா அத்தீ டேற்றம்
    பெறமன்றாட் டருள வேண்டிப் பேரருட் கபூல்செய் தானேல்
    உறுதிநன் மகர்பெற் றேனென் றுரைத்தன ருரைத்த மாற்றஞ்
    சிறைகுலாம் வள்ளலாதி திருமுன்விண் ணப்பஞ் செய்தார்.     3.15.51
    748    நபியைமான் பாத்தி மாவை நரர்புலி யலியை யெந்தப்
    புவியினு முவந்தோர் செய்யும் பிழைபொறுத் திடுவ தாக
    வவியும்பிற் கால மன்றாட் டருளுவ னென்ன வாதி
    கவினுறச் சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார்.     3.15.52
    749    வானிழிந் தரிய வேத முகம்மதுக் குரைப்ப வன்னோர்
    தேனிமி ரலங்கற் கூந்தற் சேயிழைக் குரைப்பச் செய்தார்
    பானலங் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்திவ் வண்ணந்
    தான்வரைந் தளித்தல் வேண்டு மெற்கெனச் சாற்றி னாரால்.     3.15.53
    750    கோதைய ருரைத்த மாற்ற மிஃதெனக் கொண்டல் கூற
    மாதவர்க் குதவி கூறுஞ் ஜிபுறயீல் மகிழ்வி னேகிப்
    பூதலத் துறைந்த யாக்கை யுயிர்தொறும் பொருந்தி வாழு
    மாதிமுன் னுரைத்து நின்றா ரருட்கடை நோக்கி யன்றே.     3.15.54
    751    பாவைய ருரைத்த வண்ணம் பச்சையங் கடுதா சின்கண்
    மேவரக் கனக மையால் வரிபட விளங்கத் தீட்டிச்
    சேவையி னினைவு மாறாச் செவ்விய ஜிபுற யீல்பா
    லீவதீ தென்ன வோதி யிறையவ னளித்திட் டானால்.     3.15.55
    752    வரைந்தபா சுரத்தை யேந்தி வானிழிந் தமரர் கோமான்
    கருந்தடங் கண்ணார்க் கென்ன நபிதருக் சுரத்தில் வைத்தார்
    விரிந்தபூங் கமல மன்ன மென்முகஞ் சேர்த்தி முத்திப்
    பரிந்தொரு துணைவர்க கீந்து பாசுரம் விளக்கென் றாரால்.     3.15.56
    753    கொடுத்தபதி திரத்தை வாங்கிக் கொழுமலர்க் கண்ணி லொத்தி
    விடுத்ததை விரித்துப் பைம்பொன் வரிமுறை விளங்க நோக்கி
    யடுத்தவர் பிறர்மற் றுள்ளோ ரியாவரு மறிய வல்லே
    தொடுத்தொரு மொழிவ ழாது வாசகஞ் சொல்ல லுற்றார்.     3.15.57
    754    என்னடி யவரின் மிக்கா முகம்மதி னினிதி னீன்ற
    பொன்னிழை தனக்கு மென்ற னலியெனும் புலிக்கு மின்ப
    மன்னிய வதுவைக் கான மகரென விசுலா முற்ற
    பன்னிகள் பவத்தி னுற்றோர் பல்லர்க்குங் குறைக டீர.     3.15.58
    755    இறுதிநா ளினின்மன் றாடித் தன்ஷபா அத்திலீ டேற்ற
    மறைதொறும் விளங்கச் சொல்லு முகம்மதுஞ் ஜிபுற யீலு
    மறநெறி மீக்கா யீலுஞ் சாட்சிய தாக நானே
    மறுவறக் கபூல்செய் தேனென் றிருந்ததை வாசித் தாரால்.     3.15.59
    756    பாரினின் முதலோன் வாய்மைப் பத்திரம் வரவ ளாகப்
    பேருல கினிலிப் பேறு பெற்றவ ருளரோ வென்ன
    வீரவெண் மடங்க லன்ன விறலுடை வள்ள லோடுஞ்
    சீர்பெறு முதியோ ரியாருஞ் சிலிர்த்தன ருடல மன்றே.     3.15.60
    757    செவியகங் குளிரப் பொன்னாற் றீட்டுபத் திரத்தை யேந்தி
    யவையகம் விடுத்துப் பாத்தி மாவணி மனையை நண்ணிக்
    கவினுறு மயிலே யென்ன வாசித்துக் காண்பித் தன்பி
    னவமிவை யென்னப் போற்றிச் சிலமொழி நவில லுற்றார்.     3.15.61
    758    வரத்தினி லுயர்ந்த பேறே மகுசறு வெளியி லென்றன்
    கரத்தினி லளிக்க வேண்டுங் காரண மதனா லீதை
    யொருத்தருந் தீண்டா வண்ண முயிரென வோம்பி யோர்பா
    லிருத்துமென் றிறசூ லுல்லா விளந்தளிர்க் கையி லீந்தார்.     3.15.62
    759    அந்தநன் மாற்றங் கேட்ட வரிவையர்க் கமுத மன்னார்
    செந்தளிர்க் சுரத்தி னேந்திக் சென்னிமேல் விழிமேற் கொண்டு
    மந்திரப் பொருளைச் செம்பொன் மணிச்செப்பி னடைத்துக் கிட்டாப்
    புந்தியு முயிரு மென்னப் போற்றுதல் பொருந்தி னாரால்.     3.15.63
    760    பரம்பொருள் விருப்பி னீந்த பத்திர மகள்கைக் கீந்து
    வரம்பெறும் வள்ளல் பள்ளி வாயிலி னைவையி னண்ணி
    யரம்பொருந் திலங்கும் வெள்வே லபூபக்கர் முதலா யுள்ள
    தரம்பெறுந் தோழர்க் கெல்லா மினியவை சாற்று வாரால்.     3.15.64
    761    மதுரமென் கனிக்குஞ் சீர்த்தி வாளலி தமக்கு மேன்மை
    முதலவன் மணநிக் காகு முடித்தன னதனை யெந்தப்
    பதியினுஞ் சிறப்பு வாய்ப்பப் பற்றல ரொடுங்க மேலு
    மிதமுற வியற்றற் கேற்ற யாவையு மியற்று மென்றார்.     3.15.65
    762    பேறுய ராதி யாலி லாஞ்சனை பெற்ற சிங்கங்
    கூறிய வசனங் கேட்டுக் கொற்றவ ருவகை யெய்தி
    மாறிலா வளமை யோங்கு மதீனமா நகரை யின்னே
    வீறுயர் சிறப்புச் செய்ய முறையனை விளிமி னென்றார்.     3.15.66
    763    
        வேறு
        குழுவின் மன்னவர் விளித்தன ரெனக்குறித் தெழுந்து
        தொழுது நின்றெவை பணியென வலிமணந் துலங்க
        முழுது மிந்நக ரறிந்திட மணமுர சறைக
        வெழுக வென்றலு மெழுந்தனர் கடிமுர சினரே.     3.15.67
    764    கடிகொள் வெண்சுதை சோகங்கள் கவினுறத் தடவி
    நெடிய சுந்தரத் தினின்மலர் மாலைக ணிரப்பி
    யிடியின் மிக்கதிர் முரசுக ளெடுத்தெடுத் தேற்றிப்
    படிய ளந்திடுந் தெருத்தலை தொறுந்தொறும் படர்ந்தார்.     3.15.68
    765    எடுத்த பேரொலி முரசொடு மொட்டகத் திருந்து
    பிடித்த நன்மறைத் தீனொடு பெருந்துனி யாவு
    முடித்த நல்வழித் தொழுகையின் விழிவழி முயன்று
    தொடுத்து நாடொறும் வாழ்கவென் றினையன துதித்தே.     3.15.69
    766    இறைய வன்றிருப் புலிக்குநந் நபியிளங் கொடிக்கு
    மறுவி லாத்திரு மங்கலச் சோபன வசனஞ்
    செறியும் பேரெழி றதும்பிய திருநகர் மதீனத்
    தறிவ ராடவ ரியாவரு மறிகவென் றறைவார்.     3.15.70
    767    கனந்த ருங்கொடை முகம்மதைக் கவினலிப் புலியைச்
    சினந்த வேல்விழி பாத்திமா வெனுஞ்செழுங் குயிலை
    நினைந்த கவ்வைக ளெவ்வையுந் தனிநிறை வேற
    மனந்த னிற்றினம் புகழொடு முவப்புவைத் திடுமின்.     3.15.71
    768    சுருதி நேர்தவ றின்றியஞ் சொகுத்தினுந் தொழுமின்
    வரிசை நன்னினை வொடும்சதக் காவழங் கிடுமின்
    பெருகு நல்லறி வினர்துஆப் பேறுகள் பெறுமின்
    றரையின் மீதுற வாழ்ந்துச லாமத்தும் பெறுமின்.     3.15.72
    769    அருவி நன்னதி யாடிநல் லாடைக ளுடுமின்
    புரிகு ழற்ககில் புகைத்துவெண் புதுமலர் புனைமின்
    சொரிக திர்ப்பணி பலகளத் திடைசுமத் திடுமின்
    விரைசெய் சந்தனங் குங்குமக் கலவைமெய்க் கிடுமின்.     3.15.73
    770    இலங்க முன்றில்க டொறுஞ்செழும் பூம்பந்த ரிடுமி
    னலங்கொ ளாடைவி மானங்க டோ ரண நடுமின்
    விலங்கன் மாடங்கள் வயின்வயின் கொடிவிசித் திடுமின்
    பொலன்கொ ணன்னகர்ச் சுவர்தொறுங் கோலங்கள் புனைமின்.     3.15.74
    771    மதுர முக்கனி தேனெய்பா றயிரொடும் வழங்கிப்
    புதுவி ருந்தினர்க கிடுமின்க ளெனப்பல போற்றி
    முதிரு நன்னகர்த் தெருத்தொறு முகிலிடை முழங்கி
    யதிரும் பேரொலி யிடியெனக் கடிமுர சறைந்தார்.     3.15.75
    772    முரச றைந்துவள் ளுவர்தெருத் தலைதொறு மொழிந்த
    வுரைசெ விப்புக நகரவர் பலருமுள் ளுவந்து
    வரைசெய் மாடமுங் கூடமு மனைகளு மறுகும்
    விரைசெ யும்படி புதுக்கிடத் துணிந்தனர் விரைவின்.    3.15.76
    773    பொழிந்த பொற்பொறிச் சுணங்கலர் பூண்முலைக் கணிந்து
    வழிந்த சந்தமுங் கூந்தலிற் கழித்தெறி மலரு
    மழுந்து கூடலி லூடலிற் களைந்தபொன் னணியு
    மெழுந்து கட்பட லந்தர வாரிநின் றெறிவார்.     3.15.77
    774    சிறுது ளைக்கதிர்ப் பொற்பல கணிநிரை செறிந்து
    பிறையு மங்குலு முடுக்களுஞ் செருகிடப் பிணங்கி
    நிறையு நெற்றிய மாடமு நிவந்தமே னிலையுந்
    துறும வூட்டகிற் பழம்புகைக் களங்கறத் துடைப்பார்.     3.15.78
    775    தெரிந்த வெண்மணி நீற்றினைக் கரைத்தறத் தெளித்துப்
    பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்றுப் பதைப்ப
    விரிந்த பூங்குழ லார்கள்கண் ணாடியின் விளங்க
    விருந்த வாய்தொறு முருத்தெரி தரமெழுக் கிடுவார்.     3.15.79
    776    மறங்கி டந்தசெங் கதிரவன் கதிர்களு மதியின்
    பிறங்கி நீடரு கலைகளு மோரிடம் பிரியா
    தறங்கி டந்தநன் னகர்மதி டொறுமணி யணியா
    யிறங்கி யெங்கணும் வழிந்தெனக் கோலங்க ளிடுவார்.     3.15.80
    777    நெருங்கிச் சேந்தமென் விரலெனத் தளிர்களு நீண்ட
    கருங்கண் போற்செழுங் குவளையு முககம லழும்போன்
    றொருங்கு பூத்தசெவ் வாயென வாம்பலு மொசியு
    மருங்குல் போற்சிறு கொடிகளு மெழுதுவர் மடவார்.     3.15.81
    778    சந்த னத்திர டருக்களை கவையுறத் தறித்துப்
    பந்தி பந்தியி னிறுவியொள் ளகில்வளை பரப்பிச்
    சிந்து வெண்கதி ரிரசிதக் கிடுகுகள் செறித்து
    மந்த மாருத முலவிடக் காவணம் வகுப்பார்.     3.15.82
    779    கழிக ளிற்பொதிந் தகுமது நபிதிருக் கலிமா
    வெழுது சித்திரப் பொற்கொடி யணிநிரைத் திடுவார்
    வழுவி லாதபொன் மலையின்வி மானங்கள் வகுப்பார்
    பொழுது போம்வழி யில்லெனத் தோரணம் புனைவார்.     3.15.83
    780    கதிர்ம ணிக்கரும் பிளங்கமு கருங்கனிக் கதலி
    பதிக மாதளை தாழைமுட் புறக்கனிப் பனசம்
    விதிரு மென்றளிர் மாச்செழும் பழக்கொழு விஞ்சி
    மதுர மூறிய கனியொடுந் தூண்டொறும் வனைவார்.     3.15.84
    781    பிரச மூறிய பன்மலர்த் தொகுதியின் பிறங்கி
    விரிக திர்ப்பல திரண்மணி வடத்தினும் விலையி
    னரிய பொன்னிழைத் துகிலுனும் பல்பல வணியாய்த்
    திருந கர்ப்புற மெங்கணு மியற்றினர் சிறப்ப.     3.15.85
    782    பூந்து ணர்ப்பசுங் காயொடும் பழத்தினைப் பூகஞ்
    சேர்ந்த பந்தரிற் றென்றலி னுதிர்ப்பன திரட்டி
    வாய்ந்த பொன்னையு மரகத மணியையும் வாரி
    யீந்த மேலவர் போன்றன வீதிக ளெங்கும்.     3.15.86
    783    அரத்த வாடையின் பசியமென் றுகிறொடுத் தணியா
    நிரைத்தி ருப்பது மாமணித் தூண்டொறு நெடுவான்
    றரித்த கொண்டலி னிடம்விடுத் திந்திர சாபம்
    விரித்த பந்தரிற் புகுந்திருந் தெனப்பல விளங்கும்.     3.15.87
    784    வெடித்த தாமரை மலரொடும் விரிந்தவெண் டாழைத்
    தொடுத்துப் பந்தரிற் றுயல்வரத் தூக்கிய தோற்றம்
    வடித்த நன்னறை யல்லியை யிதழொடும் வாயி
    னெடுத்து மென்சிறை யெகினங்கள் படர்ந்தென விருந்த.     3.15.88
    785    வேரி யஞ்செழு மலர்களுந் தளிர்களும் விளங்கச்
    சாரு நன்கதிர்ப் பன்மணிக் குலங்களுந் தயங்கக்
    கூரு மாந்தர்தம் மனத்தினி னினைத்தவை கொடுப்பப்
    பாரிற் கற்பக வனைத்தையொத் திருந்தன பந்தர்.     3.15.89
    786    தரள மாமணி யரும்பின மீன்றுதா ரணியின்
    பரிவு பெற்றிடும் பொன்னிதழ்ப் பன்மலர் பூத்து
    மரக தச்செழு மணித்திரட் காய்க்குலை வளர்த்துப்
    புருட ராகங்கள் பழுத்தன போன்றன பந்தர்.     3.15.90
    787    
        வேறு
        காத்திர முசல நீள்கைக் கடகரிக் குலமு மாவும்
        பூத்துணர் பொதுளு மாந்தர்த் தொகுதியு மெதிரிற் போதலல்
        வாய்த்தமெல் லிழையார் தீற்று மணியொளி மறுகு தோறுஞ்
        சூத்திரப் பாவை போன்றும் வயின்வயின் றுலங்கு மன்றே.     3.15.91
    788    புதுமலர்த் தார்க ணாற்றிப் பூந்துகிற் கொடிகள் சேர்த்திக்
    கதிர்மணி குயிற்றிக் கும்பக் கனகமா மகுடஞ் சூட்டி
    விதிரிள நிலவு கான்ற மேனிலை மாட மியாவும்
    வதுவையின் புதுமை நோக்க மலைகள்வந் திருந்த தொத்த.     3.15.92
    789    சீதசந் திந்து காந்த நீரினிற் றேய்வை பன்னீ
    ராதிமான் மதங்கற் பூர மளறெழக் கலக்கி வாரி
    வீதியு மதிளு மாட வாயிலுந் தெளித்து வீசக்
    கோதறுங் குளிர்ச்சி யெய்தி நடுங்கின கொடிக ளெல்லாம்.     3.15.93
    790    
        வேறு
        சொரிந்த பூங்குழன் மதிநுதற் கயல்விழித் துவர்வாய்
        முரிந்த தோவெனு மருங்கினர் முருகுகொப் பிளிப்ப
        விரிந்த சந்தகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கிப்
        பரந்து போர்வையின் மூடின நீள்பெரும் பதியை.     3.15.94
    791    அங்க ராகமும் வரியளி மலரிடை யறுகாற்
    றங்கி வீழ்தரு துகளுங்குங் குமச்செழுந் தாது
    மெங்க ணும்பரந் திருநிலந் தெரிகிலா திருத்தல்
    பொங்கு பொன்னிலம் வதுவையிற் சமைத்தன போலும்.     3.15.95
    792    குதித்த தேன்குழன் மடந்தைய ராடவர் குழுமிப்
    பதித்தெ ருத்தொறுங் கலவையிற் சேறுகள் படுத்தி
    விதித்த காரண வதுவையின் மணவிதை விதைத்து
    மதித்தி டும்பெருஞ் சிறப்பெனும் பயிரினை வளர்த்தார்.     3.15.96
    793    சிந்து செங்கதிர் மணிதெளித் தொழுதுசித் திரத்தின்
    கந்த மான்மதங் கமழ்தலின் கதலிகை வனத்தின்
    விந்தை விந்தைசெய் தோரணத் தொகுதியின் வியப்பி
    னந்த மானக ரல்லன போன்றிருந் ததுவே.     3.15.97
    794    மின்னி னந்திரு வில்லொடு முகிலொடும் விரைவிற்
    பொன்னந் தாமரை வாவியிற் புகுந்தெனப் புகுந்து
    மன்னு விற்புரு வக்கருங் குழற்கொடி மருங்கா
    ரின்ன லந்தர மூழ்குவ ராடுவ ரெங்கும்.     3.15.98
    795    இலகு பொன்னொடு வெள்ளிவெண் பானைக ளேற்றி
    நிலவு கான்றெனும் பாலினில் வாலரி நிறைத்திவ்
    வுலகி னூன்முறை யடுதொழிற் புதுமண மூட்டி
    யலகி லாப்பெரு நகர்தொறு மமலைக ளடுவார்.     3.15.99
    796    கனியி னுஞ்செழுங் காயினும் பூவினுங் கலவாப்
    புனித நெய்யினில் வெண்மலர்க் கரியபூங் குழலார்
    சுனித மாகிநற் பாகொடு மறுசுவை தூங்க
    வினிமை கூர்தர மணத்தொடுங் கறிசமைத் திடுவார்.     3.15.100
    797    தேன வாந்தொடை மடந்தையர் குழலினுஞ் செருகி
    நான மார்புய மாந்தர்க ணாசியு மமட்டித்
    தான மானக மேனிலை யாவையுந் தடவி
    வான மீதினுங் கமழ்த்தின பொரிக்கறி வாசம்.     3.15.101
    798    நனிவி ருந்தினர்க் கன்புட னெதிர்நடந் தழைத்துப்
    பனிம லர்ச்செழும் பாயலி னிருத்திமெய் பணிந்து
    மினுமி னென்றமுப் பழத்தினைத் தேனொடும் விரவி
    யினிதி னூட்டுவர் வலிதினி லடிக்கடி யெவரும்.     3.15.102
    799    உலவு பூம்புகை பொற்குடங் கமழ்தர வூட்டிச்
    சொலவ ருந்தடத் தெளிதரு புதுப்புனல் சொரிந்து
    பொலனி றத்தகுங் குமமுதன் முடிந்ததிற் புகட்டி
    யிலகு வீதியின் முன்றில்க டொறுநிரைத் திடுவார்.     3.15.103
    800    மருங்குன் மின்னுக்கு மின்னுபொன் னிழைத்துகில் வனைவார்
    நெருங்கு பூண்முலை மலையின் மலைவுற நிரைப்பார்
    கருங்கு ழற்கருங் குங்குமக் கண்ணிகள் புனைவா
    ரருங்க ரங்களி லரங்கொளுங் குருகெடுத் தணிவார்.     3.15.104
    801    மாவ ருக்கையிக் கரம்பைபூங் கமுகுடன் வனைந்த
    காவ கத்திடை மயிலெனக் குயின்மொழிக் கனிவாய்ப்
    பூவை யன்னவர் கலவையும் பரிமளப் பொடியுந்
    தாவ வெற்றுவ ரொருவருக் கொருவரைச் சருவி.     3.15.105
    802    விரிசி கைக்கதிர் மணிவெயி லெறித்திட விடுபூச்
    சொருகு கூந்தலின் மாலைக டுயல்வரத் துடிபோ
    லருகு நுண்ணிடை யொடிந்திடு மெனும்படிக் கசையத்
    திருகு ரும்பைக ளாடுவர் வயின்வயின் சிறப்ப.     3.15.106
    803    பாடு வார்சிலர் குயிலெனப் பாடலுக் கெதிரி
    னாடு வார்சிலர் மயிலென வாடலுக் கழகாய்க்
    கூடு வார்சிலர் கிளியெனக் கூடலின் குறிகண்
    மூடு வார்சிலர் விரிதருங் கமலமென் முகத்தார்.     3.15.107
    804    பூசு வார்சிலர் கலவையிற் புதுவிரை கலக்கி
    வீசு வார்சிலர் வீசலின் மெய்வழி வழியக்
    கூசு வார்சிலர் கூசுவ தென்னெனக் குழைந்து
    பேசு வார்சிலர் சிறுநுதற் பெரியகண் மடவார்.     3.15.108
    805    பொருவி லாநக ராடவ ரரிவையர் போற்ற
    மரும லர்ப்புய முகம்மதை யலிதமை வாழ்த்திக்
    கருத லர்க்கரி யேறெனுங் காளையர் கூடித்
    தெருவெ லாமணப் பைத்துகள் சொலிச்சொலித் திரிவார்.     3.15.109
    806    புகரி னன்னிரி யாசங்கண் முதலிய புகைத்துப்
    பகரு நன்மறை முதியவர் பலபல திரளா
    நகர மெங்கணும் வேதங்க ளோதிய நாத
    மகர வாருதி திரையொலிக் கலிப்பினை மலைக்கும்.     3.15.110
    807    கலிக்கு மாமறை முதல்வனிக் காகினைக் கருதி
    யலிக்கும் பாவைக்கு முடித்திட வகுமது மகிழச்
    சிலைக்கை வீரர்க ணகரத்தி னியற்றிய சிறப்பை
    யொலிக்கு மாகடற் புவியினி லெவரெடுத் துரைப்பார்?     3.15.111
    808    
        வேறு

        மரைமல ரெகின மிரவியின் சிரசின்
        மதிவதிந் தெனத்தனி வயங்கத்
        திரைமணி கொழிக்கும் வாவிசூழ் மதீனத்
        திருநகர் சிறப்பியற் றியபின்
        றருவெனு நபியு மூவரும் பெருகு
        சதுமறைத் தலைவருந் திரண்டு
        வரியளி முரலுஞ் செழுந்தொடைத் திரடோ ண்
        மன்னவ ரலிமனை புகுந்தார்.     3.15.112
    809    எரிகதிர் வனச மணிபதித் திழைத்த
        விரணியக் கடத்தினி லெடுத்து
        முருகலர் நறையூற் றிருந்தண் ணீரை
        மறையிய முழக்கொடு முதியோர்
        மரகதப் பலகை நடுவுறை வயிர
        மடங்கலே றலிதமை வாழ்த்திச்
        செருகிய நீலக் கதிர்குடி யிருந்த
        சென்னியிற் சொரிந்தன ரன்றே.     3.15.113
    810    வெள்ளைமென் றுகிலாற் சிரசிடம் புலர்த்தி
        வில்லுமிழ் மெய்யினும் விளக்கித்
        தெள்ளிய மதியின் கதிரினை நூற்றுக்
        செய்தெனுந் துகிலிடைக் சேர்த்திக்
        கொள்ளைவெண் டரளங் குவித்தென வீரம்
        புகழொடுங் குடியிருந் தென்ன
        வொள்ளிய சவிக டிரண்டெனச் சருவந்
        தொளிதரச் சென்னியிற் றரித்தார்.     3.15.114
    811    பேரெழிற் பயிரில் வனமுலை மடவார்
        கண்ணெனு மானினப் பெருக்கம்
        பாரினிற் புகுதா வேலியி னமைத்த
        படிகொலோ மரைமலர்ச் செழுங்கண்
        வீரவெண் மடங்கன் மரகத வளையுட்
        புகுந்ததோ வெனத்திறல் வியப்ப
        வேரணிந் திலங்கும் பசியகுப் பாய
        மெடுத்தினி தணிந்திடுஞ் சிறப்பே.     3.15.115
    812    மண்ணினிற் குபிரர் குலங்கரு வறுத்து
        வருமுயிர்ச் சுவையினை யறிய
        வெண்ணிலா விடப்பன் னாகத்தி னாப்போ
        லியற்றிய விருபகுப் புடைவா
        ளண்ணலார் மருங்கி லெழிறர விருத்தி
        யணிமணி யுதரபந் தனமும்
        விண்ணிலாக் கதிரின் கச்சின்மேற் படுத்தி
        விசித்தனர் திறல்வய வீரர்.     3.15.116
    813    மரகத வரையிற் சந்தொடு மருவி
        வந்ததோ வளைந்தபைங் கடலிற்
        றிரைகொலோ வணிந்த சருவந்து கான்ற
        செவ்விகள் வழிந்தொழு கியதோ
        பொருவிலா வரிசைப் புலியலி மணத்திற்
        போர்த்திடும் பசியகஞ் சுகியிற்
        றரளவெண் மணியி னிரைநிரை வடங்க
        டயங்கொளி தரவணிந் ததுவே.     3.15.117
    814    வண்ணவொண் புயப்பைங் கஞ்சுகி யிடத்தின்
        வான்மணித் தரளமா லிகையின்
        வெண்ணறை மலர்மா லிகைபு னைந்தரிய
        மான்மதம் விதிர்த்திடுந் தோற்றந்
        தண்ணறும் பசுங்கற் பகமல ரிடையிற்
        சாலிக டுளித்திடத் ததைந்து
        பண்ணிசை மிழற்று ஞிமிறின மிருந்த
        பான்மையொத் திருந்தன மாதோ.     3.15.118
    815    அம்புய மலரிற் சேந்துசெவ் வரியார்ந்
        தருளுடை கிடந்தகட் கடையின்
        வம்பவிழ் சுறுமா வுரைத்தமை யெழுதி
        மணிவடங் கிடந்தபொன் மார்பிற்
        கொம்பலர் மரவஞ் சந்தொடுங் குழைத்துக்
        குளிர்தரத் திமிர்ந்துகை விரலிற்
        பம்பிய திரைவா ருதியினிற் பிறந்த
        பருமணி யாழியுஞ் செறித்தார்.     3.15.119
    816    அலங்கரித் தயினி சுழற்றிநூ லவர்கட்
        கருநிதி மணியொடும் வழங்கி
        யிலங்கிழை மடவா ரடைப்பைக்கோ டிகஞ்சாந்
        திருமருங் கினுமெடுத் தேந்தத்
        துலங்கிய கவரி வெண்ணிலா வெறியச்
        சுருதிவல் லவர்துஆ விரப்ப
        நலங்கிளர் தீன்தீன் முகம்மதென் றேத்த
        நார்புலி யலியெழுந் தனரால்.     3.15.120
    817    மலரணைப் படுத்த துகிலின்மே னடந்து
        வானவர் மகளிரேத் தெடுப்பச்
        சிலைவல ரபித்தா லிபுமனைக் குரிய
        திருநபி தமைவளர்த் துவந்து
        பலனுறும் பாத்தி மாவெனு மடமா
        னிருவிழிப் பாவைகண் களிப்ப
        விலகிய மடவார் குரவைக ளியம்ப
        வெழிலலி வாசிமேற் கொண்டார்.     3.15.121
    818    பேரிகை திமிலைக் குடப்பறை தடாரிப்
        பீலியார் திண்டிம முரசோர்
        பாரிசப் பதலை யிடக்கைதட் டியநீள்
        பண்வம்வா ரணிதட மொந்தை
        பூரிகை நவுரி காகளஞ் சின்னம்
        போர்வயிர் கொம்புகைத் தாளம்
        வாரியு மலைப்பப் பேரிடி மயங்க
        மண்ணதிர் தரமுழங் கினவால்.     3.15.122
    819    பரிதியின் கதிரான் மதியையேந் தினபோற்
        பவளக்கால் வெண்குடை நிழற்றத்
        திரடருந் துவசம் வெளியறச் செருகச்
        செம்மணித் துகில்செயா லவட்ட
        மிருபுற நெருங்க விசிறிசாந் தாற்றி
        யிரைகடற் ரிரையென மலிய
        வருபடை நாப்ப ணெறிந்தபா வாடை
        வானமின் னெனத்திசை மலிய.     3.15.123
    820    வரையிழி யருவி யெனக்கவுட் கரட
        மதங்கரைத் திருபுறம் வழிய
        வெரிமணி வயிரக் கிம்புரிப் பெருங்கோ
        டிணைவளைப் பிறையினு மிலங்கத்
        திரள்பனை நெடுங்கைத் துளைவழித் திவலை
        தெருத்திசை மழையெனச் சிதறக்
        கருவுடை மயிர்வாய்ப் பிடிக்கணந் தழுவிக்
        கடகரிக் குலநெருங் கினவால்.     3.15.124
    821    மாருத மலைக்கும் விசையின விருபான்
        மலிந்தபக் கரையின வதிரப்
        பாரினை யுடைக்குங் குளம்பின பொற்பூப்
        பலநிரை கேசபந் தியின
        போரடர் சீரா வணியின பாகர்
        புந்தியி னமைந்தன பதினெண்
        சாரிகை நடனப் புரவியின் கணங்க
        ளெண்ணில தலைமயங் கினவே.     3.15.125
    822    மணிக்கண நிரைத்து வைத்திடுங் குடுமி
        வானகத் திரவியின் மிளிரப்
        பிணித்தபொற் காந்தி யுமிழ்தருங் கொடிகள்
        பெருந்துகட் படலங்க டுடைப்பப்
        பணித்தலை நெளியத் தரைத்தலங் குழியப்
        பரியொடுந் திசைபறப் பனபோற்
        கணித்துரைக் கடங்காத் தெருத்தலை நெருங்கக்
        கலித்தகோ லாரிவண் டில்களே.     3.15.126
    823    பத்தியி னெடும்பொற் சட்டக மமைத்துப்
        பருவயி ரம்பல பதித்து
        முத்தணி நிரைத்துத் துகிர்மணிச் சிறுகான்
        முறைபட நிறுவிப்பைங் கதிரார்
        சித்திரப் படமேல் விரித்தணி யலர்கள்
        செறிதர மாலைக ணாற்றி
        வைத்தபொற் சிவிகை பலபல மருங்குஞ்
        சிறந்திட வீதியின் மலிந்த.     3.15.127
    824    வடிநற வருந்தி வரியளி சிலம்பு
        மலர்தொடைப் புயத்தபூ பக்க
        ருடனும றெனும்பே ரடலரி யேறு
        முலம்பொரு தோளுது மானுங்
        கடமலை கடவி நிலம்பிதிர்த் தெறியுங்
        கவனவாம் பரிகளிற் கவினா
        ரிடுகொடை கவிப்பக் குழாத்தொடு மலித
        மிருபுடை யினுஞ்செறித் தனரால்.     3.15.128
    825    இயன்மறை நபித மவயவ மெனலா
        யின்புறு முஹாஜிரீ னென்னும்
        பெயர்களு மன்சா ரிகளெனும் வரிசைப்
        பேறுடைத் தலைவர்மன் னவரும்
        வயவரிக் குழுவுங் கொடுவரித் திரளு
        மலிந்தெனத் தெருமிசை மலிந்து
        முயலகன் மதியின் குடையொடு கொடியு
        மொய்த்திடச் செறிந்த ரன்றே.     3.15.129
    826    கருதல ருயிருண் டூன்மறா நெடுவேற்
        காவல ரொருபுற நெருங்கப்
        பரிசையு மேக மின்னென வொளிரும்
        பட்டையத் தவரொரு மருங்கும்
        நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு
        நெடுங்கடல் படர்ந்தெனப் பரக்க
        வரசருஞ் சூழ வலியெனு மரியே
        றாடலம் பரிநடத் தினரால்.     3.15.130
    827    ஆரணக் கிழவர் பேருடைத் தலைவ
        ராடவர் காளையர் சிறுவர்
        வாரணி களபக் குவிமுலைக் கதிர்ப்பூண்
        மங்கைய ரவரினின் முதியோ
        ரூரினி லிருந்த நாற்குலத் தவர்மே
        லுரிமையர் தொழும்பினுள் ளவருங்
        காரணக் குரிசி லலிவரும் பவனிக்
        கடலிடைக் கடலெனக் கலந்தார்.     3.15.131
    828    
        வேறு
        பதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக்
        கதக்களிக் கரியின் கோட்டுக் கதிர்முலைப் பணிகண் மின்னப்
        புதுக்கடி நறவஞ் சிந்தும் பூங்குழன் மாலை சோர
        மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு மொய்த்தார்.     3.15.132
    829    ஆடலம் பரிக்கு வேந்த ரலிவரும் பவனி வேலை
    யூடுறை யமுதந் தானோ வமுதத்தின் வேர்விட் டோ டிக்
    கூடுறும் பவளச் செவ்விக் கொடிக்கிளைத் ததுவோ வென்ன
    வேடவிழ் மலர்ப்பூங் கூந்த லிங்கிழை யவர்கண் மொய்த்தார்.     3.15.133
    830    கண்ணெனுங் கயல்க டாவக் களமெனுஞ் சங்க மார்ப்ப
    வெண்ணகைத் தரள நக்க விரிஇதழ்ப் பவள மின்ன
    வொண்ணிறப் பசலை கால வொளிர்நுரை மாலை சிந்தப்
    பெண்ணெனுங் கடலந் தானை யிடனறப் பெருகிற் றன்றே.     3.15.134
    831    சவிவிரற் றளிர்க ளீன்று தண்ணகை யரும்பு பம்பித்
    திவளொளி வதனம் பூத்துத் தேனளி முரல மாதர்
    குவிபெருந் தானை நாப்பண் கூண்டவை யலியென் றோதும்
    பவனியின் றருவை நோக்கிப் பலகொடி படர்ந்த தொத்த.     3.15.135
    832    நிறைமணி குயிற்றும் பொன்மே னிலைவயி னெருங்கு மாத
    ரறைசிலம் பலம்பச் செஞ்சீ றடிநிலந் தோயா தாலு
    நறைமலர் புலரா தாலு நாட்டங்க ளிமையா தாலு
    மறைமுத லவன்பொன் னாட்டு மங்கையர் போல நின்றார்.     3.15.136
    833    முறைமையி னணிய நின்றார் வதுவையின் முழக்கங் கேட்டுப்
    பொறைபொரு தனத்திற் சூட்டும் பொன்னணி யொருகை யேந்திக்
    கறையளி முரலுங் கூந்தற் கண்ணியோர் கையி லேந்தித்
    திறையிடு பவர்கள் போலச் சிலர்தெருத் தலையின் வந்தார்.     3.15.137
    834    அல்லெனுங் கூந்தல் கையா லடிக்கடி முடித்து வாய்த்த
    தில்லென மறுத்து நெற்றித் திலகந்தொட் டியற்றும் போழ்திற்
    கல்லெனு மோதை கேட்டுக் கடுப்பினிற் கைக்கண் ணாடி
    யொல்லையி னெறிந்து நாணிச் சிலரொளித் தொருங்கு நின்றார்.     3.15.138
    835    விள்ளருஞ் செக்கர் வான்போல் விரிதருங் கலைகள் வீக்கித்
    தெள்ளுசெஞ் சாந்தும் பூசிச் செம்மணிக் கலன்க டாங்கி
    வள்ளறன் னழகைக் கண்ணாற் பருகிய மாத ராகத்
    துள்ளுறுங் காமத் தீமே லொளிர்வது போல நின்றார்.     3.15.139
    836    கடற்பெருஞ் சேனை சூழக் கடகரி மலைக ணாப்பண்
    சுடர்க்கதி ரவனை யொப்பத் தோன்றிய வலிதருஞ் செவ்வித்
    தடப்புதுப் புனலி னஞ்சந் தரும்விழிக் கயல்கள் போக்கி
    யெடுத்தணி வளையும் வீழ்த்திச் சிலரிட ரிடைப்பட் டாரால்.     3.15.140
    837    சிற்றிடை யொசியப் சோதிச் சிறுநுதல் வெயர்ப்ப வாய்ந்த
    முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப
    வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து
    பொற்றொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார்.     3.15.141
    838    மாயிரு ஞாலம் போற்று மன்னபித் தாலி பீன்ற
    சேயலி மெய்யின் வாய்ந்த திருவடி வழகை நோக்கிப்
    பாயரிக் கருங்கட் செவ்வாய்ப் பாவையீ ரிமையா நாட்டத்
    தாயிரங் கண்கள் வேணு மெனெச்சில ரறிவிற் சொல்வார்.     3.15.142
    839    குவிதருங் கடலந் தானைக் குபிர்க்கட லுடைக்கத் தோன்று
    மவிர்கதிர் வடிவாட் செங்கை யலிதிரு மணமென் றோதுங்
    கவினுறுங் கனக நாட்டுக் காட்சியைப் பாத்தி மாவா
    லவனியின் மாந்தர் காண வரும்பலன் கிடைத்த தென்பார்.     3.15.143
    840    வரமுறுஞ் சுவன மாதர் மலரடி பரவிப் போற்ற
    வரசுவீற் றிருக்குஞ் செவ்வி யணிவிழா காணப் பெற்றோங்
    கருமுகிற் கவிகை வள்ளல் கனகநா டதனி னாளை
    வருபவ னியுமியாங் காண்போ மெனச்சிலர் மவுலு வாரால்.     3.15.144
    841    பேரொளி யழகு வாய்ந்த பெண்ணினை மணப்பப் பூவி
    னாரெழி லவரென் றெண்ணி யிருந்தன மிவரை நோக்கின்
    சீரணி பெறுமம் மங்கைச் செவ்விக்குச் செவ்வித் தூயோன்
    பாரிலெண் மடங்க தாகப் படைத்தனன் காணு மென்பார்.     3.15.145
    842    அருமறை மணத்த வாயு மருளடை கிடந்த கண்ணுந்
    திருமதி முகமு நீண்ட திரண்மணி வயிரத் தோளுந்
    தருவெனச் சிவந்த கையுந் தாமரைத் தாளும் வாய்ப்பப்
    பெருகிய வழகை யெல்லா மொருத்தியோ பெறுவ ளென்பார்.     3.15.146
    843    வீதியி னழகோ வந்த வேந்தர்கோ னழகோ சூழ்ந்த
    மாதவ ரழகோ யாது பெரிதென மதித்துச் சொல்வா
    ராதிதன் றூத ரீன்ற வரிவைதம் மணத்தின் கோலம்
    பேதமொன் றின்றிக் காணப் பெற்றதே யழகென் பாரால்.     3.15.147
    844    எயிறுக ணிறையா மார்பி னிளமுலை முளையாக் கண்க
    ளயிலென வரிகள் சேரா வளகமு முடியிற் கூடா
    தொயில்வரை மெய்யிற் பூழ்தி பூத்ததுந் துடையாக் காமப்
    பயிரெனத் தோன்றும் பேதைப் பருவத்தி னொருத்தி வந்தாள்.     3.15.148
    845    கனைகடற் படையு நீண்ட கவிகையுங் கொடியுஞ் சூழ்ந்த
    வனைகழ லரசர் நாப்பண் வருந்திற லலியு நோக்கிப்
    புனைமணிப் பரியின் மீது புரவல ரிடத்திற் கூட
    வெனையும்வைத் திடுமி னென்ன விருவிழி பிசைந்து நின்றாள்.     3.15.149
    846    ககனமும் புவியும் போற்றுங் காவலன் புலியைச் செவ்வி
    யகுமதின் மருக ரான அலியெனு மரசை யாக
    மகிழ்வுறப் பரித்தல் செய்யும் வாசிமே லிருத்த னம்மாற்
    றகுவதன் றென்று சாற்றித் தாயர்க ளணைத்துப் போனார்.     3.15.150
    847    கரும்பெனு மொழியா ளாசைக் கவின்முளைத் தென்னத் தோட்டுட்
    குரும்பையின் முலையாண் மாயங் கொலைகள வென்ப சற்றே
    யரும்பிய விழியைப் போலு மகத்தின ளமலை மாறாப்
    பெரும்படைப் பவனி நோக்கிப் பெதும்பையென் றொருத்தி வந்தாள்.     3.15.151
    848    பருந்தெழுங் கதிர்வாள் வள்ளற் பதுமமென் முகத்தை நோக்கிக்
    கருந்தடங் கண்ணு நெஞ்சுங் களிப்புற நாணின் மூடித்
    தெரிந்தொரு வடத்தை யேந்திச் சேவகர் மார்பிற் பூட்டி
    யிருந்ததி லிவையும் பூட்டென் றொருத்தியோ டிசைத்து நின்றாள்.     3.15.152
    849    புத்தமு துகளும் வாயும் புதுமதி முகமுஞ் சேர்ந்த
    கொத்தலர்க் குழலுஞ் செம்பொற் குவிமுலைச் சுணங்கு நூலி
    னெய்த்தசிற் றிடையுங் காந்தி வளைநிரைத் தெடுத்த கையின்
    வைத்தொரு கிளியு மேந்தி மங்கைய ளொருத்தி வந்தாள்.     3.15.153
    850    வள்ளறன் வதன நோக்கி மதிமயக் குற்றுக் காம
    முள்ளுறுந் தீயான் முத்தஞ் சுடச்சுட வொருங்கு சிந்திக்
    கள்ளவிழ் கோதை நல்லீர் கதிர்மணி முத்த மென்ப
    தெள்ளள வெனினும் பூணா தெறிமின்க ளெறிமி னென்றாள்.     3.15.154
    851    வாரறுத் தெழுந்து வீங்கும் வனமுலைப் பூணுஞ் சாந்துங்
    கூரயில் பொருது நீண்ட கொடிவரி விழியின் மையுங்
    காரெனத் திரண்ட கூந்தற் காட்டினில் வரிவண் டார்ப்பப்
    பேரணி மடந்தை யென்னுங் பெண்கொடி யொருத்தி வந்தாள்.     3.15.155
    852    வாங்குவிற் றடக்கை வேந்தர் வாளலி வதன நோக்கிப்
    பூங்கொடி வருந்தி நெஞ்சத் தறிவெலாந் துயரம் போர்ப்பக்
    கோங்கிள முலையின் செம்பொற் கொடியென வென்னைச் சூழ்ந்த
    பாங்கிய ரெங்கே யென்னப் பாங்கியர் தம்மைக் கேட்டாள்.     3.15.156
    853    காழ்த்தடக் களிறு சூழ வந்தகா வலரை நோக்கி
    வீழ்த்தன ளறிவை நாண விருப்பினான் மெல்ல மெல்ல
    வீழத்தனள் வாரா தாலோ வென்னையோ பாலிற் சூழ்ந்து
    வாழ்த்திநின் றவரை யெல்லாம் வைதுகொண் டரிவை நின்றாள்.     3.15.157
    854    பெரும்படைத் தலைவர் சூழ வரும்பிரான் வதன நோக்கி
    யரும்பிய துயர வெள்ள மடிக்கடிப் பெருக லாலே
    வரம்பெறு நாணும் போக்கி மதிமயக் குற்றிவ் வள்ளற்
    றிரும்பலிற் சொல்வே னென்னச் சினந்தொரு தெரிவை போனாள்.     3.15.158
    855    குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைக டதும்ப வந்து
    மலிதருந் தொடையல் சிந்த வடகங்க டுயல நோக்கி
    யலியினைச் சேரா மாத ரலியென விருத்த னன்றென்
    றொலிதர வுரைத்துச் செவ்வி யொழுகுபே ரிளம்பெண் போனாள்.     3.15.159
    856    எய்த்தநுண் ளிடையீர் வேந்த ரேறலி யகலா தென்றன்
    மைத்தடங் கண்ணு ளானார் மறுகினின் மறுகி நீவிர்
    கொத்தலர் தூற்றி வாழ்த்திக் கூண்டவை குறிக்கிற் பேதைப்
    புத்தியென் றிருகட் கையாற் பொதிந்தொரு பூவை போனாள்.     3.15.160
    857    சொரிநிலாக் கவிகை நீழற் சுடரவன் கடுப்பத் தோன்று
    மரசகே சரியை நோக்கி யழகெலாம் விழியா லுண்டு
    வருதுயர் வெறியின் மீறி வாயிதழ் வெளிறக் கண்சேந்
    திருள்குழன் மாலை சோர விதயநொந் தொருத்தி போனாள்.     3.15.161
    858    இன்னன மடவார் கூறி யிதயநெக் குருகுங் காலைப்
    பின்னிய கொடியும் வீசுங் கவரியும் பிறங்கத் தாங்கும்
    பன்னகம் வருந்தத் தூளிப் படலமேழ் கடலுந் தூர்ப்ப
    மன்னவ ரலியுல் லாவு மற்றொரு மறுகு சார்ந்தார்.     3.15.162
    859    பல்லிய முகிலி னார்ப்பப் பரிக்குழாம் பரந்து பொங்கச்
    செல்லுழற் கரடக் கைமாத் தெருத்தொறு மலிய மாறா
    நல்லியன் மறையோர் போற்ற நடனவாம் பரியின் மீது
    வல்லிய மலியுல் லாவும் வானவர் வாழ்த்தப் போந்தார்.     3.15.163
    860    நரர்புலி யலியார் வந்தார் நபிதிரு மருகர் வந்தா
    ரரியபித் தாலி பீன்ற வாணினி லழகர் வந்தார்
    பரிவலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார்
    திருவுலா வென்னப் போற்றித் திருச்சின்ன மியம்பிற் றன்றே.     3.15.164
    861    கள்ளவிழ் மரவ மாலைக் காளையர் பலரும் போற்றப்
    பள்ளியின் வாயற் புக்கிப் பாத்திஹா வினிதி னோதி
    யள்ளிலை வேற்கட் பாத்தி மாவெனு மழகு வாய்ந்த
    தெள்ளுதே னமுத மன்னார் திருமணப் பந்தார் வந்தார்.     3.15.165
    862    அரம்பொரும் வேற்க ணல்லா ராலத்தி களித்து நிற்பக்
    குரவையெம் மருங்குஞ் சூழ்ந்த குரைகட லென்னப் பம்ப
    முரசுட னெளரி கொம்பு விண்முக டுடைத்துப் பொங்கப்
    புரவல ரலியுல் லாவும் புரவிவிட் டிறங்கி னாரால்.     3.15.166
    863    அடிமிசைப் பனிநீர் சிந்தி யம்பொன்மென் றுகிலா னீவ
    வடிமறை யவர்கள் வாழ்த்த வானவ ராமீன் கூறக்
    கடிமல ரமளி போந்து ஹபீபுகண் களிப்பச் செவ்வி
    யிடுசுடர்த் தவிசின் மீதி லலியினி திருந்தா ரன்றே.     3.15.167
    864    அலங்கலும் பணியுஞ் சாந்து மாடகத் துயிலு மேந்திச்
    சிலம்புகள் சிலம்பப் பைம்பொற் சேயிழை யவர்கள் கூடிக்
    கலன்கதி ரெறிப்ப வேதக் காரணர் மனைவி யாகப்
    பலன்பெறுங் கதீஜா வீன்ற பாத்திமா விடத்திற் புக்கார்.     3.15.168
    865    இறையவன் றூத ரீன்ற விருவிழி மணியைச் சோதி
    மறைபடா விளக்கைச் சேணின் வானிடத் துறையா மின்னைக்
    கறைபடா மதியை நாளுங் கவின்குடி யிருந்த கொம்பைப்
    பொறையென வளர்ந்த கற்பைப் பூம்புன லாட்டி னாரால்.     3.15.169
    866    மின்னைவெண் சோதி சுற்றிக் கிடந்தன துகிலை வீக்கிப்
    பன்னருங் கருமே கத்தின் வெண்முகிற் படர்ந்த போல
    நன்னெடுங் கூந்தற் காட்டி னறும்புகை கமழ வூட்டித்
    தென்னுலா மணியின் சோதிச் சீப்பிட்டுச் சிறப்பிட் டாரால்.     3.15.170
    867    முகமதிக் கிடைந்து சுற்றி மூதிருட் படல மியாவும்
    புகுமிட மிதுவென் றோதும் புரிகுழ லதனிற் சாந்துந்
    தகரமும் விரவி வெண்பூத் தனித்தனி சிதறி வாய்ந்த
    சிகழிகை முடித்து வாசச் செழுமலர்த் தொடையல் வேய்ந்தார்.     3.15.110
    868    நுதற்பிறைக் கதிர்க ளோடி மேகத்தி னுளைந்த தென்னப்
    புதுக்கதிர்த் தரளச் சுட்டி புனைந்துமேற் சாத்துஞ் சாத்திக்
    கதத்தடற் படைவாள் வள்ளற் கவினறாப் பருக நாளு
    மதர்த்தரி படர்ந்த கண்ணின் மையெடுத் தெழுதி னாரால்.     3.15.172
    869    மடற்றிகழ் காதிற் செம்பொன் மணிப்பணி நிரையிற் சேர்த்தி
    மிடற்றெழில் கவர வந்த மின்னென மிளிர்ந்து தோன்றுஞ்
    சுடர்ப்பிறை வடத்தைச் சூடிச் சொரிகதிர் வடங்கள் சேர்த்துக்
    கொடிக்கரும் பெழுது தோண்மேற் கொழுமணிக் கோவை சேர்த்தார்.     3.15.173
    870    ககனமும் புவியு மில்லாக் கவின்பழுத் தொழுகுங் கையின்
    மகிதல முழுதும் விற்கும் வச்சிரக் கடகம் பூட்டிப்
    பகிரொளி காந்த ளங்கை விரலெனும் பவளக் கொப்பின்
    முகிழலர் பூத்த தென்ன முத்துமோ திரங்க ளிட்டார்.     3.15.174
    871    நதிக்கரை கடற்குட் பாரின் விளைந்தநன் மணிக ளெல்லாஞ்
    செதுக்கிப்பொன் னிழையிற் கோத்த வடத்தொடுஞ் சேர்வை யாக்கிக்
    கதிர்க்கட வுளும்வான் பூத்த கணங்களுஞ் சசியுங் கூடிப்
    புதுக்குடி யிருந்த தென்னப் பொருந்துமே கலையுஞ் சேர்த்தார்.     3.15.175
    872    வடிநறா வனசப் போது மாவிளந் தளிரு மொவ்வா
    வடிமிசை யூட்டும் பஞ்சி னலத்தக மலர்த்தி நாளும்
    பிடியின நடையைக் கற்பான் பெட்புறும் பதத்திற் செம்பொற்
    சுடர்மணிச் சதங்கை தண்டை பாடகஞ் சூட்டி னாரால்.     3.15.176
    873    பொன்னினு மணியி னாலும் பூந்தொடைக் கற்றை யாலு
    மின்னினை மறைத்துச் சற்றே வெளியிடை கிடந்த தெல்லாந்
    துன்னிய களபச் சேற்றாற் றடவிமெய் துலங்கச் செய்து
    கன்னியர் சூழ்ந்து வாழ்த்திக் கண்ணெச்சில் கழித்திட் டாரால்.     3.15.177
    874    மரகதச் சுடரைச் சேந்த மாணிக்கக் கொழுந்தைப் பூவிற்
    பிரிவுறாப் பொன்னை மின்னைப் பெண்ணலங் கனியை யெய்தாப்
    பரகதிப் பேறை வாழ்வை பாத்திமா வென்னு மந்த
    வரசிளங் குயிலைப் பூவி னணைமிசை நடத்தி னாரால்.     3.15.178
    875    அணிக்கலங் கலவைச் செப்புக் கோடிக மடைப்பை யேந்திப்
    பிணைக்கருங் கண்ணார் சூழப் பிறங்குசா மரைக டூங்கக்
    கணிப்பிலாத் துஆவு மாமீ னெனுஞ்சொலுங் கடல்போ லார்ப்ப
    மணக்கடி முரச மார்ப்ப முகம்மது மகளார் வந்தார்.     3.15.179
    876    வந்தபொன் மயிலை யின்ப மறைநபி யென்னும் வள்ளற்
    சிந்தையுங் கண்ணு மாரச் செழுங்களி பெருகி யோடச்
    சுந்தர வருவி மாறாச் சுடர்வரை யிடத்திற் றோன்ற
    வந்தரத் திழிந்த மின்போ லலியிடத் திருத்தி னாரால்.     3.15.180
    877    மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல
    அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ
    ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவ ரெவருஞ் சூழ்ந்து
    பலனுற வாழ்த்தி வாழ்த்திப் பாத்திஹா வோதுங் காலை.     3.15.181
    878    மெய்யொளி பரப்புஞ் சோதி விரிசிறை யொடுக்கி யார்க்குந்
    துய்யவ னருளின் மேன்மை ஜிபுறயீ லென்னுந் தோன்ற
    லுய்யுமா நிலத்தின் மாந்தர்க் குற்றதோ ருவகை கொண்டு
    வையகம் விளங்குந் தீனின் முகம்மதி னிடத்தில் வந்தார்.     3.15.182
    879    தருமுகம் மதுவுக் கின்ப சலாமெடுத் துரைத்து மேலாம்
    பொருளெனு மிறையோன் றன்னாற் பொன்னுல கதனி னுற்ற
    வரிசையும் வானோர் வாழ்த்து மகிழ்ச்சியின் கூறு லீன்கள்
    பெருகுமா னந்தத் துற்ற பெற்றியுங் கூறு வாரால்.     3.15.183
    880    இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு
    முற்ரினுஞ் சிறப்பித் தன்பாய் முறைமுறை வானோ ரியாரும்
    வெற்றிவா லளிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி
    சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ.     3.15.184
    881    வல்லவ னுரைம றாம லெண்ணில்வா னவர்கள் கூண்டு
    சொல்லருஞ் சுவன நாட்டுச் சுடர்மணி மனைக டோ றும்
    பல்லவத் துணர்ப்பைங் காவும் வீதியும் பல்பல் கோடி
    யெல்லவ னிருந்த தென்ன மணிவிளக் கியற்றி னாரால்.     3.15.185
    882    வானவர் மகளி ரெல்லா மணவினைக் கோலஞ் செய்து
    தானவன் பெயரின் வண்ணப் பயித்தொடுஞ் சலவாத் தோதிப்
    பானமுங் கனியுங் கொண்டு பன்மணி யூச லேறித்
    தீனவர் தமையும் வாழ்த்திச் செறிந்தனர் விண்ணி னம்மா.     3.15.186
    883    மறைமொழிக் கலிமாத் தீட்டும் வாயின்மா ளிகையி னுள்ளுள்
    ளறைதொறுந் திறந்து வன்ன பேதபட் டாடை கோடி
    முறைமுறை யெடுத்துத் தேனார் முகிழ்நனை யிருந்த செவ்வி
    நறைமலர்த் தொடையும் வாய்ப்ப நன்மணிக் கரத்திற் கொண்டார்.     3.15.187
    884    மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹாவென்
    றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி
    மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாராச்
    சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றிநின் றெறிந்திட் டாரால்.     3.15.188
    885    புதுநறும் பனிநீர் சந்தம் புழுகுமான் மதங்கற் பூர
    மதுவிரிந் தொழுகும் பொற்பூ வானவர் மகளி ரேந்திக்
    கதிர்மணிக் கதீஜா வீன்ற கன்னியை யலியைப் போற்றி
    விதமுறத் திசைக டோ றுஞ் சிதறினர் விளங்க வன்றே.     3.15.189
    886    பெருந்தரு வடியிற் றிட்டி கழித்தெறி பிடவை யெல்லா
    மருந்தவ முடைய வள்ள லகுமதே யுமக்கீ மான்கொண்
    டிருந்துபின் கணவ ராக வருமவர்க் கீவோ மென்ன
    வருந்திலா தமரர் மாத ரெடுத்துவைத் திருக்கின் றாரால்.     3.15.190
    887    நறைவிரி கனக நாட்டி னடந்தசோ பனங்க ளீதென்
    றறிவுற வானோர் கோமா னுரைத்தன ரதனைக் கேட்டு
    மறைநபி களிப்பா நந்த வாருதி தன்னை மூழ்கி
    யிறையவன் றன்னைப் போற்றி யாவர்க்கு மியம்பி னாரால்.     3.15.191
    888    அருளபூ பக்கர் வெற்றி யடலரி யுமறு கத்தாப்
    தெருளுறு முதுமான் மற்றச் செவ்வியோ ரெவருங் கேட்டுப்
    பெருகிய புதுமை யென்னப் பேரலி தமையும் பெண்மை
    யரசையும் பெரிது வாழ்த்தி யகக்களி பெருகி நின்றார்.     3.15.192
    889    முகம்மது நயினார் வாழ்த்த மற்றமன் னவர்கள் வாழ்த்தப்
    புகலருங் கற்பின் மிக்க பூவைய ரெவரும் வாழ்த்த
    நகுமணிக் கொம்ப னாரு நரர்புலி யலியு மின்ப
    மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகி னாரால்.     3.15.193
    890    
        வேறு

        இருவரு மணவறை புக்கி யின்புறப்
        பெருகிய மகிதலத் துறைந்த பேரிருள்
        வெருவுறத் திசைதிசை யொளிப்ப வெவ்விய
        பருதிவா னவன்கதிர் பரப்பத் தோன்றினான்.     3.15.194
    891    அடிதிரை வளைமணி யெறியு மாவிவாய்க்
    கடிமரை விரிதர விடிந்த காலையிற்
    படியினும் பெரும்பொறை பாத்தி மாதிரு
    வடிவுறும் புதுமணக் கோல வாயிலின்.     3.15.195
    892    தடியுலர்ந் துடனரம் பெழுந்து தாங்கிலா
    மிடியினன் பசியடைத் திருக்கு மெய்யினன்
    பிடிவிர லுருவிலாப் பீற லாடையன்
    கொடுகிய குளிரின்வந் தொருவன் கூயினான்.     3.15.196
    893    கூயவ னியாவெனன் றெழுந்து கோதையர்
    நாயகி யெதிர்ந்துபக் கீறை நன்குறச்
    சாயிபு பதமலர் வருந்தத் தக்கவென்
    வாயிலின் வந்ததென் மவுலு வீரென்றார்.     3.15.197
    894    கடிமனை யிஃதெனக் கருதி வந்தனன்
    வடிவுறு மயிலனீர் வயிற்று றும்பசிக்
    கொடுமையுந் தவிர்த்துடற் குளிரு நீங்கவோர்
    பிடவையு மருள்கவென் றெடுத்துப் பேசினான்.     3.15.198
    895    வறியவ னுரைத்தசொற் கேட்டு மாமயி
    லறுசுவைக் கறியுட னன்ன மீந்துமேற்
    குறையற வியற்றிய புதுக்குப் பாயமும்
    பெறுகவென் றளித்தன ரறிவின் பெற்றியால்.     3.15.199
    896    இகலுறு மனத்தவ ரீந்த போசன
    மகமகிழ் தரவயி றார வுண்டுநற்
    றுகலையு மொல்லையிற் புனைந்து தோமறும்
    புகழொடும் வாழ்த்திபக் கீறு போயினான்.     3.15.200
    897    ஆதுல னகன்றபி னாதி தூதெனு
    மாதவ முகம்மது மருவ லார்தமைக்
    காதபூ பக்கரு முமறுங் கல்வியி
    னேதமில் குணத்துது மானு மியார்களும்.     3.15.201
    898    இனையன பெயரும்வந் தெய்த நன்மலர்
    புனைதரும் பாத்திமா வென்னும் பூங்கொடி
    தனியெதி ரெழுந்து சலாமென் றோதினா
    ரனைவரு மறுமொழி கொடுத்தன் புற்றனர்.     3.15.202
    899    மணியொளி முகம்மது மகவை நோக்கிநன்
    கிணைமணிப் பணியொடும் புதிய தின்றியே
    பணிமொழி யீரொரு பழங்குப் பாயத்தை
    யணிவதென் னெமக்கடுந் தருளு வீரென்றார்.     3.15.203
    900    தந்தையீர் துகிலிலாச் சஞ்ச லத்தினால்
    வந்தன னொருபக்கீர் வழங்கி னேனென
    விந்தெனு நுதலிய ரியம்பச் செவ்விய
    மந்தரப் புயநபி மறுத்துக் கூறுவார்.     3.15.204
    901    இரவல ரிடத்தினிற் பழைய தீந்துநற்
    புரியிழை மென்றுகிற் புதுக்குப் பாயத்தை
    மருமணக் கோலத்தின் வனைய வேண்டுமென்
    றுரைதர மறுமொழி யுரைப்ப தாயினார்.     3.15.205
    902    அழகிய தெவையுமல் லாவுக் காகவே
    விழைவுடன் கொடுத்திட வேண்டு மென்றுநும்
    பழமறை வாக்கினாற் பகர்ந்த தாலரோ
    மழைதவழ் கொடையனீர் வழங்கி னேனென்றார்.     3.15.206
    903    பாத்திமா வெனுமயில் பகரக் கேட்டலர்த்
    தேத்தரு புயநபி மகிழ்ந்த செய்கையால்
    கோத்திரத் தவர்செழு முகங்கள் கோதறப்
    பூத்தசெந் தாமரைக் காடு போன்றவே.     3.15.207
    904    ஆண்டகை யலிமனைக் கம்ம நின்னையான்
    கூண்டவ ருடனுமே கூட்டிச் செல்வதற்
    கீண்டுவந் துறைந்தன னென்ன யாவருங்
    காண்டருங் காரணர் கழறி னாரரோ.     3.15.208
    905    தந்தைய ருரைதரத் தரும வீடெனுந்
    சிந்தையிற் களித்தொளிர் செவ்வி யோங்கிய
    விந்தெனு நுதன்மனை யிருந்த யாவையு
    மந்திரக் கிழவர்முன் வைத்து நின்றனர்.     3.15.209
    906    மாணெழி லரியபீங் கானும் வார்தலை
    காணியும் பாயலுங் கதிர்கொள் வெள்வளைப்
    பாணியிற் றிருகையும் பரம தானியும்
    பூணிழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார்.     3.15.210
    907    வயவரி யலிதிரு மனையிற் சேறுதற்
    குயர்மறை முகம்மது மொளிர்செங் கையினால்
    வியனுறுந் திருகையை யேந்தி னாற்விற்
    லியலபூ பக்கரும் பாயை யேந்தினார்.     3.15.211
    908    உற்றவர்க் குதவிய வுமறு வெள்ளிழை
    நற்றலை யணையினை யேந்தி னாருயர்
    வெற்றிசே ரடலுது மானு மெய்மனப்
    பற்றொடு மெடுத்தனர் பரம தானியே.     3.15.212
    909    கதிர்தரு பெரியபீங் கானைக் கையினின்
    மதிவல ரெனுமு சாமா வெடுத்தனர்
    பதுமமென் மலர்முக பாத்தி மாபதம்
    பொதிதரு கபுசுடன் புறப்பட் டாரரோ.     3.15.213
    910    வல்லிய மெனுமலி மனையின் வள்ளலார்
    செல்லெனு மொல்லையின் விரைவிற் சேணிழிந்
    தெல்லவன் கதிரினுஞ் ஜிபுற யீலெழின்
    முல்லைவெண் ணகைமயின் முன்றி னண்ணினார்.     3.15.214
    911    பரவர சரியலி மனைக்கும் பாத்திமா
    திருமண மனைக்கும்பா வாடை செய்தென
    வரகதி ஜிபுறயீ லென்னும் வள்ளறம்
    விரிகதிர்ச் சிறையினை விரித்து நின்றனர்.     3.15.215
    912    மன்னவ ரியாவரு மருங்கு சூழ்வரக்
    கன்னியுந் தொடும்பதக் கபுசு தன்னொடு
    மின்னிய சிறையெனு மாடை மீதினி
    னன்னலங் கனிதர நடந்து போயினார்.     3.15.216
    913    மறைநபி மகடமை யலிதம் வாயிலிற்
    சிறையினி னடத்துதல் செய்து வானவர்க்
    கிறைககன் புகுந்தன ரியாரு மின்புறப்
    பொறையெனு மனைவயின் பொலிய வைகினார்.     3.15.217
    914    கொணர்ந்தவை யாவையுங் கொடுத்து மன்னவர்
    மணந்தரு மலியையு மையிலன் னாரையு
    மிணங்கிடப் போற்றிவாழ்த் தெடுத்தவ் வில்லிடந்
    தணந்தவ ரவருறை சார்பிற் சார்ந்தனர்.     3.15.218
    915    சலிலமுஞ் சீரமுந் தழீஇய தன்மைபோ
    லொலிகடற் புவியினீ டூழி வாழ்கென
    வலியையு மகவையும் வாழ்த்தி யன்பொடு
    மலிபுகழ் முகம்மது மனைபுக் காரரோ.     3.15.219
    916    சொல்லுடன் பொருளெனக் சுருதி நூன்முறை
    யில்லுறைந் தொருவருக் கொருவ ரின்பமுற்
    றல்லெனுங் கூந்தலு மரசர் சீயமு
    மல்லலம் புவியிடை மகிழ்வின் வைகினார்.     3.15.220

    பாத்திமா திருமணப் படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 15-க்குத் திருவிருத்தம்..... 916

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.16 சீபுல் பகுறுப் படலம் (917-931)
    917    இறையவன் றூதரு மியார்க ணால்வரு
    மறைவழி பெருக்கிய மன்ன ரியாவரு
    நிறைதர விருக்குமந் நாளி னேரல
    ருறைபதி யிடத்திருந் தொற்ற ருற்றனர்.     3.16.1
    918    கடற்கரை சீபுல் பகறுவென் றோதிய
    விடத்தினி லபூஜகு லுடன்முன் னூறிய
    லடற்பரி கபடமா யடைந்த தின்றென
    மடற்றுளைச் செவிப்புக வாழ்த்திச் சொல்லினார்.     3.16.2
    919    ஒற்றர்க ளுரைத்தவை யுணர்ந்து தீனிலை
    வெற்றிசேர் வேந்தருக் குரைத்து வேறுகொள்
    பற்றல ரெனுமிருள் பருகும் வெங்கதிர்க்
    கொற்றவ ரடல்ஹமு சாவைக் கூவினார்.     3.16.3
    920    புடவியிற் பறப்பன போலு முப்பஃ
    தடல்வயப் பரியுட னயில்வில் லேந்திய
    மிடலுடை வீரர்கள் சிலரும் வெண்ணிலாச்
    சுடர்விடு துவசமுந் தொகுத்திட் டாரரோ.     3.16.4
    921    வயிரொலித் திடப்படை மன்னர் சூழ்வர
    வயிலொடுஞ் சென்றவ ணடர்ந்த பூஜகல்
    செயுமமர் வலிகெடச் செயித்து வம்மென
    வுயிரெனுஞ் சிறியதந் தையருக் கோதினார்.     3.16.5
    922    கருதலர்ச் செகுத்திவண் கடிதின் வம்மென
    வரசர்நா யகநபி யளித்த வாசகஞ்
    சிரசின்மேற் கொண்டமு சாவுஞ் சேணுலாய்
    வரும்விசைப் பெருந்திறல் வாசி மேற்கொண்டார்.     3.16.6
    923    பரகதிப் படையொடும் படைக்கு ழாத்தொடும்
    வரமுறு முகம்மதை வாழ்த்தி வாண்மறாக்
    கரதல ரெனும்ஹமு சாபெய் கார்முகிற்
    பொருதிரைக் கடற்கரை யிடத்திற் போயினார்.     3.16.7
    924    உவமையின் மிடல்ஹமு சாவந் துற்றவை
    யபுஜக லறிந்தடற் பரியுஞ் சேனையுங்
    குவிதரப் பொருமமர்க் கோலந் தன்னொடும்
    புவிதுக ளெழவெதிர் புறப்பட் டானரோ.     3.16.8
    925    தவிசுறை முகம்மதின் சிறிய தந்தையும்
    பவுரிகொள் கவனவெம் பரியும் வீரருந்
    துவசமுந் துலங்கிடச் சூழி மாகரி
    யபுஜகல் வருமிடத் தெதிர்வ தாயினார்.     3.16.9
    926    இருவர்தஞ் சேனையு மெதிருங் காலையிற்
    றிருகுநெஞ் சபூஜகல் சேனை புக்கிருந்
    தரிதினிற் றனித்தமு சாவென் றோதிய
    மருமலர்ப் புயத்தின ரிடத்தில் வந்தன.     3.16.10
    927    மறைநபி முகம்மதி னிடத்தும் வன்குபிர்
    செறுநர்க ளிடத்தினுஞ் சேர்ந்த பண்பினன்
    கறைகொள்வஞ் சகங்கப டடைந்த கல்பின
    னிறுமொழிச் சூதினன் மசுதிய் யென்பவன்.     3.16.11
    928    தருத்தனை யுறழ்நபி சிறிய தந்தையர்
    கருத்தினுக் கேற்பவைக் கபடந் தோன்றிலா
    திருத்திநன் மொழியொடு மிசைவ தாகவே
    பொருத்தினன் றவிர்ததனன் போரின் கோலமே.     3.16.12
    929    உள்ளுற வஞ்சகத் துறுதி கூறியே
    தெள்ளிய னெனவெழுந் தரிதிற் சென்றுபி
    னள்ளிலை வேலபூ ஜகுலுஞ் சேனையும்
    புள்ளுவத் தவர்தலம் புகுத்திப் போயினான்.     3.16.13
    930    தடத்திரட் புயத்தமு சாவுந் தண்டுறைக்
    கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கிநீள்
    கொடித்திர ளொடுங்குர கதங்கண் முன்செல
    வடற்படை கொடுமதி னாவி லாயினார்.     3.16.14
    931    எறிதிரைக் கடற்கரை யிடத்திற் சென்றதுஞ்
    செறுநர்வந் துற்றது மசுமதி செய்கையு
    முறைமையின் முகம்மது முன்பு கூறினார்
    சிறியதந் தையரெனுஞ் செவ்விச் சீயமே.     3.16.15

    சீபுல்பகுறுப் படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 16-க்குத் திருவிருத்தம்.....931

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.17 புவாத்துப் படலம் (932-950)

    932    சீபுல்ப குறுவெனுந் தலத்தின் செய்தியைக்
    காவலர் முகம்மதங் கறிந்து கல்விசேர்
    நாவல ருடனினி திருக்கு நாளினில்
    வேவுகொண் டொருவர்வந் திறைஞ்சி விள்ளுவார்.     3.17.1
    932    
        முன்னர்நம் முன்னல மொழிந்த பூஜகல்
        தன்னுடன் பொருந்தியங் கவனைத் தப்பவிட்
        டொன்னலர் தமக்குயி ருடலும் போன்றவ
        னின்னைநாட் புவாத்துவி னிருக்கின் றானென்றார்.     3.17.2
    933    ஒற்றர்வந் துரைத்தவை யுணர்ந்து நந்நபி
    நற்றவ முடைமையீர் நன்று நன்றுநம்
    வெற்றிசே ரியார்களும் பரியின் வீரரு
    மிற்றையிற் பகற்பொழு தெழுக வென்றனர்.     3.17.3
    934    அகிலமன் புறுமதி னாவுக் காதியாச்
    சகிமன சாயிவைத் தனிய தாகவைத்
    திகல்படைக் கோலங்க ளியற்றி யாவரும்
    புகழ்நபி முகம்மது புறத்தி லாயினார்.     3.17.4
    935    அறைதவில் பேரிகை முரசு மார்த்தெழ
    முறைமுறை கொடிப்படை படர்ந்து முன்செலக்
    சுறவெனும் வீரரும் பரியுந் துன்னவே
    யிறைநபி முகம்மது மெழுந்து போயினார்.     3.17.5
    936    உண்ணுநீர் காவத முலவித் தேடினுங்
    கண்ணினிற் காண்பரி தான கானகம்
    விண்ணினிற் புதுப்புன லன்றி வேறொரு
    மண்ணினிற் கூவலி லாப்பு வாத்துவே.     3.17.6
    937    தொடரறுங் கேண்மையின் மசுதிய் யென்னுமக்
    கொடியவ னுறைந்தபு வாத்துக் கோட்டையைச்
    சடிலமுஞ் சேனையுஞ் சதுரின் சுற்றிட
    வடிவுறு நபியவண் வைகி னாரரோ.     3.17.7
    938    உய்யுநன் மதியில னுறைந்த வூரினை
    வையகம் புகழ்நபி வளைந்த காலையில்
    வெய்யவன் பூதலம் விளக்கி நீள்கதிர்க்
    கையினை யொடுக்கிமேற் கடற்புக் கானரோ.     3.17.8
    939    இரவினிற் படைவளைந் திருப்பக் கீழ்த்திசை
    விரிதர வெளுத்தது விரவி னன்நபி
    யரியவற் றொழபஜ றடுத்த தீம்புனற்
    றருகவென் றுரைத்தனர் சாபிர் தன்னையே.     3.17.9
    940    ஏடலம் பியபுய நபியி சைத்தலு
    மூடிய கடங்களுந் துருத்தி மூட்டையுந்
    தேடின ரில்லெனத் திசையும் பாடியு
    மோடினர் நீருறை யொருங்கு காண்கிலார்.     3.17.10
    941    மீண்டனர் சடுதியின் வேத நாயக
    கூண்டவிப் பதிபுறங் குறுகி யெங்கணுங்
    காண்டில னீரெனக் கழற நன்னபி
    யீண்டுநீர்த் துருத்தியைக் கொணர்மி னென்றனர்.     3.17.11
    942    தருகெனு முறைவழி சாபி றொல்லையிற்
    பருகுநீ ரற்றதோற் றுருத்திப் பையினைத்
    திருமுனம் வைத்தனர் தொட்டுச் செவ்வியோர்
    சுருமதிந் திரத்தினிற் றுஆச்செய் தாரரோ.     3.17.12
    943    மண்ணுறும் பாண்டமொன் றெடுத்து வம்மென
    வண்ணலா ருரைத்தலு மோடி யவ்வயின்
    றண்ணுறுந் தொடைப்புய சாபிர் மன்னவ
    ருண்ணிறை களிப்பொடு முவந்து வைத்தனர்.     3.17.13
    944    புதுநுறும் பானையின் வாயிற் பொற்புறப்
    பதுமமென் கரவிரற் பரப்பு மூடிநின்
    றிதமுறுந் துருத்தியை யெடுத்துக் கையின்மேல்
    விதமுறக் கவிழ்த்தென விளம்பி னாரரோ.     3.17.14
    945    விடுமென வுரைத்தலும் வெறுந்து ருத்தியைக்
    கடநிறை விரலின்மேற் கவிழ்ப்ப வுள்ளுறைந்
    திடுதுளி யொன்றின்மே லின்றி வீழ்ந்தது
    படுமிட நீரெனும் பான்மை தோன்றவே.     3.17.15
    946    கையின்மே லொருதுளி கான்ற போழ்தினின்
    மெய்யொளி முகம்மது பிசுமி லோதினர்
    செய்யமென் விரலிடை நான்கிற் சேணதி
    பெய்யுநல் லருவிபோற் பிறந்தெ ழுந்ததே.     3.17.16
    947    சுருதிவல் லவனருள் சுரந்த நன்னபி
    விரலிடை நதியெனப் பிறந்த வெள்ளத்தாற்
    பரலழற் பாலையைப் போக்கிப் பண்ணைசூழ்
    மருதநன் னிலமென வளமுண் டாயதே.     3.17.17
    948    பரிகளொட் டகஞ்சுமை பரித்த நந்திக
    ளரிதினிற் குடித்தரு மயாவுந் தீர்ந்தன
    திருநபி முகம்மதுஞ் சேனை வீரரும்
    வரநதி யிடத்தினிற் றொழுது வாழ்த்தினார்.     3.17.18
    949    இவ்வண்ண மூன்றுநா ளிருக்கு மெல்வையின்
    மைவண்ணத் துள்ளத்து மசுதிய் யென்பவன்
    செவ்விய ரறிகிலா தொளித்துத் தேடருங்
    கவ்வைசெய் நெடிபடு கானம் போயினான்.     3.17.19
    950    ஓங்கிய நெடுங்கடத் தொளித்துப் போயின
    னீங்கிருந் தென்பல னென்ன நன்னபி
    தாங்கரும் புரவியுந் தானை வீரரும்
    வாங்குமி னெனமதி னாவில் வந்துற்றார்.     3.17.20
    புவாத்துப் படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 17க்குத் திருவிருத்தம்.....950

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.18. அசீறாப் படலம் (951-991)
    951    வானவர் பரவிய வள்ள னந்நபி
    தீனெனும் பெரும்பெய ரரசு செய்யுநா
    ளீனவன் குபிரவ ரியற்றுஞ் செய்கையைத்
    தானறிந் தொருவர்வந் தவையிற் சாற்றுவார்.     3.18.1
    952    வரைசெறி மக்கமா நகரின் மாற்றலர்
    திரகமு மணிகளுஞ் செம்பொ னாடையுந்
    தரளமு மிகுவிலைச் சரக்குந் தாங்கிய
    பரிகளு மெருதுமொட் டகத்தின் பந்தியும்.     3.18.2
    953    காமரி னிரைநிரை காவ லாளரு
    மாமதி வலசில வணிக மாக்களும்
    பூமணஞ் செறிதரு பொழில்கள் சுற்றிய
    ஷாமினுக் கனுப்பினர் சமய மீதென்றார்.     3.18.3
    954    உற்றுள வறிந்தவவ் வொற்ற ரீதெனச்
    சொற்றவை செவிப்புகத் தூயன் றூதுவர்
    வெற்றிகொள் வேலினர் வியப்ப விம்மொழி
    பெற்றன மெனத்தனி மறையிற் பேசினார்.     3.18.4
    955    தலைவருக் கிம்மொழி சாற்றி வேதநூன்
    மலிதருங் கேள்வி யபாசல் மாதமைப்
    பலவளங் கெழுமதி னாவிற் பண்புற
    நிலைதர முதன்மையி னிறுத்தி னாரரோ.     3.18.5
    956    விரிகதிர் வேலினர் வளைந்த வில்லினர்
    கரிகைபட் டயமழுச் சுமந்த தோளினர்
    பொருவினூற் றைம்பது புரவி தம்மொடும்
    வரநபி யெழுந்தன ரமரர் வாழ்த்தவே.     3.18.6
    957    அறைதவில் பம்பை தடாரி யார்த்தெழ
    முறைமுறை காகள முழக்க மோங்கிட
    மறுவறும் வெண்கொடி யுலவி வள்ளலார்
    சிறியதந் தையர்முனஞ் செல்லச் சென்றனர்.     3.18.7
    958    உள்ளகங் களித்தமு சாவென் றோதிய
    வள்ளல்வெண் கொடியுடன் மகிழ்ந்து முன்செலப்
    புள்ளினு நனிவிசைப் புரவி சூழ்வரக்
    கள்ளவிழ் மலர்ப்பொழில் கடந்து போயினார்.     3.18.8
    959    அடவியும் பாலையு மருவிக் குன்றமுங்
    கடகரி வனங்களுங் கடந்து போயிகல்
    படுகொலை மருவலர் நடத்தும் பாதையி
    னிடனசீ றாவெனுந் தலத்தி னெய்தினார்.     3.18.9
    960    வற்றுறாப் பெரும்புகழ் மக்க மாநகர்ப்
    பற்றலர் ஷாமினுக் கேகும் பாதையிற்
    சுற்றினு மிறங்கின சுருதி வாசகக்
    கொற்றவ னபியொடும் படைக்கு ழாங்களே.     3.18.10
    961    இலக சீறாவினி லிரண்டு நாளிருந்
    துலவிய வொற்றரா லுணரு மொல்லையிற்
    பலபல திசையவர் படர்ந்து சாவியே
    நலனுறு முகம்மது நபிமு னெய்தினார்.     3.18.11
    962    முதல்வநம் படைவர மூன்று நாட்குமுன்
    பொதியெரு தொட்டகம் புடையிற் பொங்கவே
    நிதியொடும் போயின நிகரில் ஷாமெனும்
    பதியினுக் கெனப்பதம் பணிந்து சொல்லினார்.     3.18.12
    963    பரதிசை திரிபவர் பகரக் கேட்டவண்
    கரநதி தருநபி யிருக்குங் காலையிற்
    பெருகுமவ் விடத்தவர் கூடிப் பெட்புற
    மரைமல ரிணைப்பதம் வந்து நண்ணினார்.     3.18.13
    964    பேர்பனீ முத்லசு வென்னும் பேருட
    னார்பனீ லமுறத்தென் பவரு மாண்டுறப்
    போரறத் தன்மையிற் படுத்திப் பொற்புடன்
    றார்கெழும் புயநபி தருக்கின் மீண்டனர்.     3.18.14
    965    முரசமும் பேரிபு முழங்கத் தாவிய
    பரிகளு மன்னவர் பலருஞ் சூழ்வர
    நரலையை நிகர்திரு நகரை நோக்கியே
    வரும்வழி யினிலொரு வசனங் கேட்டனர்.     3.18.15
    966    துறுமலர்ப் பொழிறிகழ் மதீனஞ் சுற்றிய
    சிறுகுடிப் பாடிக டிடுக்குற் றேங்கிடப்
    பெறுநிரை யனைத்தையும் பிடித்துத் தெவ்வரிற்
    குறுசெனு மவன்கொடு போயி னானென்றே.     3.18.16
    967    குரைகட லெனநிரை கொண்டு போயதோர்
    தருமுகி றவழ்சபு வானென் றோங்கிய
    வரையடி வாரத்தை நோக்கி மானபி
    பொருவில்வெம் படையொடும் போயி னாரரோ.     3.18.17
    968    இறையவ னுரைவழி யியற்றுந் தூதுவர்
    மறைமுதிர் படையொடும் வருகின் றாரெனக்
    குறுசெனு மவனிரைக் குழுவு மூரும்விட்
    டுறைவதில் லெனவொளித் தோடி னானரோ.     3.18.18
    969    வலனுற வடுஞ்சபு வானெ னும்பெரூ
    மலையடி வாரத்தின் வந்தவ் வூரிடை
    நிலைகொளு நிரையெலாங் கொண்டு நீணபி
    சிலையயிற் படையொடுந் திரும்பி னாரரோ.     3.18.19
    970    கல்லடை திடருமுட் காடுங் கண்ணறாச்
    செல்லடை நெடுவரைத் திகரிச் சூழலு
    மெல்லவன் கதிர்கிடந் தெரியும் பாலையு
    முல்லையுங் கடந்தொரு பொழிலை முன்னினார்.     3.18.20
    971    சேந்தன செழுங்கனி சிதறச் சிந்திய
    வீந்தடர் பொழிலிடத் திறங்கி நந்நபி
    யாய்ந்தநல் லறிவின ரமச்ச ரின்புற
    வாய்ந்ததோர் பத்திரம் வரைந்து கட்டினார்.     3.18.21
    972    அகிலமன் னப்துல்முத் தலிபுக் கன்புறு
    மகள்மகன் அப்துல்லா வென்னு மன்னரை
    யிகலறு மனத்தவ ரிருத்தி முத்திரைத்
    தகுதியிற் பத்திரங் கொடுத்துச் சாற்றினார்.     3.18.22
    973    பாடிபத் துனுநகு லாவிற் பாங்குறக்
    கூடியங் குறைந்துகைக் கொடுத்த பத்திர
    மூடிய முத்திரை முறித்துப் பாசுரஞ்
    சூடிய வுரைவழி துணிமி னென்றரோ.     3.18.23
    974    கண்ணெனப் பிரிவின்மு ஹாஜி ரீன்களி
    லெண்மரை யவர்மொழிக் கிணங்கச் சேர்த்தினி
    துண்மகிழ் தரவவ ணுறைகு வீரென
    மண்ணகம் புகழ்முகம் மதுவ னுப்பினார்.     3.18.24
    975    நாயக ருரைத்தவை யுளத்தி னாட்டிநற்
    றூயவ ரெண்மரும் பரிவிற் சூழ்வரப்
    பாயரித் துவசமுன் படரப் போயினர்
    சீயமொத் தப்துல்லா வென்னுஞ் செம்மலே.     3.18.25
    976    தந்தைதம் முன்னவ டருமத் தால்வரு
    மைந்தரை யவணிடை யனுப்பி மன்னர்கோன்
    சிந்திடத் துயர்வரை சிதறத் தாக்கிக்கைப்
    பந்தென வருந்திறற் பரியின் மேற்கொண்டார்.     3.18.26
    977    திறல்வய வீரருஞ் சேனை மன்னரு
    மறையொலி திசைதர வருமவ் வேளையி
    லறபியி லொருவன்வந் தடுத்தி யாவர்க்கு
    மிறையவன் றூதர்மு னியம்பு வானரோ.     3.18.27
    978    முன்னவர் மும்முறை மொழியி னீறினி
    னன்னபி யொருவருண் டென்னு நாட்டத்தாற்
    சென்னிலந் தொறுந்தொறுந் திரிந்துங் காண்கிலா
    திந்நிலத் தெதிர்ந்தன னூழி னேவலால்.     3.18.28
    979    மண்டலம் புகழ்தரு முகம்ம தேநிழற்
    கொண்டலங் கவிகையுங் குறிப்புங் காட்சியுங்
    கண்டவன் பொருட்டுயர் கார ணீகமொன்
    றுண்டெனி லெனக்குவே றுறுதி யில்லையால்.     3.18.29
    980    என்றவ னுரைத்தன னேகன் றூதுவர்
    வென்றிகொ ளறபியை விளித்துச் சேணிடை
    நின்றவத் தருவினைக் கூவி நின்னிடத்
    தொன்றுமென் றிசைதர வுரைத்திட் டாரரோ.     3.18.30
    981    தூதுவ ருரைவழி யறபி தூரத்தின்
    மாதரு நிலையினை நோக்கி வாவெனக்
    கோதறக் கூறினன் கூற வத்தருப்
    பூதலம் விரிதரப் புறத்தெ ழுந்ததால்.     3.18.31
    982    எழுந்தருப் பணர்சினை யாவும் பின்னரின்
    விழுந்திட வேரைமுன் னீட்டி மேதினி
    யழுந்திட வூர்ந்ததி சயிப்ப வாசலச்
    செழுந்தொடைப் புயநபி திருமுன் னின்றதே.     3.18.32
    983    வந்துநின் றத்தரு மண்ணுள் ளோர்களு
    மந்தரத் தமரருங் கேட்ப தாகவே
    சுந்தரம் பெறச்சலாஞ் சொல்லி யிந்நிலத்
    துய்ந்தன னெனக்கலி மாவு மோதிற்றே.     3.18.33
    984    இருவகை மொழியுங்கேட் டறபி யீங்குறை
    தருவினை முன்னுறை தானஞ் சேர்தர
    வருளுகென் றுரைத்தன னாதி தூதரு
    மொருமொழி செல்கென வுவந்து கூறினார்.     3.18.34
    985    வடவரைப் புயநபி வசனங் கேட்டலு
    முடைமர மிலையிலொன் றுதிர்த ராமலே
    படர்பணர் துயல்வர சலாம் பகர்ந்தக
    மடைவபோ லேகிமுன் னிடத்தி னாயதால்.     3.18.35
    986    தருப்புது மைகடரத் தந்த நந்நபி
    திருப்பதக் தினிற்சிரஞ் சேர்க்கத் தன்மன
    மொருப்படச் செழுங்கலி மாவை யோதிநல்
    விருப்பொடு நெறியிசு லாமின் மேவினான்.     3.18.36
    987    காரணக் குரிசில்நுங் கமல மாமல
    ரீரடி யினுஞ்சஜ தாச்செய் தேத்தியிப்
    பாரிடைப் பலன்பெறப் பரிவி னோர்விடை
    தாருமென் றுரைத்தனன் றழைத்த புந்தியான்.     3.18.37
    988    அறபியிவ் வுரைதர வழகின் பேறுறத்
    தறைசிரம் படசஜ தாச்செய் தேத்துவ
    திறைவனுக் கல்லது மாந்தர்க் கில்லென
    முறைமையின் மறைவழி மொழிந்து காட்டினார்.     3.18.38
    989    துன்னிதழ்த் தாமரைப் பாதந் தொட்டியா
    னென்னிரு விழிசிர மேத்த வாயினு
    முன்னுளத் திசைந்தரு ளுரைசெய் வீரெனப்
    பொன்னகங் காவலர் பொருந்தி னாரரோ.     3.18.39
    990    அருமறை முகம்மதி னம்பொற் றாளிணை
    யிருவிழி வைத்துமுத் தாடி யாவர்க்கும்
    பிரியமுற் றொருசலா மோதிப் பெட்புடன்
    வரிசைபெற் ற்றபிவாழ் பதியிற் போயினான்.     3.18.40
    991    வழிபடு மவனைநல் வழியி லாக்கிமேற்
    சுழிபடு புரவியும் படையுந் துன்னவே
    யழிபடாப் பெரும்புக ழரசர் கேசரி
    பழிபடா திருந்துவாழ் பதியை நண்ணினார்.     3.18.41

    அசீறாப் படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 18க்குத் திருவிருத்தம்.....991

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.19 பத்னுன்னகுலாப் படலம் (992-1006 )
    992    மழைதவழ் கவிகை வள்ளன் முகம்மது தீனைப் போற்றி
    யெழில்பெறு மப்துல்லாவு மெண் மருங் கூண்டு சுற்றிச்
    சுழியெறி யாறுங் கானுஞ் சுரங்களுங் கடந்து செந்தேன்
    பொழிதரக் கனிக டூங்கும் பொழிலிடை யிறங்கி னாரால்.     3.19.1
    993    நபிதமை விடுத்து மூன்றா நாளினி லிறங்குங் காவிற்
    கவினுற வெழுதிக் கட்டித் தருங்கடு தசை யேந்திப்
    புவிபுக ழப்துல் லாநற் புரவல ரெவருங் கேட்டுச்
    செவியினின் மகிழ்ச்சி கூரத் தெரிதர வாசித் தாரால்.     3.19.2
    994    மக்கநன் னகரார் ஷாமுக் கனுப்பிய முதலு மற்று
    மிக்கவத் திரியு மாவு மீண்டவண் வருநாண் மட்டும்
    புக்கியங் குறைந்து கானிற் போவதற் கிடங்கொ டாமற்
    றிக்கறப் பறித்து வெட்டித் திரும்புமென் றிருந்த தன்றே.     3.19.3
    995    விரிந்தவா சகத்தைக் கேட்டு விரைந்தெழுந் தரச ரியாரும்
    பரிந்ததா யிபுக்கு மக்க மெனும்பதி தனக்கு நாப்பண்
    வரந்தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா வென்னும்
    புரந்தனி லிறங்கிப் பாதைப் புறந்தொருங் காவல் வைத்தார்.     3.19.4
    996    பாயரி போன்று சின்னாட் பாதைகாத் திருப்பச் சாமிற்
    போயின சரக்கு மாவு மொட்டகைக் குழுவும் பொங்கித்
    தாயிபுக் கிப்பாற் பட்ட தெனுங்குறிப் பறிந்து தத்த
    மாயுத மெடுத்துச் சேர்த்துப் புரவிமே லாயி னாரால்.     3.19.5
    997    பொன்னுநன் மணியுந் தூசும் புரவியொட் டகத்தி னேற்றிக்
    கொன்னுறைக் கதிர்வா டாங்கிக் குமரரும் வருத னோக்கி
    மின்னிலங் கியவேற் செங்கை முகம்மது விடுத்த வேந்தர்
    பன்னக நெளியத் தத்தம் பரியொடு மெதிர்ந்து கொண்டார்.     3.19.6
    998    செயலறு மருவ லாருந் தீனவர் படையுந் தாக்கிக்
    கயினுறை கழித்த வாளின் கண்கடீக் கனலக் காதி
    வெயிலவன் கதிரிற் றூண்டும் வெஞ்சரந் தொடுத்து நீண்ட
    வயிலொடு மயில்க ணீட்டி யடுஞ்சமர் விளைத்து நின்றார்.     3.19.7
    999    அமரிடை வெகுண்டு சீறிக் காபிரி லம்றென் றோதுங்
    குமரன்முன் னெதிர்ந்து தாவக் கோளரி யப்துல் லாகண்
    டிமைசுட விழித்து முன்ன ரேகித்தம் வாளால் வாசிச்
    சுமைகெட விரண்டு துண்டம் படவுட றுணித்து நின்றார்.     3.19.8
    1000    மருவல னம்றென் போனு மாண்டபி னிருவர் தாக்க
    விருவருக் கிருவ ரேகி யெதிர்ந்துமற் போரிற் சேர்ந்து
    தரையிடை வீழ்த்தி வெளவிக் கட்டுத றனைக்கண் டேங்கி
    யொருவனு மோடி னான்மற் றுளர்திசை சிதறி னாரால்.     3.19.9
    1001    தாரையி னெதிர்ந்த நான்கு தலைவரி னொருவன் வீந்தான்
    வீரர்க ளிருவர் தீனின் வேந்தர்கை யினிற்கட் டுண்டார்
    போரெதி ராது மற்ற வொருவனும் புறத்திற் போனான்
    வாருதி போல வந்தோர் திசைதிசை மறுகி னாரால்.     3.19.10
    1002    ஒட்டகத் திரளு மேறும் புரவியு மொளிரச் சேர்த்த
    பெட்டகத் தொகையுஞ் செல்லப் பிடித்தவ ரிருவர் செங்கைக்
    கட்டுட னடத்திச் செவ்வேற் காளைய ரினிது சூழ
    மட்டவி ழலங்கற் றிண்டோ ண் மன்னவர் புறப்பட் டாரால்.     3.19.11
    1003    எண்ணொணாத் திரகங் கைக்கொண் டெண்மரு மிலங்கும் வேற்கை
    யண்ணலென் றிசைக்குங் கீர்த்தி யப்துல்லா வென்னும் வேந்தும்
    விண்ணினுந் திசையுந் தீன்தீ னெனுமொழி விளங்கக் கூறிப்
    பண்ணெலாம் விழையாட் டெய்தும் பதியெனு மதீனஞ் சேர்ந்தார்.     3.19.12
    1004    அறைகட லவனி காக்கு மகுமதி னிடத்தை நண்ணி
    முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த
    சிறையுடன் பொதியிற் செய்த திரகத்தின் றொகுதி காட்டித்
    தறுகிலா தெழுந்து போற்றி யவரவர் சார்பிற் சார்ந்தார்.     3.19.13
    1005    பூசலிட் டடைய லாரைப் பொருதுவெல் லுவதற் காகா
    மாசபே தத்திற் பொன்னை வைத்தனர் சின்னாட் பின்ன
    ராசிலான் கருணை கூர வாய்த்தொன் றிறங்கை யாலே
    பாசமுற் றவர்கேட் கெல்லாம் பகுந்தினி தளித்திட் டாரால்.     3.19.14
    1006    பிடித்தருஞ் சிறையிற் பட்ட பெயர்தலை விலைய தாகக்
    கொடுத்தரும் பொன்னான் மக்கா புரத்தவர் கொண்டு போனார்
    வடித்தசொன் மறையோர் வாழ்த்த மன்னவ ரினிது போற்றத்
    தொடுத்ததீன் விளங்கச் செய்து தூதுவ ரிருந்தா ரன்றே.     3.19.15

    பத்னுன்னகுலாப் படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 19-க்குத் திருவிருத்தம்....1006

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.20 பதுறுப் படலம் (1007-1262)
    1007    நெறியொடும் புறுக்கா னன்னேர் நிகழு மன்வருடந் தன்னிற்
    பெறுகதி றமலா லென்னப் பெருகிய நோன்பு தன்னை
    யுறுதிகொண் டெவர்க்குஞ் செவ்வி யுறபறு லாக்கி னேனென்
    றிறையவ னருளி னாயத் திறங்கிய தெவர்க்கு மன்றே.     3.20.1
    1008    உள்ளுறைந் தெவர்க்குந் தோன்றா துலகெலா நிறைந்த மேலோன்
    விள்ளுதற் கரிய வேத வழிமுறை விதித்த நோன்பை
    வள்ளனந் நபியு நாலி யார்களு மற்று ளோருந்
    தெள்ளிய மனத்தி னோடுஞ் சிறப்புடன் முடித்து வந்தார்.     3.20.2
    1009    பறுலெனு நோன்பு நோற்று வருகையிற் பதினே ழாய
    குறைவற வெள்ளி நாளிற் குத்துபாத் தொழுத பின்னர்
    மறுவறு மொற்றர் தம்மில் பசுபசா வென்னும் வீரர்
    முறைவழி தவறா வள்ளன் முன்பணிந் தெழுந்து நின்றார்.     3.20.3
    1010    வியர்வுமெய்த் தொய்வும் பூண விசித்தகச் சையுமா கத்தி
    னயர்வொடும் விரைவின் வந்தா யாதிதன் தீனை மாறுங்
    கயவர்தஞ் செய்கை யாது கண்டனை யென்ன மார்க்கத்
    துயர்நபி முகம்ம தின்பா லொதுங்கிவாய் புதைத்துச் சொல்வார்.     3.20.4
    1011    மருக்கமழ் சோலை சூழு மக்கமா நகரின் வாழ்வு
    பெருக்கிநந் தீனை மாறு பேசிய தலைவர்க் குற்ற
    வுரக்கமு மணியுந் தேச வாணிபத் துறுதி யான
    சரக்குகள் சின்னாண் முன்னர் ஷாமுக்குப் போய தன்றே.     3.20.5
    1012    அந்நக ரடைந்தி லாப மிரட்டிக்கு மதிக மாறிப்
    பின்னரிந் நாட்டுக் கேய பெறுஞ்சரக் கனைத்துங் கொண்டு
    மன்னிய புரவி யேறு வரிநெடுங் கழுத்தலி யாவுந்
    துன்னிடச் சுமைக ளேற்றித் தொகுதிக டொகுதி யாக.     3.20.6
    1013    இருநிதிச் செல்வர் நாற்ப திலக்குறுந் தலைவர் சூழ
    மருமலர்த் தொடையல் வேய்ந்த வரைப்புயன் கறுபு மைந்த
    னருளறம் பயிலாச் சிந்தை யபாசுபி யானு மாகத்
    தெரிவருஞ் செம்பொற் குப்பைத் திரளொடும் வருகின் றாரால்.     3.20.7
    1014    ஈதுபோ னமக்கு வாய்த்த திலையொரு காலத் தேனு
    மாதவ விஃதென் றோதி வாய்புதைத் தொருங்கு நின்றார்
    சூதர மொழியார் சிந்தை தொட்டமெய் யெழில்சேர் வள்ளல்
    காதினுட் புகுந்து மாற்றங் கருத்தையும் வியத்திற் றன்றே.     3.20.8
    1015    தனுச்சர வேக மானும் பசுபசா சாற்று மாற்ற
    நனைச்செழுந் தொடையல் வேய்ந்த தோழர்நால் வருக்குங் கூறித்
    தொனிச்சதிர் கடலந் தானைத் தொகைப் படைத் தலைவரியாரு
    மினிச்சடு தியினென் முன்னர் வருகவென் றிசைமி னென்றார்.     3.20.9
    1016    அடையல ரிடியே றன்ன அபாலுபா னாவைச் செம்பொன்
    மடறிகழ் கமல வாவி மதீனமா நகர்க்கு மற்றப்
    புடைபடு நகர்க்குஞ் செங்கோற் புரந்தர ரிவரே யென்ன
    விடையறா மறையின் றீஞ்சொன் முகம்மதாண் டிருத்தி னாரால்.     3.20.10
    1017    
        வேறு
        பழுதி லாதெமெய் முதலவன் பறுலெனப் பணியுந்
        தொழுகை நேரிமா மெனச்செயுந் தொழின்முறை சிறப்பப்
        பொழியு நன்மறை நாவினர் புகலுநா லெவையும்
        வழுவி லிபுனும்மி மக்த்தூமைத் தலைமையா வைத்தார்.     3.20.11
    1018    
        வேறு
        வீரவெண் மடங்க லென்னும் விறலபூ பக்கர் வேக
        மாருத மடங்கத் தாவும் வயப்பரி யுமறுஞ் சேந்த
        கூரயி றாங்குஞ் செங்கைக் கோவுது மானும் வெற்றித்
        தார்கெழும் வடிவா ளேந்துந் தடப்புய அலியும் வந்தார்.     3.20.12
    1019    இயன்மறை தெரிமு ஹாஜி ரீன்களெண் பத்து மூன்று
    பெயருமன் சாரி மாரிற் பேர்பெறுந் தலைமை மிக்கோ
    ருயரிரு நூற்று முப்பத் தொருபெய ரவருங் கைவா
    ளயருறா வெற்றி வீரத் தவருட னீண்டி னாரால்.     3.20.13
    1020    இருபுறக் கரட தாரை மதசல மிறைத்து நிற்கும்
    பொருகரிக் கணங்க ளென்னப் புலிக்குழாந் திரண்ட தென்ன
    வரையிடை கிடந்து சீறு மடங்கலேற் றினங்க ளென்ன
    விரிகடற் றானை சூழ வேந்தர்க டிரண்டு மொய்த்தார்.     3.20.14
    1021    திரைக்கடற் கடுப்ப வேந்தர் சேனைகொண் டீண்டத் தாவும்
    பரிக்குழா நெருங்கச் சேர்ந்த படைக்கலன் செறிந்து மின்ன
    மருக்கமழ் படலைத் திண்டோ ண் மலையென வளர வள்ள
    லருக்கனொத் தெழுந்து வெம்போ ரணிகல னணிய லுற்றார்.     3.20.15
    1022    தண்ணொளி விலகி வீசுஞ் சபூகெனுந் தலைச்சோ டிட்டு
    வெண்ணிலாக் கதிரிள் கற்றை மின்னினைப் பொதிந்த தென்ன
    வண்ணவெண் சறுபாற் றொட்டு மருங்கினிற் சுருக்கி வீக்கிக்
    கண்ணொளி கவருஞ் சோதிக் கஞ்சுகி கவினச் செய்தார்.     3.20.16
    1023    ஒலியல்மே இருத்திச் செவ்வி யொளிருங்குற் றுடைவா னென்னுங்
    கலிபினைச் சேர்த்த காட்சி கருதல ருயிரை நாளும்
    பலியெனக் கருள்வீ ரென்னப் பருமணிக் கச்சின் கையான்
    மலிபுகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்ற தன்றே.     3.20.17
    1024    திருநபிக் கேவல் யானுஞ் செய்குவ னென்ன வெய்யோன்
    வெரிநிடத் துறைந்த போல விளங்குகே டகத்தைச் சேர்த்துத்
    சொரிகதிர் வயிர மாலைத் தோள்வரை யிடத்திற் றோன்றி
    யொருபிறை கிடந்த தென்னத் தனுவொரு புறத்திற் கொண்டார்.     3.20.18
    1025    வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை
    யையனுக் கொன்று நூறா யிரமென வமைந்த வேவல்
    செய்வன திகாந்த மட்டுஞ் செல்வன திறத்த வெண்ணில்
    பெய்சரக் காபூ றென்னுந் தூணிபிற் புறத்திற் சேர்த்தார்.     3.20.19
    1026    மறுவிலு கைபத் தென்னு மரவயி ரத்திற் செய்த
    குறுசூனுந் தண்ட மேந்திக் குலக்கொழுந் தனைய கற்பிற்
    பொறைமயில் கதீஜா வீந்த பொலன்மணி வேலுந் தாங்கி
    யிறைவனை வாழ்த்தி யேத்தி முகம்மது மெழுந்தா ரன்றே.     3.20.20
    1027    தாவிடின் மனத்தை யொக்குந் தாக்கிடி னிடியே றொக்கு
    மேவிடிற் றிகிரி யொக்கு மெதிர்ந்தவர்க் கெரியை யொக்கும்
    பூவிடத் தடலின் வங்கூழ் போன்றிடும் சக்பென் றோது
    மாவினைக் கொணர்மி னென்ன முகம்மது சரணம் வைத்தார்.     3.20.21
    1028    கடலினைக் கலக்க வென்றோ கதிர்துகள் படுத்த வென்றோ
    வடவரை தகர்க்க வென்றோ மண்ணிலம் பிளக்க வென்றோ
    வடையலர் பதியை யின்னே யந்தரத் திடுக வென்றோ
    தடமுறுங் கடினவாசி தாள்பெயர்த் திட்ட தம்மா.     3.20.22
    1029    உவரியுண் டெழுந்த காரி னொலித்தவொட் டகத்தின் பேரி
    புவியிட மதிரப் பொங்க முரசங்கள் புடையி னார்ப்ப
    நவுரிகா களங்கள் சின்ன நரலையின் கலித்து விம்மப்
    பவுரிகொள் பரிமுன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம்.     3.20.23
    1030    பரிசைகே டகம்வாள் சொட்டை பட்டயஞ் சுரிகை தண்ட
    மெரிசெய்வேல் சவளங் குந்த மிடுசரத் தூணி வல்வில்
    வரிசையி னிரையி னேந்தும் வயவரும் பரியு மற்றும்
    விரலிட மின்றி யெங்கு நெருங்கின படையின் வெள்ளம்.     3.20.24
    1031    மண்களி லரசு வைகும் வன்குபிர்க் களைக டீர்த்துப்
    பண்கெழு மிறசூல் வேதப் புகழ்முனம் படர்ந்த தென்னக்
    கண்களித் தமரர் வாழ்த்தக் கடிதினு காபென் றோதும்
    வெண்கதிர் வெள்ளை வெற்றிக் கொடியைமுன் விரித்திட் டாரால்.     3.20.25
    1032    மிடலுறும் வெற்றி யுக்கா பெனுங்கொடி மிசஃபு கைக்கொண்
    டடனபி முன்பு செல்ல வலிமுனங் கொடியொன் றேகத்
    தடமுறு மதீனா வேந்தர் தம்முனங் கொடியொன் றேக
    விடனறக் கவிகை வெள்ள மெங்கணும் பரந்த தன்றே.     3.20.26
    1033    பரந்தகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி
    விரிந்தவப் படல தூளி மறைத்தன கொடியின் வீக்க
    நிரைந்தன கொடியின் வீக்க மறைத்தன கவிகை நீத்தஞ்
    சொரிந்தன கவிகை நீத்த மறைத்தன கவரித் துள்ளல்.     3.20.27
    1034    படர்திரைக் கடலி னோதை கடந்தன படையி னோதை
    புடைபடும் படையி னோதை கடந்தன புரவி யோதை
    கடுவிசைப் புரவியோதை கடந்தன கரியி னோதை
    தடவரைக் கரியி னோதை கடந்தன சலவாத் தோதை.     3.20.28
    1035    உலம்பொரு தோளிற் றுன்னு மாலைக ளுகுத்த தேனுங்
    கலன்பல வணிந்த மெய்யி னழிந்திடுங் கலவைச் சேறும்
    விலங்கலின் புறத்துந் தாவும் வெம்பரி விலாழி நீரு
    நிலன்படப் பிறந்த சேற்றா னெடும்பணை போன்ற தன்றே.     3.20.29
    1036    கடிமலர்க் குவளைக் காடுங் கமலமு நெரிந்து சிந்தக்
    குடைகொடி செறிந்த தொப்பக் குருகின மிரியல் போகப்
    புடைபடுங் கதலிச் சூழல் பூங்கரும் படவி மாய
    மடைசெறி தடங்கள் சூழ்ந்த மருதம்விட் டகன்று போனார்.     3.20.30
    1037    நீட்டிலை மிடறு சாய்த்த நெடுங்கதிர்த் தினையின் சார்பிற்
    கோட்டலர் கமழுங் கூந்தற் குறத்தியர் கவண்கல் லேந்திப்
    பாட்டிசை மிழற்றுஞ் செவ்வாய்ப் பசுங்கிளி கடியு மோதை
    கேட்டினி தாமாத் துஞ்சுங் கிளைவரைச் சாரல் போந்தார்.     3.20.31
    1038    ஆம்பலங் குழலின் வாய்வைத் தாயர்க ளிசைக்கு மோதைத்
    தேம்பினி மதுரத் தீம்பால் செவிமடுத் தினிது மாந்தி
    வாம்பரி வீர ரியாரு முகம்மதின் சலவாத் தோதிப்
    பூம்பொழிற் கொன்றை வேலி முல்லையுங் கடந்து போனார்.     3.20.32
    1039    விரிபரற் பொரிசெம் பாலை வெறுநிலங் கடந்து விம்மி
    முரிதருந் திவலை தூற்று முகிற்குடை நிழலி னேகி
    யெரிவிழிப் பேழ்வாய் வெண்பன் மடங்கலேற் றினங்கள் போன்றோர்
    வரையிடை வயவர் சூழ முகம்மதுற் றிறங்கி னாரால்.     3.20.33
    1040    வடிசுதை தீற்று மாட மதீனமா நகரின் வள்ளல்
    கொடுவரி யினங்கள் போன்ற குழுவுடன் பாதை நாப்பண்
    படைகொடு முறைந்தா ரென்னும் பருவர லொற்றர் கூற
    வடலபா சுபியான் கேட்டோ ரடவியி னிறங்கி னானால்.     3.20.34
    1041    எண்ணிறத் தனைய செம்பொ னிடுஞ்சுமைத் தொகுதி யாவுங்
    கண்ணென வொருங்கு சேர்த்துக் காவலி னிருந்து நேமி
    மண்ணகம் பரவு மக்கா மாநக ரரரசர்க் கெல்லாம்
    விண்ணபத் திரத்தைக் தீட்டி விரைவுட னனுப்பி னானால்.     3.20.35
    1042    பத்திரஞ் சிரசி னேந்திப் பாதைவிட் டொருபாற் சென்று
    குத்திரப் புறங்க ணீந்திக் கொடுமரச் சரத்தி னேகிப்
    புத்தொளி விரிக்கு மாட மக்கமா புரத்தின் வேந்தர்
    மொய்த்தபே ரவையி னண்ணி வைத்தனன் முடங்க லன்றே.     3.20.36
    1043    அபுஜகல் முதன்மற் றுள்ளோ ரனைவரும் திரண்டு வைகிப்
    கவினுறும் ஷாமுக் கேகி வருமவர் கடிதிற் றீட்டி
    யிவண்விடுத் தனுப்பு மோலை தனைவிரித் தியம்பு கென்னச்
    செவிவழி புகுதக் கேட்டோ ர் செவ்வியன் வாசிக் கின்றான்.     3.20.37
    1044    ஷாமெனும் பதியை நீந்தித் தலவர்நாற் பதின்மர் சூழ
    வேமமும் பண்டமியாவுங் கொண்டியான் வருவ கேட்டு
    மாமதி னாவின் வைகு முகம்மது படைகோ டெய்திப்
    பூமனு முபய மார்க்கப் பொறையிடத் திறங்கி னானால்.     3.20.38
    1045    இன்னணம் பதியி லுள்ளோ ரியாவருந் திரண்டு பூவிற்
    பன்னரும் படைகொண் டீண்டிப் பாதையி னாப்பண் வைகு
    மன்னவன் முகம்ம தென்போன் வலிகெடுத் தவனை வீழ்த்தி
    நந்நிலை யெடுத்துச் சீர்த்தி நாட்டுத றுணிதல் வேண்டும்.     3.20.39
    1046    இல்லெனி லெம்மோ டுற்றோ ருயிர்செகுத் தெனையு மாய்த்துச்
    சொல்லரும் பணியும் பண்டத் தொகுதியுங் கவர்ந்து வாரி
    யொல்லையிற் கொடுபோய்த் தன்னூ ருறைகுவ னுறுதி யென்ன
    மல்லலம் புயத்தான் றீட்டும் பாசுரம் வாசித் தானால்.     3.20.40
    1047    ஓலைவா சகத்தை கேட்டங் குயர்பதித் தலைவ ரியாரு
    மாலையும் புயமும் வாகு வலயமுங் குலுங்க நக்கிச்
    சீலமு மறனுந் தேய்த்த சிறுவரி லொருவ னின்னே
    சாலவும் வலிய னென்றாற் சாற்றுவ தென்கொண் மாதோ.     3.20.41
    1048    அடவியற் கரந்து பாதை யவர்களைத் தடிந்து முன்ன
    ருடைமைகோ டுறைந்தா னம்மாற் காப்பதொன் றின்மை யாலே
    படையொடு மின்னும் வந்தா னினிப்பகை தவிர்த்தி டேமாற்
    புடவியின் முகம்ம தென்போன் புகழ்நிலை நிறுத்து வானால்.     3.20.42
    1049    அருநிதிக் கிடையூ றாய்வந் தடுத்தவன் றன்னை யின்னே
    பொருதடர்ந் தவனை வீழ்த்தி யாவிவிண் புகுத்தே மாகிற்
    பரவைசூழ் நிலத்தி னந்தம் படைக்கலன் சுமந்த கையி
    னுரமென்னாம் வீர மென்னா முயர்குடித் தலைமை யென்னாம்?     3.20.43
    1050    எனவெடுத் திசைத்த மாந்தர்க் கெதிரிருந் தகத்தி னக்கி
    வினையமுற் பவித்த புந்தி யபூஜக லென்னும் வீரன்
    மனமுமுள் ளறிவு முட்க வயிரமு மறனும் பூணச்
    சினமொடுங் கண்கள் சேப்ப வொருமொழி தெரிந்து சொல்வான்.     3.20.44
    1051    பிறந்தநாட் டொடுத்து வாய்வீண் பேசுவ தலது நம்மான்
    மறந்தரப் புகழே தேனும் வாய்மையின் முடித்த துண்டோ
    அறந்தவிர் நமர்கட் கெல்லா மாண்மையின் பெயரு முண்டோ
    வெறுந்தரை தடவன் மாற்றம் விடுமின்கள் விடுமி னென்றான்.     3.20.45
    1052    ஆட்டிறத் தனைய வீர னபூஜகு லுரைத்த மாற்றங்
    கேட்டலுந் தலைவ ரெய்தாக் கோபத்தீக் கிளரப் பொங்கி
    நீட்டிய வுயிர்ப்பு வீங்கி நெடுங்கரம் பிசைந்து விம்மித்
    தோட்டுணை வரைக ணோக்கி வீரத்திற் றுணிந்து நின்றார்.     3.20.46
    1053    மறித்தெதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை யின்னே
    தறித்தபா சுபியான் றுன்பந் தவிர்த்திடே மாகி லியார்க்குங்
    குறித்துயிர்க் குயிராய் நின்ற குபலெனுந் தம்பி ரானை
    வெறுத்தழற் குழியில் வீழும் வீணர்க ளாவே மென்றார்.     3.20.47
    1054    தனதுயிர்த் தலைவ ரிந்த வஞ்சினஞ் சாற்றத் தீமை
    புனையபூ ஜகுலென் றோதும் புன்மையன் றானும் வாளான்
    முனைமுகம் மதுவை வீழ்த்தி முடிதுகள் படுத்தே னாகின்
    மனைவியைப் பிறருக் கீந்த மதியிலி யாவே னென்றான்.     3.20.48
    1055    அரசபூ ஜகல்சொன் மாற்ற மனைவர்க்கு மிஃதே யென்னப்
    புரவல ரெவரு மொத்துப் பொருபடை யாவுந் தத்த
    நிரையொடும் வருக வென்ன முரசநீண் மறுகு தோறும்
    விரைவொடு மறைக வென்றா ரன்னது விளக்கி னாரால்.     3.20.49
    1056    முரசதி ரோதை கேட்டு மொய்ந்ந்க ருள்ளோ ரெல்லாம்
    விரிகதி ரெஃகங் கூர்வாள் வின்மழுச் சவளங் குந்தங்
    கரதலத் தேந்தித் தாவுங் கடும்பரித் திரளி னோடு
    மிருளறுங் ககுபத் துல்லா வெனுமிடத் தெய்தி னாரால்.     3.20.50
    1057    கேடக மருங்கு சேர்த்துக் கிளரொளி வடிவாட் டாங்கிச்
    சோடணிந் தரிய செம்பொற் சுடர்மணிக் கடகம் பூண்டு
    தேடரும் வெற்றி மாலை சென்னியி னிலங்கச் சூடி
    யாடலம் பரியி னேறி சைபத்து மவணின் வந்தான்.     3.20.51
    1058    வெஞ்சின மடங்க லென்ன வெகுளியி னெழுந்து சேந்த
    கஞ்சுகி யணிந்து சந்தக் கதம்பமான் மதங்கள் பூசிச்
    செஞ்சுடர் மணித்தண் டேந்தித் திரண்மணிப் புயங்கள் விம்ம
    வஞ்சினங் கூறித் தாவும் வாசிமே லுமையா வந்தான்.     3.20.52
    1059    மணியணி பலவுந் தாங்கி வச்சிர வுடைவாட் சேர்த்துக்
    கணைசொரி தூணி வீக்கிக் கார்முகங் கையி னேந்தி
    யணியணி வீரர் சூழ வாலயம் புகுந்து தாழ்ந்து
    பணிதர குபலைப் போற்றி யுத்பத்தும் பரியின் வந்தான்.     3.20.53
    1060    சுரிகையை மருங்கு சேர்த்துச் சொரிகதி ரிலைவே லேந்திக்
    குரகத நடத்தி வெல்வேற் குமரர்கள் பல்லர் சூழ
    வரியென வெகுளி பொங்கி யாண்மையும் வலியுங் கூறி
    விரிதருங் கவிகை நீழ லபூஜகல் விரைவின் வந்தான்.     3.20.54
    1061    இன்னன வேந்த ரோடு மெண்பஃ தரசர் மொய்ப்ப
    வந்நக ரறபிக் காபி ராயிரம் பெயர்கள் சூழ
    மன்னிய சீறூ ருற்ற மைந்தர்க ளெவரு மீண்ட
    பொன்னக ரென்னு மக்கா புரத்தினிற் புறத்துற் றாரால்.     3.20.55
    1062    காணுதற் கிறுதி யில்லாத் திறத்தினர் கவலும் வெற்றிப்
    பூணின ருயிரை யீந்து புகழினை நிறுத்தும் பொற்பார்
    மாணுறுங் கிரியுங் கீறி வகிர்ந்தெடுத் தெறியும் வல்லார்
    சேணுற நிவந்த வூழித் தீயையு மவிக்கு நீரார்.     3.20.56
    1063    புடவிதொட் டெழுந்து வானிற் போவன போன்று மேன்மேற்
    படர்திசை யெட்டு மெட்டிப் பறப்பன போன்றுந் துள்ளிக்
    கடிதிரை யுவரி யேழுங் கடப்பன போன்று வாகை
    விடுவிடென் றதிர்ந்து தாவும் வெம்பரிக் குழுவின் வேகம்.     3.20.57
    1064    பரிகளிவ் வண்ணஞ் சான்ற நிலம்பரப் பின்றித் தோன்ற
    வெரிவிழி கலுழ வேந்த ரிளையருங் குழாங்கொண் டீண்ட
    வரமுறும் வெற்றி வள்ளன் முகம்மதை வெல்வே னென்னப்
    பொருபடைப் பெருக்க நோக்கி யபூஜகல் பூரித் தானால்.     3.20.58
    1065    வயிரொடு சின்ன மார்ப்ப வலம்புரி முழங்க வாரி
    பெயுமுகி லிடியே றென்னப் பேரிகைக் குழாங்கள் பொங்க
    வெயிலவன் கதிர்க டோ ன்றா வெள்ளைவெண் கவிகை மொய்ப்பத்
    துயல்வருங் கொடிக டுன்னத் துரகத நடத்தி னாரால்.     3.20.59
    1066    கதக்கடல் பரந்த தென்னக் கடந்தெழுஞ் சேனை வெள்ளப்
    பதத்துக ளெழுந்து மேகப் படலங்க ளனைத்து மூடி
    மதித்தவெண் டிசையுந் திக்கும் வானினுஞ் செறிந்து நாளு
    மதிர்த்திரைப் பரவை வேலை யலையையுஞ் சுவற்றிற் றன்றே.     3.20.60
    1067    பவளங்கள் குலைசாய்த் தென்னப் பழுத்தசெஞ் சாலிக் காடுந்
    தவளவெண் டரளஞ் சிந்துஞ் சலஞ்சலத் தடமுங் காவுந்
    திவளொளிக் குவளைக் காடுந் திசையெலாம் வழிய தாக
    விவளவென் றெண்ண வொண்ணா தெழுந்தன சேனை வெள்ளம்.     3.20.61
    1068    அடவிக ணெரியக் கானி னாறுகள் சேற தாகப்
    புடைபடு மிறும்புங் கல்லும் பொடி படு நூறதாகத்
    திடரிடங் குழிய தாகக் குழியிடந் திடர தாகப்
    படர்கொடி விசும்பு தூண்டப் படைக்கட னடந்த தன்றே.     3.20.62
    1069    கவிகையி னெருக்க மென்கோ கவரியி னெருக்க மென்கோ
    சிவிகையி னெருக்க மென்கோ செழுங்கொடி நெருக்க மென்கோ
    குவிபரி நெருக்க மென்கோ கொற்றவர் நெருக்க மென்கோ
    சவுரியர் நெருக்க மென்கோ யாதெனச் சாற்ற மாதோ.     3.20.63
    1070    விரிபெருங் கடலந் தானை வெள்ளமீக் கெழுந்து பாலைப்
    பரல்வழி கடந்து வேற்றுப் பாடிக ளகன்று முட்சார்
    பொரியரைக் காடு நீந்திப் பொருப்பிட மனைத்தும் போக்கி
    யிருளறற் கொழிக்குங் கான்யாற் றிடத்தினி லிறுத்த தன்றே.     3.20.64
    1071    அரியுளைக் கேச பந்தி யாடலம் பரிக ளியாவு
    நிரைநிரை நிரைத்துப் பேரிச் சுமைநெடுங் கழுத்தல் சேர்த்து
    முருகுமிழ் வெற்றி மாலை முரட்படை வேந்தர் வீரர்
    வரிவயப் போத்துச் சூழ்ந்த மடங்கலின் வகி னாரால்.     3.20.65
    1072    விண்கணி னமர ரியாரு மெல்லடி பரவி போற்று
    மொண்கதி ருருவ வள்ளற் குறுபகை யாகிக் கூண்ட
    புண்கதி ரெஃக மேந்தும் புரலவர் முகநோக் காது
    கண்களைப் புதைத்து வெய்யோன் மேற்றிசைக் கடலு ளானான்.     3.20.66
    1073    கதிரவன் கடலிற் புக்கான் கங்குலங் காலைப் போழ்தி
    னதிர்கட றுயிலு மாறா யனைவருந் துயில்வ தானார்
    சதிவர வறியாச் சிந்தை யபூஜகல் தானு மற்றக்
    கொதிநுனை வேலி னோருங் கொடுங்கன வடுப்பக் கண்டார்.     3.20.67
    1074    வெருவருங் கனவு தோன்ற விழித்தெழுந் தரச ரியாரு
    மொருவருக் கொருவர் விள்ளா துள்ளத்தி னொடுக்கா நின்றா
    ரெரிகதிர்ப் பரிதி வெய்யோ னெழுந்தன னெழுந்த பின்னர்
    முரசுசங் கொலிப்பப் பொங்கி யெழுந்தது மூரித் தானை.     3.20.68
    1075    கடுநடைப் புரவி வெள்ளத் தொட்டகங் கலித்துப் பொங்க
    மிடலுடைக் கதிர்வெள் வேலும் வில்லொடு மிடையத் தாங்கிப்
    படரரி யினங்க ளென்னக் காளையர் பல்ல ரேக
    விடுகொடை கவிப்ப மன்ன ரேகியோர் புறத்தி லானார்.     3.20.69
    1076    ஷாமினின் றெழுந்த பின்னர் தம்படை யலது வெற்றி
    மாமதிட் புரிசை மக்கா மாநகர்ப் படையி னோடு
    மாமதி யறியாச் சிந்தை யபூஜகல் வந்த வாறுந்
    தோமறு மொற்றர் வள்ளன் முகம்மதுக் கறியச் சொன்னார்.     3.20.70
    1077    இருவ கைப்பெரும் படையும்வந் தடுத்ததென் றிசைப்ப
    மரும லர்ச்செழும் புயநபி முகம்மது கேட்டுத்
    திருகு வெஞ்சினத் திருநிலம் பிளந்துமண் சிதறப்
    பொரும றாமத கயமென விருக்குமப் போழ்தில்.     3.20.71
    1078    முகிற்ப ரப்பிய நிழல்வரு முகம்மது தமக்குப்
    பகுப்ப தற்கிட மில்லெனும் பரம்பொரு ளருளா
    லிகற்ப டும்பகை யிரண்டிலொன் றுமதுகை யிடத்தி
    னகப்ப டுத்தின னெனுமொழி யிறங்கிய தன்றே.     3.20.72
    1079    ஒக்க லின்புக ழபூபக்கர் தமையர சுமறை
    மிக்குத் தாதைமற் றுளமதி யரையெதிர் விளித்துப்
    பக்க லின்புற விருத்திவெண் ணினும்புகழ் பரப்புந்
    தக்க வாய்மையின் முகம்மது சாற்றுவ ரன்றே.     3.20.73
    1080    படரும் வெம்பகை யிரண்டிலொன் றுமதுகைப் படுமென்
    றுடைய நாயக னாயத்து மிறங்கின துலவிச்
    சுடரும் வேற்படை யபூஜகல் தனைத்துணி துணிப்பப்
    புடவி மேலமர் விளப்பதோ வல்லது புகழீர்.     3.20.74
    1081    அரும்பு மென்மலர் வாவிசூழ் ஷாமிருந் தடுப்ப
    வரும்பெ ரும்பொரு ளனைத்தையும் படையுடன் வளைந்து
    கரம்ப டுத்திடத் துணிவதோ கருத்தினிற் றெளிந்து
    விரும்பி ரண்டிலொன் றுரைமின்க ளெனுமொழி விரித்தார்.     3.20.75
    1082    வனையு நீண்முடி முகம்மது முரைப்பவண் டரளம்
    புனையு மார்பினர் கருத்தினுண் மதியெலாம் பொருத்தி
    நினைவி னேர்வழி யிஃதுமுத் திரையென நிறுத்திக்
    கனைகொள் வாம்பரி மன்னபூ பக்கர்கட் டுரைப்பார்.     3.20.76
    1083    அறமு மின்பமும் வளர்த்திடு முலகெலா மளிப்பத்
    திறன ளித்திடுஞ் சேரலர் பகையையுஞ் சிதைக்கும்
    வெறுமை கண்டவர் தம்மைமேன் மையரென வியந்து
    நிறையி லாப்பெரும் புகழ்தரு முலகினி னிதியே.     3.20.77
    1084    என்னு நீர்மையிற் சாமினி லிருந்திவ ணடைந்த
    பொன்னை யாம்வசப் படுத்துத னன்கெனப் புகழு
    மன்ன தோற்றுதெற் கெனவினி துரைத்தனர் மகிழ்வி
    னன்ன தேகருத் தெனவிரு வருமறைந் தனரால்.     3.20.78
    1085    மாது லன்முதன் மூவரும் வழங்கிய வசனங்
    காதி னுற்றருங் காரணர் கருத்தினுட் படுத்திச்
    சீத நன்மொழி யொடும்பல ருடனினந் தெரிந்து
    போத மின்புறச் சொலுமின்க ளெனுமொழி புகன்றார்.     3.20.79
    1086    மந்தி ரத்தினிற் றலைவரு முரிமைமன் னவருந்
    தந்தி ராதியன் ஸாரிக ளெனுந்தகை மையரு
    நந்தம் புந்தியி னடத்துதற் பழுதென நடுங்கிக்
    கந்த மென்புய நபிதிரு முனங்கழ றுவரால்.     3.20.80
    1087    மேலே வன்றிரு மொழிவழி யுலகினை விளக்கிக்
    கோன டாத்திய செழுமுகிற் கவிகையங் கோவே
    கால மூன்றையுந் தெரிந்தநுங் கருத்தினுக் கிசைவ
    போலும் புந்தியிற் சொலுமவ ரெவரிரும் புவியில்.     3.20.81
    1088    அடிகள் புந்தியி னிருந்தவை யுரைக்கிலவ் வழியே
    முடியு மெங்களா லுரைப்பதென் ? முரணடை யலரைத்
    தடிமி னென்றலுந் தடிகுவ மெமர்கடம் முயிரை
    விடுமி னென்றலும் விடுகுவ நுந்திரு வுளத்தால்.     3.20.82
    1089    உயிர்க்கு றுந்துணை யவர்களிவ் வுரையெடுத் துரைப்பக்
    குயிற்கு லங்கவி தருநிழல் வருபெருங் குரிசில்
    வெயிற்ப டுங்கதி ரவனென தீனிலை விளக்கக்
    கயிற்ப டும்பொரு ளெனவொரு மொழிகழ றுவரால்.     3.20.83
    1090    பந்தி நீடிய தெருத்தொறும் பலமணி குயிற்றி
    யிந்து தீண்டிய மேனிலை ஷாமினி லிருந்து
    வந்த பொன்னொடு மாந்தரைச் செலும்வழி மறித்து
    நந்தத் தாக்குத லிருப்பப்பின் னொருமொழி நவில்கேன்.     3.20.84
    1091    மக்க மாநகர ரவரபூ ஜகுலுரை வழியி
    னொக்கல் கூட்டுற வறபிக ளெவரும்வந் துறைந்தார்
    புக்கி யங்கவர்ச் செகுத்துநம் புகழ்நிலை நிறுத்தற்
    கிக்க ணந்துணி வதுபெருங் கருமமென் றிசைத்தார்.     3.20.85
    1092    மதித்தி டாப்பெரும் பொருளொளி வினில்வடி வழகா
    யுதித்த நன்னபி யுரைத்தலு முயிரெனு முரவோர்
    கதித்த மாக்கட லெனும்படி யகங்களிற் களிப்ப
    விதித்த திம்மொழி துணிவது மிவையென விசைத்தார்.     3.20.86
    1093    புடைக்கும் பேரொலிப் பல்லியந் தொடுகடற் பொருவக்
    கொடிக்க ணந்திரண் டிருவிசும் பிடைவெளி குறைப்பப்
    படைக்க லத்தொடு மெழுந்துபோய் பதுறெனும் பதலை
    யடிக்குக் கீழ்புறத் தெல்லையி னிறங்கின ரன்றே.     3.20.87
    1094    ஆதி நீண்மதிள் ஷாமினி லிருந்துவந் தவரும்
    பாத வத்திட முகம்மதன் றிறங்குபா சறைக்குக்
    காத மாமெனக் கடற்கரைப் புறத்தினிற் கடிதி
    னேத மின்றிய பெருநிதி யொடுமிறங் கினரால்.     3.20.88
    1095    விரைசெய் மெய்நபி பாசறை யடுப்பத்தென் மேல்பா
    லருவி யாறும்வன் பொருப்புமுண் டதற்குமப் புறத்திற்
    பரியுஞ் சேனையு மிடைதர வபூஜகல் படையு
    மொருவ ருந்தெரி யாவண மவணில்வந் துறைத்த     3.20.89
    1096    வரையி டத்தினுங் கடற்கரை யிடத்தினும் வனத்தும்
    பெருகுஞ் சேனைகொண் டிறங்கிவெம் பேரமர் விளைப்ப
    வொருவர் தம்படைச் செய்தியங் கொருவர்தம் படைக்குத்
    தெரிகி லாதிருந் தனர்செழுந் திறல்வய வேந்தர்.     3.20.90
    1097    பற்ற லாருறை யிடந்தெரி தரச்சில பகுப்பா
    யொற்ற ரைத்திசை திசைவிடுத் தனரவ ரோடி
    வற்று றாப்பெரு நதிகளும் வனங்களு மலையுஞ்
    சுற்றிப் பார்த்தவர் வரும்வழி தனிலொரு சுரத்தில்.     3.20.91
    1098    நறவு தூற்றிய பொழிறிகழ் மக்கமா நகரி
    னறபிக் காபிர்கள் பெருஞ்சுமைத் திரளினொட் டகமும்
    பிறவுங் கொண்டிவண் வருதல்கண் டிமைப்பினிற் பிடித்து
    வெறிக மழ்ந்தமெய் முகம்மதின் றிருமுனம் விடுத்தார்.     3.20.92
    1099    இறுங்கு கோதும்பை நென்முத லியபல வேற்றிப்
    பிறங்க லின்வனம் விடுத்தரும் பெருஞ்சுர வழியின்
    புறங்க டந்தெவ ணேகுவிர் புகலிட மியாதென்
    றறங்கி டந்தசொன் முகம்மதங் கவர்களைக் கேட்டார்.     3.20.93
    1100    பருகு றாக்கொடும் பாலையிற் பெரும்புனல் படுத்து
    முருக றாதமெய் முகம்மது திருமுக நோக்கி
    யிருகி றாமலை மக்கமா நகரிடத் திருந்து
    வருகி றோமென வுரைத்தன ரறபிவங் கிடத்தார்.     3.20.94
    1101    விலகு நீள்கதிர்ச் சுதைநிலைச் சாமினை விடுத்துக்
    குலவு மொட்டகத் திரளொடும் பலருடன் கூடி
    யிலகும் வேற்கைய பாசுபி யானெவ ணுறைந்தான்
    சொலுமி னீவிரென் றுரைத்தனர் நபியிற சூலே.     3.20.95
    1102    துடவை சுற்றிய ஷாமினைத் துறந்தவ ருறைந்த
    விடமு மெல்லையு மறிகில மபூஜகு லென்போ
    னுடனெ ழுந்துத் பத்துசை பத்துமை யாவும்
    படையும் வெம்பரிக் குழுவுட னிறங்கினர் பரிவின்.     3.20.96
    1103    பதுறு மாமலைக் கப்புற மிருக்குமன் னவர்க்குப்
    புதிய போசன வருக்கங்க ளிவைகொடு போந்தே
    மிதுகொ லியாமறிந் தவையென வறபிக ளியம்பச்
    சுதின மின்றென வுரைத்திறை யவன்றனைத் துதித்தார்.     3.20.97
    1104    அறபிக் காபிர்க டமையொரு தலத்தினி லாக்கிப்
    புறம டைந்தக லாதுவன் காவலிற் புகுத்தி
    யிறுகக் கட்டிய வொட்டகைச் சுமைகளை யிறக்கி
    மறுபு றத்தினி லிருத்துமென் றனர்முகம் மதுவே.     3.20.98
    1105    வலிய வீரர்க ளெழுந்து நந்நபிமொழி வழியே
    பொலிவு றுஞ்சுமை யனைத்தையு மொருபுறத் தாக்கிக்
    கலின வாம்பரி யறபிக டமையுமக் கணத்தி
    லொலிகொள் பாசறைக் குள்ளுறப் புகுத்தின ரொருங்கே.     3.20.99
    1106    கவசம் போலுங்கண் போலுநற் காயத்தி னுறைந்த
    நுவலு தற்கரு முயிரெனுந் துணைவரை நோக்கி
    நபிக ணாயக மகக்களி நனிகனிந் தொழுக
    மவுல லுற்றனர் தெரிதர வொருதிரு வசனம்.     3.20.100
    1107    கூறு மக்கநன் னகரவர் குழுவுடன் கூடி
    மாறு கொண்டிவ ணடைந்தன ரொல்லையின் வளைந்து
    பாறு கொண்டுண வெஞ்சமர்க் களத்திடை படுத்தற்
    கீறி தன்றிப்பின் வேறொரு சமயமு மிலையால்.     3.20.1010
    1108    இற்றைப் போதினில் வாய்த்ததிங் கடலிறை யோனும்
    வெற்றி தந்தனென் றாயத்து மிறக்கினன் விரிநீர்
    வற்று றாக்கடற் புவியினில் தீன்பயிர் வளர்க்கப்
    பெற்ற மென்றிய னபிமனம் பிரியமுற் றுரைத்தார்.     3.20.102
    1109    ஈது முத்திரைப் பொருளென யாவரு மிசைந்து
    மோது பேரலை மடுக்களுஞ் சுனைகளு முருகார்
    தாது குத்தவெள் ளருவியு மலையடிச் சார்புங்
    காது மாற்றலர்க் கிடமறக் காவலிற் பொதிந்தார்.     3.20.103
    1110    அற்றைப் போதுபுக் கடைந்தபின் பாசற யனைத்தும்
    பற்ற லார்க்கிட மறத்தலைக் காவலிற் படுத்தி
    வெற்றி வேந்தர்க ளிருந்தன ரிருளற விளக்கி
    யொற்றை யாழிவெய் யவன்கதிர் விரித்துதித் தனனால்.     3.20.104
    1111    விடிந்த காலையி லபூஜகு லெனுமடல் வீர
    னடைந்த பாசறை யெழுகவென் றெழுமுர சதிரக்
    கடந்த தும்பிய களிரெனு மரசருங் கணமும்
    படர்ந்த வெம்பரிக் குழுவுட னெழுந்தனர் பரந்தே.     3.20.105
    1112    கோல வட்டவெண் கவிகையு நெடுங்கொடித் காடு
    மால வட்டமுங் கேகயப் பீலியு மணியாய்
    வேலை வட்டவெண் டிரையெனக் கவரியின் வீச்சும்
    நீல வட்டவொண் விசும்பிட னறநெருங் கினவே.     3.20.106
    1113    பேரி காகள மதிர்தர வபூஜகல் புறப்பட்
    டார வாருதி முகம்மது திசையறி யாமற்
    பாரின் மின்குலம் பரந்தென வேலொளி பரப்பி
    வீரர் சூழ்வர வரவுகண் டவர்விளம் புவரால்.     3.20.107
    1114    இகன்ம னத்தபூ ஜகல்பெரும் படையுட னெழுந்து
    தகைவி னம்படை யுறைவது தனையறி யாம
    லகல்வ தன்றிநம் மெதிரடுத் தடைந்தன னெனுஞ்சொற்
    பகர்வ தாயினர் முகம்மது திருமுனம் பணிந்தே.     3.20.108
    1115    ஒன்ன லார்படை யுறுவதென் றுரைவழங் கிடவே
    கன்னி மாப்பெருந் தொகுதிக டமையலங் கரித்து
    மின்னு குற்றுடை வாளெடுத் தரையினில் விசித்து
    மன்ன ரியாவரும் போரமர்க் கோலங்கள் வனைந்தார்.     3.20.109
    1116    உதித்த திங்களின் சவிகெடக் கவிகைக ளொளிரப்
    பதித்த லத்தினும் விண்ணினும் கொடித்திரள் பறப்பக்
    கதித்த வெம்பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதி
    னிதத்த நன்மறை முகம்மது நபியுட னெழுந்தார்.     3.20.110
    1117    சின்னம் பூரிகை பேரிகை தவில்பறை திடிம
    னின்னி யம்பல முழக்கலிற் புவிசெவி டெடுப்ப
    மன்னர் பேரணி கலனொளி பருதியின் மலிய
    நன்ன யசல வாத்தொடும் வாழ்த்தொடு நடந்த     3.20.111
    1118    கொதிகொள் வேலினர் வரிப்புலிக் குழுவெனக் குழுமப்
    பதலை யின்புறம் விடுத்தடற் படைகொடு நடத்தி
    யெதிரி லான்றுணை யொடுமொரு திடரைவிட் டிறங்கிப்
    பதுறெ னுந்தலத் தாயினர் முகம்மது நபியே.     3.20.112
    1119    ஹபீபு தம்பெருஞ் சேனையுங் கவிகையுங் கொடியு
    மபூஜ குலுடன் வருபவ ரெவருங்கண் டறிந்தா
    ரபூஜ கல்பெருந் தானையுந் துவசமு மார்ப்பும்
    ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவிற்கண் டறிந்தார்.     3.20.113
    1120    திருகு வெஞ்சினக் கடகரி யனைவர் திரளை
    யரசர் கேசரி யெனவரு மகுமது நோக்கி
    யிருநி லத்தினிற் றருவெனு மிருகர மேந்திச்
    சுருதி வல்லவன் றனையிரந் தொருமொழி சொலுவார்.     3.20.114
    1121    உன்னு முன்றிரு மறைபடி றெனவுமிவ் வுலகி
    லென்னை யுந்திருத் தூதனு மலவென விழிவாய்ச்
    சொன்ன காபிர்க ளடைந்தன ரிவருட றுணிப்ப
    மின்னும் வாள்வலி யெனக்கரு ளெனவிளம் பினரால்.     3.20.115
    1122    இந்த நன்மொழி யிறையவ னிடத்திரந் தேத்தி
    யந்த ரத்தினி லமரரா மீனொலி யதிரக்
    கந்து கத்திருந் தருமறை பாத்திஹா வோதிச்
    சுந்த ரப்புயத் துணைவரை யருளொடு நோக்கி     3.20.116
    1123    பேத வஞ்சமன் னவர்கடம் பெயர்களைக் குறித்துச்
    சோதி மென்கர மெடுத்திரு நிலத்தினைச் தூண்டி
    யேத முற்றுயிர் விடுமிட மிஃதிஃ தெனவே
    பூத லம்புகழ் திருநபி வாக்கினிற் புகன்றார்.     3.20.1173
    1124    கருத லார்படு களமிது தலமெனக் காட்டிச்
    சுருதி நூன்முறை பெருக்கிய நாவினர் சூழ
    விருது நீள்கொடி யிருபுற முலவிமேல் விளங்கப்
    பருதி போற்பெரும் புகழ்நபி படையணி வகுப்பார்.     3.20.118
    1125    கடகரித்திர ளெறிந்தரும் புலவறாக் கதிர் வேற்
    பிடிக்கும் வெற்றியஸ் ஹாபிக ளினிற்சில பெயரை
    வடிக்கு மாமறை யவரிடத் தினில்வர வழைத்து
    நடிக்கும் வெம்பரி யினருளந் தெரிதர நவில்வார்.     3.20.119
    1126    செறுநர் வெம்படை யடரினு மிவண்சித காமல்
    விறள்கொள் வில்லினிற் பொருவதல் லதுகதிர் விரிவா
    ளுறையை நீக்கலென் னுறைபிறந் ததற்பினென் றுரைத்து
    நெறியி னோரிட நிறுத்தினர் நிலைதவ றாதார்.     3.20.120
    1127    நிகரின் மன்னவர்க் கினிதுரைத் தொருதல நிறுத்திச்
    செகத லம்புக ழபூபக்கர் செழுமுக நோக்கி
    யிகல றுந்தனி முதலவ னுதவிகோ டிவணிற்
    ககனி ழிந்தம ராதிபர் வரவுகண் டனனால்.     3.20.121
    1128    ஒங்கல் போலுமை யாயிர மலக்குக ளுடனே
    நீங்கில் பஞ்சகலி யாணியிற் றமனிய நிறத்த
    பாங்க ரின்சரு வந்தணிந் தரும்படைக் கலன்க
    டாங்கி விண்ணிடை யெதிர்ந்தன ரிருவிழி தழைப்ப.     3.20.122
    1129    எந்த னாருயிர் ஜிபுறயீ லிவணம ரடுத்து
    வந்து நின்றனர் வெற்றியும் பிடித்தவாள் வலியு
    மந்த நாயக னமக்களித் தனனென வறைந்தா
    ரிந்து வந்தெதிர் பகிர்தரப் பகர்தரு மிறசூல்.     3.20.123
    1130    அலியை யும்புகழ் தரும்ஹமு சாவையு மடல்வாள்
    வலிமை மிக்குபை தத்தையு மூன்றணி வகுத்துச்
    சிலைகொள் வெம்பரி வீரர்கள் கணம்பல செறிய
    நிலைகொ ளும்படி தாமுமோ ரணியென நின்றார்.     3.20.124
    1131    அபுஜ கல்முத லுத்பத்து மவன்மக னொலீதும்
    பவுரி வாம்பரி சைபத்தும் பெருபடைக் கடலு
    நவுரி பம்பைக ளார்த்திட நாலுகை யாகப்
    புவன மெங்கணு நடுங்குற நடத்தினர் புரவி.     3.20.125
    1132    முதிரும் பூசல்கொண் டிருபெரும் படைகளு முன்னி
    யெதிருங் காலையி லபூஜகல் கரமெடுத் தேந்திப்
    பதியி ருந்துற முறைகளைப் பழித்தபா தகரைச்
    சதிப டுத்திறை வாவெனத் தனியிரந் தனனால்     3.20.126
    1133    எட்டிக் கொண்டெமக் குமக்கென விருக்குமவ் விடத்திற்
    சுட்டிக் கொண்டவ ரிவரெனப் பெயர்களைத் தொகுத்துத்
    தட்டிக் கொண்டுகை யேந்திநின் றிரந்தவன் றனைத்தான்
    றிட்டிக் கொண்டது போலிருந் தனசொலுந் திறனே.     3.20.127
    1134    உறுசி னத்துத் பத்துசை பத்துட னொலீது
    முறுகு வெஞ்சின வெகுளியிற் புருவங்கண் முரியத்
    தெறிக னற்பொறி தெறித்திமை விழிக்கடை தீயத்
    தறுகி லாதுமுன் னடத்தினர் துரகதத் தளத்தை.     3.20.128
    1135    தேன் றிகழ்ந்தபொற் புயவரைச் செழுந்திற லலியு
    மூன்ற தும்புவே லுபைதத்து மடையல ருடலங்
    கீன்ற வேல்ஹமு சாவும்வெம் படைகொடு கெழுமி
    மூன்று பேருமம் மூவர்க ளெதிரின்முன் னினரால்.     3.20.129
    1136    படர்தென் கீழ்த்திசை யிறையவன் சுடுகனற் படையும்
    வடவை யும்வெகுண் டெதிர்மலைந் தெனவளை கிரியும்
    புடவி யுள்விழக் கடல்சுவ றிடப்பணி புரள
    விடன றத்தனி தாக்கின வெதிரிரு படையும்.     3.20.130
    1137    முரசு துந்துமி திண்டிம முருடுமெல் லாரி
    பெரிய காகள நவுரிபூ ரிகைதவில் பேரி
    யிருவ கைப்படை யினுங்கிடந் தெழுந்தபே ரோதைக்
    குரவு நீர்ப்பெருங் கடலொலி காண்கிலா தொளித்த.     3.20.131
    1138    பரிக்கு ரத்தினு மாடவர் தாளினும் பரித்துத்
    துரக்குந் திண்வளை யுருளினும் பிறந்தவத் தூளி
    யெரிக்கும் வெங்கதிர் வெய்யவ னிடந்தெரி யாம
    னெருக்கி நின்றது திசையினும் விசும்பினு நிறைந்தே.     3.20.132
    1139    படல தூளிகண் மேகத்தி னிறைந்தபஃ றிசையு
    மிடிக ளொத்தவின் னாணொலி வீரர்க ளெதிர்ந்து
    தொடுகை வாளொலி மின்னெனப் பலதுடி துடிப்பக்
    கடிகொண் மாமழை சொரிந்தெனச் சொரிந்தன கணைகள்.     3.20.133
    1140    பரவை யொத்தன சேனையி னிரைநிரை படர்ந்த
    திரைக ளொத்தன வாவுமெம் பரித்திரைச் சுறவின்
    விரைவை யொத்தன வேந்தர்க டிரிந்தவை விரிநீ
    ரரவ மொத்தன நெருங்கிய படைதரு மரவம்.     3.20.134
    1141    மிதித்துஞ் சோடணி முகத்தினிற் றாக்கியும் விரவிற்
    குதித்த கொட்பியினும் வீதியிற் றிரிந்துங்கொன் னுனைவாள்
    பதித்த திண்கர வீரர்க ளுடலுயிர் பதைப்பச்
    சதித்துத் தாவின திரிந்தன சிலசில சடிலம்.     3.20.135
    1142    இடியி னொன்றொலி யெனவெழுந் தனுமனித் திமைப்பிற்
    படியின் மட்டிகி ரிகளெனக் கறங்கெனப் பலகா
    னெடுநி லஞ்சுழல் வளியென நினைந்ததிக் கனைத்துங்
    கொடிய வெம்படை யிடைதிரிந் தனசில குதிரை.     3.20.136
    1143    வெடித்து மண்டையின் மூளைகள் சொரியமெல் லிதழைக்
    கடித்த பற்பல வுதிர்தரக் கனல்விழி கலங்கப்
    பிடித்த கையொடும் வின்முறி தரக்குடர் பிதுங்க
    வடித்த பந்தெனத் திரிந்தன வாடலம் பரிமா.     3.20.137
    1144    வேலிற் றாக்கினர் வில்லினிற் றாக்கினர் விரிமுக்
    கோலிற் றாக்கினர் வாளினிற் றாக்கினர் குடங்கைத்
    தோலிற் றாக்கினர் சுரிகையிற் றாக்க்கினர் துரத்திக்
    காலிற் றாக்கினர் தாக்குறும் பேரமர்க் களத்தில்.     3.20.138
    1145    உரத்தி னுஞ்செழுந் தோள்வரை யிடத்தினு முயர்வேற்
    கரத்தி னுமலர் முகத்தினுங் கழுத்தினுங் கரிய
    சிரத்தி னுமிதழ் கறித்திடும் வாயினுஞ் சினமங்
    குரித்த கண்ணினு மொழுகின வருவியொத் துதிரம்.     3.20.139
    1146    கால சூறையி னொத்தெதிர்ந் தெழுகுர கதத்தின்
    மேல றுந்தன வளைமுக மறுந்தன மிதிகா
    னால றுந்தன காயத்திற் குருதியி னனைந்து
    வால சூரிய னெனநின்ற வீரர்கை வாளால்.     3.20.140
    1147    காந்து வெவ்வழ லெனப்படைக் கலன்களைக் கடிந்து
    போந்த மள்ளர்க ளாவியை விசும்பிடைப் போக்கிப்
    பாய்ந்த மாக்களி னுரங்களை யிருவகிர் படுத்தி
    வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர்கை வேல்கள்.     3.20.141
    1148    கேட கத்தையுந் தாங்கிய கரத்தையுங் கிடந்த
    சோடி ணைப்படு மிரும்பையு முரத்தையுந் துளைத்துள்
    ளூடு றப்புகுந் திருந்தவல் லுயிரையு முருவிச்
    சாடி யப்புறம் போயின வீரர்கைச் சரங்கள்.     3.20.142
    1149    கொடியொ டிந்தன விரிகுடை நுறுங்கின குணிலா
    லடிப டும்பறை பேரிகை யுடைந்தன வரசர்
    முடித கர்ந்தன சோடுக ளுதிர்ந்தன மூரித்
    தடமு றுங்கரத் தேந்திய வீரர்கைத் தடியின்     3.20.143
    1150    மூசி வண்டுடைத் தும்பையந் தொடையலை முடித்துத்
    தூசி நின்றவர்த் துணித்துவெங் கொடிப்படைத் துரத்தி
    வாசி யின்குழுக் குறைந்திடப் பிணக்குவை மலிய
    வீசி நின்றனர் சிலசில திறல்வய வீரர்.     3.20.144
    1151    வாடை கொண்டுறும் பரியொடும் வீரரை மாய்த்து
    நீடும் வேல்கெட விடுத்தவ ணிலத்திடைக் கிடந்த
    ஆடல் வெம்பரித் தாளெடுத் தொருகையி லாக்கிச்
    சாடு கின்றனன் வயவரை யதிலொரு தலைவன்.     3.20.145
    1152    வெற்றி வாட்கணை பொருதழிந் திடலும்வெஞ் சினத்தின்
    முற்றி நின்றனன் கண்டொரு திறலவன் முன்னி
    யிற்று வீழ்ந்திடத் தோளினை வாளினா லெறிந்தா
    னற்ற தோளெடுத் தவன்றனைச் சிதைத்தன னவனே.     3.20.146
    1153    அடுத்துப் பிற்புறத் தூணியிற் கிடந்தவம் பனைத்துந்
    தொடுத்து மள்ளரைத் துணித்தறத் தொடுசர மிலவான்
    மடுத்து மர்பகங் கிடந்தவம் பனைத்தையும் வாங்கி
    விடுத்து நின்றனன் சிலைகுழைந் திடவொரு வீரன்.     3.20.147
    1154    பம்பு மாக்கடற் றானைக ளிரிதரப் படுத்தி
    வெம்பு மாத்திர ளொன்றொடொன் றடித்தற வீழ்த்திக்
    கம்ப மூடெறிந் திருகவுண் மதசலங் கரைக்குந்
    தும்பி யில்லெனச் சலித்துநின் றனனொரு வீரன்.     3.20.148
    1155    கூரும் வெங்கணை யனைத்தையுந் தொலைத்துக்குற் றுடைவான்
    வாரி சச்செழுங் கரங்கொள வெகுண்டொரு வயவ
    னார மார்பினில் வேல்கொடு தாக்கின னவனை
    வீர வேலுற நடந்துகொன் றனனொரு வீரன்.     3.20.149
    1156    பாரின் வெங்களத் திடைவெறுங் கயனெனனப் பரியை
    யூரவிட் டடர்ந் தெதிர்த்தனை வெகுண்டுவண் டுறுக்கி
    மூரி வெம்பரி யுடனவன் வாயினு மூக்குஞ்
    சோரி கொட்டிடப் புடைத்தன னதிலொரு சூரன்.     3.20.150
    1157    அச்சு வத்தினும் வீரர்கள் புயத்தினு மழுந்தத்
    தச்ச வாளியும் வேலும்பைங் குருதிகள் சாய்ப்ப
    விச்சை யின்களத் திடனறத் திரிந்தவ ரெவரு
    மெச்சி லென்றுறை வாள்கழற் றிலனொரு வீரன்.     3.20.151
    1158    நீல மாமுகிற் றுணியெனுங் கேடக நிரையின்
    பால்பு குந்துட றலைகர மிருவகிர் படுத்திக்
    கோலி நின்றமன் னவன்றனை யெதிரினிற் குறுகி
    வேலி னாலெடுத் தேந்தின னொருவய வீரன்.     3.20.152
    1159    பெய்யும் வில்லிதென் மல்லின ரெவரெனப் பேசி
    யைய மற்றவன் றனையொரு வீரன்சென் றடுத்துச்
    செய்வ தீதென வீழ்த்திவன் சிரத்தினைச் திருகிக்
    கையி னேந்திநின் றாடின னெதிரமர்க் களத்தில்.     3.20.153
    1160    ஆவி யோசின மோபெரி தெனவறி கிலன்போர்த்
    தாவிப் போக்கினன் கரத்தொடு மிருதுணைத் தாளும்
    பூவின் மேற்கிடந் தார்ப்பொடும் வயவரைப் புகழ்ந்து
    கூவி யோய்ந்திலன் போர்வரு கெனவொரு குரிசில்.     3.20.154
    1161    முடக்கு வாற்பகு வாயரி யேறென முனியுஞ்
    சுடர்க்கண் வேங்கைக ளெனச்சில வீரர்க டுறுமிக்
    கடக்கும் வெற்றியி னினையன வமர்செயக் கடிதி
    னுடைக்கும் வெம்பரி வீரருக் காகவந் துற்றார்.     3.20.155
    1162    கால மாருதப் பரியினை விசையினிற் கடவி
    யால காலமொத் தரசரைப் பிணக்குவை யாக்கி
    மேலுந் தாக்கிவெம் பரியினந் தரையினில் வீழ்த்திக்
    கோல மார்கதிர் வாளினிற் கூறுசெய் தனரால்.     3.20.156
    1163    கருக்கொள் காரிடி யெனக்கரு தலர்கள்கட் டழிய
    முருக்கும் வேளையுக் காசகை யாயுத முறிந்து
    செருக்கொ டுந்திரிந் துலவிய பரியினைத் திருப்பி
    யருக்க னொத்தநம் முகம்மது நபியிடத் தானார்.     3.20.157
    1164    பால டுத்தவுக் காசசெம் மலர்முகம் பார்த்தோர்
    கோலெ டுத்துநந் நபியவர் கரத்தினிற் கொடுப்ப
    மால டுத்தகைக் கேந்திய வுடன்வடி வாளாய்ச்
    சூல டுத்தமை மின்னினுஞ் சுடரிலங் கியதே.     3.20.158
    1165    மன்னர் மன்னபி கொடுத்தகைக் கோலொரு வாளா
    யிந்தி லம்பெற விருந்ததைக் கரத்தினி லேந்திப்
    பொன்னி லங்கிய குசைப்பரி யொடும்படைப் புகுந்து
    முன்னர்த் தாக்கினு மும்மடங் கெனமுருக் கினரால்.     3.20.159
    1166    நீளும் வேலறுந் தனகதை யறுந்தன நிருபர்
    தோள றுந்தன சோடறுந் தனதுர கதத்தின்
    றாள றுந்தன கேடக மறுந்தன தவைர்
    வாள றுந்தன குடைகொடி யறுந்தன மாதோ.     3.20.160
    1167    மாறு பட்டவர் சிரத்தினு முரத்தினு மலிய
    வூறு பட்டன வுதிரங்க ளூற்றெடுத் தொழுகிச்
    சேறு பட்டன நெடுநில மணியொடு திறனும்
    வேறு பட்டன பட்டன காபிர்கள் வீரம்.     3.20.161
    1168    தலைகு விந்தன கரத்துணி குவிந்தன தரியார்
    சிலைகு விந்தன படைக்கலங் குவிந்தன திரளி
    னுலவு வெம்பரி யுடனடல் வேந்தர்க ளுடல
    மலைகு விந்தெனக் குவிந்தவுக் காசகை வாளால்.     3.20.162
    1169    உக்கி ரப்பரி நடவிவெள் ளுருமென வுரறிக்
    கைக்க டுத்தலை விதிர்த்துவெங் காபிர்கள் சூழ
    மிக்க சைபத்தென் றோதிய விறலரி வீரன்
    புக்கி னன்றிரு நபிதுணை யவர்பொரு மிடத்தில்.     3.20.163
    1170    அடர்ந்து சைபத்து வரவுகண் டடலரி ஹமுசாத்
    திடந்த ருங்கதிர் வாளினை நோக்கிக்கண் சிவந்து
    தொடர்ந்து சூறையிற் றிரித்துவெம் பரியினைத் துரத்தி
    யிடந்த ரும்பெருங் களத்திலங் கவன்முன மெதிர்ந்தார்.     3.20.164
    1171    மாறி லான்றிரு நபிக்குரைத் திடுங்கலி மாவை
    வேறு கொண்டனை புந்தியற் றனைமுனம் விதித்த
    வீறு நாளிவை யோவினை சூழ்ந்ததோ வெதிர்ந்தாய்
    கூறு கூறென நகைத்தவன் முனங்குறு கினரால்.     3.20.165
    1172    நீங்க ருங்கிளை யிழந்துமுன் னெறிநிலை தவறித்
    தீங்கி னுட்படும் பதகவென் றிருவிழி சிவப்ப
    வோங்கும் வாளெடுத் தசைத்திகழ் கறித்துவண் டுறுக்கிப்
    பாங்க ரிற்கரங் கெனத்திரித் தனன்வயப் பரியை.     3.20.166
    1173    வாவு லெம்பரி யிழிந்தெனை யொருதரம் வணங்கிச்
    சேவ கத்தினைத் தவிர்பிழை யலவெனிற் றீங்கி
    னேவல் கொண்டுனை விடுத்தபொய் முகம்மதி னிடத்திற்
    போவ தற்கிட மிலையிறந் தனைநொடிப் போதில்.     3.20.167
    1174    ஈது முத்திரை யறிகென சைபத்தென் பவனங்
    கோதி நின்றனன் கேட்டனல் வெகுளியிற் றுனைப்போல்
    வாது ரைப்பதின் றமரறி குவனென வகுத்துக்
    காதும் வாளையுந் தோளையு நோக்கிக்கண் சிவந்தார்.     3.20.168
    1175    கொதித்த கண்ணெரி தவழ்தரக் கொடுங்கதிர் வாளான்
    மதித்த மன்ஹமு சாதிரு மணிமுடி யிலக்கா
    யெதிர்த்துக் தாக்கினன் றாக்கலுங் கேடகத் தேந்தி
    யதிர்த்து வீசினர் வீசலுந் தாங்கின னவனே.     3.20.169
    1176    கையின் வேலெடுத் தெறிந்தனன் கதிர்முடி ஹமுசா
    மெய்யிற் சோட்டினிற் றாங்கின கடுப்பினில் வெகுண்டு
    செய்ய வெங்கதை யெடுத்தடித் தலும்படச் சிதறி
    யைய மற்றற நொறுங்கின கேடக மன்றே.     3.20.170
    1177    கட்டு வாம்பரி யினைப்பரி முகத்தொடுங் கடவி
    வெட்டு வாரெறி வார்மணி வேலினை வேலிற்
    றட்டு வார்புடைப் பார்திரி வார்தடக் கதையா
    லொட்டு வார்திறஞ் சாய்த்தில ரொருவருக் கொருவர்.     3.20.171
    1178    மடித்து வாயிதழ் கறித்துச்செம் மணிக்கதை யோங்கிப்
    புடைத்த னன்ஹமு சாதிருக் கொடிவிலாப் புறத்தி
    லிடிக்கு நேரெனு மடியினிற் சினந்துவா ளெறிந்தா
    ரடற்ப ரிக்குசை யொடுமவன் கரமறுந் தனவால்.     3.20.172
    1179    கரந்த றிந்திட வோங்கினன் மறுத்துமக் கதையு
    முரந்தி கழ்ந்தவன் சிரமும்பொற் சோடுட னுடலும்
    பரிந்த பக்கரைக் குதிரையு மிருபகுப் பாக்கி
    விரிந்த பாரிடத் தினிற்கிடத் தினரொரு வீச்சில்.     3.20.173
    1180    வீரன் சைபத்து மடிந்தன னெனும்வெகு ளியினாற்
    கோர மாமத கரடவெங் களிறெனக் கொதித்துக்
    காரின் மின்னெனு மயிலொடும் பரியினைக் கடவிச்
    சாரும் வெம்படை யதிர்தர வொலீதுவந் தனனால்.     3.20.174
    1181    பச்சி ரத்தச்செஞ் சேற்றழ றெழுநெடும் பாரின்
    வச்சி ராயுதங் கொடுவரு மொலீதுள மறுக
    வச்சு வத்தொடு முதன்முறைச் செருவிளை யாட்டுக்
    கிச்சை யின்படிக் கிடைத்ததென் றலியும்வந் தெதிர்ந்தார்.     3.20.175
    1182    கலின வாம்பரி வீரரி லெனதுகை யறிய
    வலிய வஞ்சக முகம்மதே யெதிர்வரல் வேண்டுஞ்
    சிலையுந் தண்டமுங் கட்கமுந் தரித்தொரு சிறுவ
    னலிவி லாதிவ னோவெதிர் பவனென நகைத்தான்.     3.20.176
    1183    படைக்க லத்தொடு முனையும்வெம் பரியையும் படியி
    னடித்து வீழ்த்துவ தரிதல வெதிர்ந்தனை யாயிற்
    பிடித்து நோக்குவ திலையுன துயிர்க்கொரு பிழையா
    யிடுக்க ணெய்துமுன் சார்பிடத் துறைகவென் றிசைத்தான்.     3.20.177
    1184    அறிவின் செய்வினை தவிர்வினை யறிகிலா தவரே
    சிறுவர் பூவினிற் சிறுவரா யிருந்துஞ்செவ் வியதீன்
    முறைமை நின்றுநல் வணக்கமு மொழுக்கமு முதிர்ந்தோர்
    மறனு மாண்மையும் பெரிதென அலிவகுத் துரைத்தார்.     3.20.178
    1185    தரும மென்றுரை வழங்கின னம்மொழி தனைநீ
    வரும மென்றுகொண் டிகழ்ந்தனை யுனைவரைந் திறுக்கி
    யெரிமு னாக்குவன் காண்டியொல் லையினென விசைத்தான்
    பொரியுஞ் செந்தழல் கெழுமிய குழியிடைப் புகுவான்.     3.20.179
    1186    நாய கன்றிருத் தூதெனு முகம்மது நபியைக்
    காயும் வஞ்சகக் கொடியனென் றுரைத்தகட் டுரைக்குந்
    தீயி னிற்புகுத் திடுவனென் றெனைச்செறுத் ததற்கும்
    வாயி னைக்கிழித் தெறிவன்கண் டறியென வகுத்தார்.     3.20.180
    1187    இசைத்த வாசகங் கேட்டலு மிருவிழி கனலக்
    கசைத்த லம்பொடி படப்பரி புடைத்திதழ் கடித்து
    விசைத்தி டக்கரக் கேடகங் குலுக்கிவெங் கதிர்வா
    ளசைத்தெ றிந்தன னாடல்வெம் பரிப்புலி யலியை.     3.20.181
    1188    எறிந்த வாளலி கதையினிற் றாக்கவெண் பகுப்பாய்
    முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல்கொடு முனிந்து
    பறிந்து போம்படி விடுத்தனன் பன்மணிக் கதிரி
    னிறைந்த கேடகத் தெற்றவு மிற்றதந் நெடுவேல்.     3.20.182
    1189    அயிலுங் கட்கமு மறுந்தன வெனமன மழுங்கி
    யெயிற துக்கிநாக் கடித்துநின் றவன்றனை யெதிர்ந்து
    பயிலும் வெம்படைக் கலனுள வெனிலினம் பாரென்
    றியற ருந்திரு மறைநபி மருகர்நின் றிசைத்தார்.     3.20.183
    1190    உற்ற வாசகங் கேட்டலும் வலியதண் டோ ங்கிச்
    சுற்றி விட்டெறிந் தனன்பிடித் திடக்கையாற் சுழற்றி
    மற்ற வன்புயத் தெறிந்தனர் வனைதுடர்ச் சோடு
    மற்றி றுந்தத் தண்டமு நுறுங்கிய தன்றே     3.20.184
    1191    பின்னு மோர்வடி வாளினைக் கரத்தினிற் பிடித்து
    மன்னு வாம்பரி யலியின்மே னீட்டினன் மறுத்துங்
    கொன்னு னைக்கதிர் வாளினிற் றாங்கினர் கொதித்துச்
    சின்ன பின்னங்கள் படுத்திடப் பரியினைத் திரித்தார்.     3.20.185
    1192    ஒலிதும் வெம்பரி துரத்திட வூழிவெங் காலு
    மலியும் வெவ்வழல் வடவையு மெதிர்ந்தன மலைந்து
    கலினெ னும்படைக் கலத்தொனி திசைதிசை கதுவப்
    புலனு றைந்தவ ரதிசயித் திடும்படிப் பொருதார்.     3.20.186
    1193    கன்றி லாமனத் திறத்தவ ரிடுபடைக் கலன்க
    ளொன்றொ டொன்றெறிந் தழற்பொறி தெறித்திட வொளிரும்
    வென்றி வாளலி செழுங்கர விசைதரும் விரைவிற்
    குன்று போல்விழுந் தவிந்தன னொலீ தெனுங் கொடியோன்.     3.20.187
    1194    கலின வாம்பரி மிசைகரக் கடுத்தலை யுடனு
    மொலிது வீழ்ந்தது கண்டுத்து பத்தெனு முரவோன்
    புலியெ னும்படி சினந்தெழுந் தடற்பரி புடிஅத்து
    வலிய வீரர்கள் பொருமமர்க் களத்திடை வந்தான்.     3.20.188
    1195    உதுபத் தென்னுமக் கொடியவ னடந்தவுக் கிரத்தி
    னெதிரெ ழுந்துபை தத்தெனும் புரவல ரேகிக்
    கதிர்கொள் வாள்கொடு தாக்கினர் கதையினிற் பிடித்து
    முதிரும் வெங்கதி ரயில்கொடு முனிந்துமோ தினனால்.     3.20.189
    1196    அள்ளி லைக்கதிர் வேலினை வாளினா லறுத்து
    வள்ள றாக்கலுந் தாக்கினன் செழுங்கதிர் வாளால்
    விள்ள ரும்படி யொருவருக் கொருவர்வாள் விதிர்ப்பக்
    கொள்ளி வட்டங்க ளெனத்திரிந் தனகுர கதங்கள்.     3.20.190
    1197    காற்றை யொத்தன விசையினிற் றாக்கினிற் கருவா
    னேற்றை யொத்தன வெகுளியி னெரியையொத் தனவாற்
    சீற்ற முட்கொடு மெழுந்தன பறந்தன தெரிந்து
    சாற்றும் பேரெவ ரிருவர்தங் குதிரையின் சாரி.     3.20.191
    1198    சக்க ரத்தினும் வேலினும் வாளினுந் தாக்கு
    முக்கி ரத்தினி லிருவர்மெய் யினுமொழு குதிரங்
    கக்கி நின்றன வூறுக ளிடனறக் கலிப்ப
    மிக்க வெஞ்சமர் விளைத்தன ரிருவரும் விரைவின்.     3.20.192
    1199    விரைவி னிற்பெரும் போரினை யிருவரும் விளைப்ப
    வரியெ னுந்திற லலியும்வெம் பரிஹமு சாவு
    மொருநொ டிக்குள்வந் தடுத்தன ருத்பத்தென் பவனை
    யிருநி லத்திடை வீழ்த்தின ருதிரங்க ளிழிய.     3.20.193
    1200    வேந்தர் மூவரு மிறந்திட வபூஜகில் வெகுண்டு
    காந்து வெங்கனல் விழியெரி தரக்கரம் பிசைந்து
    மாய்ந்தி டும்பெருங் களத்திடை தீனவர் மறுகப்
    பாய்ந்தி டும்புலிக் குழுவென நடத்தினன் படையை.     3.20.194
    1201    ஆட லம்பரி யொடுந்திறற் பரிசுகள்வந் தடர்த்த
    நீடும் வேலுடன் வேலவ ரடர்த்தனர் நெருங்கிச்
    சாடும் வாலுடன் வாளின ரடர்த்தனர் தாக்கிக்
    கோடும் வில்லுடன் வில்லின ரடர்த்தனர் குழுமி.     3.20.195
    1202    விடுகை யம்பினுங் கதையினு மழுவினும் விடமார்
    நெடிய வேலினுஞ் சக்கரத் தினுமுட னெரியப்
    படுக வண்கலி னெறியினு முரத்தினிற் பதியத்
    தொடுச ரத்தினும் விசும்பினை யிடனறத் தூர்த்தார்.     3.20.196
    1203    வன்பி றந்திடச் செலுந்திறத் தவர்செழு மார்பிற்
    பொன்பி றந்தபன் மணிசிறி திமைத்தன பொருபா
    ரின்பி றந்தசெந் தூளியி னிடைபல கோடி
    மின்பி றந்தெனப் பிறந்தன வாளொளி விளக்கம்.     3.20.197
    1204    பெருகும் பல்லியத் தொலிப்பினும் படைக்கலன் பிணங்கி
    மருவு மார்ப்பினும் வருஞ்சிலைக் கலிப்பினு மலிந்த
    புரவி யார்ப்பினும் வீரர்க ளார்ப்பினும் போரி
    னிருதி றத்துமன் னவர்களுந் தலைமயங் கினரால்.     3.20.198
    1205    முருகி ருந்தபைந் தொடையலுஞ் சருவந்த முடியுங்
    கருகும் வட்டவொண் பரிசையு மணிபல கலனும்
    விரித ருஞ்செழுந் துகிலுங்கஞ் சுகியும்வெம் பரியுங்
    குருதி நீரினி னனைந்துசெந் நிறத்தினைக் கொடுத்த.     3.20.199
    1206    வில்லின் வீழ்த்திட மாய்ந்தனர் சிலர்சிலர் வெகுண்டு
    மல்லின் மாய்ந்தனர் சிலர்சிலர் வேல்கொடு மார்பிற்
    கல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் வாக்கினிற் கலிமாச்
    சொல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் சோரிவெங் களத்தில்.     3.20.200
    1207    படர்ந்து கொன்றனர் சிலர்சில ரிழிந்துவெம் பரியை
    நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையுமற் றொழிந்து
    கடந்தி ருந்துகொன் றனர்சிலர் சிலர்மனங் கனன்று
    கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி.     3.20.201
    1208    அண்டனர் நாயகன் மறைநெறித் தீனிலை யவரு
    மிண்டு பேசிய அபூஜகல் காபிர்வெம் படையு
    மண்டு பேரமர் விளைத்திட முகம்மது நயினார்
    கண்டு வேகமற் றுண்டெனச் சிவந்தகட் கடைகள்.     3.20.202
    1208    
        வேறு
        சேவைசெய் தமரர் நிதமடி பரவுஞ்
        செவ்வியர் கருத்தினை யறிந்தின்
        றேவலுக் கியைவ னியானெனப் புடவி
        யிருவிசும் பிடத்தவர் கேட்பக்
        கூவிய துணர்ந்து மாமறை யளித்த
        கொற்றவன் றனைப்புகழ்ந் தேத்தித்
        தாவரு வேகந் தனைக்கடிந் துலவுந்
        தடப்பரி விடுத்திறங் கினரால்.     3.20.203
    1210    திருமொழிக் கியைவ னியானெனப் பணிந்து
        செப்பிய புடவிமண் ணதனி
        லொருபிடி கரத்தி னெடுத்தினி தேந்தி
        யுடையவன் றிருமறை யுரைத்துப்
        பொருமமர்க் களத்திற் காபிரை நோக்கி
        புழுங்கிய சினத்தொடு மெறிந்து
        குரகதத் தேறி வேல்வலந் தாங்கிக்
        குரைகடற் படைநடத் தினரால்.     3.20.204
    1211    எறிந்தமண் டாவித் திசைதிசை செருகி
        யிருவிசும் பிடனறப் பரந்து
        செறிந்தவெங் களத்திற் காபிர்கள் முகத்துஞ்
        செவந்தகண் களினும்வா யினும்போய்
        மறைந்தன விழுந்து வலிகளுங் கெடுத்து
        மண்டின வதிற்றலை மயங்கி
        யறைந்தபே ரொலியுஞ் செவிகளிற் றோன்றா
        தறப்பயந் தறிவழிந் தனரால்.     3.20.205
    1212    பொருப்பிடை கிடந்த வரிப்புலிக் குழுவும்
        பொருவரா மடங்கலேற் றினமு
        மொருப்படத் திரண்டு நடந்தெனத் தீனோ
        ரியாவருங் மொருமுக மீண்டத்
        தெரிப்பருந் தொகுதித் தலைவரும் பரியுந்
        திரளுறுஞ் சேனையு மிடைந்து
        மருப்புடைக் கரட மதகரி யனைய
        மன்னர்கண் முறிந்தனர் மயங்கி.     3.20.206
    1213    நிரைநிரைப் பரியின் பிணக்குவை மலிந்த
        நிருபர்க ளுடற்குறை மலிந்த
        விரிகதிர்ப் பூணு மாரமு மலிந்த
        வெற்றிவெம் படைக்கலன் மலிந்த
        குருதியு மலிந்த குடர்த்துடர் மலிந்த
        கொற்றவர் மணிமுடி மலிந்த
        முரிதருஞ் சிரசின் மூளைகண் மலிந்த
        மொய்த்தவெண் ணிணங்களு மலிந்த.     3.20.207
    1214    முரசமு மவிந்த காகள மவிந்த
        மூரிவெம் பேரியு மவிந்த
        பரிகளு மவிந்த வாவணத் தொகுதிப்
        பாசறை முழக்கமு மவிந்த
        திரைகட லெனும்பே ரோதையு மவிந்த
        வீரர்கள் சேவக மவிந்த
        அரசரு மவிந்த வாகையுந் திறனு
        மாண்மையு மவிந்தன வன்றே.     3.20.208
    1215    சம்பினம் பரந்த வோரியும் பரந்த
        தசையினுக் கொன்றொ டொன்றடர்ந்து
        வெம்பிய ஞமலிக் குலங்களும் பரந்த
        விசும்பிடத் திடனற நெருங்கிச்
        செம்பருந் தினமுஞ் சகுந்தமும் பரந்த
        திரள்கருங் கொடிபல பரந்த
        பம்புவா ருதியி னலகைகள் பரந்த
        பாசறைப் பெரும்பறந் தலையின்.     3.20.209
    1216    வரைகளி னேறிப் பொதும்பரிற் புகுந்து
        மறைந்தனர் சிலரயிலெ றிந்து
        புரவிவிட் டிறங்கி முள்ளுடை நெடுங்கான்
        புகுந்தனர் சிலர்பிணக் குவையி
        னிரைகளிற் பதுங்கிக் கிடந்தனர் சிலர்தந்
        நினைவழிந் துழன்றவர் சிலரா
        லெரியழற் பாலை யிடந்தொறு மோடி
        யிளைப்பினி லிறந்தவர் சிலரால்.     3.20.210
    1217    தெறுகளத் துயிரை முதலிடு பருவந்
        திசைதிசை சிலவழிந் தவரு
        முறுகொலைக் களநின் றூர்புகுந் தவரு
        மன்றியொண் சிலையயில் கதிர்வா
        ளெறிதர வெதிர்ந்த தலைமைமன் னவரி
        னெழுபது பெயரினைச் சினந்து
        மறுவறு மறைநந் நபிதமக் குரிய
        மன்னவர் பிடித்தனர் மாதோ.     3.20.211
    1218    அடிநிலந் தெரியா முகம்மதின் பிதாபின்
        னானஅப் பாசையு நிகரா
        வடிவுறு மபித்தா லிபுதரு மலிமுன்
        வந்தவுக் கயிலையுங் கதியி
        னடவுவாம் பரியா ரிதுதரு திருச்சேய்
        நெளபலென் பவனையு முன்னர்
        பிடிபடும் பெயரி னிவரையு நபிமுன்
        பிடித்துவந் தனர்வய வேந்தர்.     3.20.212
    1219    பிடித்தமன் னவரை முன்னுற நடத்திப்
        பெரும்படை யனைத்தையுந் திரட்டி
        முடித்தவெம் போரிற் காகள முழக்கி
        யுறைந்திடும் பாசறை முன்னி
        யடித்துடைத் திறந்த தீனவர் பதினான்
        கமருறுந் தலைவர்க டமையு
        மெடுத்தினி தடக்கித் தொழுதிருந் தனர்மே
        லிரவியு மறைந்தன னன்றே.     3.20.213
    1220    விடிந்தபின் காலைக் கடன்கழித் திறசூல்
        விரைவினி லிபுனு மஸ்வூதைத்
        திடந்தரு மொழியா லழைத்தரு கிருத்தித்
        தீயவன பூஜகு லென்போ
        னுடைந்தொழு கினனோ வலதிறந் தனனோ
        வூறுபட்டி டைந்தன னோவென்
        றிடந்தரும் பெரும்பா சறையினுங் களத்துந்
        தெரிந்திவண் வருகவென் றிசைத்தார்.     3.20.214
    1221    தூயவ னிறசூல் நபியினி துரைத்த
        சொல்லினைச் சிரசின் மேலேற்றிச்
        சீயமொத் தெழுந்து வரிப்புலி யனைய
        தீனவர் நால்வர்க ளுடனு
        மாயிரு விசும்பும் புவனமும் புகழார்
        மன்னவ ரிபுனு மஸ்வூது
        போயினர் பறவைப் பந்தரிற் கிடந்த
        பொங்குசெங் குருதிவெங் களத்தில்.     3.20.215
    1222    மெய்யுழன் றிறந்து கிடந்தவ ரொருபால்
        விலாப்புடை திறந்தவ ரொருபாற்
        கையிழந் தரிதிற் கிடந்தவ ரொருபாற்
        காற்றுணை யிழந்தவ ரொருபான்
        மையுறுஞ் சிரசற் றுறைந்தவ ரொருபான்
        மணிக்குடர் சரிந்தவ ரொருபா
        லெய்யும்வன் சரங்க டுளைத்திடக் குருதி
        யிழிந்திருந் திறந்தவ ரொருபால்.     3.20.216
    1223    காலினை மடக்கி வாயித ழதுக்கிக்
        கவ்விவெள் ளெயிறுகளி லங்கப்
        பாலுறும் பரியின் குலம்பல வீழ்த்திப்
        படருயிர் விசும்பினிற் படுத்தி
        மாலுறுங் கரட மதமலை துளைக்கும்
        வயிரவொள் வேலினை யூன்றி
        மேலுறு மமருங் கொல்வனென் பவன்போ
        லிருந்தபல் வீரருங் கண்டார்.     3.20.217
    1224    குற்றுடைக் கதிர்வாள் குரகத வயிற்றிற்
        குளித்திடச் சாய்ந்தவண் கிடந்த
        முற்றிய முனையின் றிறத்தவ னலகைக்
        குலத்தொடு மருந்திட முரணிப்
        பற்றிவெங் கரத்தா னிணக்குடர் பிடுங்கும்
        பான்மையொத் தனன்பல நோக்கி
        வெற்றிவெண் மலர்த்தார்ப் புயத்தவர் மகிழ்ந்து
        திரிந்தனர் வீரவெங் களத்தில்.     3.20.218
    1225    கந்துகக் கழுத்தை முரிதர நெருக்கி
        யெறிந்தவன் களனறக் கவப்பட்
        டிந்தெனு முகம்வா ளிலங்கிட வவண்சாய்ந்
        திருந்திறந் தவன்றனை நோக்கி
        நந்தின னலனென் றிகலனுஞ் சுணங்கு
        நடந்தருந் திடக்கடி தொதுங்கிச்
        சிந்தையின் வெருவுற் றடிக்கடி நோக்கித்
        திரிவன பலவுங்கண் டனரால்.     3.20.219
    1226    எள்ளிட விடமற் றளந்தறி யெண்சா
        ணுடம்பினு மிடனற நெருங்கி
        யள்ளிலை நெடுவா ளிகளுறைந் திருந்த
        ஆடவர் தோற்றமங் கடைந்த
        வள்ளுகிர் சுணங்கு மிகலுனுந் திரிந்த
        விடத்தின்முண் மாவும்வந் திணங்கி
        யுள்ளுறுங் களத்திற் கிடப்பன போன்றுங்
        கண்டனர் பலபல வொருங்கே.     3.20.220
    1227    பறவைகள் குலவுஞ் சிறைநிழற் பந்தர்ப்
        பக்கரைப் பரியணை சாய்ந்து
        மறமுதிர் சினக்க ணிமைப்பில விழித்து
        மணிவிரன் மீசையிற் சேர்த்திக்
        குறைவற வலகை நடம்பல பயிலக்
        கொடுங்களக் குருதிநன் னிலத்தி
        னிறையுயிர் போக்கி யரசுவீற் றிருந்த
        விடங்களு நிறைந்தன கண்டார்.     3.20.221
    1228    இடருறு மிகல னொன்றொடொன் றிகலி
        யிரைத்தெழுங் குரைப்பினுக் கஞ்சித்
        துடர்படுங் குடர்வாய்க் கவ்விவிண் ணிடையிற்
        சுழன்றெழும் பறவையின் றோற்ற
        மடிபடுங் கொடிய மாருத விசையி
        னாயிடைப் புரிமுறுக் கறுந்து
        விடுநெடுங் கயறும் படமுமொத் தெழுந்து
        விளங்குதல் பலவுங்கண் டனரால்.     3.20.222
    1229    மல்லுயர் திணிதோள் விடலைக டாங்கும்
        வட்டவொண் கரியகே டகங்க
        ளெல்லையி னிழிந்த குருதியிற் கிடந்தங்
        கிலங்குவ தெழிறரச் சிவந்த
        வல்லிசே தாம்பற் றடத்திடை மிதந்த
        வாமையின் புறமென வொளிர
        வில்லணி தடக்கை மறத்தில்தீன் விளைத்த
        வெற்றிமன் னவர்கள்கண் டனரால்.     3.20.223
    1230    அலர்நகை முகங்க ளெண்ணில பரந்து
        கிடந்திடுங் குருதியஞ் சேற்றி
        னிலவுவெண் கவிகை யிடையிடை பதிந்து
        நிறைந்திலங் குவனபைந் தடத்துட்
        பலவிதழ் விரித்துச் செந்நறாத் துளித்த
        பதுமமென் காட்டிடை புகுந்து
        குலவிய வனத்தின் குலங்கள் வீற்றிருந்த
        கோலமொத் தனவுங்கண் டனரால்.     3.20.224
    1231    அரசர்க ளணிந்த முத்தவெண் மணிக
        ளுதிர்ந்துபைங் குருதியஞ் சேற்றில்
        விரிகதி ருமிழ்ந்து கிடப்பன வென்றூழ்
        விழுங்கிய செக்கர்வா னிடத்தினிற்
        பெருகிய தாரா கணம்பல கோடி
        பிறந்தொளி விரிப்பன போலுந்
        தெரிதர நோக்கி யடிக்கடி மகிழ்ந்து
        திரிந்தனர் சிலவய வீரர்.     3.20.225
    1232    கங்கமுங் கொடியுஞ் சகுந்தமு மோரிக்
        கணங்களு மிகலனுஞ் சுணங்குஞ்
        செங்களத் திடைக்குற் றுயிருட லருந்தத்
        தெறித்திடுங் குருதியிற் றிரிவ
        வெங்கதிர் நெடுவே லூறுகள் படமெய்
        வருந்திடா வீரரைப் போன்று
        மெங்கணும் பலகண் டடுபடைக் கலன்க
        ளிடுநெடும் புலத்திடைத் திரிந்தார்.     3.20.226
    1233    ஏற்றிய சிலைக்கை தறித்திடப் பறிபட்
        டெழுந்தவம் பூறுபட்டி டைந்து
        சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கித்
        திகைப்பன வோரிகள் பலவு
        மாற்றரும் வீரர் கதைபடத் தெறித்த
        மண்டைகண் மூளையின் வழுக்கிக்
        காற்றுணை முடிர்ந்து பயப்பயத் திரியு
        நரிக்குலம் பலவுங்கண் டனரால்.     3.20.227
    1233    ஒலிதெனும் வேந்த னிறந்தபே ரிடமு
        முக்குபா வீந்தவெங் களமும்
        பலியென வுத்பத் திறந்திடு மிடமும்
        சைபத்து படும்பறந் தலையும்
        நலிதலில் வீரச் செருக்கினி லுமையா
        நடந்தெதிர்ந் திறந்திடு மிடமும்
        வலிதரு முமாறா விறந்தசெங் களமும்
        வகுப்புற வினிதுகண் டனரால்.     3.20.228
    1235    மறமுதிர் வீரர் தாண்மடித் தெதிர்ந்து
        மண்டமர் கடந்துசூழ்ந் திறந்து
        புறமிடங் குவிய வுறவின ரெவரும்
        போர்க்கடன் கழித்தவண் கிடப்பக்
        குறையுயி ருடலங் குருதிகொப் பிளிப்பக்
        கொடுஞ்சமர் பலவிளை யாடித்
        தெறுகள நாப்ப ணபூஜகல் கிடப்பத்
        தீனவ ரினிதுகண் டனரால்.     3.20.229
    1236    கண்களிற் சேப்பு நுதலினில் வியர்ப்புங்
        கரியமை மீசையின் முறுக்கும்
        புண்பட விதழிற் பற்பல்காற் சினந்து
        பூட்டிய கொடியவெள் ளெயிறு
        மண்பட வொழுகுங் குருதியி னனைவும்
        வடுப்படு முடலமு முயிர்ப்பும்
        பண்பொடுந் தெரியக் களத்திடை கிடந்த
        பாதக னிடத்தினுற் றனரால்.     3.20.230
    1237    செல்வமுந் திறனும் புறத்தளித் தனையே
        தீவினைப் பயிர்விளைத் தனையே
        நல்வர மனைத்தும் பாழ்படுத் தினையே
        நடுநிலை தனைத்தவ றினையே
        பல்பொருட் சுவனப் பதியிழந் தனையே
        பாழ்ங்குழிக் குடல்வளர்த் தனையே
        சொல்விதம் விடுத்துப் பவமெடுத் தனையே
        சூழ்வினை தனையறிந் திலையே.     3.20.231
    1238    வீர்வெங் களிறே யடலரி யேறே
        விறற்பெருஞ் சமர்க்குறும் புலியே
        பாரினிற் சிறந்த மக்கமா நகரிற்
        பரிவுறும் வீரருக் கரசே
        காரணக் குரிசின் முகம்மது நபிதங்
        கட்டுரை மறைக்கலி மாவை
        யீரமுற் றிசைந்து மனத்தினி லிருத்தா
        திடும்பெனு மிடர்விளைத் தனையே.     3.20.232
    1239    மேலுமின் கலிமா வுரைத்துறுந் தீனை
        விரும்புவை யெனின்முகம் மதுதம்
        பாலினிற் கொடுபோய்ப் பருவர றவிர்த்துப்
        பரிவுறுந் தலைமைசெய் குவநீ
        கோலிய பகையை விடுத்துநன் குரையைக்
        கூறெனக் கூறலுங் கொதித்து
        வாலெயி றிலங்க நகைத்தட லிபுனு
        மஸ்வூதளம் வெகுண்டிட மவுல்வான்.     3.20.233
    1240    இறுதியிற் கலிமா வுரையென வெதிரி
        னுரைத்தனை யிழிந்தசா திகளிற்
        றொருவரின் குலத்துக் குறுமதி யெடுத்துச்
        சொல்லினை யுனைவிசும் பேற்றப்
        பெறுமவ ரிலையென் னிடத்தினி லென்றா
        லியாவர்தா னென்னினிப் பேசார்
        தெறுகொலை விளைத்தி யெனவிழி சிவந்து
        செவிக்கொளா வசையொடு முரைத்தான்.     3.20.234
    1241    வசைமொழி யுரைப்பக் கடிதினில் வெகுண்டு
        மருங்குடை வாளினை வாங்கி
        விசையுடன் றாடி தனைப்பிடித் தீழ்த்து
        விறற்கொழுங் கரத்தினிற் சுற்றி
        யசையுறுஞ் சிரசை யறுத்துவே றாக்கி
        யவனுடனெ ழுவர்க டமையும்
        பசையறும் பாழ்ங்கூ வலினிடைப் படுத்தி
        விட்டனர் பலன்படை யாமல்.     3.20.235
    1242    அபுஜகல் சிரத்தைக் கரத்தினிற் றூக்கி
        யள்ளலங் குருதியிற் றிரிந்த
        கவிசிறைப் பறவைக் குலங்களு மிரியக்
        கணத்தொடு நரிக்குல மொதுங்கச்
        சவிதருங் கொடியுங் கவரியுங் குடையுந்
        தாளிணை யிடறிட நடந்து
        புவியிடைப் பரந்த பறந்தலை கடந்து
        போயின ரிறங்குபா சறையின்     3.20.236
    1243    மறத்தினைத் தொடுத்துத் தீவினை விளைத்து
        வஞ்சகம் பலபல வியற்றி
        யறத்தினை வெறுத்த கொடும்பெரும் பதக
        னபூஜக றலையிஃ தென்ன
        நிறுத்திய தீனி லுலகெல்லாம் புரந்த
        நீணபி முகம்மது வென்னுந்
        திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர்வே
        லேந்திய செழுங்கர தலத்தார்.     3.20.237
    1244    ஆதியைப் புகழ்ந்து காபிர்தம் வலியு
        மற்றது தீனெனும் பயிரின்
        கோதறுங் கொழுந்துங் குவலயம் படர்ந்த
        தின்றென யாவர்க்குங் கூறித்
        தீதுறுங் கொடிய பாதகன் சிரசை
        யகற்றுமி னெனச்செழு மறையின்
        மூதுரை தெரிந்த புரவல ருடனு
        மிருந்தனர் மூன்றுநா ளவணின்.     3.20.238
    1245    வற்றுறா வளமை மக்கமா நகரார்
        வந்தது மெதிர்மலைந் தவணி
        லுற்றது மெழுவ ருடனபூ ஜகல்த
        னுயிரிழந் ததுவும்வெண் சமரில்
        வெற்றியு மியாவும் வரிப்பட வெழுதி
        விரைவினின் மாருத மியையா
        வொற்றர்கைக் கொடுத்து மதீனமா நகருக்
        கனுப்பின ரெவரினு முயர்ந்தோர்.     3.20.239
    1246    வடிவுறுஞ் சாயை வெளியுறா நபிதம்
        மக்களில் றுக்கையா வென்னுங்
        கொடியிடை யுதுமான் மனைவிய ரென்னுங்
        குயின்மொழித் திருமயி லிறந்து
        படியினி லடக்கி யாவருந் திரண்டு
        பள்ளி யினிருக்கு மப்போதி
        லுடைபட பதுறிற் பொருதுவென் றெழுது
        மோலையைக் கொடுத்தன ரோட்டர்.     3.20.240
    1247    புவியினிற் புதுமைக் காரண மதீனா
        புரத்தினி லுறைந்தவ ரெவரு
        மபுஜகல் படைகொண் டெதிர்ந்திறந் தனனென்
        றழகுறு வாசகம றிந்து
        நபிதிரு மகளா ரடைந்தன ரெனுமந்
        நடுக்கமுங் கலக்கமு மகற்றிக்
        கவலுதற் கரிய வாநந்தப் பெருக்கின்
        களிக்கடல் குளித்துமூழ் கினரால்.     3.20.241
    1248    பதுறெனும் புடவி வரையடி விடுத்தம்
        மாற்றல ரிடத்தினிற் பறித்த
        கதிர்கொளுந் துல்புக் காறெனும் வாளைக்
        கரதலத் தெழிறர வேந்திக்
        கொதிநுனை வடிவேன் மன்னவர் சூழக்
        குதிரையின் றொகுதிக ளீண்ட
        வதிர்முர சமும்பே ரிகைகளு மார்ப்ப
        வகுமது நபியெழுந் தனரால்.     3.20.242
    1249    தானைக ளீண்டக் கொடித்திரண் மலிய
        வருநபி தமைமுக நோக்கிக்
        கானகம் விடுத்தோர் காவதத் திடத்திற்
        கடற்கரைப் புறத்த பாசுபியா
        னூனுடல் வதைத்து மாநிதி யனைத்து
        மொல்லையிற் கொள்வமென் றினிதின்
        தீனவ ரொருவ ருரைத்தனர் கேட்டுச்
        சிந்தையிற் பொருந்தின ரன்றே.     3.20.243
    1250    எழுந்திவண் வருமு னிரண்டிலொன் றுங்கைக்
        கிறைவசப் படுத்தின னெனுஞ்சொன்
        மொழிந்தினி ரவையே முடிந்தன வினிமேன்
        மூளும்வெஞ் சினத்தினை முற்றி
        யழுந்திடப் பொருத லறிவல வெனஅப்
        பாசெனுந் தந்தையர் மொழியச்
        செழுந்திற னபியு மிஃதுநன் றென்ன
        நிதியின்மேற் சேறலை விடுத்தார்.     3.20.244
    1251    நுதிகொளுங் கதிர்வேற் காபிரை பதுறி
        லடர்ந்தமுந் நூற்றுடன் பதினான்
        கிதமுறுந் தலைவர்க் கும்பர்மா ராய
        முண்டென வியல்பொடு முரைத்துக்
        கதிகொளும் பரியுந் தானையு நெருங்கக்
        கானகம் பலபல கடந்து
        சதுமறை முழக்க மார்த்தெழ மலீக்கு
        சபுறாவாந் தலத்தில்வந் திறுத்தார்.     3.20.245
    1252    குறைந்திட ரொடுங்கிப் போயின மருவார்
        பாசறைக் கொள்ளையின் றொகையு
        மிறந்திடு மெழுப தருந்திறல் வேந்த
        ரிடுகலன் களும்படைக் கலனுஞ்
        சிறந்தவெம் பரியும் ஸகுபிக ளெவர்க்குந்
        தெரிதரப் பகுந்தெடுத் தளித்தார்
        புறந்தரு களத்தின் முத்திரை படைத்துப்
        புகழ்பெறு முகம்மது நபியே.     3.20.246
    1253    அறபினின் மலீக்குச் சபுறாவாந் தலம்விட்
        டறப்பெரும் படைபுறஞ் சூழ
        இறௌகா வெனுமத் தலத்தினில் வரும்போழ்
        தியல்பெறு மதீனமன் னவரும்
        புறநக ரவருந் திரண்டெதிர் பணிந்து
        பொங்கிய முழக்கொடுஞ் சூழ
        நறவுகொப் பிளிக்குந் துடவைசூழ் நகரி
        னண்ணினர் முகம்மது நபியே.     3.20.247
    1254    மறையவர் வாக்கின் பயித்தொலி முழங்க
        வானவ ரினிதுவாழ்த் தெடுப்பக்
        கறைகொளுங் கதிர்வேற் காளையர் சூழக்
        கவிகையுங் கவரியு மலிய
        முறைமுறை பேரி தவில்பறை திடிமன்
        முருடுசச் சரிமுர சதிர
        விறையவ னருளால் வெற்றிகொண் டிறசூ
        லிலங்கிய நகரின்வந் தனரால்.     3.20.248
    1255    மடலவிழ் வனச வாவிசூழ் மதினா
        வந்தபின் மற்றைநாள் பதுறிற்
        பிடிபடு மவரைக் கொணர்கெனக் கூறப்
        பெருஞ்சிறை சாலையி னண்ணிக்
        கடிதினி லெழுப தரசர்க டமையுங்
        கையினிற் றளையொடுங் கொடுவந்
        தடல்பெருங் குரிசின் முகம்மது நபிமுன்
        விடுத்தன ரணிவய வீரர்.     3.20.249
    1256    ஆரிது புதல்வ னலுறையும் பதக
        னுக்குபத் தென்பவன் றனையு
        மூரினிற் புறத்திற் பாதையி னாப்பண்
        டலைகளைந் திடுகவென் றுரைப்ப
        வீரர்கள் வெகுண்டு பிடித்தகைக் கயிற்றின்
        விரைவொடு நடத்தியவ் வுழையிற்
        சோரிநீ ரொழுக விருவர்க டலையுந்
        துணித்தருங் கழுவினிட் டனரால்.     3.20.250
    1257    நற்றவ முடைய முகம்மதின் கலிமா
        நாவினி லியற்றிடா தெதிர்ந்த
        பற்றல ருழையி னிருவர்க டமையும்
        பாழ்ங்குழி யிடைப்படர் படுத்தி
        மற்றவ ரறுபத் தெண்மர்க டமையு
        மாசில் அஸ்காபிக ளென்னுங்
        கொற்றவ ரெவருங் களித்தினி துவப்பக்
        கொடுத்தனர் பகுந்துபங் கியற்றி     3.20.251
    1258    உறுதலை விலைநா லாயிரந் திருக
        மொவ்வொரு வருக்கினி தளித்து
        மறுவற மீண்டு மக்கமா நகரார்
        போயினர் மன்னரப் பாசு
        மறிவுறு மபித்தா லிபுமகன் றனக்கு
        மாரிது மகனவு பலுக்கு
        முறைமையின் றமக்குந் தலைவிலை யாக
        மீண்டனர் முதுபொரு ளளித்தே.     3.20.252
    1259    அண்ணலங் களிற்றை முகம்மதை வளர்த்த
        வடலபுத் தாலிபு திருச்சேய்
        வண்ணவொண் புயனுக் கயிலையுஞ் சிறந்த
        ஆரிது மகனவு பலையு
        நண்ணிய புகழ்சேர் மக்க மாநருக்
        கனுப்பிநந் நெறியி னப்பாசு
        முண்ணிறை கலிமா வோதியீ மான்கொண்
        டுவந்தினி துறைந்தன ரன்றே.     3.20.253
    1260    தருவுரை பகர வெதிருரை பகர்ந்த
        தருநபி சிறியதந் தையரு
        மருவுநன் மலரு மெனவரு புறுக்கான்
        மார்க்கநன் னெறிமுறை பயின்று
        செருவடன் மலியன் ஸாரிக டமக்குஞ்
        செவ்விய முகாஜி ரீன்களுக்கு
        மருமருந் தனைய வுயிரெனப் பொருந்தி
        யன்புட னினிதிருந் தனரால்.     3.20.254
    1261    வரத்தினிற் சிறந்த ககுபத்துல் லாவி
        னாபுசம் சத்தினீர் வழங்குந்
        துரத்தி னுக்குரிய ராதலாற் பிரியாத்
        தொன்முறை வருதலா னபிக்கும்
        புரத்தினுற் ரவர்க்குந் தனித்தனி யுரைத்துப்
        புதியவன் றனைப்புகழ்ந் தேத்திக்
        கரத்தடக் களிறப் பாசெனு முரவோர்
        கடிகொடம் பதியிடை புக்கார்.     3.20.255
    1262    முதலவன் விதித்த விறமலா னோன்பு
        முடிவினி லியாவரு மறிய
        அதிசயம் பிறப்பப் பித்துறாப் பறுலென்
        றாய்த்தும் நபிக்கிறங் கியதான்
        மதிவல ரெவரு மவ்வழி முடித்து
        மகிழ்ந்தனர் தீனெனும் பயிரும்
        பதிவுபெற் றிருந்து தழைத்தன செல்வம்
        படர்ந்தினி தோங்கின வன்றே.     3.20.256

    பதுறுப் படலம் முற்றிற்று.

    ஆகப் படலம் 20க்குத் திருவிருத்தம் ---- 1262

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.21 சவீக்குப் படலம் (1263-1319)
    1263    ஆரண முறையின் தீனெறி பெருக்கி
        யகுமதுற் றுறையுமந் நாளிற்
        காருறை பொழில்சூழ் மதீனமா நகரிற்
        சூதரிற் கயினுக்கா கென்னும்
        வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து
        வேற்றொரு தலத்திடைப் புக்கிப்
        பாரினில் தீனுக் கிடர்நடத் தினர்க
        ளெனுமொழி பகர்தரக் கேட்டார்.     3.21.1
    1264    நாயகர் செவியிற் புகுதலுந் தலைமை
        நண்பருங் கடுவிசைப் பரியுஞ்
        சாயகக் சிலைக்கை வீரருஞ் சூழத்
        தடக்கதிர் வேலெடுத் தேந்திப்
        போய வருறைந்த பதியினை வளைந்து
        புரிசைக டுகளெழப் படுத்தி
        மாயவன் காபி ரெவர்களு நடுங்க
        மண்கொளா விடுக்கண்செய் தனரால்.     3.21.2
    1265    பொருளெனப் படுத லியாவையுங் கவர்ந்து
        புறம்படர்க் கயினுக்கா கென்னும்
        விரிபெருங் கூட்டத் தவரினை யுபைசேய்
        விறல்பெறு மப்துல்லா விடத்திற்
        பரிவுறச் சாட்டிக் கொடுத்து விட்டதற்பின்
        பண்புறு மதீனமா நகரின்
        மருமல ரணிந்த தீனவர் சூழ
        வந்தனர் முகம்மது நபியே.     3.21.3
    1266    கோதுறுங் கயினுக் காகெனு மவர்கள்
        கூட்டத்தின் காரண மாகக்
        காதிய நசுறா னிகளெஹூ திகளாங்
        காபிர்க ளுடன்படக் கலப்ப
        வோதிய மறையி னுண்மையென் றுரைக்கு
        முறவுகள் வேண்டலி ரென்ன
        வாதித னாயத் திறங்கின நபியு
        மன்புட னினிதுவந் தனரால்.     3.21.4
    1267    
        வேறு
        வலிகொடு காபிரை பதுறின் மாய்த்துநன்
        னிலைகெடுங் கயினுக்கா கவரை நீத்திடர்
        நலிவற முகம்மதாண் டிருக்கு நாளினிற்
        பொலிவுறச் சிலமொழி புகலு வாமரோ.     3.21.5
    1268    ஷாமினிற் புக்கிமா நிதியந் தன்னொடு
    மாமதிண் மக்கமா புரத்தின் வைகிய
    சூமன பாசுபி யான்வன் சொல்லினாற்
    றாமவொண் புயத்தவர்க் கெடுத்துச் சாற்றுவான்.     3.21.6
    1269    பொன்னுநன் மணியுமொத் திலங்கும் பொற்பினாற்
    கன்னியர் காமுறுங் காளை வீரர்க
    ளென்னுயி ரனையரிப் புரத்துக் காதியா
    மன்னவர் பதுறினின் மடிந்திட் டாரரோ.     3.21.7
    1270    பொழிதருஞ் செழுமுகிற் பொருப்பின் சார்பினிற்
    கழுதுக ணடம்பல காண வீணினில்
    வழுவுறு மொருவனுக் காக மன்னவ
    ரெழுவரும் படையுட னிறத்தல் வேண்டுமோ?     3.21.8
    1271    வயமுறு முதவியி னிறந்த மன்னரோ
    டியல்புற வுயிரினை யீந்தி டாதொளித்
    தயல்புகுந் தனனென வணுகி லாவவப்
    பயனுற வுலகமும் பழிக்கு மேகொலாம்.     3.21.9
    1272    துனிதவிர்த் துதவிசெய் தவர்க டுஞ்சயா
    னனிபல பொருளுட னகர நண்ணிமென்
    பனிமலர்ப் பஞ்சணை படுத்து நாடொறு
    மினியன வுண்டியுண் டிருத்தல் நன்றரோ ?     3.21.10
    1273    வீணினி லவருயி ரிறத்தன் மேயினன்
    பூணரும் பழியெனும் பொறையுந் தாங்கின
    னாணினை வீழ்த்தின னகைக்கு மாயின
    னாணினில் வலியனென் றறைய வேண்டுமோ ?     3.21.11
    1274    உதவிசெய் பவர்க்குயி ருதவி செய்குதல்
    விதியுயி ருதவியின் வீழ்த்தி நின்றவர்க்
    கிதமுறப் பழிகொளா திருத்த லும்பரின்
    பதவியு மிலையிவண் பலனு மில்லையால்.     3.21.12
    1275    போருறும் பெரும்படை யுடனும் புக்கியச்
    சேரல ரணிகெடச் சிதைத்துத் தீனெனும்
    வேரற முகம்மதை வீழ்த்திடே னெனிற்
    பாரிதன் முகத்தினைப் பார்ப்ப தில்லையால்.     3.21.13
    1276    வாரியின் பெருங்கிளை மலிவி னாலுமிப்
    பாரினிற் பலபொருள் படைத்த மாண்பினுங்
    கூரும்வை வேற்படைக் கூட்டத் தாலுந்தன்
    வீரியத் தினுமிவை விளம்பி னானரோ.     3.21.14
    1277    இன்னன பலவெடுத் திசைத்த வாசக
    நன்னிலை மக்கமா புரத்தி னண்புறு
    மன்னிய வேந்தர்க ளெவர்க்கு மார்புறுங்
    கொன்னுனை வேலினுங் குளித்து நின்றதே.     3.21.15
    1278    இவர்மொழிக் கின்னண மியைந்தி லோமெனிற்
    புவியினிற் செல்வமும் புகழும் வீரமு
    மவமென யாவரு மகத்தி னுட்கொடு
    குவிதருங் கணத்தொடுங் கூற லுற்றனர்.     3.21.16
    1279    அருந்திற லபூஜகு லுடனம் மாண்மையும்
    பொருந்திறல் வீரமும் பொன்றிப் போயதென்
    றிருந்தன மின்றுநீ யியம்பு மாற்றத்தான்
    விரிந்தநங் குலத்தவர் வெற்றி வீரமே.     3.21.17
    1280    இன்றுநீ துணிந்தனை யிறந்த மன்னவர்
    வன்றிறற் பழியினை வாங்கி னோமினி
    நன்றியும் விளைத்தனம் நமக்கு நாடொறும்
    வென்றியுண் டென்பதும் விளம்ப வேண்டுமோ ?     3.21.18
    1281    செழுந்திறற் சேனையுஞ் சேனை வீரரும்
    வழிந்திடுங் குருதிவேன் மன்னர் தம்மொடு
    மொழிந்திடு முரைவழி முன்னி யிற்றையி
    னெழுந்திட வேண்டுமென் றிசைத்திட் டாரரோ.     3.21.19
    1282    நள்ளுற நகரவர் நவிலும் பெற்றியின்
    வள்ளுரத் தபாசுபி யானு மாசிலா
    வள்ளிலை வேலெடுத் தாடன் மாவொடும்
    புள்ளெழ விரைவினிற் புறப்பட் டானரோ.     3.21.20
    1283    குரகதப் பேரணி குழுமிச் சூழ்தர
    விரிகதி ரெஃகினர் விரைவின் முன்செலச்
    சொரிகணை விற்கதை சுரிகை வாள்சுமந்
    தரசர்கள் சிலர்திரண் டரியி னீண்டினார்.     3.21.21
    1284    அடற்பரி யிரண்டுநூற் றரசர் தம்மொடும்
    படைக்கலன் வீரரும் பரந்து முன்செலக்
    கொடிப்படைக் குழுவொடுங் குடைகண் மொய்த்திடக்
    கடற்படு பல்லியங் கறங்கப் போயினான்.     3.21.22
    1285    கைத்தபுன் மனத்தினன் ஹறுபு தன்மகன்
    மொய்த்தெழும் பெருந்துகண் முகிலின் விம்மிடப்
    பைத்தல நெளிதரப் படைகொண் டீண்டியே
    யெய்த்திடாத் திறத்தொடும் சவீக்கி னெய்தினான்.     3.21.23
    1286    வயமுறு நபியுறை மதீன மாநகர்க்
    கியல்புறக் காதநான் கென்னு மெல்லையி
    ணுயர்சவீக் கெனுந்தலத் துழையின் மாவொடு
    பயமற விறங்கினான் வகுத்துப் பாசறை.     3.21.24
    1287    பரித்திர ணிரைநிரை படுத்திப் பாங்கரின்
    விரித்தொளிர் படங்குகள் விளங்கக் கோட்டிநல்
    லரித்திர லரசருக் கமைதி காட்டியூ
    டிருத்துமங் காடியு மிருத்தி னானரோ.     3.21.25
    1288    கறங்கிய மேற்கடற் கனலி புக்கபி
    னிறங்கிய பாசறை யிடத்திற் சூழ்தர
    மறங்கிளர் வீரரை வைத்தி யாவரு
    முறங்கிய காலையி னொருவ னாயினான்.     3.21.26
    1289    தன்னுரு வகற்றிவேற் றுருவந் தாங்கிவிற்
    கொன்னுனை வாளொடுங் குந்த மேந்திப்பின்
    முன்னிடந் தெரிகிலாக் கங்குன் முன்னிநற்
    பொன்னியன் மதீனமா புரம்புக் கானரோ.     3.21.27
    1290    அரசர்தம் வீதியு மாவ ணங்களுங்
    குரிசிறன் வாயிலுங் கடந்து கோமகன்
    வரும்அகுத் தபுமக னில்லின் வாயிலின்
    கரைபுரள் கதிர்மணிக் கபாடந் தீண்டினான்.     3.21.28
    1291    புதுமணிக் கதவினிற் புடைத்தி டத்தொனிக்
    கதழ்வுறச் செவியினிற் கலப்பக் கேட்டெழுந்
    துதிர்நறைத் தொங்கன்மார் புலவ வந்துநின்
    றிதமுறக் கவிழ்ந்திருட் டறுத்து நோக்கினான்.     3.21.29
    1292    கதிபிறி தொன்றிலா ஹறுபு பெற்றிடும்
    பதகனென் றறிந்தவன் பகரும் வாசகத்
    தெதிர்கொடுத் தழைத்திடல் பழுதென் றெண்ணிமா
    மதியொடு மெழுந்துதன் மனைபுக் கானரோ.     3.21.30
    1293    நின்றனன் கூயின னெடிது தன்மனங்
    கன்றியிங் கொருவருங் காண்கி லோமென
    மின்றிக ழயிலொடு வேறு வீதியிற்
    சென்றனன் றனித்தொரு வாயில் சேர்ந்தனன்.     3.21.31
    1294    பலதிசை யினுமெலப் பார்த்திவ் வில்லினு
    மிலருளர் மாந்தர்க ளென்ன வெண்ணிய
    மலைவொடு மசுக்கமின் மகனில் வாயிலி
    னிலையுறுங் கதவினைப் புடைத்து நின்றனன்.     3.21.32
    1295    கங்குலங் காலையிற் கதவைத் தீண்டுதற்
    கிங்கடைந் தவரெவ ரென்ன வில்லுறை
    மங்கையர்க் குரைத்தெழுந் தரிதின் வந்தொளி
    நுங்கிய விருளிடை நோக்கி னானரோ.     3.21.33
    1296    கலைப்பவ னெனவரும் ஹறுபு மைந்தனைத்
    தலைக்கடைக் கண்டுகை படித்துத் தானுறை
    யிலத்தினிற் கொண்டுசென் றிருத்தி யின்புறு
    நலத்தொடுஞ் சுவையொடும் பொசிப்பு நல்கினான்.     3.21.34
    1297    உண்டிலை தின்றபி னுறுதி யாகவிம்
    மண்டலத் துளவையு முகம்ம தென்னும்பேர்
    கொண்டவற் குறும்படைக் குறிப்புங் கொள்கையும்
    விண்டெமக் குரையென விளம்பி னானரோ.     3.21.35
    1298    முகம்மதின் மார்க்கமும் வலியும் வெற்றியு
    மிகலவர் பணிவும்போ ரியற்றுஞ் செய்கையும்
    பகைபிறி திலையெனப் பகரும் பெற்றியும்
    வகைவகை தெரிதர மசுக்கஞ் சொல்லினான்.     3.21.36
    1299    சாற்றிய தனைத்தையும் ஹறுபு தன்மகன்
    றேற்றமுற் றுணர்ந்துசிந் தித்து நன்கென
    மாற்றவ ரறிகிலா தெழுந்து வல்லிரு
    ளாற்றிடை குறுகிப்பா சறையி னாயினான்.     3.21.37
    1300    உதித்ததன் கிளையினுக் குரிய ரியாவரு
    மதித்திடும் திறத்தினர் மன்னர் நால்வரைக்
    கதித்தபுன் மனத்தினன் ஹறுபு தன்மக
    னிதத்தொடு மழைத்தரு கிருத்திச் சொல்லுவான்.     3.21.38
    1301    முகம்மதி னுறைமதி னாவிற் சூழ்தருந்
    திகைதிகைச் சிறுகுடி நிரைகள் சேர்த்தவண்
    டுகள்படப் பலபொருள் சூறை யாடிநின்
    றிகலவ ருயிர்செகுத் திடுமி னென்றனன்.     3.21.39
    1302    மன்னன பாசுபி யான்சொல் வாசகஞ்
    சென்னியிற் கொடுசில பெயர்க டம்முடன்
    மின்னயில் வேலொடும் வீரவா ளொடும்
    பன்னருங் கங்குலிற் பரந்து போயினார்.     3.21.40
    1303    பரிசுகளைக் கங்குலிற் கரந்து பற்றியும்
    நிரைகளிற் றொருவரை நெருக்கித் தாக்கியும்
    விரைவொடு மெதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும்
    தெரிதரா தொளித்தருங் குறும்பு செய்தனர்.     3.21.41
    1304    கல்லடர் பொருப்பிடைக் காலிக் காரரும்
    பல்லரும் திரிதரும் பாதை யோர்களு
    மெல்லையிற் சிறுகுடி யிருக்கின் றோர்களுஞ்
    சில்லறை பெரிதென நபிமுன் செப்பினார்.     3.21.42
    1305    தேங்கமழ் தெரியலா ரீதென் செய்கையென்
    றாங்குறு மொற்றரை யறியக் கேட்டலும்
    பூங்கழ லிறைஞ்சிவாய் புதைத்து மென்மெலப்
    பாங்குறுஞ் செவிகொளப் பகரு வாரரோ.     3.21.43
    1306    குரகதத் தொடும்சில படையுங் கூட்டியோர்
    வரையிடை சவீக்கெனுந் தலத்தில் வந்திருந்
    திருமன ஹறுபுத னிளவ லிவ்வணம்
    விரைவினிற் பகைபல விளைக்கின் றானென்றார்.     3.21.44
    1307    பற்றல ரெனுமொழி செவியிற் பற்றலும்
    வெற்றிய பாலுபா னாவை வீறொடு
    மற்றையி னகரினுக் காதி யாகவைத்
    துற்றவெஞ் சமர்ப்படை யுடனெ ழுந்தனர்.     3.21.45
    1308    குவிபெருஞ் சேனையும் பரியுங் கூட்டமுங்
    கவிகையுந் துவசமுங் கலப்பப் பல்லிய
    முவரியி னொலித்திட முகம்ம துஞ்செழும்
    புவிதிசை யதிர்தரக் கடிது போயினார்.     3.21.46
    1309    பொழின்முகில் வரையிடை பதுறிற் போரினில்
    வழிநிண மறாதவேன் மன்னர் வெம்படைக்
    குழுவொடுங் கறுக்கறா வென்னக் கூறிய
    வெழிறருந் தலத்திடை யிறங்கி னார்களால்.     3.21.47
    1310    மறைநபி முகம்மது மற்ற யார்களுந்
    தெறுகொலை வீரருஞ் சேனை மாக்களு
    மறைகட லெனவடுத் தனர்க ளீண்டென
    கறுபுதன் றிருமகன் காதி லோதினார்.     3.21.48
    1311    அள்ளிலை வேலொடு மகும தின்படைப்
    புள்ளெழக் கறுக்கறாப் புலத்தி னுற்றவை
    விள்ளலுங் கறுபுதன் விடலை யாக்கமு
    முள்ளமும் வீரமு மொடுங்கி னானரோ.     3.21.49
    1312    பொங்கிய தானையும் புரவிக் கூட்டமுந்
    தங்கிய பொருளுமத் தலத்தின் விட்டுவிட்
    டங்கவ ரொருவரு மறிகி லாநடுக்
    கங்குலங் காலையிற் கார்ந்து போயினான்.     3.21.50
    1313    கரந்துபோ யினனா சென்னுங் கட்டுரை
    பரந்தன பாசறை முழுதும் பாய்கதிர்
    விரிந்தன விடிந்தன விரைவி னெங்கணுஞ்
    சரிந்தனர் குழுவொடுந் தறுகண் வீரரே.     3.21.51
    1314    சரந்தரு தூணியுந் தனுவுந் தண்டமு
    மரந்தட வயிலுந்தா வச்சு வங்களும்
    பரந்தவெண் படங்குபா சறையும் வீதியு
    மிருந்தன போயின ரியாரு மென்பவே.     3.21.52
    1315    வானவர் பரவிய வள்ளன் மானபி
    யீனமில் கறுக்கறா வெல்லை நீத்துவந்
    தானதோர் சவீக்கினி லரிகள் காண்கிலார்
    கானலர் படங்கும்பா சறையும் கண்டனர்.     3.21.53
    1316    கருஞ்சகுந் தமுங்கொடிக் கணமுங் கங்கமு
    முரைஞ்சிடக் கொடியொடு நடந்த வொள்ளியோர்
    பெருஞ்சம ரெனுமொரு பெற்றி காண்கிலா
    ரருஞ்சுர வழியிளைப் பாறி னாரரோ.     3.21.54
    1317    கட்டுவாம் புரவியும் படைக்க லன்களும்
    வட்டவெண் கவிகையு மிரச வர்க்கமு
    மொட்டகைத் திரள்களு மொளிர்நி சானியும்
    விட்டபல் பண்டமும் விரைவின் வாரினார்.     3.21.55
    1318    சிறியரும் பெரியருஞ் சேனை வீரருங்
    குறியொடும் பலபொருள் கொள்ளை கொண்டதிற்
    றறுகிலா கறுபுசேய் தருமத் தாலன்றோ
    வறியவ ரெவர்களும் வலிய ராகினார்.     3.21.56
    1319    கொள்ளையின் பலபொரு ளனைத்துங் கைக்கொடு
    கிள்ளையின் றிரளொடுங் கிளரும் வாளயின்
    மள்ளர்கள் சூழ்தர வள்ள னந்நபி
    நள்ளுறை யரியென நகர நண்ணினார்.     3.21.57
    சவீக்குப் படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 21-க்குத் திருவிருத்தம்.......1319.

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.22 குதிரிப் படலம் (1320-1331)
    1320    கொற்றவெண் கவிகை நீழ லுலகெலாங் குளிரச் செய்து
    வெற்றிகொண் டிசுலா மோங்க விறனபி யிருக்கு நாளிற்
    பற்றலர் தேயந் தோறும் பற்பல்கா லிருந்து சாவு
    மொற்றரி லொருவர் தோன்றிச் சிலமொழி யுரைப்ப தானார்.     3.22.1
    1321    மதினமா நகரிற் றென்கீழ்த் திசையினில் வளமை யோங்கக்
    குதிவரால் வனச வாவி சூழ்தரு குதிரி யென்னும்
    பதிபனி சுலைமுக் கூட்டத் தாரினிற் பல்லர் கூண்டு
    விதிமுறை மறையின் மாற்றம் பொய்யென வெறுத்து மன்னோ.     3.22.2
    1322    நன்னயச் கலிமா வென்னு நாமநா நாட்டு மாக்கள்
    சொன்னெறி வழுவ தாக்கித் தூடணித் திகல தாக
    மன்னநும் பெயருங் கூறும் வாய்மையு மதித்தி டாமற்
    பன்னருங் குறும்பு மேற்கொண் டிருந்தனர் பரிவற் றென்றார்.     3.22.3
    1323    புவியிடந் திரிந்து நாளும் புகலுவோ ருரைத்த மாற்றஞ்
    செவிவழி புகுத லோடுஞ் செவ்விய ரிறசூ லுல்லா
    இபுன்ம்மி மக்த்தூ மென்னு மிளவலை நகரி னாட்டிக்
    கவனவெம் பரியுந் தானைக் கணத்தொடுங் கடிது போனார்.     3.22.4
    1324    மதிதவழ் சிகர கோடி வரைபல கடந்து நன்னீர்
    நதிசில கடந்து மாறா நள்ளிருட் கான நீந்திக்
    கதிரவன் கதிரி னாலெண் காவதங் கடந்து வல்லே
    குதிரியென் றோங்குஞ் செல்வக் கொழுநக ரடுப்பப் புக்கார்.     3.22.5
    1325    பூவலர் பொய்கை வேலிப் புறம்படர்ந் திலங்கச் சூழ்ந்த
    காவணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டுக்
    கோவுடன் குடியுங் கூடுங் கூட்டமுங் குலைந்து தத்தஞ்
    சேவக மிழந்து நான்கு திசையினுஞ் சிதறிப் போனார்.     3.22.6
    1326    பற்றலர் பதியை நீங்கிப் பஃறிசை படர்ந்தா ரென்ன
    வுற்றவ ருரைப்பத் தீனோ ரொண்புயங் குலுங்க நக்கிக்
    கற்றைவெண் ணிலவு காலுங் கவிகையுங் கொடையு மோங்கச்
    கொற்றவ ருடனு மேகிக் குதிரியி னிடத்தி லானார்.     3.22.7
    1327    கூறிய குதிரி வாழ்ந்தோ ரொட்டகங் குதிரை காலி
    யேறுமே ழகங்க ளெல்லா மினத்தொடு மொருங்கு சேர்த்து
    மாறரு மணியும் பொன்னு மாடையு மினிதின் வாரி
    வேறினி யில்லை யென்னக் கவர்ந்தனர் விரைவி னன்றே.     3.22.8
    1328    மட்டறும் பண்ட மியாவு மலிதரச் செறிந்து வைகு
    மொட்டகைத் திரளி னேற்றி யுறுநிரை யனைத்துஞ் சேர்த்து
    விட்டுமுன் னடத்தி வேந்தர் வீரர்வெம் பரியிற் சூழக்
    கட்டழ கெறிக்குஞ் சோதிக் காவலர் புறப்பட் டாரால்.     3.22.9
    1329    ஓலவா ரியின்ற டாரி முரசங்க ளொலித்துப் பொங்க
    நீலவொண் கவிகை மேக நிழறர சலவாத் தார்ப்பக்
    கோல்வளை யாது செய்து குவலய முழுதுங் காத்த
    மாலையொண் புயத்து வள்ளன் மதீனமா புரத்தின் வந்தார்.     3.22.10
    1330    கருதலர் பதியிற் புக்கிக் கவர்ந்தபல் பொருளும் பங்கிற்
    பிரிவிலா யார்கட் கீந்து பிடித்தவொட் டகையைந் நூற்றின்
    வரிமறை முறைநா னூறும் வரன்முறை யினிதி னல்கிப்
    பரிவினின் மற்ற நூறுந் தம்வசப் படுத்தி னாரால்.     3.22.11
    1331    கோதுறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்க ளெல்லா
    மாதவ தீனர்க் கீந்து வானவர் பரவி வாழ்த்தத்
    தீதறச் செல்வ மோங்கச் செழுமறை நாளும் பொங்க
    வாதிதன் கிருபை தாங்கி யகுமது விருந்தா ரன்றே.     3.22.12

    குதிரிப் படலம் முற்றிற்று.
    ஆகப் படலம் 22-க்குத் திருவிருத்தம்.....1331.

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.23 தீயம்றுப் படலம் (1332-1343 )
    1332    பானலங் கழனி சூழ்ந்த நசுதெனும் பதியி னாளுங்
    கோனிலை பொருந்தி வாழுங் கத்துபான் கூட்டத் தாரை
    தீனிலைப் படுத்த வேண்டுஞ் செயலினைக் கருத்துட் கொண்டார்
    மானிலம் பாதந் தோயா வள்ளன்மா முகம்ம தன்றே.     3.23.1
    1333    மலர்தலை யுலகம் போற்று மதீனமா நகார்ந் தன்னி
    லிலகிய புகழ்சேர் வள்ள லியலுது மானை வைத்துப்
    பலகதிப் பரியி னோடும் படைக்கலத் தரசர் சூழப்
    புலவர்க ளினிது வாழ்த்த முகம்மது புறப்பட் டாரால்.     3.23.2
    1334    குறைவற நசுதில் வாழுங் கத்துபான் கூட்டத் தாரை
    மறைவழி யிசுலா மாக்கி மாதமொன் றிருந்த பின்னர்
    கறைநிணங் குருதி மாறாக் கதிர்வைவேல் வீரர் சூழ
    நறைமலர்த் துடவை போர்த்த மதீனமா நகரில் வந்தார்.     3.23.3
    1335    நறாக்கனித் துடவை சூழ்ந்த மக்கமா நகரின் வாழ்வோ
    ரறாக்கதிர் புரிசைக் சாமி னியாத்திரை யகற்றிப் பின்ன
    ரிறாக்கினிற் றொழில்செய் கின்றா ரென்னுமச் செய்தி யாவு
    மறாக்கனக் கவிகை வள்ளன் முகம்மதுக் குரைத்தார் மன்னோ.     3.23.4
    1336    சிலையயிற் படைக டாங்குஞ் செல்வரும் பரியுங் கூட்டிப்
    புலியெனும் காரி தாதன் புதல்வரைத் தலைமை செய்து
    நலிவற மக்க நாட்டார் வரும்வழி நாப்பண் வைகி
    வலியுட னிருந்து வெட்டிப் பறித்திவண் வருக வென்றார்.     3.23.5
    1337    காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்தென் றோதும்
    வாரிச வதன மன்னர் முகம்மது பாதம் போற்றிக்
    கூரிலைக் கதிர்வே லேந்திக் கொலைமதக் களிறு போலப்
    பூரிகை பேரி யார்ப்பப் படையொடும் புறப்பட் டாரால்.     3.23.6
    1338    கனவரை கடந்து கான்யா றுகள்பல கடந்து மாறாச்
    சினவரிப் புலியு லாவித் திரிவனம் பலகண் டேகி
    நனைபொழில் சூழி றாக்கு நாட்டுக்கும் வரிசை மக்க
    மெனுநக ரதற்கு நாப்ப ணிருந்ததீ யம்றைச் சார்ந்தார்.     3.23.7
    1339    கொய்யுளைப் பரியும் வீரர் குழுவுமோர் வனத்தி னாக்கி
    மையலங் களிறு போன்ற காரிதா மதலை நான்கு
    பையல்க ளோடுந் தாமப் பதியிடை யிருக்குங் காலைப்
    பொய்யுறாச் செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார்.     3.23.8
    1340    அடவியி னிருந்த சேனைத் திரளுமச் சுவமுங் கொண்டு
    கடிதினி லெழுந்து மாறாக் கதிர்ப்படைக் கலன்க ளேந்தி
    வடிவுறும் காரி தாதன் மதலையங் கெதிரி னேகி
    நெடிபடு கானஞ் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார்.     3.23.9
    1341    பன்னருங் கதியிற் றாவும் பரியொடுஞ் சேனை யோடு
    மன்னபா சுபியா னென்னும் பெயரினன் வந்து தாக்கி
    யுன்னுமுன் சைதுக் காற்றா துடைந்துமற் றெவையும் போக்கித்
    தன்னகங் கலங்கி மக்க மாநக ரொல்லை சார்ந்தான்.     3.23.10
    1342    ஏட்டலர் சோலை சூழி றாக்குமா நகரைச் சார்ந்த
    நாட்டுவா ணிபத்துக் கேற்ற நன்னயப் பொருள்க ளியாவுங்
    கூட்டிய பரியி னோடு மொட்டகைத் திரளுங் கொண்டு
    தீட்டும்வே லவர்கள் சூழ மதீனமா நகரஞ் சேர்ந்தார்.     3.23.11
    1343    பாதையிற் பறித்த வெற்றிப் பலன்படு பொருள்க ளெல்லா
    மாதவன் காரி தாசேய் முகம்மதி னிடத்தி னீட்ட
    வேதநன் மறையி னுற்ற விதிப்படி தீனர்க் கீந்து
    பூதல மனைத்தும் போற்றப் புகழ்நபி யிருந்தா ரன்றே.     3.23.12
    தீயம்றுப் படலம் முற்றிற்று.

    ஆகப் படலம் 23-க்குத் திருவிருத்தம்....1343

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.24 அபீறாபிகு வதைப் படலம்(1344-1383)
    1344    மக்கமா நகரில் வாழுங் காபிரி லொருவன் மாறா
    விக்கின மென்ப யாவும் விளைத்திடுங் கொடிய நீரான்
    மைக்கலந் துயருஞ் சோலை கைபறில் வாழ்வோ னாளுந்
    துக்கமு மிழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன்.     3.24.1
    1345    கள்ளமுங் கொலையும் பொய்யு நிந்தையுங் கள்ளு நீங்கா
    துள்ளகத் திருத்தி வாழு முயிர்த்துணை யாகக் கொண்டோ ன்
    வள்ளனந் நபிதந் நாமம் வழுத்திய மாந்தர்க் கெல்லா
    மெள்ளள விரக்க மில்லா திடும்புகள் விளைத்த சூமன்.     3.24.2
    1346    கதிபெறுந் தீனுள் ளோரைக் கண்ணினுன் காண மேவான்
    பதிதொறு மருவார்க் கேயப் பண்புறு முதவி யானோன்
    சதிமனத் திபுலீ சென்போன் றனையரி லொருவன் போல்வான்
    அதபறி வென்ப தில்லா வகத்தபீ றாபி கென்போன்.     3.24.3
    1347    இனையன பண்பி னோன்றன் செய்கையு மியற்கை யாவு
    மனனுற வைக றோறும் வரிசையங் குரிசில் கேட்டுப்
    புனைகழ லுதைக்குத் தந்த புதல்வரில் அப்துல் லாவைத்
    தனியழைத் திருத்தித் தோன்றா மறையினிற் சாற்று வாரால்.     3.24.4
    1348    அழிவுறு நெறிமேற் கொண்ட காபிர்க ளறித றோன்றா
    வழியபீ றாபி தன்னைக் கைபறிற் புகுந்து வல்லே
    யிழிவுமற் றிடரு நீங்கக் கோறல்செய் திவணி னீவிர்
    குழுவுடன் வருக வென்றா ரன்னது கருத்துட் கொண்டார்.     3.24.5
    1349    ஆரண நெறிம றாவன் ஸாரிகள் பதின்மர் சூழ
    வாரணி முலையார் சிந்தை மயக்குறும் வனப்பு வாய்ந்த
    தாரணி புயங்கள் விம்ம அப்துல்லா தயங்குங் காந்திக்
    கூரயில் கரத்திற் றாங்கிக் குரகத மேற்கொண் டாரால்.     3.24.6
    1350    குரிசினந் நபியைப் போற்றிப் பதின்மர்தங் கூட்ட நீங்கா
    விரைவுட னெழுந்து போந்து விலங்கலும் வனமு நீந்திக்
    கருதல னிருந்து வாழுங் கைபறென் றோது மூரின்
    புரிசையின் புறத்தி னுற்றார் வணிகரைப் போன்று மாதோ.     3.24.7
    1351    புரிசையுள் ளுறைந்த பேர்க்கும் புறநகர் புகுது வோர்க்கும்
    வரன்முறை வேட்ட யாவும் வாணிபத் தொழிலின் மாறி
    யொருவரு முழையிற் புக்கி யுசாவுதற் கிடங்கொ டாம
    லிருளினும் பகலு நீங்கா திரண்டுநா ளிருந்து மாதோ.     3.24.8
    1352    மாசறப் பின்னர் மூன்றா நாளில்விண் மணிவில் வீழ்த்தி
    யோசைமேற் கடலிற் புக்கி யுலகமு மிருளுங் காலைக்
    காசறு மப்துல்லா வென் றோதிய களிறு காலிற்
    றூசியிற் றொருவி னோடுங் கரந்துசூழ் புரிசை புக்கார்.     3.24.9
    1353    செருக்கொடும் புகுந்து வாரி வாயிலின் றிறவு கோல்வைத்
    திருக்குமவ் விடத்தைக் காணா திரவினிற் கரந்து நோக்கி
    யுருக்கறுத் திலங்கும் வேலோ ருறையிட மனைத்து நோக்கி
    மருக்கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ.     3.24.10
    1354    மன்னவர் மனைக ணோக்கி மாநகர்க் காவ லாளர்
    துன்னுமவ் விடங்க ணோக்கித் துரத்தபீ றாபி கென்போன்
    றன்னகப் புரிசை வாயிற் றன்னையு நோக்கி நோக்கிப்
    பொன்னணி மனையு மந்தப் புறத்தையு நோக்கி னாரால்.     3.24.11
    1355    மரவங்கள் கிடந்து லாவு மணிப்புய வரையின் வள்ள
    லிரவங்குப் புகுந்து சாவி யெவ்விட மனைத்து நோக்கி
    யரவங்க ளொடுங்கு மட்டு மாயத்துப் பலகா லோதிக்
    கரவங்க மிதுகொ லென்னக் களித்தொரு புறத்தி னின்றார்.     3.24.12
    1356    நள்ளிருட் காலை யாய திஃதென நடந்து சாவி
    யுள்ளுறைந் துறங்கு மொன்னார் தமைக்கடந் தொளித்தோர் பாலி
    றள்ளரும் பலகை தாங்கிப் பேழையிற் றடக்கை நீட்டிக்
    கொள்ளருங் காப்பு வாய்ந்த திறவுகோ லனைத்துங் கொண்டார்.     3.24.13
    1357    அவ்விட மகன்று மெல்ல வடிபெயர்த் தொதுங்கி நீங்கிக்
    கௌவைக டோ ன்றா நீண்ட கபாடத்தின் வாயி னண்ணிச்
    செவ்விய திறவு கோலாற் பூட்டினைத் தீண்டி நீத்து
    நொவ்விதிற் றிறந்துள் ளாய கரப்பையார் நுவல வல்லார்?     3.24.14
    1358    செறித்த பொற் கதவ மெல்லா மிமைப்பினிற் றிறந்து மூடிக்
    குறித்தவன் வாயில் புக்கிக் கூண்டவர் துயிற னோக்கி
    யெறித்தவெண் காந்திமாட மெங்கணுந் திரிந்து பள்ளி
    யறைத்தலந் திறந்துள் ளாகி யடுத்தொரு புறத்தி னின்றார்.     3.24.15
    1359    திரைத்துகி லடுத்தன் னோனித் திரையினை யுணருங் காலை
    விரித்தசெங் காந்திச் செவ்வி யெரிவிளக் கவிந்த பின்னர்
    வரித்தடங் கண்ணி னாளு மன்னனும் விழிப்பதாக
    விருத்தல்கண் டிருந்தா ராங்கோ ரிளம்புலி யிருந்த தொத்தே.     3.24.16
    1360    இருவருந் துயிறல் கொள்ளா திருந்தன ரிருளு மாய
    வுருவிவாட் டடக்கை நீட்டி யோங்கினோ மாகி லம்ம
    வரிவையோ வவனோ வாவி யளிப்பவ ரென்ன வின்னே
    தெரிவரி தென்ன மாழ்கிச் சிந்தையிற் றேம்பி னாரால்.     3.24.17
    1361    கங்குலி னெதிர்ந்து தாவும் போதினிற் கடிதி னாவி
    மங்கையே வழங்கி னாளேல் மாநில முழுதுங் கொள்ளாப்
    பங்கமும் பவமுந் தூறும் பழியும்வந் தடையு மென்ன
    வங்கையிற் பிடித்த வாளை யணிநிலஞ் சேர்த்தி னாரால்.     3.24.18
    1362    கொல்வதற் கிசைந்து நின்றேங் காலையுங் குறுகிப் போய
    மல்வளர் புயத்தி னானு மங்கையுந் தெரித றோன்றா
    வில்விடுத் தகன்று சார்பி னெய்திங் குறைந்து நாளைச்
    செல்வதெவ் வண்ண மென்ன வடிக்கடி தெருமந் தாரால்.     3.24.19
    1363    கொற்றவ னாவி போவ தன்றிவை குறித்து நோக்கி
    னிற்றனம் மாவி யென்ன விடைந்திடைந் தெண்ணுங் காலைக்
    கற்றையங் கரிய கூந்தற் கன்னியை விளித்து மன்ன
    னுற்றறி யென்பான் போலச் சிலமொழி யுரைப்ப தானான்.     3.24.20
    1364    பன்மணிக் கலன்கள் பூண்டு பரிமளந் திமிர்ந்து வாசச்
    சின்மலர் செருகுங் கூந்தற் சேயிழை யொருத்தி யென்பாற்
    பின்முகந் திரும்பி யேறா மொழிபல பிதற்றிப் பேசி
    வன்மமுற் றிருப்பக் கண்டேன் கனவென வழங்கி னானால்.     3.24.21
    1365    கூறிய மொழியைக் கேட்டுக் கொவ்வையங் கனிவாய்ப் பேதை
    வேறொரு மாதை யுள்ளம் விரும்பினை யதனா லிந்தப்
    பேறுடன் கனவு காணப் பெற்றனை யென்ன வூடிச்
    சீறிய வெகுளி பொங்க விருவிழி சிவந்து நின்றாள்.     3.24.22
    1366    அறக்கடிந் துரைப்பக் கேட்ட வாடவ னவளை நோக்கிப்
    பெறற்கரும் பெண்மை நல்லாய் பிறிதொரு மாதையாவி
    யிறக்கினு மிறப்பதல்லா னினைத்தில னெளியே னென்னத்
    திறக்கரும் வெகுளி மாற வூடலைத் திருத்தி னானால்.     3.24.23
    1367    ஊடலைத் திருத்தி யன்னோ னுரைத்திடுந் தொனியும் வாய்ந்த
    பேடைமா மயிலன் னாள்வாய் பிறந்தசொற் றொனியு நீங்கிக்
    கூடுறா திருக்குந் தானக் குறிப்பினை யுணர்த்தக் கேட்டுப்
    பீடுற நலிதல் போக்கி மனத்தினிற் பிரிய முற்றார்.     3.24.24
    1368    இருந்தவ ரெழுந்து வீழ்த்த திரையினை யீழ்த்துட் புக்கி
    யரிந்திடுங் கதிர்வெள் வாளை யங்கையிற் பூட்டி யன்னோன்
    றிருந்தவங் கவளுக் கோது மொழிவழி சென்று செந்நீர்
    சொரிந்திட வெறிந்து நின்றார் சூரர்க டிலத மன்னார்.     3.24.25
    1369    ஊறுபட் டெழுந்து வாய்விண் டுரப்பியாங் கரித்திவ் வில்லின்
    வேறுபட் டெவரோ கொன்றா ரென்னவாய் வெருவிக் கூவ
    வேறுபட் டவரியார் கொன்றா ரெவரென விடைந்து மாந்தர்
    தேறுபட் டிலராய் மாழ்கி மனையிடஞ் செறிந்தார் மன்னோ.     3.24.26
    1370    எறிந்தொளித் திருந்தோர் காயஞ் சிறிதென மனத்தி னெண்ணி
    யுறைந்துசா வுவர்போ லாங்கி னுற்றவா ளோங்கிப் பின்னுங்
    குறைந்துயிர் மீளத் தாக்கிக் கூரிருட் காலை கூண்டு
    நிறைந்தவ ருடனு நின்று பயப்பய நீங்கி னாரால்.     3.24.27
    1371    மறந்தருங் கொடிய வஞ்ச மனத்தபீ றாபி கின்னே
    யிறந்தன னுயிர்பெற் றானென் றிரண்டிலொன் றறிவோ மென்னத்
    திறந்தரு மப்துல் லாவென் றோதிய திருப்பேர் மன்னர்
    நிறந்தரந் தெரியாக் கங்கு னின்றன ரொருபா லன்றே.     3.24.28
    1372    இருந்தன ரெவர்கொ லென்பா ரியாவரிற் புகுந்தா ரென்பார்
    தெரிந்திலன் காணு மென்பார் தீபமு மிலையோ வென்பார்
    கரந்தவ ருளரோ வென்பா ரொருவருங் காணோ மென்பார்
    சொரிந்தது குருதி யென்பார் சோர்ந்தனன் மன்ன னென்பார்.     3.24.29
    1373    உண்டிலை யாவி யென்பா ருயிர்துடிக் கின்ற தென்பார்
    விண்டனன் மாற்ற மென்பார் விழித்தனன் காணு மென்பார்
    கண்டவ ருளரோ வென்பார் காயத்திற் பிழைப்பி லென்பார்
    மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்த தென்பார்.     3.24.30
    1374    என்னினிச் செய்வோ மென்பா ரிடைந்திடைந் தேங்கி நிற்பார்
    பன்னுவ தென்கோ லென்பார் பழிமுடித் தவரா ரென்பார்
    முன்னையூழ் விதிகொ லென்பார் முனையகத் திறந்தி டாது
    மன்னவ னாவி வீணில் வழங்கினான் காணு மென்பார்.     3.24.31
    1375    மடிந்தன னென்னு மாற்றம் வழங்கிடக் கடலி னாப்பண்
    படர்ந்தவெண் டிரையிற் றத்திப் பன்மணி நிதியத் தோடு
    முடைந்திடுங் கலம தொப்ப மன்னவன் மனையு ளெங்கு
    மிடைந்திடைந் திரங்கி யேங்கி யெழுந்துகொல் லென்ற தன்றே.     3.24.32
    1376    மாற்றல னிறந்தா னென்ன மனமகிழ்ந் துவகை பொங்கிப்
    போற்றிநன் னபியை வாழ்த்தி யப்துல்லா பூரிப் போடுந்
    தோற்றிடா தொதுங்கி வாய றொறுங்கடந் தெளிதி னேகித்
    தீற்றிவெண் ணிலவு காலும் புரிசையின் வாயிற் சேர்ந்தார்.     3.24.33
    1377    புரிசையின் வாயி லாலும் பொதி யிருட் காலையாலும்
    வரிமுறைப் படியிற் காலை வைத்திடத் தவறி வீழ்ந்து
    தரிபடற் கரிதா யோர்தா ளொடிந்ததத் தாளி னோடும்
    விரைவொடு மெழுந்து சாரும் விடுதியை நண்ணி னாரால்.     3.24.34
    1378    மூரியங் கணைக்காற் கீழ்பான் முகிழ்தரும் பரட்டின் மேல்பாற்
    சார்பற வொடிந்த காலைத் தன்றலைப் பாகிற் சுற்றி
    யூரினி லெவர்க்குந் தோன்றா துறைந்தன ருறைந்த பின்னர்
    பாரிருட் படல நீத்துப் பகலவ னுதயஞ் செய்தான்.     3.24.35
    1379    கதிரவ னெழுந்தோர் சாம மிருந்தவண் கடந்து வல்லே
    பதின்மருந் தாமு மாக வேறொரு பாதை பற்றி
    முதிர்தரு முளரி நீந்தி முகிலுறை வரைக ணீங்கி
    மதுரமென் மறையோர் வாழ்த்த மதீனமா நகரின் வந்தார்.     3.24.36
    1380    நகரினிற் புகுந்து வேத நாயகர் பதத்தை நண்ணிப்
    புகுமிடத் துறைந்த செய்தி யாவையும் புகன்று காலிற்
    றகைபடுத் தொடிந்த வாறு தன்னையு முரைத்து நின்றார்
    மகிதலம் புகழுங் கீர்த்தி மன்னவ ரப்துல் லாவே.     3.24.37
    1381    கொடியவஞ் சகத்தைச் சூழ்ந்த குணத்தபீ றாபி காவி
    முடிவினைக் கேட்டு தீனின் முரட்பகை தவிர்ந்த தென்ன
    நெடியவ னிறசூ லுல்லா நேரலர்க் கரியே றன்னா
    ரொடிபடுந் தாளை நோக்கி யோதிச்செங் கரத்திற் றொட்டார்.     3.24.38
    1382    என்பற முறிந்து தோலு மிழ்ந்தொரு நரம்பிற் றூங்கித்
    துன்புறுந் தாளி னீண்ட திருக்கரந் தொட்டு நீவ
    வன்புறப் பொருந்திக் காய மென்பதோர் வடுவு மின்றி
    முன்பிருந் ததனிற் செவ்வி மும்மடங் காயிற் றன்றே.     3.24.39
    1383    கடங்கரைத் திறைக்கும் வெற்றிக் களிறெனு மப்துல் லாவை
    யிடம்பெற விருத்திச் செய்யும் வரிசைக ளனைத்து மீந்து
    தடங்கடற் புடவி காத்துத் தரியலர்க் கரியே றென்ன
    மடங்கலா சனத்தின் வைகி முகம்மதாண் டிருந்தா ரன்றே.     3.24.40
    அபீறாபிகு வதைப் படலம் முற்றிற்று.

    ஆகப் படலம் 24-க்குத் திருவிருத்தம் .....1383.

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.25. அசனார் பிறந்த படலம் (1384-1403 )
    1384    மருந்தெ னுங்கலி மாவுரை விதைத்துமக் காவி
    லிருந்து மாமதீ னாவிடத் தினிதெழுந் தருளித்
    திருந்த வாண்டொரு மூன்றினில் தீன்பயிர் விளைத்துப்
    பொருந்து நாளினி னுற்றவை யினிற்சில புகல்வாம்.     3.25.1
    1385    ஒலிகொண் மாக்கடன் மணியெனு நபியுயிர்க் குயிராய்
    வலியும் வீரமும் வெற்றியுந் திரண்டொரு வடிவாய்
    நிலனு தித்துய ரும்பரின் வரிசையி னிறைந்த
    குலவு நீள்புக ழுமறுகத் தாபெனுங் குரிசில்.     3.25.2
    1386    அருந்த வத்தினி லீன்றெடுத் துவந்தபெண் ணரசைக்
    கருந்த டங்கயற் கண்ணியை நறுமொழிக் கனியை
    வருந்து மெல்லிழைக் கொடியைமென் பிடிநடை மயிலைப்
    பொருந்து மாரமு தையபு சாவெனும் பூவை.     3.25.3
    1387    குறைஷி யங்குலக் காவினி லுறைந்தகோ குலத்தைப்
    பொறையு நீதியு மொழுக்கமும் விளைத்தபொன் னிலத்தை
    யுறையுங் கற்பினுக் குறையிடத் தினையொளிர் மணியை
    மறையி னேர்நபி முகம்மது வதுவையின் மணர்ந்தார்.     3.25.4
    1388    புரந்த ராதிபர்க் கரியும றருள்புதல் வியரைத்
    தெரிந்த நன்மொழி தரும்ஹபு சாவெனுந் திருவை
    வரைந்து நந்நபி யின்புறும் வாரியின் மூழ்கிப்
    பிரிந்தி டாநலம் பொருந்தியுண் டிருந்ததற் பின்னர்.     3.25.5
    1389    பூத லம்புகழ் தருங்கதீ ஜாபுதல் வியரின்
    மாத ருக்கர சும்முக்குல் தூமணி விளக்கைக்
    கோதி லாவுது மான்மனங் களிப்புறக் கொடுத்தா
    ராத ரத்துடன் மகிழ்ந்தினி துறைந்தன ரன்றே.     3.25.6
    1390    மறமும் வீரமு மிலகிய வேலுது மானுக்
    குறையு மாவியின் மிக்குயிர் புதல்வியை யுதவிக்
    கறைகொள் வெங்குபிர்க் குலங்கடிந் தருங்கலி மாவை
    நறைத ரும்புவி யிடத்தினி னடத்துமந் நாளில்.     3.25.7
    1391    மல்வ ளர்ந்தெழும் புயன்உசை மாவரத் துதித்த
    செல்வி யையெழில் ஸெயினபைப் பொறைச்செழு மமுதைப்
    பல்வி தத்தொடுந் திருமண முடித்திசை பரப்பி
    யில்வ ளத்தொடு முறைந்தனர் ஹபீபெனு மிறசூல்.     3.25.8
    1392    செருகு பூங்குழற் ஸெயினபைத் திருநபி மணந்த
    வருட மங்கையர்க் கரசெனும் பாத்திமா வயிற்றிற்
    கருவெ னத்தரித் தும்பரின் பேரொளி கவின
    முரியு மெல்லிடை தெரிதரக் கருப்பமு முதிர்ந்த.     3.25.9
    1393    கடைந்த வேல்விழி வட்டணித் தெழின்முகங் கசங்க
    நடந்து நாலடி வைத்திடிற் பசந்தமெய் நலியத்
    திடந்த ராதுள மிடைந்திடத் தெரியல்க டுயல
    மடந்தை யர்க்கர சியர்க்கரும் வருத்தமுற் றனவால்.     3.25.10
    1394    இறம லான்பதி னைந்தினில் வெள்ளியி னிரவின்
    மறுவில் கற்புடை பாத்திமா வெனுந்திரு மடமா
    னறமும் வெற்றியு மோருரு வெடுத்தென வரிதிற்
    பொறையு யிர்த்தன ரொளிதர வொருபுதல் வனையே.     3.25.110
    1395    பொருவி லாமுத லவன்றிருப் புலியெனு மலிக்குப்
    பெருகுஞ் செல்வத்துட் பிறந்தது மகவெனக் கேட்றி
    முருகு லாவுமெய் புளகெழ முகமதி யிலங்க
    வரிசை நந்நபி வந்தன ரவர்திரு மனையின்.     3.25.12
    1396    ஆர ணத்திரு நாவினர் சூழ்தர வடுத்த
    கார ணக்கட லெனுமுகம் மதுசெழுங் கரத்திற்
    பூர ணக்கதிர் பிறங்கிய புதல்வனை யேந்திக்
    கூரும் வேல்விழி மடந்தையர் விரைவினிற் கொடுத்தார்.     3.25.13
    1397    தீங்க கற்றிய மகள்மகன் வலத்திருச் செவியின்
    வாங்கு ரைத்திடக் காதினிக் காமத்தும் வழங்கிப்
    பாங்கு றக்கமழ் தருநறும் பரிமள மெடுத்துத்
    தாங்கு மென்சிரத் தினிலழ குறத்தட வினரால்.     3.25.14
    1398    பொன்னி லத்துறு மவர்களா மீனெனப் புகல
    வின்னல் போக்கிய முதியவ ரிருகையேத் திரப்ப
    வுன்னு மாமறை வாழ்த்தொடு மொருதுஆ வோதி
    மன்னர் மன்னபி கொடுத்தனர் போந்தனர் மனையில்.     3.25.15
    1399    தெரித ரத்தின மேழினிற் செழும்புவி புரக்கு
    மரசர் நாயகர் மகள்மனை யடுத்தரும் புதல்வன்
    கரிய மென்சிர மயிரினைக் களைவித்தவ் விடையி
    னிரசி தஞ்சதக் காவென வெடுத்தினி தளித்தார்.     3.25.16
    1400    கொறியி ரண்டறுத் துடன்அக்கீக் காவினைக் கொடுத்துப்
    பொறையின் மிக்குயர் மருத்துவப் பூங்கொடி தனக்குத்
    தறுகி லாதொரு குறங்குமோர் தமனியக் காசும்
    பெறுக வென்றினி தளித்தனர் தூதரிற் பெரியோர்.     3.25.17
    1401    முசுலி மானவர் செயுந்தொழிற் சடங்குகண் முடித்துக்
    திசையெ லாம்புகழ்ந் துரைதரப் பேசிய செம்மல்
    வசைய றுங்கரத் தெடுத்தரும் பேரனை வாழ்த்தி
    யசனெ னச்செழுந் திருப்பெயர் தரித்தன ரன்றே.     3.25.18
    1402    உருவு மந்தமு நிறமுநந் நபியென வொளிரு
    மரும கச்செழுங் குழவியுஞ் ஜிபுரியீ லணுகி
    யிருடொ றுமணித் தொட்டிலை யசைத்தரு கிருந்து
    வரிசை செய்திட நாயகன் வளர்த்திட வளர்ந்த.     3.25.19
    1403    இந்த மானில மடந்தைய ரெவருமீ டேற
    வந்த நாயகி பாத்திமா தருதிரு மகவைச்
    சிந்தை கூர்தரு முவப்பொடுந் தினந்தினம் போற்றி
    யந்த நாயகன் றூதுவ ரிருக்குமந் நாளில்.     3.25.20
    அசனார் பிறந்த படலம் முற்றிற்று.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.